திங்கள், 13 ஜூலை, 2015

அல்மொஹத்கள் வரலாறு 1

அல்மொஹத்கள் வரலாறு

கூ.செ. செய்யது முஹமது   
மொரோக்கோவைச் சேர்ந்த பெர்பெர் முஸ்லீம் ஆட்சியாளர்களால் 12 ம் நூற்றாண்டில் தோன்றியது அல்மொஹத் ஆட்சிவம்சம். இவ்வாட்சிவம்சம் ஆட்சியாளர்களை கலீஃபா என்று அழைத்தது. தென் மொரோக்கோவின் மஸ்முதா பழங்குடியினத்தைச் சேர்ந்த இப்ன் துமார்ட் என்பவர் பேரரசைத் தோற்றுவித்தார். இவரின் முழுப்பெயர் அபு அப்த் அல்லாஹ் முஹம்மது இப்ன் துமார்ட் ஆகும். மஸ்முதா பழங்குடியினரின் மதபோதகராக இருந்த இப்ன் துமார்ட் அருகாமை ஆட்சியாளர்களாக இருந்த அல்மொராவிட்களை எதிர்த்து அடிக்கடி கலவரங்கள் நடத்தினார். இவர் தோராயமாக 1078 லிருந்து 1082 க்குள் சூயஸ் பள்ளத்தாக்கில் இகிலிஸ் கிராமத்தில் பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் தந்தை மஸ்ஜிதில் தினசரி விளக்கு ஏற்றுபவராக இருந்தார். இப்ன் துமார்ட் தான் முஹம்மது நபி (ஸல்) களின் வழிவந்தவர் என்று சொன்னார். 8 ம் நூற்றாண்டில் நபி (ஸல்) களாரின் ஒரு பேரர் அகதியாக மொரோக்கோ வந்தார். அவர் வழிமுறையில் தோன்றியவர்கள் என்றார். இதை இப்ன் கல்தூன் ஆதரித்தார். ஆனால் சிலர் அக்காலகட்டத்தில் ஆதாயம் பெறுவதற்காக நிறைய தலைவர்கள் தாங்கள் நபி வழி வந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள் என்று கருத்து வெளியிட்டார்கள். இப்ன் துமார்ட் பாக்தாத் சென்று அஷ்அரிட் என்ற பள்ளியில் மதம் சார்ந்த கல்வியைக் கற்றார். இமாம் கஸ்ஸாலி (ரஹ்) யிடமிருந்து சூஃபி ஷரீய சிறப்பு இஸ்லாமிய பயிற்சியும் பெற்றார். இமாம் அவர்களின் சிறப்பான புத்தகமான “இஹ்யா உலூம் அல் தீன்” என்ற புத்தகத்தை சுன்னிப்பிரிவு வழியில் வந்த அல்மொராவிட்கள் பொதுவில் வைத்து தீயிட்டார்கள். இமாம் அவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த இப்ன் துமார்டையே தலைவராக இருந்து அல்மொராவிட்களை எதிர்க்கச் சொன்னார்கள். இப்ன் துமார்ட் முதலில் அல்மொராவிட்களின் மாலிகி மதபின் வழி பள்ளிக் கூடங்களை எதிர்த்தார். மது, பன்றிக்கறிகளை பொதுவில் வைத்து விற்பனை செய்வதையும் எதிர்த்தார். மசூதிகளிலிருந்த மற்ற இஸ்லாமிய வழிமுறையினர்களின் அடையாளங்களை மறைத்தும், அழித்தும் வந்த அல்மொராவிட்களை எதிர்த்தார். இதை அவர் முழுவீச்சில் செய்ததால் தன் பகுதி மக்களை ஒன்றினைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இப்ன் துமார்ட்டின் வழியைப் பின்பற்றியவர்கள் “அல் முவ்வாஹிதூன்” என்று அழைத்துக் கொண்டார்கள்.
பாக்தாதில் கல்வியை முடித்துக் கொண்டு புனித மக்கா பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால் அதற்கு ஈடாக தன் மக்களை நேர்வழியில் கொண்டு வந்து விட்டு பிறகு பயணம் போகலாம் என்று தங்கள் பகுதிக்கு வந்தார். இவரால் தொல்லை என்று அல்மொராவிட்கள் இவரைத் துரத்தினார்கள். அங்கிருந்து கெய்ரோ, அலெக்ஸாண்டிரியா சென்றவர் 1117 ல் மக்ரெப் திரும்ப கப்பல் ஏறினார். அக்கப்பலிலிருந்த மதுவைக் கொட்டி, கப்பல் பணியாளர்களை நேரத்திற்கு தொழும்படியும், மேலும் மதரீதியான பிரச்சாரத்தையும் செய்தார். இதனால் ஆத்திரமுற்ற கப்பல் பணியாளர்கள் இப்ன் துமார்ட்டைக் கடலில் தூக்கி எறிந்தனர். அரைநாள் கடலில் மிதந்த இப்ன் துமார்ட்டை பின்னர் தூக்கிப்போட்டவர்களே கப்பலில் ஏற்றிக்கொண்டார்கள். பின்னர் மஹ்தியா, துனீஸ் மற்றும் பெஜாயா ஆகிய இடங்களுக்குச் சென்று தீவிர மதப்பிரச்சாரம் செய்தார். மதுஅருந்துவது, இசைப்பது, பெண்கள் பர்தா அணியாமல் ஆண்களுடன் ஒன்றாக நடமாடுவது ஆகியவற்றை எல்லாம் எதிர்த்து பிரச்சாரம் செய்தார். அல்மொராவிட்களின் காதுகளுக்கு இது எட்டியது. அவர்கள் இவரை நகரம் நகரமாக துரத்தினார்கள். இறுதியில் 1119 ல் மெல்லாலா என்ற தென்பகுதிக்கு வந்தார். அங்கு இப்ன் துமார்ட்டுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவாளர்கள் திரண்டார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் தலைமைப்பதவிக்கு வந்த அல் பஷீர், ஸெனாடா பெர்பெர்களின் மதபோதகர் அப்த் அல் முஃமீன், பின்னாளில் அல்மொஹதுகளைப் பற்றி “கிதாப் அல் அன்சாப்” என்ற புத்தகத்தை எழுதிய அபு பக்ர் முஹம்மது அல் பைதக் ஆகியோர் முக்கியமானவர்கள். நாளடைவில் இவர்கள் இப்ன் துமார்ட் தலைமையில் அரசியல் நடவடிக்கையில் இறங்கினார்கள்.
