செவ்வாய், 30 டிசம்பர், 2014

ஓட்டோமான்கள் வரலாறு 1

அலாஓயிட் ஆட்சிவம்சம் 

கூ.செ. செய்யது முஹமது
சாதியன் பேரரசில் இறுதி சுல்தானாக மொரோக்கோவில் அஹ்மத் அல் மன்சூர் என்பவர் இருந்தார். அவரது இறப்பிற்குப் பிறகு, அரச குடும்பத்தினரின் குழப்பத்தினால் அலாஓயிட் ஆட்சிவம்சம் என்ற புதிய பெயரில் ஸாவியா போரில் வெற்றி பெற்று முலாய் அல் ராஷித் என்பவரின் ஆட்சி மொரோக்கோவில் ஏற்பட்டது. இந்த ஆட்சியை அலவிட் ஆட்சிவம்சம் என்றும் அழைக்கலாம். இவர்கள் அலி இப்ன் அல்தாலிப்(ரலி), ஃபாத்திமா அஸ் ஸஹரா(ரலி) அவர்களின் வாரிசு முஹம்மது என்பவரின் வழிமுறையில் வந்தவர்கள். 13 ம் நூற்றாண்டில் ஹிஜாஸ் மாகாணத்தில் யான்பு நகரத்திலிருந்து அல் ஹஸ்ஸன் அத்தாகில் என்பவரை மொரோக்கோவைச் சேர்ந்த ஒரு இமாம் (மதகுரு) தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்வதால் அவரின் துவா (பிரார்தனை) வினினால் தங்கள் பேரீச்சைத் தோட்டத்திற்கு பரக்கத் (வளமை) வரலாம் என்று அழைத்து வந்தார். அத்தாகிலின் சந்ததி படிப்படியாகப் பெருகி 16 ம் நூற்றாண்டில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஷரீஃப் இப்ன் அலி என்பவர் சாதியன் பேரரசின் பலவீனத்தைப் பயன்படுத்தி ‘டஃபிலல்ட்’ பகுதியில் இளவரசரானார். இவர் தான் அலவிட் ஆட்சிவம்சம் அமைய தூண்டுகோலாக இருந்தார். இவரின் 15 மகன்களில் மூத்த மகனான முஹம்மது இப்ன் ஷரீஃபை 1536 ல் டஃபிலல்டுக்கு ஆட்சியாளராக்கினார். முஹம்மது இப்ன் ஷரீஃபிற்கு பிறகு அவர் சகோதரர் முலாய் அல் ராஷித் 1664 ல் ஆட்சிக்கு வந்து சிறிய இராணுவத்தின் மூலம் கிழக்கு மொரோக்கோவில் ஆதிக்கம் பெற்றார். அடுத்து டஸா என்ற பகுதியையும் வென்றார். 1666 ல் ஃபெஸ் மாகாணத்தை ஆட்சி செய்த பெர்பெர்களின் வழிவந்த ஸ்வோய்யா என்பவரை மொரோஸாவியா போரில் வெற்றி பெற்று வட மொரோக்கோவின் மொத்த அதிகாரத்தையும் பெற்றார். இவர் தனது குதிரையில் இருந்து தவறி விழுந்து மர்ராகெச்சில் 1672 ல் 26 வயதில் இறந்து போனார். இவருக்குப் பிறகு இவரின் ஒன்று விட்ட சகோதரர் இஸ்மாயில் இப்ன் ஷரீஃப் ஆட்சிக்கு வந்தார்.
இஸ்மாயில் இப்ன் ஷரீஃப் ஆட்சிக்கு வந்தவுடன் உள்நாட்டு பழங்குடியினரால் அடிக்கடி சண்டை நடந்தது. மர்ராகெஷிலிருந்து மாற்றி மெக்னஸ் என்ற நகரத்தை தலைநகராக உருவாக்கினார். இது மொரோக்கோவின் மூன்றாவது பெரிய நகரமாகும். ஏறக்குறைய ஒரு கோடி பேர் வசிக்கிறார்கள் 9 ம் நூற்றாண்டில் தென் துனீஷியாவில் வாழ்ந்த மிக்னஸா என்ற பெர்பெர் பழங்குடியினரின் நினைவாக மெக்னஸ் என்று பெயர் வைத்தார். 11 ம் நூற்றாண்டில் அல்மொராவிட்கள் ஆட்சியின்போது இங்கொரு கோட்டை இருந்தது. பின் அல்மொஹத் என்பவர்களால் ஒரு பெரிய மஸ்ஜித் கட்டுவதற்காக அது இடிக்கப்பட்டது. பின்னால் வந்த மெரினித்கள் ஒரு மதரஸாவையும் கட்டினார்கள். இஸ்மாயில் இப்ன் ஷரீஃப் கடலில் பிடிக்கப்படும் கிறிஸ்தவ மாலுமிகளை அடைத்து வைக்க இங்கு பெரிய சிறைச்சாலையும், மாளிகைகளும், தோட்டங்களும், நினைவு கதவுகளையும், மஸ்ஜித்களையும் கட்டினார். இந்நகரம் “சிட்டி ஆஃப் ஹன்ரட் மினாரட்ஸ்” என்று அழைக்கப்பட்டது. 40 கி.மீ நீளத்தில் மிகப்பெரிய சுவரையும் நகரைச் சுற்றிக் கட்டினார். இச்சுவரால் 2000 ஆம் ஆண்டு மெக்னஸ் நகரில் மழை பெய்தால் வெளியேறாமல், வடிவு நீர்க்குழாய்கள் அமைப்பதும் சிரமமாக இருந்தது.
இஸ்மாயில் இப்ன் ஷரீஃபின் கொடூரத்தன்மையால் ‘இரத்த தாகம் எடுத்தவர் என்று சொல்லப்பட்டார். இவர் மெக்னஸில் கட்டிய சுவரில் எதிரிகளின் 10,000 தலையால் அழகுபடுத்தப்பட்டது என்றும் சொல்லப்பட்டது. இவரது ஆட்சியில் சரியாக வேலை செய்யாத பணியாட்கள், அரண்மனை வேலையாட்கள், எதிரிகள் என்று தோராயமாக 30,000 பேர் வரை கொன்றார் என்று சொல்கிறார்கள். 1682 ல் இஸ்மாயில் இப்ன் ஷரீஃப் ஃப்ரான்ஸின் மன்னரான 18 ம் லூயிஸிடம் முஹம்மது டெனிம் என்பவரை தூதுவராக அனுப்பினார். ஃப்ரான்சுடன் நல்லுறவைப் பேண லூயிஸின் அழகான மகள் மேரி அன்னி டி போர்டனை மணந்து கொள்ளவும் விரும்பினார். ஆனால், போர்டன் அதை மறுத்துவிட்டாள். 1679, 1682, 1695,1695 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து ஓட்டோமான்களுடன் போரி ட்டு மொரோக்கோவின் சுதந்திரத்தை அலாவிட்டுகளுக்கு உறுதி செய்தார். இதனால் இன்றும் மொரோ க்கோவின் சரித்திரத்தில் இவருக்கொரு பெயருண்டு.  ஐரோப்பியர்கள் நிறைய துறைமுகங்களை ஆக் கிரமித்து வைத்திருந்தார்கள். 1681 ல் ஸ்பெயினிடமிருந்து அல் மமூராஹ், 1684 ல் ஆங்கிலேயர்களிடம் இருந்து டான்ஜியர், 1689 ல் மீண்டும் ஸ்பெயினிடமிருந்து லராச்சி ஆகிய துறைமுகங்களை மீட்டார். ஸ்பெயினின் எதிரியாய் இருந்த ஃப்ரான்சின் 
18 ம் லூயிசின் நட்புறவால் பல உதவிகள் பெற்றார். ஃப்ரான்ஸ் இஸ்மாயில் இப்ன் ஷரீஃபின் இராணுவத்திற்கு பயிற்சியும் கொடுத்து, அரசு நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என்று ஒழுங்குமுறைகளையும் சொல்லிக் கொடுத்தது. பல ஐரோப்பிய கடல் கொள்ளையர்களையும், அடிமைகளையும் பிடித்து வைத்திருந்த இவர் தலைநகர் மெக்னஸை உருவாக்க அவர்களைப் பயன்படுத்திக் கொண்டும், ஐரோப்பியர்களுடனான போர்களில் அவர்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்தியும், அவர்களை விடுதலை செய்ய பெரிய பணயத் தொகைகளையும் பெற்றார். ஏறக்குறைய 150,000 துணை சஹாரா ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் இவரின் ‘கரும் பாதுகாப்புப்படை’ யில் இருந்தார்கள். இவர் இறக்கும் போது அப்படை பலமடங்கு பெரியதாக மாறி மொரோக்கோவின் சரித்திரத்தில் இடம் பெற்றது.
நம்பித்தான் ஆகவேண்டும் இவருக்கு 867 குழந்தைகள் பிறந்தனர். அதில் 525 ஆண் குழந்தைகளும், 342 பெண் குழந்தைகளும் ஆவார்கள். 1721 ல் இவரது 700 வது குழந்தை பிறந்தது. இப்பிறப்புகள் எந்த ஒரு தனி மனிதனுக்கும் இல்லாமல் ஆதாரத்துடன் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 1727 ல் தனது 80 வது வயதில் இஸ்மாயில் இப்ன் ஷரீஃப் இறந்து போனார். இவர் இறப்பிற்கு பிறகு எண்ணற்ற மகன்களால் ஆட்சிக்கு பெரும் குழப்பம் நிலவியது. மேலும் நல்ல உறவு இல்லாத பெர்பெர் மற்றும் அரபு பிதோயின் பழங்குடியினர்களாலும் பல புரட்சிகளும், சண்டைகளும் நடந்தது. 1755 ல் ஏற்பட்ட பெரும் பூகம்பத்தில் மெக்னஸ் நகரின் அரண்மனை சுவர் பெரிதும் பாதிக்கப்பட்டது. இஸ்மாயில் இப்ன் ஷரீஃபுக்குப் பிறகு, சில மாதங்களே ஒன்று விட்ட சகோதரர் அஹ்மெத் எத் தெஹிபி 1727 ல் ஆண்டார். மதுப்பழக்கம் இருந்ததாலும், ஆட்சியாளும் சரியான தகுதி இல்லாததாலும் இவரின் சொந்த மனைவியே புரட்சிக்குத் தூண்டி இவரை ஆட்சியை விட்டு துரத்தினார். உடனே பல பிரச்சினைகளின் பின்ணனியில் இஸ்மாயில் இப்ன் ஷரீஃபின் மகன் அபுல் அப்பாஸ் அஹமத் ஆட்சிக்கு வந்தார். ஒரே ஒரு ஆண்டு மட்டும் ஆட்சி செய்தார். உடனே இஸ்மாயில் இப்ன் ஷரீஃபின் பிரபலமான மகன் அப்தல் மாலிக் என்பவர் ஆட்சியைப் பிடித்தார். இவரை வாய்மொழியாக தந்தை ஆட்சிக்குப் பரிந்துரைத்திருந்தார். இவர் செய்த தவறு சகோதரரைத் தப்பிக்க விட்டது. அதற்குக் காரணமாக கரும்பாதுகாப்புப்படையை குற்றம் சாட்டினார்.
இதனால் கரும்பாதுகாப்புப்படை கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக அப்தல் மாலிக்குக்கு ஒத்துழைக்காமல் அஹ்மெத் எத் தெஹிபுக்கு மீண்டும் ஆதரவு தெரிவித்தார்கள். இதனால் மீண்டும் உள்நாட்டுப் போர் உச்சத்தை அடைந்தது. அதிகமான ரத்தம் சிந்தப்பட்ட பிறகு, சகோதரர்கள் இருவருக்கும் இடையில் சமாதானத்திற்கு ஒப்புக் கொண்டார்கள். மொரோக்கோவை இரண்டாகப் பிரித்து அஹ்மெத் எத் தெஹிபி மெக்னெஸ் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு ஒரு ஆட்சியும், ஃபெஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு அப்தல் மாலிக் ஒரு ஆட்சியும் ஆள்வதாக ஒப்புக் கொண்டார்கள். இதன் சாராம்சம் சரியாக இல்லாததால், சகோதரருடன் நேரில் சந்தித்துப் பேச அழைத்தார். ஆனால் பின்ணனியில் அவரைக் கொல்ல அப்தல் மாலிக் திட்டமிட்டிருந்தார். ஆனால் திட்டம் தோல்வி அடைந்ததால் ரகசிய படையால் பிடிக்கப்பட்டு தனிச் சிறையில் அடைக்கப்பட்டு, பல வாரங்கள் கழித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த தருணத்தைப் பயன்படுத்தி தப்பிப்போன அபுல் அப்பாஸ் அஹமது மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். முன்பு போலவே சில மாதங்களே ஆண்ட இவரை புரட்சியின் மூலம் சுல்தான் இஸ்மாயில் இப்ன் ஷரீஃபின் இன்னொரு மகன் அபு அப்பாஸ் அப்துல்லாஹ் ஆட்சிக்கு வந்தார். இவரை ஒரே முறையாக ஆட்சி செய்யவிடாமல் அவரது சகோதரர்கள் புரட்சியின் மூலம் கவிழ்த்தார்கள். இவர் 1729-1734, 1736, 1740-1741, 1741-1742, 1743-1747 மற்றும் 1748-1757 வரை விட்டு விட்டு ஆண்டார். தார் இட்டிபிபாக் என்ற இடத்தில் நவம்பர் 1757 ல் இறந்து போனார். இடைப் பட்ட காலங்களில் 1734-1736 ல் அலி என்பவரும், 1736-1738 வரை இரண்டாம் முஹம்மதுவும், 1738-1740, 1742-1743, 1747-1748 வரை மூன்று முறை அல் மொஸ்தாடியும், 1741 ல் சில மாதம் ஸின் அல் அபிதினும் நிலையற்று ஆட்சி செய்தார்கள். அந்தளவுக்கு சகோதரர்கள் புரட்சியின் மூலம் அடித்துக் கொண்டார்கள்.
1757 ல் அபு அப்பாஸ் அப்துல்லாஹ் இறந்த பிறகு, 1745 லிருந்து 1748 வரை ஆண்ட நான்காம் அப்துல்லாஹ் என்பவரின் மகன் முஹம்மது பென் அப்துல்லாஹ் ஆட்சிக்கு வந்தார். இவரை மூன்றாம் முஹம்மது என்றும் அழைப்பார்கள். இவர் வந்த பிறகு, இராணுவம், நிர்வாகம் அனைத்தையும் உடனடியாக மாற்றினார். மத்தியிலிருந்து அனைத்துப்பகுதியிலும் ஆள்வதற்கு பதில் அங்கங்குள்ள பழங்குடி மக்களை அவர்களையே நிர்வகிக்கச் செய்தார். இவர் இதற்கு முன்பு மர்ரகெஷில் கவர்னராக இருந்தார். பலருடன் அதிகமாக அமைதி ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார். ஐரோப்பியர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, கடற்கொள்ளையர்களைத் தடுத்தார். மூன்றாம் முஹம்மது கவனிக்கப் படாமல் இருந்த எஸ்ஸஓயிரா நகரத்திற்கு புத்துயிர் அளித்தார். இந் நகரம் மேற்கு மொரோக்கோவில் அட்லாண்டிக் கடலின் கரையில் இருந்தது. மர்ரகெஷுக்கும், டென்சி ஃப்ட் அல் ஹஊஸ் நகரங்களுக்கு பெரும் பொருளாதாரத்தை ஈட்டித்தந்தது. மொரோக்கோவின் சிறந்த துறைமுகமாக வேகமாக வீசும் கடல் காற்றைத் தடுக்கும் வண்ணம் அமைதியாக இருந்தது. எஸ்ஸா ஓயிரா நகரம் சரித்திரகாலத்திற்கு முற்பட்ட புராதன நகரம். புராதன பொருட்கள் பல ஆராய்ச்சியாளர்களால் இங்கு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சிடி மொக்தூல் என்ற ஒரு இஸ்லாமிய ஞானியின் உடல் இங்கு அடக்கம் செய்யப்பட்டதால் மொகடார் என்றும் இந்நகரம் அழைக்கப்பட்டது.

