ஞாயிறு, 14 ஜூன், 2015

உலகின் முதல் இஸ்லாமிய ஆட்சி வரலாறு 2

629 ல் மக்காவாசிகள், மதீனாவாசிகளுக்குள் ஆன அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து, மக்கா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலைமையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள தயாராய் இருந்தது. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் நுழைந்து காபாவைச் சுற்றியிருந்த அனைத்து சிலைகளையும் தூக்கி எறிந்து அதைப் புனித பள்ளி ஆக்கினார்கள். மக்காவையும், மதீனாவையும் இணைத்து அல்லாஹுத்தாலாவின் நாட்டப்படி இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வந்தார்கள். உலகில் வெள்ளைக்காரர்களுக்கு முன்பாகவே 7 ம் நூற்றாண்டிலிருந்து புறப்பட்ட இந்த இஸ்லாமிய ஆட்சி உலகின் பரந்த எல்லைகளை தொட்டது. சாதாரண சமாதான தலைவராகவும், தன் மத கோட்பாடுகளை சுதந்திரமாக நிறைவேற்றவும் மதீனாவில் குடிபுகுந்த ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா, மதீனாவை இணைத்து தொடங்கிய இஸ்லாமிய ஆட்சி உலகின் பலமான ஆட்சியாளர்களை, இராணுவங்களை ஆச்சரியப்படும் வகையில் எதிர்த்தது. அருகாமையில் இருந்த பலம் வாய்ந்த பெர்ஷியா மற்றும் பைசாந்தியர்களை எண்ணிக்கூட பார்க்கமுடியாத வகையில் வெற்றி கொண்டது. காரணம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் தொடங்கப்பட்ட இஸ்லாமிய ஆட்சி அவர்களின் வழியில் தோழர்கள் அபுபக்கர் சித்திக், உமர் பின் கத்தாப், உதுமான், அலியார் அவர்களால் நேரிய வழியில் நடந்தது.
                                   அலியார் அவர்களின் ஆட்சியின் போது, முந்தைய கலீஃபா உதுமான் அவர்களை கொன்றவர்களை கைது செய்ய வேண்டி மூஆவியா அவர்கள் புரட்சியில் இறங்கியதாக வரலாறு செல்கிறது. இது ஒரு நுணுக்கமான வரலாறு அது நமக்குத் தேவையில்லை. அலியார் அவர்கள் பாதுகாப்பு கருதி இஸ்லாமிய ஆட்சியின் தலைநகரமாக இருந்த மதீனாவை  ஈராக்கின் கூஃபா நகருக்கு மாற்றிக்கொள்கிறார். அதன் பிறகு, மதீனா நகரம் அரசியல் தவிர்த்து இஸ்லாமிய புனித நகரத்தில் ஒன்றாக  முழுமையாக அமைகிறது. இதன் பிறகு, இஸ்லாமிய ஆட்சி உமய்யாக்கள் பேரரசு, அப்பாஸிட்கள் பேரரசு, செல்ஜுக் பேரரசு, மம்லுக் பேரரசு, மங்கோலிய பேரரசு, முகலாயப் பேரரசு, ஓட்டோமான் பேரரசு என்று பல ஆட்சியாளர்கள் மூலம் உலகளாவிப் பரந்தது. இவைகள் அரபு நாட்டு கல்வியில் வருகின்றன. இந்த சரித்திரங்களை மதத்தை ஏற்றுக்கொண்ட நாமும் நம் பிள்ளைகளும் நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டுமென்பது என் கருத்து. முதல் உலகப்போரின் போது, ஹஷிமியாக்களின் சைய்யித் ஹுஸெய்ன் பின் அலி என்பவர் ஹிஜாஸ் பகுதியை சுதந்திர பிரதேசமாக அறிவிக்கிறார். 1924 ல் இப்ன் சௌத் என்பவர் அவரை வென்று மதீனா மற்றும் மொத்த ஹிஜாஸ் பகுதிகளையும் இணைத்து தற்போதைய சௌதி அரேபியா மன்னராட்சியாக அறிவிக்கிறார்.