1120 ல் இப்ன் துமார்ட் சிறிய குழுவுடன் மொரோக்கோவின் மேற்கு பகுதிகளுக்குச் சென்றார். ஃபெஸ் நகரத்தில் இவரை தடுத்த மாலிகி மதபைச் சேர்ந்தவர்கள் இவர் சார்ந்த ஷியா பிரிவு கொள்கைகளை விளக்கச் சொன்னார்கள். அதில் திருப்தி அடையாத ஃபெஸ் நகர உலமாக்கள் அவரை நகரை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டார்கள். பின்னர் இப்ன் துமார்ட் மனம் தளராமல் நகரநகரமாக சுற்றி தீன் பணியாற்றினார். பூ ரிக்ரிக் என்ற பகுதிக்குச் செல்ல படகு பயணத்திற்கு அனுமதிக்காததால், தன் ஆதரவாளர்களுடன் நீந்தியே சென்றார். விரைவில் மர்ரகெஷ் திரும்பிய இப்ன் துமார்ட் உள்ளூர் மஸ்ஜித் ஒன்றில் அல்மொராவிட்டின் ஆட்சியாளர் அலி இப்ன் யூசுஃபைச் சந்தித்தார். மன்னரை அறிமுகப்படுத்தியவர்களிடம் இப்ன் துமார்ட் எங்கே மன்னர் நான் ஒரு பெண்ணைத்தான் பார்க்கிறேன் என்று மன்னரை அவமானப்படுத்தினார். காரணம் பத்து மீட்டர் துணியை தலைப்பாகை போல் சுருட்டி பின் அதை முகத்தைச் சுற்றி கண்கள் மட்டும் திறந்திருக்க மூடிக்கொள்வார்கள். அப்படிப்பட்ட தலைப்பாகையை அல்மொராவிட் ஆட்சியாளர் அணிந்திருந்ததால் இப்ன் துமார்ட் கேட்டார். (இப்போது அனைத்து போராளி இயக்கங்களும் இப்படித்தான் அணிகிறார்கள்) சிலர் உடனிருந்த ஆட்சியாளரின் சகோதரி முக்காடு அணிந்து மூடாததால் இப்ன் துமார்ட் அவரை அடித்தார் என்றார்கள். உடனிருந்த அலி இப்ன் யூசுஃபின் மதபோதகர்களுக்கும், இப்ன் துமார்ட்டுக்கும் இடையே இஸ்லாத்தைப்பற்றி நீண்ட விவாதம் நடந்தது. மன்னரின் மதபோதகர்கள் இப்ன் துமார்ட்டை கொன்றுவிட அறிவுறுத்தினார்கள். ஆனால், அலி இப்ன் யூசுஃப், பதினான்கு சவுக்கடி கொடுத்து அவரை நகரை விட்டுத் துரத்துமாறு உத்தரவிட்டார். பின்னர் அங்கிருந்து அக்மட்டுக்கு வந்த இப்ன் துமார்ட் சாலையில் போக வருபவர்களைப் பிடித்து உடைகளை அப்படி அணியாதே, இப்படிப் பேசாதே என்று கூறி சந்தையில் விற்பனைக்கு வைத்திருந்த மது வகைகளைக் கீழே கொட்டினார். இதனால் ஆத்திரமடைந்த அம்மக்கள் மன்னரிடம் முறையிட்டார்கள். அவர் இப்ன் துமார்ட்டை சிறையிலடைக்க உத்தரவிட்டார். சரியான நேரத்திற்கு மஸ்முதாவைச் சேர்ந்த ஹஸ்ரஜா பழங்குடியின தலைவர் அபு இப்ராஹீம் இஸ்மாயில் இப்ன் யஸல்லாலி அல் ஹஸ்ரஜி வந்து இப்ன் துமார்ட்டைக் காப்பாற்றி நகருக்கு வெளியே விட்டார். பின் சூஸ் பள்ளத்தாக்கிலுள்ள தன் மக்களிடம் வந்து பதுங்கிக் கொண்டார்.
அங்கிருந்த குகையில் நீண்ட நாட்கள் இருந்த இப்ன் துமார்ட்டிடம் ஏதோ கண்ணுக்குத் தெரியாத சக்தி இருப்பதாகவும், அவர் ஒரு புனித மனிதர் என்று பேச ஆரம்பித்தார்கள். எவ்வளவு முயன்றும் அல்மொராவிட் மதபோதகர்களைத் திருப்திபடுத்த முடியாத நிலையில் ஒருநாள் தானே ஒரு மெஹ்தி என்று சொல்ல ஆரம்பித்தார். இதனால் ஆட்சியாளர்களுக்கு எதிராக போர் அறிவித்தது போல் உணர்ந்தார்கள். பொதுவாகவே சூஸ் பள்ளத்தாக்கைச் சுற்றி இருந்தவர்கள் ஃபாத்திமிட்களின் ஷியா கொள்கை உடையவர்களாகவே இருந்தார்கள். இப்ன் துமார்ட்டைக் காப்பாற்ற ஹிண்ட்டா என்ற பழங்குடி தலைவர் ஒமர் ஹிண்டடி உயர்வான தங்கள் மலைப்பகுதிக்கு கூட்டிச் சென்றார். அங்கிருந்தபடி தன் ஆதரவாளர்களைத் திரட்டி அல்மொராவிட்களுக்கு எதிராக புரட்சி செய்து ரிபாத்தில் டின்மெல் என்ற பகுதியைக் கைப்பற்றினார். அங்கிருந்த கோட்டையை மதப்பிரச்சாரத்திற்கும், இராணுவப்பயிற்சிக்கும் பயன்படுத்தினார். அங்கிருந்தபடி தன் ஆதரவாளர்களுக்கு பல புத்தகங்களை எழுதினார். (பின்னால் வந்த அல்மொஹத் கலீஃபா யூசுஃப் இப்ன் அப்த் அல் மஃமூனால பாதுகாக்கப்பட்டு 1903 ல் ஃப்ரென்ச் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது.) மஸ்முதாவைச் சேர்ந்த ஹர்கா, கன்ஃபிசா, கட்மிவா, ஹின்டடா, ஹஸ்குரா மற்றும் ஹஸ்ரஜா அகிய பழங்குடி இனங்கள் ஒன்று சேர்ந்தன. எட்டு ஆண்டுகள் இடைவிடாத பல சண்டைகளால் அல்மொராவிட் ஆட்சியாளர்களின் அதிகாரம் முற்றிலும் மஸ்முதா மலைப்பகுதிகளில் தடைபட்டது. மேலும் முக்கியபகுதியான மர்ரகெஷ்-ட்ரா பள்ளத்தாக்கின் இடையே உள்ள அவ்கிரா மற்றும் டிஸி நி டிச்கா பகுதிகள் மிரட்டலாகிப் போகின. அந்த வழி ஒன்றுதான் பல நகரங்களை வியாபார ரீதியாக இணைத்தது. 1130 ல் முதல் முறையாக மலையைவிட்டு கீழே இறங்கிய அல்மொஹத்கள் அக்மத் பகுதியைத் தாக்கினார்கள். அல்மொராவிட் ஆட்சியாளர் அலி இப்ன் யூசுஃப் மொரோக்கோவின் மற்ற பகுதிகளிலிருந்த படைகளையும் அழைத்து புஹைரா போரில் பெரும் சண்டையிட்டு ஏறக்குறைய அல்மொஹத்களின் 12,000 கொன்று போட்டார். இதில் அல் பஷீர் போன்ற முக்கிய நபர்கள் அல்மொஹத்களின் பக்கம் கொல்லப்பட்டனர். அவர்களின் அதிர்ஷ்டம் அனைவரும் கொல்லப்படுமுன் பெரு மழைவந்து மிச்சமிருந்தவர்கள் மலைகளில் ஏறித் தப்பித்தார்கள். புஹைரா போருக்குப் பிறகு இப்ன் துமார்ட் 1132 ல் இறந்து போனார். போரில் பல பழங்குடியின தலைவர்களும் இறந்து போனார்கள். இப்ன் துமார்ட்டுக்குப் பிறகு அப்த் அல் முஃமீன் அல் கௌமி என்பவர் தலைமை இடத்திற்கு வந்தார்.