ஓட்டோமான்கள் வரலாறு 2


சுல்தான் ஓரனின் சகோதரர் அலாவுத்தீன் மிகவும் திறமையாளராக இருந்து செல் ஜுக்குகளின் பல பகுதிகளை வெல்ல திட்டம் அமைத்துக் கொடுத்தார். நாட்டின் சட்டத்தை சிறந்த முறையில் தீட்டினார். ஜானிஸ்ஸரீஸ் (இந்த இராணுவத்தைப் பற்றி தனி பதிவு உள்ளது) என்னும் இராணுவ அமைப்பு உருவாவதற்கு இவர் தான் மூலக் காரணம். மேலும் உயர்ந்த ஊதியம் கொடுக்கப்பட்டு “யா யா” என்று ஒரு இராணுவப்பிரிவு உருவாக்கினார். அவர்கள் அற்புதமான திறமை படைத்த வர்கள். போர் சமயங்களில் அழைத்தால் இளவரசரின் பெயர் தாங்கிய கொடியுடன் வருவார்கள். காரியம் முடிந்தவுடன் விரைவில் மறைந்து சென்று விடுவார் கள். இவர்கள் 10 பேர், 100 பேர், 1000 பேர் அடங்கிய குழுக்களாக தனித்தனி தளபதி களுடன் இருப்பார்கள்.
 சுல்தான் ஓர்ஹனின் மூத்த மகன் சுலெய்மான் பாஷா த்ரேஸ் பகுதியை வளமாக ஆக்கினார். அனுபவம் வாய்ந்த இவர் 1357 ல் மர்மரா கடற்கரை பகுதியில் பொலா யிர் என்ற இடத்தில் குதிரையிலிருந்து தவறி விழுந்து இறந்து போனார். இவரது உடல் வட கல்லிபோலியில் நினைவு மண்டபத்துடன் அடக்கம் செய்யப்பட்டு, இன் றும் இருக்கிறது. அடுத்த மகன் சுல்தான் பெய். அடுத்து ஹதீஸ் ஹதூன் என்ற மகள் சவ்ஜி பெய் என்பவரின் மகன் தமத் சுலெய்மான் பெய்யை மணந்தார். இவ ரது வழி பேரர் தான் முதலாம் ஓஸ்மான். 1299 ல் ஓர்ஹன் பைஸாந்திய இளவரசி ஹெலெனின் (நிலோஃபர்) மகள் வலீதே சுல்தானை (நிலோஃபர் ஹதுன்) மணந் தார். இவர் கிரேக்க வழிமுறையில் வந்தவர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். கொசோவா போரில் மொலோஸ் ஒபிலிச்சால் கொல்லப்பட்ட முதலாம் முராத். அடுத்து காசிம். 1356 ல் காசிம் சிறு பிள்ளையாக இருந்த போது ஜீனோயஸ் கடற் கொள்ளையன் ஏஜியன் கடல் பகுதியில் பொகாயா என்ற இடத்தில் கடத்தி வைத் துக் கொண்டு பணயத்தொகைக் கேட்டான். தற்போதைய பைஸாந்தியப் பேரரசரா கவும், தனது மைத்துனருமான நான்காம் பலயிவோலோகோஸ் மூலம் கொள் ளையர்களைத் தொடர்பு கொண்டு 100,000 ஹைபர்பைரா என்னும் அவர்கள் மதிப் பான பணம் கொடுத்து மீட்டார். 1316 ல் அஸ்போர்ஷா என்பவரை மணந்தார். இவருக்கும் இரண்டு குழந்தைகள். எஸ்கிசெஹ்ர் பகுதியின் கவர்னராக இருந்து ஒன்று விட்ட சகோதரர் முதலாம் முராதால் தூக்கிலிடப்பட்ட இப்ராஹீம் என்பவ ரும், ஃபத்மா ஹதுன் என்ற மகளும் ஆவார்கள். 1346 ல் நாம் மேலே கண்ட தியோ டோரா என்பவரை மணந்து அவர் மூலம் ஹலிலி என்ற மகன் இருந்தார். மேலும் ஓர்ஹன் தன் மாமன் மஹ்மூத் கூண்டூஸ் அல்பின் மகள் எஃப்டண்டைஸ் ஹது னையும் மணந்தார்.
ஓர்ஹன் பல வெற்றிகளைப் பெற்றார். ஓட்டோமான் பேரரசுக்காக முதல்முதலில் நாணயம் வெளியிட்டார். நீண்ட நாள் வாழ்ந்து நீண்ட நாள் ஓட்டோமான் பேரர சை ஆண்டவர் சுல்தான் ஓர்ஹன். கடைசி காலத்தில் அதிகாரத்தை இரண்டாவது மகன் முராதிடம் கொடுத்து விட்டு, பெயருக்கு சுல்தானாக புர்ஸாவில் வாழ்ந்தார். 1360 இவர் மரணமடைந்த பின் இவர் மகன் முராத் சுல்தான் பதவிக்கு வந்தார். 1363 ல் அட்ரியனோபிள் என்ற இடத்தை வென்று எடிர்னி என்று பெயர் மாற்றி ஓட்டோமான்களின் தலைநகராக்கிக் கொண்டார். 1359 ல் பைஸாந்திய பேரரசரின் மகள் கூல்சிசிக் ஹதுனையும், 1365 ல் கிஸில் முராத் பெய் என்பவரின் மகள் பாசா மெலிக் ஹதுனையும், 1370 ல் பல்கேரியாவின் இவான் அலெக்ஸாண்டர் என்பவரின் மகள் மரியா தமரா ஹதுனையும் மணந்தார். யாகூப் செலிபி என்னும் இவர் மகன் தான் ஆட்சிக்காக ஓட்டோமான் பேரரசின் சரித்திரத்தில் முதல்முறையாக சகோதரர் முதலாம் பயேஸிதைக் கொன்றவர். சவ்ஸிபெய் என்ற இன்னொரு மகன், பைஸாந்திய பேரரசர் ஜான் நான்காம் பலாயிலோகசின் மகன் அன்ரோ னிகசுடன் சேர்ந்து கொண்டு தந்தை முராதை எதிர்த்து புரட்சி செய்தார். பிடிபட்ட இவரை முராத் கொன்று விட உத்தரவிட்டார். தப்பித்த அன்ரோனிகஸ் தன் தந்தையிடம் சரணடைய, அவர் மூலமே அன்ரோனிகஸின் கண்களைப் பறிக்கச் செய்தார். மேலும், இப்ராஹிம் பெய், யஹ்சி பெய், ஹலில் பெய் என்ற மகன்க ளும், நஃபிஸெ ஹதுன், சுல்தான் ஹதுன் என்ற மகள்களும் இருந்தார்கள். இவர் எந்த ஒரு பிரதேசம் வெற்றிகொண்டபோதும் இத்தோடு பேரரசு போதும் என்று இருக்கவில்லை. பேரரசை விரிவுபடுத்துவதில் மிக ஆர்வம் கொண்டிருந்தார். முராத் செர்பிய பழங்குடி ஒன்றை வென்றபின் அதன் ஆட்சியாளர் சரணடைந்து 50 உக்காஸ் வெள்ளிகள் கப்பம் செலுத்துவதாக ஒப்புக் கொண்டார். இந்த வெற்றியைத் தொடர்ந்து முராத் தன் மகன் பயேஸித்துக்கு சுலைமான் ஷாவின் மகளை மணமுடித்தார். அதற்கு ஈடாக குடல்யா, டவ்ஷன், சிமாவ் மற்றும் எமிட் ஆகிய பகுதிகள் திருமணப்பரிசாக கிடைத்தது. இதன் பிறகு, முராத் நேரடியாக செர்பிய மன்னன் லாஸரை கொஸோவோ போரில் எதிர்த்தார். பலமான உயிர்பலிகளுக் குப் பிறகு, செர்பியாவை வெற்றி கொண்டார். மன்னர் லாஸரைக் கைது செய்து கூடாரத்தில் அடைத்து வைத்திருந்தார். இதனால் ஆத்திரமுற்ற மிலோஸ் ஒபிலிக் என்பவர் பத்து நபர்களை அழைத்துக்கொண்டு சுல்தான் முராதின் கூடாரத்திற்குள் நுழைந்து அவரை மார்பில் குத்திக் கொன்றான். இறக்கும் முன் பதிலுக்கு முராத் செர்பிய மன்னர் லாஸரை தன் முன்னே அழைத்து வரச்செய்து கொல்லச் சொன்னார்.
முராத் இறந்த அன்றே அவர் மகன் பயேஸித் சுல்தான் ஆனார். இந்த சூழ்நிலை யை பயன் படுத்தி கொள்ள நினை த்த மெண்டெஸ்க் மற்றும் ஹமித் ஓகௌல்லரி என்ற இரண்டு பழங்குடி குழுவினர் ஓட்டோமான் பேரரசின் மீது போர் தொடுத்த னர். ஆனால், பயெஸிட் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதை வெற்றி கொண் டார். தன் தந்தையின் கொல்லப்பட்ட உடலை எடுத்து வந்து புஸ்ரா மசூதியில் அடக்கம் செய்தார். பயேஸிட் ஆரம்பத்தில் கூதஹ்யா பகுதியில் கவர்னராக இருந்தார். இவர் இளவரசர் சுலைமான் சாஹ் செலிபின் மகள் தெவ்லத் ஹதுன் னையும், செர்பிய இளவரசர் லாஸரின் மகள் தெஸ்பினா ஹதுனையும், இளவரசர் ஃபஹ்ரெத்தீன் இசா பெய்யின் மகள் ஹஃப்சா ஹதுனையும் மணந்திருந்தார். இவ
ருக்கு எர்துக்ருல் செலிபி, சுலெய்மான் செலிபி, இஸா செலிபி, மெஹ்மெத் செலிபி, முஸ்தஃபா செலிபி, மூஸா செலிபி, காசிம் செலிபி, யூசுஃப் செலிபி என்ற மகன்களும், எர்ஹொண்டு ஹதுன், ஹுண்டி ஃபத்மா ஹதுன், சுல்தான் ஃபத்மா ஹதுன், ஓருஸ் ஹதுன், பாசா மெலிக் ஹதுன் என்ற மகள்களும் இருந்தார்கள். பயேஸிட் காலத்தில் தான் அனடோலியாவில் கோட்டை கட்டப்பட்டது. மந்திரி அலி பாஷா தலைமையில் கோனியாஹ், புரானுத்தீன் மற்றும் மலாடியா போன் ற பகுதிகள் வெல்லப்பட்டன. ஓட்டோமான்களின் வெற்றிகளுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இவர்களின் இராணுவம் ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கிலும் மிகச்சிறந்த இராணுவமாக இருந்தது. தேனீக்களின் கூட்டம்போல் நிறைய வீரர்கள் இருந்தார்கள். போரில் பிடிக்கப்பட்டவர்களையும், அடிமைகளை விலை கொடுத்தும், அடிமைக் கப்பல்களை சிறைப்பிடித்தும் பிடிக்கப்பட்டவர்களை வைத்து ‘ஜானிசர்ஸ்’ (JANISSARS) என்ற ஒரு இராணுவ பிரிவையே வைத்திருந்தார்கள். இவர்கள் மிகச்சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்ட வர்கள், எந்த நிலையிலும் உயிருக்கு பயப்படாதவர்கள். மேலும் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டார்கள். பெர்ஷியாவிலிருந்து கிழக்கு ஐரோப்பா வரையில் ஆதிக்கம் செலுத்தினார்கள். ஓட்டோமான் அரசின் நிர்வாகம் மிகவும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டிருந்தது. சுல்தானுக்கு அடுத்த நிலையிலிருந்தவர்கள் குலாம் என்று அழைக்கப்பட்டனர். ஆரம்பத்தில் காஸி போராளி குழுவிலிருந்து இஸ்லாமுக்காக போரிட்டதால், ஆளும் சுல்தான்கள் மதத்தலைவர்களாகவும் இருந்தார்கள். பிற்காலத்தில் புனித நகரமான மக்கா, மதீனாவையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். 1345 ல் ஐரோப்பாவில் பைஸாந்தியப் பேரரசுக்கு எதிராக உள்நாட்டுப்போரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அப்படிப் போனவர்கள் ஐரோப்பாவில் தங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார்கள். அது அவர்களை சரித்திரத்தில் 400 வருடங்களுக்கு மேலாக ஆண்ட பேரரசாக ஆக்கியது.

