புதன், 15 ஏப்ரல், 2015

மருத்துவத்தின் வரலாறு

                                   இந்த கட்டுரை இறுதியில் எழுதப்பட்டுள்ள ஆதாரமான புத்தகங்களின் வாயிலாகவே எழுதப்படுகிறது. எதுவும் கூட்டப்படவில்லை, குறைக்கப்படவில்லை. சில முஸ்லீம் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் புத்தகங்கள் கூட பயன்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் லூயிஸ்வில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் பி. சையத் பி.எச்.டி என்பவரின் ஆதார பூர்வமான திரட்டலின் பகுதியாகும். இந்த அளப்பறிய வரலாற்றுப் பணிக்காக அவருக்கு எனது சலாமையும், நன்றிகளையும் உங்களின் வாயிலாக தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
                                  நபி (ஸல்) அவர்களின் இறப்பிற்குப் பிறகு, இஸ்லாமியர்கள் வெறும் நிலப்பரப்புகளை மட்டும் வெல்லவில்லை. விஞ்சானத் துறையில் ஆக்கப்பூர்வமான தயாரிப்புகளை கண்டுபிடித்து உலக சமுதாயத்திற்கு மாபெரும் சேவையை செய்திருக்கிறார்கள். இஸ்லாமியர்களின் மருத்துவஞானம் மேற்குலகை வியப்படைய வைத்தது. பாரிஸ் மற்றும் பிரான்சு நகரங்கள் சேரும் சகதியுமாக இருக்க ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இஸ்லாமிய நாடுகளில் மருத்துவ மனைகள், மருத்துவர்கள், ஆராய்ச்சிகள் என்று பிரபலமாக இருந்தது. குறிப்பாக பாக்தாதின் பொது மருத்துவமனை நவீனமயமாக இருந்தது. நோயாளிகளின் அறையைச் சுற்றி நீரூற்றுகள் அமைக்கப்பட்டிருந்தன. மனநோயாளிகள் அக்கரையுடன் சிகிச்சை பெற்றும், வலி நோயாளிகள் இரவுகளில் கதையுடன் கூடிய மெல்லிய இசை முழங்கப்பட்டு கவனிக்கப்பட்டனர்.
                                   இளவரசர்களும், ஆண்டிகளும் சமமான சிகிச்சை பெற்றனர். தங்கள் உடலை யாரோ மூன்றாவது மனிதனிடத்திலே காட்டுவதா? என்று தயக்கத்தில் இருந்தவர்களையும், மருத்துவத்துறையை பிரபல்யமாக்கவும் சிகிச்சை முடிந்து செல்பவர்களுக்கு ஐந்து தங்க துண்டுகள் வழங்கப்பட்டன. பாரிஸ் மற்றும் பிரான்சு நகரங்கள் சேரும்சகதியுமாக இருக்க பாக்தாத், கெய்ரோ நகரங்களில் ஆண், பெண்களுக்கென தனித்தனியாக மருத்துவமனைகள் இருந்தன. மருத்துவமனைகள் மருந்தகம், நூலகம் இணைந்திருந்தன. உள்நோயாளிகள், புறநோயாளிகள் பிரிவும் இருந்தது. புறநகர் பகுதிகளுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் நடமாடும் மருத்துவமனைகள் கூட இருந்தன. மருந்தகங்கள் பதிவு செய்யப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டிருந்தன.
                                   நபி (ஸல்) கள் நாயகம் அவர்களை மைக்கேல் ஹார்ட் என்னும் யூத ஆசிரியர் (THE MOST INFLUENTIAL PERSONS IN HISTORY) உலகம் போற்றும் முதல் நூறு நபர்களில் முதல் நபராக தேர்வு செய்திருக்கிறார். உலகின் கடுமையான மக்களான அரபுக்களை பழுவாங்குதல், உள்நாட்டுக் குழப்பம், போர் போன்ற பல பிண்ணனியில் இருந்து நாயகம் அவர்கள் வென்றார்கள். அப்போது இருபுறமும் பெர்ஷியா, பைஸாந்தியர்கள் என்ற இரு பிரமாண்டமான சாம்ராஜ்ஜியம் இருந்தது. இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் அட்லாண்டிக் கடலிலிருந்து மேற்கிலும், சீனாவின் எல்லை வரை கிழக்கிலும் பரவிக்கொண்டிருந்தது. நபி(ஸல்)கள் நாயகம் இறப்பிற்கு 80 ஆண்டுகளுக்குப் பின் முஸ்லீம்கள் ஐரோப்பாவில் நுழைந்து 700 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தனர். தாங்கள் வென்ற இடத்தில் எல்லாம் உலகின் மிகச்சிறந்த இஸ்லாமிய கலாச்சாரத்தை விதைத்தார்கள்.
