புதன், 22 ஜூலை, 2015

ஐக்கிய அரபு அமீரக வரலாறு 1

ஐக்கிய அரபு அமீரக  வரலாறு
கூ.செ. செய்யது முஹமது
2011 ல் ஜெபெல் ஃபயா என்ற பகுதியில் நடந்த ஆராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட கைகோடாரி, துளையிடப்பட்ட சில பொருள்களும் அவைகள் 100,000 காலத்துக்கு முற்பட்ட கிழக்கு ஆப்பிரிக்காவினர் பயன்படுத்திய பொருட்கள் என்று ஐக்கிய அரபு அமீரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரத்தைத் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்காவைத் தவிர்த்து வெளிப்புறத்தில் மனிதன் வாழ்ந்ததற்கான பகுதியாக இப்பகுதியைக் கருதுகிறார்கள். மேலும் கி.மு. 2600-2000 உம் அந் நஹார் என்ற பகுதியின் கலாச்சாரம் இங்கு இருந்ததாக அறியப்படுகிறது. இது அபுதாபியிலுள்ள ஒரு தீவை சார்ந்ததாகும். இந்த பகுதி எண்ணெய் வளம் மற்றும் இராணுவத்திற்காக அதிகமான பாதுகாப்பில் உள்ளது. அபுதாபி இப்பகுதியை விரைவில் மக்கள் பார்வைக்கு வைப்பதற்கான முயற்சியில் உள்ளது. உம் அந் நஹாரில் பெரிய கற்களுடன் கூடிய சமாதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான சாட்சியமாக இருக்கிறது.
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைவிற்குப்பின் கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள் சுற்றி இருந்த முஸ்லீமல்லாத அரேபிய பழங்குடியினர்கள் மீது போரிட்டார்கள். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள் தலைமையிலும், இக்ரிமா (ரலி) அவர்களின் உதவியினாலும் நவம்பர் 632 ல் ரித்தா போரின் தொடர்ச்சியாக டிப்பா (ஃபுஜைராஹ்) என்ற பகுதியில் போரிட்டார்கள். அதில் தோற்ற இப்பகுதி மக்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். 637 ல் ஜுல்ஃபர் (ராஸ் அல் கைமாஹ்) என்ற பகுதி இஸ்லாமியப் படைகளுக்கு ஈரானை எதிர்க்க தளமாகப் பயன்பட்டது. அப்போது இந்தியப் பெருங்கடலில் முத்துக்கள் வாணிபத்திற்கு பெரும் துறைமுகமாக ஜுல்ஃபர் இருந்தது. நாம் இப்போது பஹ்ரைன் என்று குறிப்பிடுவது இப்போதுள்ள தனி நாடல்ல. இராக் நீங்கலாக உள்ள அனைத்துப் பகுதிகளையும் குறிப்பிட்ட பஹ்ரைன் என்றழைக்கப்பட்ட காலத்தைப்பற்றி. எட்டாம் நூற்றாண்டில் அஸ்ஸைரிய மன்னன் சென்னசெரிப் வட கிழக்கு பெர்ஷியாவை வென்று பஹ்ரைனைக் கைப்பற்றினான். பெர்ஷிய வளைகுடாவுக்கு வாணிபவழியாக இருந்த இந்த பகுதியில் “தில்முன்” என்ற மக்கள் கூட்டத்தினர் வாழ்ந்திருந்தார்கள். பழங்கால சுமேரியர்களுக்கு இப்பகுதி புனித இடமாகும். மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் புராதன மக்கள் இந்த தில்முன்கள். பஹ்ரைனின் தீவுகளில் தில்முன்களின் சமாதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிரேக்க காலத்தில் பஹ்ரைன் பவளம், முத்துக்களுக்கு வியாபார ஸ்தலமாக இருந்தது. 7 ம் நூற்றாண்டிலேயே இப்பகுதி இஸ்லாத்தைத் தழுவியது. ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆட்சியின் போது இப்பகுதிக்கு அல் அலா அ அல் ஹத்ரமி என்பவரை பொறுப்பாளராக நியமித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் காலத்தில் நபி (ஸல்) களாரின் நெருங்கிய தோழர் அபு ஹுரைராஹ்(ரலி)வும், உதுமான் பின் அபி அல் ஆஸும் (ஸல்) கவர்னர்களாக நியமித்தார்கள். 16 ம் நூற்றாண்டில் இந்தியப் பெருங்கடலில் போர்ச்சுகீசியர்கள் வாணிபம் செய்த போது, ஓட்டோமான் களுடன் சண்டையிட்டு இந்த பெர்ஷிய கடலோரப்பகுதியைப் பிடித்தார்கள். 150 ஆண்டுகாலம் அவர்கள் வசம் இது இருந்தது.
பெர்ஷிய கடலோரத்தில் ஏழு அரபு மாகாணங்கள் உள்ளன. அவை குவைத், பஹ்ரைன், இராக், ஒமான், கதார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகங்கள் ஆகும். அண்மைக் காலங்களில் இவை வளைகுடா நாடுகள் என்று அழைக்கப்பட்டு இராக் நீங்கலாக வளைகுடாவின் கூட்டுறவு அரபு மாகாணங்கள் என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதி மொத்தமாக கிழக்கு அரேபியாவைச் சேர்ந்தது. ஆனால் இந்த வளைகுடாவைத் தொடர்ந்து செல்லும் சௌதி அரேபியாவின் ஹிஜாஸ், நஜ்த் ஆகியவை வளைகுடாப் பகுதிகளைச் சேராது. இந்த கிழக்கு அரேபிய வளைகுடாப் பகுதி மக்கள் இசையுடன் கூடிய ஃபிஜிரி, சவ்த் மற்றும் லிவா கலாச்சாரங்களைக் கொண்டவர்கள். கலாச்சாரத்துடன் பொருளாதாரமும் கடலைச் சார்ந்தே இருக்கும். அதனால் இவர்களை கடல் சார்ந்த மக்கள் என்றும் அழைப்பார்கள். இந்த கிழக்குப்பகுதி மக்கள் ‘வளைகுடா அரபு மொழி’ என்று சௌதி அரேபிய அரபு மொழியிலிருந்து மாறுபட்ட மொழியைப் பேசுவார்கள். இந்த சௌதி அரேபியாவின் கிழக்குப்பகுதி மொத்தமும் 18 ம் நூற்றாண்டு வரை பஹ்ரைன் என்று தான் அழைக்கப்பட்டது. அரபு மொழியில் ‘பஹ்ர்’ என்றால் இரு கடல்கள் என்று பொருள். இரு கடல்கள் திருக்குரானில் ஐந்து இடங்களில் சொல்லப்பட்டுள்ளதால் இதைப்பற்றி ஆராய்ந்தவர்கள் இரு கடல்களுக்கு ‘அவல்’ என்று இன்னொரு சொல்லும் உள்ளது என்றார்கள். இந்த பஹ்ரைன் என்ற சொல் 15 ம் நூற்றாண்டிலிருந்து தான் வந்திருக்கும் என்றும், இரு கடல்கள் அல் கதிஃப் மற்றும் ஹத்ஜார் (தற்போது அல் ஹசா) என்பதையே குறிப்பதாக முடிவு செய்தார்கள். இஸ்லாம் இப்பகுதிகளில் அறிமுகமாவதற்கு முன்பு அரபு கிறிஸ்தவர்கள், பெர்ஷிய ஸோரோஸ்ட்ரியன்கள், யூதர்கள் மற்றும் அரமாயிக் மொழி பேசுபவர்கள் இருந்தார்கள். 20 ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை இவர்களை “கலீஜ்’ (KHALEEJ) என்று அழைத்தார்கள். கலீஜ் என்றால் மீன் உண்ணும் கடல் மூழ்கிகள் என்று பொருள். 
                           இதிலுள்ள ஏழு அரபு மாகாணங்களில் (இப்போது இவைகள் மாகாணங்கள் அல்ல தனி நாடுகளாகி விட்டன) ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் தன்னுள் அடங்கிய ஏழு அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ஃபுஜைய்ராஹ், ராஸ் அல் கைமாஹ் ஆகிய சிறு மாநில அதிகாரங்களைக் கொண்டு தனது ஆட்சியாளர்களை தேர்வு செய்து கொள்கிறது.
புரைய்மி என்னும் ஓமன் தேசத்தில் தவாஹிர் என்ற பழங்குடியினர் இருந்தார்கள். அதன் கிளைப் பிரிவினர்களாக நாஃஇம், பனி காஃப், பனி யாஸ் என்பவைகள் இருந்தன. இவர்கள் மத்திய அரேபியாவின் பழங்குடிக்கூட்டத்தினராக ஐக்கிய அரபு அமீரகத்தை இருப்பிடமாகக் கொண்டு இருந்தார்கள். பனி யாஸ்கள் துபாயிலிருந்து தென்கிழக்கு கத்தார் நாட்டைச் சேர்ந்த கவ்ர் அல் உதைய்த் வரை உள்ள மற்ற பகுதி பழங்குடியினருடன் கூட்டு வைத்திருந்தார்கள். இந்த பகுதியிலுள்ள அனைவரும் பனி யாஸ் கூட்டத்தினர் ஆவார்கள். இந்த பழங்குடியினர் தங்கள் மூத்த குடும்பத்தினரால் தலைவரைத் தேர்ந்தெடுத்து அப்பகுதிகளை நிர்வகித்து வந்தார்கள். அல் ஃபலாசி பழங்குடியினரின் குடும்பத்தார் அல் நஹ்யான் அபுதாபி (பழைய பெயர்-அல்தஃப்ரா) யையும், அல் ஃபலாசி பழங்குடியினர் குடும்பத்தார் அல் மக்தூம் துபாய் பகுதிகளையும் நிர்வகித்தார்கள். இந்த பனி யாஸ் பழங்குடியினர் அல் ஃபலாஹி, அல் ஃபலாசி, அல் ஒதைய்பா, அல் சுவைய்தி, அல் மஸ்ரூயீ, அல் ஹமேலி, அல் முஹைய்ரி, அல் ரொமைய்தி, அல் மரார், அல் மெஹைர்பி, அல் குபைய்சி, அல் கம்ஸி, அல் சிபுசி, அல் ஹமெய்ரி, அல் அமெம்மி என்று பல குடும்பங்களாக உள்ளனர். கடலில் முத்துக் குளிப்பவர்களாக இருந்த அல் நஹ்யான் குடும்பத்தினர் பெர்ஷிய கடலோரத்திலுள்ள லிவா பாலைவனத்திலிருந்து 1793 ல் அபுதாபிக்கு குடிபெயர்ந்தார்கள். அல் ஃபலாசி குடும்பத்தினர் துபாய் கடற்கரைப் பகுதிக்குக் குடிபெயர்ந்தார்கள். அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள் தான் ஆட்சி செய்து வருகிறார்கள். இக்குடும்பத்தினர்கள் பெண்களின் பெயர்களை வெளியில் சொல்ல மாட்டார்கள். திருமணங்களின் போது கூட இன்னாரின் மகள் என்று தான் அறிவிப்பார்கள். ஆனால் தற்போது நவீன காலத்தில் சில அமீரகப் பெண்கள் குறிப்பாக துபாய் மற்றும் ஷார்ஜா போன்ற பகுதிகளில் தங்கள் பெயர்களை பகிரங்கமாக அறிவிக்கிறார்கள். 

