வெள்ளி, 17 ஜூலை, 2015

அலாஒயிட்டுகள் வரலாறு 1

அலாஓயிட் ஆட்சிவம்சம் 

கூ.செ. செய்யது முஹமது
சாதியன் பேரரசில் இறுதி சுல்தானாக மொரோக்கோவில் அஹ்மத் அல் மன்சூர் என்பவர் இருந்தார். அவரது இறப்பிற்குப் பிறகு, அரச குடும்பத்தினரின் குழப்பத்தினால் அலாஓயிட் ஆட்சிவம்சம் என்ற புதிய பெயரில் ஸாவியா போரில் வெற்றி பெற்று முலாய் அல் ராஷித் என்பவரின் ஆட்சி மொரோக்கோவில் ஏற்பட்டது. இந்த ஆட்சியை அலவிட் ஆட்சிவம்சம் என்றும் அழைக்கலாம். இவர்கள் அலி இப்ன் அல்தாலிப்(ரலி), ஃபாத்திமா அஸ் ஸஹரா(ரலி) அவர்களின் வாரிசு முஹம்மது என்பவரின் வழிமுறையில் வந்தவர்கள். 13 ம் நூற்றாண்டில் ஹிஜாஸ் மாகாணத்தில் யான்பு நகரத்திலிருந்து அல் ஹஸ்ஸன் அத்தாகில் என்பவரை மொரோக்கோவைச் சேர்ந்த ஒரு இமாம் (மதகுரு) தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்வதால் அவரின் துவா (பிரார்தனை) வினினால் தங்கள் பேரீச்சைத் தோட்டத்திற்கு பரக்கத் (வளமை) வரலாம் என்று அழைத்து வந்தார். அத்தாகிலின் சந்ததி படிப்படியாகப் பெருகி 16 ம் நூற்றாண்டில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஷரீஃப் இப்ன் அலி என்பவர் சாதியன் பேரரசின் பலவீனத்தைப் பயன்படுத்தி ‘டஃபிலல்ட்’ பகுதியில் இளவரசரானார். இவர் தான் அலவிட் ஆட்சிவம்சம் அமைய தூண்டுகோலாக இருந்தார். இவரின் 15 மகன்களில் மூத்த மகனான முஹம்மது இப்ன் ஷரீஃபை 1536 ல் டஃபிலல்டுக்கு ஆட்சியாளராக்கினார். முஹம்மது இப்ன் ஷரீஃபிற்கு பிறகு அவர் சகோதரர் முலாய் அல் ராஷித் 1664 ல் ஆட்சிக்கு வந்து சிறிய இராணுவத்தின் மூலம் கிழக்கு மொரோக்கோவில் ஆதிக்கம் பெற்றார். அடுத்து டஸா என்ற பகுதியையும் வென்றார். 1666 ல் ஃபெஸ் மாகாணத்தை ஆட்சி செய்த பெர்பெர்களின் வழிவந்த ஸ்வோய்யா என்பவரை மொரோஸாவியா போரில் வெற்றி பெற்று வட மொரோக்கோவின் மொத்த அதிகாரத்தையும் பெற்றார். இவர் தனது குதிரையில் இருந்து தவறி விழுந்து மர்ராகெச்சில் 1672 ல் 26 வயதில் இறந்து போனார். இவருக்குப் பிறகு இவரின் ஒன்று விட்ட சகோதரர் இஸ்மாயில் இப்ன் ஷரீஃப் ஆட்சிக்கு வந்தார்.
இஸ்மாயில் இப்ன் ஷரீஃப் ஆட்சிக்கு வந்தவுடன் உள்நாட்டு பழங்குடியினரால் அடிக்கடி சண்டை நடந்தது. மர்ராகெஷிலிருந்து மாற்றி மெக்னஸ் என்ற நகரத்தை தலைநகராக உருவாக்கினார். இது மொரோக்கோவின் மூன்றாவது பெரிய நகரமாகும். ஏறக்குறைய ஒரு கோடி பேர் வசிக்கிறார்கள் 9 ம் நூற்றாண்டில் தென் துனீஷியாவில் வாழ்ந்த மிக்னஸா என்ற பெர்பெர் பழங்குடியினரின் நினைவாக மெக்னஸ் என்று பெயர் வைத்தார். 11 ம் நூற்றாண்டில் அல்மொராவிட்கள் ஆட்சியின்போது இங்கொரு கோட்டை இருந்தது. பின் அல்மொஹத் என்பவர்களால் ஒரு பெரிய மஸ்ஜித் கட்டுவதற்காக அது இடிக்கப்பட்டது. பின்னால் வந்த மெரினித்கள் ஒரு மதரஸாவையும் கட்டினார்கள். இஸ்மாயில் இப்ன் ஷரீஃப் கடலில் பிடிக்கப்படும் கிறிஸ்தவ மாலுமிகளை அடைத்து வைக்க இங்கு பெரிய சிறைச்சாலையும், மாளிகைகளும், தோட்டங்களும், நினைவு கதவுகளையும், மஸ்ஜித்களையும் கட்டினார். இந்நகரம் “சிட்டி ஆஃப் ஹன்ரட் மினாரட்ஸ்” என்று அழைக்கப்பட்டது. 40 கி.மீ நீளத்தில் மிகப்பெரிய சுவரையும் நகரைச் சுற்றிக் கட்டினார். இச்சுவரால் 2000 ஆம் ஆண்டு மெக்னஸ் நகரில் மழை பெய்தால் வெளியேறாமல், வடிவு நீர்க்குழாய்கள் அமைப்பதும் சிரமமாக இருந்தது.
இஸ்மாயில் இப்ன் ஷரீஃபின் கொடூரத்தன்மையால் ‘இரத்த தாகம் எடுத்தவர் என்று சொல்லப்பட்டார். இவர் மெக்னஸில் கட்டிய சுவரில் எதிரிகளின் 10,000 தலையால் அழகுபடுத்தப்பட்டது என்றும் சொல்லப்பட்டது. இவரது ஆட்சியில் சரியாக வேலை செய்யாத பணியாட்கள், அரண்மனை வேலையாட்கள், எதிரிகள் என்று தோராயமாக 30,000 பேர் வரை கொன்றார் என்று சொல்கிறார்கள். 1682 ல் இஸ்மாயில் இப்ன் ஷரீஃப் ஃப்ரான்ஸின் மன்னரான 18 ம் லூயிஸிடம் முஹம்மது டெனிம் என்பவரை தூதுவராக அனுப்பினார். ஃப்ரான்சுடன் நல்லுறவைப் பேண லூயிஸின் அழகான மகள் மேரி அன்னி டி போர்டனை மணந்து கொள்ளவும் விரும்பினார். ஆனால், போர்டன் அதை மறுத்துவிட்டாள். 1679, 1682, 1695,1695 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து ஓட்டோமான்களுடன் போரி ட்டு மொரோக்கோவின் சுதந்திரத்தை அலாவிட்டுகளுக்கு உறுதி செய்தார். இதனால் இன்றும் மொரோ க்கோவின் சரித்திரத்தில் இவருக்கொரு பெயருண்டு.  ஐரோப்பியர்கள் நிறைய துறைமுகங்களை ஆக் கிரமித்து வைத்திருந்தார்கள். 1681 ல் ஸ்பெயினிடமிருந்து அல் மமூராஹ், 1684 ல் ஆங்கிலேயர்களிடம் இருந்து டான்ஜியர், 1689 ல் மீண்டும் ஸ்பெயினிடமிருந்து லராச்சி ஆகிய துறைமுகங்களை மீட்டார். ஸ்பெயினின் எதிரியாய் இருந்த ஃப்ரான்சின் 
18 ம் லூயிசின் நட்புறவால் பல உதவிகள் பெற்றார். ஃப்ரான்ஸ் இஸ்மாயில் இப்ன் ஷரீஃபின் இராணுவத்திற்கு பயிற்சியும் கொடுத்து, அரசு நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என்று ஒழுங்குமுறைகளையும் சொல்லிக் கொடுத்தது. பல ஐரோப்பிய கடல் கொள்ளையர்களையும், அடிமைகளையும் பிடித்து வைத்திருந்த இவர் தலைநகர் மெக்னஸை உருவாக்க அவர்களைப் பயன்படுத்திக் கொண்டும், ஐரோப்பியர்களுடனான போர்களில் அவர்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்தியும், அவர்களை விடுதலை செய்ய பெரிய பணயத் தொகைகளையும் பெற்றார். ஏறக்குறைய 150,000 துணை சஹாரா ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் இவரின் ‘கரும் பாதுகாப்புப்படை’ யில் இருந்தார்கள். இவர் இறக்கும் போது அப்படை பலமடங்கு பெரியதாக மாறி மொரோக்கோவின் சரித்திரத்தில் இடம் பெற்றது.
