வியாழன், 9 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 19

ஷஹாப் உத் தின் முஹம்மது ஷாஹ்ஜஹான்  
கூ.செ.செய்யது முஹமது
                            ஷாஜஹான் டெக்கானிலிருந்து திரும்பியதும் அதுவரை தற்காலிக ஆட்சியிலிருந்த குஸ்ருவின் மகன் தாவர் பக் ஷ் பெர்ஷியா வுக்கு தப்பிச் சென்றார். அவரின் ஆதரவாளர்கள் சிறைப்பிடிக்கப்பட்டும், கொலையும் செய்யப்பட்டனர். 1628 பிப்ரவரியில் ஆக்ராவில் ஷாஜஹான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ‘அபுல் மஸஃப்ஃபர் ஷஹாப் உத் தின் முஹம்மத் சாஹிப் கிரானி இ சானீ ஷாஹ்ஜஹான் பாதுஷா காஸி’ என்ற சிறப்புப் பெயரை பெற்றார். இவர் பெயரில் புதிய நாணயங்கள் வெளியிடப் பட்டு, வெள்ளிக்கிழமை தொழுகையில் பெயரும் மொழியப்பட்டது. புதிய சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தார். இஸ்லாமிய சட்டங்களை தீவிரமாக பின்பற்றினார். ஆக்ரா நகரை அக்பராபாத் என்று பெயர் மாற்றி னார். நன்றாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வையும், தரத்தை யும் அதிகப்படுத்தினார். தன் சகோதரி நூர்ஜஹானின் அனைத்து சூழ்ச்சி களையும் முறியடித்து தான் ஆட்சிக்கு வர முழு காரணமான அசஃப் கான் மீது ஷாஜஹான் பெரும் மதிப்பை வைத்திருந்தார்.
   பந்தேளா என்ற ஒரு கூட்டத்தினரின் தலைவன் பீர் சிங் என்பவர் தான் அல்லாமா அபுல் ஃபஸ்ல் என்பவரைக் கொன்றார். இந்த கூட்டத்தினர் அருகாமையில் வசிப்போர்களை மிரட்டி அதிகாரம் செய்து வந்தனர். ஜஹாங்கீரின் ஆட்சி இறுதியில் சற்று பலம் குறைந்த வேளையில் இவர்களின் அதிகாரம் மேலோங்கியது. 1628 ல் பீர்சிங் இறந்த பிறகு அவர் மகன் ஜோஹர்சிங் பிரச்சினை உண்டு பண்ணினார். இதற்காக அரசவை க்கு வந்து விளக்கம் சொல்ல அழைக்கப்பட்டார். தன் மக்களிடம் தனக்கிருக்கும் செல்வாக்கினாலும், மலை சார்ந்த தங்கள் பகுதியில் யாரும் எதுவும் செய்து விட முடியாது என்ற மமதையாலும் அரசவையில் மன்னரிடம் பகையை வளர்த்துக் கொண்டார். தனது இடம் ஓர்ச்சா (உண்ட்சா) வந்த ஜோஹர்சிங் படைகளை கூட்டி, சாலைகளை அடைத்து புரட்சியில் ஈடுபட்டார். ஷாஜஹானும் அதிகாரிகளுக்கு புரட்சியை அடக்க உத்தரவிட்டார். இஸ்லாம்கான், ஃபிரோஸ்கான் மற்றும் மஹபத்கான் ஆகியோர் மூன்று திசைகளில் பந்தேளா கோட்டையைத் தாக்கினார்கள். மூவாயிரம் பேர் மரணமடைய கடும் போருக்கு பிறகு, ஜோஹர்சிங் கைது செய்யப்பட்டார்.
    ஷாஜஹான் ஆட்சிக்கு வந்த முதல் நௌரோஸ் பண்டிகை வெகு சிறப்பாக அரச குடும்பத்தினர், அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் என கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடும்ப உறவினர்களின் பரிசுகளுக் கென ஒரு கோடியே அறுபது லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டது. மொக லாய இராணுவத்தில் கான் ஜஹான் லோதி (சலாபத் கான்) என்பவர் இருந்தார். ஜஹாங்கீர் இறந்த போது இவரும் இராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடிக்க முயற்சித்தார். ஷாஜஹான் ஆட்சிக்கு வந்த பின் பணிவாக நடந்ததால் மன்னிக்கப்பட்டார். டெக்கான் பகுதிக்கு கவர்னராக நியமிக்கப்பட்டார். பின் இவர் அரசவை பணிக்கு அழைக்கபட்டு எட்டு மாதங்கள் இருந்தார். ஆனால் சில சமயம் மறுத்தும், வெறுப்பாகவே பணியைச் செய்தார். இது உளவாளிகள் மூலம் தெரியவர கான்ஜஹானும் அவர் மகனும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இராணுவ பின்புலம் இருந்ததால் பாதுகாப்பைக் கருதி, ஷாஜஹானும், அஸ்ஃப்கானும் அவரை தோல்பூரில் சிறை வைக்க அனுப்பினார்கள். 1630-32 ல் குஜராத், காந்தேஷ், டெக்கான் பகுதியில் கடும் பஞ்சம் நிலவியது. இதனால் பலர் உயிரிழந்த னர். எலும்புத் துகள்களை மாவில் கலந்தும், நாய் கறியை மாமிசத்தில் கலந்தும் சிலர் விற்று வந்தார்கள். பெருமளவு மக்களும் வேறு இடங்களு க்கு குடி பெயர்ந்தார்கள். ஷாஜஹான் எழுபது லட்ச ரூபாய் அளவுக்கு மூன்றிலொரு பங்கு நிலங்களுக்கு வரியை தள்ளுபடி செய்தார். பாதிக்கப்பட்ட இடங்களில் அரசு உணவகங்களைத் திறந்து இலவசமாக சமைக்கப்பட்ட உணவுகளை வழங்கச் செய்தார். அதிகம் பாதிக்கப்பட்ட குஜராத்தின் அஹமதாபாதுக்கு நிறைய செலவிடப்பட்டது. அக்கால கட்டத்தில் இது போன்ற பெரும் பஞ்சத்தை திறமையாக சமாளித்தது ஷாஜஹானின் ஆட்சியில் தான். இதை ஆங்கிலேய சரித்திர ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