ஐக்கிய அரபு அமீரக வரலாறு 2

முன்பு இப்பகுதிகளை பிரிட்டிஷார் கடல்கொள்ளையர்களின் இடம் என்று குறிப்பிட்டார்கள். இப்பகுதிகள் ஆங்கிலத்தில் ஷெய்க்டம் (SHEIKHDOM) என்று அழைக்கப்பட்டன. அதாவது பூகோள அமைப்புப்படி அந்தந்த பகுதிகளை ‘ஷெய்க்’ என்னும் அவர்கள் தலைவர்கள் பொறுப்பாக இருந்து நிர்வகித்து வந்தார்கள். இது அடிப்படையில் மன்னராட்சிக்கு உண்டான அதிகாரமாகிறது. இந்தப்பகுதில் பிரிட்டிஷ் கப்பல்கள் தாக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டது. குறிப்பாக ‘கவாசிம்’ மற்றும் ‘ஜோஸ்மீஸ்’ கடற்கொள்ளையர்கள் (இவர்கள் ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமாஹ் பகுதிகளின் ‘அல் கசிமீ’ என்னும் ஆட்சியாளர்கள்) பிரிட்டிஷாருக்கு பெரும் தொல்லையாக இருந்தார்கள். 1797 ல் அல் கசிமீ குடும்பத்தினர் தொடர்ந்து பிரிட்டிஷ் கப்பல்களைத் தாக்கினார்கள். பிரிட்டிஷின் ‘பஸ்ஸீன் ஸ்னா’ கப்பலைப்பிடித்து வைத்துக் கொண்டு, பணயத்தொகை பெற்றுக்கொண்டு இருநாட்கள் கழித்து விடுதலை செய்தார்கள். புஷைர் பகுதியில் ‘வைபெர்’ என்ற கப்பலைத்தாக்கினார்கள். இந்த தொடர் தாக்குதல்கள் ராஸ் அல் கைமாஹ், அஜ்மான், ஷார்ஜா ஆகிய ஆட்சியாளர்கள் ஷெய்க் சுல்தான் பின் சக்ர் அல் கசிமீ என்பவர் தலைமையில் 1823 லும் அனைவரின் துறைமுகப்பகுதிகளிலும் நடந்தன. இத்தாக்குதல்களைப் பற்றி தற்போதைய சுல்தான் பின் முஹம்மது அல் கசிமீ அவர்கள் ‘தி மித் ஆஃப் அராப் பைரசி இன் தி கல்ஃப்’ என்று 1986 ல் ஒரு புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். பின்னால் இன்ஷா அல்லாஹ் சந்தர்ப்பம் கிடைத்தால் அப்புத்தகத்தை தமிழில் தருகிறேன். பிரிட்டிஷாரின் இந்திய வாணிபக் கப்பல்கள் ராஸ் அல் கைமாஹ்வை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து தான் சென்றன. இப்பிரச்சினையால் பிரிட்டிஷார் 1809 மற்றும் 1819 ல் ராஸ் அல் கைமாஹ்வைத் தாக்கினார்கள். இது சுற்றியுள்ள மற்ற ஷெய்குகளின் பிரதேசங்களான ஷார்ஜா, துபாய், அஜ்மான், அபுதாபி ஆகியவற்றைப் பாதித்ததால் 1820 ல் அப்பகுதி அனைத்து ஷெய்குகளும் கூடி பிரிட்டிஷுடன் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டார்கள். இது 1843 வரை செல்லுபடியானது. இப்பகுதிகளில் முத்துக்குளிப்பு முக்கிய தொழிலாக இருந்ததால் 1853 ல் நிரந்தரமாக ஒரு ஒப்பந்தம் போட்டார்கள். 1847, 1856 களில் அடிமை விற்பனைக்காக சில ஒப்பந்தங்களைப் போட்டார்கள். அச்சமயத்தில் ஐக்கிய அரபு அமீரகப் பகுதிகளின் மீது ஐரோப்பிய சக்திகள் அதிக ஆர்வம் காட்டின. குறிப்பாக ஃப்ரான்சும், ரஷ்யாவும். கடற்கொள்ளையர்களின் தொந்தரவிலிருந்தும், மற்ற வெளிநாட்டவர்களை தள்ளி வைக்கவும் திட்டமிட்ட பிரிட்டிஷ் இப்பகுதி ஷெய்குகளை அழைத்து, அப்பகுதிகளை தாங்கள் கடல் மற்றும் நிலப்பரப்புகளிலிருந்து வரும் ஆபத்துகளிலிருந்து தாங்கள் பாதுகாப்பதாகவும், பதிலுக்கு தங்களின் அனுமதியில்லாமல் எந்த வெளிநாட்டிடமும் உறவு வைத்துக் கொள்ளக்கூடாதென்றும் ஒரு ஒப்பந்தத்தையும், அவர்களுக்கான மற்ற உதவிகளையும் செய்வதாக ஒத்துக் கொண்டார்கள்.  ஒப்பந்தம் பிடிக்காததால் ரம்ஸ் மற்றும் ஜஸீராஹ் அல் ஹம்ராஹ் ஷெய்குகளை ராஸ் அல் கைமாஹ் மக்கள் ஆட்சியிலிருந்து வெளியேற்றினார்கள். 
வெளி எதிரிகளிடமிருந்தும் அமீரகத்தைப் பாதுகாக்க பிரிட்டிஷாரால் போடப்பட்ட இந்த பிரத்தியேக ஒப்பந்தத்தால் அது இப்பிரதேசத்தில் உரிமை கொண்டாடிக் கொண்டிருந்தது. மிகச் சிறப்பாக செயல்பட்டு உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பும், வருமானத்தையும் பெற்றுக் கொடுத்த முத்துக்குளிப்பு வாணிபம். ஜப்பானியர்கள் கண்டுபிடித்த செயற்கை முத்தினால் பாதிக்கப்பட்டது. மேலும் இரண்டாம் உலகப்போருக்குப் பின் பிரிட்டிஷ் இந்தியா பெர்ஷிய அரபு முத்துக்களுக்கு கூடுதல் சுங்க வரியை விதித்தது. இதனால் முற்றிலும் முத்துக்குளிப்பு இந்த பகுதிகளில் கைவிடப்பட்டது. 1958 ல் உம் ஷைஃப் பகுதியிலும், 1960 ல் பாலைவனமான முர்பான் பகுதியிலும் எண்ணெய்வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் எண்ணெய் ஏற்றுமதி கப்பல் 1962 ல் அபுதாபியிலிருந்து புறப்பட்டது. அதேபோல் துபாயிலும் 1969 லும் எண்ணெய் முதல்முறையாக ஏற்றுமதி ஆனது. எண்ணெய் வருமானம் அதிகரிக்க இரு அமீரக ஷெய்குகளும் தங்கள் பகுதிகளை வளப்படுத்தினார்கள். 1968 ல் பிரிட்டிஷ் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாகக் கூறி இராணுவத்தை அழைத்துக் கொண்டது. இப்பிரதேசங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்றன. இவ் ஒப்பந்தம் 1971 டிசம்பரில் ஏழு அரபு அமீரகங்களும் சுதந்திரமாகும் வரை இருந்தது. PCL எனப்படும் பெட்ரோலிய நிறுவனம் சுதந்திரமாக அப்பகுதியில் செயல்பட அழுத்தம் கொடுக்க கடைசியாக ஃபுஜைய்ராஹ் அமீரகம் 1952 ல் சுதந்திரம் அடைந்தது. 1968 சுதந்திரத்திற்குப் பிறகு, அபுதாபி, துபாயுக்கு இடையில் அர்கூப் அல் செதிராஹ் பாலைவனக் கூடாரத்தில் ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அல் நஹ்யானும், ஷெய்க் ராஷித் அவர்களும் அனைத்து அமீரகங்களும் ஒன்றிணைவது பற்றி பேசினார்கள். இவர்கள் கதார் மற்றும் பஹ்ரைனையும் கூட அமீரகத்தில் இணைக்க முயன்றார்கள். பிரிட்டிஷார் இடையில் புகுந்து இந்த ஒன்பது அமீரங்களின் கூட்டைக் கலைக்க கதாரும், ராஸ் அல் கைமாஹ்வும் கூட்டத்தைப் புறக்கணித்தன. இரண்டாண்டுகளாக பலகட்டப் பேச்சில் ஒரே அடியாக பஹ்ரைனும், கதாரும் வெளியேற அமீரகங்கள் ஏழும் ஒன்றுகூடி 1971 ஜூலையில் ஐக்கிய அரபு அமீரகங்கள் என்று சர்வதேச நாடுகளுடன் சேர்ந்தன. முதலில் சேராமல் இருந்த ராஸ் அல் கைய்மாஹ் அமீரகம் பின்னர் 1972 பிப்ரவரியில் சேர்ந்து கொண்டது. இதனால் ஆத்திரம் கொண்ட ஈரான் அபு மூசா மற்றும் துன்ப்ஸ் பகுதிகளை ராஸ் அல் கைமாஹ்விடம் இருந்து கைப்பற்றிக் கொண்டது. 
ஐக்கிய அரபு அமீரகம், கதார், பஹ்ரைன் மற்றும் ஒமான் பகுதிகளில் 1969 வரை இந்திய நாணயங்களே புழக்கத்தில் இருந்தன. அந்நாடுகள் தங்கள் சொந்த நாணயம் வெளியிட்ட பிறகு, இந்திய நாணயம் புழக்கத்திலிருந்து மறைந்தன. ஐக்கிய அரபு அமீரகங்களுக்கு ஓமானுடன் அபுதாபியின் தெற்குப் பகுதியான புரைய்மி என்ற பாலைவனப் பகுதியுடன் இருந்த எல்லைப் பிரச்சினை சரி செய்யப்பட்டது. மேலும் ஒமானுடன் இருந்த இரு எல்லைப் பிரச்சினைகளையும் ஐக்கிய அரபு அமீரகங்கள் 1999 ல் சரி செய்து கொண்டது. சௌதி அரேபியாவிடம் சிறு எல்லைப் பிரச்சினை இன்னும் இருக்கிறது. அமெரிக்க தாக்குதலான 9/11 க்கு அல் காயிதா என்ற அமைப்புக்கு ஐக்கிய அரபு அமீரகங்கள் தான் பொருளாதார தளமாக இருந்ததாக அமெரிக்கா கூறியது. அதற்கு அமீரகங்கள் அமெரிக்காவுக்கு பெரும் ஒத்துழைப்பு கொடுத்து அல் காயிதா அமைப்பின் தொடர்புகளாக கருதப்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கியது. ஐக்கிய அரபு அமீரகங்களுக்கு 1994 லிருந்து அமெரிக்காவுடனும், 1995 லிருந்து ஃப்ரான்சுடனும் இராணுவக்கூட்டு உள்ளது. மேலும் அமெரிக்கா 2001 ல் ஆப்கானிஸ்தான் மீது நடத்திய போருக்கும், 2003 ல் ஈராக் மீது நடத்திய போருக்கும் ஐக்கிய அரபு அமீரகங்கள் உதவி புரிந்தன. உலகத் தீவிரவாதத்தை எதிர்த்து அமெரிக்கா நடத்தும் போருக்கு அபுதாபியின் வெளிப்புறத்தில் அல் தஃப்ரா என்ற இடத்தில் அமெரிக்காவுக்கு விமானதளம் அமைத்துக் கொடுத்துள்ளது. 2004 நவம்பரில் ஐக்கிய அரபு அமீரகங்கள் ஜனாதிபதி ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அல் நஹ்யான் மரணமடைய ஏழு அமீரகங்களின் சிறப்புக்குழு அவர் மகன் ஷெய்க் கலீஃபா பின் ஸாயெத் அல் நஹ்யானை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது. துணை ஜனாதிபதியாக இருந்த துபாயைச் சேர்ந்த ஷெய்க் மக்தூம் பின் ராஷித் அல் மக்தூம் 2006 ல் மரணமடைய அவரது இளைய சகோதரர் பட்டத்து இளவரசர் ஷெய்க் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஐக்கிய அரபு அமீரகங்களுக்கு துணை ஜனாதிபதியாகவும், துபாய் அமீரகத்தின் ஆட்சியாளராகவும் ஆனார். 2006 ல் துபாய் அமீரகத்துக்குச் சொந்தமான ‘துபாய் போர்ட்ஸ் வேர்ல்ட்’ என்ற நிறுவனத்துக்கு அமெரிக்காவின் ஆறு துறைமுகங்களை நிர்வகிக்கும் வாணிபம் கிடைத்தது. ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகங்கள் 9/11 தாக்குதலில் ஈடுபட்ட இருவருக்கு வசிப்பிடமாக இருந்ததாகக் கூறி அமெரிக்கா அவ்வாணிபத்தை தடை செய்தது. 2011 ல் தற்போதைய ஜனாதிபதியையும், துணை ஜனாதிபதியையும் ‘5 பேர் கொண்ட குழு குடியரசு முறையை எதிர்த்தது. அவர்களை கைது செய்து விசாரணை செய்வதை உலகநாடுகளும், மனித உரிமை குழுக்களும் கண்காணித்ததால் ஐவர்குழுவை மூன்றாண்டு சிறைதண்டனைக் கொடுத்தது. ஆனால் ஜனாதிபதி ஷெய்க் கலீஃபா பின் ஸாயெத் பின் அல் நஹ்யான் மன்னித்து விடுதலை செய்தார். இதுவரை அல் நஹ்யான் குடும்பத்தில் எட்டு ஆட்சியாளர்கள் கொல்லப்பட்டு, ஐந்து ஆட்சியாளர்கள் ஆட்சியை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள்.   
இதிலிருந்து சில அமீரகங்களின் வரலாறைப் பார்ப்போம்.



