ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

டெல்லி சுல்தானேட் வரலாறு 1

டெல்லி சுல்தானேட்  வரலாறு
கூ.செ. செய்யது முஹமது
அடிமைகளாய் இருந்து உமய்யாக்களின் ஆட்சியின் போது, இஸ்லாத்தில் இணைந்த பின்  இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் மம்லுக்குகள். இவர்கள் 9 ம் நூற்றாண்டிலிருந்தே பல ஆட்சியாளர்களின் ஆட்சியில் இராணுவத்தில் பெரும் பதவிகளை வகித்தார்கள். குறிப்பாக அரசியலிலும், இராணுவத்திலும் இவர்கள் எகிப்து, லீவண்ட், ஈராக், இந்தியா போன்ற பகுதிகளில் தலையெடுத்தார்கள். தற்போதைய மத்திய ஆப்கானிஸ்தானிலிருந்த கோர் என்ற பகுதியை கஸ்னவித் ஆட்சியாளர் கஸ்னி முஹம்மதுவிடமிருந்து அபு அலி இப்ன் முஹம்மது வெற்றி பெற்று சுன்னிப்பிரிவு இஸ்லாமாக ‘குரித் ஆட்சிவம்சம்’ என்று துவக்கினார். 1011 லிருந்து ஆண்ட இவர் பல மஸ்ஜித்கள், இஸ்லாமிய பள்ளிக்கூடங்களைக் கோர் பகுதியில் கட்டினார். 1186 ல் கஸ்னவித்களிடம் கடைசியாக எஞ்சி இருந்த லாகூரை கோரியின் முஃஇஸ்ஸத்தீன் முஹம்மது (கோரி முஹம்மது) வெற்றி பெற்று அவர்கள் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
குரித் ஆட்சிவம்சம்
குரித் ஆட்சிவம்சமாக இருந்த அவர்கள் ஆட்சியின் உச்சமாக மேற்கில் கோரசானையும் வடக்கில் இந்தியாவின் பெங்கால் வரை வந்தார்கள். குரித்கள் பெர்ஷிய கலாச்சாரத்தைக் கொண்டிருந்தார்கள். இவர்கள் புஷ்டோ என்னும் மொழியை பேசுபவர்களாக இருந்தார்கள். ஆரம்பத்தில் கோர் பகுதியை அமீர் பான்ஜி என்ற குரித் இளவரசர் அப்பாஸிய கலீஃபா ஹாரூன் அல் ரஷீதின் கீழ் நிர்வகித்து வந்தார். குரித்கள் 150 ஆண்டுகாலம் கஸ்னவித் மற்றும் செல்ஜுக் ஆட்சியாளர்கள் கீழும் ஆண்டு வந்தார்கள். தாங்கள் சுயமாகவே ஆளவேண்டும் என்று பிரியப்பட்ட குரித் தலைவர் குத்ப் அல் தீன் முஹம்மது என்பவர் கஸ்னவித் ஆட்சியாளர் பஹ்ராம் ஷா என்பவரை விஷம் வைத்துக் கொன்றார். 1161 க்குப் பிறகு, கியாத் அல்தீன் முஹம்மதும், அவர் சகோதரர் முஃஇஸ்ஸத்தீன் முஹம்மதும் குரித் ஆட்சிக்கு போட்டியாக இருந்த அபுல் அப்பாஸைக் கொன்றார்கள். 1173 ல் முஃஇஸ்ஸத்தீன் முஹம்மது சகோதரர் கியாத்துடன் இணைந்து கஸ்னாவை வென்று ‘க்வாரிஸ்மித் பேரரசு’ என்று கோரசானில் ஏற்படுத்தினார். இந்த சகோதரர்களுக்கு எதிராக இவர்களின் சிறிய தந்தை ஃபக்ருத்தீன் மசூத், ஹிராத்தின் செல்ஜுக் கவர்னர் தஜிதுதுதீன் யில்ஸித்துடன் சேர்ந்து கொண்டு எதிர்த்தார். சகோதரர்கள் அவரை வென்று கவர்னரைக் கொன்று, ஸமீன்தவார், பட்கிஸ், கார்சிஸ்தான், குஸ்கன் ஆகிய பகுதிகளை வென்றார்கள். 1175 க்குப் பிறகு, முல்டான், உச், லாகூரை வென்று குரித்கள் ஆட்சியை நிலைப்படுத்தினார். தென் ஆசியாவில் இஸ்லாமிய ஆட்சிக்கு இவர்தான் வித்திட்டார்.
இவரது ஆட்சியின் பகுதிகளாக தற்போதைய ஆப்கானிஸ்தான், பங்களாதேசம், ஈரான், இந்தியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் ஆகியவை இருந்தன. குஜராத்தில் போரிடும் போது அதன் இந்து ராணி நைகிதேவியால் தோற்கடிக்கப்பட்டார். 1191 ல் முஃஇஸ்ஸத்தீன் முஹம்மது தற்போதைய பாகிஸ்தானின் கைபர் கணவாய் வழியாக பஞ்சாபில் நுழைந்து பிரித்திவிராஜ் சௌஹான் வசமிருந்து பதிண்டா கோட்டையை வென்றார். அதற்கு காஸி ஜியாசுத்தீன் என்பவரை கவர்னராக்கினார். பின் அக்கோட்டையை மீண்டும் பிடிக்க பிரித்திவிராஜ் உத்தரவின் பேரில் இளவரசர் கோவிந்த் தாய் என்பவனுடன் ஹரியானாவில் போரிட்டார். அதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. 3000 யானைகள், 300,000 காலாட்படை, குதிரைப்படைகளுடனும், ராஜபுத்திர ஆட்சியாளர்களின் ஒத்துழைப்புடனும் போரிட்ட கோவிந்தை, திறமையான 120,000 வீரர்களுடன் போரிட்டு வென்று பிரித்திவிராஜையும் கைது செய்தார். 1193 ல் அஜ்மீர் பகுதியிலிருந்து ஒழுங்காக கப்பம் வராததால் அதை குதுப்தீன் அய்பக் மூலம் கைப்பற்றச் செய்தார். பின்னர், இந்துக்களின் சிறிய பிரதேசங்களான சரஸ்வதி, சமனா, கோஹ்ரம் மற்றும் ஹன்சி ஆகியவற்றை சிரமமில்லாமல் கைப்பற்றினார். வடக்கிந்திய பகுதிக்கு குதுப்தீன் அய்பக்கை கவர்னராக துர்கிய ஜெனெரல்களுடன் நியமித்தார். பஞ்சாபில் கலவரம் நடக்க அதைச் சரிசெய்து இந்தியாவின் நடவடிக்கைகளை குதுப்தீன் அய்பக்கிடம் ஒப்படைத்து விட்டு, கஸ்னி திரும்பினார். வரும் வழியில் ஜீலம் நதிக்கரையில் கோகர் பழங்குடி ஒருவனால் கொலை செய்யப்பட்டு 1206 ல் இறக்கும் வரை ஆட்சி செய்தார். முஃஇஸ்ஸத்தீன் முஹம்மது (கோரி முஹம்மது) தன்னுடன் இருந்த அடிமைகளை மிகவும் அன்பாக நடத்தினார். எப்போதும் சிலருக்கு சில மகன்கள் தான் இருக்கும் ஆனால், எனக்கு ஆயிரக்கணக்கான இந்த அடிமைகளும் மகன்கள் தான் என்பாராம். இவருக்குப் பிறகு இவருடைய ஆட்சியை அடிமைகளாய் இருந்த குதுப்தீன் அய்பக் 1206 ல் டெல்லி சுல்தானேட்டையும், நசீருத்தீன் கபாச்சா 1210 ல் முல்டானையும், தாஜுத்தீன் யில்டோஸ் கஸ்னியையும், இக்தியாருத்தீன் முஹம்மது பின் பக்தியார் கில்ஜி பெங்காலையும் பிரித்து ஆண்டு வந்தார்கள். இந்து மன்னனான பிரித்திவிராஜ் சௌஹானை வென்றதால், முஃஇஸ்ஸத்தீன் முஹம்மதை பாகிஸ்தானியர்கள் பெரிதும் மதிப்பார்கள். இன்றைக்கும் சில பாகிஸ்தானியர்கள் இவருடைய மற்றும் மம்லுக் இராணுவத்தினரின் வழித்தோன்றல்கள் தான். பாகிஸ்தான் இராணுவம் இவரைக் கௌரவிக்கும் வகையில் நடுத்தர வீச்சுள்ள ஏவுகணைகளான கௌரி 1,2,3 க்கு இவர் பெயரை வைத்துள்ளது.
குதுப்தீன் அய்பக், கோரி முஹம்மதிடம் அடிமையாக இருந்தவர். டெல்லியைத் தலைநகராகக் கொண்டு, வடமேற்கு இந்தியாவை 1206 லிருந்து 1210 வரை ஆட்சி செய்தார். இன்றளவும் இந்தியாவைக் குறிக்க பாரம்பரிய சின்னமாக அறியப்படும் “குதுப்மினாரை’ இவர்தான் கட்டினார். 100 மீட்டர் உயரத்தில் மொஹாலியிலுள்ள ஃபதேஹ்புர்ஜுக்குப் பிறகு, இந்தியாவிலேயே இரண்டாவது உயரமான கோபுரம் இந்த குதுப்மினார் தான். இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகவும் இருக்கிறது. டெல்லியின் மெஹ்ரௌலி பகுதியில் அமைந்துள்ள குதுப்மினார் 73 மீட்டர் உயரத்தில் கீழ்புறம் 14.32 மீட்டர் அகலமும், உச்சியில் 2.75 மீட்டர் அகலமும் உள்ளது. 1981 ல் உச்சியைப் பார்வையிடச் செல்லும்போது மின்சாரம் தடைபட்டதால், இருட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி 45 பேர் இறந்த பிறகு, இதன் பார்வையாளர்கள் அனுமதி தீவிரமாக்கப்பட்டது. கீழிருந்து மேலே செல்ல 379 படிக்கட்டுகள் உள்ளன. டெல்லியின் ஆட்சியை நிர்மாணித்த குதுப்தீன் அய்பக்கால் 1220 ல் ஆரம்பிக்கப்பட்ட குதுப்மினார் அவர் மருமகன் ஷம்சுத்தீன் மற்றும் ஃபிரோஸ் ஷா துக்ளக் ஆகியோராலும் சில பாகங்கள் கட்டப்பட்டது. செந்நிற கற்களாலும், பளிங்கு கற்களாலும் கட்டப்பட்ட இதில் பல சரித்திர அடையாளங்களான குவ்வத் உல் இஸ்லாம் மஸ்ஜித், அலய் தர்வாஜா, இல்டுட்மிஷ் சமாதி, அலய் மினார், அலாவுத்தீன் மதரஸா மற்றும் சமாதி, இமாம் ஜமீனின் சமாதி ஆகியவை உள்ளன. குதுப்மினார் பலமுறை பூகம்பத்தாலும், இடியாலும் பாதிக்கப்பட்டு அவ்வப்போதைய டெல்லி ஆட்சியாளர்களால் பழுது பார்க்கப்பட்டது. டெல்லி மெட்ரோ இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள குதுப்மினாரை தனது சினிமாவில் பதிவு செய்ய ஆசைப்பட்டு தேவ் ஆனந்த் என்ற இந்தி திரைப்பட நடிகர் ‘தேரே கர் கி சாம்னே’ என்ற படத்தில் தில்கா பன்வார் கரே புகார் என்ற பாடலில் பதிவு செய்தார். 2006 ல் தாஜ்மஹால் 2.5 பார்வையாளர்களைக் கொண்டிருக்க, குதுப்மினார் 3.9 பார்வையாளர்களைக் கொண்டு ஆச்சரியப்படுத்தியது. இதன் வளாகத்திலுள்ள குவ்வத் உல் இஸ்லாம் மஸ்ஜிதின் தென்பகுதியில் பிரத்தியேகமான ‘அலய் தர்வாஸா’ (அலய் கதவு) என்ற நுழைவுவாயிலை 1311 ல் அலாவுத்தீன் கில்ஜி அமைத்தார். துருக்கிய கலைஞர்களின் கை வண்ணத்தில் கோபுரத்துடன் செந்நிற கற்களைக் கொண்டு இந்த நுழைவுவாயிலை அவர் அமைத்தார். குதுப் மஸ்ஜித் எனப்படும் குவ்வத் உல் இஸ்லாம் மஸ்ஜித் தான் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் முதல்முறையாகக் டெல்லியில் கட்டப்பட்ட மஸ்ஜிதாகும். குதுப்மினாரின் நடைவளாகத்தில் 7.21 மீட்டர் உயரத்தில் 6 டன் எடையுள்ள இரும்பு தூண் நிறுவப்பட்டுள்ளது. குதுப்தீன் அய்பக் லாகூர் நகரில் போலோ என்னும் குதிரை விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது நிலைதடுமாறி விழுந்து இறந்து போனார்.