                                          இஸ்லாமிய பேரரசு வீழ்ச்சியுறத் துவங்கியதும் கலாச்சாரத்தை சார்ந்த ஈடற்ற மருத்துவமும் எதிரிகளால் அழிக்கப்பட்டன. 1258 ல் மங்கோலியர்கள் பாக்தாதை தீயிட்டு அழித்தனர். அது சரித்திரத்தில் இன்றுவரை ஈடு செய்யமுடியாத இழப்பு. ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. பல ஆராய்ச்சிக் குறிப்புகள், வரலாற்றுபதிவுகள் தீக்கிரையாகின. அதன்பிறகு, இஸ்லாமின் மீதுள்ள வெறுப்பால் ஸ்பானியார்டுகள் ஸ்பெயினில் மிகப்பெரிய அறிவுக் களஞ்சியங்களை அழித்தனர். இஸ்லாமிய பேரரசு 1000 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தையும், அதிகப்படியான மக்களையும் ஆட்சி செய்த ஒரே பேரரசு. இந்த ஒன்றே மற்ற மதங்கள் இஸ்லாமின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. குர் ஆனும், அதன் ஆராய்ச்சிகளும் இஸ்லாமியர்களுக்கு அளப்பறிய அறிவாற்றலை தந்தது. அதற்கு குர்ஆனே சாட்சியாகவும் இருக்கிறது. தானே மனிதனுக்கு அறிவூட்டுவதற்கு இறைவன் உத்திரவாதம் அளிக்கிறான்.
                              ஏன் எடுத்த எடுப்பிலேயே முஹம்மது நபிகளை அனுப்பி இருக்கலாமே என்று கேள்வி எழலாம். படைத்தவனுக்கு தான் தெரியும். தான் படைத்த மனிதன் அறிவில் சிறந்து முழுமை பெற எத்தனை ஆண்டுகள் ஆகுமென்று. ஒரு மோட்டார் வாகனம் செய்ய வேண்டுமானால் இயந்திரம் சீர் செய்ய, வடிவமைக்க, வர்ணம் பூச என்று எத்தனை காலம் பிடிக்கிறது. ஒருமோட்டார் வாகனம் தானே இன்னொரு மோட்டார் வாகனம் செய்து கொள்ள முடியாது. மனிதன் அப்படியல்ல தனக்கான உணவு, இருப்பிடம், தன் சந்ததி, தன் தேவைகள் என்று தானே செய்து கொள்ள வேண்டிய ஆற்றல் உள்ளவன். படைத்தவனுக்கு தான் தெரியும், தன் படைப்பின் சக்தி பற்றி. அவன் கோபம், கொலை, நன்றி, மகிழ்ச்சி, வெறுப்பு, போட்டி, பொறாமை என்று பலவற்றை அறிந்து, அதன் நல்லது கெட்டது தெரிந்து கொள்ள அவர்களிலிருந்தே ஒரு நபியையோ, ஒரு நல்லடியாரையோ அவ்வப்போது சில நூற்றாண்டுகள் இடைவெளியிட்டு அனுப்பி முழுமை பெற்ற பின் இறுதியாக ஈடுஇணையற்ற நம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அனுப்பினான். எந்த கண்டுபிடிப்பானாலும் அதன் பூர்வீகம் ஆராய்ந்தால், முட்டுச்சந்து போல் இஸ்லாமியர்களிடம் தான் முடியும். ஆம். அல்லாஹுத்தாலா மறையில் இன்றோடு நான் இஸ்லாத்தை முழுமை ஆக்கிவிட்டேன் என்று எப்போது சொன்னானோ, அறிவை அள்ளி வழங்கிவிட்டான். இன்று குறிப்பாக மருத்துவத்தில் எந்த ஒரு கண்டுபிடிப்பும் மேற்கத்தியர்களாலும், யூதர்களாலும் கண்டுபிடிக்கப்பட்டது போல் தான் சொல்லப்படுகிறது. அது உண்மையாகவே இருந்தாலும், இதற்கு ஆரம்ப அடி பிடித்துக் கொடுத்தவர்கள் முஸ்லீம்கள். இது அவர்களுக்கும் தெரியும். உதாரணத்திற்கு பலர் தங்கள் திறமைக்கேற்ப ஆடைகளை வடிவமைத்து பெயர் பெற்றாலும், ஊசியும், நூலையும் ஆரம்பத்தில் கொடுத்தவரை மறக்க முடியாது. அப்படிதான் முஸ்லீம்கள் இந்த மனித இனத்திற்கு மருத்துவத்தைக் கொடுத்தார்கள். பல நூற்றாண்டுகளாக இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தில் நுழைந்து கற்காத வரை உலகில் யாராலும் மருத்துவம் படிக்க முடியாது. இது மிகைப்படுத்திச் சொல்லப்படுவதல்ல. அப்பழுக்கற்ற உண்மை. யூத, கிறிஸ்தவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். முஸ்லீம்கள் அறிவுத்தாகம் எடுத்து தேடினார்கள். மங்கோலியர்களாலும், ஸ்பானியார்டுகளாலும் அழிக்கப்பட்டது போக, பத்தாம் நூற்றாண்டில் கிரேக்க மருத்துவ குறிப்புகள் டமாஸ்கஸ், கெய்ரோ மற்றும் பாக்தாத் நகரங்களுக்கு கொண்டு வரப்பட்டு அரபு மொழியில் ஆராய்ச்சிக்காக மொழி பெயர்க்கப்பட்டன.