ஐக்கிய அரபு அமீரக வரலாறு 3

அபுதாபி அமீரக வரலாறு

பெர்ஷிய வளைகுடாவின் நடமாட்டமில்லாத ஒருபகுதியாக இருந்த அபுதாபி தீவில் 1761 ல் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் குடியிருக்க ஆரம்பித்தார்கள். 1790 ல் பனி யாஸ் என்னும் அரபு பழங்குடி இனக் கூட்டத்திற்கு அபுதாபி தலைமை இடமாக இருந்தது. இந்த பனி யாஸ் பழங்குடியினருக்கு தியாப் பின் இசா பின் நஹ்யான் என்பவர் தலைவராக இருந்தார். ஷெய்க் என அழைக்கப்பட்ட இவர் ‘மான்களின் தந்தை’ என்றும் அழைக்கப்பட்டார். தியாப் லிவா என்னும் தீவில் இருந்தார். தங்கள் பழங்குடியினரின் வளமான வாழ்வுக்காக தன் மகன் ஷக்புத் என்பவரை அப்போது தீவுபோல் இருந்த அபுதாபியைப் போல் பார்க்கச் சொன்னார். 1793 ல் ஷக்புத் பின் தியாப் அல் நஹ்யான் அங்கு சென்று ஒரு கிராமத்தையும், ‘கஸ்ர் அல் ஹுஸ்ன்’ என்ற கோட்டையையும் கட்டினார். அதன்பின் அதுவே அபுதாபி ஷெய்குகளின் இருப்பிடமாக இருந்து இன்று அபுதாபியின் அருங்காட்சியகமாக இருக்கிறது. இவருக்குப் பின் இவரது மகன் முஹம்மது பின் ஷக்புத் என்பவர் 1816 ல் ஆட்சி செய்தார். அடுத்து இன்னொரு மகன் தஹ்னூன் பின் ஷக்புத் என்பவர் 1818 ல் ஆட்சி செய்தார். அடுத்து இன்னொரு மகன் கலீஃபா பின் ஷக்புத் என்பவர் 1833 ல் ஆட்சி செய்தார். இவர்கள் ஆட்சிக்கு வந்த காலம் தனித்தனியாக இருந்தாலும் கூடித்தான் ஆட்சி செய்தார்கள். இவர்களைப் பற்றிய தனிப்பட்ட வரலாறுகள் பதிவு செய்யப்படவில்லை.
இவர்களுக்குப்பின் ஸாயெத் பின் கலீஃபா அல் நஹ்யான் என்பவர் 1855 ல் ஆட்சிக்கு வந்தார். ஸைத் பின் தஹ்னூன் என்னும் உறவினரை ஆட்சியிலிருந்து நீக்கிவிட்டு, வந்த இவர் 54 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர்தான் ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அல் நஹ்யானின் பாட்டனார் ஆவார். அப்போது இது ஒமானைச் சேர்ந்த பகுதியாக இருந்தது. ஸாயெத் பின் கலீஃபாவின் ஆட்சியின் போது அடிக்கடி ஷார்ஜா அமீரக ஆட்சியாளர்களுடன் சண்டை இருந்தது. 1868 ல் நேருக்கு நேர் மோதி ஷார்ஜா ஆட்சியாளர் ஷெய்க் காலித் பின் சுல்தானைக் கொன்றார். அதனால் ஷார்ஜாவுடன் இருந்த குழப்பங்கள் தீர்ந்து அனைத்து பழங்குடியினரும் அபுதாபிதான் அப்பகுதியின் பலம் வாய்ந்த அமீரகம் என்று போற்ற ஆரம்பித்தார்கள். ஸாயெத் பின் கலீஃபா 1880 ல் கதாருடன் போரிட்டு தனது மேற்கத்திய எல்லையை வகுத்துக் கொண்டார். 1870 ல் ஒமானிப்படைகளுடன் இணைந்து புரைய்மி பகுதியிலிருந்த சௌதி படைகளை விரட்டினார். இதனால் புரைய்மி பகுதி அபுதாபிக்கு நிரந்தரமாகி சௌதியை ஒரேயடியாக ஒமானிலிருந்து விரட்டப்பட்டது. அதன் பிறகு அபுதாபியின் கட்டுப்பாடு அப்பகுதிகளில் வளர்ந்தது. பலம் வாய்ந்த ஆட்சியாளராக இருந்த இவரை அனைத்துப் பழங்குடியினரும் மரியாதையாக நடத்தினார்கள். அபுதாபியின் மேற்குப்பகுதியை மூன்று முறை கதார் மீதான படையெடுப்பின் மூலம் விரிவாக்கினார். தெற்கில் ‘ருப் அல் காலி’ வரை எல்லையை வகுத்தார். முத்துக்குளிப்பு வாணிபத்தின் சொந்தக்காரராய் இருந்த அருகிலிருந்த அமீரகங்களுக்கும் உதவி புரிந்தார். 1892 ல் பிரிட்டிஷ் உடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு அபுதாபி பிரிட்டிஷாரின் சர்வதேச வாணிபத்தில் இணைக்கப்பட்டது. ஸாயெத் பின் கலீஃபா 1909 ல் இறந்து போக அவர் சகோதரர் முதலாம் சக்ர் பின் ஸாயெத் அல் நஹ்யான் ஆட்சிக்கு வந்தார்.
இவருக்குப்பின் ஷக்புத் பின் சுல்தான் அல் நஹ்யான் 1928 ல் ஆட்சிக்கு வந்தார். இவர் இரண்டாம் சுல்தான் பின் ஸாயெதின் மகனாவார். இவரது தாயாரின் பெயர் ஷெய்கா சல்மா பிந்த் புட்டி ஆவார். ஷக்புத் பின் சுல்தான் வாணிபத்தில் கவனம் செலுத்தி தங்கத்தைச் சேமித்தார். 1958 ல் அபுதாபியில் எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1948 ல் துபாயுடனான எல்லைப் பிரச்சினையை அபுதாபி தீர்த்துக் கொண்டது. 1952 ல் அபுதாபியின் மக்கள்தொகை 4,000 தான் இருந்தது. 1962 ல் முதல் எண்ணெய் வளம் ஏற்றுமதி தொடங்கியது. 1966 ல் இவரது சகோதரர் ஸாயெத் பின் சுல்தான் அல் நஹ்யான் ஆட்சிக்கு வர பிரிட்டிஷார் ஒமான் படைகளுடன் இணைந்து இவரை நீக்கினார்கள். ஷக்புத் பின் சுல்தானை ரகசியமாக ஏற்றிச் சென்ற பிரிட்டிஷ் படைகள் லெபனானில் விட்டு விட்டனர். 1971 ல் ஸாயெத் பின் சுல்தான் அபுதாபியின் அதிபரான பின் அவர் அபுதாபிக்கு அழைத்துக் கொள்ளப்பட்டார். ஷக்புத் பின் சுல்தானுக்குப்பின் ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அல் நஹ்யான் அபுதாபியின் ஆட்சிக்கு வந்தார்.
ஷெய்க் ஸாயெத் பின் சுல்தானின் பிறந்த வருடம் தோராயமாக 1916 அல்லது 1918 என்று குறிப்பிடப்படுகிறது. இவர் அல் அய்ன் என்ற இடத்தில் பிறந்தார். ஷெய்க் சுல்தான் பின் ஸாயெத் என்ற ஆட்சியாளரின் இளைய மகனாவார். இவர் தந்தை அபுதாபியின் ஆட்சியாளராக 1922 லிருந்து 1926 வரை இருந்தார். பின்னர் படுகொலை செய்யப்பட்டு இறந்து போனார். இவரது பாட்டனார் ஷெய்க் ஸாயெத் பின் கலீஃபாவால் அடுத்த ஆட்சிக்கு உரியவர் இவர்தான் என்று அடையாளம் காட்டப்பட்டார். ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் ஆட்சிக்கு வந்தபோது அபுதாபி ஏழு ஒப்பந்த மாகாணத்தில் இருந்தது. (நாம் ஐக்கிய அரபு வரலாறில் பார்த்தது.) முதல் 15 ஆண்டுகள் அல் அய்னிலேயே இருந்தார். அங்கு நவீன பள்ளிக்கூடங்கள் இல்லாததால் அடிப்படை மதக்கல்வியைப் பயின்றார். பாரம்பரிய அரபு கலைகளைக் கற்று கடுமையான இயற்கைப் பருவங்களில் பிதோயின் பழங்குடியினரின் அன்பினில் வளர்ந்தார். இவரது தந்தையைப் போலவே சில மாதம் ஆட்சியிலிருந்த ஷெய்க் ஸாயெத் பின் சுல்தானின் மூத்த சகோதரர் படுகொலை செய்யப்பட்டார். அதனால் அவர் தாயார் ஷெய்கா சல்மா பிந்த் புட்டி இனி சகோதரர்கள் ஆட்சிக்காக ஒருவருகொருவர் கொலை செய்து கொள்ளக்கூடாது என்று உறுதிமொழி பெற்றார். 1946 ல் அபுதாபியின் கிழக்குப்பகுதிக்கு கவர்னராக இருந்து அல் அய்னின் முவைஜி கோட்டையிலிருந்து ஆண்டார். அப்போது கடும் ஏழைகளாக இருந்த இப்பகுதி மக்கள் நோயினாலும் பாதிக்கப்பட்டார்கள். எண்ணெய் வளத்திற்காக தோண்ட ஆரம்பித்த போது உதவிகள் புரிந்தார்.