டெல்லி சுல்தானேட் வரலாறு 2

குதுப்தீன் அய்பக்கிற்குப் பிறகு, ஷம்சுத்தீன் இல்டுட்மிஷ் என்பவர் டெல்லி சுல்தானேட்டுக்கு ஆட்சியில் வந்தார். இல்டுட்மிஷ் என்பது துருக்கிய பெயர். இவர் துர்கிஸ்தானைச் சேர்ந்த இல்பரி பழங்குடியைச் சேர்ந்தவர். இவர் சிறுவயதாக இருந்த போது புகாரா அடிமைச் சந்தையில் விற்கப்பட்டார். அங்கு முஹம்மது கோரியின் தர்பாருக்கு வாங்கப்பட்டார். இவருடைய திறமையால் விரைவில் சுல்தானுக்கு தனிப்பட்ட உதவியாளரானார். பின்னர் குதுப்தீன் அய்பக்கின் மகளையே மணந்து தபரிந்த், க்வாலியர், பரான் பகுதிகளுக்கு கவர்னரானார். அய்பக் மரணமடைந்தபின் இஸ்லாமிய தலைவர்கள் அரம்ஷா என்பவரை ஆட்சிக்குத் தேர்ந்தெடுத்தார்கள். குத்பி தலைவர்கள் இல்டுட்மிஷை தேர்ந்தெடுத்தார்கள். அரம்ஷா லாகூரிலும், இல்டுட்மிஷ் டெல்லியிலும் ஆட்சி அமைத்தார்கள். அரம்ஷா, இல்டுட்மிஷ்ஷுக்கு எதிராக டெல்லி நோக்கி படையெடுத்துவர பாக் இ ஜுட் என்ற மலைப்பகுதியில் இல்டுட்மிஷ்ஷால் கொல்லப்பட்டு குரித் தலைவர்களின் வேண்டுகோள்படி குரித்களின் டெல்லி சுல்தான் ஆனார். அதுவரை தலைநகராக இருந்த லாகூரை, இல்டுட்மிஷ் டெல்லிக்கு மாற்றியதால் இவரே முதல் டெல்லியின் ஆட்சியாளராக சிலர் கணக்கிடுகிறார்கள். இவருக்கு ஆரம்பத்தில் பல இடையூறுகள் இருந்தன. முஹம்மது கோரியின் பகுதிகளைப் பிரித்து ஆண்டவர்களாலும், குதுப்தின் அய்பக்கால் வெல்லப்பட்ட இந்து மன்னர்களாலும், அரம்ஷாவின் ஆதரவாளர்களாலும் எதிர்ப்பு இருந்தது. முதலில் அவாத்ம் பதாவுன், பெனாரஸ், சிவாலிக் ஆகிய பகுதிகளை வென்றார். இவர் மகன் நசீருத்தீன் மஹ்மூத் மூலம் பெரும் இழப்புகளைச் சந்தித்து பெனாரஸையும், ரோஹில்கந்தையும் வென்றார். 1221 ல் ஒரு புயலைப்போல மங்கோலியர்கள் மத்திய மற்றும் மேற்கு ஆசியாவில் நுழைந்து நாசம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கவாரிஸ்மை வெல்ல அதன் ஆட்சியாளர் ஜலாலுத்தீன் மிங்புர்மு பஞ்சாபில் நுழைந்து இல்டுட்மிஷ்ஷின் உதவியை நாடினார். ஆனால் இல்டுட்மிஷ் அவருக்கு உதவாமல் மறுப்பு தெரிவித்தார். இதை சரித்திர ஆய்வாளர்கள் வெகுவாகப் புகழ்கிறார்கள். ஏனென்றால் முல்டான் வரை வந்த மங்கோலியர்கள் இவரைத்தேடி இந்தியாவில் நுழைந்திருந்தால் இந்தியாவின் சரித்திரம் மாறி இருக்கும். (பின்னால் மங்கோலியர்கள் டெல்லியைச் சூறையாடினார்கள். அதுவேறு சூழ்நிலை). முல்டானை ஆண்ட நசீருத்தீன் கபாச்சா, கஸ்னியை ஆண்ட தாஜுத்தீன் யில்டோஸ், பெங்காலை ஆண்ட இக்தியாருத்தீன் முஹம்மது பின் பக்தியார் கில்ஜி ஆகியோரை வரிசையாக இல்டுட்மிஷ் வென்றார். அஜ்மீர், நாக்பூர், க்வாலியர் ஆகியவற்றையும் வென்ற இல்டுட்மிஷ் பெரும் இழப்புடன் குஜராத்தின் சாளுக்கியர்களை எதிர்த்து உஜ்ஜைய்னியைக் கைப்பற்றினார். இவர் பதாவுனில் கட்டிய கோட்டையும், மஸ்ஜிதும் புகழ் வாய்ந்தது. டெல்லியின் ஜும்மா மஸ்ஜிதை அலாவுத்தீன் விரிவாக்கம் செய்வதற்கு முன் இல்டுட்மிஷ்ஷின் மஸ்ஜித் பெரியதாக இருந்தது. பல மடங்களையும், அப்போது டெக்கானில் பிரபலமாக இருந்த காரணத்தால் சூஃபி ஞானிகளுக்கு தர்காக்களையும் கட்டினார். கந்தகி பௌலி தர்காவுக்கருகில் இவர் கட்டிய அவ்ஸ் இ ஷம்சி என்னும் பெரிய தண்ணீர் தொட்டி மிகவும் புகழ் பெற்றது. அதன் அருகில் ஜஹாஸ் மஹால் என்ற ஒன்றையும் கட்டினார். பின்னாளில் அதை மொகலாயர்கள் பயன்படுத்தினார்கள். இவர் இறந்த பின் இவர் மகன் நசீருத்தீன் மஹ்மூத் கட்டியதுதான் டெல்லியில் முதல் இஸ்லாமியர்களின் சமாதி ஆகும். குதுப்மினாரில் குவ்வத் உல் இஸ்லாம் என்ற மஸ்ஜிதைக் கட்டினார். அதுவரை இந்து ராஜபுத்திரர்களின் நாணயங்களே பயன்பட்டுவந்த நிலையில் இல்டுட்மிஷ் 3.38 கிராம் எடையில் 0.59 கிராம் வெள்ளியுடன் செம்பும் கலந்து நாணயங்களை வெளியிட்டார். இன்று நாம் ரூபாய் என்றழைக்கும் மதிப்பு இவர் காலத்தில் டங்கா என்று அழைக்கப்பட்டது. 53 வகை ஈரடியாக நாசிரி என்ற கவிஞரால் எழுதப்பட்ட கவிதைக்கு 53,000 டாங்காக்கள் பரிசளித்தார். ரூஹானி அல் சமர்கண்டி என்பவரும் இவரைப் பற்றி புகழ்பெற்ற கவிதை எழுதியுள்ளார். புகழ்பெற்ற கவிஞர் அமீர்குஸ்ரு இவர் அரசவையில் இருந்தவர். 1229 ல் இல்டுட்மிஷ் நோய்வாய்ப்பட்டிருந்த போது மூத்தமகன் நசீருத்தீன் மஹ்மூத் பெங்காலில் இறந்து போனார். இல்டுட்மிஷ்ஷின் மற்ற மகன்கள் ஆட்சிக்கு தகுதியில்லாத காரணத்தால் அவர் தன் மகள் ரஸியாவை (ரஸியா சுல்தானா என்று புகழ்பெற்ற இவரைப்பற்றிய தனிப்பதிவு இன் ஷா அல்லாஹ் பின்னால் வரும்) ஆட்சிக்கு பரிந்துரைத்தார். ஆனால் இஸ்லாமிய தலைவர்கள் பெண்கள் ஆட்சிக்குத் தகுதியற்றவர்கள் என்று மறுத்து விட்டார்கள். இதனால் இல்டுட்மிஷ்ஷின் இன்னொரு மகன் ருக்னுத்தீன் ஃபிருஸ் ஆட்சிக்கு வந்தார். இவர் நிர்வாகத்தை தன் தாயார் ஷா துர்கினிடம் கொடுத்தார். ஆறு மாதங்களிலேயே ருக்னுத்தீன் ஃபிருஸ் ஆட்சி இழந்தார். மகள் ரஸியா தனது தனிப்பட்ட தகுதியால் குழப்பங்களிடையே ஆட்சிக்கு 1236 ல் வந்தார். 