                       அப்போதைய உலகின் மருத்துவத்துறையில் பாக்தாத் தான் தலைமையகமாகத் திகழ்ந்தது. முஸ்லீம்கள் உலக மருத்துவத் துறையில் ஒளியைப் பரப்பினார்கள். மருத்துவத்தைப் பற்றி கேம்ப்பெல் என்பவர், ”ஐரோப்பிய மருத்துவம் அரபுகளின் மூலம் மட்டுமல்ல அதன் கட்டமைப்பின் மீது தான் இருக்கிறது. அரபியர்கள் மிகச் சிறந்த அறிவாளிகள் ஐரோப்பியர்களுக்கு முன்னோடிகள்” என்று புகழ்ந்துள்ளார். இஸ்லாமிய மருத்துவம் மருத்துவமனை, நுண்ணணு, மருந்து, மயக்கமேற்றுதல், அறுவை சிகிச்சை, மருந்தகம், கண் மருத்துவம், மனநோய் போன்று அனைத்திலும் சிறந்து விளங்கி இருந்தது. மருத்துவமனை நிர்வாகமாகிய உள்நோயாளி, புறநோயாளி, அவர்களுக்கான நோயாளி மற்றும் நோயின் குறிப்புகள் போன்றவைகள் பிரமிக்கத்தக்க வகையில் பாக்தாத் மருத்துவமனையில் பத்தாம் நூற்றாண்டுகளில் பதிவு செய்யப்பட்டிருந்தன.
                                    636 ல் பெர்ஷிய நகரமான ஜுண்டி ஷபூர் (தமிழில்- அழகிய பூங்கா) முஸ்லீம்களால் வெற்றி கொள்ளப்பட்டது. அங்கு மருத்துவம் பயில பள்ளிகளையும், பல்கலைக்கழகங்களையும் கட்டினார்கள். இது அப்போதைய அப்பாஸிட் மன்னர் அலி இப்ன் உல் அப் பாஸ் அவர்களின் உத்தரவுப்படி கட்டப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு தொழிலைப்போல மருத்துவம் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. 850 க்குப் பிறகு இருந்த ராஸி என்பவர் மாணவர்களுக்கு நோயாளியின் நோய் அறிந்து அதன் கிருமித்தன்மைக்கு ஏற்றவாறு எப்படி மருத்துவம் பார்ப்பது என்று சொல்லிக் கொடுத்தார். புகழ்பெற்ற மருத்துவர்களாக அப்போதிருந்த அல் ராஸியும், இப்ன் சினா (அவி சென்னா) வும் மருத்துவ மனையின் இயக்குனர்களாகவும், நிர்வாகிகளாகவும் இருந்தனர். ஜுண்டி ஷாபூர் மற்றும் பாக்தாத் கல்லூரிகள் அடிப்படை மருத்துவத்தை போதித்தன. மனித தலை மற்றும் எலும்புகள் சம்பந்தமாகக் கற்க பாக்தாதில் தனி கல்லூரி இருந்தது. அப்போது பாரிஸ் மற்றும் பிரான்சு நகரங்கள் சேரும் சகதியுமாக இருந்தன.
                                  அடிப்படை மருத்துவம் பயின்ற மாணவர்கள் மருத்துவமனைகளில் தொழிலாளியாக பணியில் அமர்த்தப்பட்டனர். அங்கு மேலும் அவர்களுக்கு கலந்துரையாடல், விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. தேர்வுகளில் நோயாளிகளின் நடவடிக்கை, வலி உணரப்படும் பகுதிகள், வீக்கங்கள் மற்றும் அளிக்கப்பட்ட மருந்துகள் சம்பந்தமான கேள்விகள் கேட்கப்பட்டன. ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ் என்னும் எலும்பு சம்பந்தமான மருத்துவம் பத்தாம் நூற்றாண்டுகளில் இஸ்லாமிய நாடுகளில் இருக்க, மேற்கத்தியர்கள் புதுமை போல் 1852 ல் தான் அதைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். கண் மருத்துவம் சர்வ சாதாரணமாக இருந்தது. இப்ன் சினாவும், ஹாஸி என்பவரும் மனநோய் பற்றி வகுப்பெடுத்தார்கள்.