ஓட்டோமான்கள் வரலாறு 3


பயேஸிட் கிழக்குப் பகுதியின் எல்லைகளை பலப்படுத்தினார். மன்னன் சிஜிமுண்ட் ஆட்சியிலிருந்த ஹங்கேரியுடன் போர் தொடுத்தார். ஹங்கேரிய இராணுவம் பலம் வாய்ந்ததாக, பிரென்சு மன்னரால் பகுதியாக பிரிக்கப்பட்டு கையாளப்பட் டது. 1396 ல் நிகோபோலிஸ் என்ற இடத்தில் பலமாகத் தோற்கடிக்கப்பட்டது. உண ர்ச்சிவசப்பட்ட பிரென்சு மன்னன் உடனே போரைத்துவக்கி, ’எங்கள் மண்ணில் துருக்கிகளின் முகத்தில் எச்சில் துப்ப முடியவில்லை என்றால், அந்த சொர்க்கம் இடிந்து விழுந்துவிடும்’ என்று கொக்கரித்தான். அதற்கு பயேஸிட் அமைதியாக, ‘நிறுத்து ஆடம்பரப் பேச்சுக்காரனே, விரைவில் தூய பீட்டரின் பலிபீடத்தில் எனது குதிரைக்கு நான் ஓட்ஸ் அருந்தக் கொடுப்பேன்’ என்றார். போரில் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஹங்கேரிய வீரர்கள் ஓட்டோமான்களால் கைது செய்யப்பட்டார்கள்.
ஆரம்பத்தில் ஓட்டோமான் அரசு பலம்பெற சாதாரண அரசாக அமைந்து ‘மில்லத்’ என்னும் சட்டம் மூலம் யார் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அந்த மத கொள்கைகளையே கடைபிடித்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தது. உஸ்மான் இறந்த பிறகு ஓட்டோமான் ஆட்சி கிழக்கு மெடிட்டரேனியன் மற்றும் பால்கன் வரை பரவியது. ஏற்கனவே புஸ்ரா நகரை இழந்த தால் வடமேற்கு அனடோலியாவின் முழு கட்டுப்பாட்டையும் பைஸாந்திய சாம்ராஜ்ஜியம் இழந்தது. 1387 ல் வெனீஷியர்களிடமிருந்து முக்கியமான நகரமான தெஸ்சலோனிகியைக் கைப்பற்றியது. 1389 ல் கொஸோவோ நகரைக் கைப்பற்றி செர்பிய அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஐரோப்பிய கண்டத்தில் காலூன்றியது.
1396 ல் பெரிய படையுடன் சென்று நிகோபோலிஸ் என்ற இடத்தில் தோற்றுப் போனதில் ஓட்டோமானின் வளர்ச்சி தடைபட்டது. அந்த போரில் ஹங்கேரி, பல்கேரியா, வல்லாச்சியா, ஃப்ரான்ஸ், பர்கண்டி மற்றும் ஜெர்மனி படைகள் கூட்டு சேர்ந்து வெனீஷிய கடற்படையின் ஒத்துழைப்புடன் ஒருபுறமும், ஓட்டோமான்கள் படைகள் ஒருபுறமும் நின்றன. இந்த போரில் நிறைய அரசியல் சூழ்நிலைகள் இருந்தன. வெனிஷிய பகுதிகள் இணைந்த மோரியா மற்றும் டால்மாடியா சேர்ந்த பால்கன் ஓட்டோமான்கள் வசம் இருப்பது அட்ரியாடிக், ஐயோனியன் மற்றும் ஏஜியன் கடல் பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தைக் கட்டும் படுத்தும் என நினைத் தது. இன்னொருபுறம் ஜினோவா தனுப் ஆறும், துருக்கிய மலைப்பகுதிகளும் ஓட்டோமான் வசம் இருப்பது தனது ஐரோப்பிய, கருங்கடல் வாணிபத்தை சிதைக்கும் என எண்ணியது. மேலும், போப் போனிஃபேஸ் கிறிஸ்தவர்களை துருக்கிகளை எதுர்த்து சிலுவைப்போர் புரிய அறைகூவல் விடுத்திருந்தார். இதுபோல் இந்த போரில் கூட்டாகக் கலந்து கொண்டிருந்த நாடுகளுக்கு ஆளுக்கொரு கார ணம் இருந்தது.
இந்த நிகோபோலிஸ் போரில் இருபுறமும் கலந்து கொண்ட வீரர்களின் எண்ணிக்கை பற்றி அந்தந்த நாடுகளுக்கேற்றவாறு பல கருத்துகள் உண்டு. இறுதியாக, 1999 ன் படி ஓட்டோமான் வீரர்கள் 15,000 பேரும், எதிரணியினர் 16,000 வீரர்களும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், இது 200,000 மேலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஓட்டோமான் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான நிலப்பரப்புகள் பைஸாந்திய பேரரசிடமிருந்து கைப்பற்றியது. 1400 ல் ஓட்டோமான்களுக்கு பரிசு போல் கான்ஸ்டாண்டிநோபிள் வெற்றி கொள்ளப்பட்டது. ஆனால், மறுபுறம் பூதாகரமாக மத்தியஆசியாவிலிருந்து வந்த பழங்குடியின தைமூர் மன்னன் இந்தியா விலிருந்து ரஷ்யா வரை வெற்றிகளும், அழிப்புகளும் நடத்தி முன்னேறி வந்து கொண்டிருந்தான். 1402 ல் அவன் ஓட்டோமான் இராணுவத்தை அங்காரா என்ற இடத்தில் நாசப்படுத்தினான். பால்கனிலும், அனடோலியாவிலும் அவனின் ஆக்கிரமிப்பும், கொள்ளைகளும் ஏறக்குறைய பதினோரு ஆண்டுகள் இருந்தன. சுல்தான் பயேஸித்தை கைது செய்து கூண்டில் அடைத்து அவர் மரணமாகும் வரை வைத்திருந்து தனது வெற்றியின் அடையாளமாகக் காட்டிக்கொண்டான். தைமூரியர்களின் எண்ணம் நாட்டைப் பிடிக்க வேண்டும் என்பதல்ல அவர்கள் வந்தார்கள், கொன்றார்கள், கொள்ளையடித்தார்கள் சென்றார்கள். சுல்தான் இறந்துபோன பின்பு பேரரசு அழிந்து போனது.
பின்பு அடுத்து வந்த சுல்தான் முதலாம் மெஹ்மெத் என்பவர் தன் சகோதரர்க ளுடன் உள்நாட்டு குழப்பங்களை சமாளித்து பதவிக்கு வந்தார். 1402 ல் மங்கோலிய மன்னர் தைமூருடன் நடந்த அங்காரா போரில் தோற்க பயேஸிட்டையும், சகோதரர் முஸ்தஃபாவையும் சமர்கண்டுக்குப் பிடித்துச் சென்றார்கள். மற்ற சகோதரர்களை பயேஸிட் பாஷா என்பவர் காப்பாற்றி, முதலாம் மெஹ்மெத்தை  சொந்த ஊரான அம்ஸ்யாவில் வைத்துக் காப்பாற்றினார். இதனால் மெஹ்மூத் தான் ஆட்சிக்கு வந்தவுடன் பயேஸிட் பாஷாவை தலைமை வைஸிராயராக பதவி அளித்தார். நாட்டைப் பிரித்துக்கொடு என்று உள்நாட்டு சண்டையிட்ட சகோதரர்கள் சுலைமான், இஸா, மூஸா ஆகியோரை வெற்றி கொண்டு கொன்று போட்டார். முஸ்தபாவை பைசாந்திய மன்னன் இரண்டாம் மானுவேல் மூலம் சிறைபிடித்து லெம்னோஸ் தீவுக்கு அனுப்பினார். ஷெய்க் பத்ருத்தீன் என்ற சூஃபி ஒருவர் மிகவும் பிரபலமாகி, நாளடைவில் கலவரங்களை உண்டாக்கினார். அவரை செர்ராஸ் என்ற இடத்தில் கைது செய்து தூக்கிலிட்டார். நிலையான ஒட்டோமான் ஆட்சியைக் கொண்டுவர பெரும்பாடுபட்டார். ஓட்டோமான்களின் ஆட்சிக்கு இரண்டாவது முறையாக வித்திட்டார். புஸ்ராவில் பச்சை மசூதி ஒன் றைக் கட்டினார். பாட்டனார் முதலாம் முராதால் துவங்கப்பட்டிருந்த இன்னொரு மசூதியையும் கட்டி முடித்தார். பின்னாளில் இறந்த பிறகு, அதே பச்சை மசூதி யின் வளாகத்தில் நினவிடம் எழுப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார். அவர் மகன் இரண்டாம் முராத் மூலம் மெதுவாக தலைதூக்கி ஆசிய மைனர் மற்றும் ஐரோப் பாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