1240 ல் இல்டுட்மிஷ்ஷின் இன்னொரு மகன் முஃஇஸ்ஸத்தின் பஹ்ரமால் புரட்சி செய்யப்பட்டு ரஸியாவுக்கு பதில் அவர் ஆட்சிக்கு வந்தார். சகோதரி ரஸியா பாதிண்டா பகுதியில் இருக்கும்போது 40 தலைவர்களின் ஆதரவில் ஆட்சியை இவர் பிடித்தார். பாதிண்டாவின் தலைவராக இருந்த தன் கணவர் அல்தூனியாவின் துணையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ரஸியா முயன்றபோது கைது செய்யப்பட்டு கணவருடன் தூக்கிலிடப்பட்டார். இரண்டு ஆண்டுகள் பஹ்ராமின் ஆட்சியின் போதுதான் மங்கோலியர்கள் டெல்லியை துவம்சம் செய்தார்கள். அதைத் திறமையாக கையாளத் தவறியதால் ஆட்சியில் அமர்த்திய 40 தலைவர்களே இராணுவத்தைவிட்டு இவரைக் கொன்றார்கள். அடுத்து ருக்னுத்தீன் ஃபிருஸின் மகன் அலாவுத்தீன் மசூத் என்பவரை 1242 ல் தேர்ந்தெடுத்தார்கள். அவர் கொஞ்சம் கூட ஆட்சி ஆளும் திறமை இல்லாதவராக இருந்து மதுபோதைக்கு அடிமையாக இருந்தார். அதனால் அவரை நீக்கினார்கள். யாருடைய குரித்களின் ஆட்சியும் நிலையாக இல்லாத பட்சத்தில் இல்டுட்மிஷ்ஷின் அடிமை கியாசுத்தீன் பால்பனைத் துணையாகக் கொண்டு இல்டுட்மிஷ்ஷின் இன்னொரு பேரர் நசீருத்தீன் மஹ்மூத் 1246 ல் ஆட்சிக்கு வந்தார். இவர் மிகவும் இஸ்லாத்தை நேசிப்பவராக இருந்தார். கடமையான தொழுகைகள், ஏழைகளுக்கு உதவுதல் என்று இருந்து, திருக்குரானை கைகளால் எழுதி அதில் வரும் வருமானத்தில் தனது சொந்த செலவுகளைச் செய்தார். மற்ற சுல்தான்களைப்போல் ஆடம்பரமில்லாமல் தன் மனைவியைச் சமைக்கச் சொல்லி அதையே உண்டார். தன் சொந்த வேலைகள் அனைத்தையும் உதவியாளர் இன்றி தானே செய்து கொண்டார். 1266 ல் நசீருத்தீன் மஹ்மூத் இறந்துபோக, பின்னர் கியாசுத்தீன் பால்பனே ஆட்சி செய்தார்.
கியாசுத்தீன் பால்பன் துருக்கியைச் சேர்ந்த ஒரு தலைவரின் மகன். இவர் குழந்தையாய் இருந்த போது மங்கோலியர்களால் பிடிக்கப்பட்டு, கஸ்னி அடிமைச் சந்தையில் விற்கப்பட்டார். பஸ்ராவைச் சேர்ந்த க்வாஜா ஜமாலுத்தீன் என்பவர் இவரை வாங்கி பஹாவுத்தீன் என்று பெயரிட்டார். பின் அவர் டெல்லி அழைத்து வரப்பட்டு மற்ற அடிமைச் சிறுவர்களுடன் விற்கப்பட, சுல்தான் இல்டுட்மிஷ், கியாசுத்தீன் பால்பனை வாங்கினார். ஆரம்பத்தில் தண்ணீர் சுமப்பவராக பணியில் இருந்த கியாசுத்தீன் பால்பன் திறமையால் சுல்தானின் தனி செயலாளர் ஆனார். டெல்லியின் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் 40 துருக்கிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். ரஸியா சுல்தானின் ஆட்சியின்போது இராணுவத்தையும், நிர்வாகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதிகாரம் கொண்டிருந்தார். ரஸியாவிற்குப் பிறகு, பஹ்ராம் ஆட்சியில் ரிவாரியின் தலைவராகவும், ஹான்சி பகுதியின் ஜாகீராகவும் இருந்து முன்ணனிக்கு வந்தார். தன் மகளை முந்தைய ஆட்சியாளர் நசீருத்தீன் மஹ்மூதுக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார். தன் இளைய சகோதரர் கிஷ்லு கானை அமீர் இ ஹாஜிப்பாக ஆக்கினார். தன் உறவினர் ஷேர்கானை லாகூர் மற்றும் பாதிண்டா பகுதிக்கு ஜாகீராக்கினார். இவர் முன்பு தளபதியாக இருந்த போது பல இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். பட்டப்பகலிலேயே டெல்லியில் நுழைந்து மேவாத் பகுதி ஆட்கள் கொள்ளை அடித்தபோது அவர்கள் மீது கியாசுத்தீன் பால்பன் கடுமையான நடவடிக்கை எடுத்து புகழ் பெற்றார். மேவாத்கள் தப்பித்து அருகில் காட்டுக்குள் ஒளிந்து கொள்ள, சுற்றிலும் மரங்களை வெட்டிக் கொண்டுவந்து அவர்களை சிறைப்பிடித்துக் கொன்றார். டெல்லியைச் சுற்றி புறக்காவல் நிலையங்களை அமைத்து கண்காணிக்க வைத்து வாணிபத்திற்கும், யாத்ரீகர்களுக்கும் பாதுகாப்பளித்தார். நீண்ட முற்றுகையிட்டு ரனதம்போர் கோட்டையைக் கைப்பற்றினார். நசீருத்தீன் மஹ்மூதுக்கு ஆண் வாரிசில்லாத நிலையில் ஆட்சிக்கு வந்த கியாசுத்தீன் பால்பனுக்கு அப்போது 60 வயது. அடிக்கடி ஆட்சியாளர்களை மாற்றும் அதிகாரம் கொண்ட 40 பேர் குழுவை முதலில் கலைத்தார். இரும்புக்கரம் கொண்டு அடக்கி அனைவரும் ஆட்சியாளருக்கு நன்றியுடன் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். திறமையான ஓற்றர்படையையும் அமைத்தார். ஒருமுறை குடிந்திருந்த காரணத்தால் ஒரு அடிமையை சாகும்வரை அடித்துக் கொல்லச் செய்தார். இன்னொரு அடிமையின் விதவை மனைவியுடன் தொடர்பிருந்த காரணத்தால் அந்த விதவையின் முன்பாகவே  ஒரு தலைவரைக் கொன்றார். இவைகளை கவனிக்காமல் இருந்த ஒற்றனை நகரத்தின் முகப்பில் தூக்கில் தொங்கவிடச் சொன்னார். மங்கோலியர்களின் மிரட்டல் இருந்ததால் இராணுவத்தை மறுசீரமைத்தார். அதுவரை டெல்லிப்பக்கமே வராத தன் சகோதரர் ஷேர்கானை விஷம் வைத்துக் கொல்லும் அளவுக்கு இவரின் முன்னெச்சரிக்கை பிரபல்யமாக இருந்தது. இவர் எப்போதும் தர்பாருக்கு முழு ராஜ உடையுடன் தான் வருவார். தர்பாரில் தானும் சிரிக்காமல், யாரையும் சிரிக்க அனுமதிக்க மாட்டார். மேலும், மது, சூதாட்டம் ஆகியவற்றை தடை செய்தார். 1286 வரை 20 வருடங்கள் ஆட்சி செய்த இவர் 80 வயதில் மிகவும் தளர்ந்து காணப்பட்டார். கியாசுத்தீன் பால்பனின் மூத்தமகன் முஹம்மது கான் மங்கோலியர்களுடன் போரிட்டு இறந்து போனார். அடுத்த மகன் புக்ரா கான் ஆட்சிக்கு தகுதியில்லாத நிலையில் பெங்காலை மட்டும் நிர்வகித்து வந்தார். அதனால் கியாசுத்தீன் பால்பன் புக்ராகானின் மகன் கைய் குஸ்ராவை ஆட்சிக்கு பரிந்துரைத்தார். ஆனால் கியாசுத்தீன் பால்பன் இறந்த பிறகு தலைவர்கள் இன்னொரு பேரன் கைய்குபாத்தை தேர்ந்தெடுத்தார்கள்.  கைய்குபாத் ஆட்சிக்கு வந்தவுடன் பெங்காலில் இருந்த தந்தை புக்ரா கான் அதை சுதந்திரமாக அறிவித்துக் கொண்டார். கொஞ்சம் கூட திறமையே இல்லாத கைய்குபாத் உறுப்புகளும் செயலிழந்த நிலையில் தன் மூன்று வயது மகன் ஷம்சுத்தீன் கயுமார்சிடம் ஆட்சியை மாற்றினார். அக்குழந்தைக்கு பொறுப்பாளராக இருந்த ஜலாலுத்தீன் ஃபிருஸ் கில்ஜி குழந்தையைக் கொன்று, கில்ஜி ஆட்சிவம்சம் தோன்றச்செய்து மம்லுக்குகளின் அடிமை ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். கியாசுத்தீன் பால்பனின் சமாதி இன்றும் டெல்லியின் மெஹ்ராலி ஆர்சியாலஜி பூங்காவில் உள்ளது.