                            ஆரம்பகால கலீஃபாக்களாக இருந்தவர்களுக்கு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட உண்மையான ஜிஹாத், இறையச்சம், ஆட்சி நேர்மை போன்றவை இருந்தன. முதல் இஸ்லாமிய ஆட்சியின் மன்னர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பைத்துல் மால் என்னும் மக்கள் கஜானா நிறைந்து ததும்பிய போதும், தங்கள் வாழ்நாளில் குடும்பத்துடன் முழுமையாக நல்ல உணவைச் சாப்பிட்டதில்லை. நல்ல உடைகளை உடுத்தியதில்லை. ஒருபுறம் ஸ்பெயின் வரையிலும், மறுபுறம் இந்தியா வரையிலும் இஸ்லாமிய ஆட்சியை கொண்டு செல்ல காரணமாய் இருந்த முதல் மன்னரின் உணவு, உடை, உடமைகள் நீங்கள் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். பொதுச்சொத்திலிருந்து ஒரு பேரீச்சம்பழத்தைத் தின்ற தன் பேரரின் வாயில் பதறிப்போய் விரல்விட்டு குடைந்து எடுத்தார் இந்த மன்னர். தொடர்ந்து இருபது நாட்களுக்கும் மேலாய் மூன்று வேளை உணவு இம் மன்னரின் குடும்பம் உண்டதில்லை. இம் மன்னரின் வசிப்பிடம் மூன்றாம் தர கிராமத்தின் வீடு போல் இருக்கும். தன் திருமணம் பற்றி கூறிய ஸஹாபா ஒருவருக்கு கன்னிப்பெண்ணை மணந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறிய இம் மன்னர் ஆயிஷா(ரலி) அவர்கள் நீங்க, மணந்ததெல்லாம் விதவைகளையும், விவாகரத்து ஆன பெண்களையும் தான். பசிக்கொடுமையால் உறக்கம் வராமல் வீதியில் சுற்றிய தன் மூன்று தோழர்களுடன் தானும் எழுந்து சென்று சொல்லாமல் சொல்லியது பசிக்கொடுமையை தான். பொதுச்சொத்திலிருந்து எத்தனையோ பேருக்கு அள்ளிக் கொடுத்த இம்மன்னர் தன் மகள் ஃபாத்திமா (ரலி) கேட்டபோது கொடுத்து அனுப்பியது தன் வாயினால் மொழிந்த ஒரு ஆயத்தைத்தான். நாமெல்லாம் குழாய் திறந்து நீர் பயன்படுத்திக் கொண்டிருக்க, இம்மன்னர் தோல் பையில் நீர் சுமந்துச் சென்றார். இன்று அறிவை வளர்த்திக் கொள்ள எந்த தகவலுக்கும் வலைத்தேடலில் இருக்கிறோம் நாம். நடந்தது, நடப்பது, நடக்கப்போவது அனைத்தையும் சொன்ன படிப்பறிவில்லாத இம்மன்னர் சிரம் தாழ்த்தி இறைச்சொல் ஏந்தி வரும் ஜிப்ரீலுக்காக பல இரவுகள் காத்திருந்தார். எத்திசையில், எந்த அளவுகளில், எந்த இடத்தில் படும் என்றே கணிக்க முடியாத கல்லடிப்பட்டிருக்கிறார் இம்மன்னர். என்னதான் ஒரு காலத்தில் வசந்தம் வரும் என்று உறுதிமொழி கொடுத்தால் சுடும் வெயிலையும், கடும் குளிரையும், பசியையும் நாம் பொறுத்திருப்போமா? அதுவும் வரும் வசந்தத்தை நாம் அனுபவிக்க மாட்டோம். நம் சந்ததிகள் தான் அனுபவிக்கும் என்று தெரிந்த பின்னும் இம்மன்னர் அனைத்தையும் சுமந்தார் சுவைத்தார். எவ்வளவோ சொல்லிக் கொண்டே இருக்க ஆசைப்படுகிறேன் அந்த உத்தம நபியை, அம்முதல் இஸ்லாமிய மன்னரைப் பற்றி முடியவில்லை. எனது மற்றும் உங்கள் அனைவரின் சார்பாக சாந்தியும், சமாதானமும் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மீதும், அவர் குடும்பத்தினர், ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபா அத்தாபியீன்கள் மீதும் உண்டாகட்டும். ஆமீன். (நீங்கள் இங்கே கண்ணீர் சிந்திக்கொள்ளலாம்) இந்த உலகிற்கு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆட்சியும் ரைட்லி கலீஃபாஸ் (RIGHTLY KHALIFAS) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பின்னால் வந்த நான்கு கலீஃபாக்களின் ஆட்சியும் விட்டுச் சென்ற பாடங்கள் ஏராளம் ஏராளம். ஆம் அவர்கள் பிறந்த சொந்த பூமியை விட்டு நபிகளாரின் மீது நம்பிக்கை வைத்து வந்து, ஒட்டிய வயிறுடன் இஸ்லாமிய கொள்கைகளைக் கற்றார்கள். குறிப்பாக இன்றைக்கு ஆண்டுகொண்டிருக்கும் எந்த இஸ்லாமிய ஆட்சியாளர்களாவது சிறிய சுவடையாவது பின் பற்றினார்களா என்றால் கண்கள் குளமாக இல்லை இல்லவே இல்லை எனலாம். பின் எப்படி காஃபிர்கள் தலைவர்களாக ஆளும் நாட்டில் முஸ்லீம்கள் எந்த ஒன்றையும் எதிர்பார்ப்பது.