அப்த் அல் முஃமீன் லெம்சென் பகுதியில் டக்ரா என்ற இடத்தில் பிறந்தவர். பெரிய பழங்குடியான பெர்பெர் ஸெனடாவின் கௌமியா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். சில ஆராய்ச்சியாளர்கள் இவர் இப்ன் கல்தூனின் பரம்பரை வழியைச் சேர்ந்தவர் என்றார்கள். இளம்வயதில் லெம்சென் சென்று இஸ்லாமிய சட்டமான ஃபிக் கல்வி பயின்றார். கல்வி முடியுமுன் இவரின் ஆசிரியர் இறந்து போக இப்ன் துமார்ட்டிடம் சேர்ந்தார். இப்ன் துமார்ட் சொந்த ஊரான டின்மெல்லுக்குச் செல்லும் வழியில் அவரை சந்தித்த அப்த் அல் முஃமீன் தங்கள் பகுதியில் லெம்சென்னில் தங்கும்படி அழைத்தார். இப்ன் துமார்ட் சம்மதித்து தங்கிய பிறகு, அங்கிருந்து இருவரும் மொரோக்கோ பயணித்தார்கள். இப்ன் துமார்ட்டும், இரண்டாம் மட்ட தலைவருமான அல் பஷீரும் இறந்த பின், அவர் துவக்கிய அல்மொஹ்த்களுக்கு அப்த் அல் முஃமீன் தலைவரானார். அப்போது நடந்து முடிந்த புஹைரா போரில் பெரும் இழப்பைச் சந்தித்திருந்த அல்மொஹத்கள் இப்ன் துமார்ட் இறப்பை மூன்று ஆண்டுகளுக்கு மறைத்து வைத்தார்கள். அப்த் அல் முஃமீன் வெளிப்புற பழங்குடி இனத்தவராதலால் இப்ன் துமார்டின் மஸ்முதா இனத்தவர்கள் தன்னை ஆதரிப்பார்களா என்று சிறிது அச்சப்பட்டார். நாளடைவில் மஸ்முதா கூட்டத்துப் பெண்ணையே மணந்தார். முதலில் சேதத்திலிருந்து வெளிவர பலம் வாய்ந்த படை ஒன்றை அமைத்தார். அடிக்கடி மலையை விட்டு கீழே வந்து படிப்படியாக அல்மொராவிட் ஆட்சியாளர்களை எதிர்த்தார். முதலில் அட்லாஸ் மலைப்பகுதி முழுவதையும் வென்றார். பின் லெம்சென், ரிஃப் பகுதியைக் கைப்பற்றினார். மிகச்சரியாக திட்டமிட்டு 1147 ல் மர்ரகெஷ்ஷைப் பிடித்தார். பின்னால் ஆட்சி கை நழுவும் வண்ணம் எதுவும் புரட்சி வருமோ என்று உடனடியாக 30,000 அல்மொராவிட்களை கொன்றார். முதல் முறையாக மொரோக்கோவில் அல்மொஹத்களின் ஆட்சியை ஏற்படுத்தினார். மர்ரகெஷ்ஷை தலைநகரமாக்கினார்.

அல்மொஹத்கள் வரலாறு 2


சேதமான அரண்மனை, மஸ்ஜித்களைப் புதுப்பித்து தன் எல்லையை மொரோக்கோவின் கிழக்கில் எகிப்து எல்லைவரை நீட்டித்தார். 1151 ல் அரபு பழங்குடியினர்களின் துணையுடன் கான்ஸ்டண்டைன் பகுதியை வென்றார்.  1158 ல் துனீஷியா மற்றும் ட்ரிபோலோடானியா ஆகியவற்றை வென்றார். செல்லா என்ற பகுதியில் கோட்டையைக் கட்டினார். அது ஐபீரியாவை எதிர்க்க தளமாக அமைந்தது. வாழ்க்கையின் கடைசியில் அல் அண்டலூசில் படையெடுத்தார். நிர்வாகத்தை பழைய பெர்பெர் பழங்குடியினத்தவருக்கு ஏற்றவகையில் அமைத்தார். அல்மொஹத் ஆட்சியை மத்திய ஆட்சியாக அமைத்து அதற்கு ஸ்பானிஷ் முஸ்லீம்களை நிர்வாகம் செய்யச் சொன்னார். கலைகளில் ஆர்வமிருந்தாலும் அரசை நிர்மாணிக்க உதவியர்களுக்காக பல மசூதிகளைக் கட்டினார். நிலப்பதிவு சட்டம் கொண்டு வந்து வருவாயைப் பெருக்கினார். 1163 ல் அப்த் அல் முஃமீன் இறந்த பிறகு அவர் மகன் அபு யஃகூப் யூசுப் ஆட்சிக்கு வந்தார். இவர் ஸஹீரிஸ்ட் என்னும் மதச்சட்டங்களைப் படித்தவர். மதபோதகராகவும் இருந்தார். சஹீஹ் புகாரி, சஹீஹ் முஸ்லீம் என்ற இரு ஹதீஸ் புத்தகங்களையும் அதிகார எண் உட்பட மனப்பாடம் செய்திருந்தார். மதிப்பு வாய்ந்த இப்ன் ருஷ்த், இப்ன் துஃபைல் ஆகியோர் இவரின் தர்பாருக்கு கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். இவர் சுன்னிப்பிரிவை ஆதரித்தார். 1170 ல் ஐபீரியாவை ஆக்கிரமித்தார். அல் அண்டலூசை வெற்றி கொண்டார். வாலென்ஷியா மற்றும் கடலோனியாவை அழித்தார். அபு யஃகூப் யூசுப் காடல்க்யூவில் ஆற்றின் பகுதியிலிருந்த செவில்லி என்ற நகரத்தை சீரமைத்தார். அங்கு பல கட்டிடங்களைக் கட்டினார். குறிப்பாக அல்காஸர் அரண்மனை மிகவும் புகழ் பெற்றது. பின்னாளில் கிறிஸ்தவர்கள் தாங்களே கட்டியது போல் இந்த அரண்மனையில் இவர் பிறந்தார், அவர் இதைச் செய்தார் என்று புகழ் பாடினார்கள். மேலும் புஹைரா அரண்மனை, அல்கலா டி க்வாடைரா என்ற புகழ் பெற்ற கோட்டையையும் கட்டினார். அபு யஃகூப் யூசுப் போர்ச்சுகலின் முதலாம் அல்ஃபோன்சாவுடன் சாண்டரீம் போரில் சண்டையிட்டு இறந்து போனார். அவர் உடல் டின்மெல் கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இவருக்குப் பின் இவர் மகன் அபு யூசுப் யாஃகூப் அல் மன்சூர் ஆட்சிக்கு வந்தார்.
தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்குவேன் என்றார். ஆனால், எஞ்சியிருந்த சில முன்னாள் ஆட்சியாளர்களான அல்மொராவிட்களுடனான சண்டையில் ஈடுபட்டார். பின் ஐபீரிய தீபகற்பத்தில் தந்தைக்காக பழிவாங்கச் சென்றார். 1190 ல் டோமரில் நடந்த போரில் போர்ச்சுகீசியர்களால் தோற்கடிக்கப்பட்டார். 1191 ல் மேலும் தென்பகுதிக்கு முன்னேறி 1182 லிருந்து போர்ச்சுகீசிய மன்னன் முதலாம் சான்சோவின் கட்டுப்பாட்டிலிருந்த பாடர்னி அரண்மனைக் கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள அல்கார்வி பகுதிகளை வென்றார். வரும்போது 3000 கிறிஸ்தவ படைகளைப் பிடித்து வந்தார். யாஃகூப் அல் மன்சூர் ஆப்பிரிக்கா திரும்பியவுடன் கிறிஸ்தவர்கள் மீண்டும் ஐபீரிய தீபகற்பம் வந்து மூரீஷ் நகரங்களையும், சில்வெஸ், வெரா, பெஜா ஆகியவற்றைக் கைப்பற்றினார்கள். இதைக் கேள்விப்பட்ட யாஃகூப் அல் மன்சூர் மீண்டும் ஐபீரியா சென்று பழையபடி கிறிஸ்தவர்களை வென்று பிடிபட்டவர்களை 50 பேர் கொண்ட குழுவாக சங்கிலியால் பிணைத்து ஆப்பிரிக்காவின் அடிமைச் சந்தையில் விற்றார். அவர் ஆப்பிரிக்காவில் இருக்கிறார் என்று கேள்விப்பட்ட கிறிஸ்தவர்கள் 300,000 பேர் கொண்ட பெரும் படையுடன் வந்தார்கள். உடனடியாக செய்தி யாஃகூப் அல் மன்சூருக்குத் தெரிவிக்கப்பட 1195 ல் காஸ்டிலியன் மன்னன் எட்டாம் அல்ஃபோன்சாவை எதிர்த்து வென்றார். இப்போரில் 150,000 வீரர்கள் கிறிஸ்தவர்கள் அணியில் இறந்து போனார்கள். பல மதிப்புமிக்க பொருள்கள், பணம் என்று பிரமாண்டமாக யாஃகூப் அல் மன்சூர் இந்தப் போரில் கைப்பற்றினார். இதனால் அவரை “அல் மன்சூர் பில்லாஹ்” என்று அழைத்தார்கள்.
யாஃகூப் அல் மன்சூர் பல கட்டிடங்களைக் கட்டினார். மர்ரகெஷ்ஷில் கௌடௌபியா மற்றும் எல் மன்சௌரியா மஸ்ஜித்களைக் கட்டினார். கஸ்பாஹ் ஆஃப் உதயாஸ் என்னும் அரண்மனையையும், மர்ரகெஷ் நகரத்தின் 19 கதவுகளில் இரண்டான பாப் அக்னாஓ மற்றும் பாப் சிபா ஆகியவற்றையும் கட்டினார். இக்கதவுகள் மதீனா நகர் செல்ல தென்பகுதி வாசலாக இருந்ததால் வரிவசூலித்து வருவாயைத் தந்தது. உலகின் மிகப்பெரிய மசூதியை ரபாத்தில் கட்ட முடிவு செய்தார். ஆனால் இவர் இறந்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட மசூதி மட்டும் ஹசன் கோபுரத்துடன் கட்டப்பட்டது. சற்று இந்த கட்டிடங்களைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். கௌடௌபியா என்பது அவர்களின் பழங்குடி பெர்பெர் மொழியில் சொல்லப்பட்டது. உண்மையில் அது குதூபியா மஸ்ஜித் ஆகும். மர்ரகெஷின் மிகப்பெரிய மஸ்ஜித் இதுதான். மதீனாவின் தென்மேற்கைப் பார்த்தால் போல் கட்டப்பட்டது. மர்ரகெஷ் ஃப்ரான்சின் ஆதிக்கத்திலிருந்த போது இந்த மஸ்ஜிதை நோக்கி பல சாலைகளை அமைத்ததால் மேலும் புகழ் பெற்றது. குதூபியா மஸ்ஜித் நான்காம் முஹம்மதுவின் குடியிருப்புப் பகுதியில் கட்டப்பட்டது. இதன் வளாகத்தின் தெற்கிலும், மேற்கிலும் ரோஜாத் தோட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டு, ஒருபுறம் யூசுஃப் இப்ன் தஷ்ஃபினின் நினைவு மண்டபமும் உள்ளது. இம்மஸ்ஜிதின் வளாகத்தின் முன்பு ஏறக்குறைய 100 புத்தகக்கடைகள் உள்ளன. 1147 லிருந்து 1154 வரை மஸ்ஜித் கட்டப்பட்டு, 1157 ல் மற்ற பணிகளுடன் முடிக்கப்பட்டது. இதன் தொழுகை இடம் மக்காவை சரியாக நேர்நோக்காததால் 12 ம் நூற்றாண்டில் பலமுறை மாற்றம் செய்யப்பட்டது. முதல்முறை 5 டிகிரி அதிகமாக மக்கா நகரிலிருந்து திசைமாறியும், இரண்டாவதுமுறை 10 டிகிரி எதிர்திசையில் குறைந்தது. குதூபியா மஸ்ஜிதின் அனைத்து பகுதிகளும் ஒரே மாதிரி வடிவமைப்பில் இருக்கும். பின் இரண்டாவது மஸ்ஜித் கட்டப்பட்டது.
குதூபியா மஸ்ஜிதை அழகுபடுத்த அண்டலூசியாவின் மூர்கள் வரவழைக்கப்பட்டார்கள். யூசுஃப் இப்ன் தஷ்ஃபின் அப்பகுதியில் ஒரு கோட்டை கட்டி இருந்தார். நகரை விரிவுபடுத்தும் போது அதை இடித்தார்கள். இதேமாதிரி தோற்றம் கொண்ட மஸ்ஜிதை ரபாத்திலும், ஸ்பெயினின் கிரால்டாவிலும் பிற்காலத்தில் கட்டினார்கள். இது முழுக்க செந்நிற கற்களால் கட்டப்பட்டு மேலே வர்ணம் அடிக்கப்பட்டது. உச்சியின் மேல் கூம்பு செம்பினால் ஆனது. 80 மீட்டர் அகலமும், 60 மீட்டர் நீளமும் கொண்டது இந்த மஸ்ஜித். வெளிப்புறம் சுற்றிலும் நான்கு திசை சுவர்களும் மணற்கற்களால் ஆனது. அனைத்து ஜன்னல்களும் குதிரையின் கால்குளம்பு போல் அமைக்கப்பட்டிருந்தன. இதன் நான்கு வாசல்களில் மூன்று நேரடியாக தொழுகைப் பகுதிக்கு செல்லும், ஒரு வாசல் முற்றத்திற்கு செல்லும், முற்றத்தில் பெரிய குளம் தொழுகைத்தூய்மை செய்வதற்காக அமைக்கப்பட்டது. இதல்லாமல் இரண்டு சிறப்பு வாசல்கள் ஒன்று இமாம் அறையிலிருந்து நேரடியாக மிம்பர் பகுதிக்குச் செல்ல, மற்றொன்று மன்னர்கள் நேரடியாக அவர்கள் தொழும் திரையிட்ட பகுதிக்குச் செல்ல. மேலிருந்து பார்த்தால் குதூபியா மஸ்ஜித் குதிரையின் கால்குளம்பு போல் தெரியும். 100 தூண்கள் கீழே மொத்த மஸ்ஜிதையும் தாங்கி நிற்கும்.