ஓட்டோமான்கள் வரலாறு 4


பால்கன் பகுதியின் சில நகரங்களான தெஸ்சலோனிகி, மாஸிடோனியா மற்றும் கொஸோவா போன்றவற்றை ஓட்டோமான் பேரரசு 1402 ல் இழந்தது. 1430 லிருந்து 1450 க்குள் இரண்டாம் முராதால் மீண்டும் வெற்றி கொள்ளப்பட்டது. 1444 ல் இரண்டாம் முராத் ஆட்சிக்கு வந்து “அஸெப்” என்னும் புதிய இராணுவ அமைப்பை ஏற்படுத்தி, ஹங்கேரியன், பாலிஷ்கள் மற்றும் போலந்தின் மூன்றாம் வ்லாடிஸ்லாவ் (இவன் ஹங்கேரிக்கும் மன்னனாய் இருந்தான்) வின் வல்லாச்சியர்கள் ஆகியோ ரை வென்றார். வர்னாபோர் என்ற போரில் ஜானோஸ் ஹுன்யாதி என்பவனை யும் வென்றார். இந்த ஜானோஸ் ஹுன்யாதி அடுத்த நான்கு ஆண்டுகள் கழித்து ஹங்கேரியர்கள் மற்றும் வல்லாச்சியர்களுடன் இணைந்து வந்து ஓட்டோமான்களை எதிர்த்தான். இரண்டாம் கொஸோவோ போரில் இரண்டாம் முராதின் மகன் இரண்டாம் மெஹ்மூத் 1448 ல் தோற்கடிக்கப்பட்டான். இருபத்தோரு வயதான வீரமிக்க இரண்டாம் மெஹ்மெத் 1453 மே 29 ல் கான்ஸ்டாண்டிநோபிளை வென்றார். வெனிஷிய வணிகர்கள் தரை மார்க்கமாக கான்ஸ்டாண்டிநோபிள் செல்லும் வழிகள் ஓட்டோமான்கள் வசம் இருந்ததால், கடல் வழியாக வாணிபம் செய்து வந்தார்கள். இரண்டாம் மெஹ்மெத் கடற்படைகளை அழைத்து கான்ஸ் டாண்டிநோபிள் துறைமுகம் செல்லும் கப்பல்களைத் தடுத்து 50 நாட்கள் தொடர் ந்து போரிட்டார். கான்ஸ்டாண்டிநோபிளை காக்க பைஸாந்தியர்கள் கடுமையாக போரிட்டு தோற்றது சரித்திரப்புகழ் வாய்ந்தது. இந்தப் போரில்தான் முதல் முதலாக வெடிமருந்து பொருட்கள் கையாளப்பட்டன. ஓட்டோமான்களின் ஆட்சியை இரண்டு காலகட்டமாகப் பிரிக்கலாம். ஒன்று 1566 க்கு முன்பு நிலப்பரப்பை விரிவாக்கியது, பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம். இன்னொன்று இராணுவம், அரசியலமைப்பு ஆகும்.
இரண்டாம் மெஹ்மூதின் கான்ஸ்டாண்டிநோபிளின் வெற்றியால் பைஸாந்தியர் களின் சாம்ராஜ்ஜியம் முடிவுற்றது. அதுவரை சுன்னி பிரிவு முஸ்லீம்களின் தலைமை இடமாக இருந்த பாக்தாத் மாற்றப்பட்டு கான்ஸ்டாண்டிநோபிள் (இஸ்தான் புல்) தலைமை இடமானது. மேலும் அந்த வெற்றி தென் கிழக்கு ஐரோப்பா மற்றும் கிழக்கு மெடிட்டரேனியன் பகுதிகளில் ஓட்டோமான்களின் நிரந்தர பேரரசுக்கு வித்திட்டது. கான்ஸ்டாண்டிநோபிள் வெற்றிக்குப் பிறகு, இரண்டாம் மெஹ்மூத் கிறிஸ்தவ போதகர் ஜென்னடியோசை சந்தித்து ஆர்தடக்ஸ் தேவாலயம் கட்டிக்கொள்ளவும் மத விஷயங்களில் சுயமாக செயல்படவும் ஒப்புதல் அளிப்பதாகவும், தங்கள் ஓட்டோமான் ஆட்சியை ஏற்றுக் கொள்ளுமாறும் கூறினார். பைஸாந்தியர்களாலும், மேற்கு ஐரோப்பியர்களாலும் (கிறிஸ்தவர்கள்) தரமற்று நடத்தப்பட்டதாலும், பெரும்பான்மையோர் ஆர்தடக்ஸ் கிறிஸ்தவர்களாக இருந்த தாலும், லூகஸ் நோடரஸ் என்பவர் ‘ரோம கிறிஸ்தவ தலைவர்களின் தொப்பிக்கு பதில் சுல்தான்களின் தலைப்பாகை எவ்வளவோ தேவலாம்’ என்று வெளிப் படையாக அறிவித்துவிட்டு ஆதரவு தெரிவித்தார்.
இரண்டாம் மெஹ்மூத் கான்ஸ்டாண்டிநோபிளை 1453 ல் ஓட்டோமான் பேரரசின் தலைநகரமாக்கினார். சுல்தான் ‘கெய்செர் இ ரூம்’ என்று (அதாவது ரோமின் சீஸர் போல்) புகழப்பட்டார். இந்த புகழ்ச்சியின் காரணமாக இரண்டாம் மெஹ்மூத் எப்படியாவது ரோமப்பேரரசின் மேற்குத் தலைநகர் ரோம் நகரத்தை வெல்ல முடிவெடுத்தார். அதற்கான ஆரம்ப பணியாக அட்ரியாடிக் கடல்பகுதியை பலப்படுத்தி ஒட்ரண்டோ, அபூலியா பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார். ஒட்ரண் டோ பகுதியில் ஏறக்குறைய ஓராண்டுக்கும் மேலாக காத்திருந்தார்கள். இடையி ல் இரண்டாம் மெஹ்மூத் 1481 மே 3 ல் மரணமடைந்தார். புதிய திட்டத்துடன் பிறகு, இத்தாலிய தீபகற்பத்தை முற்றுகை இடலாம் என்று படைகள் கிழக்கு அட்ரியாடிக் கடலுக்கு திரும்ப அழைக்கப்பட்டன.
இரண்டாம் மெஹ்மெதுக்குப் பிறகு, சுல்தான் முதலாம் செலிம் என்பவர் பதவிக்கு வந்து ஆட்சியர்களில் சக்திமிகுந்தவரானார். எகிப்தில் ஓட்டோமான்கள் ஆட்சியை நிறுவினார். ஷியா பிரிவைச் சேர்ந்த ஈரானிய பெர்ஷிய சஃபாவித்கள் அருகாமை நகரங்களிலும், ஓட்டோமான் மாகாணங்களிலும் பலம் பெற்று வந்தார்கள். அவர் கள் புதிய ஆட்சி வேண்டுமென்று ஊர்வலங்கள் நடத்தி வந்தார்கள். சுல்தான் முத லாம் செலிம்  ஷியா பிரிவு ஷா இஸ்மாயிலை 1514 ல் சால்திரன்போரில் வென்று அவர்களை அடக்கினார். கிழக்கு மற்றும் தெற்கு பிரதேசங்களில் பேரரசை விரிவு படுத்தினார். அதாவது, பாலஸ்தீனம், எகிப்து மற்றும் அரேபியா பகுதிகளை வென்றார். 1516 ல் ஓட்டோமான்கள் அலிப் போ மற்றும் டமாஸ்கஸ் நகரங்களைக் கைப்பற்றி மம்லுக்குகளை இராணுவம், அரசியல் என்று எதுவுமில்லாமல் செய்தார்கள். 1520 ல் சுல்தான் முதலாம் செலிம் மரணமடையும் போது, பேரரசு செங் கடலிலிருந்து க்ரிமியா வரையும், குர்திஸ்தானிலிருந்து போஸ்னியா வரையிலும் பரவி சர்வதேச அரசியலில் குறிப்பிடப்படும் உச்சத்தை அடைந்தது. சுல்தான் முதலாம் செலிமை சரித்திரத்தில் ‘பயங்கரமானவர்’ (THE GRIM) என்று குறிப்பிடுகிறார் கள்.
முதலாம் செலிமுக்கு பிறகு, வந்த முதலாம் சுலைமான் என்பவர் பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் சக்தி வாய்ந்த ஓட்டோமான் பேரரசராக திகழ்ந்தார். இவரை சட்டம் கொடுத்தவர் என்று புகழ்ந்தனர். இஸ்லாமிய ஷரியா சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தார். பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுகளில் ஓட்டோமான் பேரரசு நீண்ட போர்களையும், பேரரசை ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்காவில் விரிவுபடுத்துவதிலும் ஆர்வம் காட்டியது. சுலைமான் 1521 ல் பெல்கிரேடை வெற்றி கொண்டார். ஹங்கேரியின் தெற்கு மற்றும் மத்திய பகுதி களையும் வென்றார். 1526 ல் மொஹாக் போரில் வெற்றி கண்டு மேற்குப்பகுதி அல்லாமல் தற்போதைய ஹங்கேரி முழுவதையும் ஓட்டோமான்கள் பேரரசின் கீழ் கொண்டு வந்தார். இந்த போரில் ஹங்கேரியர்கள் இறந்துபோன மன்னரையும், தளபதிகளையும் போர்களத்திலேயே விட்டு விட்டு ஓடினார்கள். 1526 ல் செயிண்ட் ஜான் மன்னனிடமிருந்து ரோட்ஸ் தீவுகளை வென்றார். 1529 ல் வியன் னாபோரில் ஈடுபட்டு கடுமையான குளிர்காலமானதால் சுல்தான் போரை நிறுத் திக் கொண்டார். மீண்டும் 1532 ல் வியன்னாவின் மீது படையெடுத்து கூன்ஸ் போரில் ஈடுபட, ஆகஸ்டு மாத கடுமையான மழையால் கூன்ஸ் கோட்டையிலி ருந்து 97 கி.மீ தெற்கில் பின்னோக்கி வந்து விட்டார். 1535 ல் கிழக்கில் பாக்தாத், மெஸோபொடாமியாவைக் கைப்பற்றி பெர்ஷிய கடல்பகுதியை கட்டுப்படுத்தின. 1547 ல் ஹாப் ஸ்பர்கின் ஆட்சியாளர் ஃபெர்னாண்ட் ஹங்கேரியில் ஓட்டோமான் ஆட்சியை ஒப்புக்கொண்டார். சுலைமானின் ஆட்சியில் டிரான்சில் வேனியா, வல்லாச்சியா மற்றும் மோல்டாவியா ஆகியவை ஓட்டோமான்களுக்கு கப்பம் செலுத்த ஒத்துக்கொண்டன. ஓட்டோமான் கடல்படை கருங்கடல், ஏஜியன் கடல் மற்றும் மெடிட்டரேனியன் கடல்பகுதிகளின் வழியாக இத்தாலிய நகரங்களில் வாணிபம் செய்து வந்தது. அதேநேரத்தில் போர்ச்சுகீசியர்கள் செங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் வாணிபம் செய்து வந்தனர். நிலப்பகுதி வழியாக நகரங்களிலும் ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் இடையே வாணிபம் செய்து நல்ல பொருளாதார வளர்ச்சியைக் கண்டது. சுலைமானின் ஆட்சியின்போது பேரரசின் மொத்த மக்கள் தொகை 15,000,000 ஆக இருந்தது.
செலிம் மற்றும் சுலைமான் ஆட்சியில் கடற்படை வலுவாக இருந்து மொத்த மெடிட்டரேனியன் கடல்பகுதியும் ஓட்டோமான்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. சுலைமானின் ஆட்சியில் ‘பார்பரொஸ்ஸா ஹைரெத்தீன் (கைரத்தீன்) பாஷா’ என்பவர் ஓட்டோமான் கடற்படைத் தளபதியாக இருந்தார். பார்பரொஸ்ஸா என்றால் இத்தாலியில் சிகப்பு தாடி என்று பொருள். இவர் சகோதரர் பாபா ஓருக் சிகப்பு தாடி வைத்திருந்தார். இந்த பாபா ஓருக் கிறிஸ்தவர்களிடையே பிரபல மாக இவரை பார்பரொஸ்ஸா என்று அழைக்க ஆரம்பித்தார்கள். தனது தந்தை க்கு மண்பாண்ட வியாபாரத்தில் உறுதுணையாக இருந்தார். தந்தையார் மண்பாண்டங்களை விற்பதற்கு ஒரு படகை வாங்கினார். அதனால் கடலில் நல்ல தேர்ச்சிபெற்றார். இத்தாலி, ஸ்பானிஷ், ஃப்ரென்ச், க்ரீக் மற்றும் அரபு மொழிகளை நன்றாக அறிந்திருந்தார். ப்ரிவிஸா போர் மற்றும் லெபாண்டோ போர் போன்றவற்றை வென்று பல கிறிஸ்தவ கடற்படைக்கு சிம்மசொப்பனமாக இருந்து, அவர்களைப் பலமுறை வெற்றிப் பெற்றார். ஸ்பெயினிலிருந்து மொரிஸ்கோ முஸ்லீம்கள் 70,000 பேரை ஏழுமுறை கடல்பயணமாக காப்பாற்றி இருக்கிறார். இவர் தலைமையில் ஓட்டோமான் கடற்படைகளின் வெற்றிகளைக் குறிப் பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், 1516 மற்றும் 1529 அல்ஜீரியா, 1534 மற்றும் 1574 ல் ஸ்பெயினிடமிருந்து துனீஷியா, 1522 மற்றும் 1551 நைட்ஸ் ஆஃப் செயிண்ட் ஜான் என்பவரிடமிருந்து ரோட்ஸ் தீவு மற்றும் திரிபோலி, 1538 ல் பிர்வேஸா போர், 1552 ல் பொன்ஸா போர், 1560 ல் ஜெர்பா போர், ரோமப்பேரரசிடமிருந்து 1543 ல் நைஸ், ஜினோவாவிடமிருந்து 1553 ல் கோர்சிகா, 1558 ல் ஸ்பெயினிடமிருந்து பலியாரிக் தீவுகள், இந்தியப் பெருங்கடலில் போர்ச்சுகீசியர்களிடமிருந்து 1548 ல் ஏடன், 1552 ல் மஸ்கட், 1565-67 ல் அசெ ஆகியவை ஆகும். ஓட்டோமான்கள் கடற்படை என்றால் அந்தகாலகட்டத்தில் அலற வைத்தார்கள்.

ஓட்டோமான்கள் வரலாறு 5


சுலைமானின் மிகப்பெரிய தோல்வி என்றால், 1565 ல் 50,000 வீரர்களுடன் கோடை காலத்தில் சென்று நைட்ஸ் ஆஃப் செயிண்ட் ஜான் என்பவருடன் மெடிட்டரேனி யன் பகுதியில் மால்டா போரில் ஈடுபட்டார். வெறும் 6000 மால்டா வீரர்கள் கடுமையாக போரிட்டுத் தடுத்து அந்த வருட செப்டம்பர் மாதம் வரை போரை நீட்டித்தனர். கோஸோ தீவு, செயிண்ட் எல்மோ கோட்டையைக் கைப்பற்ற வாய்ப்பு கிட் டியும் இறுதியில் முடியாமல் தோல்வி அடைந்து திரும்பினார்கள். 1556 ல் சுலைமான் இறந்து போனார். இவரின் பெருமை என்னவென்றால், சிறப்பான இஸ்லாமிய நகரங்கள் மக்கா, மதினா, ஜெருசலம், டமாஸ்கஸ், கெய்ரோ, துனிஸ் மற்றும் பாக்தாத் ஆகிய நகரங்கள் இவர் ஆட்சியின் கீழ் இருந்தது. மிகச்சிறந்த இஸ்லா மிய ஆட்சியாளராக இருந்தார் என்று இவரைப் புகழ்கிறார்கள். குறிப்பாக சட்டத் துறை முழுமையாக ஷரியத் அடிப்படையில் பாரபட்சமின்றி நேர்மையாக இருந் தது. இவரது ஆட்சியின் போதுதான் ஐரோப்பியர்கள் முதல்முதலாக இஸ்லாமிய ஆட்சிக்கு பயந்தது. கலை கலாச்சாரங்களைப் பேணிப்பாதுகாத்தார்.
சுலைமான் அவர்கள் தன்னைத்தானே பணிவோடு, இறைவனின் அடிமை, சக்தி வாய்ந்த இறைவனின் சக்தியாளன், பூமியில் இறைவனின் பணியாள், குர்ஆனின் வழிநடப்பவனும் அதை உலகம் முழுவதும் எத்திவைப்பவனும், மொத்த பூமியின் ஆட்சியாளன், சீஸர், அலெக்ஸாண்டரின் பூமியின் வெற்றியாளன், அனைத்து இஸ்லாமிய நாடுகளில் என் பெயர் கூறப்படுகிறது, ஹங்கேரியர்களின் கிரீடத்தை வெற்றி கொண்டு எனது கடைசி அடிமைக்குப் பரிசளித்தேன் என்று கூறிக்கொள்வார். இவரைப் பார்த்து அந்த காலகட்டத்தில் பொறாமைபடாத மன்னர்களே உலகில் அப்போது இல்லை. ஆம் உண்மை அதுதான் இறைவன் அப்போது சுல்தான் சுலைமானை ஆள்வதற்கென தேர்ந்தெடுத்திருந்தான். இன்றும் கூட பல இஸ்லாமிய நாடுகளில் இவர் பெயரில் தெருக்கள், பள்ளிகள், மசூதிகள், மருத்துவமனைகள் உள்ளன. ரோமப் பேரரசை தன் காலத்திலேயே மீண்டும் வெற்றி கொள்ள வேண்டும் என்று மிக ஆர்வமாய் இருந்தார். அதில் வியன்னா, க்ரீஸ், ஹங்கேரி என்று பாதி வெற்றிதான் அடைந்தார். ஐரோப்பிய கத்தோலிக்க கிறிஸ்தவர்களி லிருந்து ப்ராட்டெஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் பிரிந்தபோது, சுல்தான் சுலைமான் அவர்கள் ப்ராட்டெஸ்டண்ட்களின் ஆதரவைப் பெறவேண்டி நிறைய நிதியுதவிகள் செய்தார். இன்றும் கத்தோலிக்கர்கள் சொல்வார்கள் சுலைமானின் உதவி இல்லாவிட்டால்,  ப்ராட்டெஸ்டண்டை நாங்கள் வளரவிட்டிருக்க மாட்டோம் என்று. போர்ச்சுகல் கிழக்கு ஆப்பிரிக்காவில் நிறைய முஸ்லீம் நாடுகள் மீது படையெ டுத்த போது, துணிந்து அந்நாடுகளுக்கு ஆதரவாக நின்றார். உண்மையாகவே இணைவைப்பாளர்களுக்கு எதிராக திரண்டு நின்று நேர்மையான இஸ்லாமிய மன்னராக வாழ்ந்தார். சுலைமான் ஐரோப்பியர்களுக்கு எதிராக போரிடும் போது, சுலைமானால் கைப்பற்றப்பட்ட மற்றும் இணைக்கப்பட்ட இஸ்லாமிய நாடுகள் போதிய ஆதரவைத்தரவில்லை. ஏனென்றால், அவர் தீவிர இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்திய காரணத்தால்.
சுல்தான் சுலைமான் அவர்கள் இஸ்தான்புல்லை இஸ்லாமிய தலைமையகமாக மாற்றத் தீர்மானித்தவுடன், அங்கு கட்டிடங்கள், பாலங்கள், மசூதிகள், அரண்மனைகள் மற்றும் உலகின் மாபெரும் வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவந்தார். இவரின் ஒப்பற்ற பணியாள் ‘சினான்’ என்பவர் மிக அற்புதமாக வடிவமைத்த மசூதியைக் கண்டு உலக வரலாற்றில் ஒரு மனிதனின் அதிகபட்ச கலைத்திறமை இதுதான் என்று உலகம் பாராட்டிக் கொண்டிருக்கிறது. இவரின் பணி உலகின் சிறந்த பொறியாளர்களைத் திணறடித்தது. 1550 ல்சுலைமான் அவர்கள் இஸ்தான் புல்லில் ஒரு மசூதியைக் கட்ட உத்தரவிட்டார். அது 1558 ல் முடிவுற்றது. மிக அற் புதமான கட்டிடக் கலையைக் கொண்ட அந்த மசூதி 1660 ல் தீயால் பாதிக்கப்பட நான்காம் மெஹ்மெத் அதை சீர்படுத்தினார். மீண்டும் 1766 ல் ஏற்பட்ட பூகம்பத் தால் சேதமடைந்த பள்ளி மீண்டும் சரி செய்யப்பட்டது. மிக பிரமாண்டமான அந்த மசூதியின் வளாகத்தில் முதல் உலகப்போரின் போது ஆயுதங்கள் வைக்கப் பயன்படுத்தினார்கள். அப்போது தவறுதலாக வெடி விபத்து ஏற்பட்டு, சேதமடைந்தது. மீண்டும் பழுது பார்க்கப்பட்டது. நடு கோபுரம் 53 மீட்டர் உயரத்திலும், 27.5 மீட்டர் அகல விட்டத்திலும் இருக்கும். நான்கு மினாராக்கள் உடையது. தொழுகை நடத் தும் இடம் 59 மீட்டர் நீளத்திலும், 58 மீட்டர் அகலத்திலும் அமைந்திருக்கும். அது போல் 10 தொழுகை இடங்கள் (சுலைமான் 10 வது சுல்தான் என்பதைக் குறிக்கும் வகையில்) கட்டப்பட்டது. இந்த மசூதியைப்பற்றிச் சொல்லிக் கொண்டே போக லாம். வலையில் சென்று மேல் விபரம் காணுங்கள். மேலும் இப்பள்ளியைக் காண வேண்டுமானால் ‘தூக்குடு’ என்ற ஆந்திர திரைப்படத்தில் (மகேஷ்பாபு என்ற நடிகர் நடித்தது) குருவாரம் என்று தொடங்கும் பாடலின் பின்புறத்தில் காட்டுவார்கள். அடுத்து ‘டேக்கன்2’ (TAKEN 2) என்ற ஆங்கிலப் படத்தில் அதிகமுறை இந்த மசூதியை பல நிலைகளில் காட்டுவார்கள். இதன் படப்பிடிப்பின் போது அதில் ஒலிக்கப்பட்ட பாங்கின் ஓசை கேட்டு பிரமித்துப் போன அப்படத்தின் கதாநாயகன் லியாம் நீசன் இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொண்டார். (தற்போது அவர் இஸ்லாமியராக மதம் மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.) மேற் சொன்னவை யூ டியூபில் கிடைக்கிறது காணுங்கள் அந்த மசூதியின் பிரமாண்டத்தைக் கண்டு அப்படியே பிரமித்துப் போய் விடுவீர்கள். அப்படங்களை நான் வேறு எதற்க்கும் பரிந்துரைக்கவில்லை.  சுலைமான் அவர்கள் கவிதையில் சிறந்து விளங்கினார். இஸ்தான்புல்லில் ஓவியங்கள், இசை, எழுத்து மற்றும் தத்துவம் போன்றவற்றை சிறந்தமுறையில் உருவாக்கி இஸ்லாமிய உலகத்திற்கு கிடைக்கச் செய்தார்.