                              இன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் குர் ஆனின் ஆல இம்ரான் சூராவில் சொல்லப்பட்ட ஆட்சி அதிகாரம் யாருக்கு தருவதென்பதை அல்லாவே தீர்மானிக்கிறான் என்பது மிக நன்றாகத் தெரியும். படைத்தவனுக்கே எப்போது உயிரைப் பறிப்பதென்பதும் தெரியும். இன்றைக்கு எத்தனை இஸ்லாமிய மன்னர்கள் நாளொன்றுக்கு எத்தனை மில்லியன் தங்கள் பாதுகாப்புக்கென செலவழிக்கிறார்கள் தெரியுமா? ஆச்சரியப்படுவீர்கள் மொத்த இஸ்லாமிய நாட்டு ஆட்சியாளர்களின் ஒரு நாள் பாதுகாப்பு செலவு 200 மில்லியன் டாலர்களுக்கும் மேல். அவர்களின் விமானம், பாதுகாப்பாளர்கள், கேமரா கண்காணிப்பு, மோப்ப நாய்களின் தீனி அட சொல்லி மாளாதுங்க. முதல் இஸ்லாமிய மன்னர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இல்லாத எதிரிகளா? பிறந்த மக்கத்து குரைஷிகள், இருந்த மதீனா யூதர்கள் அப்படியும் அவர்கள் யாரையும், எந்த பாதுகாப்பு குழுவையும் வைத்துக்கொள்ளவில்லை. சஹாபாக்கள் தான் மரியாதையின் காரணமாக அவர்களைப் பாதுகாத்தார்கள். உங்களுக்கென்ன கேடு அட அத்தனை பாதுகாப்பையும் மீறி அல்லாஹ் உங்கள் உயிரை பறிக்க மாட்டானா? உண்மை இறைவனை மறந்த இழிவானவர்கள். B. B .C.  தொலைக்காட்சி இரண்டு ஆண்டுகள் முன்பு வெளியிட்ட சிறப்பு நிகழ்ச்சி பார்த்தவர்களுக்கு தெரியும். தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மன்னர் வம்சத்தில் முதல் பணக்காரராக இருப்பவர் ஸ்காட்லாந்து மன்னர். அதற்கு அடுத்துள்ளவர் ஒரு இஸ்லாமிய மன்னர் ( நான் பெயரைச் சொல்ல விரும்பவில்லை) அவரைப் பற்றி ஒரு மணிநேர தொகுப்பு காட்டினார்கள். பிரத்தியேகமாக பிளாட்டினத்தில் செய்யப்பட்ட கார்கள், தங்கத்தில் ஜொலிக்கும் கழிவறைகள் உலகின் இரண்டாவது பணக்கார மன்னருக்கு ஒரு வங்கி கணக்கு கூட இல்லை அப்படியென்றால் தங்கம், வெள்ளி, வைரம், உள்நாட்டு, வெளிநாட்டு பணம் என்று ஒவ்வொன்றையும் சேமிக்க ஆயிரத்து ஐந்நூறு பேர் கொள்ளளவு கொண்ட பெரிய திரையரங்கம் போன்ற கட்டிடத்தில் தான் முடியும். இன்னொரு நாட்டு அதிபர் உலகின் அதிக விலைமதிக்க முடியாத குதிரைகளின் வகைகளை வரிசையாக வைத்திருக்கிறார். உலகின் அனைத்து சுற்றுலாத்தலங்களிலும் சொந்த சொகுசு பங்களாக்கள், மருத்துவ சிகிச்சைக்கு வெளிநாட்டு வைத்தியம். ஸ்விட்சர்லாந்தின் குறிப்பிட்ட ஊற்றிலிருந்து வரும் பாட்டில் ஒன்று 50 டாலரிலான குடிநீர். அட வக்கிரம் பிடித்தவர்களே மமதையில் மூழ்கி இருப்பவர்களே உண்மை இஸ்லாத்தையும், இறையச்சத்தையும் மறந்தவர்களே. அமெரிக்காவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் கைப்பாவையாகிப் போனவர்களே, இஸ்லாமிய நாடுகளைத் தாக்க