அடுத்து கஸ்பாஹ் ஆஃப் உதயா என்பது இப்ன் துமார்ட் அவர்களின் நினைவாக அல் மஹ்திய்யா என்று அழைக்கப்பட்டது. அல்மொராவிட்களுடன் நடந்த போரில் இந்த பகுதி அல்மொஹத்களாலேயே சிதிலமடைந்தது. இந்த கஸ்பாஹ் ஆஃப் உதயா மஸ்ஜிதுடன் கூடிய அரண்மனையைக் கொண்டது. யாஃகூப் அல் மன்சூர் இறந்த பிறகு கஸ்பா பாலைவனமானது. பாப் அக்னாஓ என்ற நகர்கதவு மன்னர்கள் நுழைவதற்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டது. அக்னாஓ என்பதின் நாவோவா என்ற சொல் பெர்பெர் மொழியில் கருப்பின மக்கள் என்று குறிக்கும். இதன் முகப்பு கற்களால் ஆனது. சுற்றிலும் உள்ள சுவர்களின் செங்கற்கள் குதிரையின் குளம்பு போல் தோற்றம் தரும். இதன் கதவுகளில் மூன்று பட்டிகள் அமைக்கப்பட்டு அதில் திருக்குரான் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 18 ம் நூற்றாண்டில் வந்த சுல்தான் முஹம்மது பென் அப்துல்லாஹ்வால் இதன் நுழைவு வாயில் சிறிதாக்கப்பட்டது. பாப் சிபா இதுவும் மர்ரகெஷ் நகரின் 19 கதவுகளில் ஒன்று. சிபா என்றால் சிறிய கோட்டை என்று பொருள். இந்த கதவின் அருகில் உலகின் மிகவும் பழைமையான யூகலிப்டஸ் மரம் உள்ளது. மதீனா நகரின் தென்பகுதியான கஸ்பா மாகாணத்தை அடைய இந்த கதவுகள் வழியாகத் தான் மொரோக்கோவிலிருந்து கடக்க வேண்டும். மொரோக்கோ சுல்தான்களின் முதல் அரண்மனை இங்குதான் கட்டப்பட்டது. யுனெஸ்கோ (UNESCO) இந்த பாப் சிபா கதவை பாரம்பரிய இடமாக அறிவித்துள்ளது. சுற்றுலா செல்பவர்களுக்கு தங்கும் வசதியுடன் கூடிய ஸ்தலமாக இருக்கிறது. 1199 ல் யாஃகூப் அல் மன்சூர் இறந்து போனார்.
அவருக்குப் பிறகு, அவர் மகன் முஹம்மது அல் நாசிர் ஆட்சிக்கு வந்தார். இவர் வந்த போது ஏற்கனவே தந்தையால் கிறிஸ்தவர்கள் எதிர்க்கப்பட்டு நிலைமை பதட்டமாக இருந்தது. பனூ கனியா என்ற கூட்டத்தினர் துனீஷியாவின் இஃப்ரிகியாவைக் கைப்பற்ற படையெடுத்தார்கள். அதை முறியடித்த முஹம்மது அல் நாசிர் இஃப்ரிகியாவுக்கு அபு முஹம்மது இப்ன் அபி ஹஃப்ஸ் என்பவரை கவர்னராக்கி ஹஃப்சிட் பேரரசு என்று ஒன்றை தோன்றச் செய்தார். போப் மூன்றாம் இன்னோசெண்ட் அனுப்பிய சிலுவைப்படைகளிடம் லாஸ் நவாஸ் டி டோலோசா போரில் தோல்வி அடைந்தார். 13 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்து மன்னன் ஜானுக்கும், போப் மூன்றாம் இன்னோசெண்டுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வாய்த்தகராறாக மாறியது. அப்போது ஜான், தனக்கு உதவுமாறு முஹம்மது அல் நாசிரிடம் கெஞ்சியதாகவும், பதிலுக்கு ஜான் இஸ்லாம் மதம் மாறி, இங்கிலாந்தையும் இஸ்லாமிய நாடாக அறிவிப்பதாகவும் வேண்ட அதற்கு அல் நாசிர் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் ஒரு வரலாறு உள்ளது. முஹம்மது அல் நாசிர் 1213 ல் இறந்து போனார். அடுத்து இவர் மகன் அபு யாஃகூப் யூசுஃப் அல் முஸ்தன்சிர் என்ற இரண்டாம் யூசுஃப் ஆட்சிக்கு வந்தார். தந்தை திடீரென்று இறந்ததால் அல்மொஹத்களின் ஷெய்குகள் கூடி உடனடியாக 10 வயதே ஆன இரண்டாம் யூசுஃப் ஆட்சியில் வைத்தார்கள். இவர் தாயார் ஒரு கிறிஸ்தவ அடிமைப் பெண்ணான கமர் என்பவர். இரண்டாம் யூசுஃப் கவனமாக திறமையாக தன் உறவினர்கள் அனைவரையும் அல்மொஹத் ஆட்சியின் நிர்வாகத்தில் வைத்தார். அல் அண்டலூசில் தந்தையின் சகோதரரையும், இன்னொரு உறவினரை இஃப்ரிகியாவிலும், மர்ரகெஷ் அரண்மனையில் வைசியர் அபு சாஃத் உதுமான் இப்ன் ஜமிஃஇ யையும் பொறுப்பில் வைத்தார். இவரது ஆட்சியில் பல புரட்சிகள் வெடித்தன. இஃப்ரிகியா ஹஃப்சிட் பேரரசு என்று பிளவுபட்டது. 1224 ல் தனது வளர்ப்பு பசுவுடன் விளையாடிக் கொண்டிருந்த இரண்டாம் யூசுஃப் பசுவால் குத்திக் கிழிக்கப்பட்டு இறந்து போனார். உடனே வசிராய் இப்ன் ஜமிஃஇ முதலாம் அப்த் அல் வாஹித் என்பவரை கலீஃபாவாக தேர்ந்தெடுத்தார்.   அப்த் அல் வாஹித் முன்னாள் சிறப்பான ஆட்சியாளர் அபு யாஃகூப் யூசுஃபின் மகனும், கலீஃபா யாஃகூப் அல் மன்சூரின் இளைய சகோதரரும் ஆவார். முன்பு இவர் மாலகா பகுதியில் கவர்னராக இருந்தார். ஹஸ்குரா பழங்குடியினரின் ஷெய்க் ஆகவும் இருந்தார். மேலும் சில சமயம் சிஜில்மஸ்ஸா மற்றும் செவில்லியிலும் கவர்னராக இருந்தார். அறுபது வயதிற்கு மேல் ஆட்சிக்கு வந்தார். அப்த் அல் வாஹிதின் ஆட்சியை அல் அண்டலூஸ் பகுதிகளில் கவர்னர்களாக இருந்த அல் நாசிரின் சகோதரர்கள் எதிர்த்தார்கள். திறமையே இல்லாத அவர்கள் இரண்டாம் யூசுஃபின் ஆட்சியின் போது பல சலுகைகளை அனுபவித்து சுக வாழ்க்கை வாழ்ந்தார்கள். அதனால் அல்மொஹத்களின் ஆட்சி வழிமுறைக்கு அது ஒத்துவராது என்று முதல்முறையாக அல்மொஹத்களின் ஆட்சியில் கலீஃபா பதவிக்கு பிரச்சினையை உண்டு செய்தார்கள். 1224 ல் அப்த் அல் வாஹித் கொல்லப்பட்டார். பின் அல்மொஹத் ஷெய்குகள் அப்தல்லாஹ் அல் ஆதிலை ஆட்சிக்குத் தேர்ந்தெடுத்தார்கள்.