ஐக்கிய அரபு அமீரக வரலாறு 4

1952 ல் சௌதி அரேபியா, அராம்கோ (ARAMCO) என்ற நிறுவனத்தை எண்ணெய் வளத்திற்காக எல்லைப் பிரச்சினையில் இருந்த புரைய்மி என்ற பாலைவனப் பகுதியில் ஹமஸா என்ற கிராமத்தை ஆக்கிரமிக்க ஷெய்க் ஸாயெத் பின் சுல்தானுக்கு 30 மில்லியன் பவுண்டு கையூட்டுத் தர சம்மதித்தது. ஆனால் ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அதை மறுக்க, சௌதி அரேபியா துர்கி பின் அப்துல்லாஹ் அல் ஒதைஷான் என்பவர் தலைமையில் போருக்கு இறங்கியது. அதை ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் எதிர்கொண்டார். பின்னர் புரைய்மி பிரச்சினைக்காக 1955 ல் ஜெனீவாவில் நடந்த பேச்சு வார்த்தையில் சகோதரர் ஹஸ்ஸாவுடன் கலந்து கொண்ட ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அப்பகுதியில் தங்களுக்குண்டான ஆதாரங்களை வெளியிட்டார். பின்னர் அப்பகுதியில் நீருக்கான ஆதாரத்தைக் கண்டறிந்து அல் அய்ன், புரைய்மி ஆகியவற்றை வளப்படுத்தினார். 1960 ஜப்பானிய கலைஞரான டாக்டர். கட்சுஹிகோ டகாஹஷியை வரவழைத்து நகரை திட்டமிட்டு உருவாக்கினார். திடீரென்று 1968 ல் பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி கோரோன்வி ராபர்ட் அப்பகுதிக்கு வந்து இந்த விரிவாக்கம் ஒப்பந்தத்திற்கு மாறானது என்று உடனே வெளியேற உத்தரவிட்டார். உடனடியாக அதே ஆண்டு அனைத்து ஏழு அமீரகங்களையும் துபாயின் ஆட்சியாளர் ஷெய்க் ராஷித் அவர்கள் தலைமையில் கூட்டி பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற நாடினார். பின்னர் மற்ற ஒப்பந்த நாடுகள் போக, ஏழு மாகாணங்கள் கொண்ட ஐக்கிய அரபு அமீரகம் உருவானது. பின் சௌதி அரசுடன் ஜெத்தா ஒப்பந்தம் மூலம் எல்லைப் பிரச்சினையைத் தீர்த்தார். அனைத்துத் தரப்பிலும் நல்ல ஆட்சியாளர் என்று பெயரெடுத்தார். அனைத்து மதத்தினரும் வழிபாடு செய்ய அனுமதித்தார். பரந்த அரபுகளின் ஆட்சியையே கனவு கண்டார். ஈராக்கின் மீது அமெரிக்கா விதித்திருந்த தடையை நீக்கச் சொன்னார். ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அவர்கள் $20 பில்லியனுக்கு சொந்தக்காரரான மிகப் பெரிய பணக்காரராக “ஃபோர்ப்ஸ்” பத்திரிக்கை அறிவித்தது. 1988 ல் 5 மில்லியன் பவுண்டுகளுக்கு இங்கிலாந்தின் பெர்க் ஷைரில் டிட்டன் ஹூஸ்ட் பார்க் என்ற இடத்தை வாங்கினார்.
1997 ல் ஏன் ஜன்நாயக முறை ஆட்சியைக் கொண்டுவரக்கூடாது என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் பேட்டியில் கேட்டபோது, “எங்கள் மக்கள் எங்கள் ஆட்சி வழிமுறையில் தவறிருக்கிறது என்று சொன்னார்களா? அவர்கள் எப்போதுமே இஸ்லாமிய மதம் சார்ந்த எங்கள் ஆட்சி வழிமுறையையே விரும்புவார்கள்” என்றார். அபுதாபி மக்கள் அனைவருக்கு சொந்த இடமும் கட்டப்பட்ட வீடும் இலவசமாகக் கொடுத்தார். மஜ்லிஸ் என்னும் இவரின் பொது அறை எந்நேரமும் திறந்தே இருக்கும். தேவாலயமும், கோவிலும் கட்டிக் கொள்ள அனுமதித்தார். பெண்களின் குறிப்பிட்டளவு சுதந்திரத்தை வரவேற்றார். 2000 ல் ஸாயெத் செண்டர் என்ற அமைப்பின் மூலம் இவர் நன்கொடையாகக் கொடுத்த $2.5 மில்லியன்களை ஹார்வர்ட் டிவைனிடி ஸ்கூல் கறைபடிந்த பணம் என்று திருப்பிக் கொடுத்து விட்டது. 2001 ல் சுற்றுப்புர சூழலுக்கான ஸாயெத் சர்வதேச பரிசாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டருக்கு $500,000 கொடுத்த போது, இப்பரிசு எனது நண்பரின் பெயரில் உள்ளதால் இதைப்பெருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். 1999 ல் பல மருத்துவ சோதனைகள் மேற்கொண்டார். அப்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள் அவருக்கு பல கடிதங்களை எழுதினார்கள். 2004 நவம்பர் 2 ல் ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் காலமானார். அபுதாபியில் புதியதாகக் கட்டப்பட்ட மிகப்பெரிய ஷெய்க் ஸாயெத் பெரிய மசூதியின் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டார். பாகிஸ்தானின் ரஹீம் யார்கான் பகுதி விமான நிலையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாண்டிநீக்ரோ நகரத்தில் ஒரு சாலைக்கும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானமியின் பயிற்று விக்கும் அறைக்கும், அல்பேனியாவின் வடக்குபகுதியான குகீஸ் நகர விமான நிலையத்திற்கும், ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் பல்கலைக்கழகத்திற்கும் செச்சினியாவின் பள்ளிக்கூடம் ஒன்றிற்கும் ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பஹ்ரைனில் ‘ஸாயெத் டவுன்’ என்ற பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் லர்கானா சிந்த் மருத்துவமனை, லாகூர் பஞ்சாப் மருத்துவமனை, ரஹிம் யார்கானில் கல்லூரி மற்றும் மருத்துவமனை, குவைத் நகரின் ஐமுனைப் பாதை, ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையின் கோபுரம். துனீஷியாவின் ஒரு குடியிருப்புப்பகுதி ஆகியவற்றிற்கும் ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அவர்களின் பெயர் சூட்டப்பட்டது. 
ஆறு முறை திருமணமான ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அவர்களுக்கு, கலீஃபா பின் ஸாயெத், சுல்தான் பின் ஸாயெத், முஹம்மது பின் ஸாயெத், ஹம்தான் பின் ஸாயெத், ஹஸ்ஸா பின் ஸாயெத், தஹ்னூன் பின் ஸாயெத், மன்சூர் பின் ஸாயெத், அப்துல்லாஹ் பின் ஸாயெத், அல்யஸியா பின் ஸாயெத், ஷம்மா பின் ஸாயெத், சைஃப் பின் ஸாயெத், தனா பின் ஸாயெத், அஹ்மெத் பின் ஸாயெத், ஹமீத் பின் ஸாயெத், உமர் பின் ஸாயெத், காலித் பின் ஸாயெத், சயீத் பின் ஸாயெத், ஃபலாஹ் பின் ஸாயெத், நஹ்யான் பின் ஸாயெத், தைய்ப் பின் ஸாயெத், இஸ்ஸா பின் ஸாயெத் நாசர் பின் ஸாயெத், ஆகிய 22 மகன்களும், ஷம்ஸா பின்த் ஸாயெத், அஃப்ரா பின்த் ஸாயெத், மௌசா பின்த் ஸாயெத், வதீமா பின்த் ஸாயெத், ஷெய்கா பின்த் ஸாயெத், ரோதா பின்த் ஸாயெத் என்று ஏழு மகள்களும் உள்ளனர். இவருக்குப்பின் இவர் மூத்த மகன் கலீஃபா பின் ஸாயெத் அல் நஹ்யான் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்.
இவர் ராயல் மிலிட்டரி அகாடமி சன்துர்ஸ்டில் இராணுவத்திற்கான பட்டம் பெற்றவர். அபுதாபியின் கிழக்குப்பகுதிக்கு மேயராகவும், அல் அய்ன் பகுதி நீதித்துறைக்குத் தலைவராகவும் இருந்தார். 1969 ல் அபுதாபியின் பட்டத்து இளவரசராகவும், இராணுவ மந்திரியாகவும் நியமிக்கப்பட்டார். கலீஃபா பின் ஸாயெதுக்கு, முஹம்மது அல் நஹ்யான், சுல்தான் அல் நஹ்யான் என்று இரு மகன்கள் உண்டு. அபுதாபியில் பல துறைகளில் மந்திரியாகப் பணியாற்றி இருக்கிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தந்தை நோய்வாய்ப்பட்டிருந்த போது தற்காலிகமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராகச் செயலாற்றி இருக்கிறார். துபாயிலிருக்கும் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் துபாய் இவரைக் கௌரவிக்கும் விதமாக ‘புர்ஜ் கலீஃபா’ என்று பெயர் மாற்றப்பட்டது. 2005 ல் ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 100% ஊதிய உயர்வு கொடுத்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். இவர் மேற்கத்திய கலாச்சாரத்தில் கொஞ்சம் ஈடுபாடு கொண்டவர். குதிரை மற்றும் ஒட்டகப்பந்தயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். 2010 ல் அமெரிக்கா கலீஃபா பின் ஸாயெதை தூரத்திலிருக்கும் கவர்ச்சி இல்லாத மனிதர் என்று கூறியதாக ‘விக்கி லீக்ஸ்’ இணைய தளம் வெளியிட்டிருந்தது. லிபியாவில் மாம்மர் கட்டாஃபிக்கு எதிராக அமைத்த நேட்டோ படைக்கு இராணுவத்தை அனுப்பினார். சீசெல்ஷின் முக்கிய தீவான மாஹீயில் 66 ஏக்கரில், 2 மில்லியன் டாலரில் பிரமாண்டமான அரண்மனை கட்டியுள்ளார் என்று சீசெல்ஷ் அரசு அறிவித்தது. இந்த அரண்மனை கட்டுவதால் குடிநீர் விநியோகம் தடைபடும் என்று சீசெல்ஷ் அரசு பொது நிறுவனம் கூறியது. அதற்கு சுற்றுச்சூழல் துறை மந்திரி அதுபோல் ஆகாமல் கலீஃபா அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என உறுதி அளித்தது. துபாயின் அஸ்கான் என்னும் கட்டுமான நிறுவனம் இந்த அரண்மனையைக் கட்டும் பணியை 2010 ல் மேற்கொண்டது. அதில் பிழை ஏற்பட்டு ஆறு போல் தண்ணீர் ஏறக்குறைய 8000 குடும்பங்களுக்கான தண்ணீர் அப்பகுதி முழுதும் ஓடியது. உடனடியாக செல்சிஷின் அரசு நிர்வாகமும், கலீஃபாவால் அனுப்பப்பட்ட பொறியாளர்களும் விரைந்தனர். விசாரணையில் துபாயின் அஸ்கான் கட்டுமான நிறுவனத்தின் தவறினால் தான் இதுபோல் ஆனது என்றும் கண்டறிந்து 81,000 டாலர் சீசெல்ஷுக்கு அபராதம் செலுத்தச் சொன்னது. அஸ்கான் இத் தவறு எதிர்பாராத சீதோஷ்ண நிலையால் ஆகியது என்று வாதாடியது. கலீஃபா பின் ஸாயெத் அவர்கள் உடனடியாக 15 மில்லியன் டாலர்கள் கொடுத்து மலைப்பாதையில் செல்லும் ஒட்டுமொத்த தண்ணீர் குழாய்களையும் நீக்கி புதிய குழாய் அமைத்துக் கொள்ளச் செய்தார். சீசெல்ஷ் அரசாங்கம் அஸ்கான் நிறுவனத்தை பாதிக்கப்பட்ட 360 குடும்பங்களுக்கு தலா 8,000 டாலர் கொடுக்கச் சொன்னது.   