    அக்பர் மற்றும் ஜஹாங்கீரால் அனுமதிக்கப்பட்டிருந்த போர்ச்சுகீசியர்கள் ஹூக்ளியின் இருபுறமும் பல தொழிற்சாலைகளை கட்டி இருந்தார்கள். லஞ்சத்தின் மூலம் சுங்கவரி ஏய்பு செய்து வந்தார்கள். மேலும், ஹுப்ளியின் பகுதிகளில் நிலங்களை குத்தகைக்கு எடுத்து ஏழை களை ஏமாற்றி வந்தார்கள். முந்தைய ஆட்சியாளர்கள் அளித்திருந்த சலுகைகளை தவறாக பயன்படுத்தி அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பைச் செய்தார்கள். கொடூரமான முறையில் முஸ்லீம், ஹிந்து மக்களை கப்பலில் மேல்நாடுகளுக்கு கடத்தி அடிமை வியாபாரம் செய் தார்கள். கிறிஸ்தவ மதபோதகர்கள் கடுமையான முறையில் பலரை மதமாற்றம் செய்ய முயன்றார்கள். மும்தாஜின் இரண்டு பணிப்பெண்கள் காணாமல் போனதைப்பற்றி விசாரிக்கும் போது மேற்படி அடிமை கடத்தல் வியாபாரம் தெரியவந்தது. 1631 ல் ஷாஜஹான் காசிம்கான் என்பவரை பெங்காலுக்கு கவர்னராக்கி, அவர்களை மேற்படி போர்ச்சுகீசியர்களின் விசாரித்து நடவடிக்கை எடுக்கச் செய்தார். மேற் கூறியவைகளை கண்டறிந்து மூன்று மாதகாலம் காசிம்கான் அவர்களின் கோட்டயைத் தாக்கினார். இதுவரை நடந்த இழப்புகளுக்கு ஈடாக ஒரு லட்ச ரூபாய் தருவதாகக் கூறி, பேரரசருக்கு சமாதானம் அனுப்பினார்கள். ஆனால் மறைமுகமாக பெரிய தாக்குதலுக்குத் தயாரானார்கள். ஏழாயிரம் துப்பாக்கி ஏந்திய வீரர்களை மொகலாயப்படைகளுக்கு எதிராக தயார் செய்தார்கள். வாணிபத்திற்கென வந்தவர்களின் இந்த செயலினால் பெரும் கோபம் கொண்ட மொகலாயர்கள் கடுமையாகத் தாக்கினார்கள். போர்ச்சுகீசியர்களின் தொழிற்சாலைகள், கோட்டைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. மன்னிப்பு கேட்டு தாங்கள் இஸ்லாமிய ராக (எந்த கொடுஞ்செயலுக்குப் பிறகு ஒருவர் இஸ்லாமியராக மதம் மாற ஒப்புக்கொண்டால் மன்னித்து விடும் பழக்கம் உலகமெங்கும் அனைத்து ஆட்சியாளர்களிடமும் இருந்தது.) மதம் மாற ஒப்புக் கொண்டவர்களை மன்னித்தனர்.  மொகலாயப் படையில் ஆயிரம் வீரர்கள் வரை இறந்தார்கள். பத்தாயிரம் பேர் வரை போர்ச்சுகீசியர்கள் சிறை பிடிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள். இதனால் போர்ச்சுகீசியர்களின் வாணிபம் முடிவுக்கு வந்தது.
           அர்ஜுமண்ட் பானு பேகம் என்ற மும்தாஜ் மஹல் மிகவும் பேரழகும், புத்திகூர்மை வாய்ந்தவராக இருந்தார். அசஃப்கானின் மகளாக இருந்த இவர் மொகலாயப் பேரரசில் புகழ் வாய்ந்த பெண்மனியாக இருந்தார். 1594 ல் பிறந்த மும்தாஜ் மஹல் 1612 ல் ஷாஜஹானை மணந்தார். மும்தாஜ் மஹலின் பேரழகாலும், புத்திசாலித் தனத்திற்காகவும் ஷாஜஹான் இவரை பெரிதும் விரும்பினார். தந்தையிடம் பகையாகி ஊர்ஊராக சுற்றிக் கொண்டிருந்த போது ஷாஜானுக்கு சிறந்த நண்பன் போலவும், ஆலோசனை கூறியவராகவும் இருந்தார். ஷாஜஹான் பதவியேற்றவுடன் ‘மலிகா இ ஸமான்’ என்ற சிறப்புப் பட்டமளிக்கப்பட்டார். எந்த ஒரு விஷயமானாலும் ஷாஜஹான் இவரிடம் கலந்தாலோசனை செய்யாமல் இருந்ததில்லை. அரசின் ராஜமுத்திரையே இவரிடம் பொறுப்பாக கொடுத்து வைக்கப்பட்டிருந்தது. மிகவும் கருணை உள்ளம் கொண்ட இவரால் நம்பிக்கை இழந்த எத்தனையோ குற்றவாளிகளை மொகலாய சிறையிலிருந்து மன்னித்து விடச் செய்தார். சமூக சேவையில் ஆர்வம் கொண்டிருந்த மும்தாஜ் மஹலிடம் உதவி என்று வந்தவர்கள் யாரும் பெறாமல் திரும்பியதில்லை. தனக்கு அரசு அளித்த மாத வருமானத் திலிருந்து பல அநாதை, விதவைகளுக்கு உதவி இருக்கிறார். வசதியற்ற பல பெண்களுக்கு திருமணம் செய்ய உதவினார். 
   இவர் காலத்தில் அந்தப்புர பணிப்பெண்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.  பதினான்கு குழந்தைகளைப் பெற்ற மும்தாஜ் மஹல், ஷாஜஹானின் உறவு மிகவும் புகழ் வாய்ந்தது. கான் ஜஹான் லோதியுடன் புர்ஹான்பூர் என்ற இடத்தில் ஷாஜஹான் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போது, கடுமையான ஒரு பிரசவத்தின் காரணமாக மும்தாஜ் மஹல் மரண மடைந்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு அக்பராபாத்தில் (ஆக்ரா) யமுனா நதிக்கரையில் ‘தாஜ்’ (தாஜ்மஹல்) என்ற நினைவு மண்டபம் கட்டப்பட்டு, இவரின் உடல் அங்கு மாற்றப்பட்டது. உலகிலேயே மனைவியின் அன்பை மற்றவர்களுக்கு பறைசாற்ற பிரமாண்டமான பெரும் நினைவு மண்டபம் கட்டியவர் ஷாஜஹான் ஒருவர் தான். புகழ் பெற்ற காதல் காவியங்களான ரோமியோ ஜூலியட், சலீம் அனார்கலி, லைலா மஜ்னு மற்றும் இன்னபிற காதல் கதைகள் தோல்வியில் தான் முடிந்து புகழடைந்தன. ஆனால், மணமுடித்து பல்லாண்டு வாழ்ந்து காதலித்தவர்கள் ஷாஜஹான், மும்தாஜ். அந்த காதலின் நினைவுச் சின்னம் உலகப்புகழ் வாய்ந்து இன்றும் பறைசாற்றுகிறது. 
