வியாழன், 30 ஜூலை, 2015

கதார் வரலாறு 1

கதார் வரலாறு
கூ.செ. செய்யது முஹமது
கதார் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் கற்காலம் என்று சொல்லப்படும் 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அப்போது பெர்ஷிய வளைகுடாவைச் சேர்ந்த இப்பகுதி நீரில்லா ஆற்றுப் பள்ளத்தாக்காய் இருந்தது. இதனால் இது குளிர்காலங்களில் வேட்டையாடியவர்கள் தங்கிய பகுதியாக இருந்தது. 1961 ல் இங்கு ஆய்வு மேற்கொண்ட டச்சு நாட்டுக்காரர்கள் 122 பழங்கற்கால இடங்களை அறிந்து 30,000 கற்களைக் கண்டுபிடித்தார்கள். இவ்விடங்கள் கடற்கரையை ஒட்டி இருந்தன. மாறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்ட நான்கு வகையான மக்கள் கூட்டத்தினரின் கோடாரிகள், அம்பு முனைகள் மற்றும் பல கருவிகளைக் கண்டுபிடித்தார்கள். 8000 ஆண்டுகளுக்கு முன்பு பெர்ஷிய வளைகுடாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு, சௌதி அரேபியாவிலிருந்து நஜ்த் மற்றும் அல் ஹசா பழங்குடியினர் குடிபெயர்ந்து கடற்கரையிலிருந்து கதாரை தலைநகரமாக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வந்தார்கள். கதாரின் மிகப்பழைய குடியிருப்புகளாக நியோலிதிக் காலத்து ‘வாதி தெபாயன்’ வாசிகள் இருந்தார்கள். இவர்களின் கடல் சார்ந்த மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவைகள் மொசொபோடாமியாவின் உபைத் காலத்தைக் குறிக்கின்றன. உறுதியான ஆதாரமாக கி.மு. 6000 தின் இரண்டு அறைகளைக் கொண்ட வீடும், மீனின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. 1980 ல் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பானை ஒன்றும் தென் மெசொபொடாமியாவின் உபைத் காலத்தையே குறிக்கிறது. கதாரின் வட கிழக்கில் அல் தஃஅசா குடியிருப்பு உபைத் கால பெரும் குடியிருப்பாகக் கருதப்படுகிறது. இங்கு 65 தீக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டு இங்கிருந்து மீன் பிடித்து சமைத்ததற்கான ஆதாரங்களைத் தெரிவித்தன. 1977-78 லும் அல் கோர் என்ற இடத்தில் நடந்த ஆராய்ச்சியில் உபைதுகளின் மிகப்பெரிய கல்லறைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. அதில் கண்டுபிடிக்கப்பட்ட கழுத்து மணிகள் தென்மேற்கு அரேபியாவின் நஜ்ரான் பகுதியைச் சேர்ந்ததாகும். பஹ்ரைனைச் சேர்ந்த தில்முன் சமூகத்தின் நெருங்கிய உறவு கதாரின் பாலைவனப் பகுதி மக்களிடையே காணப்படுகிறது. கி.மு. 2100 லிருந்து 1700 வரை கதார் பகுதியில் முத்துக் குளிப்பவர்கள் இருந்தார்கள். அப்போது பேரீச்சம் மரங்களும் பயிரிடப்பட்டன. அஸ்ஸைரிய மன்னன் எசர்ஹட்டான் வெற்றி பெற்ற ‘பாஸு’ தில்முன், கதார் பகுதியில் தான் இருந்தது. கி.பி. 5 ம் நூற்றாண்டில் சரித்திர ஆய்வாளர் ஹிராடோடஸ் வெளியிட்ட புத்தகத்தில் கதாரை கனானிட்ஸ் கடல் பகுதியைச் சார்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
250 ல் பார்த்தியன்கள் பெர்ஷியன் வளைகுடாவை வென்றபின் கதாரின் பகுதியில் காவல்படையை அமைத்தார்கள். இதை அங்கு கிடைத்த பானைகளின் பகுதிகள் உறுதி செய்கின்றன. துகானின் வடக்குப் பகுதியில் ராஸ் அப்ரூக் பகுதியில் 140 ல் மீன் பிடிப்பதற்கான வீடுகள், வெளிநாட்டினர் தங்கியதற்கான அடையாளங்கள், மீன்களை உலர்த்தியதற்கான தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. 224 ல் சஸ்ஸானியர்கள் இந்த பகுதியை வென்றபின், முத்துக்களுக்கும், பவளத்திற்குமான வாணிபத்திற்கு கதார் முதலிடத்தில் இருந்தது. சஸ்ஸானியர்களின் பானைகளும், கண்ணாடிப் பொருள்களும் வடமேற்கு தோஹாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கிறிஸ்தவ மதம் இங்கு பரவலாக இருந்தது. பல கிறிஸ்தவ மடங்களும் இருந்தன. அப்போது கதார் பகுதி “பெத் கத்ராயீ” என்று சைரியாக் மொழியில் அழைக்கப்பட்டது. அப்போது இப்போதிருக்கும் கதார் நாட்டுப்பகுதி மட்டும் இல்லாமல் பஹ்ரைன், தரூத் தீவு, அல் காட், அல் ஹசா ஆகியவை இணைந்து இருந்தன. 628 ல் கிழக்கு அரேபியாவின் ஆட்சியாளராக இருந்த முன்ஸிர் இப்ன் சவா அல் தமீமிடம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல் அலாஃஅ அல் ஹத்ரமி என்ற தூதுவரை அனுப்பி இஸ்லாமை ஏற்றுக் கொள்ளச் சொன்னார்கள். உடனே முன்ஸிர் தானும் இஸ்லாமை ஏற்று, அங்கிருந்த அரபு பழங்குடியினரையும் ஏற்கச் சொன்னார். மர்வாப் பகுதியில் சிறிய 100 இஸ்லாமிய கால வீடுகள் இதை உறுதி செய்கின்றன. பின்னால் இஸ்லாமியர்களின் பெர்ஷியா மீதான படையெடுப்பால் சஸ்ஸானியர்களின் ஆட்சி இப்பகுதியில் முடிவுற்றது. ஆனாலும் இப்பகுதி முழுமையாக இஸ்லாத்தை தழுவவில்லை என்றும் சில தேவாலயங்கள் ஏழாம் நூற்றாண்டில் இருந்ததென்றும் கருதப்படுகிறது.
உமய்யாத்களின் ஆட்சியின் போது குதிரை மற்றும் ஒட்டகங்கள் இங்கு வளர்க்கப்பட்டன. 8 ம் நூற்றாண்டில் இவற்றுடன் முத்துக்குளிப்பிலும் கதார் சிறந்து விளங்கியது. கதாரின் அல் குவைய்ர் பகுதியில் பிறந்த ஷியா பிரிவு கரீஜிய தளபதி கதாரி இப்ன் அல் ஃபுஜாஃஅ என்பவர் ‘அஸாரிகா’ என்ற அமைப்பின் மூலம் இங்கிருந்து 10 ஆண்டுகள் பல போர்களைப் புரிந்தார். 688-89 ல் நாணயங்களையும் வெளியிட்டிருந்தார். உமய்யாத் கலீஃபா மத மற்றும் அரசியல் மாற்றங்களுக்காக பல நடவடிக்கைகள் எடுத்த போது கதார் மற்றும் பஹரைன் பகுதிகள் முக்கிய இடமாக இருந்து இப்ன் அல் ஃபுஜாஃஅ அவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக உமய்யாத்களை எதிர்க்க பயன்பட்டது. 750 ல் உமய்யாத்களின் ஆட்சி இப்பகுதியில் நீக்கப்பட்டு அப்பாஸிட்கள் ஆட்சிக்கு வந்தனர். இரு மசூதிகள் கட்டப்பட்டு, மர்வாப் பகுதி பல வகைகளிலும் முன்னேற்றம் கண்டது. இங்கிருந்த பழைய கோட்டை தீயில் நாசமடைய புதிய கோட்டைக் கட்டப்பட்டது. இவர்களின் காலத்தில் பஸ்ராவிலிருந்து இந்தியா, சீனா சென்ற கப்பல்கள் கதாரில் நின்று சென்றன. 9 ம் நூற்றாண்டுகளில் கதார் பகுதி நல்ல வளம் பெற்று செல்வச் செழிப்பில் இருந்தன. 868 ல் முஹம்மது இப்ன் அலி என்பவர் அப்பாஸிய ஆட்சிக்கு எதிராக பஹ்ரைன், கதார் மக்களைத் திரட்டி புரட்சியில் ஈடுபட்டு தோற்றுப்போய் பஸ்ராவுக்குச் சென்றார். 899 ல் ஷியா பிரிவு கர்மாஷியனின் இஸ்மாயிலி கூட்டம் இங்கிருந்து புனித பயணமாக மக்கா செல்லும் யாத்ரீகர்களைத் தாக்கினார்கள். 906 ல் பதுங்கியிருந்து யாத்ரீகர்களின் வாகனங்களைத் தாக்கி 20,000 பேரைக் கொலை செய்தார்கள். கதாரிகள் கட்டம்போட்ட மேலாடை நெய்வதில் பிரசித்தி பெற்றவர்கள் என்று 13 ம் நூற்றாண்டின் இஸ்லாமிய போதகர் யகுத் அல் ஹமாவி குறிப்பிட்டுள்ளார். 1320 ல் ஓர்முஸ்களின் ஆட்சியின் போது கதாரின் முத்து வாணிபம் நல்ல பொருளாதாரத்தை ஈட்டித்தந்தது. 1521 ல் போர்ச்சுகீசியர்கள் கதார் பகுதியைக் கைப்பற்றி அரேபிய கடலோரங்களில் பல கோட்டைகளைக் கட்டினார்கள். ஆனால் போர்ச்சுகீசியர்களின் அடையாளங்கள் கதாரில் இல்லை. 1550 ல் அல் ஹசா பகுதி மக்கள் தாங்களாகவே ஓட்டோமானின் கீழ் சென்றார்கள். அவ்வப்போது ஓட்டோமான்களின் இராணுவம் இந்த பகுதியில் நடமாடியது. 1670 ல் பனி காலித் பழங்குடியினர் ஓட்டோமான்களின் நடமாட்டத்தை விரட்டினார்கள். 
அப்போதிருந்து கதார் பனி காலித்களின் அதிகாரத்தில் இருந்தது. இதற்கிடையில் குவைத்திலிருந்து கதாரின் ஸுபராஹ் பகுதிக்கு அல் ஜலாஹ்மா மற்றும் அல் கலீஃபா பழங்குடிக் கூட்டத்தினர்கள் குடிபெயர்ந்தனர். அந்த நேரத்தில் பனி காலீதின் தூரத்து உறவினர் ஒருவர் அதிக பலமில்லாமல் ஸுபாராஹ் பகுதியை நிர்வகித்து வந்தார். அதேபோல் 1777 ல் பெர்ஷியர்கள் பஸ்ரா பகுதியைக் கைப்பற்றி இருந்ததால் அங்கிருந்த பல வணிகர்களும், குடும்பங்களும், குவைத்திலிருந்து மேலும் சில குடும்பங்களும் ஸுபாராஹ்வுக்கு குடிபெயர்ந்தார்கள். இதனால் அப்பகுதி செழிப்புற்று முத்து வாணிபமும் பெருகியது. 

கதார் வரலாறு 2

முடிவாக அல் கலீஃபா குடும்பத்தினர் கதாரையும், பஹ்ரைனையும் தங்கள் கட்டுப்பாட்டில் கைப்பற்ற, பனி காலித் குடும்பத்தினர் அல் ஹசா பகுதியை 1795 ல் கைப்பற்றினார்கள். அல் ஜலாஹ்மா குடும்பத்தினர் உதுப் குடும்பத்தின் உறவை விலக்கிக் கொண்டு 1783 ல் பஹ்ரைனை தங்களுக்காக இணைத்துக் கொண்டு ஸுபாராஹ் பகுதியை உதுபுக்கு விட்டுக் கொடுத்தார்கள். இதனால் அல் கலீஃபா குடும்பத்திற்கு பஹ்ரைனில் உரிமை இல்லாமல் போனது. அவர்கள் தங்களை ஸுபராஹ்விலிருந்து மனாமா என்ற பகுதிக்கு மாறினார்கள். அங்கிருந்து வஹ்ஹாபிகளுக்கு கப்பம் செலுத்தினார்கள். கதார் பல ஷெய்க் குடும்பங்களின் கட்டுப்பாட்டிலிருந்து ரஹ்மாஹ் இப்ன் ஜாபிர் அல் ஜலாஹிமாஹ் தலைமைக்கு வந்தது. 1790 ஸுபாராஹ் வணிகர்களுக்கு வரியில்லாத சிறந்த இடமாக இருந்து செழிப்பாக இருந்தது. 1795 ல் வஹ்ஹாபிகள் கதாரின் அல் ஜலாஹ்மாஹ் பழங்குடியினருடன் கூட்டு வைத்து, கிழக்கில் ஒமானிகளையும், அல் கலீஃபாக்களையும் எதிர்த்தார்கள். மஸ்கட்டின் ஆட்சியாளர் சைத் பின் சுல்தான் பஹ்ரைன் மற்றும் ஸுபராஹ்விலிருந்த வஹ்ஹாபிகளை எதிர்த்து ஸுபாராஹ் கோட்டையைத் தீவைத்துக் கொளுத்தி அல் கலீஃபாக்களை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வந்தார். கிழக்கிந்தியக் கம்பெனியின் வாணிபத்திற்காக பெர்ஷிய வளைகுடாப் பகுதியில் பிரிட்டிஷ் மேற்கொண்ட ‘ஒப்பந்தய பகுதிகளில்’ கதார் கடல்பகுதியும் ஒன்று. அதில் கதாரின் அல் ஹுவைய்லா, ஃபுவைய்ரித், அல் பித்தா, தோஹா ஆகியவையும் அடங்கும். இதில் தோஹா நல்ல வளர்ச்சி கண்டது. இப்பகுதியில் பழங்குடியினர், குடிபெயர்ந்த அரபுகள் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வாங்கப்பட்ட அடிமைகளும் இருந்தார்கள். 1821 ல் தோஹா வாசிகள் கடல்கொள்ளையில் ஈடுபட்டதால், கிழக்கிந்திய கம்பெனி குண்டு வீசி தீக்கிரையாக்கியது. இதனால் 400 பேர் வரை நகரை விட்டு ஓடிப்போனார்கள். இதனால் 1828 ல் தோஹாவை அல் புயய்னியன் பழங்குடியினர் ஆட்சி செய்தார்கள். அல் புயய்னியன் பழங்குடியினன் ஒருவன் பஹ்ரைனில் ஒருவரைக் கொன்ற குற்றத்திற்காக பஹ்ரைன் ஷெய்கால் சிறையிலடைக்கப்பட்டார். இதனால் அல் புயய்னியன் பழங்குடிகள் புரட்சியில் இறங்கினார்கள். இக்காரியத்தால் தூண்டப்பட்ட அல் கலீஃபா கூட்டத்தினர் அவர்களின் கோட்டையை அழித்து அவர்களை தோஹாவை விட்டு விரட்டினார்கள். இதனால் தோஹா நகரம் அல் கலீஃபாக்களின் ஆட்சிக்கு வந்தது.  
1833 ல் இப்பகுதியின் வஹ்ஹாபிகளைக் கண்காணிக்க, பஹ்ரைன் அப்துல்லாஹ் பின் அஹ்மத் அல்கலீஃபா என்பவரை அரசு அதிகாரியாக குவைத்தின் கரையோரத்தில் நியமித்தது. அவர் பஹ்ரைனியின் அல் ஹுவைய்லா மக்களை குவைத்தின் ஆட்சியிலிருந்த அல் கலீஃபா குடும்பத்தினருக்கு எதிராக கலவரம் செய்ய வைத்தார். இதனால் இருவருக்கும் இடையில் மஸ்கட்டின் சுல்தானுடைய மகன் முன்பு ஒரு ஒப்பந்தம் 1835 ல் உருவானது. அதன்படி அல் ஹுவைய்லா மக்கள் தங்கள் இருப்பிடங்களைத் தரைமட்டமாக்கி விட்டு பஹ்ரைனை விட்டு போக வேண்டும். அப்துல்லாஹ் பின் அஹ்மதின் உறவினன் ஒருவன் ஒப்பந்தத்ததை மீறி அல் குவாரி என்ற பழங்குடியினரைத் தூண்டிவிட்டு, வெளியேறிக் கொண்டிருந்த அல் ஹுவைய்லாஹ் மக்களை தாக்கச் சொன்னான். 1840 ல் பஹ்ரைன் ஷெய்க்குகளுக்கும், அல் ஹசாவின் எகிப்திய தளபதிக்கும் இடையே நடந்த பல சண்டைகளால் பாலைவன மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். 1847 ல் பஹ்ரைனுக்கு எதிரியாகிப்போன அப்துல்லாஹ் பின் அஹ்மத் அல் கலீஃபா, கதாரிகளின் தலைவர் இசா பின் தாரிஃபுடன் இணைந்து பஹ்ரைனின் ஆட்சியாளர் முஹம்மது பின் கலீஃபாவை ‘ஃபுவௌய்ரித் போரில் சந்தித்தார். பின் கலீஃபாவுக்கு காதீஃப் மற்றும் அல் ஹசாவின் கவர்னர்களின் ஆதரவுடன் 500 வீரர்கள் இருந்தனர். கதாரி படைகளுக்கு பின் தாரிஃப் தலைமையில் 600 வீரர்கள் இருந்தனர். கடுமையான அந்தப்போரில் பின் தாரீஃபும், 80 வீரர்களும் கொல்லப்பட்டு கதாரி படைகள் தோற்றன. பின்னர் பஹ்ரைனின் பின் கலீஃபா, அல் பித்தா பகுதியை சேதப்படுத்தி அம்மக்களை பஹரைனுக்கு அனுப்பினார்.
19 ம் நூற்றாண்டில் ஸுபாராஹ் மற்றும் அல் ருவைஸ் பகுதிலிருந்த பனு தமீம் பழங்குடியினரின் ஒரு பிரிவான அல் தானிகள் கதாரின் தோஹா பகுதியில் தானி பின் முஹம்மது தலைமையில் ஒன்று கூடினார்கள். இவரின் மகன் முஹம்மது பின் தானி அக்கூட்டத்திற்கு தலைவராகி கதாரில் முதலில் ஆட்சியில் அமர்ந்தார். பல அரபு கூட்டுக் குடும்பமாக இருந்த அவர்களில் பனி அலி, பனி ஹமாத், பனி காலித் ஆகிய குடும்பங்கள் முக்கியமானவை. அப்போது இவர்கள் சுமார் 20,000 பேர் இருந்தார்கள். 1949, 1960, 1995 களில் ஆட்சிமாறும் போது இவர்களுக்குள் பெரும் துறத்தல்கள் இருந்தது. இந்த ஒவ்வொரு ஆட்சி துறத்தல்களிலும் அல் தானிகளின் கையே ஓங்கி இருந்தது. எமிரின் குடும்பட்த்தினரே பெரும் அதிகாரமுள்ள பதவிகளில் அனுமதிக்கப்பட்டார்கள். முஹம்மது பின் தானிக்குப் பிறகு, அவர் மூத்த   மகன் ஜாஸ்ஸிம் பின் முஹம்மது அல் தானி ஆட்சிக்கு வந்தார். 1825 ல் பிறந்த இவர் கதாரை நவீனப்படுத்தினார். முற்காலங்களில் தந்தையுடன் இருந்து பல அரசியல் அனுபவங்களைப் பெற்றார். அல் பித்தா பகுதியிலிருந்து கொண்டு 21 வயதில் தன் வயதொத்த இளைஞர்களுடன் சேர்ந்து கதாரை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்தார். சுற்றுப்பகுதிகளை ஒன்றிணைத்து கதாரை தனி ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வந்தார். பெர்ஷிய வளைகுடாவின் மீது கிழக்கிந்தியக் கம்பெனிக்காக பிரிட்டிஷும், போர்ச்சுகீசியர்களின் செல்வாக்கைத் தடுக்க ஓட்டோமான்களும் ஆர்வமாய் இருந்த போது இருவரையும் அரவணைத்துச் சென்றார்.    