டெல்லி சுல்தானேட் வரலாறு 3

இன்று நாம் பார்க்கும் இந்தியாவை ஏறக்குறைய சிறிதும் பெரிதுமாக 500 மேற்பட்ட ராஜபுத்திர, சாளுக்கிய, மராட்டிய, சீக்கிய, பாண்டிய, சேர, சோழ, கூர்ஜர, கன்னோசி, பாலர்கள், கலிங்க, பிரதிஹர என்று பலமொழி, பலசட்டங்கள் கொண்டு பலதரபட்ட ஆட்சியாளர்கள் ஆண்டு வந்தார்கள். 50 கிலோமீட்டருக்கு ஒரு மொழி பேசிக்கொண்டு எவனும் எவனுக்கும் ஒத்துவராமல் இருந்தார்கள். முஸ்லீம்களின் பாதம் இங்கு படாமல் போயிருந்தாலோ, மங்கோலியர்கள் முழுமையாக வந்திருந்தாலோ இந்தியாவின் சரித்திரம் வேறு மாதிரியாக மாறி இருக்கும் என்பது அனைத்து சரித்திர ஆசிரியர்களின் ஒருமித்த கருத்து. அனைத்து மன்னர்களையும் போரிட்டு ஒரு நாடாக ஆக்கியதில் கோரி முஹம்மதுக்கும், குதுப்தீன் அய்பெக்குக்கும், இல்டுட்மிஷ்ஷுக்கும், கியாசுத்தீன் பால்பனுக்கும் முக்கிய பங்குண்டு. அதற்குப்பிறகு வந்த அலாவுத்தீன் கில்ஜி ஒரே நாடு என்பதில் தீவிரமாய் இருந்து இந்தியாவை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தார். ஆனால், என்ன கொடுமை இந்த மகத்தான உண்மையை இந்திய மக்களுக்கு வலுக்கட்டாயமாக பாடமாக போதிக்க மறுத்துவிட்டார்கள். ஒருநாள் அல்லாஹுத்தாலாவால் அழிக்கப்படப்போகும் பூமிதானே என்று எண்ணியோ முஸ்லீம்களும் பாமரமக்களுக்கு அதை எடுத்துச் செல்லாமல் விட்டுவிட்டார்கள். முஸ்லீம்கள் வந்தார்கள் அவனை வென்றார்கள், இவனை வென்றார்கள், கோவிலை இடித்தார்கள், கொள்ளையடித்தார்கள் என்று இன்றுவரை கூப்பாடுதான் போடுகிறார்களே தவிர, முஸ்லீம்கள்தான் இந்தியா என்று ஒரு நாட்டை உருவாக்கினார்கள் என்று உண்மையைச் சொல்ல மறுக்கிறார்கள். எட்டாம் நூற்றாண்டில் முதல்முதலாக வந்த அப்துல் காசீம் கூட அப்படியே போட்டுவிட்டு  மத்திய ஆசியாவின் கலீஃபா அழைக்க சென்று மரணமடைந்துவிட்டார். அதன்பிறகு மேற்சொன்ன ஆட்சியாளர்களிலிருந்து மொகலாய ஆட்சியாளர்கள் வரை யாரும் இந்தியாவிலிருந்து எந்த செல்வங்களையும் எடுத்துச் சென்றதாக வரலாறு இல்லை. மேலும் அனைவரும் இங்கேயே பிறந்து, இங்கேயே போரிட்டு, பிரிந்திருந்த இந்திய மக்களை ஒன்றாக்கி 500 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு இங்கேயே இறந்து போனார்கள் இது சரித்திரம். வெறும் 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து 46,000 கப்பல்கள் செல்வத்தை இந்தியாவிலிருந்து கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். இன்றுவரை கேட்பதற்கோ, அதைப்பள்ளிகளில் ஓங்கிச் சொல்லிக் கொடுக்கவோ ஆளில்லை. சரி, அப்படி அனைவரையும் விரட்டி இன்றுவரை இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு (இந்தியாவிலிருந்தது இந்து மதமல்ல திராவிட இனம்) ஆண்டார்களே கொள்ளையடித்து வெளிநாட்டு வங்கிகளில்தான் ட்ரில்லியன் கணக்கில் சேர்த்து வைத்திருக்கிறார்கள். ஏன் தெரியுமா கொள்ளையடித்தவன் திராவிடன் அல்ல. அவன் எங்கும் போக மாட்டான். 500 ஆண்டுகால முஸ்லீம்கள் ஆட்சியில் எந்த நாட்டில் கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கிறார்கள். யாராவது சொல்லமுடியுமா. நல்லுணவு உண்டு, நல்லுடை உடுத்தி, நல்ல கருவில் பிறந்த மாமன்னர்கள் முஸ்லீம் ஆட்சியாளர்கள். தான் கொண்ட மார்க்கத்திற்கு பயந்தார்கள், தான் ஆட்சி செய்யும் மக்களுக்கு பயந்தார்கள். சில ஆட்சியாளர்கள் அதனாலேயே சில இந்துக்களுக்கு சலுகைகளும் தந்தார்கள். பெரும்பாலும் நிர்வாகத்தின் உயர்பதவிகளில் இந்துக்களுக்கு இடமளித்திருக்கிறார்கள். சில முஸ்லீம் ஆட்சியாளர்கள் தவறாக ஆண்டிருக்கலாம் அது நியதி. ஊன்றிப்பார்த்தோமானால் பொதுநிலையிலிருந்து சிந்தித்துப்பார்த்தால் இந்திய மக்கள் விழி இரண்டையும் அகல விரித்து, சேர்ந்து விடாமல் இருக்க குறுக்கே தடுப்பிட்டு, உலகிலுள்ள அனைத்து வகையான மண்ணையும் தங்கள் கண்களில் தாங்களே இட்டு நிரப்பிக் கொண்டார்கள். ஒரு இன்னலிலிருந்து ஒருநாடு விடுபட்டால் பலமடங்கு முன்னேற வேண்டும். உலகில் பலநாடுகள் இதற்கு உதாரணமாக இருக்கின்றன. சொல்ல வேண்டுமானால் சுதந்திரத்திற்குப் பிறகு, சிங்கப்பூர் எத்தனையோ மடங்கு உயர்ந்துவிட்டது. ஜப்பான் ஒரு அழிவிற்குப் பிறகு, எத்தனையோ படி முன்னேறிவிட்டது. ஆனால், இந்தியா மட்டும் முன்னேறாமல் முஸ்லீம் ஆட்சியைவிட, ஆங்கிலேய ஆட்சியைவிட மக்களின் வாழும்தரம் கீழே போய்விட்டது. வாழும் தரம் என்பது ஒரு எல்.சி.டிவி வைத்துக் கொள்வதோ, ஒரு மோட்டார் சைக்கிள், கார் வைத்துக் கொள்வதோ, விதவிதமாக உணவகங்களில் உண்பது மட்டுமல்ல. அப்படி நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் இல்லை. ஜப்பான் முன்னேற 50 ஆண்டுகள் எடுத்துக் கொண்டால், இந்தியாவிலிருக்கும் அறிவிற்கும், வளத்திற்கும் முன்னேறுவதற்கு 25 ஆண்டுகள் போதும். இதுவரை ஆண்ட ஜெய்ஹிந்த்களும், பாரத்மாதாக்களும், ஹமாரா பாரத்களும் என்ன செய்கிறார்கள். தீவிரவாதம் தீவிரவாதம் என்று கூப்பாடு போட்டு முஸ்லீம்களைப் பழிசுமத்துகிறார்கள். அட தீவிரவாதத்தால் நாம் கொல்லப்பட்டுவிடுவோம் என்று பயந்து யாராவது ஆட்சிக்கு வராமலோ, தேர்தலில் நிற்காமலோ இருக்கிறார்களா?. இந்தியாவை ஆள்வது இந்துக்கள் என்று தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொண்டு ஆள்பவர்களே பிறரைக் குற்றம்சாட்டும் முன் சிந்தியுங்கள். மக்கள் என்றும் முட்டாளாகவே இருக்கமாட்டார்கள். தன்னுடைய கடையில் தன்னுடைய கல்லாவில் இருக்கும் ஒருவன் ஐயோ முந்தாநாள் 7000 ரூபாய் காணாமல் போய்விட்டது, நேற்று 5000 ரூபாய் காணாமல் போய்விட்டது என்று குறிப்பாக ஒரே திருடன் மீது எத்தனை நாள் பழி சொல்லமுடியும்?. எனதருமை மாற்றுமத சகோதரனே ஒன்றைச் சிந்தித்தாயா? 4,000, 5,000 பேரைத்திரட்டிக் கொண்டு உருவிய வாளுடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் போகும் தலைவரும் இந்துதான். வியாபம் எனப்படும் ஊழலை வெளிக் கொண்டுவந்த அரசு ஊழியன் ஒருவன் அவனும் ஒரு இந்துதான். ஆனால், வாளுடன் பெரும் கூட்டத்துடன் இருக்கும் ஒரு இந்துவுக்கு 150 கோடி ரூபாய்க்கு அரசு பாதுகாப்பு. ஊழலில் பங்குபெற்ற 1000 பேருக்கு மேலானவர்களால் எந்நேரமும் உயிருக்கு வெளிப்படையாக ஆபத்து இருக்கும் ஒரு இந்துவுக்கு ஒரு சைக்கிள் காவலர் பாதுகாப்பு. உங்களுக்கே இது சிரிப்பாகத் தோன்றவில்லையா? அல்லது சிந்திக்கும் அறிவே இல்லாமல் படைக்கப்பட்டுவிட்டீர்களா?. மறைக்கப்பட்டுவிட்ட இஸ்லாமிய சரித்திரங்களைப் படித்துப்பாருங்கள். இஸ்லாமிய ஆட்சி என்பது அனைத்துப் பக்கமும் கூர் உள்ள கத்தியைப் போன்றது. உலகமுழுவதுமுள்ள முஸ்லீம் ஆட்சியாளர்கள் தங்களுக்கு இறைவன் வழங்கிய ஆட்சியை அந்த கத்தியை அவ்வளவு லாவகமாகக் கையாள்கிறார்கள். சுதந்திரம் பெற்று நம் இந்திய நாட்டை முன்னேற்றாமல் பாகிஸ்தான், பங்களாதேஷ் பிரிய துணைபோனது யார்?, சீனாவுக்கு எதிராக திபெத்தில் தலாய்லாமாவை ஆதரிப்பது யார்?. 80 கோடிகளில் இருந்த நம் மக்களின் நலனைவிட, மேற்சொன்ன இரண்டும் முக்கியமா?. அதெல்லாம் சர்வதேச அரசியல் என்றால், சீனாவிடம் பல ஆயிரம் சதுரஅடிகள் நிலப்பரப்பை கோட்டைவிட்டு விட்டு அமைதியாக இருப்பது ஏன்?. நாம் முஸ்லீமாக இருந்து ஆயிரம் சொல்லிவிடலாம். ஆனால், நடுநிலையில் இருந்து சிந்தித்துப்பார்த்தால் முஸ்லீம்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு இருந்த நிலைமையும், வந்தபின் இருந்த நிலைமையும் ஒருவர் ஆர அமர சரித்திரங்களைப் புரட்டிப்பார்த்தால் தெரிந்து கொள்வார்கள்.
முஸ்லீம்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்த பகுதிகளை எதிர்த்தே பிற்காலத்தில் போரிட்டார்கள். எங்கே? இன்று ஆளூம் ஆரியர்களை இஸ்ரேலை எதிர்த்துப் போரிடவேண்டாம். பேசச்சொல்லுங்கள். மாட்டார்கள். இதுதான் அவர்களின் தேசபக்தி. திருட வந்தவனுக்கும், குடியிருக்க வந்தவனுக்கும் உள்ள வித்தியாசமும் இதுதான். ஒரு உருவத்தை (நாட்டை) பல பாகமாகப் பிரித்து அவரவர் என்னுடையது என்று வைத்திருந்தார்கள். முஸ்லீம் ஆட்சியாளர்கள் அவர்களை (இந்து மன்னர்களை) வென்று இந்தியா என்னும் மறைந்திருந்த உருவத்தைக் கொடுத்தார்கள். நிலப்பரப்பையே ஆண்ட அவர்களை வென்று முத்தரப்பிலும் கடல்சூழ ஒரு நாடாக்கினார்கள். இதை உலகில் யாராலுமே செய்யமுடியாது. அல்லாஹுத்தாலா அந்த அற்புதத்தை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கையில் கொடுத்தான். இந்தியா ஒரு உலகில் ஒரு அற்புதபூமி. நபிமார்கள் வரலாற்றில் ஆதம் (அலை) நபிகள் பூமிக்கு வரும் போது சொர்க்கத்திலிருந்து கொண்டுவந்த வாசனைப் பொருட்கள் கையிலிருந்து இந்தியப் பகுதியின் மீது சிதறியதால்தான் கிராம்பு, ஏலக்காய், பட்டை, சந்தனம் போன்ற பல வாசனைப் பொருடகள் இங்கு விளைவதாக ஒரு வரலாறு. முஹம்மது கோரி முதலில் கன்னாசிகளையும், பிரதிஹரர்களையும் வென்று டெல்லி சுல்தானேட்டை உருவாக்கினார். இல்டுட்மிஷ் மேலும் நிலப்பரப்புகளை வென்று நாட்டை விரிவுபடுத்தினார். அலாவுத்தீன் கில்ஜிதான் டெல்லியைத் தலைநகராகக் கொண்டு இந்தியா என்னும் பெரிய நாடு உருவாக காரணமாக இருந்தார். ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே ஆட்சிமொழி என்று கொண்டுவந்தார். ஆனால், இந்திய பள்ளிக்கூடங்கள் இவர்களை எல்லாம் படையெடுப்பாளர்களாகத் தான் போதிக்கின்றன. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது ஊர்வலத்தில் வடை விற்றவன், தேநீர் விற்றவனை எல்லாம் சுதந்திரப் போராளிகளாக சித்தரிக்கிறார்கள். பால்பனின் மகன் முஹம்மது கான் இந்தியாவைக் காக்க மங்கோலியப் போரில் உயிர்விட்டான் இதை யாராவது மறுக்கமுடியுமா?. தனது தள்ளாத 80 வயதிலும் எல்லைப்புரத்தில் கோட்டைகளைக் கட்டி இந்தியாவை மங்கோலியர்களிடமிருந்து பால்பன் காப்பாற்றினார். அப்படியும் நுழைந்த மங்கோலியர்களை மாலிக் காபூர், ஜாபர்கான், காஜி மாலிக் போன்ற தளபதிகள் வீரமாகப் போரிட்டு விரட்டினார்கள் அதைச் சொன்னார்களா?. அதாவது மங்கோலியர்கள் வரலாற்றிலே ஒரு சொல் உண்டு. குதிரைகள் நீர் அருந்த தயங்கினால், ‘ஏன் ஜாபர்கான் தென்படுகிறாரா’? என்று கேட்பார்களாம்.