                1600 லிருந்து 1605 வரை அக்பர் டெக்கான் பகுதியைக் கைப்பற்றியதி லிருந்து அங்கிருந்த ஷியா பிரிவு முஸ்லீம்களுக்கு மொகலாயர்கள் மீது எரிச்சலாக இருந்தது. அக்பர் காந்தேஷ், அஹ்மத் நகர் மற்றும் பிராரை இணைத்து பெரிய மொகலாயப் பேரரசை நிறுவ ஆசைப்பட்டார். அவரின் மரணத்தால் அது முடியாமல் போனது. பிறகு வந்த அவர் மகன் ஜஹாங்கீரால் மலிக் அம்பரின் இடைவிடாத தொந்தரவால் முடியாமல் போனது. இவைகளை ஷாஜஹான் திறமையாக கையாண்டார். கான் ஜஹான் லோதியின் புரட்சியை வெற்றிகரமாக அடக்கிய ஷாஜஹான் அஹ்மத்நகர் மீது போர் தொடுத்தார். புரட்சியாளர் கான் ஜஹான் லோதிக்கு நிஜாம் ஷாஹி கிங்கின் உதவியும் இருந்தது. 1630 ல் மொகலாயப் படைகள் பரெண்டா கோட்டையின் மீது முற்றுகையிட, எதிரிகளின் பதில் தாக்குதலால் கைவிடப்பட்டது. சுல்தான் முர்தஸா நிஜாமால் போர் திறமையற்ற காரணத்தால் மலிக் அம்பரின் மகன் ஃபத் கான் மலிக் சிறையிலடைக்கப்பட்டார். இவர் விடுவிக்கப்பட்டு சுதந்திரமானவுடன் அஹ்மத்நகரை அழிக்க எண்ணினார். இவர் ஷாஜஹானின் தொடர்பின் மூலம் அறிவுறுத்தப்பட்டு, சுல்தான் முர்தஸா நிஜாமின் முக்கிய நபரை சிறை பிடித்து கொலை செய்தார். பிறகு இளவயது ஹுசைன் ஷா ஆட்சியில் அமர்த்தப்பட்டு, ஃபத் கான் மலிக் தானும் சிறந்த பொறுப்புக்கு வந்தார். ஆனால், வெகு விரைவில் ஃபத் கான் மலிக் ஷாஜஹானுக்கு துரோகம் செய்தார். மஹபத் கானின் தலைமையில் தௌலதாபாத் கோட்டையில் மொகலாயப் படைகளை எதிர்த்தார். கடுமையான எதிர்ப்பாலும், சாதகமான சமரசத்தாலும் மொகலாயப் படைகளிடம் சரணடைந்தார். இதன் பிறகு அஹமத்நகர் கைப்பற்றப்பட்டு, சுல்தான் ஹுசைன் ஷா நிஜாம் கைது செய்து க்வாலியர் சிறையில் பார்வை பறிக்கப்பட்டு அடைக்கப்பட்டார். கௌரவ ஊதியம் வழங்கப்பட்டு மரியாதையாக நட்த்தப்பட்டார். நிஜாம் ஷாஹியின் இருளில் மூழ்கியிருந்த தௌலதாபாத் கோட்டையில் ஒளிமயமாக மொகலாய கொடி பறக்கவிடப்பட்டது. அப்போதைய மொகலாய ஆட்சியாளர்களை எதிர்த்த சிவாஜியின் தந்தையும், தீவிரவாதியுமான ஷாஜி என்பவர் ராஜகுடும்பத்தின் ஆதரவுடன் அஹ்மத்நகரைக் கைப்பற்ற ஒர் முயற்சி எடுக்கப்பட்டு, மொகலாயர்களால் முறியடிக்கப்பட்டது. சுதந்திரபிரதேசமாக இருந்த அஹ்மத்நகர் 1636 ல் ஆதில் ஷா மற்றும் ஷாஜஹானுக்கும் இடையே பிறிக்கப்பட்டது. டெக்கானைச் சேர்ந்தவர் களால் பலமுறை வெல்லப்பட்ட அஹ்மத்நகர் ஔரங்கஸேபுக்கும் தென் பகுதி இந்துக்களால் குழப்பமான இடமாக இருந்தது. மொகலாயர்களின் மானியத்தில் மராட்டியர்களாலும் சில காலம் மூன்றாவது சக்தியாக இது ஆளப்பட்டது.        
  ஐந்து கிளைகளாக இருந்த பாமினி பேரரசின் இரு இடங்கள் மொகலாயப் பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அவைகள் அக்பரால் இணைக்கப் பட்ட இமாத் ஷாஹியின் பிரார் மற்றும் ஷாஜஹானால் இணைக்கப்பட்ட அஹ்மத்நகராகும். இன்னொரு பிரதேசம் மேற்கூறியவைகளால் தானா கவே சிறியதான, பிதார் என்ற இடம் பரித் ஷாஹியின் வசம் இருந்தது. மீதமுள்ள இரண்டு பிரதேசங்கள் பிஜப்பூர் ஆதில் ஷாஹி வசமும், கோல் கொண்டா குத்ப் ஷாஹியின் வசமும் இருந்தது. வளமான இடங்களாக இருந்த பிஜப்பூர், கோல்கொண்டா இரண்டும் அஹ்மத்நகர் கைப்பற்றப்       பட்ட பின் மொகலாயர்கள் கவனத்துக்கு வந்தது. அஹ்மத்நகர் வீழ்ந்த தற்குப் பிறகு, பிஜப்பூரின் ஆதில் ஷா மொகலாயர்களுக்கு சரணடைய மறுத்து, அருகிலுள்ள முர்தஸா நிஜாமுடன் கூட்டு சேர்ந்து கொண்டார். ஷாஜஹான் அசஃப் கான் மூலம் பிஜப்பூரின் மீது படையெடுக்கச் சொன்னார். மொகலாயர்கள் பிஜப்பூரைக் கைப்பற்றினார்கள். ஆனால் நகரவாசிகள் மராட்டியர்களின் சிறிய குதிரைப்படை உதவியுடன் பலமாக எதிர்த்து மொகலாயர்களுக்குச் செல்லும் தளவாடம், உணவுப் பொருள் களை தடை செய்து அவர்களைத் தோற்கடித்தனர். பெரும் பொருளுதவி விரயமான பின் மனைவி மும்தாஜ் மஹலின் மறைவும், நினவுக் கட்டிடம் கட்டுவதிலும் கவனம் செலுத்திய ஷாஜஹான் பிஜப்பூரைப் பற்றி சிலகாலம் சிந்திக்கவில்லை. 