கதார் வரலாறு 3

1867 ல் ஜாஸ்ஸிம் பின் முஹம்மது பஹ்ரைனால் கைது செய்யப்பட்டார். கதாரின் பிதோயின் பழங்குடியினர் ஒருவர் அத்துமீறி பஹ்ரைன் பகுதியில் நுழைந்ததால் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிப்பது சம்பந்தமாக பேசச்சென்ற ஜாஸ்ஸிம் பின் முஹம்மதுவை பஹ்ரைன் ஆட்சியாளர் ஃபைசல் பின் துர்கி கைது செய்தார். இதனால் கதாருக்கும், பஹ்ரைனுக்கும் போர் மூள, பஹ்ரைனை அபுதாபி ஆதரித்தது. கதாரின் பல நகரங்கள் தாக்கப்பட்டன. இறுதியில் 1000 பேருக்கு மேல் கொல்லப்பட்டு, 60 படகுகள் மூழ்கடிக்கப்பட்டு ஜாஸ்ஸிம் பின் முஹம்மது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஓட்டோமான்கள் தங்கள் இராணுவ பாதுகாப்புப்படைக்கு அல் பித்தா கோட்டையை பயன்படுத்தினார்கள். ஓட்டோமான்கள் தனி நிர்வாகஸ்தர்களை நியமித்து ஸுபாராஹ், தோஹா, அல் வக்ராஹ் மற்றும் கவ்ர் அல் உதைத் ஆகிய பகுதிகளில் வரி வசூலிப்பதை ஜாஸ்ஸிம் பின் முஹம்மது முழுமூச்சாக எதிர்த்தார். இதனால் கதாரின் முன்ணனி அரசியல்வாதிகளையும், ஜாஸ்ஸிமின் இளைய சகோதரர் ஷெய்க் அஹ்மத் பின் முஹம்மது தானியையும் பிடித்துச் சென்றது. இதன் விளைவாக ஜாஸ்ஸிம் பின் முஹம்மது பல பழங்குடி இனத்தவர்களை இணைத்து கடுமையாக ஓட்டோமான் படைகளுடன் மோதி வெற்றி கண்டார். சகோதரரை விடுவித்து பதிலுக்கு ஓட்டோமான் படைகள் சுதந்திரமாக அவ்வப்போது சௌதியின் ஹாஃபூஃப் நகர் செல்ல அனுமதித்தார். கதார், ஓட்டோமான்களுடன் பல போர்கள் புரிந்திருந்தாலும் குறிப்பாக ‘அல் வாஜ்பாஹ் போர்’ பிரசித்தி பெற்றது. இப்போரினால் கதாரிகளுக்கு புகழும், ஆட்சி ஆள சுதந்திரமும் கிடைத்தது. கதாருக்கும், ஓட்டோமான்களுக்கும் இடையில் சமரசம் செய்ய பிரிட்டிஷ் முயன்று தோற்று போனது. முடிவில் கதாரின் ஆட்சியாளராக ஜாஸ்ஸிம் பின் முஹம்மதுவின் சகோதரர் ஷெய்க் அஹமது பின் முஹம்மதுவை வைத்துவிட்டு ஜாஸ்ஸிம் லுசைல் என்ற இடத்திற்கு சென்று அமைதியாக வசிக்க வேண்டும் என்று முடிவானது. அதன்படி கதாரின் ஆட்சியிலிருந்த சகோதரர் அஹ்மதை ஒரு சக படைவீரன் கொன்றுவிட மீண்டும் ஜாஸ்ஸிம் பின் முஹம்மது ஆட்சிக்கு வந்தார். இவருக்கு 19 மகன்கள் இருந்தார்கள். 1913 ல் தோஹா நகரிலிருந்து 24 கி.மீ. தூரத்திலுள்ள லுசாலி என்ற கிராமத்தில் மரணமடைந்தார். இப்போது அப்பகுதி உம் சலால் நகராட்சியாக இருக்கிறது. 
இவருக்குப்பிறகு, மகன் ஷெய்க் முஹம்மது பின் ஜாஸ்ஸிம் பின் முஹம்மது அல் தானி 1913 ல் ஆட்சிக்கு வந்தார். 1881 ல் பிறந்த இவர் வளரும் பருவத்திலேயே பிற்கால ஆட்சிக்கு தந்தையால் பயிற்சி கொடுக்கப்பட்டார். உம் சலால் முஹம்மது பகுதிக்கு கவர்னராகவும் இருந்தார். இவருக்கு 12 மகன்களும், 6 மகள்களும் இருந்தனர். சில பிள்ளைகள் வைப்பாட்டிக்கு பிறந்ததாகக் கூறப்படுகிறது. 1971 ல் இவர் மரணமடைந்தார். ஷெய்க் முஹம்மது பின் ஜாஸ்ஸிம் ஆட்சியிலிருக்கும் போதே அவரை நீக்கிவிட்டு அடுத்து 1880 ல் பிறந்த அப்துல்லாஹ் பின் ஜாஸ்ஸிம் அல் தானி 1913 லிருந்து 1940 வரை ஆட்சிக்கு வந்தார். பிரிட்டனும், ஓட்டோமான்களும் இவரும் இவர் சந்ததியினரும் கதாரை ஆள உரிமை அளித்தார்கள். 1915 ல் ஓட்டோமானை கதாரைவிட்டு வலுக்கட்டாயமாக விலக்கி வைத்தார். 1916 ல் கதாரின் கடல்வழி பாதுகாப்புக்கும், அனைத்து முன்னேற்றத்துக்கும் ஆதரவளிப்பதின் பேரில் பிரிட்டிஷுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதேபோல் 1935 ல் வெளிநாட்டு தாக்குதல்களிலிருந்தும் பாதுகாப்பதற்காக பிரிட்டனுடன் மேலும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். 1927 ல் அல் பித்தாவுக்கு அருகில் அல் கூட் கோட்டை ஒன்றைக் கட்டி அதை காவல்நிலையமாக்கி திருடர்களிடமிருந்து பாதுகாத்தார். தலைநகர் தோஹாவிலிருந்து 150 கி.மீ. தூரத்தில் மதீனத் அஷ் ஷமல் நகராட்சியில் ஸுபாராஹ் நகரத்தில் ஸுபாராஹ் கோட்டை ஒன்றை 1938 ல் கட்டினார். இவரது ஆட்சியில் தான் எண்ணெய் வளத்திற்காக முதல் முறை ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்துல்லாஹ் பின் ஜாஸ்ஸிமின் முதல் மனைவியின் விவரம் தெரியவில்லை. இவரது இரண்டாவது மனைவி ஷெய்கா ஃபாத்திமா பின்த் இசா அல் தானியின் மூலம் இவருக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். 1957 ல் இவர் மரணமடைந்தார். 
இவருக்குப்பின் 1895 ல் பிறந்த மகன் அலி பின் அப்துல்லாஹ் அல் தானி 1949 ல் ஆட்சிக்கு வந்தார். இவர்தான் முதல்முறையாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்த ஆட்சியாளர். இவர் இந்தியா, எகிப்து, ஐரோப்பா, லெபனான் மற்றும் லீவண்ட் பகுதிகளுக்குப் பயணம் செய்தார். கதாரின் அடிப்படை கட்டமைப்பிலும், கல்வியிலும் முன்னேற்றம் கண்டார். பல இஸ்லாமிய மதபோதகர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். இவரது ஆட்சியில் தான் முதல் எண்ணெய்கப்பல் துறைமுக நகரமான மெஸ்ஸயீதிலிருந்து 1949 ல் ஏற்றுமதியாகி புறப்பட்டது. ஆண், பெண் பிள்ளைகளுக்கென தனி பள்ளிக்கூடங்களைத் திறந்தார். பல்கலைக்கழகம், மருத்துவமனைகளைக் கட்டினார். தோஹா சர்வதேச விமான நிலையத்தின் கட்டிடத்தையும் துவக்கினார். மேலும் எண்ணெய் வள வருமானத்தில் நல்ல சாலைகள், குடிநீர், மின்சாரவசதி மற்றும் துறைமுகங்களைக் கொண்டு வந்தார். பல துறைகளுக்கு அமைச்சகங்களைக் கொண்டு வந்து பங்குச்சந்தையும் தொடங்கினார். ரொனால்ட் கோட்ரனி என்ற வெளிநாட்டினரை வைத்து கதார் காவல்துறையும் துவக்கினார். அலி பின் அப்துல்லாஹ் 1950 ல் தனக்கு ஆலோசகராக பிரிட்டிஷ் ராயல் ஏர் ஃபோர்ஸின் அதிகாரியாக இருந்த பில்லிப் ப்ளாண்ட் என்பவரை நியமித்துக் கொண்டார். இதுவரை வெளியிடப்படாமலே இருந்த பல இஸ்லாமிய வரலாறுகளை மதபோதகர்களை வைத்து வெளியிட்டார். எண்ணெய் தொழிலாளிகளிடமிருந்து திருப்தி இல்லாத நிலையில் பல எதிர்ப்புகள் கிளம்பின. அதை முன்னின்று சமாதானப்படுத்தினார். இவருக்கு 11 மகன்களும், 3 மகள்களும் இருந்தார்கள். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, லெபனானில் பார்பிர் மருத்துவமனையில் 1974 ல் மரணமடைந்தார். இவர் உடல் கதாருக்கு கொண்டு வரப்பட்டு அல் ரய்யான் நகராட்சியில் அடக்கம் செய்யப்பட்டது. 1960 ல் அலி பின் அப்துல்லாஹ்வுக்கு எதிராக கதாரிலும், 15 அரபு நாடுகளிலும் துண்டுப்பிரச்சாரங்கள் வெளியிடப்பட்டன. அதில் கதாரின் மக்கள் வறுமையிலும், நோயிலும் வாடிக்கொண்டிருக்க அவர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் போவதாக சாடியிருந்தன. இதனால் ஆட்சியை 1960 ல் தன் மகன் ஷெய்க் அஹ்மத் பின் அலி அல் தானியிடம் ஒப்படைத்தார்.
ஷெய்க் அஹ்மத் பின் அலியின் ஆட்சியின் போதுதான் 1971 ல் பிரிட்டிஷாரிடமிருந்து கதார் சுதந்திரமடைந்தது. 1963 ல் தேசிய கூட்டமைப்பு, தொழிலாளர்கள் ஊர்வலம் ஒன்றை நடத்திய போது ஷெய்க் அஹ்மத் பின் அலி அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி சிலரைக் கொன்றார். இவர் நாட்டின் சில ஏழை விவசாயிகளுக்கு கடனுதவியும், சிலருக்கு நிலங்களையும் அளித்திருந்தாலும் இவர் மீது எதிர்ப்புகள் அதிகமிருந்தன. உண்மையில் ஷெய்க் அஹ்மத் பின் அலி ஆட்சியில் தான் கதார் பலதுறைகளில் முன்னேற்றம் கண்டது. இவரது ஆட்சியில் தான் உலகில் கடல்மேல் அமைந்த முதல் எண்ணெய்துறை இத் அல் ஷர்கி ஆகும். மிகப்பெரிய எண்ணெய்துறையான மைய்தான் மஹ்ஸாமும், புல் ஹன்னியன் எண்ணெய்துறையும் இவர் ஆட்சியில்தான் உருவானது. மூன்று மனைவிகளைத் திருமணம் செய்திருந்த இவர் மனைவியரில் ஒருவர் துபாயின் ஷெய்க் ராஷித் பின் ஸைத் அல் மக்தூம் அவர்களின் மகள் ஆவார். இவருக்கு 7 மகன்களும், ஒரு மகளும் உண்டு. இவர் ஒன்றுவிட்ட சகோதரர் ஷெய்க் கலீஃபா பின் ஹமாத் அல் தானியை கதாரின் துணை ஆட்சியாளராக நியமித்திருந்தார். 1972 பிப்ரவரியில் ஷெய்க் அஹ்மத் பின் அலி வேட்டைக்காக ஈரான் பகுதிக்குச் சென்றிருந்தபோது, அவரை ஆட்சியிலிருந்து நீக்கிவிட்டு, கலீஃபா பின் ஹமத் அல் தானி ஆட்சிக்கு வந்தார். ஷெய்க் அஹ்மத் பின் அலி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் அடைக்கலமாக இருந்தார்.
கலீஃபா பின் ஹமத் 1957 ல் கதாரின் கல்வித்துறை மந்திரியாக இருந்தார். 1960 ல் பிரதம மந்திரியாகவும், பொருளாதார மந்திரியாகவும் இருந்த இவர் இறுதியாக துணை ஆட்சியாளராக இருந்தார். இவர் ஆட்சிக்கு வந்ததை கடுமையான ஆட்சியாளரை தூக்கி எறிந்துவிட்டு ஆட்சிக்கு வந்தவர் என்று பேசப்பட்டார். முதல் வேலையாக அரசை மறுசீரமைத்தார். அரச குடும்பத்தின் செலவுகளைக் குறைத்தார். வெளியுறவுத்துறைக்கு ஒரு மந்திரியை அமைத்து தினசரி நடவடிக்கைகளை அறிந்து கொண்டார். பலதுறைகளுக்கு மந்திரிகளை அமைத்து, வெளிநாடுகளிலும் தூதர் அலுவலகங்களை ஏற்படுத்தினார். எண்ணெய் வளம் அதிகரித்ததால் 1985 ல் ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனம் ஓஹாயோவுடன் ஒரு ஒப்பந்தமும், 1986 ல் அமோகோ நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டார். உலகின் மிகப்பெரிய 250 ட்ரில்லியன் க்யூபிக் கொள்ளளவு உற்பத்தி கொண்ட ஏரிவாயு தொழிற்சாலையும், 500 ட்ரில்லியன் க்யூபிக் சேமிப்புத்திறன் கொண்ட எரிவாயு கிடங்கும் அமைத்தார். மேலும் கதாரின் பல இடங்களில் எண்ணெய் வளம் அறிய உத்தரவிட்டார். கலீஃபா பின் ஹமத் 1995 ல் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் இருந்தபோது, அவர் மகன் ஹமாத் பின் கலீஃபாவால் ஆட்சி பறிக்கப்பட்டார். பின்னர் ஃப்ரான்சில் குடியிருந்த கலீஃபா பின் ஹமத் 2004 ல் கதார் திரும்பினார். இவருக்கு 4 மனைவிகள், 5 மகன்கள், 10 மகள்கள் இருந்தனர்.

கதார் வரலாறு 4

இரத்தம் சிந்தாமல் ஷெய்க் ஹமாத் பின் கலீஃபா அல் தானி 1995 ல் ஆட்சிக்கு வந்தார். கதாரின் எரிவாயு தயாரிப்பு 77 மில்லியன் டன்னுக்கு இருந்தது. உலகின் பணக்கார நாடாக இருந்து ஒரு தனிநபர் வருமானம் ஆண்டுக்கு $86,440 இருந்தது. இவர் பிறந்தவுடனே இவர் தாயார் இறந்து போனதால், மாமன் ஓருவரிடம் வளர்ந்தார். பிரிட்டிஷ் ராயல் மிலிட்டரி அகாடமியில் பட்டம் பெற்று 1971 ல் லெப்டினண்ட் கர்னல் ஆனவர். கதாரின் நடமாடும் படைக்கு தளபதி ஆனார். இவருடைய படை பின்னாளில் ‘ஹமாத் படை’ என்றே அழைக்கப்பட்டது. பிறகு 1972 ல் இராணுவத்தில் ஜெனரலாகி, தலைவராகவும் ஆனார். 1977 ல் இராணுவ மந்திரியாக இருந்தார். 1977 லிருந்து 1995 வரை வெளிப்படையாக கதாரின் ஆட்சி வாரிசாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
கதாரின் எண்ணெய் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். அதிகாரப்பங்கீட்டில் தந்தையுடன் குழப்பம்வர, அவர் ஜெனீவா சென்றிருந்த நேரம் அவரின் வெளிநாட்டு வங்கிக்கணக்கை முடக்கி கதாரின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார். இஸ்லாமிய மன்னர்களின் சரித்திரத்தை உடைத்து வெளிப்படையாக இவர் மனைவி ஷெய்கா மோஸா பின்த் நாஸர் அல் மிஸ்னெத் வழக்கறிஞராகவும், கதாரின் கல்வி மற்றும் குழந்தைகள் நலத்துறையையும் பார்த்துக்கொண்டார். ஹமாத் பின் கலீஃபா தானே ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும், நீச்சல் வீரராகவும் இருந்து, கதாரின் தடகளப் பிரிவை உலகளவில் பலப்படுத்தினார். ஒலிம்பிக் பதக்கம், 15 வது ஆசிய விளையாட்டு பதக்கம் போன்றவற்றை கதார் அணி வெற்றி பெறச் செய்தார். மேலும் பல சாம்பியன் பட்டங்களை கதார் விளையாட்டில் பெறுவதற்கு துணை புரிந்தார். அல் ஜஸீரா என்னும் அரபு செய்தி தொலைக்காட்சிக்கு இவர்தான் நிதி வழங்குவதாக செய்தி பரவியது. செய்திதொடர்பு தலைவர் ஹமாத் பின் தாமர் அல் தானிக்கு இவர் நெருங்கிய உறவினராக இருந்த்தால் $137 மில்லியன்கள் இவரிடம் பெற்றதாகவும் செய்தி. பின் லாடனின் பழைய பேட்டிகளை ஒளிபரப்பி அமெரிக்காவின் விசாரணைக்கு தடையாக இருப்பதாகக் கூறி அமெரிக்காவின் காலின் பாவெல் இச்செய்தி நிறுவனத்தை மூடச்சொல்லி வற்புறுத்தினார். ஷெய்க் ஹமாத் இதை தனி நிறுவனமாக்கி தன் மகன் தமீமை அதற்கு தலைவராக்கினார். ‘ஒரு காலம் வரும் அப்போது இதன் பயணத்தின் புதிய பக்கங்கள் திறக்கும். புதிய தலைமுறைகள் பொறுப்பேற்பார்கள்’ என்றார்.
ஹமாத் பின் கலீஃபாவின் ஆட்சியில் மத்திய ஆசியாவிலேயே முதல்முறையாக (FIFA) சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் போட்டியை 2022 ல் கதாரில் நடத்த உரிமை பெற்றார். இவர் மற்றும் இவர் மனைவியின் ஈடுபாட்டால் பல தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களான கார்னிஜியே மெல்லான் பல்கலைக்கழகம், ஜார்ஜ்டௌன் பல்கலைக்கழகம், நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம், டெக்ஸாஸ் ஏ&எம் பல்கலைக்கழகம் மற்றும் வீல் கார்னெல் மருத்துவக் கல்லூரி ஆகியவைகளை கதாரில் திறந்தார். 2005 ல் கதார் அருங்காட்சியகம் கழகம் என்று ஏற்படுத்தி ஐ.எம் பெய் என்பவரால் வடிவமைக்கப்பட்ட முயூசியம் ஆஃப் இஸ்லாமிக் ஆர்ட் தோஹா என்று அருங்காட்சியகத்தைத் திறந்தார். இதனால் உலகில் சமகால கலைப்பொருட்களை அதிகம் வாங்கும் நாடாக கதார் அறியப்படுகிறது. இது 2012 ல் சீஸென்னின் “தி கார்ட் ப்ளேயரை” (ஃப்ரென்ச் ஓவியங்கள்) $ 250 மில்லியன்களுக்கு வாங்கியது. இதல்லாமல் திரைப்பட விருதுகள், புத்தகங்கள், திரைப்படங்கள் என்று பல கலைத்துறை விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. கதார் உலகின் பல முன்ணனி நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது. ஹமாத் பின் கலீஃபா 2012 ல் பாலஸ்தீனின் காஸா பகுதிக்கு சென்று ஹமாஸுக்கு $ 400 மில்லியன்கள் கொடுத்து மருத்துவமனை, அடிப்படைக் கட்டமைப்புகளுக்காக உதவி புரிந்தார். சிரியா மற்றும் லிபியாவின் உள்நாட்டுப் போராளிகளுக்கு ஆயுதம் மற்றும் பண உதவிகள் செய்தார். 2013 ல் ஆட்சியைத் தன் 33 வயது மகன் ஷெய்க் தமீமுக்கு வழங்கப்போவதாகச் சொன்னார். 2005 ல் அமெரிக்காவின் நியூ ஓர்லியன்சில் ஏற்பட்ட கத்ரினா புயலுக்கு $ 100 மில்லியன் கொடுத்தார். 2006 லெபனான் போரை முடிவுக்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி புரிந்தார். வெளிநாட்டு இராணுவத்திற்காக அல் உதைத் ஏர்பேஸ் மற்றும் கேம்ப் அஸ் ஸய்லியாஹ் என்ற இரண்டு தளங்களைக் கொடுத்திருக்கிறார். கதார் பல தீவிரவாதக் குழுக்களுக்கு பொருளுதவி செய்வதாக மேற்கத்திய பத்திரிக்கைகள் அவ்வப்போது செய்தி வெளியிட்டு வருகின்றன. ஹமாத் பின் கலீஃபாவுக்கு முதல் மனைவி ஷெய்கா மரியம் பின்த் முஹம்மது மூலம் 11 மகன்கள், 13 மகள்களும், இரண்டாவது மனைவி ஷெய்கா மோஸாஹ் பின்த் நாசர் மூலம் 5 மகன்கள், 2 மகள்களும், மூன்றாவது மனைவி ஷெய்கா நூரா பின்த் காலித் மூலம் 4 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர். ஹமாத் பின் கலீஃபா, அமெரிக்க உரிமையாளர் மால்கம் க்லேசரிடமிருந்து மான்செஸ்டர் கால்பந்தாட்ட அணியை வாங்குவதற்கு 1.65 பில்லியன் ஈரோக்கள் தர தயாராய் இருப்பதாக பத்திரிக்கை செய்தி வெளியானது. 2013 ல் ஹமாத் பின் கலீஃபா தன் மகன் ஷெய்க் தமீம் பின் ஹமாத் பின் கலீஃபா பின் அல் தானிக்கு ஆட்சியைக் கொடுத்தார்.
ஷெய்க் தமீம் பின் ஹமாத் 1980 ல் இரண்டாவது மனைவி மோஸாஹ் பின்த் நாசருக்குப் பிறந்தவர். பிரிட்டனின் ஷெர்பார்ன் மற்றும் ஹார்ரோ பள்ளிகளில் படித்து, சந்துர்ஸ்டின் ராயல் மிலிட்டரி அகாடமியில் பட்டம் பெற்றார். கதார் ஆயுதப்படைக்கு தலைவராக இருந்தார். லிபியாவின் மாம்மர் கடாபியை நீக்க லிபிய விடுதலைப்படைக்கு உதவினார். கதாரின் விளையாட்டுத்துறைக்கு அதிக ஆர்வமூட்டுபவராக இருக்கும் இவர் வெளிநாடுகளில் பில்லியன்களுக்கு மேற்பட்ட டாலர்களை முதலீடு செய்துள்ளார். 2015 மார்ச்சில் இந்தியாவுக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இந்தியாவில் முதலீடுகள் செய்வதாக கூறியுள்ளார். ஷெய்க் தமீம் பின் ஹமாதின் முதல் மனைவி ஷெய்கா ஜவாஹிர் பின்த் ஹமாத் மூலம் இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும், இரண்டாவது மனைவி ஷெய்கா அனூத் பின்த் மன அல் ஹஜ்ரி மூலம் ஒரு மகனும், இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். பல பட்டங்களையும், பதவிகளையும் பெற்ற ஷெய்க் தமீம் பின் ஹமாத் தற்போதும் கதாரின் ஆட்சியாளராக இருக்கிறார்.    