டெல்லி சுல்தானேட் வரலாறு 4

கில்ஜி ஆட்சிவம்ச வரலாறு

குரித்களின் ஆட்சிக்குப்பிறகு, டெல்லி சுல்தானேட்டின் இரண்டாவது ஆட்சியாளர்களாக கில்ஜி ஆட்சிவம்சத்தினர்கள் தோன்றினார்கள். இவர்களும் மத்திய ஆசியாவைச் சேர்ந்த துருக்கி இனத்தவர்கள். தற்போதைய ஆப்கானிஸ்தானின் கில்ஜி என்ற கிராமத்திலிருந்து வந்தவர்கள். துண்டுத்துண்டாக ஆண்டுகொண்டிருந்த பகுதிகளை ஒன்றுபடுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்கள். டெல்லியின் குரித் ஆட்சியாளர் குதுப்தீன் அய்பக்கிடம் முஹம்மது பின் பக்தியார் கில்ஜி என்பவர் இராணுவ ஜெனெரலாக இருந்தார். இவர்தான் முதலில் பெங்காலை வெற்றி கொள்ள துணை புரிந்தார். இவருக்கு பிறப்பிலேயே கால் முட்டியிலிருந்து அடிப்பாதம் வரை வழக்கத்தைவிட நீண்டிருக்கும். ஆனால் இடுப்புக்கு மேற்புறம் குறைவாக இருக்கும். கோர் பகுதியில் ஆரம்பத்தில் திவான் இ அர்தாக நியமிக்கப்பட்ட இவர் குதுப் அல்தீன் படையில் சேர ஆர்வம் காட்டினார். ஆனால் தகுதியின்மையால் நிராகரிக்கப்பட்டு, கிழக்குப்புறம் சென்று மாலிக் ஹிஸ்பர் அல்தீனுடன் சேர்ந்து வட இந்தியாவில் பதயூன் போரில் கலந்து கொண்டார். சிலகாலம் கழித்து அவ்த் பகுதிக்குச் சென்ற இவரின் திறமை அறிந்த மாலிக் ஹுசம் அல்தீன், பக்தியார் கில்ஜிக்கு பெரிய பண்ணை ஒன்றை மிர்சாபூர் மாகாணத்தில் கொடுத்தார். அங்கிருந்து பக்தியார் கில்ஜி திறமையும், வேகமும் கொண்ட இஸ்லாமிய படை ஒன்றைத்தயார் செய்து அருகாமை பகுதிகளை வென்றார். மிகச்சிறந்த 18 குதிரைவீரர்களைக் கொண்ட இவர் படை மிகவும் புகழ்பெற்றது. 1203 ல் பீகாரை வென்றதின் பிறகு, டெல்லி ஆட்சியாளரின் கவனம் பெற்றார். லட்ச்மன் சென் என்பவரை எதிர்த்து நபத்விப் பகுதியை வென்றார். 1206 ல் தேவகோட்டையை விட்டு திபெத் நோக்கி புறப்பட்ட பக்தியார் கில்ஜி அலி மர்தான் கில்ஜி என்பவரை கிழக்குப்பகுதியின் முக்கியமான பாரிசல் பகுதியைக் கண்காணிக்குமாறு உத்தரவிட்டார். அஸ்ஸாமை வென்று உடல்நலம் சரியில்லாமல் தேவகோட்டை திரும்பிய பக்தியார் கில்ஜியை கொடுமைக்காரன் அலி மர்தான் கில்ஜி படுகொலை செய்தார். பக்தியார் கில்ஜியின் படையிலிருந்த முஹம்மது ஷிரான் கில்ஜி என்பவர் பழிவாங்கும் விதமாக அலி மர்தான் கில்ஜியைக் கைது செய்தார். பக்தியார் கில்ஜிக்குப் பிறகு, கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜி பொறுப்புக்கு வந்தார். சிறையிலிருந்து தப்பித்த அலி மர்தான் கில்ஜியை குதுப்தீன் அய்பக் பெங்காலின் கவர்னராக நியமித்தார். இரண்டாண்டுகள் கவர்னராக இருந்த அவரை கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜி கொன்று மீண்டும் தான் பெங்காலின் கவர்னராக வந்தார். தேவகோட்டையிலிருந்த பெங்காலின் தலைநகரத்தை கௌருக்கு மாற்றி பலமான கடற்படையை அமைத்தார். 15 ஆண்டுகள் பெங்காலை நிர்வகித்த கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜி கிழக்கு பெங்காலின் வாங்கா, அஸ்ஸாமின் கமரூபா, வடபீகாரின் டிர்ஹுத், வட ஒரிஸ்ஸாவின் உத்கலா ஆகியவற்றை வென்று கப்பம் செலுத்த வைத்தார். கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜி பீகாரை வென்றபின் இவர் வளர்ச்சியின் மீது கவனம் கொண்ட டெல்லி சுல்தான் இல்டுட்மிஷ் இவரை அடக்கும் வண்ணமாக 1224 ல் இருபடைகளுடன் பெங்கால் மீது படையெடுத்தார். பீகாரின் தெலியாகர் என்ற இடத்தில் மோதிக் கொண்டதில் கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜியின் கடற்படையும், தரைப்படையும் தோல்வியடைந்தன. இதனால் டெல்லிக்கு 8,000,000 டாகாவும், 38 யானைகளையும் கொடுக்கச் சொல்லி, தனது பெயரிலேயே நாணயமும் வெளியிட வேண்டுமென்று சுல்தான் இல்டுட்மிஷ் உத்தரவிட்டார். இல்டுட்மிஷ் படைகளை விலக்கிக் கொள்ள மீண்டும் கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜி பெங்காலை சுதந்திரமாக அறிவித்துக் கொண்டார். இதனால் மீண்டும் படையெடுத்து வந்த இல்டுட்மிஷ் கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜியைக் கொன்று பெங்காலை டெல்லி சுல்தானேட்டுடன் நேரடியாக இணைத்துக் கொண்டார். நாலாந்தா பல்கலைக்கழகத்தைச் சேதப்படுத்தியதாக சொல்லப்படும் கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜி பல மஸ்ஜித்களையும், மதரஸாக்களையும் இந்தியப் பகுதிகளில் கட்டினார்.
அடுத்து கில்ஜி குடும்பத்தில் மாலிக் ஃபிருஸ் என்பவருக்குப் பிறந்த ஜலாலுத்தீன் ஃபிருஸ் கில்ஜி என்பவரை டெல்லி சுல்தான் கைய்குபாத் பாரான் பகுதியில் தலைவராகவும், இராணுவ தளபதியாகவும் நியமித்திருந்தார். சுல்தான் கைய்குபாத் வலிப்பு நோயால் உறுப்புகள் செயலிழக்க, டெல்லித் தலைவர்கள் கைய்குபாதின் மூன்றுவயது குழந்தை கயுமார்ஸை சுல்தானாகத் தேர்ந்தெடுத்தார்கள். இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திய ஜலாலுத்தீன் கில்ஜியும், அவர் மகன்களும் டெல்லியில் நுழைந்து குழந்தை கயுமார்ஸைக் கொன்று, எதிர்த்த இராணுவத்தை வென்று டெல்லியின் சுல்தானேட்டைக் கைப்பற்றினார்கள். சுல்தான் கைய்குபாதைக் கொன்று யமுனா நதியில் வீசினார்கள். பின்னர் டெல்லி சுல்தானேட்டின் முதல் கில்ஜி ஆட்சிவம்ச ஆட்சியாளராக ஜலாலுத்தீன் கில்ஜி 1290 ல் ஆனார். முந்தைய குரித் ஆட்சியாளர் பால்பனின் கீழ் இருந்தவர்களின் நிர்வாகத்தை அவர்களிடமே ஒப்படைத்தார். தன் மூத்த மகனுக்கு ‘கான் கானன்’ என்றும், இரண்டாவது மகனுக்கு ‘அர்கலி கான்’ என்றும், மூன்றாவது மகனுக்கு ‘கத்ர் கான்’ என்றும் பட்டங்களை வழங்கினார். தன் இளைய சகோதரருக்கு ‘யக்ருஷ் கான்’ என்று பட்டமளித்து இராணுவ அமைச்சராக்கினார். மருமகன்களான அலாவுத்தீன் கில்ஜி, அல்மாஸ் பெக் ஆகியோருக்கும் அரண்மனையில் பதவிகள் வழங்கினார். 1292 ல் 100,000 வீரர்களுடன் சூறாவளி போல் இந்தியாவுக்குள் வந்த மங்கோலியப் படைகளை சாதுரியமாக வென்றார். 1296 ல் தன் மருமகன் அலாவுத்தீன் கில்ஜியால் படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் ஜுனா முஹம்மது என்றழைக்கப்பட்ட அலாவுத்தீன் கில்ஜி இரண்டாவது கில்ஜி ஆட்சிவம்ச டெல்லி சுல்தான் ஆனார். மிகச்சிறந்த ஆட்சியாளர் என்று பெயர் பெற்ற இவரிடம் மாலிக் காஃபூர் என்ற திறமையான அரவாணி தளபதியாக இருந்தார். கொஞ்சம் மாலிக் காஃபூரைப் பற்றி தெரிந்து கொண்டு மேலே செல்வோம்.