                                     931 ல் பாக்தாத் மருத்துவமனையில் மருத்துவர்களின் தவறால் ஒரு நோயாளி இறந்துவிட, அப்போதைய மன்னர் அல் முக் ததிர் மூத்த மருத்துவர் சினன் இப்ன் தபித் பின் குர்ராஹ் என்பவரை அழைத்து மருத்துவர்களின் தரத்தை மிகவும் உன்னிப்பாக கவனிக்கச் சொல்லி உத்தரவிட்டார். முதல் மருத்துவ மாணவர்கள் குழு 860 பேர் பாக்தாதில் தேர்வு செய்யப்பட்டனர். இப்போது அமெரிக்காவில் ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன் என்ன செய்து கொண்டிருக்கிறதோ அதை அப்போதே பாக்தாதில் செய்தார்கள். மருத்துவர்களின் தரம் அறிந்து அவர்கள் தொழில் செய்யவும், மருந்தகம் வைக்கவும் உத்தரவு அளித்தனர். ஐரோப்பிய மருத்துவ கல்லூரிகள் இஸ்லாமிய மருத்துவக் கல்லூரியின் நடைமுறைகளையே தொடர்ந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் கூட சார்பன் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இப்ன் சினாவின் கானுன் (கேனன்) என்னும் பாடத்தைப் படிக்காமல் மருத்துவப்பட்டம் பெற முடியாது.
                              ராஸி அவர்களின் மருத்துவத்தின் ஆரம்ப காலத்தையும், நவீனத்தையும் தெரிந்து கொள்ளாமலும், மருத்துவமனையில் துவக்கப்பணியில் அமராமலும் ஒருவரால் சிறந்த மருத்துவராக ஆக முடியாது என்று கூறுகிறார். இஸ்லாமிய ஆட்சியில் மருத்துவம் வசதி, நிறம், வயது, மதம் என்ற எந்தவித வித்தியாசம் காணாமலும் பார்க்கப்பட்டது. மருத்துவமனைகள் ஆண், பெண் இரு வருக்கும் தனிப் பகுதியாக பிரிக்கப்பட்டிருந்தது. 872 ல் அமைக்கப்பட்ட கெய்ரோவின் துலூம் மருத்துவமனையின் ஹத்தாத் என்பவர், மருத்துவமனையின் நூலகத்தில் 100,000 மருத்துவ புத்தகங்கள் இருந்ததாகக் கூறுகிறார். மேலும், பாக்தாதின் முஸ்தான்சிர்ரிய்யா பல்கலைக்கழகத்தில் 80,000 புத்தகங்களும், கார்டோபாவில் 600.000 புத்தகங்களும், கெய்ரோவில் 2,000,000 புத்தகங்களும், திரிபோலியில் 3,000,000 புத்தகங்களும் இருந்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. பதிப்புத்துறையில் நவீனம் இல்லாத அந்தக்காலத்தில் இவ்வளவு புத்தகங்களை கையாண்டது பெரிய சாதனையாகும், தற்போது அமெரிக்கா பாக்தாதைத் தாக்கியபோது கூட முதலில் நூலகங்களில் நுழைந்து பெருவாரியான அறிவுக்களஞ்சியங்களை கொள்ளையடித்ததாக சமீபத்தில் கூட செய்திகளில் அறிந்திருப்பீர்கள். அப்போதே துலூன் மருத்துவமனையில் நோயாளிக்கென பிரத்தியேக ஆடை வழங்கப்பட்டது. டமாஸ்கசில் தொழுநோயாளிகளுக்கென தனியாக மருத்துவமனை இருந்தது. அந்த மருத்துவமனை இருக்கும்போதே ஐரோப்பாவில் அடுத்த ஆறு நூற்றாண்டுகளாக தொழுநோயாளிகளை நோய் பிறருக்கு தொற்றாமல் இருக்க அரசு சட்டமாக தீயிலிட்டு கொளுத்தினார்கள்.