ஐக்கிய அரபு அமீரக வரலாறு 5

துபாய் அமீரக வரலாறு

18 ம் நூற்றாண்டு வரை துபாயின் வரலாறுகள் அவ்வளவாகப் பதிவு செய்யப்படவில்லை. 1993-1998 ல் அபுதாபியிக்கும், துபாய்க்கும் இடையில் ‘ஷெய்க் ஸாயெத் சாலை’ என்று பெரும் சாலை போடப்பட்டது. அதற்காக தோண்டும்போது, மான்குரோவ் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் சதுப்புநில மரவகை கண்டுபிடிக்கப்பட்டது. இம் மரப்படிவம் தோராயமாக கி.மு. 7000 ஆண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டு மனிதர்கள் வாழ்ந்த அடையாளத்தைச் சொன்னது. இந்தச் சாலைக்கும் தற்போது ஜெபெல் அலி துறைமுகம் அமைந்துள்ள கடற்கரைக்கும் 3 கி.மீ தூரத்திற்கு மேலுள்ளதால், சாலையில் அம்மரம் இருந்த பகுதிவரை கி.மு 3000 த்தில் கடற்கரைப்பகுதி இருந்ததாகக் கணித்தார்கள். இங்கு கால்நடைகளுடன் கூடிய பழங்குடியினர் வளமாக வாழ்ந்திருக்கிறார்கள். கி.மு 2500 க்குப் பிறகு, இங்கு பேரீச்சை மரங்கள் தோன்ற மக்கள் விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். இந்த மேய்ச்சல்காரர்கள் அஸ்த் என்னும் அரபு பழங்குடியினரின் சிலையான பஜிர் (பஜிரா) என்றதை தெய்வமாக வழிபட்டு வந்தார்கள். சில ஆராய்ச்சியாளர்கள் சுமேரிய நாகரீகத்தின் ஒரு பிரிவான மகன் கூட்டத்தார் இங்கு வாழ்ந்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். ஏனென்றால் இந்த மகன் கூட்டத்தாரின் படிமங்கள் அருகாமை பஹ்ரைனில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. கி.மு. 2000 க்குப் பிறகு எந்த ஆதாரமும் மனிதர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் துபாயில் கிடைக்கவில்லை. ஈரானை ஆட்சி செய்த அகாயிமெனிட்களும், சஸ்ஸானியர்களும் கவர்னர்கள் ஆளக்கூடிய சில பகுதிகளுக்கு சட்ரபி என்று அழைப்பார்கள். அப்படியான ஒரு சட்ரபியாக மனிதர்கள் நடமாட்டமில்லாத பகுதியாக பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, துபாய் இருந்தது. பின்னர் தற்போதைய ‘ஜுமெய்ராஹ்’ என்ற இடத்தில் கடற் கரையோரப் பகுதியில் வரும் படகுகளிலிருந்து பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் 6 ம் நூற்றாண்டிலிருந்து நிறுத்தப்பட்டிருந்தன.
7 ம் நூற்றாண்டிலிருந்து உமய்யாத்கள் ஆட்சியில் துபாயில் இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டது. உமய்யாத்கள் துபாய் பகுதியை மீன், முத்துக்குளிப்பு ஆகிய வாணிபங்களுக்கு முக்கிய இடமாக ஆக்கி இங்கிருந்து இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கு வாணிபம் செய்தார்கள். எழுத்து மூலமாக துபாய் 1095 ல் அபூ உபைத் அப்த் அல்லாஹ் அல் பக்ரி என்பவர் மூலம் “மொஜம் மா ஒஸ்தோஜம் மென் அஸ்மாயீ அல் பிலாத் வல் மவத்யீ” என்ற நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. காஸ்பிரோ பால்பி (GASPERO BALBI) என்ற வெனீஷிய முத்து வியாபாரி 1580 ல் இங்கு வருகை தந்து பல வெனீஷிய முத்துக்குளிப்பவர்களுடன் பணி புரிந்திருக்கிறேன் என்று பதிவு செய்திருக்கிறார். 19 ம் நூற்றாண்டில் அபுதாபியின் ஆதரவில் பனி யாஸ் பழங்குடியின் ஒரு பிரிவான அல் அபு ஃபலாசா (அல் ஃபலாசி குடும்பத்தினர்) என்ற அரசவம்சம் துபாயை ஆட்சி செய்தது. நாளடைவில் பெருகிப்போன அல் ஃபாலாசிக் குடும்பத்திலிருந்து பிரிந்த இன்னொரு குடும்பமான அல் மக்தூம் 1833 ல் துபாயின் ஆட்சிக்கு வந்தது. இவர்கள் அப்போது 800 பேர் அடங்கிய பழங்குடிகளாக மக்தூம் பின் புட்டி என்பவர் தலைமையில் இருந்தார்கள்.
துபாயின் ஆட்சியாளர்களாக 1833-1852 வரை ஷெய்க் மக்தூம் பின் புட்டி பின் சுஹைல், 1852-1859 வரை ஷெய்க் ஸயத் பின் புட்டி, 1859-1886 வரை ஷெய்க் ஹுஷுர் பின் மக்தூம், 1886-1894 வரை ஷெய்க் ராஷித் பின் மக்தூம், 1894-1906 வரை ஷெய்க் மக்தூம் பின் ஹுஷூர், 1906-1912 வரை ஷெய்க் புட்டி பின் சுஹைல், 1912-1929 வரை இரண்டாம் ஸயீத் பின் மக்தூம், 1929 ல் ஏப்ரல் மாதம் மூன்று நாட்கள் மட்டும் ஷெய்க் மனி பின் ராஷித், 1929-1958 வரை இரண்டாம் ஸயீத் பின் மக்தூம் இரண்டாம் முறையாக, 1958-1990 வரை ஷெய்க் இரண்டாம் ராஷித் பின் ஸயீத் அல் மக்தூம், 1990-2006 வரை ஷெய்க் மூன்றாம் மக்தூம் பின் ராஷித் அல் மக்தூம், 2006 லிருந்து தற்போது வரை ஷெய்க் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஆட்சி செய்து வருகிறார். இவர்களின் முந்தைய ஆட்சியாளர்களின் வரலாறுகள் அவ்வளவாகக் குறிப்பிடப் படவில்லை. 1929-1958 வரை இரண்டாம் ஸயீத் பின் மக்தூம் இவர் “எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்” தலைவர் அஹ்மத் பின் ஸயீத் அல் மக்தூமுடைய தந்தை ஆவார். இவருடைய ஆட்சி திடீரென்று மூன்று நாட்களுக்கு பறிக்கப்பட்டு தூரத்து உறவினர் ஷெய்க் மனி பின் ராஷித் வசம் போனது. தற்போதைய ஆட்சியாளருக்கு இவர் பாட்டனார் ஆவார். 1929-1958 வரை இரண்டாம் ஸயீத் பின் மக்தூம் ஆட்சியில் முத்துக்குளிப்பு வாணிபம் வீழ்ந்து பொருளாதாரம் தடைப்பட்டது. இருந்தாலும் இவர் மற்ற வாணிபங்களில் கவனம் செய்து வீழ்ச்சியை சரி செய்தார். இவருக்குப்பின் 1958-1990 வரை ஆட்சி செய்த ஷெய்க் இரண்டாம் ராஷித் பின் ஸயீத் அல் மக்தூம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஜனாதிபதியாகவும் இருந்தார். இவர் சிறிய அளவில் இருந்த துபாயின் வாணிபத்தை துபாய் க்ரீக் என்ற துறைமுகத்தின் வாயிலாக சர்வதேச அளவில் விரிவு படுத்தினார். இவர் மொழிந்த, “எனது பாட்டனார் ஒட்டகத்தில் சவாரி செய்தார். என் தகப்பனார் ஒட்டகத்தில் சவாரி செய்தார். நான் மெர்சிடிஸ் என்னும் விலையுயர்ந்த காரில் சவாரி செய்கிறேன். என் மகன் லாண்ட் ரோவர் என்னும் காரில் சவாரி செய்வார். அவர் மகனும் லாண்ட் ரோவர் காரில் சவாரி செய்வார். ஆனால், அவரின் மகன் மீண்டும் ஒட்டகத்தில் சவாரி செய்வார்” என்பது முத்தான வார்த்தைகளாகக் கருதப்படுகிறது. அதாவது 1969 ல் ஏற்றுமதி செய்யப்பட்ட துபாயின் எண்ணெய் வளம் சில காலங்களில் வற்றிவிடும் என்பதைக் கணித்துச் சொல்லப்பட்டதாகவும் கருதப்படுகிறது. ஆனால் இவர் ஆரம்பித்து வைத்த துபாயின் சர்வதேச வாணிபம் அந்த எண்ணெய் இழப்பீட்டைச் சரி செய்துவிடும் என்று எண்ணப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரக வரலாறு 6