புதன், 29 ஜூலை, 2015

ஈராக் வரலாறு 1

ஈராக் வரலாறு
கூ.செ. செய்யது முஹமது
இப்போது இருக்கும் நவீன ஈராக் 1920 ல் வடிவமைக்கப்பட்டது. சரித்திர காலத்தில் பாபிலோனியாவாக இருந்தது. ஈராக் மத்தியில் மொசொபோடாமியாவின் கீழ் பகுதியும், குர்திஸ்தானில் மேல் மொசொபொடாமியாவையும், சிரிய மற்றும் அரேபிய பாலைவனப் பகுதியையும் கொண்டுள்ளது. 1957 ல் ரால்ஃப் சோலெச்கி என்பவர் கொலம்பியா பல்கலைக்கழக குழுவுடன் ஷனிடர் குகையில் நடத்திய ஆராய்ச்சியின் போது நியாண்டர்தால் மனித உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களைக் கண்டறிந்தார். கீழ் மொசொபொடாமியாவின் உபைத் காலத்தில் சுமேரிய நாகரீகம் இங்கு இருந்திருக்கிறது. கி.மு. 1894 ல் அமோரிட் மன்னன் சுமுவாபும் பாபிலோனை தலைநகராக உருவாக்கி சுதந்திரமாக ஆண்டிருக்கிறார். மேல் மெசொபொடாமியாவை அஸ்ஸூரை தலைநகராக ஆக்கி அக்காடியன்கள் ஆண்டிருக்கிறார்கள். இந்த அஸ்ஸைரிய பேரரசு பாபிலோனியாவுக்கு மிகப்பெரிய வரலாறுகள் பக்கம் பக்கமாக இருக்கிறது. நாம் மேலோட்டமாகப் பார்ப்போம். 539 ல் மெசொபொடாமியா அக்காயிமெனிட் பெர்ஷியர்களால் சைப்ரஸ் தி கிரேட்டால் வெற்றி கொள்ளப்பட்டு இரண்டு நூற்றாண்டுகள் ஆளப்பட்டது. 331 ல் பெர்ஷியப் பேர்ரசு மாசிடோனியாவின் அலெக்ஸாண்டரால் வெற்றி கொள்ளப்பட்டு, செல்யூசிட் பேரரசாக ஆளப்பட்டது. இரண்டாம் நூற்றாண்டில் முதலாம் மித்ரிடேட்ஸ் என்பவரால் பார்த்தியன்கள் ஆட்சியாக ஆளப்பட்டது. இடையில் ரோம ட்ராஜனால் வெல்லப்பட்டு, உடனே பார்த்திய ஹத்ரியனால் வெல்லப்பட்டது. முதலாம் நூற்றாண்டில் ரோம சிரியர்களால் வெற்றி கொள்ளப்பட்டு, மெசொபொடாமியா பகுதிகளில் கிறிஸ்துவம் வந்தது. ஆனாலும், நான்காம் நூற்றாண்டு வரை அஸ்ஸைரிய கடவுளான அஷூரின் கோவில்கள் அங்கிருந்தன. 7 ம் நூற்றாண்டில் இஸ்லாம் வரும் வரை சஸ்ஸானியர்கள் ஆண்டு வந்தார்கள். மேல் மெசொபொடாமியா டைக்ரீஸ், யூப்ரடீஸ் நதிகளால் சூழப்பட்டிருந்ததால் அல் ஜஸீரா (அரபியில் தீவு) என்று அழைக்கப்பட்டது. கீழ் மெசொபொடாமியா ஈராக் (அரபியில் செங்குத்தான பகுதி) என்று அழைக்கப்பட்டது. 602 ல் பெர்ஷிய பேரரசின் அரபு லக்மிட் மன்னராக அல் ஹிராஹ் ஆட்சி செய்தார். அவரிடமிருந்து பழங்குடியினர்களின் ஆக்கிரமிப்பு மூலம் ஷாஹென்ஷா இரண்டாம் கோஸ்ரூ ஆட்சி செய்தார். 634 ல் 5000 முஸ்லீம் வீரர்களுடன் போரிட்ட காலீத் பின் அல் வலீத் (ரலி) என்ற இஸ்லாமிய தளபதியின் மூலம் அரபு இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது. மீண்டும் 636 ல் சாஃத் இப்ன் அபி வக்காஸ் (ரலி) என்னும் தளபதியால் பெர்ஷியர்களின் தலைநகர் செஸிபோனும் ‘கதீஸிய்யாஹ்’ போரில் வெல்லப்பட்டது. 638 ல் இஸ்லாமியர்கள் மேலும் மேற்கு சஸ்ஸானிய பகுதிகளை (தற்போதைய ஈராக் உட்பட) வென்று சஸ்ஸானிய பேரரசர் மூன்றாம் யஸ்திகெர்டை வடக்கு பெர்ஷியாவை நோக்கி விரட்டினார்கள். அவர் 651 ல் கொல்லப்பட்டார்.
புதிய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பாதுகாப்பு நகரங்களாக புராதன பாபிலோனில் அல் குஃபாவையும், தெற்கில் பஸ்ராஹ்வையும் நிர்மாணித்தார்கள். வடக்கில் அஸ்ஸைரியன்களும், கிறிஸ்தவர்களும் பெருவாரியாக இருந்தார்கள். 8 ம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆட்சியாளராக இருந்த அப்பாஸிய கலீஃபாவால் பாக்தாத் நகரம் நிர்மாணிக்கப்பட்டது. இது உலகில் இஸ்லாமியர்களின் கலாச்சாரம், கலை, விஞ்ஞானம், கணிதம், பொது அறிவு, நுண்ணறிவு, மருத்துவம் ஆகியவற்றை எடுத்துச் செல்லும் முக்கிய நகரமாக விளங்கியது. 13 ம் நூற்றாண்டில் மங்கோலிய ஹுலகுகானால் சரணடையச் சொல்லி மறுத்ததால், ஆட்சியிலிருந்த கலீஃபா அல் முஸ்தஸீம் கொல்லப்பட்டு பாக்தாத் நகரம் பலத்த சேதமடைந்தது. இடையில் தைமூர் ஆட்சி செய்தார். 14 ம் நூற்றாண்டில் துருக்கி கருப்பின ஆடுகள் ஆட்சி செய்தார்கள். 1466 ல் அவர்களை துருக்கி வெள்ளையின ஆடுகள் வென்றார்கள். 16 ம் நூற்றாண்டில் மொத்த பகுதிகளும் ஓட்டோமானால் நியமிக்கப்பட்ட பாஷாக்களின் ஆட்சியின் கீழ் சென்றது. அன்றிலிருந்து இன்றுவரை பாக்தாத் நகரம் போர்களமாகவே இருந்து வருகிறது. உள்ளூர் போட்டி குழுக்களாலும், பழங்குடி இனத்தவர்களாலும், அருகாமை நாட்டு எதிரிகளாலும், சமீபத்தில் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளின் ஆக்கிரமிப்பாலும் ஒட்டுமொத்த உலகுக்கும் ஒருகாலத்தில் அறிவை அள்ளி வழங்கிய பாக்தாத் போர்ப்பதட்டத்திலேயே இருக்கிறது. 15 மற்றும் 16 ம் நூற்றாண்டுகளின் இடையில் சஃபாவிட் ஆட்சிவம்சம் ஈராக் மீது மேலாதிக்கம் செலுத்தி வந்தது. 16 மற்றும் 17 ம் நூற்றாண்டுகளில் ஜியார்ஜிய மம்லுக்குகள் ஓட்டோமானுக்கு கப்பம் செலுத்தும் வகையில் ஈராக்கை ஆண்டுவந்தார்கள். இடையில் ஜானிஸ்ஸரீஸ் என்னும் படைகளாலும், பழங்குடியினர்களாலும் ஏற்பட்ட கலவரங்களால் ஓட்டோமான்கள் மம்லுக்குகளை நீக்கிவிட்டு ஈராக்கை நேரடியாக தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள்.
முதலாம் உலகப்போரில் ஓட்டோமான் ஜெர்மனியின் மத்திய அதிகாரத்தை ஆதரித்தது. குட் போரில் பிரிட்டிஷ் படைகள் ஓட்டோமானைத் தோற்கடித்து 1817 ல் பாக்தாதைப் பிடித்தது. பிரிட்டிஷ் அங்கிருக்கும் பழங்குடிகள், குர்துக்கள், கிறிஸ்தவர்களை அரசியல் ரீதியாக பொருட்படுத்தாமல் ஹாஷிமிட்களை ஆட்சியில் வைத்தார்கள். ஒருபுறம் குர்துக்களும், ஷியாக்களும் பிரிட்டிஷின் போக்கிலிருந்து விடுதலை வேண்டி சண்டையிட்டார்கள். பிரிட்டிஷார் அஸ்ஸைரியன்களைத் தூண்டிவிட்டு கலகம் செய்ய வைத்தார்கள். ஈராக் முழுதும் தன்னலக் குழுக்களாக ஆனது. 1932 ல் ஈராக் பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் அடைந்தது. சுதந்திர ஈராக் அரபு சுன்னிப்பிரிவு முஸ்லீம்கள் வசமானது. இதனால் அஸ்ஸைரியன்கள், யஸிதி மற்றும் ஷியா பிரிவினர்கள் இடைவிடாமல் கலவரத்தில் இறங்கினார்கள். ஈராக் ஆட்சியாளர்கள் அதை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார்கள். 1936 ல் பக்ர் சித்கி என்பவர் அரபு நாடுகளிலேயே முதல்முறையாகவும், ஈராக்கிலும் முதல்முறையாக இராணுவப்புரட்சியைச் செய்தார். ஹாஷிமிட்களின் மன்னராக யாசீன் அல் ஹாஷிமி ஈராக்கை ஆட்சி செய்தார். ஈராக்கின் இராணுவத் தளபதியாக பக்ர் சித்கி இருந்தார். 1936 ல் 11 ஈராக்கிய இராணுவ ஹெலிகாப்டர்கள் மன்னரை யாசீன் அல் ஹாஷிமை நீக்கிவிட்டு, பிரதம மந்திரி ஹிக்மத் சுலைமான் தலைமையில் மாற்று அரசு நிர்மாணிக்குமாறு நாடுமுழுதும் துண்டு பிரசுரங்களை வீசியது. மேலும், மக்களைத் தங்களுக்குக் கட்டுப்படாவிட்டால் இராணுவ நடவடிக்கைக்கு ஆளாவீர்கள் என்றும் எச்சரித்து தேசிய மறுசீரமைப்புப்படை தளபதி என்று பக்ர் சித்கின் கையொப்பம் இடப்பட்டிருந்தது.

ஈராக் வரலாறு 2

இராணுவ ஜெனெரல் தாஹா அல் ஹாஷிமி துருக்கிக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தை பக்ர் சித்கி நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். தரைப்படை, வான்படையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். தாஹாவுக்கு ஈராக்குக்கு வராதீர்கள் என்று எச்சரிக்கை செய்தார். மன்னர் பிரிட்டிஷ் தூதர் ஸர். ஆர்சிபால்ட் கிளார்க் கெர்ரை ஆலோசனைக் கேட்க, அவர் அனைத்து மந்திரிகளையும் கூட்டி அவசர ஆலோசனை செய்யச் சொன்னார். அதன்படி மந்திரிகள் ஆலோசனை நடைபெற, பக்ர் சித்கி எச்சரிக்கும் வண்ணம் சில இடங்களில் குண்டுகளை வீசிவிட்டு படையுடன் அரண்மனையை நோக்கி வந்தார். நூரி அல் சாஃஇத் என்ற மந்திரி தவிர, அனைத்து மந்திரிகளும் பக்ர் சித்கின் சொல்படி ஹிக்மத் சுலைமானை ஆட்சியில் வைக்க ஒப்புக் கொண்டார்கள். பிரிட்டிஷ் தூதரின் ஆலோசனைப்படி  ஹிக்மத் சுலைமானை அழைக்க, அவர் பக்ர் சித்கியும், லதீஃப் நூர் என்பவரும் இராணுவ புரட்சிக்கான காரணத்தை விளக்கி எழுதிய கடிதத்துடன் அரண்மனைக்கு வந்தார். யாசீன் அல் ஹாஷிமி ராஜினாமா செய்தார். யாசீனால் இருமுறை பிரதம மந்திரியாகவும், அப்போது இராணுவ மந்திரியாகவும் இருந்த ஜாஃபர் அல் அஸ்கரி பக்ர் சித்கின் உத்தரவுப்படி அரண்மனைக்கு வந்து கொண்டிருக்கும் இரண்டு பட்டாலியன் படைகளை தனக்குக் கீழ்படியும் அதிகாரிகள் மூலம் திசை திருப்பினார். இதுபோல் ஏதும் நடக்கும் என்று எண்ணியிருந்த பக்ர் சித்கி விமானபடை வீரர் அக்ரம் முஸ்தபாவையும், இஸ்மாயில் தோஹல்லா என்பவரையும் அனுப்பி ஜாஃபர் அல் அஸ்கரியைக் கொன்றார். ஜாஃபரின் கொலை பழைய ஆட்சிக்கு விடப்பட்ட சவாலாகக் கருதப்பட்டது. நூரி அல் சாஃஇத் கெய்ரோவுக்கும், யாசீன் அல் ஹாஷிமி இஸ்தான்புல்லுக்கும் நாடு கடத்தப்பட்டார்கள். பக்ர் சித்கி பாக்தாத நகர வீதிகளில் இராணுவ அணிவகுப்பை நடத்தி ஈராக்கில் புதிய ஆட்சியைப் பறைசாற்றினார். 1937 ல் துருக்கிக்குச் செல்லும் வழியில் மோசூலில் விமானப்படைத் தோட்டத்தில் பக்ர் சித்ரி கொல்லப்பட்டார். உடனிருந்த இராணுவ அதிகாரி முஹம்மது அலி ஜவாதும் கொல்லப்பட்டார். சுலைமானின் பத்து மாத ஆட்சி முடிவுக்கு வந்தது. அவர் ராஜினாமா செய்ய ஜமீல் அல் மிட்ஃபாய் ஆட்சிக்கு வந்தார். 1941 ல் இரண்டாம் உலகப்போரின்போது, கோல்டன் ஸ்கொயர் என்னும் அதிகாரிகளால் அப்த் அல் லாஹ் என்பவர் பதவி நீக்கப்பட்டார். அவர் நாஜிகளைச் சார்ந்திருந்ததால் இந்த நடவடிக்கையை ராஷித் அலி என்பவர் எடுத்தார். 1945 ஈராக் ஐ.நா. சபையில் உறுபினராகி அராப் லீகிலும் இணைந்தது. அதேசமயத்தில் குர்திஷ் தலைவர் முஸ்தபா பர்ஸானி என்பவர் ஈராக்கின் மத்திய ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்தார். புரட்சி தோல்வி அடைந்ததால் அவரும் ஆதரவாளர்களும் சோவியத் யூனியன் தப்பிச் சென்றார்கள். 1948 ல் ஈராக் பிரிட்டிஷுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை எதிர்த்து அல் வத்பாஹ் கிளர்ச்சி உண்டானது.
1958 ல் ஜோர்டானின் மன்னர் ஹுஸ்ஸெய்ன் மற்றும் அப்த் அல் லாஹ் ஆகியோர் ஹாஷிமிட்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டி எகிப்து சிரியா கூட்டுடன் இணைய வேண்டுமென்று ஈராக்கை அழைத்தனர். பிரதம மந்திரி நூரி அஸ் ஸைத், குவைத்தையும் அழைத்தார். இக்கூட்டுக்கு பிரிட்டிஷ் எதிர்ப்பு தெரிவித்தது. எகிப்து நாசரின் கொள்கைகளால் கவரப்பட்ட பிரிகேடியர் அப்த் அல் கறீம் காசிம், கர்னல் அப்துல் சலாம் ஆரிஃப் ஆகியோர் ஈராக்கின் ஹாஷிமிட் ஆட்சியை 1958 ல் நீக்கினார்கள். பின் ஜோர்டானின் கோரிக்கையை நிராகரித்து ஈராக்கை சுதந்திர நாடாக அறிவித்தார்கள். அப்த் அல் கறீம் காசிம் சோவியத் யூனியனிலிருந்த முஸ்தபா பர்ஸானியை ஈராக்குக்கு வரவழைத்து குர்திஷ்கள் அதிகமுள்ள வடக்குப்பகுதியில் அரசுப்படைகளுக்கு அவரை அதிகாரமுள்ளவராக ஆக்கி முதலாம் குர்திஷ் ஈராக் போருக்கு வழிவகுத்தார்.
காசீம் படுகொலைக்குப்பிறகு, பாத் கட்சியின் சார்பில் பிரதம மந்திரியாகவும், ஜெனரலாகவும் அஹ்மத் ஹசன் அல் பாக்ர் மற்றும் கர்னல் அப்துல் சலாம் ஆரீஃப் ஆகியோர் ஈராக்கின் ஆட்சியை 1963 ல் கைப்பற்றினார்கள். அதேகாலகட்டத்தில் நான்கு மாதங்களுக்குப்பிறகு, சிரியாவிலும் பாத் கட்சி ஆட்சியைக் கைப்பற்ற, சிரியா, ஈராக்குக்கு குர்துக்களை எதிர்க்க விமானம், ஆயுதம் தாங்கிய வாகனங்கள், 6000 இராணுவ வீரர்களைத் தந்து உதவியது. பல மாதங்களுக்குப்பிறகு, அப்தல் சலாம் முஹம்மது என்பவர் கடும் முயற்சியில் பாத் கட்சியின் ஆட்சியை விரட்டினார். 1966 ல் அதிபர் அப்துல் சலாம் ஆரீஃப் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். அவருக்குப் பிறகு, அவர் சகோதரர் ஜெனெரல் அப்துல் ரஹ்மான் ஆரீஃப் ஆட்சிக்கு வந்தார். இவர் குர்துக்களின் புரட்சியை முறியடிக்க பெரும்பாடுபட்டார். 1967 ல் முஸ்தபா பர்ஸானி ஆறுநாள் படையெடுப்பாக ரவாண்டுஸுக்கு அருகில் மவுண்ட் ஹண்ட்ரின் போரில் ஆளும் பாத் கட்சிக்கு பெரும் சேதத்தை விளைவித்து 1968 ல் அஹ்மது ஹசன் அல் பக்ர் தலைமையில் ஆட்சியைப் பிடித்தார். பாத் கட்சி மக்களிடையே குர்திஷ்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தது. சோவியத் யூனியன் ஈராக் மக்களை குர்திஷ்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டது. பாத்துக்கும், குர்திஷ்களுக்குமான வேறுபாட்டில் ஏறக்குறைய 100,000 பேர் காயமடைந்தார்கள். முதலாம் குர்திஷ் போரின்போதே ஆளும் கட்சிக்கும், குர்திஷ்களுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தமானது. அதன்படி, ஆட்சியில் குர்திஷ்களுக்கும் அதிகாரமுள்ள பதவிகள் கொடுக்கப்பட்டன. 1972 ல் ஈராக் அரசு சோவியத் யூனியனுடன் நெருங்கிய உறவு கொண்டு அரபுலகை விட்டு விலகியது போல் தோன்றியது. குர்திஷ்கள் அருகாமை ஈரானுடன் இராணுவத் தொடர்பு வைத்திருந்தார்கள். 1974 ல் மீண்டும் இரண்டாவது குர்திஷ் ஈராக் போர் நடந்தது. 1979 ல் அதிபர் அஹமது ஹசன் அல் பக்ர் சதாம் ஹுசெய்ன் (இவரைப் பற்றி பின்னால் பார்ப்போம்) என்பவரால் கட்டாயமாக ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். சதாம் ஹுசெய்ன் அதிபராகவும், ரெவல்யுஷனரி கமாண்ட் கவுன்சிலுக்கு சேர்மனாகவும் பதவியேற்றார். 1980 லிருந்து எட்டு ஆண்டுகள் எல்லைகளுக்காகவும், குர்திஷ் ஆதரவுக்காகவும் ஈரானுடன் சதாம் ஹுசெய்ன் போர் தொடுத்தார். இதனால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் சரிந்தது. இறுதியில் ஐ.நாவின் தலையீட்டின் பேரில் அவரவர் எல்லைகளை வகுத்துக்கொண்டு, போரை நிறுத்திக் கொண்டார்கள். ஈரான் ஈராக் போர் இருதரப்பிலும் ஐந்து லட்சம் இராணுவத்தினரும், குடிமக்களும் இறந்து போக, பல லட்சம் பேர் காயமடைய பெரும் பொருளாதார வீழ்ச்சியுடன் முடிந்தது. 1990 ல் தனது எண்ணெய் கிணறுகளிலிருந்து குவைத் அனுமதி இல்லாமல் மில்லியன் கணக்கான காலன்கள் எண்ணெய் திருடிவிட்டது என்று குவைத் மீது ஈராக் ஆக்கிரமிப்பு செய்தது. உடனடியாக குவைத்திலிருந்து வெளியேற ஐ.நா அறிவுறுத்தியும் ஈராக் படைகள் வெளியேறாததால், அமெரிக்காவுடன் பல நாடுகள் ஒன்று சேர்ந்து கூட்டுப்படைகளுடன் ‘டெசெர்ட் ஸ்டார்ம்’ என்னும் தாக்குதலை ஈராக் படைகள் மீது நடத்தி ஏறக்குறைய 30,000 இராணுவ வீரர்களையும், பல ஆயிரம் பொதுமக்களையும் கொன்று குவித்தார்கள். 1991 ல் குர்திஷ்கள் அதிகமுள்ள வடக்கு ஈராக்கில் ஷியா பிரிவினர் புரட்சியில் இறங்கினார்கள். ஒரு கட்டத்தில் அதிபர் சதாம் ஹுசெய்னைக் கொல்லவும் முயற்சித்தார்கள்.