                          துனிஷியாவில் 830 ல் கைரவான் மருத்துவமனை பெரிய சிகிச்சை அறைகளும், காத்திருப்பு அறைகள், பார்வையாளர் அறைகளும் உள்ளடங்கிய வண்ணம் கட்டப்பட்டது. முதல்முதலில் மருத்துவத்துறையில் செவிலிகள் (நர்சுகள்) சூடான் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டு பயிற்சி கொடுத்து பயன்படுத்தப்பட்டனர். 981 ல் பாக்தாதில் அல் அதுதி மருத்துவமனை அப்போதைய நவீன கருவி களுடன் திறக்கப்பட்டது. அப்பாஸிய மந்திரி அலி இப்ன் இசா அரசு மரு த்துவர் சினன் இப்ன் தாபித்தை சிறந்த நிர்வாகம் அளிக்க வேண்டினார். முதல்முறையாக சிறை கைதிகளுக்கும் மருத்துவ வசதி தரப்பட்டது. இராணுவ வீரர்களைக் கொண்டு அனைத்து வசதிகளும் கொண்ட நடமாடும் மருத்துவமனைகள் நடத்தி வந்தார்கள்.
                                   ஒருமுறை அல் ராஸி பாக்தாத் வருகைதந்த போது அரசால் புதிய மருத்துவமனை ஒன்றை அமைக்கக் கேட்டுக்கொண்டார். அவர் முற்றிலும் சுகாதாரமான இடத்தைத் தேர்வுசெய்ய புதிய இறைச்சித் துண்டை நகரின் பல பகுதிகளில் கட்டித்தொங்கவிட்டு அதன் கெடும் தன்மைக்கு  ஏற்றவாறு இடத்தைத் தேர்வு செய்தார்.
                            இப்ன் சினா மற்றும் இப்ன் காதிமா ஆகியோரின் மருத்துவசேவை மனிதகுலத்துக்கு ஈடுஇணையற்ற பங்களிப்பாகும். இப்ன் காதிமா தான் நோயின் தொற்றை முதலில் கண்டுபிடித்தார். பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவில் “கருப்பு மரணம்” என்ற வடிவில் புதிய நோய் பல உயிர்களைத் தாக்கியது. கிறிஸ்தவ உலகம் செய்வதறியாது திகைத்தனர். அப்போது கிரானாடாவில் இப்ன் அல் காதிப் அவர்கள். “நோய் தொற்று உள்ளவர்களை மதம் தடுக்கும்போது எப்படி நாம் அனுமதிக்க முடியும் என்று கேட்கிறார்கள்? நோயின் தொற்று ஆராய்ச்சிகளின் மூலமும், அனுபவங்களின் மூலமும், ஆதாரங்களின் மூலமும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டப்பிறகு, அதற்கு மதத்தின் சாயம் பூசுவது எப்படி சரியாகும். உங்களின் பாத்திரங்கள், நகைகள், உடைகள் மூலமாகவே பரவுகிறது” என்று அறிவுபூர்வமான பதிலளித்தார்.
                                   அல் ராஸிதான் முதல்முறையாக சிற்றம்மைக்கான நோயின் குறிப்பு எழுதினார். இப்ன் சினா மார்பகசளி நோயின் இயற்கைத் தொடர்பை பற்றி எழுதினார். சல்ஃபூரிக் அமிலத்தின் தயாரிப்பையும், தன்மையையும் பற்றியும் எழுதினார். கல்வியறிவு இல்லாத அந்தகாலத்தில் இப்ன் சினாவின் காயத்திற்கு வைன் (மது வகை) மிகச்சிறந்த நிவாரணி என்ற கண்டுபிடிப்பு மிகவும் புகழ் பெற்றது. அல் ராஸியும் ஆல்கஹால் ஒரு சிறந்த நோய்கிருமியின் எதிர்ப்பு என்பதைக் கண்டறிந்து கூறினார். இப்ன் சினா ஓப்பியம் ஒரு அருந்தத்தக்க மறுத்துப்போகச் செய்யும் ஒரு மருந்து என்பதைக் கண்டறிந்தார். மேலும், மிதமாக மறுத்துப்போவதற்கு மன்ட்ரகோரா, கஞ்சா விதை, ஹெம்லாக், ஹிஸ்சயாமுஸ், லெட்டூஸ் விதை, பனி மற்றும் குளிர்ந்த நீர் ஆகியவையும் ஏதுவானது என்பதையும் கண்டறிந்து கூறினார். அன்றைய காலங்களில் மறுத்துப்போவதற்கு அரபு நாடுகளில் நார்கோடிக் மற்றும் நறுமணங்களில் ஊறவைத்த பஞ்சுகளைப் பயன் படுத்தினார்கள். அப்போது ஐரோப்பாவில் அறுவை சிகிச்சைகளை செய்யும் போது மறுத்துப் போகச்செய்யாமல் காட்டுமிராண்டித்தனமாக நாவிதர்களை வைத்தும், முறையற்ற முறையிலும் செய்தார்கள்.