ஓட்டோமான்கள் வரலாறு 6


1543 ல் நைஸ் மற்றும் 1553 ல் கோர்ஸிகா போர்கள் பிரான்சின் மன்னர் முதலாம் ஃப்ரான்சிஸ் மற்றும் சுலைமான் கூட்டுடன், ஓட்டோமான் தளபதிகள் பார்பரோஸ் ஸா ஹைரெத்தின் பாஷா மற்றும் துர்குத் ரெய்ஸ் தலைமையில் நடந்தது. 1543 ல் ஓட்டோமான்கள் எஸ்டெர்கோம் போரில் ஈடுபட்டபோது ஃப்ரான்ஸ் பீரங்கிப் படையில் ஓட்டோமான்களுக்கு உதவியது. தென், மத்திய ஐரோப்பாவின் பகுதியில் ஓட்டோமான் பேரரசும், ஃப்ரான்சும் இணைந்தே போரிட்டன. இது அவர்களிடையே இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் பெரிதும் பயன்பட்டது. ஓட்டோமான் பேரரசு வரிசெலுத்தாமல் ஃப்ரான்சின் பொருட்களை பேரரசின் பகுதிகளில் வாணிபம் செய்ய அனுமதித்தது. ஓட்டோமான் பேரரசு ஃப்ரான்ஸ் மற்றும் டச்சுடன் இராணுவரீதியாக இணைந்து ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்ட்ரியா ஹாப்ஸ்பர்குக்கு எதிராக போரிட்டது.
சரித்திர ஆய்வாளர்களின் கருத்துப்படி இரண்டாம்செலிம் ஆட்சியில் ஆர்வமில்லாதவராகவும், மது மற்றும் பெண் உறவுகளில் ஆர்வமாய் இருந்ததாகவும் கூறுகிறார்கள். இஸ்லாமிய சரித்திரமும் இதையே தான் வெளிப்படுத்துகிறது. அவர் மதுப் பழக்கம் உள்ளவராகவும், போர்களின் போதும், அரசு நிர்வாகத்திலும் முக்கிய முடிவுகள் எடுக்கும் ஆற்றல் இல்லாதவராகவும் இருந்தார். இதற்கு அடிப்படைக் காரணம் சுல்தான் முதலாம் சுலைமானுக்கு முஸ்தபா, பயேஸித் மற்றும் செலிம் என்று மூன்று மகன்கள் இருந்தார்கள். சுல்தான் பதவிக்கு வருபவர்கள் ஆரம்பத்தி லிருந்து இராணுவம் மற்றும் அரசியல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பயிற்சியை முஸ்தபாவும், பயேஸித்தும் முறையே பெற்றிருந்தார்கள். ஆனால், அவர்கள் போரில் இறந்து போனார்கள். செலிம் டாப்காபி என்ற சுல்தானின் அரண்மனையில் ஆடம்பரத்திலும், பொழுதுபோக்கிலேயும் காலத்தைக் கழித்தார். இராணுவம், அரசியல் எதுவும் தெரியாதவர். சுலைமானே இவர் பதவிக்கு வருவதை விரும்ப வில்லை. தன் கடைசி காலத்தில் முடியாத தளர்ந்த நிலையில் சுலைமான் அவர்கள் ஆட்சிப்பொறுப்பை மூத்த மந்திரியிடம் ஒப்படைத்திருந்தார். காலத்தின் கட்டாயம் சுலைமானுக்குப் பிறகு, இரண்டாம் செலிம் பதவிக்கு வரவேண்டியதாயிற்று. இவர் எட்டாண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தார்.
தெற்கு ஐரோப்பாவில் ஸ்பெயினின் இரண்டாம் பிலிப் என்பவர் கத்தோலிக்க கிறிஸ்தவ சக்திகளின் கூட்டுடன் 1571 ல் லிபாண்டோ போரில் ஓட்டோமான் கடற்படையைத் தோற்கடித்து, வெல்ல முடியாதவர்கள் என்று இருந்த ஓட்டோமான்களை வென்றனர். நவீனமயமாகிக் கொண்டிருந்த ஐரோப்பிய இராணுவத்துடன் ஓட்டோமான் பேரரசு போட்டிபோட வேண்டிய நிலைக்கு ஆளாகியது. 1593 லிருந்து 1606 வரை ஆஸ்ட்ரியாவுடன் நடந்த நீண்ட போரானது வெடிமருந்துகளு டன் கூடிய மிகப்பெரிய படையின் அவசியத்தை பேரரசுக்கு உணர்த்தியது. ஐரோப்பியர்கள் பீரங்கிப்படையையும், வெடிமருந்து கையாளும் முறையையும் நவீனப்படுத்தி இருந்தார்கள். ஓட்டோமான்களின் தற்போதைய பொருளாதாரநிலையில் இராணுவத்தின் தரத்தைஉயர்த்த முடியவில்லை.
பதினேழாம் நூற்றாண்டில் பேரரசுக்கு நாட்டில் உள்ளும் புறமும் பல மாற்றங்க ளைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கிடையில் 1648 லிருந்து 1656 வரை சிறு வயது சுல்தான்களின் சார்பில் அவர்களின் தாய்மார்களின் தலையீடு அரசியலில் நுழைந்தது. வெனிஷியன் பைலோவில் முதல் வலீத் சுல்தானாக இருந்த நூர்பானு என்பவருக்குப் பிறகு, ஹூர்ரும் சுல்தான் என்பவர் ஆட்சி செய்தார். இந்த பெண்களின் ஆட்சியில் கூசெம் சுல்தானும், அவர் மருமகள் துர்ஹன் ஹதிஸும் பெய ர்பெற்றவர்களாக இருந்தார்கள். கூசெம் சுல்தான் அரசியல் எதிரிகளால் கொலை செய்யப்பட்டார். பல ஒட்டோமான் பகுதிகள் சுல்தானின் கட்டுப் பாட்டிலிருந்து மந்திரிகள், நீதி மன்றங்கள், திவான்களின் அதிகாரத்திற்கு மாறின. சுல்தான் பதவிக்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே தகுதியானவர்கள். இதனால் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு அடுத்தவரை கொன்று விடுவார்கள் அல்லது போராளி குழுக்கள் வாரிசுகளைக் கொன்றுவிட்டு தாங்கள் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்வார்கள். சகோதரர்கள் அரண்மனைக்குள்ளேயே உயிரைக் காத்துக் கொள்ள அடைபட்டு வாழ்வார்கள். இதனால், ஓட்டோமான் பேரரசு உறவுக்கொலைகளுக்கு கடுமையான சட்டம் கொண்டுவந்து தடை செய்தது. இது ஜானிஸ்ஸரீஸ் இராணுவப்பிரிவுக்கு வாய்ப்பாக அமைந்து ஆட்சி அவர்கள் கையில் மாறியது. சுல்தான் சுலைமானுக்குப் பிறகு வந்த எந்த சுல்தான்க ளும் பலமில்லாதவர்களாக இருந்தார்கள். மேலும், ஜானிஸ்ஸரி என்ற பேரரசின் இராணுவப்பிரிவும் பல காரணங்களுக்காக அரசுடன் ஒத்துழைக்காமல் கலகத் தில் இறங்கியது. இந்த ஜானிஸ்ஸரிகள் என்ற சுல்தானின் முன்னணிப்படை போர்புரியும் அழகு அக்காலத்தில் மிகவும் புகழப்பட்டதும், மற்ற நாட்டவர்களால் பார்த்து கையாளப்பட்டதும் ஆகும். அதாவது முன்னணியில் நான்கு அல்லது ஐந்து வரிசை வீரர்கள் மட்டுமே எதிரிக்குத் தென்படுவார்கள். மீதி பெருவாரியான வீரர்கள் அந்த வரிசைகளுக்கு பின்னால் மறைந்து உட்கார்ந்திருப்பார்கள். போர் தொடங்கியவுடன் திடுமென்று எழுந்து மாபெரும் கடல் அலைபோல் எதிரி வீரர்கள் மீது பாய்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் பல ஆயிரம் பேரைக் கொன்று விடுவார்கள். ஜானிஸ்ஸரிகள் பதினேழாம் நூற்றாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக நிர்வாகத்திலும் நுழைந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு தேவைப்பட்டவர்களு க்கு சலுகைகளைப் பெற்றுத்தந்தார்கள். ஆரம்பத்தில் இருந்த பேரரசின் தனித்தன்மை மறைய ஆரம்பித்தது.