நம்பித்தான் ஆகவேண்டும் இவருக்கு 867 குழந்தைகள் பிறந்தனர். அதில் 525 ஆண் குழந்தைகளும், 342 பெண் குழந்தைகளும் ஆவார்கள். 1721 ல் இவரது 700 வது குழந்தை பிறந்தது. இப்பிறப்புகள் எந்த ஒரு தனி மனிதனுக்கும் இல்லாமல் ஆதாரத்துடன் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 1727 ல் தனது 80 வது வயதில் இஸ்மாயில் இப்ன் ஷரீஃப் இறந்து போனார். இவர் இறப்பிற்கு பிறகு எண்ணற்ற மகன்களால் ஆட்சிக்கு பெரும் குழப்பம் நிலவியது. மேலும் நல்ல உறவு இல்லாத பெர்பெர் மற்றும் அரபு பிதோயின் பழங்குடியினர்களாலும் பல புரட்சிகளும், சண்டைகளும் நடந்தது. 1755 ல் ஏற்பட்ட பெரும் பூகம்பத்தில் மெக்னஸ் நகரின் அரண்மனை சுவர் பெரிதும் பாதிக்கப்பட்டது. இஸ்மாயில் இப்ன் ஷரீஃபுக்குப் பிறகு, சில மாதங்களே ஒன்று விட்ட சகோதரர் அஹ்மெத் எத் தெஹிபி 1727 ல் ஆண்டார். மதுப்பழக்கம் இருந்ததாலும், ஆட்சியாளும் சரியான தகுதி இல்லாததாலும் இவரின் சொந்த மனைவியே புரட்சிக்குத் தூண்டி இவரை ஆட்சியை விட்டு துரத்தினார். உடனே பல பிரச்சினைகளின் பின்ணனியில் இஸ்மாயில் இப்ன் ஷரீஃபின் மகன் அபுல் அப்பாஸ் அஹமத் ஆட்சிக்கு வந்தார். ஒரே ஒரு ஆண்டு மட்டும் ஆட்சி செய்தார். உடனே இஸ்மாயில் இப்ன் ஷரீஃபின் பிரபலமான மகன் அப்தல் மாலிக் என்பவர் ஆட்சியைப் பிடித்தார். இவரை வாய்மொழியாக தந்தை ஆட்சிக்குப் பரிந்துரைத்திருந்தார். இவர் செய்த தவறு சகோதரரைத் தப்பிக்க விட்டது. அதற்குக் காரணமாக கரும்பாதுகாப்புப்படையை குற்றம் சாட்டினார்.
இதனால் கரும்பாதுகாப்புப்படை கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக அப்தல் மாலிக்குக்கு ஒத்துழைக்காமல் அஹ்மெத் எத் தெஹிபுக்கு மீண்டும் ஆதரவு தெரிவித்தார்கள். இதனால் மீண்டும் உள்நாட்டுப் போர் உச்சத்தை அடைந்தது. அதிகமான ரத்தம் சிந்தப்பட்ட பிறகு, சகோதரர்கள் இருவருக்கும் இடையில் சமாதானத்திற்கு ஒப்புக் கொண்டார்கள். மொரோக்கோவை இரண்டாகப் பிரித்து அஹ்மெத் எத் தெஹிபி மெக்னெஸ் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு ஒரு ஆட்சியும், ஃபெஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு அப்தல் மாலிக் ஒரு ஆட்சியும் ஆள்வதாக ஒப்புக் கொண்டார்கள். இதன் சாராம்சம் சரியாக இல்லாததால், சகோதரருடன் நேரில் சந்தித்துப் பேச அழைத்தார். ஆனால் பின்ணனியில் அவரைக் கொல்ல அப்தல் மாலிக் திட்டமிட்டிருந்தார். ஆனால் திட்டம் தோல்வி அடைந்ததால் ரகசிய படையால் பிடிக்கப்பட்டு தனிச் சிறையில் அடைக்கப்பட்டு, பல வாரங்கள் கழித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த தருணத்தைப் பயன்படுத்தி தப்பிப்போன அபுல் அப்பாஸ் அஹமது மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். முன்பு போலவே சில மாதங்களே ஆண்ட இவரை புரட்சியின் மூலம் சுல்தான் இஸ்மாயில் இப்ன் ஷரீஃபின் இன்னொரு மகன் அபு அப்பாஸ் அப்துல்லாஹ் ஆட்சிக்கு வந்தார். இவரை ஒரே முறையாக ஆட்சி செய்யவிடாமல் அவரது சகோதரர்கள் புரட்சியின் மூலம் கவிழ்த்தார்கள். இவர் 1729-1734, 1736, 1740-1741, 1741-1742, 1743-1747 மற்றும் 1748-1757 வரை விட்டு விட்டு ஆண்டார். தார் இட்டிபிபாக் என்ற இடத்தில் நவம்பர் 1757 ல் இறந்து போனார். இடைப் பட்ட காலங்களில் 1734-1736 ல் அலி என்பவரும், 1736-1738 வரை இரண்டாம் முஹம்மதுவும், 1738-1740, 1742-1743, 1747-1748 வரை மூன்று முறை அல் மொஸ்தாடியும், 1741 ல் சில மாதம் ஸின் அல் அபிதினும் நிலையற்று ஆட்சி செய்தார்கள். அந்தளவுக்கு சகோதரர்கள் புரட்சியின் மூலம் அடித்துக் கொண்டார்கள்.
1757 ல் அபு அப்பாஸ் அப்துல்லாஹ் இறந்த பிறகு, 1745 லிருந்து 1748 வரை ஆண்ட நான்காம் அப்துல்லாஹ் என்பவரின் மகன் முஹம்மது பென் அப்துல்லாஹ் ஆட்சிக்கு வந்தார். இவரை மூன்றாம் முஹம்மது என்றும் அழைப்பார்கள். இவர் வந்த பிறகு, இராணுவம், நிர்வாகம் அனைத்தையும் உடனடியாக மாற்றினார். மத்தியிலிருந்து அனைத்துப்பகுதியிலும் ஆள்வதற்கு பதில் அங்கங்குள்ள பழங்குடி மக்களை அவர்களையே நிர்வகிக்கச் செய்தார். இவர் இதற்கு முன்பு மர்ரகெஷில் கவர்னராக இருந்தார். பலருடன் அதிகமாக அமைதி ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார். ஐரோப்பியர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, கடற்கொள்ளையர்களைத் தடுத்தார். மூன்றாம் முஹம்மது கவனிக்கப் படாமல் இருந்த எஸ்ஸஓயிரா நகரத்திற்கு புத்துயிர் அளித்தார். இந் நகரம் மேற்கு மொரோக்கோவில் அட்லாண்டிக் கடலின் கரையில் இருந்தது. மர்ரகெஷுக்கும், டென்சி ஃப்ட் அல் ஹஊஸ் நகரங்களுக்கு பெரும் பொருளாதாரத்தை ஈட்டித்தந்தது. மொரோக்கோவின் சிறந்த துறைமுகமாக வேகமாக வீசும் கடல் காற்றைத் தடுக்கும் வண்ணம் அமைதியாக இருந்தது. எஸ்ஸா ஓயிரா நகரம் சரித்திரகாலத்திற்கு முற்பட்ட புராதன நகரம். புராதன பொருட்கள் பல ஆராய்ச்சியாளர்களால் இங்கு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சிடி மொக்தூல் என்ற ஒரு இஸ்லாமிய ஞானியின் உடல் இங்கு அடக்கம் செய்யப்பட்டதால் மொகடார் என்றும் இந்நகரம் அழைக்கப்பட்டது.

அலாஒயிட்டுகள் வரலாறு 2

சுல்தான் மூன்றாம் முஹம்மது இந்நகரை சீரமைத்ததால்  அவர் எதிரிகளுக்கு வாணிபத்திற்குப் பயன்பட்ட அக்தீர் பகுதி தடைபட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கட்டாயமாக எஸ்ஸஓயிரா நகரத்திற்கு குடியேறினார்கள். 12 ஆண்டுகள் மூன்றாம் முஹம்மது ஃப்ரான்சின் தலைமை பொறியாளர் தியோடர் கோர்னட் தலைமையில் ஐரோப்பிய பணியாட்களை வைத்து நவீன நகரமாக கோட்டையுடன் இதை வடிவமைத்தார். மிகவும் அழகாகத் தோன்றிய இந்நகரம் மொகடார் என்பதிலிருந்து மாறி “எஸ்-ஸஓயிரா” (அழகாக வடிவமைக்கப்பட்டது.) இந்நகரின் கஸ்பாஹ் பகுதியில் சுல்தான் குடும்பத்தினர் தங்க இருப்பிடம். ஐரோப்பியர்கள் தங்க தனி இடம், கிறிஸ்தவ மற்றும் கடல் வணிகர்கள் தங்க தனி இடங்களைக் கட்டினார். துறைமுகத்தின் அழகிய நுழைவாயில் அஹ்மத் எல் இங்கிலீஸி என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கச் செய்தார். 19 ம் நூற்றாண்டு வரை மொரோக்கோவின் முக்கிய துறைமுகமாக விளங்கி, இங்கிருந்து வாகனங்களில் பல நகரங்களுக்கு தினசரி பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது. மொரோக்கோவின் பல பகுதிகளில் வசித்த யூதர்களை மூன்றாம் முஹம்மது இந்நகரத்திற்கு வந்து தங்கி ஐரோப்பியர்களுடன் வாணிபம் செய்ய வேண்டினார் அதனால் அங்கு பல யூத மடங்களும், கல்லறைகளும் உள்ளன. மூன்றாம் முஹம்மது ஃப்ரான்சுகளிடமிருந்து லராச்சி, போர்ச்சுகீசியர்களிடமிருந்து மஸகன் ஆகியவற்றைக் கைப்பற்றினார். இவரது ஆட்சியில் அமெரிக்காவால் முதல் சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்டது. 1789 ல் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் தங்கள் கப்பல்களை மொரோக்கோ துறைமுகங்களில் நிறுத்த அனுமதி கோரினார்.