ஈராக் வரலாறு 3

குவைத் ஆக்கிரமிப்புக்குப் பிறகு, அமெரிக்கா ஈராக் மீது உலகப் பொருளாதாரத்தடை விதித்தது. இதனால் ஈராக் மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சி அடைந்து வறுமையுடனும், நோய்களுடனும் மக்கள் அவதிப்பட்டனர். இதனால் தென், மத்திய ஈராக்கில் பலர் இறந்து போனார்கள். 1996 ல் ஐ.நா. சபை ‘எண்ணெய்காக உணவு’ என்ற திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தடையைத் தளர்த்தியது. இதன்பின் ஜார்ஜ் புஷ் தலைமையிலான அமெரிக்கா, ஈராக் அதிபயங்கர ஆயுதங்களை வைத்திருப்பதாக குற்றம் சாட்டி, சதாம் ஹுசெய்னை தூக்கிலிடும்வரை நடத்திய நாடகத்தை உலகமே அறியும். கண் துடைப்புக்காக அதிபயங்கர ஆயுதங்களைக் கண்டுபிடிக்க ரிச்சர்ட் பட்லர் தலைமையில் அனுப்பப்பட்ட குழு, ஈராக் ஒத்துழைக்கவில்லை என்ற முடிவை ஐ.நாவுக்கு தெரியப்படுத்தியது. பின்னால் வந்த பெண்பித்த அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ஈராக்கின் இராணுவ, அரசு நிலைகள் மீது இராணுவத் தாக்குதல் நடத்தினார். 9/11 அமெரிக்கத் தாக்குதலுக்குப் பின் சௌதியைச் சேர்ந்த ஒசாமா பின் லாடன் என்ற கோடீஸ்வரர் தான் காரணம் என்று அல்வாவில் இனிப்பு இருக்கிறது என்று கண்டுபிடிப்பது போல் அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடிக்க, அமெரிக்க வெளியுறவுத்துறைச் சட்டப்படி, ஈராக்கின் பாத் கட்சியை ஆட்சியைவிட்டு விலக்க அமெரிக்கா முடிவு செய்தது. ஒரு நாட்டின் ஆட்சியை மாற்ற அந்நாட்டு மக்களுக்குத்தான் உரிமை இருக்கிறது. ஆனால், உலக அதிசயமாக அமெரிக்கா 99% சதவீத வாக்குகளை செனெட் சபையில் (அதுவும் தன் அரசாங்கத்தில் பெற்று) பெற்று ஈராக் ஆட்சியை விரட்ட அனுமதி பெற்றது. கண்டம் வேறு, நாடு வேறு, இனம் வேறு, மொழி வேறு எங்கேயோ இருக்கும் அமெரிக்கா, ஈராக்கின் ஆட்சியை நீக்க தீர்மானம் போட்டது. ஈராக்கைச் சுற்றியுள்ள அனைத்து முஸ்லீம் நாடுகளும் (நான்கு கலீஃபாக்களுக்குப் பிறகு, உண்மை ஜிஹாதை மறந்து பாழாப்போன தனது பழங்குடி இனங்களே ஆள வேண்டும் என்ற குடும்ப பெருமைக்காகவே ஆளும் நாடுகள் வேடிக்கை மட்டும் பார்த்தன.) தள்ளி இருக்கும் விளக்கை தானே அணைக்கிறார்கள் நமக்கென்ன என்று இருந்துவிட்டார்கள். அமெரிக்க அதிபர் ஈராக் ஐ.நாவின் சொல்லுக்கு மதிப்பளிக்கவில்லை என்று கூப்பாடு போட்டு, இங்கிலாந்துடன் படை சேர்ந்து ஈராக்கை ஆக்கிரமித்தது. சுற்றியுள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கூட்டுப்படைகளுக்கு விமானதளம், துறைமுகம், எரிபொருள், உணவு ஆகியவற்றைக் கொடுத்து தங்கள் நன்றியை தெரியப்படுத்திக் கொண்டன. இதில் ஈராக்கின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்கும் திட்டமும் இருந்ததாக இன்று பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். 2003 ல் சதாம் ஹுசெய்ன் பதுங்கு குழியில் மயக்க மருந்து பீய்ச்சப்பட்டு பிடித்து கண்துடைப்பு வழக்காடி தூக்கிலிடப்பட்டார். இன்றுவரை ஈராக் என்னும் ஆதியில் மனிதன் சுமேரிய நாகரீகத்திலிருந்து வாழ்ந்ததாகவும், உலக கலாச்சாரத்திற்கும், அறிவுக்கும் வித்திட்ட அந்நாடு தினசரி பல உயிர்களை தீவிரவாத குண்டு வெடிப்பின் மூலம் இழந்து கொண்டிருக்கிறது. அல் காயிதா என்ற அமைப்பே இல்லை. ஆனால் இன்னும் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு, அமெரிக்கா முஸ்லீம் நாடுகளில் முஸ்லீம்களின் உயிர்களை வேட்டையாடிக்கொண்டிருக்கிறது. ஒருநாளைக்கு குறைந்தது 50 உயிர்கள் என்றால் 2003 லிருந்து 2015 வரை சராசரி எதிர்சண்டை இல்லாமல் 300,000 லட்சம் உயிர்களைக் கொன்றிருக்கிறார்கள். பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு அமெரிக்கா குண்டு வீசிக் கொன்றால் அது தீவிரவாதிதான். இப்படி குண்டு வீசி திருமண கோஷ்டிகள், மத ஊர்வலங்கள், பள்ளிக்குழந்தைகள், ஈராக் காவலர்கள், அப்பாவிக் குழந்தைகள் என்று பல்லாயிரம் பேரைக் கொன்றிருக்கிறார்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போரில் பத்து லட்சத்திற்கும் அதிகமான பேர்களைக் கொன்ற அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷே ஒரே ஒரு (சாரி - SORRY) மன்னியுங்கள் என்று ஆட்சியை விட்டுப் போகும்போது சொல்லிவிட்டார். இப்போது அமெரிக்க இராணுவம் ஏற்கனவே அச்சடித்து வைக்கப்பட்ட மன்னியுங்கள் என்ற அறிக்கையை ஒவ்வொரு தவறான குண்டுவீச்சின் போதும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது ஈராக்கில் இருக்கும் ஆட்சி மக்களின் ஆட்சியல்ல அமெரிக்காவால் வலுக்கட்டாயமாக ஈராக் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஆட்சி.
மக்கா நகரின் ஷரீஃபாகவும், எமிராகவும் ஹுசெய்ன் பின் அலி என்பவர் இருந்தார். அவரின் மூன்றாவது மனைவி அதிலா கானுமுக்கு பிறந்தவர் இளவரசர் ஸெய்த். இவர்தான் ஈராக்கின் ஹாஷிமிட்கள் ஆட்சியாளராக இருந்தார். இவர் இஸ்தான்புல் கலடாஸராய் உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். பின்னர் கான்ஸ்டாண்டிநோபில், ஆக்ஸ்ஃபோர்டின் பல்லியோல் பல்கலைக்கழகங்களில் பயின்றார். 1916 லிருந்து 1919 வரை வடக்கு அரபு இராணுவத்தின் தளபதியாக இருந்தார். 1918 ல் மட்டுப்படுத்தப்பட்ட சிரியாவின் ஆட்சியாளராகவும் இருந்தார். ஃப்ரென்ச் அதிகாரத்தில் இருந்தபோது 1923 ல் ஈராக்கின் குதிரைப்படைக்கு கர்னலாக இருந்தார். 1930 ல் ஈராக்கின் தூதராக பெர்லின் மற்றும் அங்காராவிலும், 1950 ல் லண்டனிலும் இருந்தார். ஜெனெரல் முஹம்மது நஜீப் அர் ருபாஃஇ என்பவர் மன்னராட்சி கூடாது என்று சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று ஈராக்கின் மன்னர் இரண்டாம் ஃபைசலைக் கொன்றார். அதனால் 1958 ல் இளவரசர் ஸெய்த் ஈராக்கின் ஆட்சியாளரானார். இவர் கிரீசைச் சேர்ந்த இளவரசி ஃபஹ்ரெல்னிசா என்பவரை மணந்து அவர் மூலம் இளவரசர் ராஃஅத் பின் ஸெய்த் என்ற மகனைப் பெற்றார். இளவரசர் ஸெய்த் 1970 ல் மரணமடைந்து ஜோர்டான் அம்மானில் ரக்தான் அரண்மனையில் ராயல் மொசோலியமில் அடக்கம் செய்யப்பட்டார். இவருக்குப்பிறகு, இளவரசர் ராஃஅத் பின் ஸெய்த், ஹாஷிமிட் மன்னராக ஈராக்கின் ஆட்சிக்கு வந்தார். தந்தை வழியில் ஜோர்டானின் மன்னர் தலாலுக்கும், ஈராக்கின் காஸிக்கும் மிக நெருங்கிய உறவினர் (தம்பி மகன்?). இவர் எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவிலும், 1960 ல் கேம்பிரிட்ஜின் கிறிஸ்ட் கல்லூரியில் இளங்கலையும், 1963 ல் முதிர்கலைப்பட்டமும் பெற்றார். இவர் ஜோர்டானின் மன்னர்கள் ஹுஸ்ஸெய்ன் மற்றும் இரண்டாம் அப்துல்லாஹ்வுக்கும் கூட நெருங்கிய உறவினர். இவர் ஸ்வீடனைச் சேர்ந்த மார்கரெடா இங்கா எலிசபெத் லிண்ட் என்ற மஜ்தா ராதை மணந்தார். அவர் மூலம் இவருக்கு இளவரசர்கள் ஸெய்த் பின் ராத், மிரித் பின் ராத், ஃபிராஸ் பின் ராத், ஃபைசல் பின் ராத் என்ற மூன்று மகன்களும், இளவரசி ஃபக்ரெல்னிசா பின்த் ராத் என்ற மகளும் பிறந்தார்கள்.
சதாம் ஹுசெய்ன் வரலாறு 
ஈராக்கின் திக்ரித் மாகாணத்தில் அல் பு நாசீர் என்ற பழங்குடியினத்தின் ஒரு பிரிவாக அல் பெகத் பழங்குடியினர் இருந்தார்கள். அவர்களில் சுபா துல்ஃபாஹ் அல் முஸ்ஸல்லத் என்ற பெண்மனிக்குப் பிறந்தவர் தான் சதாம் ஹுசெய்ன் (அனுகூலமானவர்). தன் தந்தை ஹுசெய்ன் ஆபித் அல் மாஜிதை அறியாதவர். தந்தையார் சதாம் ஹுசெய்ன் பிறப்பதற்கு முன்பே காணாமல் போய்விட்டார். 13 வயதான மூத்த சகோதரரும் புற்று நோயால் இறந்து போனார். சிறு குழந்தையாய் இருந்த சதாம் ஹுசெய்னை அவரது மாமன் கைய்ரல்லாஹ் துல்ஃபாஹ் எடுத்துச் சென்று வளர்த்தார். யாருமில்லாத சதாம் ஹுசெய்னின் தாயார் மறுமணம் செய்து கொண்டார். அதன் மூலம் சதாமுக்கு மூன்று ஒன்றுவிட்ட சகோதரர்கள் இருந்தார்கள். மூன்று வயதானபோது திரும்பிவந்த சதாம் ஹுசெய்னை அவரது தாயாரின் கணவர் இப்ராஹீம் அல் ஹஸ்ஸன் கொடுமைப்படுத்தினார். இதனால் 10 வயதானபோது சதாம் ஹுசெய்ன் மீண்டும் பாக்தாத் நகரம் வந்து மாமன் கைய்ரல்லாஹ் துல்ஃபாஹ்வுடன் சேர்ந்து கொண்டார். கைய்ரல்லாஹ் துல்ஃபாஹ் பிரிட்டிஷாருக்கு எதிராக நடந்த ஆங்கிலோ ஈராக் போரில் அனுபவம் பெற்றவர். அவர் திக்ரித் நகரத்தைச் சேர்ந்தவராதலால் அங்கு அவருக்கு பல ஆலோசகர்களும், ஆதரவாளர்களும் இருந்தார்கள். மாமனின் ஆதரவில் பாக்தாதின் தேசிய பள்ளியில் படித்தார். பின் மூன்றாண்டுகள் சட்டம் படித்தார். 1957 ல் இருபது வயதானபோது பாத் புரட்சிக் கட்சியில் சேர்ந்தார். நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் பணியாற்றினார். அப்போது மத்திய கிழக்கு நாடுகளில் பரவலாக இருந்த மன்னராட்சியை எதிர்த்து பல நாடுகளிலும் புரட்சி நடந்தது போல் ஈராக்கிலும் ஆட்சியாளரை எதிர்த்து புரட்சி நடந்தது. காலனி ஆதிக்கவாதம், நில முதலாளிகள், வாணிப செல்வந்தர்கள், பழங்குடியினத் தலைவர்கள் இவர்களே பலம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். எகிப்தின் கமால் அப்தெல் நாசர், சதாம் ஹுசெய்ன் போன்ற இளம் பாத் கட்சியினரை ஆதரித்தார். 1950- 60 ன் மத்தியில் எகிப்து நாசரின் புதிய எழுச்சியால் எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் மன்னராட்சி ஒழிந்தது. அப்போது சூயஸ் கால்வாய் பிரச்சினையும் உச்சத்திலிருந்ததால், பல நாடுகளில் பிரிட்டிஷ், ஃப்ரான்ஸ் ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் போரிட்டனர்.
சதாம் ஹுசெய்ன் பாத் கட்சியில் சேர்ந்த சமயத்தில் அதன் இராணுவ அதிகாரி ஜெனெரல் அப்த் அல் கறீம் காசீம் என்பவர் இரண்டாம் ஃபைசலை ‘ஜூலை 14’ புரட்சியின் மூலம் ஆட்சியிலிருந்து விரட்டி இருந்தார். 16 உறுப்பினர்களைக் கொண்ட காசிமின் மந்திரிசபையில் 12 உறுப்பினர்கள் பாத் கட்சியைச் சேர்ந்தவர்கள். எகிப்து கமால் அப்தெல் நாசரின் ஐக்கிய அரபு குடியரசில் காசீம் சேர மறுத்ததால், பாத் கட்சி அவருக்கு எதிரானது. அதை ஈடுகட்ட எப்போதுமே பாத் கட்சிக்கு எதிராக இருக்கும் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் காசீம் கூட்டு வைத்துக் கொண்டார். பாத் கட்சியினர் காசீமைக் கொல்லத் திட்டம் தீட்டினார்கள். பாத் கட்சியின் உறுப்பினர்கள் மிகவும் தீவிரமானவர்கள், நன்கு படித்தவர்கள், மாணாக்கர்கள், இளைஞர்கள் என்று நிரம்பி இருந்தார்கள். இக்கொலைத் திட்டத்திற்கு சதாம் ஹுசெய்ன் தலைமை ஏற்றார். இதற்காக அவரும், சிலரும் டமாஸ்கசில் பயிற்சி பெற்றார்கள். 1959 அக்டோபர் 7 ல் அல் ராஷித் சாலையில் காசீமைக் கொல்லத் திட்டமிடப்பட்டது. காரில் காசீமுடன் பின் இருக்கையில் இருப்பவர் காசீமைக் கொல்ல பொறுப்பெடுத்திருந்தார். திட்டமிட்டபடி வந்து கொண்டிருந்த காரின் முன்புறம் சென்று சதாம் ஹுசெய்ன் கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் கார் ஓட்டுனர் கொல்லப்பட்டு, அப்த் அல் கறீம் காசிமும் துப்பாக்கியாலும், காரின் பின்புறம் இருந்தவராலும் தாக்கப்பட்டார். கொலையாளிகள் காசீம் இறந்தவிட்டதாகக் கருதி சென்றுவிட்டார்கள். ஆனால் காசீம் தப்பித்துவிட்டார். அப்போது பாத் கட்சியில் தீவிரமான 1000 உறுப்பினர்களுக்கும் கீழ்தான் இருந்தனர். கொலையில் ஈடுபட்ட சிலர் பாத் கட்சியின் பிறப்பிடமான சிரியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றனர். சதாம் ஹுசெய்ன் பாத் கட்சியின் தலைவரான மிசெல் அஃப்லக் என்பவரின் ஆதரவின் கீழ் இருந்தார். கொலைக்கு காரணமான ஆறு பேர் சிறைப்பிடிக்கப்பட்டு மரணதண்டனை கொடுக்கப்பட்டார்கள். ஆனால், என்ன காரணமோ தண்டனை நிறைவேற்றப்படவில்லை. 1959 ல் சதாம் ஹுசெய்ன் எகிப்துக்கு தப்பித்துப் போய் 1963 வரை அங்கிருந்தார். சில வெளிநாடுகளும் அப்த் அல் கறீம் காசீமை வெறுத்தனர். அவர் குவைத் மீது ஆக்கிரமிப்பு செய்ய இருந்தார். 1960 ல் அமெரிக்க CIA அமைப்பு காசீமை விஷமருந்து துவைக்கப்பட்ட கைக்குட்டையால் கொல்ல முயன்றது. ஆனால் அதிலிருந்து காசீம் தப்பித்துக் கொண்டார். ஆனால், ஈராக்கின் இராணுவ அதிகாரிகள் ‘ரமதான் புரட்சி’ என்றதின் கீழ் அப்த் அல் கறீம் காசீமை ஆட்சியைவிட்டுத் தூக்கி அப்துல் சலாம் ஆரிஃப் என்பவரை அதிபராக்கினார்கள். ஆரீஃப் அனைத்து பாத் கட்சி உறுப்பினர்களையும் கைது செய்து பாத் கட்சியைக் கலைக்க உத்தரவிட்டார். 1966 ல் அப்துல் சலாம் ஆரீஃப் ஒரு விமான விபத்தில் பலியானார். இராணுவத்தில் பாத் கட்சியின் ஆதரவுள்ள ஒருவரால் விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று ஒரு கருத்து நிலவியது. பின் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக அப்த் அர் ரஹ்மான் அல் பஸ்ஸாஸ் என்பவர் சில நாட்களுக்கு ஆட்சி செய்தார். நிரந்தரமாக அவர் ஆள்வதற்கு மூன்றில் இரண்டு மடங்கு ஆதரவு தேவை. அது கிடைக்காமல் அவர் தோல்வி அடைய இறந்து போன அப்துல் சலாம் ஆரீஃபின் சகோதரர் அப்துல் ரஹ்மான் ஆரீஃப் ஈராக்கின் அதிபரானார்.

ஈராக் வரலாறு 4

1963 ல் ஈராக் திரும்பிய சதாம் ஹுசெய்ன் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அவரை அஹ்மத் ஹசன் அல் பக்ர் துணை செய்லாளராக நியமித்தார். 1967 ல் சதாம் ஹுசெய்ன் சிறையிலிருந்து தப்பித்து பாத் கட்சிக்கு புத்துணர்வையும், திறமையான செயல்பாடுகளையும் ஒரு செயலாளராக சிறப்பாக அளித்தார். பாத் கட்சியின் ஸ்தாபகர் மிசெல் அஃப்லக்கால் மாகாண தலைவரானார். 1968 ல் அஹ்மது ஹசன் அல் பக்ர் தலைமையில் இரத்தமில்லாமல் அப்துல் ரஹ்மான் ஆரிஃபை ஆட்சியை விட்டுத் தூக்கிவிட்டு, அல் பக்ர் ஈராக்கின் அதிபராகவும், சதாம் ஹுசெய்ன் ஈராக்கின் துணை அதிபராகவும், பாத் கட்சியின் புரட்சிக்குழுக்கு தளபதியாகவும் ஆனார்கள். அப்துல் ரஹ்மான் ஆரீஃப் இஸ்தான்புல்லுக்கு நாடு கடத்தப்பட்டார். ஒரு துணை அதிபராக இருந்து புதிய அரசை வளப்படுத்தி, பாத் கட்சியையும் வளர்த்து, நாட்டின் விவகாரங்களில் அதிக அக்கரை கொண்டு தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டார். உண்மையான உழைப்பைக் கொடுத்து ஈராக்கின் வளர்ச்சிக்கு பாடுபட்டார். எண்ணெய் வளம் இருந்த காரணத்தால் உலக அளவில் ஈராக்கை முன்னிலைப் படுத்தினார்.
சதாம் ஹுசெய்ன் ஆட்சிக்கு முன்பு ஈராக் பலவழிகளில் வேறுபாடு கண்டிருந்தது. சுன்னிப்பிரிவு-ஷியாபிரிவு, அரபுகள்-குர்துக்கள், பழங்குயின தலைவர்கள்-நவீன வாணிப செல்வந்தர்கள், பழங்குடியினர்-பொதுமக்கள் என்று அனைத்திலும் வேறுபட்டிருந்தார்கள். ஈராக்குக்கு அப்போதைக்கு தேவையான நிலையான ஆட்சியை உறுதி செய்து அனைவரின் தேவைகளையும் அவரவர்கேற்ப பூர்த்தி செய்து அரவணைத்துச் சென்றார். நாட்டையும் முன்னேற்றி மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் முன்னேற்றினார். நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி உள்நாட்டு புரட்சிகள் எழாத வண்ணம் வைத்துக் கொண்டார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது, கருத்து சொன்ன சதாம் ஹுசெய்ன், நான் குர்துக்களை கொன்றதற்காக வருத்தப்படவில்லை. ஒரு நாட்டின் மன்னரைக் கொல்ல முயல்பவர்களுக்கு என்ன தண்டனையோ அதைத்தான் நான் செய்தேன். என்னளவில் ஒரு தலைவன் இருந்தால் ஆட்சிக்கு வந்தவுடனே, அத்தனை குர்துக்களையும் கொன்று குவித்திருப்பான். ஆனால், நான் மற்ற எவருமே செய்ய முடியாத உதவிகளை ஒரு எதிர்தரப்பு ஆட்சியாளனாக இருந்து குர்துக்களுக்குச் செய்தேன்.இன்று எனக்கெதிராக் சாட்சி சொன்ன ஒரு குர்து இனத்தவன் கூட அதை எண்ணிப்பார்க்கவில்லை’ என்றார். உலக எண்ணெய் உற்பத்தியில் ஏறக்குறைய 40% சதவீதம் ஈராக்கிலிருந்து தான் அப்போது கிடைத்தது. 1973 ல் உலகெங்கிலும் எரிவாயு உற்பத்தியில் குழப்பம் ஏற்பட்டதால், கச்சா எண்ணெயின் விலை பலமடங்கு உயர்ந்து ஈராக்குக்கு நல்ல வருவாயைத் தந்தது. மற்ற இஸ்லாமிய ஆட்சியாளர்களின் சொத்துக்கள் 20, 22 பில்லியன் டாலர்களிலிருக்க சதாம் ஹுசெய்னின் சொத்துக்கள் அவர் நாட்டு எண்ணெய் வளத்திற்க் 
மற்ற இஸ்லாமிய ஆட்சியாளர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் 20, 22 பில்லியன் டாலர்களில் இருக்க சதாம் ஹுசெய்னின் ஈராக்கின் எண்ணெய் வளத்திற்கு அவரின் சொத்து ஐந்து மடங்கு அடுத்தவர்களை விட இருக்க வேண்டும். ஆனால் 2000 ல் ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் இவருக்கு 5 பில்லியன் டாலர்கள் சொத்து இருந்ததாகக் கூறியுள்ளது. அதிகப்படியான எண்ணெய் வருமானத்தை நாட்டில் ஒருவர் கூட கல்வியறிவு இல்லாதவராக இருக்கக்கூடாது என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார். அதுவும் சர்வதேச அளவிலான கல்வியைக் கொடுத்தார். இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு பல சலுகைகளை அளித்தார். விவசாயிகளுக்கு கடனுதவிகள் கொடுத்தார். மத்திய கிழக்கு நாடுகளிலேயே உயர்தர மருத்துவத்தை இலவசமாக நாட்டுமக்களுக்கு கொடுத்தவர் இவர்தான். இதற்காக யுனெஸ்கோ அமைப்பு கல்வி, விஞ்ஞான, கலாச்சார விருதை சதாம் ஹுசெய்னுக்கு கொடுத்து கௌரவித்தது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது, அன்று அம்மக்கள் இவரின் சிலையை மட்டும் தள்ளவில்லை. உலகின் சிறந்த அதிபர் அளித்த பல சலுகைகளையும், நல்லாட்சியையும் சேர்ந்தே தள்ளினார்கள். அதை அனுபவித்த தலைமுறையினர் இனி எப்பாடுபட்டாலும் அமெரிக்காவாலும், தங்கள் கரங்களாலும் ஏற்படுத்திக் கொண்ட சேதாரத்திலிருந்து அவைகளைப் பெறமுடியாது. காரணம் ஈராக் போன்ற ஒரு நாட்டை சதாம் ஹுசெய்ன் என்பவரால் மட்டுமே அரவணைத்து வாழமுடியும். அந்த அரவணைப்பு என்பது ஆயிரம் இழைகளில் ஒரு இழை, அந்த இழை எல்லார் கைகளுக்கும் வசப்படாது. அது சதாம் ஹுசெய்னுக்கு அழகாக வசப்பட்டது. இதற்கு இக்கட்டுரை எழுதும் நானே சாட்சியாகவும் இருக்கிறேன். நான் துபாயிலிருந்த காலங்களில் சில காலம் அல் ஷாப் என்னும் பகுதியில் இருந்தேன். அதன் கீழே குடியிருந்த ஒரு ஈராக்கியர் (2003 என்று நினைக்கிறேன்) என்னிடம் சொல்லி இருக்கிறார். எங்கள் தேசத்தை சதாம் ஹுசெய்ன் தவிர எந்த கொம்பனாலும் ஆளமுடியாது என்று.
இவரைக் கொல்வதற்கு அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்த மற்ற நாட்டு அதிபர்கள் போல் பாட்டன், தந்தை, மகன் என்ற அடிச்சுவட்டில் ஆட்சிக்கு வந்தவரல்ல அதிபர் சதாம் ஹுசெய்ன். அதிகப்படியாக வந்த எண்ணெய் வளத்தின் மூலம் பல சாலைகள், புதிய கட்டிடங்கள், சுரங்கங்கள், தொழிற்சாலைகளை அமைத்தார். மின்சாரம் இல்லாத ஊரே ஈராக்கில் இல்லாமல் செய்தார். 1972 ல் 15 ஆண்டாக இருந்த சோவியத் யூனியன் ஒப்பந்தத்தை புதுப்பித்தார். உலகில் அடுத்த நாடு வளம் பெறுவதையோ, சோவியத் யூனியனுடன் நட்பு கொள்வதையோ விரும்பாத அமெரிக்கா வழக்கம் போல ஈரானின் ஷா முஹம்மது ரேஸா பஹ்லவியை CIA  மூலம் தொடர்பு கொண்டு, ஈராக் குர்திஷ்களுக்கு ஈரான் மூலம் ஆயுதங்கள் வழங்கி இரண்டாவது குர்திஷ் ஈராக் போரைத் துவங்கியது. சதாம் ஹுசெய்ன் விவசாயிகளுக்கு இலவச நிலங்களைப் பகிர்ந்தளித்து பெரிய அளவில் விவசாயத்தை நாட்டில் வளர்த்தார். ஈராக் படுவேகமாக வளர்ச்சி அடைந்து பல அரபு நாடுகளிலிருந்தும், யூகோஸ்லேவியாவிலிருந்தும் பணியாட்களை வரவழைத்தார்கள். அதிபர் அல் பக்ர் வயது மூப்பின் காரணமாக அவ்வளவாக ஆட்சியில் ஆர்வம் காட்டாதபோது சதாம் ஹுசெய்ன் தான் முன்னிலையில் இருந்தார். இடையில் 1979 ல் அல் பக்ர், சிரியாவுடன் இணைந்து செயல்பட சிரிய அதிபர் ஹஃபீஸ் அல் அஸ்ஸாதுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இது சுதந்திரமாக பல நல்ல திட்டங்களுடன் செயல்பட்டுக் கொண்டிருந்த சதாம் ஹுசெய்னுக்கு எதற்கெடுத்தாலும் சிரியாவையும் கலந்து கொள்ள வேண்டுமென்பது ஒரு இடையூறாக இருந்தது. அவர் அல் பக்ரை ராஜினாமா செய்யக் கேட்டுக் கொண்டார். 1979 ல் அதிபரான சதாம் ஹுசெய்ன் முதலில் பாத் கட்சியின் கூட்டத்தைக் கூட்டி, அதை வீடியோபதிவு எடுக்கச் செய்தார். பாத் கட்சியில் சதிகாரர்கள் (சிரியாவுடன் ஒப்பந்தம் போட ஆதரவாய் இருந்தவர்கள்) என்று இருந்தவர்களை முஹ்யீ அப்தெல் ஹுஸ்ஸெய்னை விட்டு ஒவ்வொரு பெயராகப் படிக்கச் சொல்லி, அவர்களை அவையைவிட்டு வெளியேற்றி கைது செய்யச் சொன்னார். அதில் மிகவும் எதிர்ப்பாக இருந்த 68 பேரில் 22 கட்சி உறுப்பினர்களை தூக்கிலிட்டார். எஞ்சிய உயர்பதவியில் இருந்த பாத் கட்சி உறுப்பினர்கள் சதாம் ஹுசெய்னை எதிர்த்து பிரச்சாரம் செய்தார்கள். அவர்களையும் சதாம் ஹுசெய்ன் தூக்கிலிட்டார். ஈராக் சமூகம் மதம், மொழி, இனத்தின் அடிப்படையில் பிரிந்திருந்தது. குர்திஷ்கள் வட ஈராக்கில் சுதந்திரமாக செயல்பட பிரிக்கச் சொன்னார்கள். ஒரு பிரிவினர் அருகாமை ஈரானின் ஷியா பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். சதாம் ஹுசெய்ன் நாட்டின் பலன்கள் அனைத்து தரப்பினருக்கும் போய்ச் சேரவேண்டும் என்பதற்காக அனைவரையும் பாத் கட்சியில் சேரச்சொன்னார். சதாம் ஹுசெய்னைப் பொருத்தவரை தன் எண்ணத்திலுள்ள ஈராக்கின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள புற்களைத்தான் அழித்ததாகச் சொல்லப்பட்டது. எதிர்ப்பாளர்கள் அதை அடக்குமுறை என்றார்கள்.
1974 ல் தாஹா யாசீன் ரமதான் என்ற உறவினர் தலைமையில் நடமாடும் மக்கள் இராணுவம் ஒன்றை அமைத்தார். அவர்கள் மக்களிடையே ஊடூருவி புரட்சியில் ஈடுபட இருப்பவர்களை துல்லியமாகக் கண்டுபிடித்து சிறையில் அடைத்தார்கள். உள்நாட்டுப் பாதுகாப்பை சிறப்பாக கவனித்துக் கொண்டார்கள். அடுத்து ஒன்றுவிட்ட சகோதரர் பர்ஸான் இப்ராஹீம் அல் திக்ரிதி என்பவர் தலைமையில் பொது புலனாய்வு துறை ஒன்றையும் அமைத்தார். இது ஈராக்கின் சார்பாக வெளிநாடுகளிலும் செயல்பட்டதாகக் கூறினார்கள். இவர் தன் புகழ் பாடப்படுவதற்காக நாடெங்கிலும் சுவரொட்டிகள், புகைப்படங்கள், சிலைகள் என்று வடித்துக் கொண்டார் என்றும் குறை கூறினார்கள். இவரது உருவம் அரசுக் கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், கடைகள், நாணயங்களின் மீது அச்சடிக்கப்பட்டதாகக் கூறினார்கள். (ஏன் மற்ற இஸ்லாமிய நாடுகளில் இல்லையா என்ன?) பெரும்பாலும் சதாம் தான் சிறுவயதிலிருந்து அணியும் பிதோயின் பழங்குடியின உடையிலேயே இருப்பார். சில சமயங்களில் குர்திஷ் உடையும், சில சமயம் தலையிலிருந்து கால்வரை அரபுகள் உடையும் அணிந்திருப்பார். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது மேற்கத்திய உடையில் செல்வார். 1995, 2002 ல் நடந்த தேர்தல்களில் 8.4 மில்லியன் ஓட்டுகளில் வெறும் 3,052 ஓட்டுகள் மட்டும் எதிர்த்து வாக்கு பெற்றார். 99.96% வாக்குகள் ஆதரவாகப் பெற்றார். இஸ்ரேல் உடனான அமைதி ஒப்பந்தத்தின் போது எகிப்திய அதிபர் அன்வர் சதாதுடன் கருத்துவேறுபாடு கொண்டு ஈராக் உறவை முறித்துக் கொண்டது. இருநாட்டுக்கும் தூதரக உறவு இல்லாத நிலையிலும், எகிப்து ஈரானுடனான போரின் போது ஈராக்கை ஆதரித்தது. வைரம் பதித்த ‘ரோலக்ஸ்’ நிறுவன கைக்கடிகாரத்தை எப்போதும் அணிந்திருப்பார். ஸாம்பியா நாட்டின் முதல் அதிபரும், தனது நண்பருமான கென்னெத் டேவிட் கௌண்டாவுக்கு போயிங் 747 விமானம் முழுக்க விலை உயர்ந்த தரைவிரிப்புகளும், தொலைக்காட்சி பெட்டிகளும், தங்க நகைகளும் மற்றும் பல பொருட்களும் அனுப்பினார். கௌண்டாவும் தான் பொழுதுபோக்காகச் செய்யும் மாந்திரீக விளையாட்டுப் பொருள்களை சதாம் ஹுசெய்னுக்கு அனுப்பினார். இவர் ஒரே ஒருமுறைதான் மேற்கத்திய நாட்டுக்கு சென்றார். பெரும்பாலும் ஈராக் சார்பாக ஈராக்கின் வெளியுறவு மந்திரி தாரிக் அஜீஸ் தான் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தார். 1975 ல் ஃப்ரான்ஸ் பிரதம மந்திரி ஜாக்வெஸ் சிராக்கைச் சந்தித்தார். சில ஈராக் தலைவர்களும், லெபனானின் ஆயுத வியாபாரி சர்கிஸ் சோகானாலியனும் சதாம் ஹுசெய்ன் சிராகின் கட்சிக்கு நிதியுதவி செய்தார் என்றார்கள். சதாம் ஹுசெய்னின் ஆட்சியின் போது ஈராக்குக்கு பெருமளவு ஆயுதம் விற்பனை செய்தது ஃப்ரான்ஸ் தான்.