டெல்லி சுல்தானேட் வரலாறு 5

மாலிக் காஃபூர் அடிமை இந்துவாக இருந்து பின்னர் முஸ்லீமாக மார்க்கம் மாறிய ஒரு சிறந்த படைத்தளபதி ஆவார். இவர் ஒரு அரவாணியும் கூட. கம்பட் போரில் அலாவுத்தீன் கில்ஜியின் படைகளால் அடிமையாக கைப்பற்றப்பட்ட மாலிக் காஃபூர் பார்த்தவுடன் ஈர்க்கும் கவர்ச்சி உடையவராக இருப்பாராம். அதனால் அலாவுத்தீனின் பார்வையில் பட்டு அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டார். இவரை ‘ஆயிரம் தினார் காஃபூர்’ என்றும் அழைப்பார்கள். சுல்தான் அலாவுத்தீன் கில்ஜிக்கு இவருக்கும் தகாத உறவு இருந்ததாகவும் செய்தி உண்டு. சுல்தானால் குஜராத் புரட்சியை அடக்க அனுப்பப்பட்டார். பின் கொஞ்சம் கொஞ்சமாக இராணுவத்தில் உயர்வு பெற்று இராணுவ ஜெனெரலாக ‘நாயிப்’ என்னும் உச்ச பதவியைப் பெற்றார். மாலிக் காஃபூர் 1294 ல் மலைப்பிரதேசமான தேவகிரியை ஆண்ட யாதவ மன்னன் ராம்தேவாவை எதிர்த்து போரில் அவன் மகன் சங்கர்தேவாவைக் கொன்றார். பின் தென்பகுதியில் ககாதியா ஆட்சியாளர்களை எதிர்த்து பெரும் செல்வங்களை அள்ளி வந்தார். வாராங்கல்லில் புகழ்பெற்ற ‘கோஹிநூர்’ என்னும் வைரத்தைக் கைப்பற்றினார். போர்களின் போது அடிபணிய மறுத்த இந்து மன்னர்களின் அரண்மனை, பொக்கிஷங்கள், கோவில்கள் ஆகியவற்றை துவம்சம் செய்தார். 1305 ல் மாலிக் காஃபூர் அம்ரோஹா போரில் மங்கோலியர்களை வெற்றி கொண்டார். 1309 மற்றும் 1311 ல் இரண்டுமுறை தென் இந்தியாவின் மீது படையெடுத்தார். முதல்முறை வாராங்கல் மீதும், இரண்டாவது முறை த்வார் சமுத்ரா, மலபார் மற்றும் மதுரை மீதும் படையெடுத்தார். மாலிக் காஃபூர் இறுதியாக 1318 ல் கடைசி யாதவ மன்னன் ராஜா ஹரபல்லால் கொல்லப்பட்டார்.
1296 ல் தன் மாமனார் ஜலாலுத்தீன் கில்ஜியைக் கொன்று, துருக்கிய தலைவர்களின் ஆதரவு பெற்று அலாவுத்தீன் கில்ஜி டெல்லியின் ஆட்சியில் அமர்ந்தார். அதற்கு உறுதுணையாய் இருந்த முஹம்மது ஷாவுக்கு தகுந்த அதிகாரங்களை அளித்தார். அந்தப்புரத்தில் நடமாடும் அளவுக்கு அனுமதிக்கப் பட்டிருந்த முஹம்மது ஷா, சிம்னா என்ற அந்தப்புரப் பெண்ணுடன் சேர்ந்து அலாவுத்தீன் கில்ஜியைக் கொன்று அவர்கள் சுல்தானும், ராணியுமாகத் திட்டமிட்டிருந்தார்களாம். இதை அலாவுத்தீன் கில்ஜி அறிந்து கொண்டார் என்று தெரிந்தவுடன் முஹம்மது ஷா தன் சகோதரருடன் டெல்லியை விட்டுத் தப்பி ஓடினார். ரனதம்போர் என்ற பகுதியை ஆண்ட ஹமிர்தேவ் என்ற ராஜபுத்திர மன்னனிடம் முஹம்மது ஷா அடைக்கலம் புகுந்தார். முஹம்மது ஷாவைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி அலாவுத்தீன் கில்ஜி ஹமிர்தேவிடம் வேண்ட, அவர் மறுத்த பின் ரனதம்பூர் மீது படையெடுத்து அதை வென்றார். அடுத்து 1303 ல் மேவாரை வென்றார். இந்த மேவார் போரில் சம்பந்தப்பட்ட ராஜா ரத்தன் சிங், சித்தூர் ராணி பத்மினி ஆகியோரைப் பற்றி பலகதைகளையும், திரைப்படங்கள் கூட எடுத்து சித்தூர் ராணி பத்மினியை கற்புக்கரசியாகவும், வீரமுள்ளவளாகவும், அலாவுத்தீன் கில்ஜியை காமுகனாகவும் காட்டினார்கள். அவைகள் எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஏனென்றால் இவர் வரிசையாக வடஇந்தியாவை ஒன்றுபடுத்த எடுத்த இராணுவ நடவடிக்கைகளில் இந்து மன்னர்களே இருந்தார்கள். அதனால் இக்கதைகளை அலாவுத்தீன் கில்ஜி மீது அவதூறு பரப்ப கிளப்பியதாக இருக்கலாம் என்றும் ஒரு கூற்று உண்டு. அலாவுத்தீன் கில்ஜி வரிசையாக ரனதம்போர், குஜராத், மேவார் ஆகிய பகுதிகளை வென்றதால் மற்ற வட இந்திய இந்து மன்னர்கள் பயத்தில் இருந்தார்கள். அடுத்து அலாவுத்தீன் கில்ஜி மால்வாவை வெல்லத் திட்டமிட்டார். மால்வாவின் மன்னன் மஹ்லக்தேவ் 20,000 குதிரைப்படைகளையும், 90,000 காலாட்படைகளையும் தயார் செய்து ஹர்மந்தா கோகா என்ற தளபதியின் கீழ் அலாவுத்தீன் கில்ஜியை எதிர்த்தான். அலாவுத்தீன் கில்ஜி, அய்ன் உல் முல்க் மூல்தானி என்ற தளபதியின் கீழ் 160,000 வீரர்களுடன் சென்று போரிட்டு பெரும் ரத்த வெள்ளத்தில் ஹர்மந்த கோகாவைக் கொன்று, மால்வாவுடன் சேர்த்து மாண்டு, தாரா, சந்தேரியையும் கைப்பற்றினார். பின் தளபதி அய்ன் உல் முல்க் முல்தானியை மால்வாவின் கவர்னராக ஆக்கினார். 1308 ல் மார்வாரின் மன்னன் சதல்தேவை எதிர்த்து சிவானா கோட்டையையும், மார்வாரையும் வெற்றி கொண்டார். சதல்தேவைச் சிறைப்பிடித்து தூக்கிலிட்டார். பின் ஜலோரில் போரிட்டபோது கன்ஹத்தேவ் சொங்காராவிடம் தோல்வி அடைந்தார். இரண்டாம் முறை மாலிக் கமாலுத்தீன் என்ற தளபதியின் கீழ் படையனுப்பி ஜலோரை வென்றார்.
அலாவுத்தீன் கில்ஜி, உலுக்கான், நுஸ்ரத் கான் ஆகிய இரண்டு தளபதிகளை அனுப்பி குஜராத்தைக் கைப்பற்றச் செய்தார். அக்காலகட்டத்தில் தான் அடிமையாக இருந்த மாலிக் காஃபூர் 1000 தினார்களுக்கு வாங்கப்பட்டார். அலாவுத்தீன் கில்ஜி மங்கோலியர்களை வெற்றிகரமாக இந்தியாவில் நுழையவிடாமல் தடுத்தார்.  இந்திய எல்லைப்புறங்களில் பலமான கோட்டைகளைக் கட்டி பாதுகாப்புப் படைகளை அமைத்தார். மங்கோலியர்களை 1298 ல் ஜலந்தர், 1299 ல் கிலி, 1305 ல் அம்ரோஹா, 1306 ல் ராவி ஆகிய போர்களில் வென்றார். பல படையெடுப்புகளாலும், மங்கோலியர்களின் அடிக்கடி தாக்குதல்களாலும் பெரும்படையை வைத்துக்கொண்டு, ஊதியம் கொடுப்பதில் அலாவுத்தீன் கில்ஜி மிகவும் சிரமப்பட்டார். இதனால் வாணிபத்தில் கவனம் செலுத்தி அதைச் சீர்படுத்தினார். டெல்லியில் மூன்றுவித சந்தைகளை ஏற்படுத்தினார். முதலாவது தானியங்களுக்கென்று ஒன்றும், அடுத்து மளிகைச் சாமான்களுக்கென்று ஒன்றும், மூன்றாவதாக கால்நடைகளுக்கென்று ஒன்றும் அமைத்தார். உற்பத்தியாகும் அனைத்துப் பொருட்களையும் அரசே வாங்கி தனது கிடங்குகளில் வைத்துக் கொண்டு விலையை நிர்ணயம் செய்தது. சில சமயங்களில் தானே சென்று வியாபாரிகள் அதிக விலைக்கு விற்கிறார்களா என்று கண்காணிப்பார். அதற்கென அதிகாரிகளையும் நியமித்தார். இதனால் அரசுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல பலன் கிடைத்தது. அப்போதைய இம்முறை பலருக்கும் ஆச்சரியம் அளித்தது. 1316 ல் அலாவுத்தீன் கில்ஜி காலமானார். இவரது அடக்கவிடம் குதுப்மினார் வளாகத்தில் உள்ளது. இவரது மறைவிற்குப்பின் ஆட்சியைப் பிடிக்க மாலிக் காஃபூர் உட்பட பல கில்ஜி குடும்பத்தினர் மாறி மாறி சில ஆண்டுகள் முயற்சித்தார்கள். ஆறுவயதான கில்ஜி குடும்பத்தினர் ஒருவரை சுல்தானாக்கி அவர் சகோதரர் குத்புத்தீன் முபாரக் ஷா கில்ஜி என்பவரை மேலிருந்து ஆள நியமித்தனர். இவர் அலாவுத்தீன் கில்ஜியின் மகனாவார். தந்தையால் விதிக்கப்பட்டிருந்த அனைத்து வரிகளையும் ரத்து செய்து, கைதிகளை விடுதலை செய்து 18 வயதில் ஆட்சியில் அமர்ந்தார். நான்கு ஆண்டுகள் ஆண்ட பின் 1320 ல் குஸ்ராவ் கான் என்ற இராணுவ அதிகாரியால் படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்தார். பின் குஸ்ராவ்கானை நீக்க காஸிமாலிக் என்பவர் மூலம் பஞ்சாபிலிருந்து புரட்சி செய்தார். குஸ்ராவ்கான் கொல்லப்பட சுல்தான் கியாசுத்தீன் துக்ளக் என்பவர் ஆட்சி அமைத்து துக்ளக் ஆட்சிவம்சத்தை துவக்கினார்.