ஷெய்க் ராஷித் அவர்களால் 1972 ல் துவக்கப்பட்ட ராஷித் துறைமுகம் (PORT RASHID-MINA PORT) துபாயின் பொருளாதாரத் துறைமுகமாக விளங்கியது. அப்போது சரக்குகளை கப்பலிலிருந்து இறக்க இரண்டு பளுதூக்கும் இயந்திரங்களும் (CRANE) 100,000 குறைவான எடையைக் கையாளும் வசதியுடன் தான் இருந்தன. 1978 ல் கப்பல் நிறுத்தும் இடம் (BERTH) 32 ஆக விரிவு படுத்தப்பட்டு, அதில் ஐந்து கப்பல் நிறுத்தும் இடங்கள் மிகப்பெரிய கப்பல்கள் நிறுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டது. தற்போது ஆழம் 13 மீட்டராக்கப்பட்டு 9 பளுதூக்கும் இயந்திரங்களுடன் 1,500,000 எடை கையாளும் வண்ணம் விரிவுபடுத்தப் பட்டிருக்கிறது. ஷெய்க் ராஷித் அவர்களால் 1975 ல் பர் துபாய் என்னும் பகுதியிலிருந்து துபாய் க்ரீக்கின் கீழே கடலுக்கடியில் கடந்து மறுமுனை அல் ராஸ் (DEIRA) என்னும் பகுதியை அடைய “அல் ஷிண்டகா” என்னும் நீர்அடி சாலைப்பாதை அமைக்கப்பட்டது. இது இரண்டிரண்டாக நால்வழிப் பாதையும், ஐந்து மீட்டர் உயரமும், 60 கி.மீ வேகத்தில் செல்லும் வகையிலும் கட்டப்பட்டது. துபாய் நகரின் தென்மேற்குப் பகுதியில் 45 கி.மீ தொலைவில் போர்ட் ராஷிதுக்கு இணையாக போர்ட் ஜெபெல் அலி என்ற துறைமுகம் 1979 ல் கட்டப்பட்டது. 1978 ல் ஷெய்க் ராஷித் அவர்கள் துபாய் உலக வாணிப மையம் (DUBAI WORLD TRADE CENTRE) கட்டினார். 149 மீட்டர் உயரத்தில் 39 அடுக்குகளைக் கொண்டது இது. 1978 ல் இதுதான் அந்தப்பகுதியில் மிக உயர்ந்த கட்டிடம். பல பிரபலமான வெளிநாட்டு அலுவலகங்கள் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் 100 திர்ஹம் மதிப்புள்ள பணத்தில் அச்சடிக்கப் பட்டிருக்கிறது. 1970 க்கு முன்பு இயற்கையாக இருந்த துபாய் க்ரீக் எனப்படும் கடல்நீர் கால்வாய் துபாயின் ராஸ் அல் கோர் பறவைகள் சரணாலயம் வரை நீண்டிருக்கும். இது துபாயை பர் துபாய் மற்றும் தேரா துபாய் என்று இரண்டாகப் பிரிக்கும். பர் துபாய் பகுதியில் அமைந்துள்ள க்ரீக்கின் கரையில் 19 ம் நூற்றாண்டுகளில் அல் மக்தூம் குடும்பத்தினர் குடியிருந்தார்கள். ஷெய்க் ராஷித் ஆட்சி காலத்தில் கிழக்கு ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற பகுதிகளிலிருந்து வரும் சிறிய கப்பல்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டது. நகருக்குள் துறைமுகம் அமைந்த ஒரே இடம் துபாய் தான். ஒரு காலத்தில் மீன்பிடியும், முத்துக்குளிப்பும் பிரதானமாக இருந்த துபாய் க்ரீக் காலப்போக்கில் சிறிய படகுகளுக்கான நவீன துறைமுகமானது. இப்பகுதியில் கப்பல்களைப் பழுதுபார்க்க 1971 ல் துபாய் ட்ரைடாக் என்று ஒரு உலர் துறைமுகம் துவக்கப்பட்டு 1983 ல் முடிவு பெற்றது. இதுவும் ஷெய்க் ராஷித் அவர்களின் காலத்தில் தான் கட்டப்பட்டது. பெர்ஷிய வளைகுடாவில் மிகப்பெரிய கப்பல் பழுதுபார்க்கும் உலர்துறை இதுதான். இதுவரை 6000 கப்பல்கள் வரை பழுதுபார்த்து சாதனை செய்திருக்கிறது. 1994 லிருந்து துபாய் ட்ரைடாக்கில் புதிய கப்பல்களும் தயாரிக்கத் துவங்கின. இதுவரை 70 கப்பல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
1946 லிருந்து துபாய், அபுதாபிக்கு இடையிலிருந்த ஆயுதம் ஏந்திய எல்லைப்பிரச்சினையை ஷெய்க் ராஷித் அவர்கள் தீர்த்துவைத்து, அபுதாபியின் ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அல் நஹ்யானுடன் நல்லுறவை வளர்த்தார். மேலும் கதார் நாட்டுடனும் நட்புடன் இருந்து தன் மகளை 1961 ல் கதார் எமிருக்கு மணமுடித்துக் கொடுத்தார். 1966 ல் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தபோது, ஷெய்க் ராஷித் அவர்கள் கதார் நாட்டுடன் சேர்ந்து கல்ஃப் ருபீ என்ற பணத்தை புழக்கத்தில் வைத்துக் கொண்டார். அதேகாலகட்டத்தில் அபுதாபி பஹ்ரைனுடன் சேர்ந்து பஹ்ரைன் தினார் என்பதை புழக்கத்தில் வைத்துக் கொண்டது. துபாய் க்ரீக்கை தோண்டுவதற்கு அப்போது குவைத் நாட்டு எமிர் “க்ரீக் ஒப்பந்தம்” ஒன்றை ஏற்படுத்தி பொருளுதவி செய்தார். ஐக்கிய அரபில் இருந்த மற்ற அமீரகங்களை ஒன்றிணைக்கப் பாடுபட்டார். ஐக்கிய அரபு அமீரகங்களுக்கென தனி நாணயம் கொண்டுவருவதிலும் துணை நின்றார். 1979 ல் துபாய் நகரத்தை விட்டு தள்ளி தனியாக ஜெபெல் அலி என்ற துறைமுகத்தைக் கட்டினார். இதுதான் உலகிலேயே முழுக்க மனித கரங்களால் (MANMADE HARBOUR) ஆன துறைமுகம். 1985 ல் இத்துறைமுகத்தின் உள்ளேயே ‘ஜெலெல் அலி ஃப்ரீ ஸோன்’ என்று சர்வதேச நிறுவனங்களுக்காக வரி இல்லாத சட்டத்துடன் அலுவலகம், சரக்கு கையாளும் கூடங்கள், தொழிலாளர்கள் குடியிருப்புகள், மருத்துவமனை என்று எல்லாம் அமைத்தார்.
ஷெய்க் ராஷித் அல் மக்தூம், ஷெய்க் ஹம்தான் பின் ஸாயெத் அல் நஹ்யான் என்பவரின் மகள் ஷெய்கா லதிஃபா பிந்த் ஹம்தான் என்பவரை மணந்திருந்தார். இவருக்கு மக்தூம் பின் ராஷித் அல் மக்தூம், ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம், முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம், அஹ்மது பின் ராஷித் அல் மக்தூம் என்று நான்கு மகன்களும், லதீஃபா பிந்த் ராஷித் அல் மக்தூம், ஃபாதிமா பிந்த் ராஷித் அல் மக்தூம் என்று இரண்டு மகள்களும் இருந்தார்கள். ஷெய்க் ராஷித் அவர்கள் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் துபாயின் சாலைகளிலும், சந்தைகளிலும் காரிலும், நடந்தும் மக்களோடு மக்களாய் புழங்கினார். இதற்கு துபாயில் வசித்த நமது முன் சந்ததி சாட்சியாக இருக்கிறது. 1990 அக்டோபரில் ஷெய்க் ராஷித் அவர்கள் மரணமடைந்தார்.
அதன்பிறகு, அவர் மூத்த மகன் மக்தூம் பின் ராஷித் அல் மக்தூம் துபாயின் ஆட்சியாளராக வந்தார். இவரை மூன்றாம் மக்தூம் என்றும் அழைப்பார்கள். அல் ஃபலாசி ஆட்சிவம்ச குடும்பத்தினரின் இருப்பிடமான அல் ஷிண்டகாவில் 1943 ஜனவரியில் பிறந்தார். 1971 ல் ஐக்கிய அரபு அமீரகங்கள் தோன்றிய பின் முதல் பிரதம மந்திரியாக எட்டு ஆண்டுகள் இருந்தார். அதன் பிறகு தந்தையார் ஷெய்க் ராஷிதே பிரதம மந்திரி பதவியில் இறக்கும் வரை இருந்தார். அவர் இறந்த பிறகு, மீண்டும் பிரதம மந்திரியானார். ஐக்கிய அரபு ஆமீரகங்களின் அதிபர் ஷெய்க் ஸாயெத் அவர்கள் இறந்த போது தற்காலிகமாக இரண்டு நாட்களுக்கு அதிபர் பதவியிலும் இருந்தார். துபாயை மற்ற சகோதரர்கள் ஷெய்க் ஹம்தான் (ஐக்கிய அரபு அமீரகங்களின் பொருளாதார மந்திரி) மற்றும் ஷெய்க் முஹம்மது (ஐக்கிய அரபு அமீரகங்களின் இராணுவ மந்திரி) ஆகியோருடன் இணைந்து ஆட்சி செய்தார். இந்த மூன்று சகோதரர்களும் சேர்ந்து உலகப் புகழ்பெற்ற “கோடோல்ஃபின் ஸ்டாபிள்ஸ்” என்னும் சர்வதேச குதிரைப் பந்தய நிறுவனத்தை நடத்தினார்கள். 2006 ஜனவரியில் ஆஸ்திரேலியாவின் குயிஸ்லாந்து மாகாணத்தில் கோல்ட் கோஸ்ட் என்ற தீவில் ப்ளாஸோ வெர்சாஸ் என்ற விடுதியில் ஓய்வில் இருந்த போது மாரடைப்பால் மரணமடைந்தார். இவருக்குப் பின் இளைய சகோதரர் ஷெய்க் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஆட்சிக்கு வந்தார்.