மூன்றாம் முஹம்மதுவுக்குப் பின் அவர் மகன் யஸீத் 1790-1792 வரை ஆட்சி செய்தார். அதிக லாபம் ஈட்டி வந்த யூதர்கள் தனக்கு பொருளாதார உதவிகள் செய்யாததால் அவர்கள் அதிகமாக வாணிபம் செய்து வந்த டீடோவன் நகரத்தில் பல தொந்திரவுகள் செய்தார். தனது கரும்பாதுகாப்புபடைகளைப் பயன்படுத்தி அடிக்கடி அந்நகரை கொள்ளை அடிக்கச் செய்தார். இவருக்குப் பிறகு, மூன்றாம் முஹம்மதுவின் ஐந்து மகன்களில் இன்னொருவரான முலாய் ஸ்லிமானி என்பவர் 1792 ல் அலவுட்களின் மொரோக்கோ சுல்தான் ஆனார். நிறைய உள்நாட்டுப் புரட்சிகளை எதிர் கொண்டு மொரோக்கோவை நிலைப்படுத்தினார். 30 ஆண்டுகள் ஆட்சி செய்த இவரது காலத்தில் மொரோக்கோ பெரும் வளர்ச்சியை எட்டியது. வெகுகாலமாக மொரோக்கோவின் கடற்பகுதிகளில் நடமாடிக் கொண்டிருந்த கடற்கொள்ளையர்களை முற்றிலும் கட்டுப்படுத்தினார். நீண்ட காலமாக ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுடன் பல குழப்பங்கள் நிலவியதால் ஐரோப்பிய வணிகத்தை நிறுத்தி வைத்தார். ஆனாலும் சுல்தான் முலாய் ஸ்லிமானி அமெரிக்காவுடன் நட்புறவில் இருந்தார். நல்ல எழுத்தாளராகவும் இருந்த முலாய் ஸ்லிமானி இனாயத் உலா லி அல் மஜ்த், ஹவாஷி அலா ஷர் அல் கர்ஷி, தகயித் ஃபீ ஹுக்ம் அல் கினா மற்றும் ரிசாலா ஃபீ ஹுக்ம் அல் கினா ஆகிய புத்தகங்களையும், எண்ணற்ற கடிதங்களையும் எழுதி உள்ளார்.
முலாய் ஸ்லிமானிக்குப் பிறகு, ஹிஷாம் என்பவரின் மகன் அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் 1822 நவம்பரில் ஆட்சிக்கு வந்தார். இவர் ஆட்சிக்கு வந்த சமயத்தில் பல உள்ளூர் தலைவர்கள் தங்கள் பகுதிக்கு அதிகாரம் வேண்டி புரட்சி செய்தார்கள். ஆரம்பத்தில் அவர்களை கடுமையான முறையில் அடக்கினார். மொரோக்கோ நாட்டின் பொருளாதாரம் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தது. இதனால் முந்தைய ஆட்சியாளர் நிறுத்தி வைத்திருந்த ஐரோப்பிய வாணிபத்தை துவங்க நினைத்தார். அவர்கள் பல சட்டதிட்டங்களுடன் வாணிப ஒப்பந்தம் போடச் சொன்னார்கள். இதனால் துவண்டு போன அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் கடற்கொள்ளையர்களுடன் கப்பல்களை துறைமுகங்களில் நிறுத்திக் கொள்ள அனுமதித்து வருவாய் ஈட்டத் தொடங்கினார். இதனால் தங்கள் கப்பல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் ஐரோப்பியர்கள் கோபமடைந்தார்கள். பிரிட்டிஷ் டான்ஜியர் துறைமுகத்தை தடை செய்து வைத்துக் கொண்டது. ஆஸ்ட்ரியன்கள் லராச்சி, அசிலாஹ் மற்றும் டெடோவான் துறைமுகங்களை குண்டு வெடித்து தகர்த்தது. இறுதியாக 1851 ல் சாலியில் குண்டு எறியப்பட்டு கடற்கொள்ளை நின்று போனது. நல்ல நிவாகியாக இருந்த அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் பல பொதுக் கட்டிடங்களையும் அடிப்படை கட்டமைப்பை சரி செய்தார். 1824,1828, 1831, 1843, 1849, 1853 ஆகிய ஆண்டுகளில் நடந்த உள்நாட்டு சண்டைகளை சமாளித்தார். இவருக்கு பெரிய வெளிநாட்டு எதிரியாக இருந்தது ஃப்ரான்ஸ் தான். மிக அருகில் 1830 ல் ஃப்ரான்ஸ் அல்ஜீரியாவை ஆக்கிரமிப்புச் செய்து வைத்திருந்ததால் எப்போதும் மொரோக்கோவிற்கு மிரட்டலாகவே இருந்தது.
அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் இராணுவத்தை அனுப்பி செம்சென் நகரை பாதுகாக்க செய்தார். உடனே ஃப்ரான்ஸ் சண்டையிட்டு இராணுவத்தைத் துரத்தி விட்டு 1832 ல் லெம்சென்னைக் கைப்பற்றியது. ஃப்ரான்சை எதிர்த்து அல்ஜீரியாவின் அப்த் அல் காதி அல் ஜஸா இரி நடத்திய கொரில்லா முறை தாக்குதல்களுக்கு அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் ஆதரவு கொடுத்தார். இவரை விட கடற்கொள்ளையர்கள் அல் ஜஸா இரிக்கு பெரும் ஆதரவு கொடுத்தார்கள். இதனால் எல் லையில் எந்நேரமும் சண்டை நடந்து கொண்டிருந்தது. ஃப்ரான்ஸ் அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாமை அல் ஜஸா இரிக்கு கொடுத்து வரும் கொரில்லா ஆதரவை நிறுத்திக் கொள்ளச் சொன்னது. மொரோக் கோவின் கிழக்குப் பகுதியை ஃப்ரான்ஸ் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. 1844 ல் ஃப்ரான்கோ மொரோக்கோ போரைத் துவக்கியது. இது அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாமுக்கு சாதகமாக இல்லை. அப்போரின் தளபதியாக இருந்த அவர் மகன் முலாய் முஹம்மது எஸ்ஸஓரியா, டான்ஜியர் ஆகிய நகரங்களை ஃப்ரான்சிடம் இழந்தார். இதனால் ஃப்ரான்சுடன் டான்ஜியர் ஒப்பந்தம் போடப்பட்டு, அவர் அல் ஜஸா இரிக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு மொரோக்கோ அல்ஜீரியா எல்லையை மாற்றி அமைக்க ஒத்துக் கொண்டார்.  அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம்  ஃப்ரான்சின் எல்லா ஒப்பந்தங்களுக்கும் ஒத்துப் போவதாகக் கருதிய மொரோக்கோ மக்கள் உள்நாட்டுக் கலவரத்தில் ஈடு பட்டனர்.
அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் 12 ம் நூற்றாண்டில் அல்மொராவிட் களால் நிர்மாணிக்கப்பட்டு, சாதியன்களால் விரிவாக்கப்பட்டிருந்த அக்டல் தோட்டத்தை மறுசீரமைத்தார். 1859 ஆகஸ்டில் அப்துல்ரஹ்மான் இப்ன் ஹிஷாம் மரணமடைந்தார். இவருக்குப் பிறகு இவர் மகன் நான்காம் முலாய் முஹம்மது மொரோக்கோவின் அலவிட்களின் சுல்தானாக ஆனார். மொரோக்கோவின் ஃபெஸ் நகரத்தில் பிறந்த இவர் தந்தையின் ஆட்சியின் போது இராணுவ தளபதியாக இருந்தார். இவரது தலைமையில் ஃப்ரன்சுகளுடன் நடந்த ஐஸ்லி போரில் தோல்வி அடைந்தார். பின்னர் தந்தையின் அனுமதியுடன் மொரோக்கோ இராணுவத்தின் தலைமைத் தளபதியானார். 1845 ல் இராணுவ நிர்வாகத்தை மாற்றி அமைத்தார். நான்காம் முலாய் முஹம்மது ஓட்டோமான்களுக்கு ஐரோப்பிய முறை போர்க்கலையைக் கற்றுக் கொடுத்த துனீஷியா இராணுவ அதிகாரிகளை அழைத்து வந்து நவீன போர்திறமைகளை தன் வீரர்களுக்குக் கற்றுக் கொடுக்க வைத்தார். அவைகள் அஸ்கரி, அபிட் (அரண்மனை பாதுகாப்பு), கிஷ் மற்றும் நுஃஅய்ப் (பழங்குடியினர் இராணுவம்) என்று துணை இராணுவப்பிரிவுகளாக ஆக்கினார். இதற்காக ஃபெஸ்ஸில் இராணுவ பொறியியல் பள்ளியை அமைத் தார். அப்பள்ளிக்கு ஃப்ரென்சிலிருந்து ஜோசப் டி சால்டி என்ற பெயரிலிருந்து, அப்த் அல் ரஹ்மான் அல் அலி என்று இஸ்லாமுக்கு மாறிய பீரங்கியில் அனுபவம் வாய்ந்த உயர் அதிகாரியை மேற்பார்வை யாளராக ஆக்கினார்.