ஈராக் வரலாறு 5

1979 ல் ஈரானில் ஷா முஹம்மது ரேஸா பஹ்லவி இஸ்லாமிய புரட்சியின் மூலம் துரத்தப்பட்டு, அயாதுல்லாஹ் ரூஹல்லாஹ் கொமெய்னி ஆட்சிக்கு வந்தார். இவர் தீவிர ஷியா பிரிவானதால், தன் பகுதி ஈராகில் குர்திஷ்கள் பலம் பெருவார்களோ என்று சதாம் ஹுசெய்ன் அச்சப்பட்டார். காரணம் 1964 ல் ஈரானை விட்டு ஓடிய கொமெய்னி ஈராக்கில் ஷியாக்கள் நிறைந்த அந்நஜஃப் பகுதியில் தான் தங்கி இருந்தார். அங்கிருந்தபடி சதாம் ஹுசெய்னுக்கும் தொல்லை கொடுத்திருந்தார். 1980 ல் ஃப்ரென்சின் உதவியுடன் ஈராக்கில் நியூக்ளியர் அணுஉலை ‘ஓசிரக்’ துவங்கப்பட்டது. 1981 ல் இஸ்ரேல் அதை குண்டுவீசி தகர்த்தது. 1980 ல் ஈராக் ஈரானின் தெஹ்ரான் மெஹ்ராபாத் விமான நிலையத்தைத் தாக்கி, எண்ணெய் வளமிக்க குஸெஸ்தான் பகுதியில் நுழைந்தது. அப்பகுதியை ஈராக்குடன் இணைத்து விட்டதாக செய்தி சொல்லியது. ஈரானை எதிர்த்து அரபு மாகாணங்கள், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சில நாடுகளின் பொருளாதார உதவியாலும் ஈராக் மத்திய ஆசியாவிலேயே பலம் பொருந்திய நாடாகக் கருதப்பட்டது. ஈரானுடனான போரின்போது ஆரம்பத்தில் ஈராக்குக்கு ஆதரவாய் இருப்பதாக அறிவித்த சோவியத் யூனியனின் மிக்காயில் கோர்பசேவ் பிறகு, பொதுவாக இருப்பதாக அறிவித்தார். முதல்நாள் போரில் பலனடைந்தது போலிருந்த ஈராக் அடுத்த நாட்களில் ஈரானின் தற்கொலைப்படை தாக்குதல்களால் பலம் இழந்தது. 1982 ல் ஈராக் போரை நிறுத்திக்கொள்ள தயாராய் இருந்தது. போரில் ஈராக் ஜெர்மனி நிறுவனம் கொடுத்த இரசாயன வெடிகுண்டுகளைப் பயன்படுத்தியது. அமெரிக்காவின் அதிபர் ரீகன் ஈரானின் செயற்கைக்கோள் புகைப்படங்களைத் தந்து, தெஹ்ரானில் மக்கள் வாழும் பகுதிகளில் குண்டு வீச ஆலோசனை தந்தது. ஃப்ரான்ஸ் 25 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஈராக்குக்கு ஆயுதங்கள் விற்றது. அதேநேரத்தில் ஈராக்கின் எண்ணெய் வளங்கள் ஈரானின் கடற்படையால் பெர்ஷியா வளைகுடாவில் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஈராக்குக்கு தொடர்ந்து சோவியத் யூனியன் (மறைமுகமாக), சீனா, ஃப்ரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் ஆயுத உதவிகள் கிடைத்துக் கொண்டிருந்தன. ஈரானும் விடாமல் போரிட்டு ஈராக்கை போரின் இழப்புகளுக்கு நஷ்டஈடு கொடுக்கச் சொன்னது. 1988 வரை ஐ.நா. சபை போரை நிறுத்தச் சொல்லி பேசி வந்தது. 1988 ல் ஈராக்கில் குர்துக்கள் அதிகம் வாழும் ஹலப்ஜா பகுதியில் இரசாய குண்டு வீசப்பட்டு, 10,000 பேர் வரை இறந்து போனார்கள். ஈராக் இதற்கு ஈரானைக் குற்றம் சாட்டியது. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருநாடுகளிடையேயும் போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஏறக்குறைய இரு தரப்பிலும் 10 லட்சம் பேர் இறந்திருக்க, லட்சக்கணக்கானோர் காயமுற்றிருந்தனர். எண்ணெய் வளமிக்க குஸெஸ்தான் மற்றும் பஸ்ரா பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தன. ஈரானுக்கு சிறிதளவு வட குர்திஷ்கள் பகுதியில் நிலப்பரப்பு கிடைத்தது. பொதுவில் இருநாடுகளும் பெரிதும் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டிருந்தன. 1986 ல் திருக்குரானின் அல் அன்ஃபால் சூராவின் பேரில் ‘அல் அன்ஃபால் பிரச்சாரம்’ என்று வட குர்திஷ்கள், ஷபக்குகள், யஸிதிஸ்கள், அஸ்ஸைரியன்கள், மண்டீயன்கள், துருக்கிகள் ஆகியோரை எதிர்த்து நடத்தப்பட்டது. மனித உரிமை கழகம் இதில் சதாம் ஹுசெய்னின் தரப்பில் 50,000 லிருந்து 100,000 பேர் வரை கொல்லப்பட்டதாகக் கணக்கிட்டது. ஆனால் குர்திஷ்கள் 182,000 பேர் என்றார்கள்.
ஈராக், குவைத் விவகாரம், ஈராக் மீது அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு, சதாம் ஹுசெய்னை கைது செய்து தூக்கிலிட்ட வரலாறுகள் நீங்கள் நன்கு அறியப்பட்டதே அதனால் மேலே செல்வோம். சதாம் ஹுசெய்ன் சரித்திரப் பூர்வமாக குவைத் ஈராக்கைச் சேர்ந்ததே என்றும், பிரிட்டிஷார் தான் அதைப்பிரித்து குவைத்தை தனியாக்கினார்கள் என்று பலகாலமாக சொல்லி வந்தார். தான் ஈரானுடன் போரில் ஈடுபட்டிருந்த எட்டாண்டு காலத்தில் குவைத் தனது பகுதியின் எண்ணெய் வளத்தைத் திருடிக் கொண்டதாக அமெரிக்காவிடம் குற்றம் சாட்டினார். அவ்வப்போது எடுத்து சேமித்து வைத்த தனது 27 லிட்டர் ரத்தத்தில் திருக்குரானை எழுதச் சொன்னார். அல்லாஹ் தன்னை பல ஆபத்துகளிலிருந்து காப்பாற்றியதற்காக தான் இதைச் செய்வதாகச் சொன்னார். எந்த ஓரு நாட்டின் தலைவர்களின் வழக்குகளும் சர்வதேச நீதிமன்றத்தில் தான் நடத்தப்படும். ஆனால், சதாம் ஹுசெய்னின் வழக்கு மட்டும் ஒருதலைப்பட்சமாக அவர் நாட்டில் அவரின் எதிரிகளின் முன்பு நடத்தப்பட்டு தூக்குதண்டனை கொடுக்கப்பட்டது. ஏனென்றால் எந்த ஒரு நாட்டு அதிபர் மீதும் கொலைத்தாக்குதல் நடந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ, அதைத்தான் சதாம் ஹுசெய்ன் குர்திஷ்கள் மீது எடுத்தார். குர்திஷ்களுக்கு பல நன்மைகள் செய்திருந்தார். குர்திஷ்கள் பகுதியில் ஒரு கூட்டத்திற்கு சதாம் ஹுசெய்ன் சென்றிருந்தார். கூட்டம் முடிந்து அவர் வாகனம் அவ்வூர் எல்லையைக் கடக்கும் முன் சரமாரியாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு பாதுகாப்புப்படையைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக சதாம் ஹுசெய்ன் வேறு ஒரு காரில் சென்று விட்டார். இது முழுக்க முழுக்க குர்திஷ்கள் செய்த தவறு. தலைநகர் திரும்பிய சதாம் ஹுசெய்ன் பாதுகாப்பு அதிகாரியை அழைத்து ஏவுகணைகள் விடப்பட்ட அந்த குறிப்பிட்ட குர்திஷ் கிராமத்தில் நடவடிக்கை எடுக்கச் சொன்னார். மொத்த கிராமமக்களும் வாயைத் திறக்காமல் மௌனமாகி விட்டார்கள். பாதுகாப்பு அதிகாரி பொறுமையைக் கைவிட்டு, 1800 பேருக்கு மேல் இருந்த அந்த கிராமத்தில் இரசாயன குண்டை வீசி அனைவரையும் கொன்று போட்டார். சதாம் ஹுசெய்னை தூக்கிலிட்டதற்கு இந்த வழக்குதான் காரணம். இவர் சிறையிலிருந்தபோது, தலைநிறைய முடியுடன் சீர்செய்யப்படாத தாடியுடன் தன் உடைகளை தானே துவைப்பது போன்றும், உறங்குவது போன்றுமான புகைப்படங்களை ‘தி சன்’ என்னும் பத்திரிக்கை வெளியிட்டது. சிறைக்குப் பக்கத்தில் தானே ஒரு சிறு தோட்டத்தை நிர்மாணிக்க அனுமதிக்கப்பட்டார். வழக்குக்கு முன்பே தீர்ப்பை திட்டமிட்டபடி 2006 டிசம்பர் 30 ல் சதாம் ஹுசெய்ன் தூக்கிலிடப்பட்டார். சமாதியில் அடைக்கம் செய்தவர் தூக்குக்குப் பிறகு, சதாம் ஹுசெய்னின் உடலை ஆறு இடத்தில் குத்தி இருந்தார்களாம். அது நிச்சயமாக அவர் இறக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக என்று சொன்னார். அன்று அவர் மட்டும் தூக்கிலிடப்படவில்லை, அவரால் வளம் கண்ட ஈராக்கும், அதன் மக்களும் தான் தூக்கிலிடப்பட்டார்கள். இன்று அமெரிக்க கைப்பாவையாக ஈராக்கை ஆளும் ஆட்சியினரால் வீணாக வளரும் ஒரு புல்லைக்கூட ஒரு நூற்றாண்டானாலும் வளர்க்க முடியாது. 
சதாம் ஹுசெய்ன் தன்னை வளர்த்த மாமன் கைய்ரல்லாஹ் துல்ஃபாவின் மகள் சஜிதா துல்ஃபாவை முதல் மனைவியாக மணந்து கொண்டார். அப்போது சதாம் ஹுசெய்னுக்கு ஐந்து வயது, மனைவி சஜிதாவுக்கு ஏழு வயது. திருமணம் எகிப்தில் நடந்தது. இவர்களுக்கு ஐந்து குழந்தைகள். முதல் மகன் உதைய் ஹுசெய்ன். இவர் ஈராக் கால்பந்து சங்கத்தின் தலைவராக இருந்தார். ஈராக் தொலைக்காட்சி, பாபெல் பத்திரிக்கை ஆகியவற்றை நடத்தினார். இவரை உலக பத்திரிக்கைகள் பெரிய காமக்கொடூரனாக சித்தறித்தார்கள். ஏனென்றால் அமெரிக்கா இவரையும் குண்டுவீசிக் கொன்றுவிட்டது. சரித்திரமும், பூகோளமும் தெரியாத தமிழ் பத்திரிக்கைகள் தினத்தந்தி, தினமலர் கூட இவர் பெண்களுடன் இருப்பது போன்ற புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு தன் மேனியை சொறிந்து கொண்டார்கள். ஒரு சாதாரண தனியார் நிர்வாகத்தில் பணிபுரிபவன் கூட வாரத்திற்கு மூன்று பெண்களுடன் சுற்றுகிறான். உதைய் ஒரு நாட்டு அதிபரின் மகன். இஸ்லாமைப் பொறுத்தவரை தவறுதான் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதன் தண்டனை அவனின் தனிப்பட்ட கணக்கு. இங்கிலாந்து ராணியின் பேரன் ஹாரி மட்டுமென்ன பாதிரியார் உடையணிந்து அப்பமும், தீர்த்தக் கூஜாவுடனுமா அலைகிறார்? அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மகள், இங்கிலாந்து பிரதமர் டோனி ப்ளேரின் மகன் ஆகியோர் இரவுவிடுதியில் போதைமருந்துடன் கும்மாளமிட்டார்கள் அது கூட செய்தியாக வந்தது. ஆனால், அது புகாராக வரவில்லை, நாகரீகத்தின் அடையாளமாக வந்தது. உதைய் ஹுசெய்னைப் பற்றி மேலைநாட்டினர் சொல்லும் கதைகள் 1000 பக்கத்திற்கு ஒரு பெரிய புத்தகமாகப் போடலாம். விடுங்கள். அடுத்த மகன் குஸாய் ஹுசெய்ன். இவரும் அமெரிக்காவால் கொல்லப்பட்டார். சதாம் ஹுசெய்னுக்கு அடுத்து இவர்தான் ஆட்சிக்கு வருவதாக இருந்தார். அடுத்ததாக மகள் ராகத் ஹுசெய்ன். இவரை ஜோர்டானின் அரசகுடும்பம் ஆதரவாக அழைத்துக் கொண்டது. தற்போதைய ஈராக் அரசு இவர் பாத் கட்சிக்கு பொருளுதவி கொடுத்து ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டி ஒப்படைக்கக் கேட்டது. ஆனால், ஜோர்டான் அரசு மறுத்துவிட்டது. அடுத்து இரண்டாவது மகள் ரணா ஹுசெய்ன் இவரையும் ஜோர்டான் அரசு ஆதரவில் வைத்துக் கொண்டது. இவர் சதாம் கமெல் என்பவரை மணந்து நான்கு குழந்தைகளைப் பெற்றார். மூன்றாவது மகள் ஹாலா ஹுசெய்ன் இவரும் குழந்தைகளுடன் ஜோர்டானில் இருக்கிறார். சதாம் ஹுசெய்ன் இரண்டாவதாக சமீரா ஷாஹ்பந்தர் என்ற பெண்மனியை மணந்தார். இவர் ஈராக் ஏர்வேஸ் தலைவரின் முன்னாள் மனைவி ஆவார். போரின் சமயம் சமீரா லெபனானின் பெய்ரூட்டுக்கு போய்விட்டார். இவருக்கு சதாம் ஹுசெய்னுடன் ஆறு குழந்தைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், சதாமின் முதல் குடும்பம் இதை மறுக்கிறது. மூன்றாவது மனைவியாக சோலார் எனர்ஜி ரிசர்ச் செண்டரின் ஜெனரல் மேனேஜராக இருந்த நிடால் அல் ஹம்தானியை மணந்தார். நான்காவதாக வஃபா எல் முல்லாஹ் அல் ஹொவெய்ஷ் என்பவரை மணந்ததாக புரளி நிலவுகிறது.
மகள்கள் ராகதும், ரணாவும் அன்ணன், தம்பிகளான ஹுசெய்ன் காமெல் அல் மஜீதையும், சதாம் காமெல் அல் மஜீதையும் மணந்திருந்தார்கள். ஒரு விவகாரத்தில் சதாம் ஹுசெய்னால் ஆபத்து ஏற்படும் என்று கருதி, மருமகன்கள் இருவரும் ஜோர்டானுக்கு சென்றுவிட்டார்கள். 1996 ல் சதாம் ஹுசெய்னால் ஆபத்து இல்லை என்று உறுதிசெய்யப்பட்ட பின் ஈராக் திரும்பிய இவர்களை, இவர்களால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பழங்குடியினரால் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார்கள். சகோதரிகள் இருவரும் ஜோர்டானில் CNN என்ற தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கும்போது தந்தையைப்பற்றி மிக உயர்வாகச் சொன்னார்கள். சதாம் ஹுசெய்னைத் தூக்கில் போட்டவுடன் குவைத் மக்கள் தெருவில் வந்து நடனமாடி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்ததாக தொலைக்காட்சியில் காட்டி அமெரிக்கா அகமகிழ்ந்தது. அதுவும் அமெரிக்காவில் உள்ள தனியார் தொலைக்காட்சிகள் அளவுக்கதிகமாக இவரைப்பற்றி கதைகள், நடனங்கள் என்று ஆரவாரப்படுத்தின. ஆனால், உண்மையில் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய மக்கள் கவலை தெரிவித்தனர். இந்தியாவின் தென்பகுதி கேரளா மாநிலத்தில் பரப்பனங்காடி என்ற இடத்தில் ஒரு இஸ்லாமிய மீன்பிடி கிராமத்திற்கு சதாம் கடற்கரை என்று பெயரிட்டார்கள். இதற்கு முன் இந்த கடற்கரை பிரிட்டிஷாரை எதிர்த்ததின் காரணமாக திப்பு சுல்தான் கடற்கரை என்று இருந்தது. சதாம் ஹுசெய்ன் அமெரிக்காவை எதிர்த்த காரணத்திற்காக தற்போது சதாம் கடற்கரை என்று மாற்றிக்கொண்டதாக அம்மக்கள் தெரிவித்தார்கள். அவரைத் தூக்கிலிட்ட ஆண்டில் உலகம் முழுவதும் பிறந்த 20 லட்சம் குழந்தைகளுக்கு மேல் சதாம் ஹுசெய்ன் பெயர் சூட்டப்பட்டது. சதாம் கடற்கரை மக்கள் தூக்குச் செய்தியைக் கேட்டவுடன் ஜார்ஜ்புஷ்ஷுக்கு எதிராக கோஷமிட்டு, குழந்தைகளும், பெண்களுமாக ஊர்வலம் சென்றார்கள். பாவம் எந்த தொலைக்காட்சிக்கும், பத்திரிக்கைகளுக்கும் கண் தெரியாமல் போனது. ஸ்ரீலங்காவில் பட்டிகோலா என்ற இடத்தில் இருந்த முஸ்லீம்கள் அதிகமுள்ள ஒல்ரு பகுதிக்கு சதாம் ஹுசெய்ன் டவுன் என்று பெயரிட்டார்கள். அவர் அதிபராய் இருந்த போது அந்த டவுனை வளர்ச்சி அடையவும், மஸ்ஜித் கட்டவும் உதவி புரிந்திருந்தார். 1978 ல் அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியபோது ஈராக் தூதரகம் மூலம் அம்மக்களுக்கு பல உதவிகளைச் சதாம் ஹுசெய்ன் செய்திருந்தார். வெள்ளத்திற்குப் பிறகு, 100 வீடுகள், பள்ளிக்கூடங்கள், மஸ்ஜிதுகள் கட்டிக் கொடுத்தார். அமெரிக்க மக்களே சதாம் ஹுசெய்ன் ஆயிரம் தவறுகள் செய்திருந்தாலும், திருத்துவது அமெரிக்காவின் வேலையில்லை என்று ஆணித்தரமாக BBC யில் தெரிவித்தார்கள். ஆயிரம் அமெரிக்கா வந்தாலும் சூரியனை மறைத்துவிட முடியாது. நாம் சதாம் ஹுசெய்னுக்காக வாதாடவில்லை. சதாம் ஹுசெய்ன் சொந்தமாக நான்கு நாவல்களை எழுதியுள்ளார். ஸ்பீபாஹ் அண்ட் தி கிங், தி ஃபோர்டிஃபைய்ட் கேஸல், மென் அண்ட் தி சிட்டி, பிகோன் டெமென்ஸ் ஆகியவை ஆகும்.       