                                 அல் ராஸி அவர்கள் தான் முதல்முதலில் மிருகங்களை வைத்து அறுவை சிகிச்சை முறையை கண்டுபிடித்தார். இஸ்லாமிய மருத்துவத்தில் அபு அல் காசிம் கலாஃப் இப்ன் அப்பாஸ் அல் ஸஹ்ராவி (மேற்கத்தியர்களுக்கு அபுல் காசிஸ்) மற்றும் அல் ஸஹ்ரவியஸ் ஆகியோர் மிகவும் பிரபலமான அறுவைசிகிச்சை நிபுணர்களாக இருந்தனர். அல் ஸஹ்ரவியஸ் ஹீமோஃபீலியா சம்பந்தமாக முதலில் அல் தஸ்ரிஃப் என்ற புத்தகத்தை எழுதி மருத்துவ உலகத்துக்கு அர்ப்பணித்தார். அதில் 200 வகையான அறுவை சிகிச்சை ஆயுதங்களை வடிவமைத்திருந்தார். அல் ஸஹ்ராவி உடற்கூறு பற்றி ஆராய்ந்து மட்டுமல்லாமல், பசுவின் எலும்பிலிருந்து மனிதனின் விழுந்து போன பற்களுக்கு மாற்றுப்பல் கண்டுபிடித்து வியப்பில் ஆழ்த்தினார். இதற்கு ஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனுக்கு மரத்தாலான பல் பொருத்தப்பட்டது. முதல்முதலில் அறுவை சிகிச்சைக்கு பஞ்சை பயன்படுத்தியவரும் அல் ஸஹ்ராவிதான். இவர்தான் கிட்னியில் ஏற்படும் கல்லை நீக்க சிறுநீர் பையிலிருந்து ஒரு குறிப்பிட்ட நரம்பை வெட்டும் முறையை கண்டுபிடித்தார். இவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்த மனிதஎலும்பின் தோள்பட்டை மாற்று சம்பந்தமான சிகிச்சையை 1937 ல் ப்ரூக்கும், கோச்சாரும் கண்டுபிடித்தனர்.
                            இப்ன் சினாவின் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான புற்றுநோய் சம்பந்தமான விளக்கங்கள் இன்றும் ஒப்புக்கொள்ளப்பட்டன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அல் ஸஹ்ராவியால் கடை பிடிக்கப்பட்ட அறுவை சிகிச்சை முறைகளை இன்றளவும் அறியப்படாமலே உலகமெங்கும் மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்கிறார்கள் என்ற கருத்து நிலவுகிறது. இப்ன் ஸுஹ்ர் அவர்களால் அரிப்பு நோய், தூக்கவியாதி நோய்க்கு கல்கஷண்டி ஆகியோர் குறிப்புகள் தந்துள்ளனர். அல் அஷ் அத், அபு ஷல் அல் மசிஹி, இப்ன் அல் நஃபிஸ் ஆகியோரின் மருத்துவத்துறையின் பங்கும் சிறப்பானது. இப்ன் சினா வின் அல் கானுன் (CANON) என்ற புத்தகம் மருத்துவ உலகின் ஒரு மைல் கல்.
                                  கண் நோயில் ரெடீனா, கேடராக்ட் போன்ற வார்த்தைகள் அரபுச்சொல்லின் மூல வார்த்தைகள். பத்தாம் நூற்றாண்டில் இப்ன் அல் ஹைதம் அவர்களின் (மேற்கில்- அல் ஹாஸென்) “ஆப்டிகல் தெசாரஸ்”  (OPTICAL THESAURUS) என்ற புத்தகம் மிகவும் புகழ் பெற்றது. இதிலிருந்து ரோஜர் பேகன், லியனார்டோ டா வின்சி மற்றும் ஜோஹன்னஸ் கெப்லர் போன்றோர் சில பகுதிகளை எடுத்து கையாண்டிருக்கிறார்கள். இந்த புத்தகம் அதுவரை இருந்த ஒளிக்கற்றை, கண் பார்வை சம்பந்தமான கிரேக்கர்களின் கருத்தை உடைத்தது. இதை அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு இத்தாலி ஒப்புக்கொண்டது. அல் ராஸி ஒளியைக் கண்டவுடன் கண்ணில் ஏற்படும் மாற்றங்களையும், இப்ன் சினா கண்விழியின் மொத்த நரம்புகளின் எண்ணிக்கையையும் முதல் முதலில் தெரியப்படுத்தினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் கண் சிகிச்சைக்கென ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஹாலோ மெட்டாலிக் ஊசியை ஈராக்கின் மோசூலைச் சேர்ந்த அம்மார் பின் அலி பத்தாம் நூற்றாண்டுகளில் கண்டுபிடித்து விட்டார். 