மொகலாய வரலாறு 20

1636 ல் பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா சுல்தானுக்கு மொகலாயர்களுக்கு அடிபணிந்து கப்பம் செலுத்தவும், அஹ்மத்நகர் மீது காட்டும் ஷாஜி போன்ஸ்லா (சிவாஜியின் தந்தை) வின் தலையீட்டை தடை செய்யவும் அரசாணை அனுப்பப்பட்டது. இதற்கு கோல்கொண்டா வின் ஆட்சியாளர் மொகலாயர்களின் அனைத்து ஷரத்துகளுக்கும் உட்பட்டு ஒப்புக்கொண்டனர். ஆனால் பிஜப்பூர் சுல்தான் முழுவதுமாக உடன்பட மறுத்தார். அதனால் பிஜப்பூரின் மீது தாமதமின்றி படையெடுக்க ஷாஜஹான் உத்தரவிட்டார். ஒருபுறம் கான் ஜஹான் ஷோலாபூர் மீதும், கான் இ ஸமான் இந்தாபூர் மீதும், கான் இ தௌரான் வடகிழக்கில் பிதார் மீதுமாக முப்புறத் தாக்குதலாக படை நடத்தப்பட்டது. அப்படியும் ஆதில் ஷாவிடமிருந்து மொகலாய தளபதிகளால் தலைநகரைக் கைப்பற்ற முடியவில்லை. பிஜப்பூரின் சுற்றுவட்டாரங்களைக் கைப்பற்றி ஆதில் ஷாவை சமாதானத்திற்கு உடன்பட முயன்றனர். ஆதில் ஷா ஷாஜஹானின் கீழ்பணிந்து இருக்கவும், இருபது லட்சம் ரூபாய் பரிசாக மொகலாயர்களுக்கு கொடுக்க வேண்டியும், நிஜாம்ஷாவின் பிரதேசம் இருவருக்கும் பிரிக்கப்பட்டு, பிஜப்பூர் ஐம்பது பர்கானாக்களாகவும் (வருவாய் வரும் இடமாக), எட்டிலிருந்து, இருபது லட்ச ரூபாய் செலுத்த வும், ஏற்கனவே மொகலாயர்களிடம் கீழ்பணிந்து விட்ட கோல் கொண்டாவின் குத்ப் ஷாஹிக்கு மரியாதை செய்ய வேண்டும் என்றும், இனி ஷாஹ்ஜி போன்ஸ்லேவிடமிருந்து எந்த உதவியும் பெறப்பட மாட்டாது என்று சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. சுல்தானின் வேண்டுகோளுக்கிணங்க விலையுயர்ந்த உலோகத்தால் செய்யப்பட்ட ஷாஜஹானின் உருவப்படம் ஒன்று அனுப்பி வைக்கப் பட்டது. சுல்தானும் தங்கங்களை ஷாஜஹானுக்கு பரிசாக அனுப்பினார். இதன் பிறகு டெக்கான் பகுதி இருபது வருடங்களுக்கு வளமாக இருந்தது. ஷாஜஹான் ஆக்ரா திரும்பியவுடன் டெக்கான் பகுதியின் பதினெட்டு வயதான தனது மூன்றாவது மகன் ஔரங்கஸேப் பொறுப்பில் ஒப்படைத் தார். இது ஔரங்கஸேப்பின் எதிர்கால ஆட்சிக்கு உருதுணையாக இருந்தது.
                        இதன் பிறகு ஷாஜஹான் மத்திய ஆசியாவின் ஆட்சியில் கவனம் செலுத்தினார். பல்க் மற்றும் பதக் ஷானும் இணைந்து தைமூர் களின் வம்சத்தினர் புகழின் உச்சியிலிருந்து ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஷாஜஹானின் புகழ் வெளியுலகத்திலும் பரவியது. ஆரம்பத்தில்  ஷாஜஹான் ஆட்சி செய்ய துவங்கிய கந்தார் பேரரசின் அரசியல் களத்திற்கும், தலையாய வாணிபத்திற்கும், இந்திய, பெர்ஷியா வின் இடையே வியாபார எல்லையாகவும் இருந்தது. மேலும் அப்பிரதேசங்கள் பலமான இராணுவ தளமாகவும் இருந்தது. ஆனாலும், மத்திய ஆசியாவை கொள்வதில் ஷாஜஹானுக்கு சிரமமாகத்தான் இருந்தது.  நான்கு கோடி ரூபாய் செலவு செய்தும் பல்கின் ஒரு அங்குல நிலம் கூட பிடிக்க முடியவில்லை. மூன்று முறை கந்தாரின் மீதான படையெடுப்புக்கு பனிரெண்டு கோடி ரூபாய் செலவிடப்பட்டது. பெர்ஷியாவின் மீதான இளவரசர்  தாராவின் தலைமையிலான கௌரவப்போர் மொகலாயர்களின் பலவீனத்தை தான் காட்டியது.
         ஒரு போரின் வெற்றிவிழாவில் கலந்து கொள்ளாததால், ஷாஜஹான் இறந்து விட்டதாக தவறான செய்தி நிலவியது. ஆனால் அவருக்கு நோய்வாய்பட்டிருந்த காரணத்தாலேயே அவர் கலந்து கொள்ள முடியாமல் போனது. ஷாஜஹானுக்கு எட்டு மகன்கள், ஆறு மகள்கள். அதில் மூத்த மகன் தாரா ஷிகோ, நான்காவது மகன் முஹம்மது ஷா ஷுஜா, ஆறாவது மகன் முஹம்மது ஔரங்கஸேப், பத்தாவது மகனாக முராத் பக் ஷும் இருந்தனர். தாரா, ஷுஜா, ஔரங்கஸெப் மற்றும் முராத் ஆகியோர். நால்வரும் வித்தியாசமான குணங்களைக் கொண்டிருந்த தால் ஷாஜஹானுக்கு தனிப்பட்ட வகையில் பிடித்தமானவராகவும் இல்லை அதே நேரத்தில் வெறுக்கப்பட்டவராகவும் இல்லை. அவருக்குப் பிறகு நால்வருமே ஆட்சிக்கு வர ஆசைப்பட்டார்கள். அதிகார தோரணையுள்ள தாராவே பதவிக்கு உரியவராகக் கருதப்பட்டார். ஆனால் அதற்கான வாய்ப்பு அவருக்கு அருகில் இல்லை. அவருக்குள்ள அற்பமான பழக்கங்களும், இயற்கையான தயக்க குணமும், எளிதில் கோபம் கொள்ளும் தன்மையும் இவருக்கு அரசவையில் பல எதிரிகளை உருவாக்கி இருந்தது. அதிக இந்துக்களுடனான நட்பும், நெருங்கிய கிறிஸ்தவர்களின் தொடர்பும், விருப்பமான ஷியா பிரிவு கொள்கைகளும் இவருக்கு ஆட்சிக்கு வர எதிர்ப்பாக இருந்தது.