அல்மொராவிட்கள் வரலாறு

அல்மொராவிட்கள் வரலாறுகூ.செ. செய்யது முஹமது   
மொரோக்கோவில் 11 ம் நூற்றாண்டில் தோன்றிய பெர்பெர் இனத்தவர்களின் ஆட்சிவம்சம். அல்மொராவிட் என்பதற்கு கோட்டைக்காக போரிடும் ஒருவன் என்று பொருள். முன்ணனிக் கோட்டையான மொரோக்கோவின் ரிபாத் (ரபத்-ஒன்று கூடு) என்பதைக் குறிக்கும். சிலர் வஜ்ஜல் இப்ன் ஸல்வி என்பவர் ‘தார் அல் முரபதின்’ என்ற அமைப்பின் மூலம் தன் மாணவர் அப்த் அல்லாஹ் இப்ன் யாசீன் என்பவரை மேற்கு சஹாரா பகுதியில் வசித்த சன்ஹஜா பெர்பெர்களுக்கு இஸ்லாம் போதிக்கச் சென்றார். இந்த முரபதின் பெயரால் அவர்களுக்கு அல்மொராவிட் என்று பெயர் வந்தது என்றும் சொல்கிறார்கள். வட ஆப்பிரிகாவிலும் சேர்ந்த சில பகுதிகளைக் கொண்ட மக்ரெப் பகுதியைச் சேர்ந்த பெர்பெர் மக்கள் மூன்று முக்கிய கூட்டங்களாகக் கருதப்பட்டார்கள். மொரோக்கோவின் வடக்கிலிருந்தவர்கள் ஸினாடா என்றும், மத்தியில் இருந்தவர்கள் மஸ்முதா என்றும், இரண்டு பகுதிகளையும் சேர்ந்தவர்கள் சன் ஹாஜா என்றும் அழைக்கப்பட்டார்கள். சஹாராவின் மேற்குப்பகுதி மக்ரெப்பின் கிழக்குப்பகுதியாகும். கிழக்கு சன்ஹாராவில் குதாமா பெர்பெர்கள் என்று இருந்த கூட்டம் ஃபாத்திமிட்கள் சார்ந்த ஸிரிட் ஆட்சிவம்சம் என்று 10 ம் இஃப்ரிகியாவில் ஆரம்பித்து எகிப்து வரை பரவியது. அல்மொராவிட்களின் பூர்வீகம் பற்றி அறிந்தால் தலை சுற்றிப் போக்கும் பல இன மக்கள், பல மதத்தலைவர்கள், பல இடங்கள், பல பகுதிகள 5 நூற்றாண்டுகளாகச் சுற்றிச் சுற்றி வரும் புரிந்து கொள்வது கடினம். அதனால் நாம் நேரடியாக ஆட்சியாளர்கள் வரலாறைப் பார்ப்போம். யஹ்யா இப்ன் உமர் என்பவரும், அப்தல்லாஹ் இப்ன் யாசீன் என்பவரும் சேர்ந்து தங்களை அல்மொராவிட்கள் (அல் முரபிதின்) என்று அழைத்துக் கொண்டார்கள்.
அப்தல்லாஹ் இப்ன் யாசீன் மொரோக்கோவின் ரோம்மனி என்ற இடத்தில் பிறந்தவர். சிறந்த மதபோதகராக இருந்து, அல்மொராவிட் ஆட்சிவம்சத்தை தோற்றுவித்தார். சூஸ் என்னும் பழங்குடி இனத்தின் உட்பிரிவான சன்ஹஜாவின் ஜஸூலாஹ் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமின் நான்கு மதபுகளில் ஒன்றான மாலிகி பிரிவைச் சேர்ந்தவர். ரிபாத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வக்காக் இப்ன் ஸல்லு அல் லம்தி என்ற மாலிகி பிரிவு போதகரின் மாணவர். ரிபாத்தில் அக்லூ என்ற கிராமத்தில்(தற்போது இது டிஸ்நிட் நகரமாகும்) ‘தார் அல் முராபிதின்’ என்ற அமைப்பு இருந்தது. 1046 ல் மாரிடானியாவின் பகுதியிலிருந்து குடாலா மக்களின் தலைவர் யஹ்யா இப்ன் இப்ராஹீம் என்பவர் ரிபாத்தின் தார் அல் முராபத்தினை அணுகி, வக்காக் இப்ன் ஸல்லூவிடம் தங்கள் பெர்பெர் பகுதிக்கு வந்து இஸ்லாமைப் போதிக்குமாறு அழைத்தார். வக்காக், அப்தல்லாஹ் இப்ன் யாசீனை அவருடன் அனுப்பினார். அம்மக்களிடம் இஸ்லாம் தாறுமாறாக கடைபிடிக்கப்பட்டிருந்ததை அப்தல்லாஹ் இப்ன் யாசீன் ஒழுங்குபடுத்தி ‘சுன்னிப்பிரிவு’ வழியில் கொண்டு வந்தார். இதற்கிடையில் குடாலா மக்கள் பகுதியில் கலவரம் நடக்க தன் ஆதரவாளர்களை பிரித்து, லம்தூனா பழங்குடியினரின் தலைவராக இருந்த யஹ்யா இப்ன் உமருடன் இணைந்து கலவரத்தை அடக்கினார். பின்னர் அப்தல்லாஹ் இப்ன் யாசீன் குடாலா மற்றும் லம்தூனா மக்களை இணைத்து ஒரு படை உருவாக்கி அதற்கு யஹ்யா இப்ன் உமரை இராணுவத் தளபதி ஆக்கினார். 1054 ல் மக்ரவா வெற்றி கொள்ளப்பட்டது. அப்தல்லாஹ் இப்ன் யாசீன் மது, இசை ஆகியவற்றைத் தடை செய்தும், இஸ்லாமிய முறையில் அல்லாத வரிகளையும் தடை செய்தார். போரில் கிடைக்கும் பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கை தீனுக்காகச் செலவழித்தார். இந்த நடைமுறைகளை கடுமையாகக் கருதிய மக்கள் 1055 ல் கலவரத்தில் ஈடுபட்டார்கள். 1056 ல் குடாலா பகுதி கலவரத்தில் யஹ்யா இப்ன் உமர் கொல்லப்பட்டார். அப்தல்லாஹ் இப்ன் யாசீன் யஹ்யாவின் சகோதரர் அபு பக்ர் இப்ன் உமரை இராணுவத் தளபதி ஆக்கினார். அபு பக்ர் சிஜில்மஸா வை வெற்றி கொண்ட போதிலும் குடாலா மக்களை அல்மொராவிட்டின் கீழ் கொண்டுவர முடியவில்லை. 1057 ல் அபு பக்ர் சூஸ் மற்றும் அதன் தலைநகர் அக்மட்டை வெல்லச் சென்றார். 1059 ல் அட்லாண்டிக்கின் கடற்கரைப்பகுதியான பர்கவதாவில் போரிடச் சென்றபோது அப்தல்லாஹ் இப்ன் யாசீன் மரணமடைந்தார். இவருடைய சமாதி தென்ரபாத்தின் ரோம்மனிக்கருகில் உள்ளது. சமாதிக்கருகில் மஸ்ஜிதும், நினைவு தூணும் எழுப்பட்டு இன்றளவும் இருக்கிறது.