                               நோய்களுக்கான மருந்து கண்டுபிடிப்புகளில் இஸ்லாமியர்கள் முன்னோடியாக இருந்திருக்கிறார்கள். ஒன்பதாம் நூற்றாண்டில் யூஹன்னா பின் மசவய்யும் அவர் மாணவர் ஹுனைன் பின் இஷாக் அல் இபாதியும் பல நோய்களுக்கான மருந்துகளை அப்பாஸிட்கள் காலத்தில் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். மசாயில் ஹுனைன் என்ற புத்தகத்தில் ஹுனைன் பின் இஷாக் அல் இபாதி அவர்கள் விவரமாக மருந்துகளை பற்றி குறிப்புகள் தந்திருக்கிறார். மருந்தகங்கள் அப்போதைய ஆட்சியாளர்களால் தரம் சோதிக்கப்பட்டன. அரபு நாடுகளில் பணிபுரிபவர்களைக் கேட்டுப்பாருங்கள் இன்றும் மருத்துவத்துறையில் மிகவும் கவனமாக இருப்பார்கள். பெரும்பாலான மருந்தக சொற்கள் அரபுமொழியின் மூலமே. உதாரணத்திற்கு, ட்ரக், அல்கலி, அல்கஹால், அல் டிஹைட்ரேட், அல் எம்பிக் மற்றும் எலிக்ஸிர் போன்றவை அரபுச் சொற்கள்.
                 அப்போதைய மக்களின் அறியாமைத்தன்மைக்கு ஏற்ப கசப்பான மருந்துகளில் பன்னீர், ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றின் சுவையை மருந்துகளில் ஏற்றினார்கள். மருந்தகத் துறையில் அல் ராஸி, அல் ஸஹ் ராவி, பிரூனி, இப்ன் புட்லான் மற்றும் தமிமி ஆகியோரின் பங்களிப்பு சிறப்பானது. மருத்துவத் துறையில் இன்னும் அதிகமாக சொல்லிக்கொள்ள இருக்கிறது. இது துறை சம்பந்தமான சொற்களுடன் கூடியதால், உண்மையில் எனக்கும் விளங்காது உங்களுக்கும் விளங்காது. மனோதத்துவத் துறையிலும் பல புதுமைகளை அல் ராஸி அறிமுகப்படுத்தினார். ஒருமுறை கலிஃபா ஒருவருக்கு மனநோய் ஏற்பட்டது. அல் ராஸி அவரை குளிக்கச் சொன்னார். கலீஃபா குளியல் தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும் போது, அல் ராஸி கத்தியை எடுத்து கலீஃபாவைக் குத்துவது போல் முன்னேறினார். இதனால் கலீஃபா பயந்து போய் எழுந்து ஓட அவரின் இதய இயக்கம் அதிகமாகி நோயின் தன்மை உடனே குறைந்தது. ஒருமுறை ஒரு பெண்மனி குனியமுடியாமல் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். மருத்துவர் உடனே குனிந்து அந்த பெண்மனியின் கால்களிலிருந்து உடையை விலக்க அந்த பெண்மனி பதறியடித்து குனிய அவள் வலி குணமானது. அப்போதைய இஸ்லாமிய ஆட்சியில் இரு செயல்களுமே குற்றமாகக் கருதப்பட்டாலும், நவீன வசதியில்லாத அந்த காலத்தில் இந்த சிகிச்சைமுறை நல்ல பலனை தந்ததற்குப் பாராட்டப்பட்டது. மனநோய்க்கு நஜபுத்தீன் முஹம்மது என்பவரின் நஃப்காயி மலிகோலியா, குத்ரிப் மற்றும் துவால் குல்ப் ஆகிய படைப்புகள் சிறப்பானது.