                        தாரா ஷிகோ எப்போதும் பிராமணர்கள், இந்து துறவிகளுடனேயே இருந்தார். அவர்களின் வேதங்களும், போதனை களும் தான் கடவுளை அடைய சிறந்த வழி என்று எண்ணிக் கொண்டிருந் தார். தொழுகைகளை கடைபிடிக்காமல், ரமதான் நோன்பையும் புறக் கணித்து தான் தான் இறைவனைப்பற்றி அதிக அறிவுள்ளவராகக் காட்டிக் கொள்வார். ஷாஜஹானின் மற்ற மகன்களை விட போர்திறமை கொஞ்சம் கூட இல்லாதவர். இவருக்கு இருந்த ஒரே தகுதி ஷாஜஹானின் விருப்பமானவராக இருந்தது தான்.
                            ஷுஜாவுக்கு புத்திசாலித்தனமும், தனிப்பட்ட விருப்பமும் இருந்தும் மதுப்பழக்கம் அதிக அளவில் இருந்தது. மேலும் வெளிப்படை யாகவே ஷியா கொள்கையைக் கடைபிடித்தார். முராத் பக் ஷ் முரட்டுத் தனத்துடன் புத்திசாலித்தனம் இல்லாமல் இருந்தார். இளயவராகவும் ஆட்சிப் பொறுப்புக்கு ஏற்றவராக இல்லாமல் இருந்தார். மூன்றாவது மகன் ஔரங்கஸேப் எல்லா சகோதரர்களை விட ஆட்சிக்கு பொருந்தி தகுதியானவராக இருந்தார். எதையும் கூர்ந்து நோக்குபவராகவும், தைரியமாக எதிர்கொள்ளும் திறனும் பெற்றிருந்தார். நிர்வாகத் திறமையை நன்கறிந்த அதேவேளையில் முழுக்க முழுக்க சுன்னிப் பிரிவுக் கொள்கைகளை கடைபிடிப்பவராக இருந்தார். இருவேறு கொள்கைகளை பலமாக சார்ந்தவர்களாக இருந்ததால் இருவரும் ஒருவரை ஒருவர் எதிரியாகவே கருதினர். ஷாஜஹான் உடல்நலம் குன்றி இருந்தபோது நால்வரும் தனித்தனி பிரதேசங்களுக்குப் பொறுப்பாக இருந்தனர்.
                                     தாரா பஞ்சாப் மற்றும் வடமேற்கு பிரதேசங்களுக்கு வைஸ்ராயாகவும், ஷுஜா பெங்கால் மற்றும் ஒரிஸ்ஸாவுக்கு கவர்னராக வும், ஔரங்கஸேப் டெக்கான் பகுதிக்கு பொறுப்பாளராகவும், குஜராத் தின் கட்டுப்பாடு முராத் வசமும் இருந்தது. ஒவ்வொருவரிடமும் மற்ற சகோதரனை எதிர்க்க தேவையான பணமும், பலமான போர் படையும், தனிப்பட்ட அதிகாரமும் இருந்தது. திறமையும், வீரமும் உள்ளவர் யாரும் ஆட்சிக்கு வரலாம் என்பது மொகலாய ஆட்சியில் எழுதப்படாத சட்டமாக இருந்தது. பாபர், ஹுமாயுன், அக்பர், ஜஹாங்கீர் மற்றும் ஷாஜஹான் ஆகியோர் அப்படித்தான் நெருங்கிய உறவுகளை எதிர்த்து ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் தோல்வி அடைந்தால் விளைவு என்ன என்பதையும் நன்கறிந்திருந்தார்கள். 1658 செப்டம்பரில் ஷாஜஹானின் உடல்நலம் முன்னேற்றமடையும் வாய்ப்பில்லாமல் இருந்தது. அப்போது டெல்லியில் தாரா தந்தைக்கு அருகிலிருந்து கவனித்துக் கொண்டார். இடையே உடல்நலம் சற்று சீரானபோது அரசவை மந்திரிகளையும், பொறுப்பான வர்களையும் அழைத்து தனக்குப் பிறகு, தாரா தான் ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்று சாசனம் எழுதினார். ஆனால் இதில் சந்தேகம் கொண்ட மற்ற மூன்று சகோதரர்களும் யாரும் தடுத்து சமாதானம் கூறும் நிலையில் இல்லாத வகையில் போருக்குத் தயாரானார்கள். இந்தியா வின் மொகலாய இஸ்லாமிய ஆட்சியில் முதல் மகனுக்கு ஆட்சியில் உரிமை கொண்டாட முதல் தகுதி உண்டு. மேலும் சகோதரர்கள் இருந்து விருப்பப்பட்டால் அவர்களும் உரிமை கோரலாம். அப்படியாரும் இல்லாவிட்டால் கவர்னர்களோ அல்லது பலரின் சிபாரிசு பெற்ற சிறந்த தலைவரோ உரிமை கோரலாம். ஆனால் மொகலாயர்களிடம் எப்போதும் இல்லாத முதல்முறையாக ஷாஜஹான், இன்னார்தான் அடுத்த ஆட்சி யாளர் என்று சாசனம் எழுதியதால் மற்ற சகோதரர்கள் வெகுண்டன        ஷாஜஹான் அருகிலிருந்த தாரா தனக்கு ஆட்சிப் பொறுப்பு வழங்கப் பட்டுவிட்டது என்பதையோ, மேலும் அரண்மனையில் நடப்பது எதையும் சகோதரர்களுக்கு தெரியப்படுத்தக்கூடாது என்று மற்றவர்களுக்கு உத்தரவிட்டார். பயணிகள் யாரும் டெல்லியில் நடப்பதை தெரியப்படுத்தி விடுவார்கள் என்று எண்ணியதால், பெங்கால், குஜராத் மற்றும் டெக்கான் செல்லும் சாலைகளை அடைத்தார். அரசவையில் இருந்த ஔரங்க ஸேப்பின் அலுவலகத்தை பறிமுதல் செய்து கொண்டு, அவரின் அதிகாரி களையும் அழைத்துக் கொண்டார். சகோதரர்களை சிறை பிடிக்க எதிர் பாராத விதமாக படைகளை அனுப்பினார். இதற்குள் ஷாஜஹான் சற்று உடல்நலம் தேறி பொறுப்பில் இருந்ததால் சகோதரர்களின் மீது படையெடுப்பது நிறுத்தப்பட்டது அல்லது தாமதப்படுத்தப்பட்டது. ஷாஜஹானும் தான் உயிரோடிருக்கும் போது தனது மகன்கள் ஆட்சிக்கு சண்டையிடுவதை விரும்பவில்லை. தாராவின் நடவடிக்கைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. ஷாஜஹானும் மற்ற மகன்களின் வலிமை தெரியாமல் தாராவையே ஆதரித்தவராக இருந்தார்.