நான்காம் முலாய் முஹம்மது மொழிபெயர்ப்பாளர்களை வைத்து பல ஐரோப்பிய பொறியியல், விஞ்ஞானம், கல்வி புத்தகங்களை மொழி பெயர்த்தார். தொடர்ந் து பிரிட்டிஷ், எகிப்து இராணுவ பீரங்கி அனுபவசாலிகளை வரவழைத்து மொரோக்கோ இராணுவத்திற்கு பயிற்சி அளித்தார். இவர் முதல் போராக ஸ்பானிஷ் மொரோக்கன் போரைச் சந்தித்தார். ஸ்பெயினின் ஆளுகைக்கு உட்பட்ட சியோட்டா, மெல்லிலா பகுதிகளில் சுற்றியுள்ள பழங்குடியினர் அடிக்கடி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் ஸ்பெயின் நான்காம் முலாய் முஹம்மதுவிடம் தங்கள் சியோட்டா பகுதியை சற்று விரிவாக்கம் செய்து கொள்ள கேட்டார்கள். அதற்கு சுல்தான் மறுத்தார். இதனால் இரண்டாம் இஸபெல்லா என்பவரின் தலைமையில் ஸ்பெயின் போர் தொடுத்தது. பெரும் படையுடன் வந்து டான்ஜியர், அசிலாஹ், டெடோவான் பகுதிகளைத் தாக்கி போரில் மொரோக்கோவை ஸ்பெயின் வென்றது. இதனால் 1860 ல் வத்ராஸ் ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தப்படி தென்மேற்குப் பகுதியின் சிடி இஃப்னி என்ற இடத்தை ஸ்பெயின் எடுத்துக் கொள்ளும், சியோட்டா பகுதியில் எல்லையை நீட்டிக் கொள்ளவும், போரின் நஷ்ட ஈடாக பெருந்தொகை 100 மில்லியன் மொரோக்கோ ஃப்ராங்க்ஸ் கொடுக்க வேண்டும். (இது மொரோக்கோவின் இருபது ஆண்டு பட்ஜெட் தொகை). இத்தொகை செலுத்தும் வரை டெடோவான் நகரத்தை ஸ்பெயின் வைத்துக் கொள்ளும் என்று முடிவானது.
இந்த தோல்வியாலும், நொறுங்கிப் போன பொருளாதாரத்தாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு போன நான்காம் முலாய் முஹம்மது மனமுடைந்து போய், தனது கவனங்களை கணிதம், வாண சாஸ்திரம், கவிதை, இசை போன்ற துறைகளில் திருப்பி நாட்டுப் பொருளாதாரத்தை திறமையான அரண்மனை அடிமை மற்றும் வைசிராயராக இருந்த சி மௌஸாவிடம் ஒப்படைத்தார். மொத்த மொரோக்கோ துறைகளின் பாதி வருமானத்தை ஸ்பெயின் எடுத்துக் கொண்டது. இதனால் நாட்டின் பொருளாதாரம் மேலும் வெகுவாக பாதிக்கப்பட்டது. நான்காம் முலாய் முஹம்மது அந்தந்த பகுதிகளை நிர்வகித்து வந்த பழங்குடி தலைவர்களிடம் அரசுக்கு பணம் கொடுத்து உதவும்படி சொன்னார். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் தானே கைட்ஸ் என்னும் தலைவர்களை தேர்ந்தெடுத்து அந்த பகுதிகளுக்கு அனுப்பினார். இப்படி அனுப்பப்பட்ட கைட்ஸ்கள் அந்தந்த பழங்குடியினத்தவர்களைச் சேர்ந்தவர்களாகவே இருந்ததால், இது அரசுக்கு எதிர்விளைவையே ஏற்படுத்தியது. இதனால் சமாளிக்க முடியாமல் போன நிலையில் நான்காம் முலாய் முஹம்மது 1873 ல் காலமானார்.

அலாஒயிட்டுகள் வரலாறு 3

அடுத்து விட்டு விட்டு ஆறுமுறை ஆண்ட அப்பாஸின் மகன் முதலாம் ஹஸன் ஆட்சிக்கு 1873 ல் வந்தார். இவர் மொரோக்கோவின் வெற்றிகரமான சுல்தானாக இருந்தார். ஆப்பிரிக்காவின் பல பகுதிகள் ஐரோப்பிய வெளிநாட்டு சக்திகளின் கையில் வீழ்ந்து கொண்டிருக்கும் போது, மொரோக்கோவில் அலவிட்டுகளின் அரண்மனை ஆட்சியின் பலத்தை முதலாம் ஹஸன் நிரூபித்தார். இராணுவம், அரசு நிர்வாகம் இரண்டையும் மாற்றி முன்னேற்றத்திற்கு வித்திட்டார். நான்காம் முஹம்மது இறந்த போது, அவர் மகன் மௌலாய் ஹஸன் என்பவர் ஆட்சிக்கு உரிமை கோரி இருந்தார். இவர் அவரை அடக்கினார். 1893 ல் ஃபெஸ் நகரத்திலிருந்து மர்ரகெஷ், மணற்பாங்கான எர்ஜ் செப்பி டேட்ஸ் பள்ளத்தாக்கு, ஓவர்ஸஸேட்ஸ், அய்த் பென்ஹத்தூ, உயர்ந்த பகுதியான கடல் மட்டத்திலிருந்து 2260 மீட்டர் உயரத்திலுள்ள டெலோயூட், துறைமுக நகரமான கூயல்மிம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று அனைத்து பழங்குடி புரட்சியாளர்களையும் நேரடியாக சந்தித்து ஒன்றுபடுத்தினார். ஆறு மாதகாலம் இவர் மேற்கொண்ட கடும் பயணம் நல்ல பலனைத் தந்தது. க்லாஓவா குடும்பத்தினருக்கு இவர் டெலோயெட் நகரத்தில் வழங்கிய குருப் பீரங்கி இப்போதும் ஓவர்ஸஸேட் நகரத்தின் மையத்தில் உள்ளது. முதலாம் ஹஸன் 1877 ல் கீனிஃப்ராவின் ஸயனிஸ் பழங்குடியின தலைவர் மௌஹா ஓ ஹம்மௌ ஸயானி என்பவரை கைட்ஸ் தலைவராக நியமித்தார். கொஞ்சம் இவரைப் பற்றிப் பார்ப்போம். இவரை அமஹ் ஸோயூனி பென் மௌஸா என்றும் அழைப்பார்கள். கீனிஃப்ரா மாகாணத்தில் ஸயானிஸ் மக்களின் தலைவராக இருந்தார். ஃப்ரான்சுக்கு எதிராக புகழ்பெற்ற ஸையான் போரை கொரில்லா முறையில் நடத்தினார். எல்லா பழங்குடி மக்களையும் இணைத்து சில சிறிய போர்களையும் நடத்தினார். 1914 ஜூனில் ஃப்ரென்சின் முன்ணனிப்படையினரால் கீனிஃப்ரா நகரம் கைப்பற்றப்பட்டு, உடனே நவம்பரில் மௌஹா ஓ ஹம்மௌ ஸயானியால் எல்ஹ்ரி போரில் வெற்றி கொள்ளப்பட்டது. இதனால் ஃப்ரான்சுக்கு 600 பேர் இறந்து பெரும் சேதமும் ஏற்பட்டது. வெற்றி பெற்றாலும் கீனிஃப்ரா நகரை விட்டு மலைப்பகுதிக்கு சென்று விட்டார். 1920 ல் இவர் மகன் ஹஸன் என்பவர் ஃப்ரென்ச் ஜெனரல் போயீமிராவ் என்பவரிடம் சரணடைந்தார். இதனால் மொரோக்கோவிற்கு பெரும் பலம் போனது. இவர் பெயரில் அய்த் ஹம்மோவ் ஓ சைத் என்ற கிராமமும், ஒரு கல்லூரியும் உள்ளது. இவரின் சமாதி பென் செர்ரோவில் உள்ளது. 20 ம் நூற்றாண்டில் ஃப்ரான்சை எதிர்த்து முக்கிய நபராக மாறி புகழ் பெற்றார். அதே போன்று 1887 ல் மேற்கு சஹாராவில் மா அல் அய்னைய்ன் என்பவரை கைட்ஸ் தலைவராக நியமித்தார். இவரும் மொரோக்கோவின் சுதந்திரத்திற்கு பாடுபட்டு புகழ் பெற்றார். 1894 ல் முதலாம் ஹஸன் மரணமடைய ரபாத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