                             மனநோய் காப்பகங்கள் மொரோக்கோ நகரின் ஃபெஸ் பகுதியிலும், 705 ல் பாக்தாதிலும், 800 ல் கெய்ரோவிலும், டமாஸ்கஸ் மற்றும் அலிப்போவில் 1270 லும் துவங்கப்பட்டன. உலகின் அப்போதைய மருத்துவ மாணவர்கள் இஸ்லாமிய நாடுகளில் மருத்துவம் படிப்பதை தங்கள் லட்சியமாகக் கருதினார்கள். இந்த நிலையை இந்த 21 ம் நூற்றாண்டில் தான் அமெரிக்காவில் மருத்துவத்துறையில் அடைய முடிந்தது. ஆறாம் நூற்றாண்டுகளிலிருந்தே படிப்படியாக முஸ்லீம் ஆட்சியாளர்கள் நிலப்பரப்புகளை வென்று ஐரோப்பா நோக்கி முன்னேறினார்கள். இது பனிரெண்டாம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது. போகுமிடமெல்லாம் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கலாச்சாரத்தையும், அறிவுக்களஞ்சியங்களையும் கொண்டு சென்றார்கள். இதற்கு பல ஆதாரங் கள் வரலாற்றில் உள்ளன. அடுத்து 400 ஆண்டுகளுக்கும் மேலாக கிறி ஸ்தவர்கள் சிலுவைப்போர் நடத்தி முஸ்லீம்களை ஸ்பெயின் மற்றும் வட பிரான்சை விட்டு விரட்டினார்கள். கொண்டுபோன ஆவணங்கள் அழிக்கப்பட்டும், கொள்ளையடிக்கப்பட்டும் மேற்கத்திய நாடுகளிலேயே இருந்தது. காரியங்கள் முடிந்த பிறகு, ஐரோப்பிய நாடுகள் வளமை அடைந்தவுடன் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இந்த ஆவணங்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு ஒவ்வொரு கண்டுபிடிப்பும் யூத மற்றும் கிறிஸ்தவர்கள் பெயரால் வெளியிடப்பட்டன அல்லது முஸ்லீம் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் ஏதோ அவர்களுக்கு உச்சரிக்க வராததுபோல் திட்டமிட்டு யூத, கிறிஸ்தவ பெயர்கள் தோற்றமளிப்பது போல் குறிக்கப்பட்டன. மருத்துவம் மட்டுமல்ல பல துறைகளில் இஸ்லாமியர்கள் முன்னோடியாக இருந்திருக்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் இதை நாம் சிறுகச்சிறுக ஐரோப்பிய, கிறிஸ்தவ ஆசிரியர்கள் எழுதிய ஆதாரபூர்வமான புத்தகங்களின் வாயிலாகவே வெளியிடுவோம். இன்றைய நாட்களில் இறைவன் தன் அருட்கொடையை அரபு நாடுகளில் திறந்துள்ளான். ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் அளவுக்கு செல்வத்தை வழங்கியுள்ளான். கடிகாரத்தின் சுழற்சி போல் நிச்சயமாக மீண்டும் முட்கள் கடந்த எண்ணை மீண்டும் தொடும். மறுபடியும் இஸ்லாமியர்கள் எல்லாத்துறைகளிலும் முதல் இடத்தில் வருவார்கள்.
இந்த கட்டுரை எழுத ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் : 
க்ரேட் மோமெண்ட்ஸ் இன் மெடிசன் – ஜி.எ. பெண்டர்- பக்கம் 68-74
யூரோலஜி  – இ. டி. வைட்ஹெட் மற்றும் ஆர்.பி. புஷ்- பக்கம் 5
இருபத்தொன்பதாவது இண்டர்நேஷனல் காங்கிரஸ் ஆஃப் தி ஹிஸ்டரி ஆஃப் மெடிசன் – எஃப். எஸ். ஹத்தாத்- பக்கம் 1600- 1607
எ ஷார்ட் ஹிஸ்டரி ஆஃப் மெடிசன் – சி. சிங்கர் மற்றும் எ. எ. அண்டர்வுட்- பக்கம் 76
எ ஹிஸ்டர் அஃப் மெடிசன் – எ. காஸ்டிக்லியானி- பக்கம் 268
தி அராப் ஷார்ட் ஹிஸ்டரி – பி. ஹிட்டி – பக்கம் 143
1001 நைட்ஸ் (ஆறாம் பகுதி) – எல். பர்டன் – பக்கம்- 1886
மேன் கைண்ட் – பி. மில்லர்- பக்கம் 8- 40
தி அராப் கன்ட்ரிபுயூஷன் டு மெடிசன் – ஒய். எ. ஷாஹின்- பக்கம் 10
முஸ்லீம் கன்ட்ரிபுயூஷன் டு மெடிசன் – எச். என். வாஸ்டி – பக்கம் 5-16
எ மெடிகல் ஹிஸ்டரி ஆஃப் பெர்ஷியா – ஜி. எல்குட்- பக்கம் 278-301
ஹிஸ்டரி ஆஃப் மெடிசன் – எஃப். எச். காரிசன் – பக்கம் 134
அரேபியன் மெடிசன் – இ. ஜி. ப்ரௌனி – பக்கம் 5-16
இன்னும் பல புத்தகங்கள் உள்ளது.