புதன், 22 ஜூலை, 2015

ஐக்கிய அரபு அமீரக வரலாறு 1

ஐக்கிய அரபு அமீரக  வரலாறு
கூ.செ. செய்யது முஹமது
2011 ல் ஜெபெல் ஃபயா என்ற பகுதியில் நடந்த ஆராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட கைகோடாரி, துளையிடப்பட்ட சில பொருள்களும் அவைகள் 100,000 காலத்துக்கு முற்பட்ட கிழக்கு ஆப்பிரிக்காவினர் பயன்படுத்திய பொருட்கள் என்று ஐக்கிய அரபு அமீரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரத்தைத் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்காவைத் தவிர்த்து வெளிப்புறத்தில் மனிதன் வாழ்ந்ததற்கான பகுதியாக இப்பகுதியைக் கருதுகிறார்கள். மேலும் கி.மு. 2600-2000 உம் அந் நஹார் என்ற பகுதியின் கலாச்சாரம் இங்கு இருந்ததாக அறியப்படுகிறது. இது அபுதாபியிலுள்ள ஒரு தீவை சார்ந்ததாகும். இந்த பகுதி எண்ணெய் வளம் மற்றும் இராணுவத்திற்காக அதிகமான பாதுகாப்பில் உள்ளது. அபுதாபி இப்பகுதியை விரைவில் மக்கள் பார்வைக்கு வைப்பதற்கான முயற்சியில் உள்ளது. உம் அந் நஹாரில் பெரிய கற்களுடன் கூடிய சமாதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான சாட்சியமாக இருக்கிறது.
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைவிற்குப்பின் கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள் சுற்றி இருந்த முஸ்லீமல்லாத அரேபிய பழங்குடியினர்கள் மீது போரிட்டார்கள். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள் தலைமையிலும், இக்ரிமா (ரலி) அவர்களின் உதவியினாலும் நவம்பர் 632 ல் ரித்தா போரின் தொடர்ச்சியாக டிப்பா (ஃபுஜைராஹ்) என்ற பகுதியில் போரிட்டார்கள். அதில் தோற்ற இப்பகுதி மக்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். 637 ல் ஜுல்ஃபர் (ராஸ் அல் கைமாஹ்) என்ற பகுதி இஸ்லாமியப் படைகளுக்கு ஈரானை எதிர்க்க தளமாகப் பயன்பட்டது. அப்போது இந்தியப் பெருங்கடலில் முத்துக்கள் வாணிபத்திற்கு பெரும் துறைமுகமாக ஜுல்ஃபர் இருந்தது. நாம் இப்போது பஹ்ரைன் என்று குறிப்பிடுவது இப்போதுள்ள தனி நாடல்ல. இராக் நீங்கலாக உள்ள அனைத்துப் பகுதிகளையும் குறிப்பிட்ட பஹ்ரைன் என்றழைக்கப்பட்ட காலத்தைப்பற்றி. எட்டாம் நூற்றாண்டில் அஸ்ஸைரிய மன்னன் சென்னசெரிப் வட கிழக்கு பெர்ஷியாவை வென்று பஹ்ரைனைக் கைப்பற்றினான். பெர்ஷிய வளைகுடாவுக்கு வாணிபவழியாக இருந்த இந்த பகுதியில் “தில்முன்” என்ற மக்கள் கூட்டத்தினர் வாழ்ந்திருந்தார்கள். பழங்கால சுமேரியர்களுக்கு இப்பகுதி புனித இடமாகும். மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் புராதன மக்கள் இந்த தில்முன்கள். பஹ்ரைனின் தீவுகளில் தில்முன்களின் சமாதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிரேக்க காலத்தில் பஹ்ரைன் பவளம், முத்துக்களுக்கு வியாபார ஸ்தலமாக இருந்தது. 7 ம் நூற்றாண்டிலேயே இப்பகுதி இஸ்லாத்தைத் தழுவியது. ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆட்சியின் போது இப்பகுதிக்கு அல் அலா அ அல் ஹத்ரமி என்பவரை பொறுப்பாளராக நியமித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் காலத்தில் நபி (ஸல்) களாரின் நெருங்கிய தோழர் அபு ஹுரைராஹ்(ரலி)வும், உதுமான் பின் அபி அல் ஆஸும் (ஸல்) கவர்னர்களாக நியமித்தார்கள். 16 ம் நூற்றாண்டில் இந்தியப் பெருங்கடலில் போர்ச்சுகீசியர்கள் வாணிபம் செய்த போது, ஓட்டோமான் களுடன் சண்டையிட்டு இந்த பெர்ஷிய கடலோரப்பகுதியைப் பிடித்தார்கள். 150 ஆண்டுகாலம் அவர்கள் வசம் இது இருந்தது.
பெர்ஷிய கடலோரத்தில் ஏழு அரபு மாகாணங்கள் உள்ளன. அவை குவைத், பஹ்ரைன், இராக், ஒமான், கதார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகங்கள் ஆகும். அண்மைக் காலங்களில் இவை வளைகுடா நாடுகள் என்று அழைக்கப்பட்டு இராக் நீங்கலாக வளைகுடாவின் கூட்டுறவு அரபு மாகாணங்கள் என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதி மொத்தமாக கிழக்கு அரேபியாவைச் சேர்ந்தது. ஆனால் இந்த வளைகுடாவைத் தொடர்ந்து செல்லும் சௌதி அரேபியாவின் ஹிஜாஸ், நஜ்த் ஆகியவை வளைகுடாப் பகுதிகளைச் சேராது. இந்த கிழக்கு அரேபிய வளைகுடாப் பகுதி மக்கள் இசையுடன் கூடிய ஃபிஜிரி, சவ்த் மற்றும் லிவா கலாச்சாரங்களைக் கொண்டவர்கள். கலாச்சாரத்துடன் பொருளாதாரமும் கடலைச் சார்ந்தே இருக்கும். அதனால் இவர்களை கடல் சார்ந்த மக்கள் என்றும் அழைப்பார்கள். இந்த கிழக்குப்பகுதி மக்கள் ‘வளைகுடா அரபு மொழி’ என்று சௌதி அரேபிய அரபு மொழியிலிருந்து மாறுபட்ட மொழியைப் பேசுவார்கள். இந்த சௌதி அரேபியாவின் கிழக்குப்பகுதி மொத்தமும் 18 ம் நூற்றாண்டு வரை பஹ்ரைன் என்று தான் அழைக்கப்பட்டது. அரபு மொழியில் ‘பஹ்ர்’ என்றால் இரு கடல்கள் என்று பொருள். இரு கடல்கள் திருக்குரானில் ஐந்து இடங்களில் சொல்லப்பட்டுள்ளதால் இதைப்பற்றி ஆராய்ந்தவர்கள் இரு கடல்களுக்கு ‘அவல்’ என்று இன்னொரு சொல்லும் உள்ளது என்றார்கள். இந்த பஹ்ரைன் என்ற சொல் 15 ம் நூற்றாண்டிலிருந்து தான் வந்திருக்கும் என்றும், இரு கடல்கள் அல் கதிஃப் மற்றும் ஹத்ஜார் (தற்போது அல் ஹசா) என்பதையே குறிப்பதாக முடிவு செய்தார்கள். இஸ்லாம் இப்பகுதிகளில் அறிமுகமாவதற்கு முன்பு அரபு கிறிஸ்தவர்கள், பெர்ஷிய ஸோரோஸ்ட்ரியன்கள், யூதர்கள் மற்றும் அரமாயிக் மொழி பேசுபவர்கள் இருந்தார்கள். 20 ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை இவர்களை “கலீஜ்’ (KHALEEJ) என்று அழைத்தார்கள். கலீஜ் என்றால் மீன் உண்ணும் கடல் மூழ்கிகள் என்று பொருள். 
                           இதிலுள்ள ஏழு அரபு மாகாணங்களில் (இப்போது இவைகள் மாகாணங்கள் அல்ல தனி நாடுகளாகி விட்டன) ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் தன்னுள் அடங்கிய ஏழு அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ஃபுஜைய்ராஹ், ராஸ் அல் கைமாஹ் ஆகிய சிறு மாநில அதிகாரங்களைக் கொண்டு தனது ஆட்சியாளர்களை தேர்வு செய்து கொள்கிறது.
புரைய்மி என்னும் ஓமன் தேசத்தில் தவாஹிர் என்ற பழங்குடியினர் இருந்தார்கள். அதன் கிளைப் பிரிவினர்களாக நாஃஇம், பனி காஃப், பனி யாஸ் என்பவைகள் இருந்தன. இவர்கள் மத்திய அரேபியாவின் பழங்குடிக்கூட்டத்தினராக ஐக்கிய அரபு அமீரகத்தை இருப்பிடமாகக் கொண்டு இருந்தார்கள். பனி யாஸ்கள் துபாயிலிருந்து தென்கிழக்கு கத்தார் நாட்டைச் சேர்ந்த கவ்ர் அல் உதைய்த் வரை உள்ள மற்ற பகுதி பழங்குடியினருடன் கூட்டு வைத்திருந்தார்கள். இந்த பகுதியிலுள்ள அனைவரும் பனி யாஸ் கூட்டத்தினர் ஆவார்கள். இந்த பழங்குடியினர் தங்கள் மூத்த குடும்பத்தினரால் தலைவரைத் தேர்ந்தெடுத்து அப்பகுதிகளை நிர்வகித்து வந்தார்கள். அல் ஃபலாசி பழங்குடியினரின் குடும்பத்தார் அல் நஹ்யான் அபுதாபி (பழைய பெயர்-அல்தஃப்ரா) யையும், அல் ஃபலாசி பழங்குடியினர் குடும்பத்தார் அல் மக்தூம் துபாய் பகுதிகளையும் நிர்வகித்தார்கள். இந்த பனி யாஸ் பழங்குடியினர் அல் ஃபலாஹி, அல் ஃபலாசி, அல் ஒதைய்பா, அல் சுவைய்தி, அல் மஸ்ரூயீ, அல் ஹமேலி, அல் முஹைய்ரி, அல் ரொமைய்தி, அல் மரார், அல் மெஹைர்பி, அல் குபைய்சி, அல் கம்ஸி, அல் சிபுசி, அல் ஹமெய்ரி, அல் அமெம்மி என்று பல குடும்பங்களாக உள்ளனர். கடலில் முத்துக் குளிப்பவர்களாக இருந்த அல் நஹ்யான் குடும்பத்தினர் பெர்ஷிய கடலோரத்திலுள்ள லிவா பாலைவனத்திலிருந்து 1793 ல் அபுதாபிக்கு குடிபெயர்ந்தார்கள். அல் ஃபலாசி குடும்பத்தினர் துபாய் கடற்கரைப் பகுதிக்குக் குடிபெயர்ந்தார்கள். அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள் தான் ஆட்சி செய்து வருகிறார்கள். இக்குடும்பத்தினர்கள் பெண்களின் பெயர்களை வெளியில் சொல்ல மாட்டார்கள். திருமணங்களின் போது கூட இன்னாரின் மகள் என்று தான் அறிவிப்பார்கள். ஆனால் தற்போது நவீன காலத்தில் சில அமீரகப் பெண்கள் குறிப்பாக துபாய் மற்றும் ஷார்ஜா போன்ற பகுதிகளில் தங்கள் பெயர்களை பகிரங்கமாக அறிவிக்கிறார்கள். 

ஐக்கிய அரபு அமீரக வரலாறு 2

முன்பு இப்பகுதிகளை பிரிட்டிஷார் கடல்கொள்ளையர்களின் இடம் என்று குறிப்பிட்டார்கள். இப்பகுதிகள் ஆங்கிலத்தில் ஷெய்க்டம் (SHEIKHDOM) என்று அழைக்கப்பட்டன. அதாவது பூகோள அமைப்புப்படி அந்தந்த பகுதிகளை ‘ஷெய்க்’ என்னும் அவர்கள் தலைவர்கள் பொறுப்பாக இருந்து நிர்வகித்து வந்தார்கள். இது அடிப்படையில் மன்னராட்சிக்கு உண்டான அதிகாரமாகிறது. இந்தப்பகுதில் பிரிட்டிஷ் கப்பல்கள் தாக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டது. குறிப்பாக ‘கவாசிம்’ மற்றும் ‘ஜோஸ்மீஸ்’ கடற்கொள்ளையர்கள் (இவர்கள் ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமாஹ் பகுதிகளின் ‘அல் கசிமீ’ என்னும் ஆட்சியாளர்கள்) பிரிட்டிஷாருக்கு பெரும் தொல்லையாக இருந்தார்கள். 1797 ல் அல் கசிமீ குடும்பத்தினர் தொடர்ந்து பிரிட்டிஷ் கப்பல்களைத் தாக்கினார்கள். பிரிட்டிஷின் ‘பஸ்ஸீன் ஸ்னா’ கப்பலைப்பிடித்து வைத்துக் கொண்டு, பணயத்தொகை பெற்றுக்கொண்டு இருநாட்கள் கழித்து விடுதலை செய்தார்கள். புஷைர் பகுதியில் ‘வைபெர்’ என்ற கப்பலைத்தாக்கினார்கள். இந்த தொடர் தாக்குதல்கள் ராஸ் அல் கைமாஹ், அஜ்மான், ஷார்ஜா ஆகிய ஆட்சியாளர்கள் ஷெய்க் சுல்தான் பின் சக்ர் அல் கசிமீ என்பவர் தலைமையில் 1823 லும் அனைவரின் துறைமுகப்பகுதிகளிலும் நடந்தன. இத்தாக்குதல்களைப் பற்றி தற்போதைய சுல்தான் பின் முஹம்மது அல் கசிமீ அவர்கள் ‘தி மித் ஆஃப் அராப் பைரசி இன் தி கல்ஃப்’ என்று 1986 ல் ஒரு புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். பின்னால் இன்ஷா அல்லாஹ் சந்தர்ப்பம் கிடைத்தால் அப்புத்தகத்தை தமிழில் தருகிறேன். பிரிட்டிஷாரின் இந்திய வாணிபக் கப்பல்கள் ராஸ் அல் கைமாஹ்வை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து தான் சென்றன. இப்பிரச்சினையால் பிரிட்டிஷார் 1809 மற்றும் 1819 ல் ராஸ் அல் கைமாஹ்வைத் தாக்கினார்கள். இது சுற்றியுள்ள மற்ற ஷெய்குகளின் பிரதேசங்களான ஷார்ஜா, துபாய், அஜ்மான், அபுதாபி ஆகியவற்றைப் பாதித்ததால் 1820 ல் அப்பகுதி அனைத்து ஷெய்குகளும் கூடி பிரிட்டிஷுடன் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டார்கள். இது 1843 வரை செல்லுபடியானது. இப்பகுதிகளில் முத்துக்குளிப்பு முக்கிய தொழிலாக இருந்ததால் 1853 ல் நிரந்தரமாக ஒரு ஒப்பந்தம் போட்டார்கள். 1847, 1856 களில் அடிமை விற்பனைக்காக சில ஒப்பந்தங்களைப் போட்டார்கள். அச்சமயத்தில் ஐக்கிய அரபு அமீரகப் பகுதிகளின் மீது ஐரோப்பிய சக்திகள் அதிக ஆர்வம் காட்டின. குறிப்பாக ஃப்ரான்சும், ரஷ்யாவும். கடற்கொள்ளையர்களின் தொந்தரவிலிருந்தும், மற்ற வெளிநாட்டவர்களை தள்ளி வைக்கவும் திட்டமிட்ட பிரிட்டிஷ் இப்பகுதி ஷெய்குகளை அழைத்து, அப்பகுதிகளை தாங்கள் கடல் மற்றும் நிலப்பரப்புகளிலிருந்து வரும் ஆபத்துகளிலிருந்து தாங்கள் பாதுகாப்பதாகவும், பதிலுக்கு தங்களின் அனுமதியில்லாமல் எந்த வெளிநாட்டிடமும் உறவு வைத்துக் கொள்ளக்கூடாதென்றும் ஒரு ஒப்பந்தத்தையும், அவர்களுக்கான மற்ற உதவிகளையும் செய்வதாக ஒத்துக் கொண்டார்கள்.  ஒப்பந்தம் பிடிக்காததால் ரம்ஸ் மற்றும் ஜஸீராஹ் அல் ஹம்ராஹ் ஷெய்குகளை ராஸ் அல் கைமாஹ் மக்கள் ஆட்சியிலிருந்து வெளியேற்றினார்கள். 
வெளி எதிரிகளிடமிருந்தும் அமீரகத்தைப் பாதுகாக்க பிரிட்டிஷாரால் போடப்பட்ட இந்த பிரத்தியேக ஒப்பந்தத்தால் அது இப்பிரதேசத்தில் உரிமை கொண்டாடிக் கொண்டிருந்தது. மிகச் சிறப்பாக செயல்பட்டு உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பும், வருமானத்தையும் பெற்றுக் கொடுத்த முத்துக்குளிப்பு வாணிபம். ஜப்பானியர்கள் கண்டுபிடித்த செயற்கை முத்தினால் பாதிக்கப்பட்டது. மேலும் இரண்டாம் உலகப்போருக்குப் பின் பிரிட்டிஷ் இந்தியா பெர்ஷிய அரபு முத்துக்களுக்கு கூடுதல் சுங்க வரியை விதித்தது. இதனால் முற்றிலும் முத்துக்குளிப்பு இந்த பகுதிகளில் கைவிடப்பட்டது. 1958 ல் உம் ஷைஃப் பகுதியிலும், 1960 ல் பாலைவனமான முர்பான் பகுதியிலும் எண்ணெய்வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் எண்ணெய் ஏற்றுமதி கப்பல் 1962 ல் அபுதாபியிலிருந்து புறப்பட்டது. அதேபோல் துபாயிலும் 1969 லும் எண்ணெய் முதல்முறையாக ஏற்றுமதி ஆனது. எண்ணெய் வருமானம் அதிகரிக்க இரு அமீரக ஷெய்குகளும் தங்கள் பகுதிகளை வளப்படுத்தினார்கள். 1968 ல் பிரிட்டிஷ் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாகக் கூறி இராணுவத்தை அழைத்துக் கொண்டது. இப்பிரதேசங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்றன. இவ் ஒப்பந்தம் 1971 டிசம்பரில் ஏழு அரபு அமீரகங்களும் சுதந்திரமாகும் வரை இருந்தது. PCL எனப்படும் பெட்ரோலிய நிறுவனம் சுதந்திரமாக அப்பகுதியில் செயல்பட அழுத்தம் கொடுக்க கடைசியாக ஃபுஜைய்ராஹ் அமீரகம் 1952 ல் சுதந்திரம் அடைந்தது. 1968 சுதந்திரத்திற்குப் பிறகு, அபுதாபி, துபாயுக்கு இடையில் அர்கூப் அல் செதிராஹ் பாலைவனக் கூடாரத்தில் ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அல் நஹ்யானும், ஷெய்க் ராஷித் அவர்களும் அனைத்து அமீரகங்களும் ஒன்றிணைவது பற்றி பேசினார்கள். இவர்கள் கதார் மற்றும் பஹ்ரைனையும் கூட அமீரகத்தில் இணைக்க முயன்றார்கள். பிரிட்டிஷார் இடையில் புகுந்து இந்த ஒன்பது அமீரங்களின் கூட்டைக் கலைக்க கதாரும், ராஸ் அல் கைமாஹ்வும் கூட்டத்தைப் புறக்கணித்தன. இரண்டாண்டுகளாக பலகட்டப் பேச்சில் ஒரே அடியாக பஹ்ரைனும், கதாரும் வெளியேற அமீரகங்கள் ஏழும் ஒன்றுகூடி 1971 ஜூலையில் ஐக்கிய அரபு அமீரகங்கள் என்று சர்வதேச நாடுகளுடன் சேர்ந்தன. முதலில் சேராமல் இருந்த ராஸ் அல் கைய்மாஹ் அமீரகம் பின்னர் 1972 பிப்ரவரியில் சேர்ந்து கொண்டது. இதனால் ஆத்திரம் கொண்ட ஈரான் அபு மூசா மற்றும் துன்ப்ஸ் பகுதிகளை ராஸ் அல் கைமாஹ்விடம் இருந்து கைப்பற்றிக் கொண்டது. 
ஐக்கிய அரபு அமீரகம், கதார், பஹ்ரைன் மற்றும் ஒமான் பகுதிகளில் 1969 வரை இந்திய நாணயங்களே புழக்கத்தில் இருந்தன. அந்நாடுகள் தங்கள் சொந்த நாணயம் வெளியிட்ட பிறகு, இந்திய நாணயம் புழக்கத்திலிருந்து மறைந்தன. ஐக்கிய அரபு அமீரகங்களுக்கு ஓமானுடன் அபுதாபியின் தெற்குப் பகுதியான புரைய்மி என்ற பாலைவனப் பகுதியுடன் இருந்த எல்லைப் பிரச்சினை சரி செய்யப்பட்டது. மேலும் ஒமானுடன் இருந்த இரு எல்லைப் பிரச்சினைகளையும் ஐக்கிய அரபு அமீரகங்கள் 1999 ல் சரி செய்து கொண்டது. சௌதி அரேபியாவிடம் சிறு எல்லைப் பிரச்சினை இன்னும் இருக்கிறது. அமெரிக்க தாக்குதலான 9/11 க்கு அல் காயிதா என்ற அமைப்புக்கு ஐக்கிய அரபு அமீரகங்கள் தான் பொருளாதார தளமாக இருந்ததாக அமெரிக்கா கூறியது. அதற்கு அமீரகங்கள் அமெரிக்காவுக்கு பெரும் ஒத்துழைப்பு கொடுத்து அல் காயிதா அமைப்பின் தொடர்புகளாக கருதப்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கியது. ஐக்கிய அரபு அமீரகங்களுக்கு 1994 லிருந்து அமெரிக்காவுடனும், 1995 லிருந்து ஃப்ரான்சுடனும் இராணுவக்கூட்டு உள்ளது. மேலும் அமெரிக்கா 2001 ல் ஆப்கானிஸ்தான் மீது நடத்திய போருக்கும், 2003 ல் ஈராக் மீது நடத்திய போருக்கும் ஐக்கிய அரபு அமீரகங்கள் உதவி புரிந்தன. உலகத் தீவிரவாதத்தை எதிர்த்து அமெரிக்கா நடத்தும் போருக்கு அபுதாபியின் வெளிப்புறத்தில் அல் தஃப்ரா என்ற இடத்தில் அமெரிக்காவுக்கு விமானதளம் அமைத்துக் கொடுத்துள்ளது. 2004 நவம்பரில் ஐக்கிய அரபு அமீரகங்கள் ஜனாதிபதி ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அல் நஹ்யான் மரணமடைய ஏழு அமீரகங்களின் சிறப்புக்குழு அவர் மகன் ஷெய்க் கலீஃபா பின் ஸாயெத் அல் நஹ்யானை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது. துணை ஜனாதிபதியாக இருந்த துபாயைச் சேர்ந்த ஷெய்க் மக்தூம் பின் ராஷித் அல் மக்தூம் 2006 ல் மரணமடைய அவரது இளைய சகோதரர் பட்டத்து இளவரசர் ஷெய்க் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஐக்கிய அரபு அமீரகங்களுக்கு துணை ஜனாதிபதியாகவும், துபாய் அமீரகத்தின் ஆட்சியாளராகவும் ஆனார். 2006 ல் துபாய் அமீரகத்துக்குச் சொந்தமான ‘துபாய் போர்ட்ஸ் வேர்ல்ட்’ என்ற நிறுவனத்துக்கு அமெரிக்காவின் ஆறு துறைமுகங்களை நிர்வகிக்கும் வாணிபம் கிடைத்தது. ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகங்கள் 9/11 தாக்குதலில் ஈடுபட்ட இருவருக்கு வசிப்பிடமாக இருந்ததாகக் கூறி அமெரிக்கா அவ்வாணிபத்தை தடை செய்தது. 2011 ல் தற்போதைய ஜனாதிபதியையும், துணை ஜனாதிபதியையும் ‘5 பேர் கொண்ட குழு குடியரசு முறையை எதிர்த்தது. அவர்களை கைது செய்து விசாரணை செய்வதை உலகநாடுகளும், மனித உரிமை குழுக்களும் கண்காணித்ததால் ஐவர்குழுவை மூன்றாண்டு சிறைதண்டனைக் கொடுத்தது. ஆனால் ஜனாதிபதி ஷெய்க் கலீஃபா பின் ஸாயெத் பின் அல் நஹ்யான் மன்னித்து விடுதலை செய்தார். இதுவரை அல் நஹ்யான் குடும்பத்தில் எட்டு ஆட்சியாளர்கள் கொல்லப்பட்டு, ஐந்து ஆட்சியாளர்கள் ஆட்சியை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள்.   
இதிலிருந்து சில அமீரகங்களின் வரலாறைப் பார்ப்போம்.