மா அல் அய்னைய்ன் என்பவரைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம். சஹாரன் மூரிஷ் இனத்தைச் சேர்ந்த இவர் காதிரிய்யா சூஃபி பிரிவின் சகோதர அமைப்பான ஃபத்லிய்யா என்ற அமைப்பைத் துவக்கிய முஹம்மது ஃபாதில் மாமின் என்பவரின் மகனாவார். மாரிடானியாவில் மதத்தலைவராக இருந்த ஷெய்க் சாத் பூஹ் என்பவர் இவரின் மூத்த சகோதரர். மா அல் அய்னைய்ன் என்ற இவர் பெயருக்கு நீர் நிரம்பிய இரு கண்கள் என்று பொருள். இவர் தகப்பனாரின் வழிமுறையில் பார்த்தால் சில நூற்றாண்டுகளுக்கு முன் காதிரிய்யா ஷெய்க் சிடி அஹ்மத் எல் பெக்காய் தற்போதைய அல்ஜீரியாவாகிய டின்டூஃப் பள்ளத்தாக்கில் ஓவலடா என்ற பகுதிக்கு வந்து குடியேறினார். அந்த் காதிரிய்யா இயக்கத்தின் மதகுருவாக மா அல் அய்னைய்னின் தந்தை இருந்ததால் இவரும் விரைவில் புகழுக்கு வந்தார். பழங்குடியின மாணவர்கள் பலர் இவரிடம் இஸ்லாமிய சட்டம் பயின்றார்கள். 1898 ல் ஸ்மாராவில் ரிபாத் என்னும் விடுதி ஒன்றைக் கட்டினார். ஆரம்பத்தில் இது பயணிக்கும் மலைப்பகுதி மக்கள் சற்று ஓய்வெடுத்து தண்ணீர் அருந்திவிட்டுச் செல்லும் இடமாக இருந்தது. பின்னர் ஐரோப்பிய காலனிப்படைகளையும், ஃப்ரென்ச் படைகளையும் எதிர்ப்பதற்கு இந்த இடம் பயன்பட்டது. முந்தைய ஆட்சியாளர் அப்தெல் அஜீஸ் ரிபாத்தைக் கட்ட பொருட்களையும், பணி ஆட்களையும் தந்து உதவினார். பின்னர் மா அல் அய்னைய்ன் அங்கு ஒரு இஸ்லாமிய நூலகத்தையும் அமைத்தார். நாளடைவில் மொரோக்கோவில் கிறிஸ்தவ ஐரோப்பியபடைகள் ஆக்கிரமிப்பு செய்ததால் அவர்களை மா அல் அய்னைய்ன் எதிர்த்தார். அவர்களை தற்போதைய மாரிடானியா, தென் மொரோக்கோ, மேற்கு சஹாரா, தெற்கு மேற்கு அல்ஜீரியா ஆகிய பகுதிகளில் நுழைய விடாமல் தடை செய்தார். சுல்தான் இவரை அதிகாரம் செய்யாமல் அவர் போக்கில் சுதந்திரமாக போராட விட்டு விட்டார். ஐரோப்பியர்களுக்கு எதிராக ஜிஹாத் என்று அறிவித்த இவர் ஆயுதங்களை ஆட்சியாளரிடம் பெற்று பகிரங்க தாக்குதல் நடத்தினார். நேரடியாக ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய சக்திகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேநேரத்தில் பலம் வாய்ந்த ஒரு சிறிய படையைத் தயார் செய்தார்.
1906 ல் சுல்தான் அப்துல் அஜீஸ் அல்ஜிசிராஸ் கூட்டத்தில் ஐரோப்பிய காலனிய ஆதிக்கத்திற்கு ஒப்புக்கொண்டதால் கோபமுற்ற மா அல் அய்னைய்ன் சுல்தான் சகோதரர் அப்தெல் ஹஃபீதுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் சுல்தானிடமிருந்து ஆயுதம் வருவது நின்று போனது. ஆனாலும் விடாமல் அப்துல் அஜீஸை எதிர்த்து அப்தெல் ஹஃபீதை ஆட்சிக்கு கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்தார். 1909 ல் டிஸ்நிட் பகுதியில் தானொரு மெஹ்தி என்று அறிவித்தார். புதிய சுல்தானும் நாளடைவில் ஐரோப்பிய சக்திகளுக்கு ஆதரவாகப் போனதால் 6000 பேர் கொண்ட படையைத் தயார் செய்து அவரை ஆட்சியை விட்டுத் தூக்கினார். 1910 ல் ஃப்ரென்ச் ஜெனரல் மொய்னியரிடம் தோற்றுப் போய் சில மாதங்கள் கழித்து டிஸ்நிட்டில் இறந்து போனார். இவர் மகன் எல் ஹிபா என்பவர் (நீல சுல்தான் என்று அறியப்பட்டவர்) ஃப்ரான்சை எதிர்த்துத் தோற்றுப் போனார். புரட்சியினால் மா அல் அய்னைய்ன் மொரோக்கோவில் மிகவும் புகழப்பட்டார். இவரின் சந்ததியினர் இப்போதும் மொரோக்கோவின் பலதுறைகளில் அதிகாரிகளாக இருக்கிறார்கள். டிஸ்நிடில் இவர் அடக்கவிடம் புனிதஸ்தலமாக இருக்கிறது.
அடுத்து முதலாம் ஹஸனின் மகன் அப்தெல் அஜீஸ் 16 வயதில் ஆட்சிக்கு வந்தார். இவருக்கு ஆட்சியின் பின் பலமாக பா அஹ்மத் பின் மூசா என்பவர் இருந்தார். ஆறு ஆண்டுகள் அப்தெல் அஜீஸுக்கு துணையாக இருந்த இவர் 1900ல் விஷமிட்டு படுகொலை செய்யப்பட்டார். பின் தானே ஆட்சி செய்ய ஆரம்பித்த அப்தெல் அஜீஸ் தென்பகுதி அரபி ஒருவரான எல் மெனிபி என்பவரை நிர்வாகத்திற்கு தலைமை அறிவுரையாளராக வைத்துக் கொண்டார். இவரின் தாயார் ஜியார்ஜியாவைச் சேர்ந்தவராக இருந்ததால் ஐரோப்பாவிலிருந்தும் இவருக்கு ஆலோசனைக் கிடைத்தது. ஆனால் மொரோக்கோவின் உள்நாட்டு அரசியலுக்குப் பொருந்தவில்லை. மேலும் வெளிநாட்டுத் தொடர்புகளால் வெறுக்க ஆரம்பித்தார்கள். அப்தெல் அஜீஸ் புதிய வரிகளின் மூலம் வருமானம் ஈட்ட முயற்சித்தார். ஆனால், அது ஊதியம் கொடுக்கவும், ஆயுதங்கள் கொள்முதல் செய்யவும் கூட போதவில்லை. ஐரோப்பியர்கள் கூட இவரை நாட்டைக் கெடுக்கிறார் என்று கருத்து வெளியிட்டார்கள். வணிகத்திற்கு பெரிதும் உதவி வருவாய் அதிகரிக்க ஏதுவாய் இருக்கும் என்று கருதப்பட்டு பிரிட்டிஷ் பொறியாளர்களை வைத்து ஃபெஸ் நகரத்திற்கும் மெக்னெஸ் நகரத்திற்கும் இடையே இர யில் போக்குவரத்தைக் கொண்டுவர இருந்தார். இதற்கு அல்ஜீரியன் முன்ணனி எதிர்ப்பு தெரிவித்து கலகம் செய்தது. ஜெர்மனி அப்தெல் அஜீஸுக்கு ஆலோசனை தந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு சர்வதேச நாடுகளை அழைத்து ஒரு மாநாடு நடத்தச் சொன்னது. இது அன்னியர்களை நமது நாட்டின் ஆக்கிரமிப்பிலிருந்து விரட்ட ஏதுவாய் இருக்கும் என்று கருதி 1906 ல் சர்வதேச மாநாடு நடத்தினார். அது ஒன்றும் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. 1907 ல் மொரோக்கோவின் தென்பகுதி க்லாஓவா பழங்குடித்தலைவர் சி எல்மதனி எல் க்லாஓவா அப்துல் அஜீஸின் மூத்த சகோதரர் அப்தெல் ஹஃபித் என்பவரை வர வழைத்து கலகம் செய்து மர்ரகெஷ்ஷைப் பிடித்தார். இதற்கிடையில் காஸாப் ளாங்காவில் ஐரோப்பியர் ஒருவர் கொலை செய்யப்பட்டதால் அதன் தொடர்பில் மர்ரகெஷ் ஃப்ரான்சின் பிடியில் சென்றது. அப்தெல் அஜீஸ் ஃபெஸ் ஸுக்கு வருகை தந்து ஐரோப்பியர்களிடம் தன் சகோதரர்களுக்கு எதிராக உதவி கோரினார். ஃப்ரான்சை நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்த தனக்கு பணம் தந்து உதவுமாறு கோரினார். ஐரோப்பாவின் தோழமையை விரும்பாத ஃபெஸ்ஸின் உலமா சபை தலைவர் மா அல் அய்னைய்ன் 1908 ல் இவரை நீக்கிவிட்டு இவருக்கு பதில் சகோதரர் அப்தெல் ஹஃபித்தை சுல்தானாக அங்கீகரிப்பதாக அறிவித்தது. தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள படையுடன் மர் ரகெஷ் சென்றார். ஆனால் முழுமையாக ஆட்சி நீக்கப்பட்ட இவர் ஃப்ரான்சின் காஸாப்ளாங்கா அருகி லுள்ள செட்டட் பகுதிக்குத் தப்பிச் சென்றார். பின்னர் சகோதரர் அப்தெல் ஹஃபீதிடம் சமாதானம் செய்து கொண்டு டான்ஜீயரில் தங்கி ஓய்வூதியம் பெற்றார். அப்தெல் ஹஃபீதாலும் நிம்மதியாக ஆள முடியவில்லை. 1943 ல் டான்ஜியரில் அப்தெல் அஜீஸ் மரணமடைந்தார். இவருடைய கதாபாத்திரம் கற்பனை கலந்து ‘அயோன் பெர்டிகாரிஸ்’ என்ற பாத்திரத்தில் 1975 ல் எடுக்கப்பட்ட ‘தி விண்ட் அண்ட் தி லயன்’ என்ற ஆங்கிலப்படத்தில் காட்டப்பட்டது.