ஐக்கிய அரபு அமீரக வரலாறு 7

1949 ல் பிறந்த ஷெய்க் முஹம்மது 2006 ல் ஆட்சிக்கு வந்தவுடன் ஐக்கிய அரபு அமீரகங்களை உலக அரங்கில் சிறந்த நாடாக கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டார். நான்கு வயதில் பிரத்யேகமாக அரபு மற்றும் மார்க்க கல்வி பயின்றார். 1955 லிருந்து அல் அஹ்மதியா, அல் ஷாப், துபாய் செகண்டரி ஸ்கூல் என்ற பள்ளிகளில் பயின்றார். தனது ஒன்றுவிட்ட சகோதரர் முஹம்மது பின் கலீஃபா அல் மக்தூமுடன் இணைந்து பெல் எஜுகேஷன் ட்ரஸ்ட் இங்கிலீஷ் லாங்க்வேஜ் என்ற இங்கிலாந்து பள்ளியில் பயின்றார். மான்ஸ் கேடெட் ட்ரைனிங் ஸ்கூலில் ஆல்டெர்ஷாட் நகரத்தில் பயின்றார். அங்கு காமன்வெல்த் மாணாக்கர்களில் முதல் மாணவனாக ஸ்வார்ட் ஆஃப் ஹானர் மரியாதையைப் பெற்றார். விமானப் பயிற்சிக்காக இத்தாலிக்கும் சென்றார். 22 வயதில் தந்தையும், ஷெய்க் ஸாயெத் அவர்களும் ஏழு அமீரகங்களை ஒன்றிணைக்க ‘அர்கூப் எல் செதிரா’ என்ற பாலைவனத்தில் நடத்திய பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார். ஐக்கிய அரபு அமீரங்களின் முதல் பொருளாதார மந்திரியாக 1971 ல் பதவி ஏற்றார். ஷெய்க் முஹம்மது இராணுவப்பயிற்சி முடிந்து துபாய் வந்த போது அவர் தந்தை இவரை துபாய் போலீஸ் மற்றும் தனியாக இயங்கிய துபாய் இராணுவத்திற்கும் தலைவராக நியமித்தார். 1972 ஜனவரியில் ஷார்ஜாவின் ஆட்சியாளராக இருந்த ஷெய்க் காலித் பின் முஹம்மது அல் கசீமிக்கு எதிராக முன்பு வெளியேற்றப்பட்ட ஷார்ஜா ஷெய்க் சக்ர் பின் சுல்தான் அல் கசிமீ சில அரபு பழங்குடியினருடனும், ராஸ் அல் கைய்மாஹ் வழியாக ஊடுருவிய சில எகிப்திய படைகளுடன்  சேர்ந்து கலகம் செய்தார். இதை முன்னின்று ஷெய்க் முஹம்மது அவர்கள் அடக்கினார். 
1973 ல் ஜப்பானுக்கு எதிராக ஜாப்பனீஸ் ரெட் ஆர்மி மெம்பெர்ஸ் என்ற தீவிரவாதிக்குழு ஒசாமா மரூவ்கா என்பவன் தலைமையில் துபாயிலிருந்து சென்ற JAL 404 என்ற பயணிகள் விமானத்தைக் கடத்தினான். அவர்களை லிபியாவில் சுட்டு வீழ்த்தி காப்பாற்றினார். அதேபோல் KML 861 என்ற பயணிகள் விமானத்தை மூன்று பேர் கொண்ட குழு கடத்த பேச்சுவார்த்தை நடத்தி வெற்றிகரமாக பயணிகளை விடுவித்தார். கல்ஃப் ஏர் என்னும் நிறுவனத்துடன் கூட்டாக இருந்த போது துபாயின் திறந்த வான்வெளி சட்டத்தை அவர்கள் எதிர்த்ததால் துபாயின் விமானத்துறையை தனியாக “எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்” என்று 10 மில்லியன் டாலரில் பிரமாண்டமாகத் துவக்கினார். அதை இன்றளவும் உலகின் தலைசிறந்த விமான நிறுவனங்களில் ஒன்றாக ஆக்கினார். துறைமுகங்களின் நிர்வாகத்தில் துபாய் வேர்ல்ட் என்னும் நிறுவனத்தை உலகில் முக்கியமாக ஆக்கினார். புர்ஜ் அல் அரப் ஹோட்டலை உலகின் முதல் செழிப்பான ஹோட்டலாக ஆக்கினார். 1989 ல் முதல் துபாய் ஏர்ஷோவைத் துவக்கினார். ஐக்கிய அரபு அமீரக அரசை (ஏழு அமீரகத்தையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் ஆட்சியாளரை தேர்ந்தெடுக்கும் முறை) பொது அரசாங்கமாக்கினார். “ஐக்கிய அரபு அமீரகங்கள் பார்வை 2021” என்ற எண்ணத்தை உருவாக்கி வருங்கால வெற்றிக்கு பாடுபட்டு வருகிறார். துபாயை அனைத்துத் துறைகளிலும் எமிரேட் ஏர்லைன்ஸ், துபாய் ஹோல்டிங், க்ளோபல் சிட்டி, ஜுமெய்ராஹ் க்ரூப், துபாய் இண்டெர்நெட் சிட்டி, துபாய் மீடியா சிட்டி, துபாய் இண்டர்நேஷனல் ஃபைனான்ஸ் சென்டர், பால்ம் ஐலண்ட், புர்ஜ் அல் அராப், புர்ஜ் கலீஃபா என்று சர்வதேச அளவில் உயர்த்தினார். ஆறு நாடுகளின் பந்தயக் குதிரைகளை மருத்துவம் மற்றும் அனைத்து பராமரிப்புகளையும் செய்யும் நிறுவனமான “டால்லெய்” என்பதை தன் சொந்த நிறுவனமாக துவக்கியுள்ளார். 2012 ல் FFI வேர்ல்ட் எண்டூரன்ஸ் சாம்பியன் போட்டிக்காக 160 கி.மீ தூரம் ‘மத்ஜி டு போண்ட்’ என்ற குதிரையில் பந்தயத்தில் கலந்து கொண்டிருக்கிறார். அரபு மொழியில் கவிதைகள் எழுதுவார்.   
 ஷெய்க் முஹம்மது அவர்கள் ஊழலை ஒழிக்கும் விதமாக 2001 ல் துபாய் சுங்க இலாகாவின் தலைவராக இருந்த ஒபைத் சக்ர் பின் புஸித்தைக் கைது செய்தார். இரண்டாண்டு ரகசிய விசாரனை செய்து மூன்று அரபுகளையும், ஆறு மூத்த அதிகாரிகளையும், 14 அதிகாரிகளையும் ஒட்டு மொத்தமாகக் கைது செய்தார். அதேபோல் தேயார் (DEYAAR REAL ESTATE) என்னும் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் 20 மில்லியன் திர்ஹாம்கள் சமீபத்தில் ஊழல் செய்திருந்தார். அவரையும் 10 ஆண்டுகள் சிறையில் அடைத்தார். 1967 ல் முதல்முறையாக குதிரைப்பந்தயத்தில் கலந்து கொண்ட ஷெய்க் முஹம்மது அவர்கள் குதிரையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். பல பரிசுகளையும் இதில் வென்றுள்ளார். 