லம்துனா பழங்குடியின் தலைவரான யஹ்யா இப்ன் உமர், அப்துல்லாஹ் இப்ன் யாசீனின் துணையுடன் முதல் அல்மொராவிட்களின் எமிர் ஆனார். 9 ம் நூற்றாண்டில் சஹாரா பாலைவனத்தில் இருந்த பல பழங்குடியினர்கள் மத்தியில் சன்ஹஜா பிரிவைச் சேர்ந்த குடாலா மற்றும் லம்துனா பழங்குடிகள் இஸ்லாமை ஏற்றார்கள். இதனால் பழைய காட்டுமிராண்டித்தனமாக இருந்த சூடானியர்களுடன் அடிக்கடி சண்டை போட்டார்கள். சன்ஹாஜாக்கள் சஹாராவின் பல பகுதிகளைக் கைப்பற்றினார்கள். சில காலங்களில் சன்ஹாஜாக்களின் கூட்டு பிரிய ட்ரான்ஸ்-சஹாரா வாணிபவழி தடைப்பட்டது. அப்துல்லாஹ் இப்ன் யாசீனுடன் சேர்ந்து அனைவரையும் ஒன்று திரட்டினார். மளமளவென்று பலபகுதிகளை வென்றார். கானாவை எதிர்ப்பதற்காக செனெகல் ஆற்றின் அருகில் இருந்த டக்ருர் என்ற கருப்பின ஆட்சியாளர் வார்ஜபி என்பவரின் ஒத்துழைப்புடன் தப்ஃபரில்லா போரில் 1056 ல் ஈடுபட்டார். அப்போரின் போது யஹ்யா இப்ன் உமர் கொல்லப்பட்டார்.
 மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் சாலிஹ் இப்ன் தாரீஃப் என்பவர் அமைத்த ‘ஹெரிஸி’ என்பதைத் தொடரும் ‘பெர்கோவட்டா’ என்ற பெர்பெர் பழங்குடியினர்கள் அவ்வப்போது நடத்தும் கூட்டத்தின் பார்வையில் பட்டார்கள். பின் 1059ல் மொரோக்கோவின் ரோம்மனி நகருக்கருகில் உள்ள க்ரிஃப்லா என்ற கிராமத்தில் அவர்களுடன் நடந்த சண்டையில் அப்தல்லாஹ் இப்ன் யாசீன் கொல்லப்பட்டார். ஆனாலும் போரில் அவர்களை அபு பக்ர் இப்ன் உமர் வெற்றி கொண்டு அனைத்துக் குழுக்களுக்கும் இஸ்லாமை அறிமுகப்படுத்தி இணைய வைத்தார். அபு பக்ர் இப்ன் உமர், புகழும் வசதியும் பெற்ற பெண்ணான ஸைனப் அந் நஃப்ஸவிய்யத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர் மேலும் அல்மொராவிட் ஆட்சிவம்சத்தை முன்னேற உதவி செய்தார். ஸைனப், கைரோவானைச் சேர்ந்த ஹூவரா பகுதியின் பெரும் வணிகர் ஒருவரின் மகளாவார். 1061 ல் அபு பக்ர் இப்ன் உமர் வென்ற பகுதிகளை தன் மைத்துனர் யூசுஃப் இப்ன் தஷ்வினின் அதிகாரத்திற்குக் கொடுத்து, மனைவி ஸைனபை அவருக்கு உதவ வைத்தார். அபு பக்ர் இப்ன் உமர் அந்த பகுதிகளில் அடிக்கடி நடந்த பழங்குடியினரின் புரட்சியை அடக்குவதற்காகச் சென்றார். 1087 ல் அவர் திரும்பி வந்து அதிகாரத்தைத் திரும்ப பெறலாம் என்ற போது மைத்துனர் யூசுஃப் இப்ன் தஷ்வின் மிகவும் பலம் வாய்ந்தவராக இருந்தார். சூடான் நாட்டுக்கு எதிராக நடந்த ஒரு சண்டையில் அபு பக்ர் இப்ன் உமர் விஷம் தோய்ந்த அம்பினால் எறியப்பட்டு மரணமடைந்தார்.
யூசுஃப் இப்ன் தஷ்வின் மேலும் சில பகுதிகளை வென்று மொரோக்கோவின் மேற்கு சஹாரா மற்றும் மாரிடானியாவை முழு அதிகாரத்தில் கொண்டு வந்தார். 1062 ல் இவர்தான் மர்ரகெஷ் நகரத்தை உருவாக்கினார். 1080 ல் லெம்சென் என்ற பகுதியை வெற்றி கொண்டார். அதுதான் தற்போதைய அல்ஜீரியா நாடு. மேலும் தூரக்கிழக்கில் ஓரன் நகரம் வரை வென்றார். 1075 ல் கானா பேரரசை வென்ற பின், 1100 ல் அல்மொராவிட் பேரரசு இராணுவத்திலும், வாணிபத்திலும் மிகவும் பெயர் பெற்றது. சில பழங்குடியின தலைவர்களால் சிதறுண்டு மாலி பேரரசு என்று ஒன்றைத் தோன்றச் செய்தார்கள். இவர்கள் இராணுவ பலத்தைக் குறைத்துக் கொண்டு மதரீதியாக அணுக ஆரம்பித்தார்கள். பழங்குடியினரின் பெண்களை திருமணம் செய்து உறவுகள் மூலம் எதிர்ப்பை அடக்கினார்கள். ஐபீரிய தீபகற்பத்தில் அல் அண்டலூசின் இஸ்லாமிய தைஃபா இளவரசர்கள் தங்கள் பகுதிகளை லியூன் மற்றும் காஸ்டிலின் மன்னன் ஆறாம் அல்ஃபோன்சா ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், தங்களுக்கு இராணுவ உதவி செய்யுமாறும் வேண்டி, யூசுஃப் இப்ன் தஷ்கினை அழைத்தார்கள். அவர் கடினமான ஜிப்ரால்டர் ஜலசந்தியைக் கடந்து சென்று அல்ஜிசிராஸ் அடைந்து அஸ் ஸல்லாகாஹ் (சக்ராஜாஸ்) போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றார். பின்னால் இவர் ஆப்பிரிக்காவில் காலூன்ற சிரமப்பட்டார். தன் பேரரசை தைஃபா பிரதேசங்களுடன் இணைக்க ஒப்புக்கொண்டு 1090 ல் ஐபீரியாவிலிருந்து திரும்பினார். அதிகமான ஐபீரிய மக்கள் இவரின் வரவை விரும்பியதற்கான காரணம், அவர்களின் ஆட்சியாளர்கள் கடுமையான வரிகளை அவர்கள் மீது விதித்திருந்தார்கள். அம் மக்களின் மதபோதகர்களும் (குறிப்பாக பெர்ஷியாவின் அல் கஸாலி, டோர்டோஸாவின் அல் தர்டுஷி) தைஃபாக்கள் இஸ்லாமிய கொள்கைகளை விட்டு நழுவுவதால் வெறுப்படைந்திருந்தனர். இதனால் மத ஈடுபாடுள்ள யூசுஃப் இப்ன் தஷ்கினுக்கு தைஃபாக்களை வெல்ல அனுமதி இருக்கிறது என்று ஃபத்வா (மதம் சார்ந்த சட்டம்) வெளியிட்டார்கள். 1094 ல் யூசுஃப் இப்ன் தஷ்கின் சரகொஸ்ஸாவைத் தவிர தைஃபாக்களின் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றினார். எல் சிட் என்பவரின் மகன், டெய்கோ ரோட்ரிகஸ் ஆகியவர்களை எதிர்த்து ‘கன் சுயூக்ரா போரில்’ அல்மொராவிட்கள் வென்றார்கள். பாக்தாத் கலீஃபாவின் நட்பு கிடைக்க யூசுஃப் இப்ன் தஷ்கினுக்கு ‘அமீர் அல் முஃமீன் (உண்மையின் தளபதி), ‘அமீர் அல் முஸ்லிமீன் (முஸ்லீம்களின் தளபதி) போன்ற பட்டங்களை பாக்தாத் கலீஃபா வழங்கினார். அல்மொராவிட்களின் அதிகாரம் உச்சத்திலிருந்த போது நூறு வயதை நெருங்கும் நிலையில் யூசுஃப் இப்ன் தஷ்கின் மரணமடைந்தார். 1108 ல் தமீம் அல் யூசுஃப் என்பவர் காஸ்டைல் பேரரசுடன் ‘உச்லிஸ் போரில் வென்றார். கிறிஸ்தவர்களை எதிர்த்து வாலென்ஷியாவை வென்றார். பல பகுதிகளை வெல்ல முடியாவிட்டாலும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு தடையை ஏற்படுத்தினார். 1134 ல் ‘ஃப்ராகா போரில்” அல்மொராவிட்கள் வென்றார்கள். மேலும் 1139 ல் அரகானின் முதலாம் அல்ஃபோன்ஸாவையும் வென்று உச்சமடைந்தார்கள்.