ஓட்டோமான்கள் வரலாறு 7


பதினாறாம் நூற்றாண்டில் ஓட்டோமானின் கடற்படைக்கு வளர்ந்து வரும் மேற்கத்திய ஐரோப்பாவின் கடற்படைகள் சவாலாக இருந்தன. குறிப்பாக, ஸ்பைஸ் தீவுகள், இந்தியப் பெருங்கடல் மற்றும் பெர்ஷியன் வளைகுடாவில் போர்சுகல் லின் ஆதிக்கம் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே ஓட்டோமான்களால் தடைசெய்து வைக்கப்பட்ட தென் மற்றும் கிழக்கு கடல்பகுதிகள் அல்லாமல், ஐரோப்பியர்கள் பயன்படுத்திய புராதன கடல் வழியான சில்க் மற்றும் ஸ்பைஸ் கடல்பகுதிகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. நிலப்பரப்பில் ஆஸ்ட்ரியாவிலும், பெர்ஷியாவிலும் ஒரே சமயத்தில் போர் நடத்தி இராணுவ நடமாட்டத்தை வைத்திருந்தது. இந்த குழப்பங்களினால், நீண்டதூர வாணிபத்திற்கும், தொட ர்புகளுக்கும் உலக அரங்கில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதற்கு தெற்கிலும், கிழக்கிலும் கடல்பகுதியில் இராணுவ நடவடிக்கை எடுத்து ஓட்டோமான் கடற்படையை தடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஜானிஸ்ஸரிஸ் இராணுவ ஆட்சியில் மிகச் சிறப்பான மந்திரியாக மெஹ்மெத் கொப்ருலு என்பவர் இருந்தார். திறமையாக செயல்பட்டு ஊழல்களைத்தடுத்து பழைய ஓட்டோமான் பேரரசின் ஆட்சியைக் கொண்டுவர பெரிதும் பாடுபட்டார். ஐரோப்பாவின் ஆக்கிரமிப்பிலிருந்து இஸ்லாமிய நாடுகளுக்கு பாதுகாப்பு கொடுத்தார். நீதியும், நேர்மையுடன் ஆட்சி செய்தார். பதவிக்கு வந்த மிகக்குறிகிய காலத்தில் இவர் இறந்துவிட, இவரின் மைத்துனர் கரா முஸ்தபா என்பவர் இராணுவ ஆட்சியின் தலைமைக்கு வந்தார். கரா முஸ்தபா, கொப்ருலுவைப் போலவே திறமை வாய்ந்தவராக இருந்தார். இவர் மீண்டும் பேரரசை விரிவுபடுத்த விரும்பி ஆஸ்ட்ரியாவுடன் போரில் இறங்கினார். எப்படியேனும் ஆஸ்ட்ரியாவை வென்று விட வேண்டும் என்று 1683 ல் வியன்னா போரில் ஈடுபட்டார். ஆஸ்ட்ரியாவுக்கு ஐரோப்பிய படைகளின் ஆதரவு தந்ததாலும், பெருவாரியான வெடிமருந்துகள் உபயோகப்படுத்தப்பட்டதாலும் ஓட்டோமான்கள் தோல்வி அடைந்தார்கள். ஆனால், அதுவே மேற்படி ஓட்டோமான்கள் ஐரோப்பாவில் பரவ முடியாமல் போனதற்கு கடைசி போரானது.
கிழக்கு ஆசியாவுக்கும், மேற்கு ஐரோப்பாவுக்கும் இடையே வாணிபத்திற்கான ஓட்டோமான்களின் பாரம்பரிய நிலவழியின் ஆரம்பமாக மிக முக்கியமாக ‘சில்க் ரோடு’ இருந்தது. மேற்கத்திய ஐரோப்பிய மாகாணங்கள் அனைத்தும் ஒட்டுமொத் தமாக போர்ச்சிக்கீசியர்கள் கண்டுபிடித்த ஸ்பைஸ் ரூட் என்ற வழியைக் கண்டு பிடித்து, பாரம்பரிய ஓட்டோமான் கட்டுப்பாட்டில் இருந்த வழியைப் புறக்கணித்து ஆசியாவுக்கு புதிய கடல்வழியில் பயணிக்க ஆரம்பித்தார்கள்.  போர்ச்சுக்கீசியர்களின் புதிய கடல்வழியான அந்த ‘கேப் ஆஃப் குட்ஹோப்’ 1488 ல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பதினாறாம் நூற்றாண்டு முழுவதும் இந்தியப் பெருங்கடலில் ஓட்டோமான், போர்ச்சுகீசிய கடற்படைகள் மோதிக்கொண்டன. ஓட்டோமான்களின் தனிப்பெருமை வாய்ந்த வாணிபம் போர்ச்சுக்கீசியர்களால் பாதிப்புக்குண்டானது. பொருளாதார ரீதியாக ஸ்பானிஷ் சில்வர் பெருவாரியாக புழக்கத்தில் விடப்பட்டு, ஓட்டோமான்களின் நாணயமதிப்பை சீர்குலைத்தது. ஓட்டோமான் பேரரசுக்கு இது பலத்த இழப்பாகிப் போனது.
நான்காம் இவான் என்பவரது ஆட்சியில் மஸ்கோவித் ரஷ்யா என்ற விரிவாக்கம் வோல்காவிலும், கஸ்பியன் பகுதியிலும் ததார்கானின் பொருளாதாரத்தில் நடந் தது. இதனால், ஓட்டோமான்களின் வடக்கு யாத்ரிகர்களுக்கும், வாணிபவழிக்கும் பெரும் சிரமமாக இருந்தது. அப்போது ஆட்சியில் இருந்த சுல்தான் முதலாம் சுலைமானின் மகன் இரண்டாம் செலிம், சோகொல்லு மெஹ்மெத் பாஷா என்ற முக்கிய மந்திரி தலைமையில் டான்-வோல்கா என்ற கால்வாயை வெட்டிக் கொண்டே அஸ்ட்ரகான் என்ற இடத்தில் போரிட்டார். ஆனால், தோல்வியுற்று கால்வாய் பணியையும் நிறுத்திவிட்டார். இதைத் தொடர்ந்து ரஷ்யாவின் மீது படையெடுத்த க்ரிமியன்கான் தெவ்லெட் முதலாம் கிராய் என்பவரை தந்திரமாக ஓட்டோமான்கள் ஆதரித்தனர். க்ரிமியன்கான்கள் கிழக்கு ஐரோப்பாவில் தொடர்ந்து அடிமைத் தாக்குதல் என்ற பெயரில் தாக்கினார்கள். பதினேழாம் நூற்றாண்டின் இறுதிவரை மஸ்கோவிட் ரஷ்யாவுக்கு இந்த அச்சுறுத்தல் இருந்தது.
உதயமாகிக் கொண்டிருந்த பாரம்பரிய ஆஸ்ட்ரியன்கள் ஆட்சியும், வளர்ந்து வரும் ரஷ்ய பேரரசும் ஓட்டோமான் பேரரசுக்கு புதிய தலைவலியை உண்டாக்கியது. ரஷ்யாவில் பீட்டர் தி க்ரேட் புதிய நாட்டை உருவாக்கினார். 1689 ல் மாஸ்கோவில் பீட்டர் பால்டிக், பின்லாந்து வளைகுடா அதன் கரைகளில் ‘செயிண்ட் பீட்டர் ஸ்பர்க்’ என்ற நகரத்தை நிர்மாணித்து தலைநகரமாக்கினார். கடல்வழியை சுதந்திரமாக பயன்படுத்தும் திட்டத்தைக் கொண்டு வந்தார். பால்கனில் பெரும் நகரங் கள் ஓட்டோமான் வசம் இருந்தும் எகிப்து, அல்ஜீரியா போன்றவை பெயரளவில் சுதந்திரமாக இருந்தாலும் பிண்ணனியில் பிரிட்டனும், பிரான்சும் ஆதரவளித்துக் கொண்டிருந்தன. ரஷ்யாவின் அதிவேக வளர்ச்சி ஓட்டோமான் பேரரசுக்கு மிரட்ட லாக இருந்தது. 1709 ல் போல்டாவா போரில் ஸ்வீடனின் மன்னர் ஏழாம் சார்லஸ் ரஷ்யாவின் மீது போரிட்டு தோற்றார். கைதியாக பிடிபட விரும்பாமல் கமாண்டர் மாஸெப்பாவுடன் ஓட்டோமான் பேரரசில் அடைக்கலம் கோறினார். சுல்தான் மூன்றாம் அஹமது அடைக்கலம் கொடுக்க, ரஷ்யா அவர்களை ஒப்படைக்குமாறு கேட்டது. ஆனால், பேரரசு, உதவிகோரியவர்களுக்கு வரவேற்பு கொடுப்பது ஒவ்வொரு நாட்டின் உரிமை. அது இஸ்லாமிய வழிமுறையும் கூட’ என்று மறுத்து விட்டார். ஸ்வீடன் மன்னர் ஏழாம் சார்லஸ் ஓட்டோமான் சுல்தான் மூன்றாம் அஹ்மதுவை ரஷ்யாவுடன் போர் தொடுக்குமாறு வேண்டி, தானும் இணைந்து ரஷ்யாவை ப்ரூத் ஆறு போரில் வென்றனர். பின் பஸ்ஸரோவிட்ஸ் என்ற உடன் படிக்கை மூலம் போர் நிறுத்தப்பட்டது. சுல்தான் மூன்றாம் அஹமது துலிப் மலர் களைப் பெரிதும் விரும்பியதால் 1718 லிருந்து 1730 வரை துலிப் காலம் என்று பேரரசில் அழைக்கப்பட்டது. கலை, கலாச்சாரம், நுண்கலை ஆகியவை இவர் காலத்தில் வளர்ந்தன. டாப்காபி அரண்மனையில் அமைக்கப்பட்டிருந்த ‘அஹமது ஃபவுண்டன்’ என்ற நீர்தூவும் அமைப்பு மிகவும் புகழ்பெற்றது. துலிப் காலத்தில் புகழ் வாய்ந்த பிரான்சு ஓவியர் ஜீன் பாப்டிஸ்ட் வான் மோர் என்பவர் பேரரசுக்கு வருகைதந்து பல சிறப்பான ஓவியங்களை வரைந்திருந்தார். 1725 ல் ரஷ்யாவின் மன்னர் பீட்டர் இறந்தவுடன் அவர் மனைவி ஸரினா கேத்தரின் பதவிக்கு வந்தார். இவர் ஆஸ்ட்ரியாவுடன் இணைந்து 1735 லிருந்து 1739 வரை ஓட்டோமான் பேரரசு டன் போர் புரிந்தார். இறுதியில் ‘பெல்கிரேட் உடன்படிக்கை’ ஏற்பட்டு, செர்பியா மற்றும் லிட்டில் வலாச்சியாவை ஆஸ்ட்ரியாவிடவும், அஸோவ் என்ற துறைமுகத்தை ரஷ்யாவிடமும் இழந்தது. ஆனால், உடன்படிக்கை நீண்டகால அமைதிக்கு வித்திட்டது.

ஓட்டோமான்கள் வரலாறு 8


இந்த அமைதியான சூழ்நிலையை பேரரசு மிக அற்புதமாக பயன்படுத்திக் கொண்டது. உயர்கல்வியிலும், தொழிற்துறையிலும் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டது. புகழ் பெற்ற இஸ்தான்புல் தொழிற் பல்கலைக்கழகத்தை நிறுவியது. விஞ்ஞா னம், இஸ்லாமிய மதக்கல்வி, கணிதம் போன்றவற்றிலும் வளர்ச்சிகண்டது. சீனர் களின் உதவியுடன் வெடிமருந்து தயாரிப்பதிலும், கந்தக திசைகாட்டியும் கண்டு பிடித்தது. பிரான்சு பயிற்சியாளர்களை வைத்து பீரங்கி போர்முறைகளை வீரர் களுக்கு கற்றுக்கொடுத்தது. அச்சக இயந்திரத்தை பிசாசுகளின் கண்டுபிடிப்பு என்று மேற்கத்திய எழுத்தாளர்கள் சம்மேளனம் ஏளனம் செய்து விலக்கியது. அச்சு இயந்திரத்தைக கண்டுபிடித்த ஜோஹன்னஸ் கூடென்பெர்கை ஓட்டோமான் பேரரசுக்கு வரவழைத்து, ஸ்பெயினின் தேடுதல் வேட்டையிலிருந்து தப்பித்து பேரரசில் அடைக்கலமாகி இருந்த செபார்டிக் யூதர்களின் உதவியுடன் 1449 ல் உலகின் முதல் கூடென்பெர்க் அச்சகத்தை உருவாக்கியது. பதினெட்டாம் நூற் றாண்டு வரை அச்சகம் முஸ்லீம் அல்லாதவர்கள் தான் பெரும்பாலும் பயன் படுத்தினார்கள். கைகளால் எழுதி வந்த மதத்தலைவர்களிடமிருந்து வந்த எதிர் ப்பால் சுல்தான் மூன்றாம் அஹமது, முதெஃபெர்ரிகா என்பவரை மதம் தவிர்த்த புத்தகங்களை அச்சிடக் கேட்டுக்கொண்டார். முதெஃ பெர்ரிகா 1729 ல் முதல் புத்தகத்தை வெளியிட்டு, பின் 17 புத்தகங்களை 23 பகுதிகளாக வெளியிட்டார்.
பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஓட்டோமான் பேரரசும், ரஷ்யாவும் நிறைய போர்களை சந்தித்தன. மேலும் வெளிநாட்டு அரசுகள் ஓட்டோமான் பிர தேசங்களைக் கைப்பற்ற ஆவல்கொண்டன. இதனால், பேரரசு ஐரோப்பிய நாடுக ளுடன் இராணுவக்கூட்டு ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய கட்டாயமானது. இடை யில் போனபார்ட் எகிப்திலிருந்து மம்லுக்குகளை வென்று அங்கு எகிப்தியர்களின் ஆட்சியை கொண்டு வர விரும்பினார். அதற்காக கெய்ரோவில் தாக்குதல் நடத்தி கொள்ளையடித்தார். மம்லுக்குகளை 1798 ல் பைரமிட் என்ற இடத்தில் வெற்றி பெற்றார். இராணுவ ஜெனரல்கள் இப்ராஹிமும், முராதும் எகிப்தின் சினாய் தீப கற்பத்திற்கு தப்பி ஓடினார்கள். போனபார்ட் கெய்ரோவைக் கைப்பற்றினார். அங்கி ருந்து நைல் நதியின் பகுதிகளைக் கட்டுப்படுத்த எண்ணினார். ஆனால், தொடர் ந்து மம்லுக்குகள் பிதூயின் பழங்குடியினரின் உதவியுடன் எதிர்த்து வந்தார்கள். 1799 ல் போனபார்ட் மாஸிடோனியாவைச் சேர்ந்த மெஹ்மெத் அலி என்ற ஓட்டோமான் அதிகாரியிடம் எகிப்தை மம்லுக்குகளிடமிருந்து முற்றுலும் கைப்பற்றக் கூறிவிட்டு பிரான்சுக்கு திரும்பிச் சென்றார்.
பேரரசில் முதல் தபால் நிலையம் 1840 ல் துவங்கப்பட்டது. 1876 ல் முதல் சர்வதேச தபால் பட்டுவாடா செய்யப்பட்டது. 1901 ல் முதல் பணபட்டுவாடா தபால் நிலையம் மூலம் செய்யப்பட்டது. ஓட்டோமான் பேரரசின் பிரதேசங்களைப் பிடிப்பதற்கு பல ஐரோப்பிய நாடுகள் ஆர்வமாய் இருந்தன. பிரிட்டனும், ஃப்ரான்சும் ஓட்டோமான் பேரரசுக்கு ரஷ்யாவை எதிர்ப்பதற்கு ஆதரவு அளித்தன. கருங்கடலின் கட்டுப்பாட்டைப்பிடிக்க ரஷ்யாவின் க்ரிமியன் தீபகற்பத்தில் போர் நடந்தது. அதல்லாமல் பல சிறிய தாக்குதல்கள் மேற்கு அனடோலியா, காகசஸ், பால்டிக் கடல், பசி ஃபிக் கடல் மற்றும் வெள்ளை கடல் ஆகிய பகுதிகளில் நடந்தன. இந்த போர்கள் முற்றிலும் நவீன முறையில் நடந்தன. அதாவது முதல் முறையாக போரில் இரயில்வே துறை மற்றும் தபால் துறைகள் பயன்படுத்தப்பட்டன.  1856 ல் பாரிஸ் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட பின் பால்கன் தீபகற்பம் மற்றும் கருங் கடல் பகுதிகள் ஓட்டோமான்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. க்ரிமியன் போரினால், க்ரிமியன் டடார் பிரிவினர் 300,000 மக்கள்தொகையில் 200,000 பேர் டாரைட் மாகாணத்திலிருந்து ஓட்டோமான் பேரரசின் பகுதிக்கு அகதிகளாக ஓடினார்கள். அதேபோல் காகசஸ் போரிலும் 90% சதவிகித சிர்காஸியன் பிரிவு மக்கள் சொந்த இடங்களைவிட்டு ஓட்டோமான் பேரரசின் பகுதிக்கு குடியேறினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து பால்கன், காகசஸ், க்ரிமியா மற்றும் க்ரீட் தீவுகள் போன்றவற்றிலிருந்து வந்து குடியேறிய பெரும்பான்மையான முஸ்லீம் மக்கள் தான் தற்போதைய துருக்கியில் அடிப்படை மாற்றத்தை உண்டாக்கினார்கள். பொதுவாக இவர்களை “முஹாசிர்” என்று அழைத்தார்கள். 1922 ல் ஓட்டோமான் ஆட்சி முடிவுறும் போது பாதிக்கும் துருக்கிய மக்கள் ரஷ்யாவிலிருந்து வந்த முஸ்லீம் அகதிகள் தான். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி யில் க்ரிமியன் டடார்கள் துருக்கியில் நவீன கல்விக்கு பாடுபட்டார்கள்.