2006 ல் நடந்த 15 வது ஆசிய விளையாட்டில் இவர் மகன் ராஷித் எண்டூரன்ஸ் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார். இவரது மகன்கள் ராஷித், அஹ்மத், மஜீத் மற்றும் ஹம்தான் ஆகியோர் கூட்டு எண்டூரன்சில் தங்கப்பதக்கம் வென்றார்கள். இவரது மகள் லதீஃபா தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவரது இன்னொரு மகள் மைய்தா டீக்வொண்டோவில் நடந்த விளையாட்டுப் போட்டிக்கு தலைமை தாங்கினார். 2013 ல் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய கால்பந்து அணி வென்றபோது 50 மில்லியன் திர்ஹாம்கள் பரிசாகக் கொடுத்தார். இவரது மனைவி 25 மில்லியன் திர்ஹாம்களும், இவர் பேரர்கள் 12 மில்லியன் திர்ஹாம்களும் அணிக்குக் கொடுத்தார்கள். ஷெய்க் முஹம்மது அவர்கள் 2011 பாகிஸ்தான் வெள்ளத்தின் போது, கலீஃபா பின் ஸாயெத் அல் நஹ்யானின் வழிகாட்டுதல் படி உதவினார்கள். பாலஸ்தீனின் காஸா பகுதியில் 600 குடியிருப்புகளும், ஆப்கானிஸ்தானுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பண உதவியும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லையில் 15,000 பேர்களுக்கு தற்காலிக குடியிருப்பும் கட்டிக் கொடுத்தார். 2000 ல் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் மாகாணத்தில் ஒரு மசூதி கட்ட 4 மில்லியன் யூரோக்கள் கொடுத்தார். 
ஷெய்க் முஹம்மதுவுக்கு முதல் மனைவியாக ஹிந்த் பிந்த் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூமை 1979 ல் மணந்தார். இவர் 12 குழந்தைகளுக்குத் தாயார் ஆவார். அதில் 1982 ல் பிறந்த ஆட்சிக்குரிய ஹம்தான் பின் முஹம்மது அல் மக்தூமும் ஒருவர். அடுத்து 2004 ல் ஜோர்டானின் மன்னர் ஹுசெய்னின் மகள் இளவரசி ஹாயா பிந்த் அல் ஹுசெய்னை மணந்தார். இவர் மூலம் 2007 ல் அல் ஜலீலா என்ற மகளும், 2012 ல் ஸாயெத் என்ற மகனும் பிறந்தார்கள். மகன் பிறந்ததை ஷெய்க் முஹம்மது தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்தார். இளவரசி ஹாயா 2000 ம் ஆண்டு சம்மர் ஒலிம்பிக்கில் ஜோர்டான் குதிரை விளையாட்டில் முதல் இஸ்லாமிய அரச குடும்பத்துப் பெண்ணாகக் கலந்து கொண்டார். சர்வதேச ஈக்வெஸ்டேரியன் சங்கத்திற்கு தலைவராகவும் இளவரசி ஹாயா இருமுறை இருந்தார். ஷெய்க் முஹம்மதுவுக்கு 10 ஆண் குழந்தைகளும், 14 பெண் குழந்தைகளும் உள்ளனர். இதில் நால்வர் மத்திய கிழக்கின் அரச குடும்பத்திற்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டனர். கப்பல் பணியாட்களுடன் சேர்த்து 115 பேர் தங்கும் வசதியுடன் 162 மீட்டர் நீளமுள்ள யாட் (YACHT) எனப்படும் உல்லாசப்படகை சொந்தமாக வைத்திருக்கிறார். “துபாய்” என்ற பெயரிலுள்ள இந்த உல்லாசப்படகு ஜெர்மனியின் லாம் வாஸ் (BLOHM+VOSS) என்ற நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்டது. ஷெய்க் முஹம்மது அவர்களின் படகு லோகோ (பால்ம் தீவு- துபாய்) தீவில் நிற்பதை கூகுள் எர்தில் காணலாம். இவர் குடும்பத்தின் சொத்து மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.
2005 ல் ஐக்கிய அரபு அமீரகங்கள் பாகிஸ்தான், சூடான், மாரிடானியா மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த குழந்தைகளை ஒட்டகப் பந்தயத்திற்கு பயன்படுத்துவதாக யூனிசெஃப் நிறுவனம் குற்றம் சாட்டி, அனைத்துக் குழந்தைகளுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டு சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். 2006 ல் ஷெய்க் முஹம்மது தனிப்பட்ட முறையில் ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகளை ஒட்டகப் பந்தயத்திற்கு பயன்படுத்துவதாக அமெரிக்காவின் ஃப்ளோர்டா மாகாணத்தில் முதல்தர வழக்கு தொடரப்பட்டது. இவர் சார்பில் வாதிட்ட அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவர் அமெரிக்காவைச் சேர்ந்தவராக இல்லாததால் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டினார்கள். மேலும் ஐ.நாவின் சேவை குழந்தைகள் மீது மிகவும் கவனமாக இருப்பதாக வாதாட 2007 ல் நீதிபதி செசில்லா அல்டோனாகா வழக்கைத் தள்ளுபடி செய்தார். 2007 ல் லண்டனைச் சேர்ந்த மெட்ரோ என்னும் பத்திரிக்கை தீவிரவாதி காலித் ஷெய்க் முஹம்மதுவுக்கும், ஷெய்க் முஹம்மதுவுக்கும் தொடர்பிருப்பதாக செய்தி வெளியிட்டு பின் மன்னிப்பு கேட்டு மறுப்பு தெரிவித்துக் கொண்டது. 2013 ல் மதுப்பழக்கமும், தவறான உடலுறவு பழக்கமும் கொண்ட மார்டி டலெவ் என்ற பெண்ணை சர்வதேச நாடுகளின் அழுத்தத்தாலும், அதிகப்படியான பத்திரிக்கை செய்தியினாலும் மன்னித்து விடுதலை செய்தார். 2013 ல் “ஹார்ஸ் டேக்” என்று ஒட்டப்பட்ட பெயரில் அபாயகரமான போதை மருந்துகள் துபாய்க்கு ஒட்டகம் சம்பந்தமாக வருகிறது என்று ‘தி டெலிகிராஃப்’ என்ற பத்திரிக்கைக் குற்றம் சாட்டியது. சமீபத்தில் சௌதி அரேபியாவின் மக்கா புனிதப்பள்ளியின் தலைமை இமாம் துபாய் இஸ்லாமியக் கலாச்சாரத்தை விட்டு போய்விட்டதாகவும், மற்ற மத்திய கிழக்கு இஸ்லாமிய நாட்டினர் அங்கு பயணிக்கக் கூடாது என்று கருத்து வெளியிட்டு பின்னர் வற்புறுத்தலால் திருப்பப் பெற்றுக்கொண்டார்.