டெல்லி சுல்தானேட் வரலாறு 6

துக்ளக் ஆட்சிவம்ச வரலாறு

துருக்கியிலிருந்து வந்து டெல்லியை ஆண்ட முஸ்லீம் ஆட்சியாளர்கள் இந்த துக்ளக் ஆட்சிவம்சத்தினர். இவர்கள் 1320 ல் ஆட்சிக்கு வந்தார்கள். அதற்கு முன் கில்ஜி வம்சத்தினர் டெல்லியை ஆண்டார்கள். கில்ஜி வம்சத்தின் கடைசி ஆட்சியாளர் குஸ்ரோ கான். இவர் ஒரு இந்துத் தளபதி. 1316 ல் அலாவுதீன் கில்ஜி மரணமடைய அவர் பிள்ளை முபாரக் கில்ஜியை குஸ்ரோ கான் கொன்று தான் முஸ்லீமாக மாறி ஆட்சியில் அமர்ந்தார். அவருக்கு பெர்ஷிய, ஆப்கான் மற்றும் டெல்லித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். டெல்லியில் இருந்த முஸ்லீம்கள் கில்ஜிகளின் கீழ் பஞ்சாபில் கவர்னராக இருந்த துருக்கிய வம்சாவழியினரான காஸி மாலிக்கை ஆட்சியிலிருந்து நீக்கி கொன்றுவிட்டு, 1320 ல் காஸி மாலிக்கை ஆட்சியில் அமர்த்தினார்கள். ஆட்சியில் அமர்ந்தவுடன் காஸி மாலிக், கியாசுத்தீன் துக்ளக் என்று பெயர் மாற்றிக் கொண்டார். இவர் துருக்கிய தந்தைக்கும், இந்துத் தாய்க்கும் பிறந்தவர். தான் ஆட்சிக்கு வர ஆதரவாய் இருந்த மாலிக்குகள், ஆமிர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் பதவியும் அதிகாரமும் அளித்தார். டெல்லியின் கிழக்கே ஆறு கிலோமீட்டர்கள் நகரத்தை வளர்த்து ஒரு கோட்டையையும் கட்டி, மங்கோலியர்களின் எதிர்ப்பிலிருந்து காத்தார். அப்பகுதி துக்ளகாபாத் என்று அழைக்கப்பட்டது. 1321 ல் உலுக் கான் என்ற முஹம்மது பின் துக்ளக் என்னும் தன் மகனை அனுப்பி அரங்கல் மற்றும் திலங் (தெலிங்கானா) ஆகிய பகுதிகளைக் கைப்பற்றச் சொன்னார். அவர் தோல்வியடைந்து திரும்பினார். பின் நான்கு மாதங்கள் கழித்து பெரும் படையுடன் மகனை அனுப்ப அவர் இம்முறை அரங்கலை வென்று சுல்தான்பூர் என்று பெயர் மாற்றினார். அங்கிருந்த பொருட்களைக் கைப்பற்றி டெல்லிக்கு அனுப்பினார். பெங்காலிலிருந்த முஸ்லீம் தலைவர்கள் கியாசுத்தீன் துக்ளக்கை லுக்னாடியைக் கைப்பற்ற அழைக்க தன் மகன் முஹம்மது பின் துக்ளக்கை டெல்லியின் ஆட்சியில் அமர்த்திவிட்டு, இன்னொரு மகன் மஹ்மூத் கானுடன் லுக்னாடியை வெல்லச் சென்றார்.
அவர்கள் லுக்னாடியை வெற்றி கொண்டு திரும்பி வரும்போது டெல்லியில் முஹம்மது பின் துக்ளக், நிஜாமுத்தீன் அவ்லியா என்னும் சூஃபி ஞானியை ஒரு மரக்கட்டுமானத்தின் மேலிருந்து தள்ளிக் கொன்றுவிட்டு விபத்து போல் காணச் செய்தார். அதேபோல் மரக்கட்டுமானத்தில் 1325 ல் கியாசுத்தீன் துக்ளக்கும், அவர் மகன் மஹ்மூத் கானும் இறந்து போனார்கள். இவைகளில் இருவேறு கருத்துகள் உண்டு. ஒருசாரார் கொலை என்றும், மற்றொரு சாரார் யானைகள் அந்த மரக்கட்டுமானத்தீன் மீது நடந்து அது வலுவிழந்திருந்தது என்றும் கூறினார்கள்.
கியாசுத்தீன் துக்ளக்கின் மரணத்திற்குப் பிறகு, முஹம்மது பின் துக்ளக் 1325 ல் ஆட்சிக்கு வந்து 26 வருடங்கள் ஆண்டார். இவரது ஆட்சியில் டெல்லியின் துக்ளக் ஆட்சிவம்சம் பல மாகாணங்களை நோக்கி பரவியது. மால்வா, குஜராத், திலங், கம்பிலா, துர் சமுந்தர், மாபார், லக்னாடி, சிட்டகாங், சுனர்காவ், திர்ஹுத் ஆகிய பகுதிகளைத் தாக்கினார். பெரிதாகிப்போன நிலப்பரப்பில் ஆள்வது சிரமமாகி, ஆங்காங்கு புரட்சிகள் வெடித்தன. முஹம்மது பின் துக்ளக் வரிகளை உயர்த்தினார். குறிப்பாக கங்கா, யமுனா போன்ற விவசாயம் சார்ந்த பகுதிகளில் வரிகளை அதிகப்படுத்தினார். குறிப்பாக இவர் இந்துக்கள் மீது மட்டும் வரிசுமத்தியதாகச் சொல்லப்படுகிறது. வரி சுமையைப் பொருக்கமுடியாமல் மக்கள் காடுகளில் சென்று வாழ்ந்து, நாட்டில் எதையும் பயிர் செய்யாமல் அரசை தண்டித்தார்களாம். நாட்டில் வறுமை ஏற்பட்டு பல கொள்ளைகளும் நடந்தது. இதனால் கோபமுற்ற முஹம்மது பின் துக்ளக் கடும் தண்டனைகளை விதித்தார். முஸ்லீம்களான் ஷியா சைய்யதுகள், சூஃபிகள், கலந்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கொன்றார். டெல்லியில் இணையும் வண்ணம் சிரி பகுதியில் புதிய நகரம் ஒன்றை அமைத்தார். அதற்கு ‘ஜஹன்பன்னாஹ்’ என்று பெயரிட்டார். தலைநகரை டெல்லியிலிருந்து மஹாராஷ்டிராவின் தௌலதாபாதுக்கு மாற்றினார். டெல்லியிலிருந்த பெரும் மக்களை தௌலதாபாதுக்கு கட்டாயமாக மாறச் சொன்னார். அப்படி குடிபெயர மறுத்தவர்களை கொல்ல உத்தரவிட்டார். இத்திட்டம் விரைவில் தோல்வி கண்டது. தௌலதாபாத் வறண்ட பகுதியாக இருந்து போதிய குடிநீர் வசதி இல்லாமல் போனது. பின்னர் மீண்டும் தலைநகரம் டெல்லிக்கு மாற்றப்பட்டது. இப்போது பெரும்பான்மையான முஸ்லீம்கள் டெல்லி திரும்பாமல் மத்திய மற்றும் தென்பகுதிகளில் குடியேறினார்கள். 1327 ல் முஹம்மது பின் துக்ளக் ஆட்சிக்கு எதிராக பெரும் கலவரம் மூண்டது. 1335 ல் அருகாமை தெற்கிலிருந்து விஜயநகர பேரரசு டெல்லி மீது போர் தொடுத்தது. அது டெல்லியிலிருந்து தென் இந்தியாவைப் பிரித்து வென்றது. 1336 ல் மசுனுரி நாயக் என்பவர் டெல்லியிடமிருந்து வாராங்கலை வென்றார். 1338 ல் உறவுக்காரர் ஒருவரே மால்வாவில் புரட்சி செய்தார். கிழக்குப் பகுதியிலிருந்த முஸ்லீம் கவர்னர்கள் இந்து மன்னர்களின் ஆதரவில் புரட்சி செய்து தங்கள் பகுதிகளை சுதந்திரப்பகுதிகளாக அறிவித்துக் கொண்டார்கள். சுருங்கிக் கொண்டிருக்கும் தனது நிலப்பரப்பை எந்தவித ஆதரவுமில்லாமல் முஹம்மது பின் துக்ளக் வேடிக்கை பார்த்தார். இவர் இஸ்லாமைப்பற்றியும், திருக்குரான் பற்றியும் மிகச் சிறந்த அறிவைப் பெற்றிருந்தாராம். ஆனால், ஆட்சியாளும் தகுதி இல்லாதிருந்தாராம். அரசு கஜானா காலியானவுடன் குறிப்பிட்ட உலோகத்தில் வடிக்க வேண்டிய நாணயங்களை சாதாரண உலோகத்தில் வடிக்கச் சொன்னாராம். இதனால் மக்கள் அவரவர் வீடுகளில் நாணயம் அடித்துக் கொண்டார்கள். குறிப்பாக இந்துக்கள் பெருவாரியாக வீடுகளில் நாணயம் அடித்து முஹம்மது பின் துக்ளக் கேட்கும் வரிகளை இல்லை என்று சொல்லாமல் உடனுக்குடன் கொடுத்தார்களாம். இதனால் நாட்டின் பொருளாதாரம் படுவேகமாக வீழ்ந்து வறுமை எங்கும் தாண்டவமாடியது.