ஓட்டோமான்கள் வரலாறு 9


எல்லா தேசங்களிலும் எழுந்த தேசியமயமாக்கல் எழுச்சி ஓட்டோமான் ஆளும் மாகாணங்களிலும் எழுந்தது. இவர்கள் வளரும் சூழ்நிலைக்கேற்ப கலாச்சாரம் சார்ந்த தேசியமாக்கல் வேண்டி, மேற்கத்திய கலாச்சாரத்தை இறக்குமதி (அதா வது கிறிஸ்தவ) செய்துகொண்டார்கள். எல்லை தாண்டி வந்த இந்த கலாச்சாரத் திற்காக பல உள்ளூர் அரசியல் கட்சிகள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை புரட்சி செய்தன. 1804 ல் செர்பியர்கள் பேரரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட ஓட்டோமான்கள் பால்கனை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே சமகாலத்தில் நெப்போலியன் படையெடுப்பும் நடந்தது. 1817 ல் செர்பிய புரட்சி முடி வுக்கு வர தனியாக ஆட்சி அமைத்து பெயரளவில் சுஸெரியண்டி ஓட்டோமான் இருந்தது. 1821 ல் ஓட்டோமான் பேரரசிலிருந்து முதல் முறையாக ஹெல்லெனிக் முழு சுதந்திரம் அடைந்தது.
தான்ஸிமட்களின் மாற்றம் தனூப் மற்றும் செர்பிய பிரிவினரின் தேசியமாக்கும் எண்ணத்தை தடுக்கவில்லை. அவர்கள் 60 ஆண்டுகளாகவே பாதி சுதந்திரமாகத்தான் இருந்தார்கள். 1875 ல் மோண்டினிக்ரோ, வல்லாச்சியா, மோல்டாவியா மற் றும் ஒருங்கிணைந்த மக்கள் பெயரளவில் பேரரசுக்கு கட்டுப்படுவது போன்ற சுதந்திரத்தை அறிவித்தார்கள். 1877 ல் ரஷ்யா துருக்கிப்போரின் போது ஓட்டோமான் பேரரசு மேற்சொன்ன  பிரதேசங்களுக்கும், பல்கேரியாவுக்கும் சுதந்திரம் அறிவித்தது. பல்கேரியா போரின் போது தேசிய புரட்சிக் குழுவுக்கு ஆதரவாக இருந்தது. 1878 ல் பெர்லின் காங்கிரசின் பெரியதலைவர் அதிகாரமிக்க ஐரோப்பியாவையும் ஓட்டோமான் பேரரசையும் சந்தித்தார். வெற்றி பெற்றிருந்த ரஷ்யா வையும் ஆர்தொடக்ஸ் கிறிஸ்தவர்களையும் பால்கனில் நிலையான ஒரு அரசை நிறுவ அவசரப்படுத்தினார். ஜெர்மனியின் அதிபர் ஓட்டோவான் பிஸ்மார்க், எதிர்காலத்தில் பெரியபோர் ஏற்படாமலும், அதேநேரத்தில் ஓட்டோமான் அதிகாரத்தைக் குறைத்து, மற்றவர்களின் அதிகாரம் அதிகம் இருப்பதுபோல் பல்கேரியாவை அமைத்தார். ஓட்டோமான் பேரரசுக்குள்ளேயே பல்கேரியா ஒரு சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் நிலப்பரப்பு முழுமையாக கொடுக்கப் படவில்லை. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பல்கேரியா ருமேலியா பகுதியை இழந்தது. ருமேலியாவை ஓட்டோமான் பேரரசு தனி நிர்வாகம் அமைத்து பார்த்துக் கொண்டது. அதே போல் மாசிடோனியாவுக்கும் தனி நிர்வாகம் அமைப்பதாகக் கூறியது. ருமேனியாவும் சுதந்திரம் அடைந்தது. ஆனால், பெஸ்ஸராபியா என்ற பகுதி ரஷ்யாவிடம் சேர்ந்தது. செர்பியாவும், மோண்டினிக்ரோவும் குறைவான பகுதிகளுடன் முழுச் சுதந்திரம் பெற்றன.

ஓட்டோமான்கள் வரலாறு 10


1878 ல் ஆஸ்ட்ரியாவும், ஹங்கேரியும் தாமதம் காட்டாமல் ஓட்டோமான் மாகாணங்களான போஸ்னியா ஹெர்ஸிகோவினா மற்றும் நோவிபஸர் பகுதிகளை ஆக்கிரமித்தன. ஓட்டோமான் பேரரசு அதைத்தடுத்து தனது படைகளை நிறுத்திக் கண்காணித்தது. ஆஸ்ட்ரியாவும், ஓட்டோமானும் ஏறக்குறைய 30 ஆண்டுகள் 1908 வரை அந்த மாகாணங்களில் படைகளை நிறுத்தி இருந்தன. ஆஸ்ட்ரியா ஓட்டோமான் பேரரசில் அரசியல் அதிகாரம் பெற்றபோது, இளம் துருக்கி புரட்சிப்படையுடன் போஸ்னியாஹெர்ஸி கோவினா சேர்ந்து கொண்டது. ஓட்டோமானுடன் போரைத் தவிர்க்க உடன் நோவிபஸரிலிருந்து இராணுவத்தை பின் வாங்கிக் கொண்டது. 1878 ல் பெர்லின் தலையீடு ஓட்டோமானில் இருக்கும் போது, பிரிட்டன் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரேலி சைப்ரஸ் நிர்வாகத்திற்காக ஓட்டோமானை ஆதரித்தார். அதேபோல் 1882 ல் ஓட்டோமான் பேரரசு முதல் உலகப் போரில் மத்திய சக்தியை ஆதரிக்க விருப்பம் தெரிவித்திருந்ததால் எகிப்தில் ஏற்பட்ட ‘உராபி’ கலவரத்திற்கும் பிரிட்டன் படைகளை அனுப்பி உதவியது. 1881 ல் பிரான்சு தன் பங்குக்கு துனிஷியாவை அபகரித்துக்கொண்டது.
இந்த சுதந்திரமயமாக்கப்பட்ட மாகாணங்களின் விவகாரம் ஆரம்பத்தில் பெரிய சாதனையாகவும், அமைதிக்கும், நிரந்தர ஆட்சிக்கும் வழி ஏற்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், பங்கு பெற்றவர்களின் அதிருப்தி 1914 ல் உலகப்போரில் எதிரொலித்தது. செர்பியா, பல்கேரியா மற்றும் க்ரீஸ் பயன்பெற்றிருந்தாலும், அவர்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தார்கள். அப்போதைய ஓட்டோமானின் பேரரசர் ‘ஐரோப்பாவின் நோயாளி’ (SICK MAN OF THE EUROPE) என்று வருணிக்கப்பட்டு, அமைதியற்ற உள்நாட்டு நிலவரம், கடும் தாக்குதல்கள், பலவீனமான அரசு என்று ஆகிப்போனார். ஆஸ்ட்ரியா-ஹங்கேரி மற்றும் ரஷ்யாவுக்கும் இடையே இருந்த நீண்டநாள் பகை பால்கனின் தேசியமயமாக்கலுக்கு தடையாகவே இருந்தது.  பெர்லின் காங்கிரஸ் இஸ்தான்புல்லை ஓட்டோமான் பேரரசில் இணப்பதில் வெற் றி கண்டது. பெர்லின் காங்கிரஸ் இதற்கு முன் பல்கேரியா உடன்படிக்கை மூலம் சுதந்திரம் பெற்றிருந்த பகுதிகளை ஓட்டோமான் பேரரசிடமே, குறிப்பாக மாசிடோ னியாவை திரும்ப ஒப்படைத்தது. இதற்கு பலமான எதிர்ப்பு கிளம்பி முதல் பால் கன் போர் நடந்தது. இதில் ஓட்டோமான்கள் தோல்வி அடைந்து பெரும்பாலான ஐரோப்பிய பிரதேசங்களை இழந்தார்கள்.
இதனால், ஓட்டோமான் பேரரசு நிலப்பரப்பு, இராணுவம், வளமை ஆகியவற்றில் சுருங்கியது. அதிகமான பால்கன் முஸ்லீம்கள் சுருங்கிப்போன ஓட்டோமான் பகுதிகளிலும், அனடோலியாவின் முக்கிய பகுதிகளையும் நோக்கி குடிபெயர்ந் தனர். ஓட்டோமான் பேரரசில் முஸ்லீம்கள் க்ரீமியா, பால்கன், காகசஸ், தென் ரஷ்யா மற்றும் ருமேனியாவின் சில பகுதிகளில் அதிகமாக இருந்தனர். இதில் பலவற்றை பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் ஓட்டோமான் இழந்திருந் தது. அனடோலியாவும், கிழக்கு த்ரேசும் மட்டும் முஸ்லீம் பிரதேசமாக இருந்தது. 1880 எகிப்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. 1882 ல் பிரிட்டன், பிரான்சு போர்க் கப்பல்கள் அலெக்ஸான்ட்ரியா துறைமுகத்தின் அருகில் இருந்து ‘கேதிவ்’ என்ற பிரிவினருக்கு ஆதரவாக இருந்து கொண்டு ஐரோப்பாவின் எதிர்ப்பாளர்களை தடுத்துக்கொண்டிருந்தனர். மேலும் எகிப்தைக் ஆக்கிரமித்து சீரமைப்பதாகக் கூறியது.
அர்மேனியர்கள் தங்களுக்கும் ஒத்துக் கொண்டது போல் சுதந்திரம் அளிக்க வேண்டுமென்று ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து அழுத்தம் கொடுத்தன. இதனால், சுல்தான் இரண்டாம் ஹமீத் என்பவர் கிழக்கு அனடோலியாவில் ஹமீ தியா பகுதியில் படை நிறுத்தினார். முறையற்ற குர்து இனத்தவரைப் படையில் சேர்த்து 1894 லிருந்து 1896 வரை 100,000 லிருந்து 300,000 அர்மேனியன்கள் வரை கொல்லப்பட்டு சரித்திரப்புகழ் பெற்ற ‘ஹமீதிய படுகொலை’ நடத்தப்பட்டது. அர் மேனிய போராளிகள் இஸ்தான்புல் நகரில் ஓட்டோமான் வங்கியின் தலைமை அலுவலகத்தைச் சிறைப்பிடித்து ஐரோப்பாவின் கவனத்தை ஈர்த்தனர். ஆனால், அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

ஓட்டோமான்கள் வரலாறு 11


ஓட்டோமான் பேரரசின் தொடர் பால்கன் போரினால் ஐரோப்பாவும், வட ஆப்பிரி க்காவும் மிகவும் சிரமப்பட்டன. ஆனாலும் 28 மில்லியன் மக்கள்தொகை பேரரசில் இருந்தது. இவற்றில் 17 மில்லியன் நவீன துருக்கியிலும், 3 மில்லியன் சிரியா, லெபனான் மற்றும் பாலஸ்தீனத்திலும், 2.5 மில்லியன் ஈராக்கிலும் இருந்தார்கள். இதல்லாமல் இன்னும் 5.5 மில்லியன் மக்கள் பெயரளவில் ஓட்டோமான் பேரரசினாலான அரபிய தீபகற்பத்தில் இருந்தார்கள். சமூக ஆதாயம் பெறவேண்டி ஆஸ் ட்ரியா-ஹங்கேரியுடன் போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினா அலுவல் ரீதியாக இணைக்கப்பட்டது. இதனால் பேரரசு ஆஸ்ட்ரியாவுடனான போரைத் தவிர்ப்பதற்கு நோவிபஸரில் நிறுத்தியிருந்த படைகளை திரும்ப அழைத்துக்கொண்டது. 1911-12 ல் இத்தாலி-துருக்கிப்போரில் ஓட்டோமான் பேரரசு லிபியாவை இழந்தது. பால்கன் போரில் பேரரசு கிழக்கு த்ரேஸ் நகரத்தையும், சரித்திரப்புகழ் வாய்ந்த ஓட்டோமானின் அட்ரியநோபிள் நகரத்தையும் தவிர அனைத்து பால்கன் பகுதிகளையும் இழந்தது. ஓட்டோமான் இராணுவம் பின் வாங்கிவிட்டதால் ஏறக்குறைய 400,000 முஸ்லீம்கள் கிரீக், செர்பியா, பல்கேரியா பகுதிகளில் என்ன நடக் குமோ என்று பயத்தில் உறைந்து போயிருந்தனர். ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் பாக்தாத் ரெயில்வே ஈராக்கில் இரயில் பணிகளைச் செய்தது. இந்த பணி ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்தாலும், பிரிட்டன் உலகப்போரை முன்னிட்டு இரயில்வே பணியால் கவலையுற்றிருந்தது.
கான்ஸ்டாண்டிநோபிள் ஆக்கிரமிக்கப்பட்டவுடன் கூடவே துருக்கியில் இஸ்மிர் என்ற நகரமும் ஆக்கிரமிக்கப்பட்டது. அவர்கள் துருக்கி தேசிய அமைப்பு என்ற ஒன்றைத் தொடங்கி துருக்கி சுதந்திரப்போர் என்று நடத்தி வெற்றி பெற்றார்கள். முஸ் தஃபா கெமால் பாஷா என்பவர் தலைவராய் இருந்தார். ஓட்டோமான்களின் கடைசி சுல்தான் ஆறாம் மெஹ்மெத் வஹ்தெத்தின் நிராகரிக்கப்பட்டார். சுல்தான் 1922 நவம்பர் 1 ல் ராஜினாமா செய்து விட்டு துருக்கியை விட்டு வெளியேறினார். துருக்கி தனி நாடாக 1923 ஜூலை 24 ல் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றது.
1974 ல் ஓட்டோமான் பேரரசின் வாரிசுகளுக்கு துருக்கி அரசு, நாட்டுப்பிரஜைகளாக அங்கீகாரம் அளித்தது. ஓட்டோமான் இளவரசர் மெஹ்மெத் அப்துல் காதி ரின் மகன் மெஹ்மெத் ஓர்ஹன் 1994 ல் இறந்துபோனார். ஓட்டோமான் சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீதின் பேரரும், அழிந்துபோன ஓட்டோமான் பேரரசின் மூத்த உறுப்பினருமான எர்துகுல் ஒஸ்மான் மட்டும் இருந்தார். இவர் துருக்கியின் பாஸ்போர்டை கூட பெறவிருப்பமில்லாமல் தான் இன்னும் எங்கள் மூதாதைய ரின் ஓட்டோமான் பேரரசைச் சேர்ந்தவன் தான் என்று கூறிவந்தார். மீண்டும் ஓட் டோமான்கள் ஆட்சி வரவேண்டும் என்று விரும்புகிறீர்களா என்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு, அவர், தேவையில்லை துருக்கி ஜனநாயக முறையில் நன்றாகவே இருக்கிறது என்றார். 1992 ல் அவர் முதல் முறையாக துருக்கி திரும்பி, துருக்கிப் பிரஜையாகவும் ஆகி, துருக்கி பாஸ்போர்டையும் பெற்றுக் கொண்டார்.
2009 செப்டம்பர் 23 ல் எர்துகுல் ஒஸ்மான் தனது 97 வது வயதில் இஸ்தான்புல் நகரில் கடைசி சுல்தான் வாரிசாக இருந்து இறந்து போனார். சுல்தான் அப்துல் மெஸித்தின் இரண்டாவது மகன் பயேஸித் ஒஸ்மானின் இளைய பேரர் யாவுஸ் செலிம் ஓஸ்கூர் என்பவர் சுல்தானின் குடும்பத்தைச் சேர்ந்தவராக (அதாவது பட்டத்திற்கு உரியவர் அல்ல) இன்னும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வருகிறார்.