இஸ்லாமிய நாட்டு மண்ணையும், கப்பல், விமான தளங்களைத் தருபவர்களே, பாலஸ்தீனியர்களுக்காக உயிரைத் தருவதற்கு பதில் தாக்கப்படும் போதெல்லாம் எப்போதும் மில்லியன்கள் கொடுத்து நீலிக் கண்னீர் வடித்து குளிர் அறையில் வீரம் பேசுபவர்களே, பெயருக்கு தான் இஸ்லாமிய ஆட்சி ஆனால், எந்த இஸ்லாமிய நாட்டிலும் மது, மங்கை, கேளிக்கைக்குப் பஞ்சமில்லை. (சௌதியில் இல்லை என்றால் அங்கு அதற்கு பதில் எதிர்க்கும் ஆண்மை எங்கே?) வலைப்பகுதிகளில் போய் பார்த்தால் ஆச்சரியப் படுவீர்கள் ஐக்கிய அரபு குடியரசு, கத்தார், பஹ்ரைன், குவைத், சௌதி அரேபியா, ஓமன், புருனை, மலேஷியா மற்றும் இன்னும் பல இஸ்லாமிய நாடுகளின் செயல்கள், செலவு செய்யப்படும் முறைகள் இஸ்லாத்துக்கு சம்பந்தமே இல்லை. ஒரு இஸ்லாமிய நாட்டில் (புரிந்து கொண்டிருப்பீர்கள்) அதிகமாக வெளிநாட்டு முஸ்லீம்கள் சிறிய பள்ளிகள் நிறைந்து பஜார் போன்ற பகுதிகளில் தெருவில் தொழுகிறார்கள். ஆனால், அதே நாட்டில் அரபுகள் வசிக்கும் பகுதிகளில் பரந்த இடத்தில் பளிங்கு பள்ளிகள் கட்டி வைத்திருக்கிறார்கள். பள்ளி என்பது எதற்கு என்பதையே மறந்து போனார்கள். 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாட்டில் எல்லாத் தெருக்களிலும் இரண்டு வீட்டுக்கொரு வீட்டில் வாசலில் பொதுமக்களுக்காக குளிர்ந்த நீர் குழாய்கள் இருந்தன. இன்றுகேட்டால் முனிசிபாலிட்டி அகற்ற சொல்லி விட்டதாக சொல்கிறார்கள். நீங்கள் இயற்கைச் சீற்றத்திற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் எண்ணெய் வருமானத்தை மில்லியன்களாக ஜக்காத்தாகவோ, சதக்காவாகவோ கொடுத்துவிடுவதால் தப்பித்துவிட முடியாது. இஸ்ரேலிய குண்டு வீச்சில் பலியான பின் பாலஸ்தீனியர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மில்லியன்கள் கஃபனிடவா? ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தின் ஒவ்வொரு உயிருக்கும் அவர்கள் ஆரம்பித்த இஸ்லாமிய ஆட்சியின் பேரில் உலகமுழுவதும் ஆளும் முஸ்லீம் ஆட்சியாளர்கள் பதில் சொல்லியாக வேண்டும். இன்று ஒரு வக்த் தொழுகையை விடுவதற்கு 5000 ரூபாய் கொடுக்கவும் தயாராக இஸ்லாமியர்கள் வசதி படைத்திருக்கிறார்கள். இங்கு எனக்குத் தெரிந்த படித்த விஷயங்கள் நிறைய சொல்லத் துடிக்கிறேன். ஆனால், அது திசை மாற்றிவிடும். இறுதியாக பட்டினி இருந்து ஆண்ட முதல் இஸ்லாமிய ஆட்சியாளர் எங்கே ஒரு நாள் தன் ஒரு பந்தய குதிரையின் உணவுக்கும், வளர்ப்புக்கும் குறைந்தது (உணவு, பாதுகாவலர், மருத்துவர், சுத்தம் செய்பவர், பயிற்சி கொடுப்பவர் என்று) 38,000 அமெரிக்க டாலர்களைச் செலவிடும் இன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் எங்கே.