1908 ல் ஃபெஸ் நகரத்தலைவர் மா அல் அய்னைய்ன் ஆட்சியில் அமர்த்திய அப்தெல் ஹாஃபித் சகோதரர் அப்தெல் அஜீஸ் ஐரோப்பியர்களுக்கு கொடுத்த பல சலுகைகளை எதிர்த்தார். ஆனால் இவரால் ஆட்சியை பொருளாதார சிக்கலிலிருந்து மீட்க முடியாமல் ஃப்ரான்சின் பின்ணனியில் ஆட்சி செய்தார். அப்தெல் ஹஃபீதின் இராணுவத்திற்கு ஆன்றூ பெல்டன் என்ற பிரிட்டிஷ் அதிகாரி பயிற்சி அளித்தார். 1912 ல் ஃப்ரான்சுக்கு சென்ற இவர் திரும்பி வந்த போது தார் எல் மக்ஸின் என்ற சுல்தானிய அரண்மனை இவரை டான்ஜியருக்கு விரட்டியது. சில மாதங்கள் கழித்து ஃப்ரான்ஸ் அப்தெல் ஹஃபீதின் இன்னொரு சகோதரர் யூசுஃப் பென் ஹஸன் என்பவரை ஆட்சியாளராக அறிவுறுத்தியது. யூசுஃப் பென் ஹஸன் சுல்தான் முதலாம் ஹஸனின் ஐந்தாவது மனைவி ருக்கியாவுக்குப் பிறந்தவர். மெக்னெஸ் நகரத்தில் பிறந்த இவர் இளைய மகனாவார். இவர் பாதுகாப்பைக் கருதி ரபாத்தைத் தலைநகரமாக ஆக்கிக் கொண்டார். அமைதியற்று குழப்பமாக இருந்த யூசுஃப் பென் ஹஸனின் ஆட்சி ஸ்பெயின், ஃப்ரான்சிடமிருந்து சற்று உயர்வு பெற்றது. மா அல் அய்னைய்னின் மகன் அஹ்மத் அல் ஹிபாவின் ஆதரவில் பெர்பெர் சஹ்ரஊய் பழங்குடியினரின் தலைவர் அப்த் எல் க்ரிம் என்பவர் தலைமையில் ரிஃப் மலைப் பகுதியில் வெகு வேகமாக அதிகாரமெடுத்து தொந்திரவாக இருந்தார்கள். முதலில் ஸ்பெயின் அதிகாரத்திலிருந்த இந்தப் பகுதி பின்னர் ஃப்ரென்ச் அதிகாரத்திற்கு மாறியது. ஃப்ரான்சும், ஸ்பெயினும் இணைந்த பிறகு, ஸ்பெயின் 1925 ல் சஹ்ரஊய் பழங்குடியினரின் புரட்சியை அடக்கினார்கள். யூசுஃப் பென் ஹஸனின் ஆட்சி திடீரென்று கவிழ்ந்தது. 1927 ல் உரிமியா என்ற நோயால் மரணமடைந்தார்.
இவருக்குப் பின் இவர் மகன் ஐந்தாம் முஹம்மது அலவிட்டுகளின் மொரோக்கோ சுல்தானாக ஆனார். இவர் இரண்டு முறை ஆட்சி செய்தார். முதல் முறையாக 1927-1953 வரையிலும், 1957 லிருந்து 1961 வரையிலும் ஆட்சி செய்தார். முதல் ஆட்சியில் சுல்தானாகவும், இரண்டாவது ஆட்சியில் மன்னராகவும் இருந்தார். இவருக்கு முதல் மனைவியாக லல்லா ஹனிலா பிந்த் மாமூன் என்பவர் மூலம் லல்லா ஃபாத்திமா ஸொஹ்ரா என்ற மகள் இருந்தார். இரண்டாவது மனைவியாக அரபு இன தஹார் பின் ஹஸன் என்பவரின் மகள் லல்லா அப்லா பிந்த் தஹார் இருந்தார். இவர் மூலம் ஐந்து குழந்தைகளாக மன்னர் இரண்டாம் ஹஸன், லல்லா அய்ச்சா, லல்லா மலிகா, மௌலாய் அப்துல்லாஹ், லல்லா நுஸா ஆகியோர் இருந்தார்கள். மூன்றாவது மனைவியாக லல்லா பஹியா பிந்த் அன்தர் மூலம் லல்லா ஆமினா என்ற மகளும் இருந்தார். மேலும் லல்லா யகுத் என்ற துருக்கிய மனைவியும் இருந்தார். இதில் 1929 ல் திருமணம் செய்து கொண்ட மனைவி லல்லா அப்லா பிந்த் தஹார் 100 வயதுக்கு ஆறு மாதம் குறைவாக 1992 ல் மரணமடைந்தார். இவரது பெயரில் தான் மொரோக்கோ விமான நிலையம் உள்ளது. மேலும் மொரோக்கோவின் ஒவ்வொரு நகரத்திலும் பல்க லைக்கழகம், அரசு மற்றும் பொது நிறுவனம், குடியிருப்பு பகுதி, தெருப்பெயர்கள் என்று இவரின் பெயர் இருக்கும். துனீஷியா நாட்டின் தலைநகர் துனீசில் ஒரு குடியிருப்பு பகுதிக்கு இவரின் பெயர் சூட்டப்பட் டுள்ளது. யூசுஃப் பென் ஹஸனுக்கு துனீஷியா, ஃப்ரான்ஸ், அமெரிக்கா, ஸ்பெயின், லிபியா, ஈராக், லெபனான், சிரியா, எகிப்து, ஜோர்டான் மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகள் போட்டி போட்டு பல பட்டங்களை வழங்கியது. ஐந்தாம் முஹம்மதை ஃப்ரான்ஸ் ஆட்சியை விட்டு நீக்கி மடகாஸ்கருக்கு துரத்தி யது. ஐந்தாம் முஹம்மது தான் சுல்தான் என்பதை மாற்றி மன்னர் என்று பெயர் சூட்டிக் கொண்டார். யூசுஃப் பென் ஹஸன் ஒரு நுணுக்கமான அறுவை சிகிச்சையின் போது 1961ல் மரணமடைந்தார். சிலர் இவரது மரணத்திற்கு மகன் இரண்டாம் ஹஸன் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தார்கள்.
ஐந்தாம் முஹம்மதை வெளியேற்றிய பின் ஃப்ரான்ஸ் அவரின் தூரத்து உறவினரான முஹம்மது பென் ஆரஃபா என்பவரை 1953 ல் ஆட்சியில் அமர்த்தியது. ஏற்கனவே ஐந்தாம் முஹம்மதை ஃப்ரான்ஸ் ஆட்சியில் அமர்த்தியபோது மொரோக்கோவின் சில பகுதிகளை ஆக்கிரமித்திருந்த ஸ்பெயின் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஐந்தாம் முஹம்மது மொரோக்கோவை சுத ந்திரமாக்க வேண்டும் என்று கேட்டதால் தான் ஃப்ரான்ஸ் மடகாஸ்கருக்கு விரட்டியது. மேலும் அப்போது ஃப்ரான்ஸ் சுதந்திரத்திற்கு ஒப்புக் கொண்டது போல் நடித்தது. இப்போது முஹம்மது பென் ஆரஃபாவை ஆட்சியில் வைத்ததால் மொரோக்கோ மக்களின் கோபம் சுதந்திரத்தை நோக்கி திரும்பியது. இந்த ஃப்ரான்சின் பொம்மை மன்னர் முஹம்மது பென் ஆரஃபா 1976 ல் ஃப்ரான்சிலேயே மரணமடைந்தார். நான்காண்டு மட்டுமே ஆட்சி செய்த முஹம்மது பென் ஆரஃபாவிற்குப் பிறகு, ஐந்தாம் முஹம்மதுவுக்கும், இரண்டாவது மனைவி லல்லா அப்லா பிந்த் தஹார் என்பருக்கும் பிறந்த மகன் இரண்டாம் ஹஸன் அலவிட்டுகளின் மொரோக்கோ மன்னராக ஆட்சிக்கு 1961 ல் வந்தார்.