புதன், 17 டிசம்பர், 2014

செல்ஜுக்குகள் சரித்திரம் 7



நான்காம் கிலிக் அர்சலனின் மகன் மூன்றாம் கியாஸுத்தீன் கெய்குபாத் மன்னராய் இருந்த போது ஆறு வயது, இதனால் அவரின் ஆட்சிப் பொறுப்பாளராக இருந்த மொய்னுத்தீன் சுலைமானுக்கு சாதகமாகி  மொத்த ஆட்சி அதிகாரமும் தன் வசம் வைத்திருந்தார். மூன்றாம் கியாஸுத்தீன் கெய்குபாத் எதிர்காலத்தில் கொன்யாவைச் சுற்றியுள்ள பகுதியை மட்டும் உரிமை கொண்டாட முடியும். அடுத்த பத்தாவது ஆண்டில் மங்கோலியர்களின் கீழ் வழக்கமாக சுதந்திரமாக ஆளும் அதிகாரம் பெற்றார். 1276 ல் மொய்னுத்தீன் சுலைமான், எகிப்தின் மம்லுக் சுல்தானாகிய பைபருடன் கூட்டு சேர்ந்து மங்கோலியர்களை போரிட்டு ஆசியா மைனரை விட்டு விரட்டி தன்னை மங்கோலியர்களின் கீழில்லாத சுல்தானாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார். அதன்படி மம்லுக்கின் பைபர் படை எடுத்து வந்து மங்கோலியர்கள் வசமிருந்த எல்பிஸ்டான், கைசெரி நகரங்களைக் கைப்பற்றினார். பின் சுல்தான் பைபர் வெளியில் அறிந்து கொள்ள முடியாத சில காரணங்களால் போரிலிருந்து விலகி எகிப்து சென்று விட்டார். இதனால் மொய்னுத்தீன் சுலைமான் டோகத் என்ற இடத்தில் தனியாக விடப்பட்டு மங்கோலியர்களுக்கு எதிரான போர் திட்டத்திற்கு மொய்னுத்தீன் சுலைமானின் துரோகம் தான் காரணம் என்பது வெளிப்பட்டு அவரையும், உடனிருந்த சிற்ப, கட்டிட கலை நிபுணரும், மந்திரியுமான சாஹிப் அடாவும் கொல்லப்பட்டனர்.                    
                       மொய்னுத்தீன் சுலைமானின் மரணத்திற்குப் பிறகும் பேரரசின் குழப்பங்கள் தீரவில்லை. 1283 ல் மூன்றாம் கியாஸுத்தீன் கெய்குபாதும் மங்கோலியர்களால் கொல்லப்பட்டார். எவ்வளவு தான் குழப்பங்கள் இருந்தாலும் செல்ஜுக்குகள் கட்டிடம் கட்டும் பணிகளைத் தொடர்ந்தார்கள். கெசிக்கோப்ருவிலும், தூரக், ஓரெசின், எக்ரிட் மற்றும் கேயில் அரண்மனைகளும், பாலங்கள் அமைத்தார்கள். கைசெரியில் சாஹிபியே மதரஸா, சிவாஸில் கோக் மதரஸா, அஃப்யொன் உலு கேமியில் மதரஸா கட்டினார்கள். இவர்களால் விடப்பட்ட சிஃப்டி மினாரே மதரஸா, சிவாஸில் முஸ்ஸாஃபர் பருசிர்டி மதரஸா, அமஸ்யா கோக் மதரஸா மற்றும் அஃப்யோனில் டோரும்டாய் கோபுரங்களை மங்கோலியர்கள் முழுமையாக கட்டினார்கள்.
                                     எந்த நேரமும் குடும்பத்திற்குள் பதவிச் சண்டை, குழப்பங்களுக்கு மத்தியில் இறுதியாக இரண்டாம் மசூத் என்பவர் தன்னை கைசெரியின் சுல்தானாக அறிவித்துக் கொண்டார். அவரும் அவர் மகன் மூன்றாம் மசூதும் 1303 ல் கொலை செய்யப்பட்ட பிறகு, அனடோலியா (துருக்கி) செல்ஜுக்கு களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதேநேரத்தில் மங்கோலியர்களும் பலமும் மங்கத் துவங்கியது. அனடோலியா சிறு சிறு பகுதிகளாக உள்ளூர் ஆட்சியாளர்களாலும், எஞ்சிய செல்ஜுக்குகளின் அறியப்படாத குடுப்பத்தவர்களாலும் ‘பெய்லிக்கு’கள் என்றழைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆண்டுவந்தார்கள். இப்படியான பகுதிகள் கரமான், ஜெர்மியான், எஸ்ரிஃப், ஹமித், மெண்டிசி, கேண்டர், பெர்வனி, சாஹிப் அடா, கரெசி, ஸருஹான், அய்டின் மற்றும் ஒஸ்மனோகுல்லார் ஆகியவை ஆகும். சரித்திரம் இதை “பெய்லிக் காலம்” என்று குறிப்பிடுகிறது. அனடோலியா செல்ஜுக்குகள் ஆட்சி இழந்ததற்கு மங்கோலியர்களின் வரவும் ஒரு முக்கிய காரணம். இதன் பிறகு, சற்று பலம் வாய்ந்த கரமான் பகுதி பெய்லிக் மன்னர் மெஹ்மூத் பெய் என்பவர் தென் துருக்கியில் பிரபலமானார். அவர் அரசு மொழியாக துருக்கியைத் தவிர வெறெதுவும் ஏற்றுக் கொள்ள மறுத்தார். மற்றொரு பெய்லிக் ஓஸ்மனோகுல்லாரி சரித்திரத்தில் தங்கள் பெயரை மிகவும் அழுத்தம் திருத்தமாக எழுதும் வண்ணத்தில் வெளிக் கிளம்பி னார்கள். ஓஸ்மனோகுல்லாரி என்றால் ஒஸ்மானின் மகன்கள் என்று பொருள். அவர்களில் எர்துக்ருல் என்பவர் அங்காரா மற்றும் கான்ஸ்டாண்டி நோபிளின் இடையில் ஸோகூத் என்னும் இடத்தில் பெருவாரியான நிலப்பரப்பைக் கைப்பற்றி இருந்தார். அவருக்குப் பிறகு, அவர் மகன் ஒஸ்மான் ஆளுகைக்கு வந்தார். ஒஸ்மான் துருக்கி மொழியில் ஒத்மான் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒஸ்மானின் தொடர்ச்சியாக வந்தவர்கள் பெரும் பேரரசை நிறுவினார்கள். சிறு பகுதியை ஆண்ட இவர்கள் கற்பனைக்கு எட்டாத வண்ணம், இதுவரை உலகம் கண்டிராத துருக்கி “ஓட்டோமான்" களாக ஆதிக்கம் செலுத்தினார்கள். 

செல்ஜுக்குகள் சரித்திரம் 6



இரண்டாம் கியா ஸுத்தீன் கெயுஸ்ரெவ் மரணமடையும் போது வெவ்வேறு தாய்க்குப் பிறந்த மூன்று இளைய பிள்ளைகளை விட்டுச் சென்றார். இதனால் செல்ஜுக் பேரரசை முறையாக ஆளத்தகுதியான ஆட்சியாளர் இல்லாமல் போனது. இந்த நிலைமையில் செல்ஜுக் பேரரசு தானாகவே இல்கானித் மங்கோலிய ஆட்சியின் நிர்வாகத்தின் கீழ் சென்றது. இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரெவின் மூன்று பிள்ளைகளின் சச்சரவால் செல்ஜுக்குகளின் பேரரசு மேலும் பலவீனமானது. இறுதியில் மூவரும் சேர்ந்து தனித்தனியாக பிரித்து ஆள்வது என்று முடிவானது. 1249 ல் இடையில் துணை மந்திரி செலாத்தீன் கரடாய் என்பவர் அரசியல் தரகராக செயல்பட்டு சகோதரர்களுக்கும், மங்கோலியர்களுக்கும் இடையில் ஒரு ஆட்சி நிர்வாக ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். அதன்படி மூன்று சுல்தான்களும் இணைந்து கையெழுத்திட தனித்தனி மாகாணம் பிரிக்கப்பட்டு மூன்று பேரும் மங்கோலிய கானின் கட்டுப்பாட்டில் ஆட்சி செய்து கொள்ளலாம் என்று முடிவானது. கொன்யா மற்றும் கிஸிலிர்மாக் ஏரியின் மேற்குப்பகுதி மூத்த மகன் இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸுக்கும், சிவாஸும் கிஸி லிர்மாக் ஏரியின் கிழக்குப் பகுதி நான்காம் ரூக்னத்தீன் கிலிக் அர்சலனுக்கும், மலத்யாவுக்கு அருகில் உள்ள பகுதி இரண்டாம் அலாவுத்தீன் கெய்குபாதுக்கும் என்று முடிவானது. மங்கோலிய கானிடம் எதையாவது பெறுவதென்றாலும், கேட்பதென்றாலும் மூவரும் மூன்று விதமாக அணுகினர்.
                         இந்த மூவர் ஆட்சி 1257 வரை நீடித்தது. இவர்களின் தந்தையார் இரண்டாம் கியாஸுத்தீனிடம் பணியாற்றிய மந்திரி செம்ஸ் அத்தீன் இஸ்ஃபஹானி என்பவர் மூவர் கூட்டணி ஆட்சிக்கும், மங்கோலிய கானுக்கும் இடையே பொதுவாக இருந்து பார்த்துக் கொண்டார். 1249 ல் மிகவும் திறமை வாய்ந்த இவர் கைது செய்யப்பட்டு படுகொலையும் செய்யப்பட்டார். அதேபோல் இரண்டாம் அலாவுத்தீன் கெய்குபாதும் 1257 ல் தனது பிரதேசத்தை ஆள விரும்பாமல் மங்கோலிய கானிடம் திருப்பிக் கொடுக்க முடிவெடுத்தபோது எர்ஸுரும் என்ற இடத்தில் அவரின் உயர் அதிகாரியால் கொல்லப்பட்டார். இப்போது மீதி இரண்டு சகோதரர்களில் இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸின் தாய் கிரேக்க வம்சாவழி ஆனதால், அவர் பைஸாந்தியர்களின் உதவியை நாடி மங்கோலிய கானை எதிர்க்க திட்டமிட்டார்.  நான்காம் ரூக்னத்தீன் கிலிக் அர்சலன் மொத்த பகுதிகளையும் மங்கோலிய கானிடம் கொடுத்துவிட எண்ணினார். மேலும் இந்த சூழ்நிலையில் மந்திரி கரடாயிடம் ஆலோசனை பெற எண்ணினார். ஆனால்  எதிர்பாராத விதமாக கரடாய் இறந்து போனார். செல்ஜுக்குகளின் நம்பிக்கை தளர்ந்தது. மங்கோலிய கான் பேரரசை இரண்டாகப் பிரித்து சிவாஸை நான்காம் ரூக்னத்தீன் கிலிக் அர்சலனுக்கும், தலைநகர் கொன்யாவை இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
                           இதற்கிடையில் குறிப்பிடத்தக்க நபராக செல்ஜுக்குகளின் அரசியல் அரங்கில் நான்காம் ரூக்னத்தீன் கிலிக் அர்சலனின் பிரதம மந்திரி மொய்னுத்தீன் சுலைமான் நுழைந்தார். சுயசிந்தனையும், ஆள வேண்டும் ஆசையும் கொண்ட அவர் எல்லா அரசியல் அதிகாரமும் தன் கையில் வர வேண்டும் என்று விரும்பினார். மங்கோலியர்கள் அப்பாஸிட்கள் வசமிருந்த பாக்தாதைக் கைப்பற்ற தங்களுக்கு சிரியா போருக்கு உதவ இரு இளவரசர்களுக்கும் உத்தரவிட்டார்கள். 1261 ல் கான்ஸ்டாண்டிநோபிளைக் வெற்றி கொண்டு மைக்கேல் பலாயோலோகோஸ் என்பவர் பைஸாந்திய பேரரசின் மன்னரானார். இதனால் ஆர்வம் கொண்ட இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸும், மந்திரி மொய்னுத்தீன் சுலைமானும் உடனே கிரீமியா சென்று மைக்கேல் பலாயோலோகோஸிடம் மங்கோலியர்களுக்கு எதிராக போரிட ஒத்துழைப்பைக் கேட்டனர். இது இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸுக்கு எதிர்விளைவை ஏற்படுத்தியது. மைக்கேல் பலாயோலோகோஸ் இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸை சிறைப்படுத்தி 1278 ல் தூக்கிலிட்டுக் கொன்றார். தற்போது நான்காம் கிலிக் அர்சலன் மொத்த செல்ஜுக்குகளின் பேரரசுக்கும் ஆட்சியாளரானார். மந்திரி மொய்னுத்தீன் சுலைமான் உயர் பதவியாக சுல்தானின் அதிகார ஆலோசகராகவும், முதல் மந்திரியாகவும் அதிகாரம் பெற்றார். தூக்கிலிடப்பட்ட இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸின் மந்திரி சாஹிப் அடா எவ்வளவோ முயன்றும் தன் முந்தைய பதவியைப் பெற முடியாமல் மொய்னுத்தீன் சுலைமானின் கீழ் பணி செய்தார்.
                                    பதவி வெறிபிடித்த மொய்னுத்தீன் சுலைமானால் நான்காம் கிலிக் அர்சலன் விருந்தொன்றில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார். ஆட்சி நான்காம் கிலிக் அர்சலனின் இளைய மகன் வசம் சென்றது. திட்டப்படி பேருக்கு மகன் மன்னனாய் இருந்தாலும் மொய்னுத்தீன் சுலைமான் தான் ஆட்சி செய்தார். மொய்னுத்தீன் சுலைமான் சினோப் என்ற பகுதியின் மீது படையெடுத்துக் கைப்பற்றினார். அதை தனக்கான சிறிய ஆட்சிப்பகுதியாக ஆக்கிக்கொண்டார். தனது மூன்று வயது மகனை அந்த பகுதிக்கு சுல்தானாக அறிவித்துக் கொண்டார் மேலும் தன் வளர்ச்சிக்காக விதவையான இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸின் மனைவியை மணந்து கொண்டார். அவர் சிறிய மகன் இரண்டாம் அலாவுத்தீன் கெய்குபாதின் ஆட்சிப் பொறுப்பாளாராக இருந்தார். அந்த கால கட்டத்தில் இவ்வளவு அரசியல் சிக்கல் இருந்தாலும் முன்னேற்றத்திலும் சிறிது கவனம் செலுத்தப்பட்டது. கொன்யா, கைசெரி மற்றும் அன்டால்யாவில் செல்ஜுக்குகளின் பெயர் சொல்லும் வண்ணம் நிறைய கட்டிடங்களைக் கட்டினார்கள். குறிப்பாக மந்திரி கரடாய், மந்திரி சாஹிப் அடா கட்டிய டோகட் பாலம், மேலும் அக், ஓப்ருக், ஹோரோஸ்லு, சரி, இசக்லி அரணமனைகள் புகழ் பெற்றவை.