                        ஆனால் தன் அன்புக்கு பாத்திரமாக விளங்கும் மூத்த சகோதரி ரோஷனாரா பேகத்தின் மூலம் அரண்மனையில் நடக்கும் அத்தனையை யும் ஔரங்கஸேப் தெரிந்து கொண்டார். மற்ற சகோதரர்களான ஷுஜா, முராதுடன் எந்த நிபந்தனையுமற்ற ஒரு கூட்டுடன் ஒருவர் மற்றவருக்கு உதவ வேண்டும் என்று தாராவை எதிர்க்கத் தயாரானார்கள். இதை தெரிந்து கொண்ட ஷாஜஹானும், தாராவும் எப்படியும் இதை முறியடிக்க திட்டமிட்டார்கள். அதன்படி ஷாஜஹான் க்வாஜா சராஸ் என்ற அரவாணி யின் மூலம் மூன்று சகோதரர்களுக்கும் தந்தை என்ற முறையில் உதவுவதாக ஒருவருக்குத் தெரியாமல் மற்றவருக்கு கடிதம் அனுப்பினார். இது மூவருக்குமிடையில் குழப்பம் எற்படுத்தும் என்பதை உணர்ந்த ஔரங்கஸேப், ஷாஜஹானுக்கு இனி க்வாஜா சராசின் மூலம் கடிதம் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். ஷுஜாவும், முராதும் தங்கள் பொறுப்பிலிருந்த பெங்கால் மற்றும் குஜராத் பிரதேசங்களுக்கு தாங்களே மன்னர்களென்று அறிவித்து நாணயங்களும் அச்சடித்துக் கொண்டார்கள். இதற்கு நேர்மாறாக ஔரங்கஸேப் எந்த ஒரு செயலிலும் ஈடுபடாமல் அமைதி காத்தார். நர்மதா ஆற்றின் கரையிலிருந்த அனைத்து படகுகளையும் கைப்பற்றி சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார்.
                           

மொகலாய வரலாறு 21

 யாருக்காகவும் காத்திருக்காமல் முதலில் 1658 ஜனவரியில் இளவரசர் ஷுஜா பெங்காலிலிருந்து தன் படைகளை முன்னேற்றி பீஹார் வழியாக பனாரஸை அடைந்தார். தான் ஆளவிருக்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள தாராவும், மிர்சா ராஜா ஜெய்சிங் கஸ்வாஹா என்பவரின் உதவியுடன் தனது மூத்த மகன் சுலைமான் ஷிகோவின் தலைமையில் ஷுஜாவை எதிர்க்க படையை முன்னேற்றினார். 1658 பிப்ரவரியில் இருபடைகளும் பஹாதுர்கர் என்ற இடத்தில் மோதிக்கொள்ள ஷுஜா தோல்வியுற்று பெங்காலுக்கே பின் வாங்கினார். இதற்கிடையில் ‘முரவ்வஜுத்தின்’ என்ற பெயரில் நாணயம் வெளியிட்டு குஜராத்தில் ஆட்சியிலிருந்த முராத் ஆறாயிரம் குதிரைகள் அடங்கிய பெரும் படையுடன் சென்று சூரத் துறைமுகத்தைக் கொள்ளையடித்தார். ஔரங்கஸேப், முராதின் சூரத் வெற்றிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார். முராதும் பதிலுக்கு தான் மறுபுறம் நர்மதாவில் தாக்க இருப்பதற்கு தன்னுடன் இணைந்து கொள்ளுமாறு ஔரங்கஸேப்பைக் கேட்டுக் கொண்டார். இதனால் இரு சகோதரர்களும் இணைந்து கொண்டார்கள். தாராவும், காசிம் கான் மற்றும் ராஜா ஜஸ்வந்த் சிங் தலைமையில் அவர்களை எதிர்க்க படை அனுப்பினார். 1658 ஏப்ரலில் உஜ்ஜெயினுக்கு அருகில் தர்மத் என்ற இடத்தில் நடந்த போரில் தாராவின் மொகலாயப்படை தோற்க, ராஜா ஜஸ்வந்த் சிங் தன் ராஜபுத்திர வீரர்களுடன் தப்பித்து ஓடினார். வெற்றிபெற்ற சகோதரர்கள் சம்பல் பகுதியின் பாதையை வசப்படுத்தி, பிரபலமான சாமூகர் பகுதியைக் கைப்பற்றினார்கள். இராணுவத்திறமையற்ற முஸ்லீம் தளபதிகள் மற்றும் ஹிந்து ராஜாவால் தோல்வியடைந்ததால், முராத் தானே முன்னின்று இம்முறை போர் நடத்தத் தயாரானார். பொறுமை இல்லாத தாரா, மகன் சுலைமான் ஷிகோ மூலம் பஹாதுர்கர் பகுதியில் ஷுஜாவை வென்றார். தந்தையின் ஆலோசனையையும் ஒதுக்கி ஆக்ராவை விட்டு, வெளியே வந்து ஔரங்கஸேப், முராத் கூட்டணியை எதிர்கொண்டார். தாரா, 1658 மே மாதத்தில் சகோதரர்களை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் எண்ணத்தில் ஐம்பதினாயிரம் விரர்களுடன் சாமூகர் பகுதிக்கு வந்தார். ஒருபுறம் தங்கள் குலப்பெருமையைக் காக்க ராஜபுத்திரர்களும், உயிரை துச்சமாக மதித்து எப்படியேனும் சகோதரர் தாராவிடமிருந்து ஆட்சியைப் பிடித்து விடவேண்டுமென்று ஔரங்கஸேப், முராதும் கடுமையாகப் போரிட்டனர். ஆரம்பத்தில் மொகலாயர்கள் கை ஓங்கியது போல் இருந்தது. தாராவின் போர் யானை பலத்த காயமடைந்ததால், அவர் குதிரைக்கு மாறினார். இது போரின் போக்கை மாற்றியது. மொகலாயப்படைகள் யானையின் ஹௌதாவில் (கால்நடைகளில் அமர பயன்படுத்தும் படுக்கை) தாராவைக் காணாததால் படையை விட்டு விலகினார்கள். ஔரங்கஸேப் பெரு வெற்றி அடைந்தார். வெற்றிக்காக முராதைப் பாராட்டினார். தோல்விக்குப் பின் தாராவும், மகன் சிபெர் ஷிகோவும் ஆக்ரா திரும்பினார்கள்.