இரண்டாம் ஹஸன் ரபாத்தில் இம்பீரியல் கல்லூரியில் படித்தார். பின் ஃப்ரான்சின் போர்டூவக்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். தந்தையை நாட்டை விட்டு ஃப்ரான்ஸ் வெளியேற்றும் போதே இரண்டாம் ஹஸனையும் உடன் வெளியேற்றியது. அக்காலங்களில் தந்தைக்கு அரசியல் ஆலோசகராக இரண்டாம் ஹஸன் இருந்தார். தந்தை, மகன் இருவரும் 1955 நவம்பரில் மொரோக்கோ திரும்பினார்கள். 1966 பிப்ரவரியில் ஃப்ரான்சுடன் மொரோக்கோவின் சுதந்திரத்திற்கான பேச்சு வார்த்தையில் தந்தையுடன் கலந்து கொண்டார். தந்தை இவரை தான் ஆரம்பித்திருந்த ‘ராயல் ஆர்ம்ட் ஃபோர்ஸெஸ்’ என்ற அமைப்புக்கு 1956 ஏப்ரலில் இரண்டாம் ஹஸனை தலைவராக்கினார். பழங்குடி போராளிகள் இருந்த ரிஃப் மலைப்பகுதிக்குச் சென்றார். 1957 ல் ஐந்தாம் முஹம்மது இவரை பட்டத்து இளவரசராக அறிவித்தார். தந்தை இறந்த பிறகும், முஹம்மது பின் ஆரஃபாவிற்குப் பிறகும் இரண்டாம் ஹஸன் 1961 பிப்ரவரியில் அலவிட்டுகளின் மொரோக்கோ மன்னரானார்.

அலாஒயிட்டுகள் வரலாறு 4

இரண்டாம் ஹஸன் பழைய வழக்கங்களைக் கொண்ட சட்டங்களுடன் தங்கள் அலவிட் பரம்பரையை பலமாக்கினார். மொரோக்கோவின் கோரிக்கையான பல கட்சி ஆட்சிமுறையை மறுத்தார். அடிப்படை அரசியல் அமைப்பு கொடுத்த அதிகாரத்தால் பலத்தை கையாண்டார். இதனால் UNFP மற்றும் இஸ்திக்லால் போன்ற எதிர்ப்பு அமைப்புகள் பலமாகின. இரண்டாம் ஹஸன் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, அதன் அடிப்படையை மட்டும் வைத்துக் கொண்டார். அடுத்து வந்த தேர்தலில் இவருடைய ராயல் கட்சி பெரும்பான்மை பெற, எதிர்கட்சிகள் பொங்கி எழுந்து மன்னராட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டமும், கலவரங்களும் செய்தார்கள். இரண்டாம் ஹஸன் இருமுறை தன்னைக் கொல்ல நடந்த சதியிலிருந்து தப்பித்தார். லிபியாவின் ஆதரவில் ஜெனரல் முஹம்மது மெட்பூஹ் மற்றும் கர்னல் முஹமது அபடூ ஆகியோர் அமைத்த ‘டி ஈடட் புரட்சி’ என்ற அமைப்பு இரண்டாம் ஹஸனைக் கொல்ல திட்டமிட்டார்கள். மன்னர் ஹஸனின் 42 வது வயது கொண்டாட்டம் மன்னரின் ரபாத் அரண்மனையில் 1971 ல் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்ள பல முக்கியமான தலைவர்கள் வந்திருந்தார்கள். பெல்ஜிய தூதர் மார்செல் டூபர்டும் ஒருவராவார். தூதரை வீட்டுக்காவலில் வைத்த கொலைகாரர்கள், இரண்டாம் ஹஸனை ஒரு விளையாட்டு அரங்கத்தில
சிறை வைத்து விட்டு ரபாத் வானொலி நிலையத்தைக் கைப்பற்றி மன்னர் கொல்லப்பட்டு மொரோக்கோ சுதந்திர நாடாக ஆகிவிட்டது என்று அறிவித்தது. இதற்குள் அதேநாளில் மன்னரின் ராயல் படைகள் வந்து சண்டைக்குப் பிறகு, கொலைத்திட்டம் முறியடிக்கப்பட்டது. சில மூத்த அதிகாரிகளின் வழி காட்டலால் இளைஞர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
அடுத்த கொலைத்திட்டம் 1972 ல் அரங்கேறியது. மன்னர் இரண்டாம் ஹஸன் ஃப்ரான்சிலிருந்து ரபாத் திரும்பும் போது, மொரோக்கோ விமானப்படையைச் F-5 ரக விமானங்கள் நான்கு மன்னர் பயணித்த போயிங்க் 727 விமானத்தை நோக்கி வானிலேயே சுட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக சிறிய சேதத்திற்குப் பிறகு மன்னரின் விமானம் தப்பியது. பின்னர் நடந்த விசாரணையில் மொரோக்கோ விமானப்படையைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு உடந்தை யாக இருந்ததாக பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் முஹம்மது அவ்ஃப்கிர் குற்றம் சாட்டப்பட, அவர் தற் கொலை செய்து கொண்டார். பல குண்டுக்காயங்களுடன் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தனக்கு எதிராக நடந்த பனிப்போரை மன்னர் இரண்டாம் ஹஸன் அமெரிக்காவின் உதவியுடன் சமாளித்தார். இதற்கு அமெரிக்காவின் CIA துறை முக்கியபங்கு வகித்தது. அரபு, இஸ்ரேல் பிரச்சினையில் பின்ணனியிலிருந்து பேச்சுவார்த்தைக்கு பாடுபட்டார். இதற்கு மொரோக்கோவில் அதிகமாக வசித்த யூத மக்கள் ஆதரவளித்தார்கள். ஸ்பெயின் வசமிருந்த இஃப்னி என்ற இடத்தை 1969 ல் கைப்பற்றினார். பின்னர் 1975 ல் ‘கிரீன் மார்ச்’ என்ற பெயரில் நடந்த படையெடுப்பில் ஸ்பெயினின் வசமிருந்த மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றினார். 1963 லிருந்து மொரோக்கோ உரிமை கொண்டாடிய அல்ஜீரியாவின் டின்டூஃப் மற்றும் பெச்சார் பகுதிகள் அப்போதே ‘சேண்ட் வார்’ என்னும் மணற்போரை வரவழைத்தது. அருகிலிருந்த மாரிடோனியாவிடமும் மொரோக்கோவிற்கு பிரச்சினை இருந்தது. 1969 க்குப் பிறகு, மொரோக்கோ புகழ்பெற்ற நாடாக அறியப்பட்டது.
இரண்டாம் ஹஸன் பொருளாதாரத்திற்காக பாஸ்பேட் என்னும் இரசாயன சுரங்கம், விவசாயம், சுற்றுலாத்துறை ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். இவரது ஆட்சி ஆரம்பித்த 1961 லிருந்து 1980 வரை ‘முன்னேற்றத்திற்கான வருடங்கள்’ என்று குறிப்பிடப்பட்டு பல ஆயிரம் எதிர்ப்பாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டும், சிலர் கொல்லப்பட்டும், சிலர் மாயமாகவும் ஆனார்கள். பாராளுமன்ற அமைப்புப்படி எதிர்கட்சி வேண்டும் என்ற அடிப்படையில் 1990-91 ல் சிறையிலிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். அரபு நாடுகளில் முதல் முறையாக எதிர்கட்சியாக மொரோக்கோ அவர்களை அங்கீகரித்தது. ராயல்குழு ஒன்றை ஏற்படுத்தி நாட்டில் மனித உரிமைக்கு எதிரான புகார்களை கவனிக்கச் சொன்னார். இவரது மனைவி லல்லா லதிஃபா ஹம்மூ மூலம் ஐந்து குழந்தைகள் இவருக்கு பிறந்தது. இளவரசி லல்லா மெர்யெம், மன்னர் ஆறாம் முஹம்மது, இளவரசிகள் லல்லா அஸ்மா, லல்லா ஹஸ்னா மற்றும் இளவரசர் மௌலாய் ரச்சிட் ஆகியோர் ஆவார்கள். இரண்டாம் ஹஸனுக்கு லல்லா ஃபாத்திமா பிந்த் கைட் என்ற மனைவியும் இருந்தார். அவர் மூலம் குழந்தைகள் இல்லை. 1999 ஜூலை 23 ல் 70 வது வயதில் இயற்கையான முறையில் தான் பிறந்த ஊரில் இரண்டாம் ஹஸன் மரணமடைந்தார். இவரது உடல் ராஜமரியாதையு டன் ரபாத்துக்கு கொண்டுவரப்பட்டு 40 நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ள ஐந்தாம் முஹம்மதுவின் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இவரது உடலை மகன்கள் ஆறாம் முஹம்மது, இளவரசர் மௌலாய் ரச்சிட் மற்றும் சிறிய தகப்பனார் மௌலாய் ஹிச்சாம் ஆகியோர் சுமக்க, உடல் மீது ‘அல் லாஹ் ஒருவனே அவனின்றி வேறு இறைவன் இல்லை’ என்று எழுதப்பட்ட பச்சைத் துணியால் மூடப் பட்டிருந்தது.