                                 இறுதியாக ஷீத் (அலை) அவர்களின் கூட்டத்திற்கும், ஆத் (அலை) அவர்களின் கூட்டத்திற்கும், நூஹ் (அலை) அவர்களின் கூட்டத்திற்கும் இறைவன் அளித்த தீர்ப்பை மறந்துவிடாதீர்கள். ஒரு நாட்டு மக்களின் கண்ணாடி அந்நாட்டு மன்னன். நீங்கள் நலமாய் இருப்பதற்கு உங்கள் இஸ்லாமிய குடிமக்களின் துவா காரணமாகும். ஒரு மன்னர் என்பவர் மொத்த நாட்டு மக்களின் சார்பாக அல்லாவிடம் பதிலளிக்க கடமைப்பட்டவர். மாற்றவோ, மறுக்கவோ முடியாத இறைவனின் தீர்ப்புக்கு சற்று பயந்திருங்கள்.

உலகின் முதல் இஸ்லாமிய ஆட்சி வரலாறு 1

 உலகின் முதல் இஸ்லாமிய ஆட்சியின் வரலாறு, அல்லாஹுத்தாலாவின் பரந்த இந்த பூமியில் இரத்தமின்றி ஒரு சிறிய புள்ளியாக ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூலமாக மதீனா என்ற அமைதியான நகரத்தில் துவங்குகிறது. இரண்டாம் நூற்றாண்டில் அரேபியாவில் ஹிஜாஸ் பகுதியில் யத்ரிப் நகரின் உள்ளேயும், வெளியேயும் து நுவாஸ் (யூதர்களின் தூ நுவாஸ் என்பவன் யூத போராளி. இவன் கடைசி காலத்தில் குதிரையில் சென்று செங்கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக வரலாறு) என்னும் தலைவர்கள் போலுள்ளவர்கள் கீழ் யூதர்கள் பரவுகிறார்கள். இந்த யூதர்கள் கிறிஸ்துவத்தை பலமாக எதிர்ப்பவர்கள். 6 ம் மற்றும் 7 ம் நூற்றாண்டுகளில் யூத இனம் கனிசமாகக் கூடுகிறது. இஸ்லாமுக்கு முன் இவர்கள் பனூ நதிர், பனூ கைனுகா மற்றும் பனூ குரைஸா என்று மூன்று பெரிய பழங்குடியினமாக இருந்தார்கள். இதில் பனூ நதிர் குலம்தான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எதிர்த்தது. மற்ற இரு குலங்களும் இஸ்லாமியர்களுடன் அனுசரித்து போயினர். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யத்ரிப் வந்த காலத்தில் மேலும் சிறு சிறு யூத குலங்களாக பனூ அவ்ஃப், பனூ ஹரித், பனூ ஜுஷாம், பனூ அல்ஃபகீர், பனூ நஜ்ஜார், பனூ ஸஃஇதா மற்றும் பனூ ஷுதைய்பா போன்றவையும் இருந்தன.
                                  பெர்ஷிய பேரரசின் காலத்தில் பெர்ஷிய மன்னர் ஷாவுக்கு வரி வசூலித்து கொடுப்பவர்களாக பனூ குரைய்ஸா குலத்தினர் இருந்தனர். ஏமனிலிருந்து பிறகு யத்ரிப் நகர் வந்த இரு குலங்களான பனூ அவ்ஃப் (பனூ ஆஸ்) மற்றும் பனூ கஸ்ரஜ் ஆகியோர்களால் சூழ்நிலைகள் மாறின. முதலில் யூத ஆட்சியாளர்களுடன் சுமுகமாக இருந்த இந்த குலங்கள் பிறகு, கலவரம் செய்து சுதந்திரமாக ஆனார்கள். 5 ம் நூற்றாண்டில் யூத ஆட்சியாளர்கள் பனூ அவ்ஃப் மற்றும் பனூ கஸ்ரஜ் வசமிருந்த பகுதிகளின் அதிகாரத்தை இழந்தார்கள். இதனால் யத்ரிப் நகரில் இந்த இரு குலங்களின் பலம் அதிகமானது. மற்ற யூத குலங்கள் இவர்களின் கீழ் இருந்தார்கள்.