                               வெற்றி பெற்ற ஔரங்கஸேப் எந்த எதிர்ப்புமின்றி ஆக்ராவில் நுழைந்தார். பாக் இ நூர் என்ற இடத்தில் தங்கி, தந்தை ஷாஜஹானுக்கு தன்னால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார். எக்காரணத்தைக் கொண்டும் ஷாஜஹான் தாராவைத் தவிர எந்த மகன்களையும் ஆட்சிக்கு ஆதரிக்க மாட்டார் என்பதை ஔரங்கஸேப் நங்கு உணர்ந்திருந்தார். தன் மகன் முஹம்மது சுல்தானை அனுப்பி அரண்மனையைக் கைப்பற்றச் செய்தார். ஷாஜஹானை அரண்மனையிலேயே அடுத்த எட்டு ஆண்டுகள் சிறை வைத்தார். ஷாஜஹான் தன்னிடமிருந்த “ஆலம்கீர்” என்ற போர்வாளை ஔரங்கஸேப்புக்கு அளித்தார். இறுதிக் காலத்தில் மனைவியின் நினைவிடத்தை ஓய்வுநேரம் பார்க்கும் வண்ணம் ஆக்ராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 1666 ல் ஷாஜஹான் மரணமடைந்தார்.
                             ஔரங்கஸேப், ஷுஜா மற்றும் முராதுக்கும் இடையே  ஒருவருக்கொருவர் தாராவுக்கு எதிராக யார் போர் தொடுத்தாலும் உதவி செய்து கொள்ளவேண்டும் என்று ஒப்பந்தம் இருந்ததே தவிர, வெற்றி பெறுவது, ஆட்சியைப் பிடிப்பது போன்றவற்றில் எந்த உடன்பாடும் செய்து கொள்ளவில்லை. சாமூத்கரின் வெற்றிக்குப் பிறகு, ஔரங்கஸேப்பின் செல்வாக்கு உயர்ந்ததால் முராத் பொறாமை கொண்டார். அதனால் தந்தை ஷாஜஹானுக்கு மன்னிக்க வேண்டி இரகசியமாக கடிதம் எழுதி, அவரின் ஒத்துழைப்புடன் ஔரங்கஸேப்புக்கு எதிராக திட்டம் தீட்டினார். ஷாஜஹானும் முராதுக்கு உதவுவதாக கூறி, முராதையும் வெற்றி விருந்து தருவதாகச் சொல்லி  ஔரங்கஸேப்பையும், அவர் மகன்கள் அனைவரையும் அழைத்து தீர்த்துக்கட்டுமாறு ஆலோசனை சொல்லி நம்பிக்கையான ஒருவன் மூலம் கடிதம் அனுப்பினார். செய்தி அறிந்த பின் முராத் தவறுதலாக அக் கடிதத்தை ஒரு புத்தகத்தின் உள் வைத்துவிட்டார். சுத்தம் செய்யும் போது அதைக் கண்டுவிட்ட முராதின் பணியாள், அதை ஔரங்கஸேப்புக்கு அனுப்பினான். ஔரங்கஸேப் இரகசியமாக ஒரு திட்டமிட்டு முராதை தந்தை சொன்ன ஆலோசனையின் பேரில் விவாதிக்க வருமாறு அழைப்பு விடுத்தார். விருந்தின் போது, அளவுக்கு அதிகமாக மது அருந்திய முராத், ஔரங்கஸேப் ஆட்சியாள தகுதி அற்றவரென்று உளறினார். இதற்காகவே காத்திருந்தாற் போல் ஔரங்கஸேப் அவரை சங்கிலியால் சிறைப்பிடித்து குவாலியர் சிறைக்கு அனுப்பப்பட்டு கொலைக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
                        ஏற்கனவே பஹாதுர்கர் போரில் தோல்வியுற்று தப்பியோடிய ஷுஜா என்ற அடுத்த சகோதரர் மீண்டும் ஒருமுறை ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்தார். 1659 ஜனவரியில் ஔரங்கஸேப் காஜ்வாஹ் என்ற இடத்தில் தோற்கடித்தார். தப்பியோடிய ஷுஜாவை மீர் ஜும்லா என்பவர் விடாமல் துரத்தினார். பல இடங்களுக்கு ஓடிய ஷுஜா இறுதியில் 1660 ல் அராகான் என்ற இடத்தில் இருந்த போது மாக்ஸ்களால் (அராகான் பிரதேச மக்கள் மாக்ஸ்கள் என்றழைக்கப்பட்டனர்) கொல்லப்பட்டார். இதற்கிடையில் ஔரங்கஸேப்பின் அதிகாரிகள் தாராவை ஒவ்வொரு இடமாகத் தேடினார்கள். காத்தியாரிலிருந்து விரட்டி வரப்பட்ட தாரா அஜ்மீர் வந்து முடிந்தமட்டிலும் துணிவாக எதிர்த்து நின்றார். நான்கு நாட்களாக ஔரங்கஸேப்பால் தாராவை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஐந்தாம் நாள் ஏமாற்றும் விதமாக, ஔரங்கஸேப்பை விட்டு தன்னுடன் வந்து சேர்ந்து கொள்வதாக தலேர் கான் என்பவர் சொன்னதை நம்பி, பெரும்பான்மையானவர்களை தாரா அனுப்பினார். நம்பிக்கையான ஃபிரோஸ் மேவாதி என்பவருடன், தன் மகள், மகன் சிபேர் ஷிகோ மற்றும் சிலருடன் அஹ்மதாபாத் நோக்கி சென்றார். வழியில் சிலர் அவரின் உடமைகளைப் பிடுங்கிக் கொள்ள, சில நகைகள் மற்றும் பணத்துடன் அஹ்மதாபாத்தை அடைந்தார். ஆனால், அதன் கவர்னர் அரண்மனைக் கதவிகளை அடைத்து விட, பிரபலமான கொள்ளைக்காரன் கான்ஜி கோலியின் உதவியுடன் கட்ச் பகுதிக்கு வந்தார். ஏற்கனவே கட்ச் பகுதியின் ஜமீன்தார் ஒருவர் தன் மகனுக்கு தாராவின் மகளை மணமுடிக்க ஒப்புதல் அளித்திருந்தார். தற்போது அவர் மறுத்து விட்டார். இந்த இக் கட்டான சூழ்நிலையில் சிந்துவுக்கு சென்று விட தீர்மானித்து, சிந்துவை நெருங்கும் வேளையில் ஃபிரோஸ் மேவாதியும் மற்றவர்களும் அவரை விட்டுச் சென்றுவிட்டனர். துயரத்தின் உச்சமாக தாராவுக்கு பெரும் ஆதரவாக இருந்த அவர் மனைவி நாதிரா பேகம் இடைவிடாத மலப்போக்கால் இறந்து போனார். இறுதியாக தாரா, மலிக் ஜிவான் கான் என்பவரிடம் அடைக்கலமாக அவர் ஔரங்கஸேப்பிடம் ஒப்படைத்தார். சிறைபிடிக்கப்பட்ட தாரா லாகூர் வழியாக டெல்லி வரவழைக்கப்பட்டு, தேசதுரோக குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்பட்டார்.