ஐக்கிய அரபு அமீரக வரலாறு 3

அபுதாபி அமீரக வரலாறு

பெர்ஷிய வளைகுடாவின் நடமாட்டமில்லாத ஒருபகுதியாக இருந்த அபுதாபி தீவில் 1761 ல் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் குடியிருக்க ஆரம்பித்தார்கள். 1790 ல் பனி யாஸ் என்னும் அரபு பழங்குடி இனக் கூட்டத்திற்கு அபுதாபி தலைமை இடமாக இருந்தது. இந்த பனி யாஸ் பழங்குடியினருக்கு தியாப் பின் இசா பின் நஹ்யான் என்பவர் தலைவராக இருந்தார். ஷெய்க் என அழைக்கப்பட்ட இவர் ‘மான்களின் தந்தை’ என்றும் அழைக்கப்பட்டார். தியாப் லிவா என்னும் தீவில் இருந்தார். தங்கள் பழங்குடியினரின் வளமான வாழ்வுக்காக தன் மகன் ஷக்புத் என்பவரை அப்போது தீவுபோல் இருந்த அபுதாபியைப் போல் பார்க்கச் சொன்னார். 1793 ல் ஷக்புத் பின் தியாப் அல் நஹ்யான் அங்கு சென்று ஒரு கிராமத்தையும், ‘கஸ்ர் அல் ஹுஸ்ன்’ என்ற கோட்டையையும் கட்டினார். அதன்பின் அதுவே அபுதாபி ஷெய்குகளின் இருப்பிடமாக இருந்து இன்று அபுதாபியின் அருங்காட்சியகமாக இருக்கிறது. இவருக்குப் பின் இவரது மகன் முஹம்மது பின் ஷக்புத் என்பவர் 1816 ல் ஆட்சி செய்தார். அடுத்து இன்னொரு மகன் தஹ்னூன் பின் ஷக்புத் என்பவர் 1818 ல் ஆட்சி செய்தார். அடுத்து இன்னொரு மகன் கலீஃபா பின் ஷக்புத் என்பவர் 1833 ல் ஆட்சி செய்தார். இவர்கள் ஆட்சிக்கு வந்த காலம் தனித்தனியாக இருந்தாலும் கூடித்தான் ஆட்சி செய்தார்கள். இவர்களைப் பற்றிய தனிப்பட்ட வரலாறுகள் பதிவு செய்யப்படவில்லை.
இவர்களுக்குப்பின் ஸாயெத் பின் கலீஃபா அல் நஹ்யான் என்பவர் 1855 ல் ஆட்சிக்கு வந்தார். ஸைத் பின் தஹ்னூன் என்னும் உறவினரை ஆட்சியிலிருந்து நீக்கிவிட்டு, வந்த இவர் 54 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர்தான் ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அல் நஹ்யானின் பாட்டனார் ஆவார். அப்போது இது ஒமானைச் சேர்ந்த பகுதியாக இருந்தது. ஸாயெத் பின் கலீஃபாவின் ஆட்சியின் போது அடிக்கடி ஷார்ஜா அமீரக ஆட்சியாளர்களுடன் சண்டை இருந்தது. 1868 ல் நேருக்கு நேர் மோதி ஷார்ஜா ஆட்சியாளர் ஷெய்க் காலித் பின் சுல்தானைக் கொன்றார். அதனால் ஷார்ஜாவுடன் இருந்த குழப்பங்கள் தீர்ந்து அனைத்து பழங்குடியினரும் அபுதாபிதான் அப்பகுதியின் பலம் வாய்ந்த அமீரகம் என்று போற்ற ஆரம்பித்தார்கள். ஸாயெத் பின் கலீஃபா 1880 ல் கதாருடன் போரிட்டு தனது மேற்கத்திய எல்லையை வகுத்துக் கொண்டார். 1870 ல் ஒமானிப்படைகளுடன் இணைந்து புரைய்மி பகுதியிலிருந்த சௌதி படைகளை விரட்டினார். இதனால் புரைய்மி பகுதி அபுதாபிக்கு நிரந்தரமாகி சௌதியை ஒரேயடியாக ஒமானிலிருந்து விரட்டப்பட்டது. அதன் பிறகு அபுதாபியின் கட்டுப்பாடு அப்பகுதிகளில் வளர்ந்தது. பலம் வாய்ந்த ஆட்சியாளராக இருந்த இவரை அனைத்துப் பழங்குடியினரும் மரியாதையாக நடத்தினார்கள். அபுதாபியின் மேற்குப்பகுதியை மூன்று முறை கதார் மீதான படையெடுப்பின் மூலம் விரிவாக்கினார். தெற்கில் ‘ருப் அல் காலி’ வரை எல்லையை வகுத்தார். முத்துக்குளிப்பு வாணிபத்தின் சொந்தக்காரராய் இருந்த அருகிலிருந்த அமீரகங்களுக்கும் உதவி புரிந்தார். 1892 ல் பிரிட்டிஷ் உடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு அபுதாபி பிரிட்டிஷாரின் சர்வதேச வாணிபத்தில் இணைக்கப்பட்டது. ஸாயெத் பின் கலீஃபா 1909 ல் இறந்து போக அவர் சகோதரர் முதலாம் சக்ர் பின் ஸாயெத் அல் நஹ்யான் ஆட்சிக்கு வந்தார்.
இவருக்குப்பின் ஷக்புத் பின் சுல்தான் அல் நஹ்யான் 1928 ல் ஆட்சிக்கு வந்தார். இவர் இரண்டாம் சுல்தான் பின் ஸாயெதின் மகனாவார். இவரது தாயாரின் பெயர் ஷெய்கா சல்மா பிந்த் புட்டி ஆவார். ஷக்புத் பின் சுல்தான் வாணிபத்தில் கவனம் செலுத்தி தங்கத்தைச் சேமித்தார். 1958 ல் அபுதாபியில் எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1948 ல் துபாயுடனான எல்லைப் பிரச்சினையை அபுதாபி தீர்த்துக் கொண்டது. 1952 ல் அபுதாபியின் மக்கள்தொகை 4,000 தான் இருந்தது. 1962 ல் முதல் எண்ணெய் வளம் ஏற்றுமதி தொடங்கியது. 1966 ல் இவரது சகோதரர் ஸாயெத் பின் சுல்தான் அல் நஹ்யான் ஆட்சிக்கு வர பிரிட்டிஷார் ஒமான் படைகளுடன் இணைந்து இவரை நீக்கினார்கள். ஷக்புத் பின் சுல்தானை ரகசியமாக ஏற்றிச் சென்ற பிரிட்டிஷ் படைகள் லெபனானில் விட்டு விட்டனர். 1971 ல் ஸாயெத் பின் சுல்தான் அபுதாபியின் அதிபரான பின் அவர் அபுதாபிக்கு அழைத்துக் கொள்ளப்பட்டார். ஷக்புத் பின் சுல்தானுக்குப்பின் ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அல் நஹ்யான் அபுதாபியின் ஆட்சிக்கு வந்தார்.
ஷெய்க் ஸாயெத் பின் சுல்தானின் பிறந்த வருடம் தோராயமாக 1916 அல்லது 1918 என்று குறிப்பிடப்படுகிறது. இவர் அல் அய்ன் என்ற இடத்தில் பிறந்தார். ஷெய்க் சுல்தான் பின் ஸாயெத் என்ற ஆட்சியாளரின் இளைய மகனாவார். இவர் தந்தை அபுதாபியின் ஆட்சியாளராக 1922 லிருந்து 1926 வரை இருந்தார். பின்னர் படுகொலை செய்யப்பட்டு இறந்து போனார். இவரது பாட்டனார் ஷெய்க் ஸாயெத் பின் கலீஃபாவால் அடுத்த ஆட்சிக்கு உரியவர் இவர்தான் என்று அடையாளம் காட்டப்பட்டார். ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் ஆட்சிக்கு வந்தபோது அபுதாபி ஏழு ஒப்பந்த மாகாணத்தில் இருந்தது. (நாம் ஐக்கிய அரபு வரலாறில் பார்த்தது.) முதல் 15 ஆண்டுகள் அல் அய்னிலேயே இருந்தார். அங்கு நவீன பள்ளிக்கூடங்கள் இல்லாததால் அடிப்படை மதக்கல்வியைப் பயின்றார். பாரம்பரிய அரபு கலைகளைக் கற்று கடுமையான இயற்கைப் பருவங்களில் பிதோயின் பழங்குடியினரின் அன்பினில் வளர்ந்தார். இவரது தந்தையைப் போலவே சில மாதம் ஆட்சியிலிருந்த ஷெய்க் ஸாயெத் பின் சுல்தானின் மூத்த சகோதரர் படுகொலை செய்யப்பட்டார். அதனால் அவர் தாயார் ஷெய்கா சல்மா பிந்த் புட்டி இனி சகோதரர்கள் ஆட்சிக்காக ஒருவருகொருவர் கொலை செய்து கொள்ளக்கூடாது என்று உறுதிமொழி பெற்றார். 1946 ல் அபுதாபியின் கிழக்குப்பகுதிக்கு கவர்னராக இருந்து அல் அய்னின் முவைஜி கோட்டையிலிருந்து ஆண்டார். அப்போது கடும் ஏழைகளாக இருந்த இப்பகுதி மக்கள் நோயினாலும் பாதிக்கப்பட்டார்கள். எண்ணெய் வளத்திற்காக தோண்ட ஆரம்பித்த போது உதவிகள் புரிந்தார்.

ஐக்கிய அரபு அமீரக வரலாறு 4

1952 ல் சௌதி அரேபியா, அராம்கோ (ARAMCO) என்ற நிறுவனத்தை எண்ணெய் வளத்திற்காக எல்லைப் பிரச்சினையில் இருந்த புரைய்மி என்ற பாலைவனப் பகுதியில் ஹமஸா என்ற கிராமத்தை ஆக்கிரமிக்க ஷெய்க் ஸாயெத் பின் சுல்தானுக்கு 30 மில்லியன் பவுண்டு கையூட்டுத் தர சம்மதித்தது. ஆனால் ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அதை மறுக்க, சௌதி அரேபியா துர்கி பின் அப்துல்லாஹ் அல் ஒதைஷான் என்பவர் தலைமையில் போருக்கு இறங்கியது. அதை ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் எதிர்கொண்டார். பின்னர் புரைய்மி பிரச்சினைக்காக 1955 ல் ஜெனீவாவில் நடந்த பேச்சு வார்த்தையில் சகோதரர் ஹஸ்ஸாவுடன் கலந்து கொண்ட ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அப்பகுதியில் தங்களுக்குண்டான ஆதாரங்களை வெளியிட்டார். பின்னர் அப்பகுதியில் நீருக்கான ஆதாரத்தைக் கண்டறிந்து அல் அய்ன், புரைய்மி ஆகியவற்றை வளப்படுத்தினார். 1960 ஜப்பானிய கலைஞரான டாக்டர். கட்சுஹிகோ டகாஹஷியை வரவழைத்து நகரை திட்டமிட்டு உருவாக்கினார். திடீரென்று 1968 ல் பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி கோரோன்வி ராபர்ட் அப்பகுதிக்கு வந்து இந்த விரிவாக்கம் ஒப்பந்தத்திற்கு மாறானது என்று உடனே வெளியேற உத்தரவிட்டார். உடனடியாக அதே ஆண்டு அனைத்து ஏழு அமீரகங்களையும் துபாயின் ஆட்சியாளர் ஷெய்க் ராஷித் அவர்கள் தலைமையில் கூட்டி பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற நாடினார். பின்னர் மற்ற ஒப்பந்த நாடுகள் போக, ஏழு மாகாணங்கள் கொண்ட ஐக்கிய அரபு அமீரகம் உருவானது. பின் சௌதி அரசுடன் ஜெத்தா ஒப்பந்தம் மூலம் எல்லைப் பிரச்சினையைத் தீர்த்தார். அனைத்துத் தரப்பிலும் நல்ல ஆட்சியாளர் என்று பெயரெடுத்தார். அனைத்து மதத்தினரும் வழிபாடு செய்ய அனுமதித்தார். பரந்த அரபுகளின் ஆட்சியையே கனவு கண்டார். ஈராக்கின் மீது அமெரிக்கா விதித்திருந்த தடையை நீக்கச் சொன்னார். ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அவர்கள் $20 பில்லியனுக்கு சொந்தக்காரரான மிகப் பெரிய பணக்காரராக “ஃபோர்ப்ஸ்” பத்திரிக்கை அறிவித்தது. 1988 ல் 5 மில்லியன் பவுண்டுகளுக்கு இங்கிலாந்தின் பெர்க் ஷைரில் டிட்டன் ஹூஸ்ட் பார்க் என்ற இடத்தை வாங்கினார்.
1997 ல் ஏன் ஜன்நாயக முறை ஆட்சியைக் கொண்டுவரக்கூடாது என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் பேட்டியில் கேட்டபோது, “எங்கள் மக்கள் எங்கள் ஆட்சி வழிமுறையில் தவறிருக்கிறது என்று சொன்னார்களா? அவர்கள் எப்போதுமே இஸ்லாமிய மதம் சார்ந்த எங்கள் ஆட்சி வழிமுறையையே விரும்புவார்கள்” என்றார். அபுதாபி மக்கள் அனைவருக்கு சொந்த இடமும் கட்டப்பட்ட வீடும் இலவசமாகக் கொடுத்தார். மஜ்லிஸ் என்னும் இவரின் பொது அறை எந்நேரமும் திறந்தே இருக்கும். தேவாலயமும், கோவிலும் கட்டிக் கொள்ள அனுமதித்தார். பெண்களின் குறிப்பிட்டளவு சுதந்திரத்தை வரவேற்றார். 2000 ல் ஸாயெத் செண்டர் என்ற அமைப்பின் மூலம் இவர் நன்கொடையாகக் கொடுத்த $2.5 மில்லியன்களை ஹார்வர்ட் டிவைனிடி ஸ்கூல் கறைபடிந்த பணம் என்று திருப்பிக் கொடுத்து விட்டது. 2001 ல் சுற்றுப்புர சூழலுக்கான ஸாயெத் சர்வதேச பரிசாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டருக்கு $500,000 கொடுத்த போது, இப்பரிசு எனது நண்பரின் பெயரில் உள்ளதால் இதைப்பெருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். 1999 ல் பல மருத்துவ சோதனைகள் மேற்கொண்டார். அப்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள் அவருக்கு பல கடிதங்களை எழுதினார்கள். 2004 நவம்பர் 2 ல் ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் காலமானார். அபுதாபியில் புதியதாகக் கட்டப்பட்ட மிகப்பெரிய ஷெய்க் ஸாயெத் பெரிய மசூதியின் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டார். பாகிஸ்தானின் ரஹீம் யார்கான் பகுதி விமான நிலையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாண்டிநீக்ரோ நகரத்தில் ஒரு சாலைக்கும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானமியின் பயிற்று விக்கும் அறைக்கும், அல்பேனியாவின் வடக்குபகுதியான குகீஸ் நகர விமான நிலையத்திற்கும், ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் பல்கலைக்கழகத்திற்கும் செச்சினியாவின் பள்ளிக்கூடம் ஒன்றிற்கும் ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பஹ்ரைனில் ‘ஸாயெத் டவுன்’ என்ற பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் லர்கானா சிந்த் மருத்துவமனை, லாகூர் பஞ்சாப் மருத்துவமனை, ரஹிம் யார்கானில் கல்லூரி மற்றும் மருத்துவமனை, குவைத் நகரின் ஐமுனைப் பாதை, ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையின் கோபுரம். துனீஷியாவின் ஒரு குடியிருப்புப்பகுதி ஆகியவற்றிற்கும் ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அவர்களின் பெயர் சூட்டப்பட்டது. 
ஆறு முறை திருமணமான ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அவர்களுக்கு, கலீஃபா பின் ஸாயெத், சுல்தான் பின் ஸாயெத், முஹம்மது பின் ஸாயெத், ஹம்தான் பின் ஸாயெத், ஹஸ்ஸா பின் ஸாயெத், தஹ்னூன் பின் ஸாயெத், மன்சூர் பின் ஸாயெத், அப்துல்லாஹ் பின் ஸாயெத், அல்யஸியா பின் ஸாயெத், ஷம்மா பின் ஸாயெத், சைஃப் பின் ஸாயெத், தனா பின் ஸாயெத், அஹ்மெத் பின் ஸாயெத், ஹமீத் பின் ஸாயெத், உமர் பின் ஸாயெத், காலித் பின் ஸாயெத், சயீத் பின் ஸாயெத், ஃபலாஹ் பின் ஸாயெத், நஹ்யான் பின் ஸாயெத், தைய்ப் பின் ஸாயெத், இஸ்ஸா பின் ஸாயெத் நாசர் பின் ஸாயெத், ஆகிய 22 மகன்களும், ஷம்ஸா பின்த் ஸாயெத், அஃப்ரா பின்த் ஸாயெத், மௌசா பின்த் ஸாயெத், வதீமா பின்த் ஸாயெத், ஷெய்கா பின்த் ஸாயெத், ரோதா பின்த் ஸாயெத் என்று ஏழு மகள்களும் உள்ளனர். இவருக்குப்பின் இவர் மூத்த மகன் கலீஃபா பின் ஸாயெத் அல் நஹ்யான் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்.
இவர் ராயல் மிலிட்டரி அகாடமி சன்துர்ஸ்டில் இராணுவத்திற்கான பட்டம் பெற்றவர். அபுதாபியின் கிழக்குப்பகுதிக்கு மேயராகவும், அல் அய்ன் பகுதி நீதித்துறைக்குத் தலைவராகவும் இருந்தார். 1969 ல் அபுதாபியின் பட்டத்து இளவரசராகவும், இராணுவ மந்திரியாகவும் நியமிக்கப்பட்டார். கலீஃபா பின் ஸாயெதுக்கு, முஹம்மது அல் நஹ்யான், சுல்தான் அல் நஹ்யான் என்று இரு மகன்கள் உண்டு. அபுதாபியில் பல துறைகளில் மந்திரியாகப் பணியாற்றி இருக்கிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தந்தை நோய்வாய்ப்பட்டிருந்த போது தற்காலிகமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராகச் செயலாற்றி இருக்கிறார். துபாயிலிருக்கும் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் துபாய் இவரைக் கௌரவிக்கும் விதமாக ‘புர்ஜ் கலீஃபா’ என்று பெயர் மாற்றப்பட்டது. 2005 ல் ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 100% ஊதிய உயர்வு கொடுத்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். இவர் மேற்கத்திய கலாச்சாரத்தில் கொஞ்சம் ஈடுபாடு கொண்டவர். குதிரை மற்றும் ஒட்டகப்பந்தயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். 2010 ல் அமெரிக்கா கலீஃபா பின் ஸாயெதை தூரத்திலிருக்கும் கவர்ச்சி இல்லாத மனிதர் என்று கூறியதாக ‘விக்கி லீக்ஸ்’ இணைய தளம் வெளியிட்டிருந்தது. லிபியாவில் மாம்மர் கட்டாஃபிக்கு எதிராக அமைத்த நேட்டோ படைக்கு இராணுவத்தை அனுப்பினார். சீசெல்ஷின் முக்கிய தீவான மாஹீயில் 66 ஏக்கரில், 2 மில்லியன் டாலரில் பிரமாண்டமான அரண்மனை கட்டியுள்ளார் என்று சீசெல்ஷ் அரசு அறிவித்தது. இந்த அரண்மனை கட்டுவதால் குடிநீர் விநியோகம் தடைபடும் என்று சீசெல்ஷ் அரசு பொது நிறுவனம் கூறியது. அதற்கு சுற்றுச்சூழல் துறை மந்திரி அதுபோல் ஆகாமல் கலீஃபா அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என உறுதி அளித்தது. துபாயின் அஸ்கான் என்னும் கட்டுமான நிறுவனம் இந்த அரண்மனையைக் கட்டும் பணியை 2010 ல் மேற்கொண்டது. அதில் பிழை ஏற்பட்டு ஆறு போல் தண்ணீர் ஏறக்குறைய 8000 குடும்பங்களுக்கான தண்ணீர் அப்பகுதி முழுதும் ஓடியது. உடனடியாக செல்சிஷின் அரசு நிர்வாகமும், கலீஃபாவால் அனுப்பப்பட்ட பொறியாளர்களும் விரைந்தனர். விசாரணையில் துபாயின் அஸ்கான் கட்டுமான நிறுவனத்தின் தவறினால் தான் இதுபோல் ஆனது என்றும் கண்டறிந்து 81,000 டாலர் சீசெல்ஷுக்கு அபராதம் செலுத்தச் சொன்னது. அஸ்கான் இத் தவறு எதிர்பாராத சீதோஷ்ண நிலையால் ஆகியது என்று வாதாடியது. கலீஃபா பின் ஸாயெத் அவர்கள் உடனடியாக 15 மில்லியன் டாலர்கள் கொடுத்து மலைப்பாதையில் செல்லும் ஒட்டுமொத்த தண்ணீர் குழாய்களையும் நீக்கி புதிய குழாய் அமைத்துக் கொள்ளச் செய்தார். சீசெல்ஷ் அரசாங்கம் அஸ்கான் நிறுவனத்தை பாதிக்கப்பட்ட 360 குடும்பங்களுக்கு தலா 8,000 டாலர் கொடுக்கச் சொன்னது.   