                              
                          அரேபியாவின் வாணிப வழிகள் ஏமன், அரேபியா, சிரியா மற்றும் ஈராக்கை இணைத்தது. தொடர்ந்து ரோமர்களுக்கும், பெர்ஷியர்களுக்கும் போர் நடந்து கொண்டிருந்ததால் அந்த பகுதிகள் எப்போதும் பதட்டத்திலேயே இருந்தன. புதிய இறுதி நபி வரவிருப்பதை எதிர்பார்த்தும் சில தீவிர யூத, கிறிஸ்தவர்களும் யத்ரிபில் குடியேறினர். அதில் பஹிரா என்ற துறவியும், சல்மான் (ரலி) என்ற பெர்ஷியரும் அடங்கும். கொஞ்சம் சல்மான் (ரலி) அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு தொடர்வோம். சல்மான் (ரலி) அவர்கள் ஈரானின் இஸ்ஃபஹான் நகரில் ஸோரோஸ்ட்ரிய மதசார்புள்ள குடும்பத்தில் பிறந்தவர். பின் சிறு வயதிலேயே கிறிஸ்துவராகி மோஸுலின் பிஷப் ஒருவருடன் உண்மையான இறைவனை அறிந்து கொள்ள அவருடன் சிரியா நகரம் சென்றார். அப்படியே அந்த குழு செங்கடலின் வடபகுதி அகாபா நகரம் வந்தது. பிஷப் இறந்து போய்விட பயண குழுவினர் சிறுவர் சல்மான் (ரலி) அவர்களை ஒரு யூதரிடம் அடிமையாக விற்றுவிடுகிறது. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வருகைக்கு முன் சல்மான் (ரலி) அவர்கள் பனூ குரைஸாவின் யூதர் ஒருவரிடம் கைமாறுகிறார். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதி தூதர் என்பதை முந்தைய வேதங்கள் மூலம் புரிந்து கொண்ட சல்மான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுகிறார். அஹ்ஸாப் போரில் எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள மதீனா நகரைச் சுற்றி அகழி தோண்டும் அறிவுரையை இவர்தான் கூறினார். சல்மான் ஃபரீஸ் என்று அறியப்படுபவர்.
                          யத்ரிப் நகருடனான ஏமனியர்களின் பகை கடைசி ஏமன் மன்னர் ஹிம்யரிட் பேரரசின் காலத்தில் இருந்ததாக புராதன முஸ்லீம் ஆய்வாளர் இப்ன் இஸ்ஹாக் தெரிவிக்கிறார். ஒருமுறை ஏமன் மன்னர் பயணத்தின் போது யத்ரிப் நகரை ஒட்டியுள்ள பள்ளத்தாக்கைக் கடக்கும் போது, அருகில் குடியிருந்தோர் தவறுதலாக மன்னரின் மகனைக் கொன்று விடுகிறார்கள். இதனால் கோபமடைந்த மன்னர் காரணமானவர்களைக் கொன்று அவர்களின் பேரிச்ச தோப்புகளை அழித்து விடுவதாக எச்சரிக்கிறார். அப்போது, பனூ குரைஸாவைச் சேர்ந்த இரு ரப்பிகள் (யூத பாதிரிகள்) மன்னரை மன்னிக்கும் படியும், இந்த பூமி எங்கள் வேத நூல் தோராவில் கூறப்பட்டுள்ள இறுதி தூதர் வந்து தங்க இருக்கும் பூமி என்று கூறி தடுத்து விடுகிறார்கள். உண்மையும் அதுதான் யூத மதத்தில் மிகவும் பற்றுள்ள பனூ நதிர், பனூ கைனுகா மற்றும் பனூ குரைஸா குலத்தினர் என்றாவது ஒருநாள் வரப்போகும் இறுதி தூதருக்காகவே யத்ரிப் நகரில் குடியிருந்தனர். 
                                இதன் பிறகு, ஏமனைட் மன்னர் நகரத்தை ஒன்றும் செய்யாமல் யூத மதத்தைத் தழுவுகிறார். பின் மன்னர் அந்த ரப்பிகளுடன் மக்கா நகரம் சென்று, பின் ஏமனுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அந்த ரப்பிகள் எரியும் தீயில் நுழைந்து அற்புதம் காட்ட ஏமன் மக்களும் யூத மதத்தைத் தழுவுகின்றனர். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யத்ரிப் நகருக்கு ஹிஜ்ரா வரும் சமயத்திலும் பனூ அவ்ஃப் மற்றும் பனூ கஸ்ரஜ் குலத்தினரிடையே பகை இருந்தது. அந்த பகை 120 ஆண்டுகாலமாக அவர்களிடையே இருந்தது. பனூ நதிர் மற்றும் பனூ குரைய்ஸா குலத்தினர் பனூ அவ்ஃப் குலத்திற்கு ஆதரவாகவும், பனூ கைனுகா குலத்தினர் பனூ கஸ்ரஜ் குலத்தினருக்கு ஆதரவாகவும் இருந்தனர். அவர்களிடையே நான்கு போர்கள் நிகழ்ந்தன. அதில் மிகவும் கடுமையான போர் “பு அத் போர்” ஆகும். இது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யத்ரிப் வருவதற்கு சில ஆண்டுகள் முன்பு நடந்தது. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யத்ரிப் வருவதற்கு முன் பனூ கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் இப்ன் உபைய் என்பவர் தான் யத்ரிப் நகரில் புகழோடும், மரியாதைக்குரியவருமாக இருந்தார். பின்னாளில் யத்ரிப் நகரைச் சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக அகாபா என்ற இடம் சென்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், அவரின் சிறிய நம்பிக்கையாளர்களையும் யத்ரிப் வந்து அவர்களிடையே எழுந்துள்ள குலப் பகைக்கு நடுவராக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்கள்.