                        தந்தை தாராவுக்கு துணையாக நின்று, அவர் மறைந்தோடிய காலங்களில் உதவி செய்த மூத்த மகன் சுலைமான் ஷிகோ, ஔரங்கஸேப்புடனான அஜ்மீர் போரில் ஒத்துழைக்காமல் ஓடிப்போனார். அவரை விரட்டிப் போன ஔரங்கஸேப்பின் உறவினரான ஷாயிஸ்தா கான் என்பவர் கார்வாலில் சிறை பிடித்து அழைத்து வந்தார். க்வாலியர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் 1662 ல் இறந்து போனார். மற்ற சகோதரர்களின் அனைத்து மகன்களையும் ஔரங்கஸேப் சிறையில் அடைத்தார். சிபேர் ஷிகோ மற்றும் ஆஸாத் பக் ஷ் என்ற சகோதரர்களின் இருமகன்கள் ஔரங்கஸேப்பின் மூன்றாவது மற்றும் ஐந்தாவது மகள்களை முறையே மணந்ததால் பிழைத்துக் கொண்டார்கள். சகோதரர் ஷுஜாவின் மகளை மணந்து இடையே ஷுஜாவுக்கு ஆதரவாக இருந்த சொந்த மகனையே ஔரங்கஸேப் சிறையில் அடைத்தார்.
                            மேற்படி உறவுகளிடையே ஔரங்கஸேப் கடுமையாக நடவடிக்கை எடுக்க காராணங்களாக பின் வருபவை கூறப்படுகின்றன. ஆரம்பத்திலேயே ஷுஜாவும், முராதும் தன்னிச்சையாக தாங்கள் பொறுப்பாக இருந்த பகுதிகளை ஆட்சியாளராக அறிவித்துக் கொண்டார்கள். இதனால் தான் தற்போது மொகலாய ஆட்சிக்கு வந்ததால், எப்போதுமே அவர்களால் ஆபத்து தான். அடுத்து டெக்கானின் பொறுப்பில் ஔரங்கஸேப் இருந்த போது, தாராவின் தலையீடு பெரும்பாலும் இருந்தது. இந்த ஆரம்ப வெறுப்பு நாளாக ஆக தந்தையின் மூலம் தாரா ஆட்சிக்கு வந்ததால் மேலும் பலமாகியது. ஷாஜஹான் உடல் நலமில்லாமல் இருந்த செய்தி முதல் கூடுமானவரை எந்த ராஜாங்க செய்தியும் மற்ற சகோதரர்கள் தெறிந்து கொள்ளாதவரை பாதுகாத்தார். ஔரங்கஸேப் மிகச்சிறந்த நெறியான முஸ்லீமாக இருந்தார். ஒருவேளை தாரா ஷிகோ ஆட்சி செய்தால் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி மிகச் சீர்கேடான நிலையை அடையும் என்று எண்ணினார் என்று முஹம்மது காசீம் கூறினார்.
                        அலி மர்தான் கான் என்பவரின் பொறியியல் மேற்பார்வையில் கட்டப்பட்ட ராவியிலிருந்து லாகூருக்கு கட்டப்பட்ட கால்வாயும், ஷலாமார் தோட்டமும் மிகச் சிறப்பானது. அசஃப்கான் என்ற அப்துல் ஹசனாகிய ஷாஜஹானின் மாமனார் மொகலாய ஆட்சியில் பெரிய பொறுப்பு வகித்தார். இறுதிக்காலம் வரை ஷாஜஹானுக்குத் துணையாக இருந்தார். அவர் 1641 ல் லாகூரில் மரணமடைந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்து, அதிகமான படிப்பறிவினால் மொகலாய ஆட்சியில் சிறப்பான இடத்திற்கு அல்லாமா சாஃதுல்லாஹ் கான் என்பவர் வந்தார். இந்திய மந்திரிகளிலேயே மிகவும் நேர்மையானவர் என்ற பெயரைப் பெற்றார். ஷாஜஹானின் நிர்வாகத்திறமை மிகவும் நன்றாக இருந்தது.  ஷாஜஹானின் நிர்வாகம் முன்னவர்களைப் போலவே இருந்தது. ஆனாலும் நல்ல முன்னேற்றம் கண்டது. ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சி கண்டு, வருவாயைப் பெருக்கியது. மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். நல்ல நீதி அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று கவர்னர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள். வெளிநாட்டு சரித்திர ஆசிரியர்கள் பெர்னியர், தவேனியர், நிக்கோலாவ் மனுச்சி மற்றும் பீட்டர் முண்டி போன்றோர் ஷாஜஹானின் ஆட்சியை வெகுவாகப் புகழ்ந்தனர்.
                        ஆரம்பத்தில் பல போர்களில் ஈடுபட்டு வெற்றி கண்டிருந்தாலும் போரின் விளைவை எண்ணி தவிர்க்க விரும்புவார். கட்டிடக்கலை, ஓவியம், கவிதை மற்றும் இசைக்கலைகளில் சிறந்து விளங்கியது. தாஜ்மஹலும், டெல்லி கோட்டையும், டெல்லி ஜும்மா மசூதியும் கட்டிடக் கலையின் சிறப்பாகும். சிறந்த பாடகர்களான ராம் தாஸ் மற்றும் மஹாபட்டர் ஆகியோரை அரசவையில் வைத்திருந்த ஷாஜஹான் தானும் ஒருசிறந்த பாடகராக இருந்தார். தான் கட்டிய அனைத்து கட்டிடங்களையும் தோட்டங்கள் உள்ளதாக கட்டினார். நபிமார்கள் வரலாறு மற்றும் சிறந்த பெர்ஷிய இலக்கணங்களை யாரையாவது படிக்க வைத்து கேட்பது ஷாஜஹானுக்கு மிகவும் பிடித்தது. வாழ்க்கை வரலாறுகளில் தைமூரியர், பாபரின் வரலாறுகள் மிகவும் பிடித்தமானவை. இரவுகளில் திரைகளுக்குப் பின் ஒருவரை படிக்கச் சொல்லி கேட்டுக் கொண்டே உறங்குவது ஷாஜஹானுக்கு பிடித்தமான ஒன்று. மொகலாய மன்னர்களிலேயே மிகவும் கனிவானவர் ஷாஜஹான் என்று சரித்திர ஆய்வாளர் ஸ்டான்லி லேன் பூல் தெரிவிக்கிறார். மனைவி மும்தாஜ் மஹலின் மீதிருந்த அதீத பிரியத்தால் வேறு மணம் கொள்ளாதவராக இருந்தார்.