1999 ல் இரண்டாம் ஹஸனின் மகன் மன்னர் ஆறாம் முஹம்மது ஆட்சிக்கு வந்தார். பிறந்த போது இவர் தான் அடுத்த ஆட்சிக்கு உரியவர் என்று அறிவிக்கப் பட்டவர் மன்னர் ஆறாம் முஹம்மது. சிறுவயதிலிருந்தே இஸ்லாமியக் கல்வியும், அரசியல் பயிற்சியும் தந்தையால் அளிக்கப் பெற்றார். நான்கு வயதிலேயே அரண்மனையில் திருக்குரான் படிக்கும் பயிற்சியைத் துவங்கினார். பள்ளிப்படிப்பு முடித்து இளநிலை சட்டப்படிப்பை அக்டலில் நான்காம் முஹம்மது பல்கலைக்கழகத்தில் பயின்றார். ஆராய்ச்சி படிப்பாக இவர் தேர்ந்தெடுத்த ‘அரபு-ஆப்பிரிக்க கூட்டுறவு’ என்ற படிப்பு சர்வதேச உறவுகளை வெளிப்படுத்தியது. ரபாத் பல்கலைக்கழகத்திலும் படித்த மன்னர் ஆறாம் முஹம்மது பான்-அராப் விளையாட்டின் தலைவராகவும், கர்னல் மேஜராக ராயல் மொரோக்கோ ஆர்மியிலும் நியமிக்கப்பட்டார். 1987 ல் ஆரசியல் விஞ்ஞானத்திற்கான பட்டமும், 1988 ல் பொதுச் சட்டத்திற்கான அத்தாட்சி பட்டமும் (டிப்ளமா) பெற்றார். 1993 ல் ஃப்ரான்சின் நைஸ் சோபியா ஆண்டி பொலிஸ் பல்கலைக்கழகத்திலும் சட்டத்திற்கான ஆராய்ச்சி பட்டம் பெற்றார். 1994 ல் மொரோக்கோ இராணுவத்தின் மேஜர் ஜெனரலாக பதவி பெற்றார். மன்னர் ஆறாம் முஹம்மதுவுக்கு சரளமாக அரபு, ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் ஃப்ரென்ச் மொழிகள் தெரியும்.
இவருக்கு ஒரு சகோதரரும், மூன்று சகோதரிகளும் இருப்பதை முன்பே பார்த்தோம். இவர் மனைவி பெயர் சல்மா பென்னானி ஆகும். திருமணத்தின் போதே மொரோ க்கோவின் இளவரசியாக ஹெர் ராயல் ஹைனஸ் லல்லா சல்மா என்று பட்டம் சூட்டப்பட்டார். இவரு க்கு 2003 ல் பிறந்த பட்டத்து இளவரசர் மௌலாய் ஹஸன் என்ற மகனும், 2007 ல் பிறந்த இளவரசி லல்லா கதீஜா என்ற மகளும் உண்டு. மன்னர் ஆறாம் முஹம்மதுவின் பிறந்த நாளான ஆகஸ்டு 21 ல் மொரோக்கோவில் பொது விடுமுறை தினமாகும். பதவியேற்ற அன்றே நாட்டின் வறுமையையும், ஊழ லையும் ஒழித்து மனித உரிமையைப் பாதுகாப்பேன் என்று உறுதி அளித்தார். நாட்டுக்கான இவரின் மறுசீரமைப்பு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் எதிர்க்கப்பட்டது. 2004 ல் ‘முதவானா’ என்று பெண்கள் அதிகாரம் பெற சட்டம் போட்டார். 2010 ல் விக்கிலீக்ஸ் என்ற வலைப்பதிவு மொரோக்கோவின் உயர்மட்ட அளவில் ஊழல் நடந்ததற்கான ஆதாரத்தையும், மன்னர் ஆறாம் முஹம்மதுவுக்கும் அதில் பங்குண்டு என்று வெளியிட்டது. 2011 ல் உலகப் பொருளாதார வீழ்ச்சியினால் இங்கும் மக்கள் பல போராட்டங்களை நடத்தினார்கள். 2011 ல் புது அரசியல் சட்டத்தை நிர்மாணிக்க குழு அமைத்தார். அதன்படி அரபுமொழியுடன் பெர்பெர் மொழியும் ஆட்சி மொழியாக்கப்பட்டது. சிதைந்து போய்க்கொண்டிருந்த ஹஸானியா மொழுயை சீர்படுத்தவும், புராதன மொரோக்கோவின் கலாச்சாரத்தையும் பாரம் பரியத்தையும் பாதுகாக்கவும் தீர்மானம் உண்டாக்கப்பட்டது. நாடாளுமன்றத்துக்காக தேர்தல் நடத்தப் பட்டு பிரதம மந்திரியைத் தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. அப்படித் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கட்சித்தலைவராகத்தான் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது. இத ற்கு முன் மன்னர் தான் விரும்பியவரை பிரதம மந்திரியாகக் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று இருந்தது. மேலும் ஜனநாயக முறையில் நவீன பல திட்டங்களுக்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மொரோக்கோவின் வாணிபத்தில் மன்னர் குடும்பத்தினர் தான் முதலிடத்தில் இருந்தார்கள். 2009 ல் ‘ஃபொர்ப்ஸ்’ என்னும் பத்திரிக்கை இவர்களின் வியாபார மதிப்பு 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று செய்தி வெளியிட்டது. இவர்களின் ஒரே நிறுவனம் காஸாப்ளாங்காவின் பங்குச் சந்தையில் 50 பில்லியன் திர்ஹாம்கள் (US $ 6 மில்லியன்) வைத்திருப்பதாக மதிப்பிட்டது. SIN எனப்படும் சோஷியல் நேஷனல் இன்வெஸ்ட்மெண்ட் என்ற அந்நிறுவனம் அத்திஜாவரிவஃபா வங்கி, மானாகம் சுரங்கம், ஓனாபர் என்ற கம்பெனி, சோமட் (சுற்றுலா, ரியல் எஸ்டேட் மற்றும் மஸி ரெட்டி என்னும் விலைமதிப்பான காரின் விநியோகம்), வஃபா இன்சூரன்ஸ், மர்ஜானி என்ற சூப்பர் மார்கெட் கம்பெனி, வானா-இன்வி என்னும் தொலைதொடர்பு நிறுவனம், லஃபார்ஜி என்னும் சிமெண்ட் தாயாரிப்பு நிறுவனம், சோனாசிட், சோப்ரியம் (பீஜட், கிட்ரியான் கார் விநியோகம்), ரினால்ட் கார் விநியோகம், நரீவா என்னும் எனர்ஜி நிறுவனம் ஆகியவைகள். மேற்படி அத்தனை நிறுவனங்களும் இந்த SNI மூலம் ஓம்னியம் நார்ட் ஆஃப்ரிக்கன் (ONA)  நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படுகின்றன. இந்த SNI  நிறுவனம் பல உணவு தயாரிப்புகள் கம்பெனியும் கொண்டுள்ளது. இது 2013 ல் சில நிறுவனங்களை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விற்றதின் மூலம் 1.37 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டியது. SNI  யும் ONA  வும் இணைந்து மிகப்பெரிய மது உற்பத்தியாளர்களாக ‘ஹெனிகான்’ என்னும் மதுவைத் தயாரிக்கிறார்கள். இதை எல்லாம் நான் ஏன் இங்கு விளக்கமாக குறிப்பிடுகிறேன் என்றால் 1859 ல் ஆட்சிக்கு வந்த நான்காம் முஹம்மதுவின் காலத்தில் எவ்வளவு பெரிய பொருளாதார வீழ்ச்சியை மொரோக்கோ சந்தித்தது. ஃப்ரான்சிடம் மிகப்பெரிய கடன் சுமையை வைத்திருந்தது. ஆனால் தற்போது இந்த ராஜ குடும்பம் மட்டுமே எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் அறியவேண்டும் என்பதற்காகத்தான்.
தற்போதும் மன்னர் ஆறாம் முஹம்மது தான் மொரோக்கோவை ஆட்சி செய்து வருகிறார்.