அடுத்த மூன்றாண்டுகள் கழித்து யூசுஃப் இப்ன் தஷ்கினின் மகன் அலி இப்ன் யூசுஃப் ஆட்சிக்கு வந்தார். அவர் சின்ட்ரா மற்றும் சண்டாரீம் பகுதிகளை பேரரசில் இணைத்தார். 1119 லும், 1121 லும் ஐபீரியாவுக்கும் ஊடுருவினார் ஆனால் அது அரகானியர்களுக்கு ஃப்ரான்ஸ் உதவி புரிந்ததால் பலனளிக்கவில்லை. அலி இப்ன் யூசுஃபின் ஆட்சியின் போது 1138 ல் லியூனின் ஏழாம் அல்ஃபோன்சாவிடம் தோற்றுப் போனார். 1139ல் ‘ஊரிக்யூ போரில்’ போர்ச்சுக்கலின் முதலாம் அல்ஃபோன்சாவிடம் தோற்றுப்போனார். 1147 ல் போர்ச்சுகல்லிடம் லிஸ்பனை இழந்தார். இதற்கு சரித்திர ஆராய்ச்சியாளர்கள் அலி இப்ன் யூசுஃப் புதிய தலைமுறையச் சேர்ந்தவராய் அப்போது இருந்ததால் பாலைவனப் போர்முறையை மறந்து போனார் என்று சொல்லப்பட்டது. தொடர்ந்து கிறிஸ்தவ எதிரிகளால் ஐபீரியாவிலும், அல் மொஹத் என்பவர்களால் மொரோக்கோவிலும் தோல்வியைத் தழுவினார். 1143 ல் அலி இப்ன் யூசுஃபின் மறைவிற்குப் பிறகு, அவர் மகன் தஷ்ஃபின் இப்ன் அலி ஆட்சிக்கு வந்து தொடர்ந்து பல பகுதிகளை அல் மொஹதுகளிடம் இழந்தார். தஷ்ஃபின் இப்ன் அலி தந்தை ஆளும் போது 1129 ல் அல்மீரியாவிலும், க்ரனாடாவிலும் கவர்னராக இருந்தார். பின்னர் 1131 ல் கோர்டோபாவிலும் கவர்னராக இருந்தார். 1143 ல் அல்மொராவிட்களின் ஆட்சியாளராக வந்தார். 1145 ல் அப்த் அல் முஃமீன் தலைமையில் ஓரன் பகுதிக்கு அல்மொஹதுகளை எதிர்த்து போருக்குச் சென்றார். போரின் போது தோல்வியுற்று போர் கூடாரங்களை கொளுத்திவிட்டு இரவோடு இரவாக கப்பலில் தப்பிக்க இருந்தார். அதற்காக இரவில் விரைவாக குதிரையைச் செலுத்தியவர்  செங்குத்தான பாறையிலிருந்து விழுந்து இறந்து போனார்.
இவருக்குப்பின் இவர் சகோதரர் இப்ராஹீம் இப்ன் தஷ்ஃபின் அல்மொராவிட்களின் ஆட்சிக்கு வந்தார். இவர் குழந்தையாக இருந்ததால் உறவினர் இஷாக் இப்ன் அலி ஆட்சிக்கு வந்தார். ஆனால் விரைவில் அல்மொஹத்களிடம் தோல்வியுற்று இப்ராஹீமும், இஷாக் அலியும் கொல்லப்பட்டு அல்மொராவிட்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அப்தல்லாஹ் இப்ன் யூசுஃப் இராணுவத்தை இஸ்லாம் கூறிய சட்டப்படி கட்டுப்பாடுடன் வைத்திருந்தார். அல்மொராவிட்களின் முதல் ஆட்சியாளர் யஹ்யா இப்ன் உமர் இராணுவத்திற்கு சிறந்த பயிற்சி கொடுத்தார். முன்ணனிப்படையாக அம்புகள் ஏந்திய காலாட்படையும், அடுத்து ஈட்டி எறியும் படையும், பின்னால் இவர்களை ஆதரித்த வண்ணம் ஒட்டகம் மற்றும் குதிரைப்படையும் இருக்கும்படி போர் நடவடிக்கையை வைத்திருந்தார். முன்னால் ஒரு குதிரையில் நீண்ட கொடியைப் பிடித்தபடி செல்லும் வீரன் கொடியை மேலும் கீழும் உயர்த்திக் காட்டினால் படைகள் தொடரும், அதே கொடியை எதிரிகளைப் பார்த்துவிட்டு கீழே தாழ்த்தினால் படைகள் தரையில் படுத்து பதுங்கிக் கொள்ளும். யாராவது தனது போர்வீரர்கள் முன்ணனியிலிருந்து பின் வாங்கினால் அல்மொராவிட்கள் கொன்றுவிடுவார்கள். முன்னேறியவர்கள் நிச்சயம் எதிரியிடம் தோற்றுவிடுவோம் என்று தெரிந்தால் பின் வாங்காமல் முடிந்தால் எதிரிக்கு இழப்பேற்படுத்திவிட்டு போரிட்டுத்தான் இறப்பார்கள். அந்த சமயத்தில் இந்த போர்முறை புதியதாக இருந்தது.