ஐக்கிய அரபு அமீரக வரலாறு 5

துபாய் அமீரக வரலாறு

18 ம் நூற்றாண்டு வரை துபாயின் வரலாறுகள் அவ்வளவாகப் பதிவு செய்யப்படவில்லை. 1993-1998 ல் அபுதாபியிக்கும், துபாய்க்கும் இடையில் ‘ஷெய்க் ஸாயெத் சாலை’ என்று பெரும் சாலை போடப்பட்டது. அதற்காக தோண்டும்போது, மான்குரோவ் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் சதுப்புநில மரவகை கண்டுபிடிக்கப்பட்டது. இம் மரப்படிவம் தோராயமாக கி.மு. 7000 ஆண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டு மனிதர்கள் வாழ்ந்த அடையாளத்தைச் சொன்னது. இந்தச் சாலைக்கும் தற்போது ஜெபெல் அலி துறைமுகம் அமைந்துள்ள கடற்கரைக்கும் 3 கி.மீ தூரத்திற்கு மேலுள்ளதால், சாலையில் அம்மரம் இருந்த பகுதிவரை கி.மு 3000 த்தில் கடற்கரைப்பகுதி இருந்ததாகக் கணித்தார்கள். இங்கு கால்நடைகளுடன் கூடிய பழங்குடியினர் வளமாக வாழ்ந்திருக்கிறார்கள். கி.மு 2500 க்குப் பிறகு, இங்கு பேரீச்சை மரங்கள் தோன்ற மக்கள் விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். இந்த மேய்ச்சல்காரர்கள் அஸ்த் என்னும் அரபு பழங்குடியினரின் சிலையான பஜிர் (பஜிரா) என்றதை தெய்வமாக வழிபட்டு வந்தார்கள். சில ஆராய்ச்சியாளர்கள் சுமேரிய நாகரீகத்தின் ஒரு பிரிவான மகன் கூட்டத்தார் இங்கு வாழ்ந்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். ஏனென்றால் இந்த மகன் கூட்டத்தாரின் படிமங்கள் அருகாமை பஹ்ரைனில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. கி.மு. 2000 க்குப் பிறகு எந்த ஆதாரமும் மனிதர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் துபாயில் கிடைக்கவில்லை. ஈரானை ஆட்சி செய்த அகாயிமெனிட்களும், சஸ்ஸானியர்களும் கவர்னர்கள் ஆளக்கூடிய சில பகுதிகளுக்கு சட்ரபி என்று அழைப்பார்கள். அப்படியான ஒரு சட்ரபியாக மனிதர்கள் நடமாட்டமில்லாத பகுதியாக பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, துபாய் இருந்தது. பின்னர் தற்போதைய ‘ஜுமெய்ராஹ்’ என்ற இடத்தில் கடற் கரையோரப் பகுதியில் வரும் படகுகளிலிருந்து பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் 6 ம் நூற்றாண்டிலிருந்து நிறுத்தப்பட்டிருந்தன.
7 ம் நூற்றாண்டிலிருந்து உமய்யாத்கள் ஆட்சியில் துபாயில் இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டது. உமய்யாத்கள் துபாய் பகுதியை மீன், முத்துக்குளிப்பு ஆகிய வாணிபங்களுக்கு முக்கிய இடமாக ஆக்கி இங்கிருந்து இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கு வாணிபம் செய்தார்கள். எழுத்து மூலமாக துபாய் 1095 ல் அபூ உபைத் அப்த் அல்லாஹ் அல் பக்ரி என்பவர் மூலம் “மொஜம் மா ஒஸ்தோஜம் மென் அஸ்மாயீ அல் பிலாத் வல் மவத்யீ” என்ற நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. காஸ்பிரோ பால்பி (GASPERO BALBI) என்ற வெனீஷிய முத்து வியாபாரி 1580 ல் இங்கு வருகை தந்து பல வெனீஷிய முத்துக்குளிப்பவர்களுடன் பணி புரிந்திருக்கிறேன் என்று பதிவு செய்திருக்கிறார். 19 ம் நூற்றாண்டில் அபுதாபியின் ஆதரவில் பனி யாஸ் பழங்குடியின் ஒரு பிரிவான அல் அபு ஃபலாசா (அல் ஃபலாசி குடும்பத்தினர்) என்ற அரசவம்சம் துபாயை ஆட்சி செய்தது. நாளடைவில் பெருகிப்போன அல் ஃபாலாசிக் குடும்பத்திலிருந்து பிரிந்த இன்னொரு குடும்பமான அல் மக்தூம் 1833 ல் துபாயின் ஆட்சிக்கு வந்தது. இவர்கள் அப்போது 800 பேர் அடங்கிய பழங்குடிகளாக மக்தூம் பின் புட்டி என்பவர் தலைமையில் இருந்தார்கள்.
துபாயின் ஆட்சியாளர்களாக 1833-1852 வரை ஷெய்க் மக்தூம் பின் புட்டி பின் சுஹைல், 1852-1859 வரை ஷெய்க் ஸயத் பின் புட்டி, 1859-1886 வரை ஷெய்க் ஹுஷுர் பின் மக்தூம், 1886-1894 வரை ஷெய்க் ராஷித் பின் மக்தூம், 1894-1906 வரை ஷெய்க் மக்தூம் பின் ஹுஷூர், 1906-1912 வரை ஷெய்க் புட்டி பின் சுஹைல், 1912-1929 வரை இரண்டாம் ஸயீத் பின் மக்தூம், 1929 ல் ஏப்ரல் மாதம் மூன்று நாட்கள் மட்டும் ஷெய்க் மனி பின் ராஷித், 1929-1958 வரை இரண்டாம் ஸயீத் பின் மக்தூம் இரண்டாம் முறையாக, 1958-1990 வரை ஷெய்க் இரண்டாம் ராஷித் பின் ஸயீத் அல் மக்தூம், 1990-2006 வரை ஷெய்க் மூன்றாம் மக்தூம் பின் ராஷித் அல் மக்தூம், 2006 லிருந்து தற்போது வரை ஷெய்க் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஆட்சி செய்து வருகிறார். இவர்களின் முந்தைய ஆட்சியாளர்களின் வரலாறுகள் அவ்வளவாகக் குறிப்பிடப் படவில்லை. 1929-1958 வரை இரண்டாம் ஸயீத் பின் மக்தூம் இவர் “எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்” தலைவர் அஹ்மத் பின் ஸயீத் அல் மக்தூமுடைய தந்தை ஆவார். இவருடைய ஆட்சி திடீரென்று மூன்று நாட்களுக்கு பறிக்கப்பட்டு தூரத்து உறவினர் ஷெய்க் மனி பின் ராஷித் வசம் போனது. தற்போதைய ஆட்சியாளருக்கு இவர் பாட்டனார் ஆவார். 1929-1958 வரை இரண்டாம் ஸயீத் பின் மக்தூம் ஆட்சியில் முத்துக்குளிப்பு வாணிபம் வீழ்ந்து பொருளாதாரம் தடைப்பட்டது. இருந்தாலும் இவர் மற்ற வாணிபங்களில் கவனம் செய்து வீழ்ச்சியை சரி செய்தார். இவருக்குப்பின் 1958-1990 வரை ஆட்சி செய்த ஷெய்க் இரண்டாம் ராஷித் பின் ஸயீத் அல் மக்தூம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஜனாதிபதியாகவும் இருந்தார். இவர் சிறிய அளவில் இருந்த துபாயின் வாணிபத்தை துபாய் க்ரீக் என்ற துறைமுகத்தின் வாயிலாக சர்வதேச அளவில் விரிவு படுத்தினார். இவர் மொழிந்த, “எனது பாட்டனார் ஒட்டகத்தில் சவாரி செய்தார். என் தகப்பனார் ஒட்டகத்தில் சவாரி செய்தார். நான் மெர்சிடிஸ் என்னும் விலையுயர்ந்த காரில் சவாரி செய்கிறேன். என் மகன் லாண்ட் ரோவர் என்னும் காரில் சவாரி செய்வார். அவர் மகனும் லாண்ட் ரோவர் காரில் சவாரி செய்வார். ஆனால், அவரின் மகன் மீண்டும் ஒட்டகத்தில் சவாரி செய்வார்” என்பது முத்தான வார்த்தைகளாகக் கருதப்படுகிறது. அதாவது 1969 ல் ஏற்றுமதி செய்யப்பட்ட துபாயின் எண்ணெய் வளம் சில காலங்களில் வற்றிவிடும் என்பதைக் கணித்துச் சொல்லப்பட்டதாகவும் கருதப்படுகிறது. ஆனால் இவர் ஆரம்பித்து வைத்த துபாயின் சர்வதேச வாணிபம் அந்த எண்ணெய் இழப்பீட்டைச் சரி செய்துவிடும் என்று எண்ணப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரக வரலாறு 6

ஷெய்க் ராஷித் அவர்களால் 1972 ல் துவக்கப்பட்ட ராஷித் துறைமுகம் (PORT RASHID-MINA PORT) துபாயின் பொருளாதாரத் துறைமுகமாக விளங்கியது. அப்போது சரக்குகளை கப்பலிலிருந்து இறக்க இரண்டு பளுதூக்கும் இயந்திரங்களும் (CRANE) 100,000 குறைவான எடையைக் கையாளும் வசதியுடன் தான் இருந்தன. 1978 ல் கப்பல் நிறுத்தும் இடம் (BERTH) 32 ஆக விரிவு படுத்தப்பட்டு, அதில் ஐந்து கப்பல் நிறுத்தும் இடங்கள் மிகப்பெரிய கப்பல்கள் நிறுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டது. தற்போது ஆழம் 13 மீட்டராக்கப்பட்டு 9 பளுதூக்கும் இயந்திரங்களுடன் 1,500,000 எடை கையாளும் வண்ணம் விரிவுபடுத்தப் பட்டிருக்கிறது. ஷெய்க் ராஷித் அவர்களால் 1975 ல் பர் துபாய் என்னும் பகுதியிலிருந்து துபாய் க்ரீக்கின் கீழே கடலுக்கடியில் கடந்து மறுமுனை அல் ராஸ் (DEIRA) என்னும் பகுதியை அடைய “அல் ஷிண்டகா” என்னும் நீர்அடி சாலைப்பாதை அமைக்கப்பட்டது. இது இரண்டிரண்டாக நால்வழிப் பாதையும், ஐந்து மீட்டர் உயரமும், 60 கி.மீ வேகத்தில் செல்லும் வகையிலும் கட்டப்பட்டது. துபாய் நகரின் தென்மேற்குப் பகுதியில் 45 கி.மீ தொலைவில் போர்ட் ராஷிதுக்கு இணையாக போர்ட் ஜெபெல் அலி என்ற துறைமுகம் 1979 ல் கட்டப்பட்டது. 1978 ல் ஷெய்க் ராஷித் அவர்கள் துபாய் உலக வாணிப மையம் (DUBAI WORLD TRADE CENTRE) கட்டினார். 149 மீட்டர் உயரத்தில் 39 அடுக்குகளைக் கொண்டது இது. 1978 ல் இதுதான் அந்தப்பகுதியில் மிக உயர்ந்த கட்டிடம். பல பிரபலமான வெளிநாட்டு அலுவலகங்கள் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் 100 திர்ஹம் மதிப்புள்ள பணத்தில் அச்சடிக்கப் பட்டிருக்கிறது. 1970 க்கு முன்பு இயற்கையாக இருந்த துபாய் க்ரீக் எனப்படும் கடல்நீர் கால்வாய் துபாயின் ராஸ் அல் கோர் பறவைகள் சரணாலயம் வரை நீண்டிருக்கும். இது துபாயை பர் துபாய் மற்றும் தேரா துபாய் என்று இரண்டாகப் பிரிக்கும். பர் துபாய் பகுதியில் அமைந்துள்ள க்ரீக்கின் கரையில் 19 ம் நூற்றாண்டுகளில் அல் மக்தூம் குடும்பத்தினர் குடியிருந்தார்கள். ஷெய்க் ராஷித் ஆட்சி காலத்தில் கிழக்கு ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற பகுதிகளிலிருந்து வரும் சிறிய கப்பல்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டது. நகருக்குள் துறைமுகம் அமைந்த ஒரே இடம் துபாய் தான். ஒரு காலத்தில் மீன்பிடியும், முத்துக்குளிப்பும் பிரதானமாக இருந்த துபாய் க்ரீக் காலப்போக்கில் சிறிய படகுகளுக்கான நவீன துறைமுகமானது. இப்பகுதியில் கப்பல்களைப் பழுதுபார்க்க 1971 ல் துபாய் ட்ரைடாக் என்று ஒரு உலர் துறைமுகம் துவக்கப்பட்டு 1983 ல் முடிவு பெற்றது. இதுவும் ஷெய்க் ராஷித் அவர்களின் காலத்தில் தான் கட்டப்பட்டது. பெர்ஷிய வளைகுடாவில் மிகப்பெரிய கப்பல் பழுதுபார்க்கும் உலர்துறை இதுதான். இதுவரை 6000 கப்பல்கள் வரை பழுதுபார்த்து சாதனை செய்திருக்கிறது. 1994 லிருந்து துபாய் ட்ரைடாக்கில் புதிய கப்பல்களும் தயாரிக்கத் துவங்கின. இதுவரை 70 கப்பல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
1946 லிருந்து துபாய், அபுதாபிக்கு இடையிலிருந்த ஆயுதம் ஏந்திய எல்லைப்பிரச்சினையை ஷெய்க் ராஷித் அவர்கள் தீர்த்துவைத்து, அபுதாபியின் ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அல் நஹ்யானுடன் நல்லுறவை வளர்த்தார். மேலும் கதார் நாட்டுடனும் நட்புடன் இருந்து தன் மகளை 1961 ல் கதார் எமிருக்கு மணமுடித்துக் கொடுத்தார். 1966 ல் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தபோது, ஷெய்க் ராஷித் அவர்கள் கதார் நாட்டுடன் சேர்ந்து கல்ஃப் ருபீ என்ற பணத்தை புழக்கத்தில் வைத்துக் கொண்டார். அதேகாலகட்டத்தில் அபுதாபி பஹ்ரைனுடன் சேர்ந்து பஹ்ரைன் தினார் என்பதை புழக்கத்தில் வைத்துக் கொண்டது. துபாய் க்ரீக்கை தோண்டுவதற்கு அப்போது குவைத் நாட்டு எமிர் “க்ரீக் ஒப்பந்தம்” ஒன்றை ஏற்படுத்தி பொருளுதவி செய்தார். ஐக்கிய அரபில் இருந்த மற்ற அமீரகங்களை ஒன்றிணைக்கப் பாடுபட்டார். ஐக்கிய அரபு அமீரகங்களுக்கென தனி நாணயம் கொண்டுவருவதிலும் துணை நின்றார். 1979 ல் துபாய் நகரத்தை விட்டு தள்ளி தனியாக ஜெபெல் அலி என்ற துறைமுகத்தைக் கட்டினார். இதுதான் உலகிலேயே முழுக்க மனித கரங்களால் (MANMADE HARBOUR) ஆன துறைமுகம். 1985 ல் இத்துறைமுகத்தின் உள்ளேயே ‘ஜெலெல் அலி ஃப்ரீ ஸோன்’ என்று சர்வதேச நிறுவனங்களுக்காக வரி இல்லாத சட்டத்துடன் அலுவலகம், சரக்கு கையாளும் கூடங்கள், தொழிலாளர்கள் குடியிருப்புகள், மருத்துவமனை என்று எல்லாம் அமைத்தார்.
ஷெய்க் ராஷித் அல் மக்தூம், ஷெய்க் ஹம்தான் பின் ஸாயெத் அல் நஹ்யான் என்பவரின் மகள் ஷெய்கா லதிஃபா பிந்த் ஹம்தான் என்பவரை மணந்திருந்தார். இவருக்கு மக்தூம் பின் ராஷித் அல் மக்தூம், ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம், முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம், அஹ்மது பின் ராஷித் அல் மக்தூம் என்று நான்கு மகன்களும், லதீஃபா பிந்த் ராஷித் அல் மக்தூம், ஃபாதிமா பிந்த் ராஷித் அல் மக்தூம் என்று இரண்டு மகள்களும் இருந்தார்கள். ஷெய்க் ராஷித் அவர்கள் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் துபாயின் சாலைகளிலும், சந்தைகளிலும் காரிலும், நடந்தும் மக்களோடு மக்களாய் புழங்கினார். இதற்கு துபாயில் வசித்த நமது முன் சந்ததி சாட்சியாக இருக்கிறது. 1990 அக்டோபரில் ஷெய்க் ராஷித் அவர்கள் மரணமடைந்தார்.
அதன்பிறகு, அவர் மூத்த மகன் மக்தூம் பின் ராஷித் அல் மக்தூம் துபாயின் ஆட்சியாளராக வந்தார். இவரை மூன்றாம் மக்தூம் என்றும் அழைப்பார்கள். அல் ஃபலாசி ஆட்சிவம்ச குடும்பத்தினரின் இருப்பிடமான அல் ஷிண்டகாவில் 1943 ஜனவரியில் பிறந்தார். 1971 ல் ஐக்கிய அரபு அமீரகங்கள் தோன்றிய பின் முதல் பிரதம மந்திரியாக எட்டு ஆண்டுகள் இருந்தார். அதன் பிறகு தந்தையார் ஷெய்க் ராஷிதே பிரதம மந்திரி பதவியில் இறக்கும் வரை இருந்தார். அவர் இறந்த பிறகு, மீண்டும் பிரதம மந்திரியானார். ஐக்கிய அரபு ஆமீரகங்களின் அதிபர் ஷெய்க் ஸாயெத் அவர்கள் இறந்த போது தற்காலிகமாக இரண்டு நாட்களுக்கு அதிபர் பதவியிலும் இருந்தார். துபாயை மற்ற சகோதரர்கள் ஷெய்க் ஹம்தான் (ஐக்கிய அரபு அமீரகங்களின் பொருளாதார மந்திரி) மற்றும் ஷெய்க் முஹம்மது (ஐக்கிய அரபு அமீரகங்களின் இராணுவ மந்திரி) ஆகியோருடன் இணைந்து ஆட்சி செய்தார். இந்த மூன்று சகோதரர்களும் சேர்ந்து உலகப் புகழ்பெற்ற “கோடோல்ஃபின் ஸ்டாபிள்ஸ்” என்னும் சர்வதேச குதிரைப் பந்தய நிறுவனத்தை நடத்தினார்கள். 2006 ஜனவரியில் ஆஸ்திரேலியாவின் குயிஸ்லாந்து மாகாணத்தில் கோல்ட் கோஸ்ட் என்ற தீவில் ப்ளாஸோ வெர்சாஸ் என்ற விடுதியில் ஓய்வில் இருந்த போது மாரடைப்பால் மரணமடைந்தார். இவருக்குப் பின் இளைய சகோதரர் ஷெய்க் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஆட்சிக்கு வந்தார்.