                                 622 ம் வருடம் மக்காவின் குரைஷி குலத் தலைவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குலமும் குரைஷி குலம்தான்) ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொல்வதற்கு திட்டமிடுகிறார்கள். இதனால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை யத்ரீபைச் சேர்ந்த அவ்ஃப் மற்றும் கஸ்ரஜ் குலத்தின் பெரியவர்கள் மற்றும் இரு பெண்களும் அக்காபாவில் சந்தித்து தங்கள் குலத்தின் பகைக்கு மத்தியஸ்தராக வந்து இருக்க வேண்டியிருந்தனர். அவர்கள் அனைவரும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு  நம்பிக்கை அளிக்கும் வண்ணம் அங்கேயே இஸ்லாம் மதத்திற்கும் மாறினர். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யத்ரிப் வந்து தங்குவதால் அவ்ஃப் மற்றும் கஸ்ரஜ் குலத்தினரின் நீண்ட நாள் பகையும் தீருமென்று நம்பினார்கள். இறுதியாக அவர்களுக்குள் நடந்த பு அத் போரில் இரு குலமும் பலமாக பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், அவரைச் சேர்ந்தவர்கள், பெண்களுக்கும் மக்காவாசிகளால் எந்த ஆபத்து வந்தாலும் பாதுகாப்பதாக உறுதியும் அளிக்கிறார்கள்.
                                 622 ம் வருடம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், மக்கா நம்பிக்கையாளர்கள் 70 பேரும் யத்ரிப் நகருக்கு புலம் பெயர்ந்தார்கள். இந்த இடப்பெயர்ச்சி அல்லாஹுத்தாலாவின் அருளால் வரலாற்றில் இன்றளவில் மதம் மற்றும் அரசியல் அமைப்பை புரட்டிப் போட்டது. அவ்ஃப் மற்றும் கஸ்ரஜ் குலத்தினரையும் சில உள்ளூர் யூத பழங்குடியினரையும் இஸ்லாமுக்கு மத மாற்றம் செய்தது. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஸ்ரஜ் குலத்தினரின் ஆதரவுடன் யத்ரிப் நகரின் பரிபாலன தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தனக்கு ஆதரவளித்து இஸ்லாத்துக்கு மதம் மாறிய யத்ரிப் நகர மக்களை அவர்கள் யாராயிருந்தாலும் “அன்சாரி” (உதவியாளர்கள்) என்று அன்புடன் அழைத்தார்கள். (அல்லாஹுத்தாலாவும் திருமறையில் அன்சாரி என்றுதான் கூறி இருக்கிறான்) மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்கள், மதீனாவிலிருந்த அன்சாரிகள் யூத குலத்தவர்கள் மற்றும் யூத பழங்குடிகள் அனைவரும் ஒரு மனதுடன் இணைந்து மதீனா நகரின் முழு கட்டுப்பாட்டையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்படைப்பதாகவும், அவர்களின் தீர்ப்புக்கு கட்டுப்படுவதாகவும் கையெழுத்திட்டு ஒப்பந்தம் செய்கிறார்கள். யத்ரிப் நகரம் “ மதீனத்துன் நபவீ” (தூதரின் நகரம்) என்று பெயரிடப்பட்டது. எதிர்பார்த்த விதமாக யூத குலங்களுக்கிடையே அமைதி ஏற்பட்டது. மக்கா முஹாஜிர்களுக்கும், மதீனா அன்சாரிகளுக்கும் இடையேயும் பலமான உறவுகளை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோற்றுவித்தார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், மதீனாவாசிகள் மற்றும் யூதர்களுக்குமான எழுதப்பட்ட நீண்ட ஒப்பந்தம் வெளியிடப்பட்டிருக்கின்றன். அது நமக்கு இங்கு தேவையில்லை என்று கருதுகிறேன்.
                                 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எதிரிகளான குரைஷியர்களுடன் நடந்த பத்ர் போர் மிகவும் முக்கியமானது. இஸ்லாத்தின் எதிரி அபு சுஃப்யான் இப்ன் ஹர்ப் முப்பதுக்கும் மேற்பட்ட கூட்டத்தினருடன் சிரியாவிலிருந்து மக்கா திரும்புகிறார் என்ற நம்பகமான செய்தி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கிடைக்கிறது. முதல் முறையாக அதிகப்படியான 313 வீர்ர்களுடன் மதீனாவின் இஸ்லாமியப்படையினர் செல்கின்றனர். அபு சுஃப்யானின் வாணிபக் குழு மதீனா நகரை நெருங்கும் முன் சில பயணிகள் மூலம் தங்களை எதிர்க்க ஒரு கூட்டம் தயாராய் இருப்பதை அறிந்து கொள்கிறார். உடனே சற்று தாமதப்படுத்தி தம் தம் என்னும் ஒரு நபர் மூலம் மக்காவுக்கு சென்று குரைஷிகளை உஷார் படுத்தி கூட்டி வர உத்தரவிடுகிறார். மக்காவிலிருந்து 900 லிருந்து 1000 க்குள் உண்டான பெரும் கூட்டம் அபு சுஃப்யானின் வாணிபக்குழுவைக் காப்பாற்ற வருகிறது. அதில் பிரபலமான குரைஷிகள் அம்ர் இப்ன் ஹிஷாம், வலித் இப்ன் உத்பா, ஷைபா மற்றும் உமய்யாஹ் இப்ன் கலாஃப் ஆகியோர் இடம் பெற்றனர்.
                           போர் துவங்கியதும் இஸ்லாமிய படையிலிருந்து அலி(ரலி), உபைதா இப்ன் அல் ஹரித்(ரலி), மற்றும் ஹம்ஸா இப்ன் அப்த் அல் முத்தலிப் ஆகியோர் களத்தில் இறங்கினர். இந்த போரின் வரலாறுகள் நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் என்பதால், நாம் மேற்படி நகருவோம்.
                             625 ல் மக்காவின் தலைவராக இருந்த அபு சுஃப்யான் இப்ன் ஹர்ப் வழக்கமாக அருகிலிருந்த பைசாந்திய (ரோம) பேரரசுக்கு வரி செலுத்தி வந்தார். இந்த முறை உஹுத் போரை ஆரம்பித்து இஸ்லாமிய படை மீது தாக்க உஹுத் மலை வந்தார். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மதீனாவிலிருந்து படையுடன் வந்தார்கள். இடையில் துரோகம் செய்யும் விதமாகவும், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு மாற்றமாகவும் மதீனாவின் பனூ கஸ்ரஜ் குல தலைவர் அப்துல்லாஹ் இப்ன் உபைய் தன் கூட்டத்துடன் போரில் கலந்து கொள்ளாமல் திரும்பிவிடுகிறார். சிறிய கூட்டமுள்ள வீரர்களுடன் போரிட வேண்டிய கட்டாயத்திற்கு இஸ்லாமிய படை ஆளாகிறது. நபிகளாரின் சொல்லை மீறிய மலைப்பகுதி வீர்ர்கள் போன்ற இந்த போரின் வரலாறும் நீங்கள் நன்கு அறிந்ததுதான். இந்த போரில் இஸ்லாமிய படை தோல்வியடைகிறது. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காயமடைகிறார்கள்.
                             627 ல் மீண்டும் அபு சுஃப்யான் ஒரு படையுடன் மதீனா நோக்கி வருகிறார். அது அஹ்ஸாப் போர். மதீனாவாசிகள் நகரைக் காப்பாற்ற சல்மான் (ரலி) என்பவரின் ஆலோசனையின் பேரில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒப்புதலுடன் பெரிய அகழியை மதீனாவைச் சுற்றி தோண்டுகிறார்கள். இதனால் அபு சுஃப்யான் மதினாவை விட்டு திரும்பும் போது பனூ குரைய்ஸா குலத்துடன் இஸ்லாமிய படையை பின்னிருந்து தாக்குவதற்கு ஒரு ஒப்பந்தம் செய்கிறார். இது நபிகளாருடன் செய்து கொண்ட ஒப்பந்திற்கு மாற்றமாகும். இந்த போரின் வரலாறும் என்னருமை சமுதாயம் நன்கு அறியுமென்பதால் மேற்படி மேலே செல்வோம்.