டெல்லி சுல்தானேட் வரலாறு 7

முஹம்மது பின் துக்ளக் சீனாவையும், குராசானையும் சுன்னி முஸ்லீம் ஆட்சியின் கீழ் கொண்டுவர ஆசைப்பட்டு போருக்குத் தயாரானார். ஒருவருட காலமாக 300,000 வீரர்களை டெல்லியில் திரட்டினார். அடுத்த ஆண்டு போருக்கு கிளம்புவதற்கு முன் அரசு கஜானா காலியாகி விட்டது. சீனாவுக்கு செல்வதற்காக 100,000 வீரர்களைத் திரட்டினார். அவர்களுக்கு கொடுக்க ஊதியம் இல்லை. போருக்கு போன வீரர்களை ஹிமாலயா மலையில் இந்துக்கள் செல்லவிடாமல் தடுத்தார்கள். பல வீரர்கள் பனியில் இறந்து போனார்கள். திரும்பிய வீரர்களை தூக்கிலிட்டுக் கொன்றார். கீழிருந்து மேல்மட்டம் வரை அரசுப்பணியாளர்கள் அனைவருக்கும் ஊதியம் கொடுக்காமல் முடிந்தமட்டிலும் நாட்டு மக்களிடம் தாமாகவே வரிவசூலித்துக் கொள்ளச் சொன்னார். 1351 ல் புரட்சியாளர்களைத் துறத்திச் செல்லும்போது முஹம்மது பின் துக்ளக் மரணமடைந்தார். இவரது ஆட்சி ஒரு மன்னருக்கு உரியதாக இல்லாமல் ஏதோ நகைச்சுவைப் பக்கங்களாக இருந்ததாக ஒரு கருத்துண்டு. தமிழ்நாட்டில் பிராமண வகுப்பைச் சேர்ந்த நடிகரும், பத்திரிக்கையாளருமான சோ ராமசாமி என்பவர் ‘முஹம்மது பின் துக்ளக்’ என்று ஒரு திரைப்படத்தை 1970 ல் ஒரு இஸ்லாமிய மன்னரைக் கிண்டல் செய்யும் நோக்குடன் எடுத்தார். முஹம்மது பின் துக்ளக் இறப்பிற்குப் பிறகு, உறவினர் ஒருவரான மஹ்மூத் இப்ன் முஹம்மது என்பவர் ஒரு மாதத்திற்கும் குறைவாக ஆண்டார். பின்னர் 45 வயதான இன்னொரு உறவினர் ஃபிருஸ் ஷா துக்ளக் என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவரது தந்தையின் பின்னால் ஒரு சுவாரசிய கதை உண்டு. இவர் தந்தை பெயர் சிபாஹ் ரஜப். இவர் திலாபூரைச் சேர்ந்த இந்து இளவரசியான நைலாவை மணந்து கொள்ள கேட்டார். அதற்கு அவர் சம்மதிக்காததால், சிபாஹ் ரஜபும் விட்டுவிட்டார். பின்னால் சிலகாலங்களுக்குப் பிறகு, மன்னர் சுல்தான் முஹம்மது பின் துக்ளக் திலாபூர் மக்கள் செலுத்த வேண்டிய வரியை கட்டச்சொல்லி வற்புறுத்தினார். இதனால் திலாபூர் மக்களுக்கு பெரும் சிரம்ம் ஏற்பட்டது. அவர்கள் இளவரசியிடம் முறையிட, அவர் சுல்தானிடம் தான் சிபாஹ் ரஜபை திருமணம் செய்ய சம்மதிப்பதாகவும் தன் மக்களிடம் வரிகேட்டு தொல்லை செய்யக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கிறார். சுல்தானும் சம்மதிக்க சிபாஹ் ரஜபுக்கும், இந்து இளவரசி நைலாவுக்கும் திருமணமாகி அவர்களுக்குப் பிறந்தவர்தான் இந்த ஃபிருஸ் ஷா துக்ளக்.
ஃபிருஸ் ஷா துக்ளக்கின் ஆட்சியிலும் நிறைய குழப்பங்களும், கொலைகளும் நடந்ததாகக் கூறப்படுகிறது. இவர் இழந்த நிலப்பரப்புகளை மீட்டெடுக்க முனைந்தார். 11 மாதங்களாக பெங்கால் மீது படையெடுத்து சரியான தளபதி இல்லாததால் தோல்வி அடைந்தார். நாட்டில் சித்திரவதைகளை தடை செய்தார். ஷியா பிரிவினரின் மஹ்தி வழியையும், ஹிந்துக்களின் வழிபாடு முறைகளையும் வெறுத்தார். இவர் மதம் மாற மறுத்த இந்துக்களை எரித்துக் கொன்றதாகக் கூறுகிறார்கள். 1384 ல் உள்நாட்டுப்போர் நடந்தது. அதேநேரத்தில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை நாடுமுழுதும் கடைபிடித்தார். இவரது ஆட்சி முஹம்மது பின் துக்ளக் ஆட்சியைவிட சிறந்ததாக இருந்தது. வறுமையால் கைவிடப்பட்டிருந்த பல கிராமங்களையும், நகரங்களையும் சீர்படுத்தினார். பொருளாதாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்தார். பல மஸ்ஜிதுகள், மதரஸாக்கள், பாலங்கள் ஆகியவற்றைக் கட்டினார். யமுனா-காகர் மற்றும் யமுனா-சட்லஜ் நதிகளில் நீர்பாசன கால்வாய்களை அமைத்தார். டெல்லியில் வஸிராபாத் மஸ்ஜித் இவர் கட்டியதுதான். இந்துக்களுக்கு இடிந்த கோவில்களை சரி செய்து கொடுத்தார். இவர் போட்ட நீர்பாசன குழாய்கள் டெல்லியில் 19 ம் நூற்றாண்டுவரை உபயோகப்படுத்தினார்கள். 1388 ல் ஃபிருஸ் ஷா துக்ளக் இறந்த பிறகு ஆள்வதற்கு துக்ளக் வம்சத்தில் ஆள் இல்லாமல் போனது. அடுத்து ஆட்சியில் அமர்ந்த துக்ளக் கானும், அபுபக்கர் ஷாவும் உடனுக்குடன் இறந்து போனார்கள். தொடர்ந்து உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருந்தது. ஹிமாலயா பகுதியிலிருந்த இந்துக்கள் வரி கொடுக்கமுடியாது என்று போராட்டத்தில் இறங்கினார்கள். ஆட்சியிலிருந்த சுல்தான் முஹம்மது ஷா கலகம் செய்த பலர் மீது நடவடிக்கை எடுத்து கொன்றுபோட்டார். பல முஸ்லீம், இந்து மாகாணங்கள் தனியாகப் போயின. லாகூரை இந்துக்கள் தனியாக ஆளமுயல அவர்கள் மீது மகன் ஹுமாயூன் கான் தலைமையில் சுல்தான் முஹம்மது ஷா நடவடிக்கை எடுக்க இருந்தார். அதற்குள் 1394 ல் இறந்து போனார். அவர் மகன் ஹுமாயூன் கான் ஆட்சிக்கு வர இரண்டு மாதத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டு இறந்து போனார். பின் ஹுமாயூன் கானின் சகோதரர் நாசிர் அல் தீன் மஹ்முத் ஷா ஆட்சிக்கு வந்தார். இவருக்கு முஸ்லீம் தலைவர்களும், வஸீர்களும், அமீர்களும் ஆதரவு தந்தார்கள். இதற்கிடையில் டர்டார் கான் என்பவர் இரண்டாவது சுல்தானாக நாசிர் அல் தின் நுஸ்ரத் ஷா என்பவரை ஃபிரோசாபாதில் அறிவித்தார். இரு சுல்தான்களுக்கிடையில் மாதந்தோறும் சண்டை நடந்தது. 1398 ல் தைமூர் படையெடுத்து வரும்வரை அப்படியே இருந்தது. தைமூர் நுழைந்த வேகத்தில் சுல்தான்கள் இருக்கும் இடம் தெரியாமல் பறந்து போனார்கள். தைமூர் டெல்லியில் என்றைக்கும் சரித்திரம் மறக்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தினார். லட்சக்கணக்கான மக்களைக் கொன்று டெல்லியைக் கொள்ளையடித்தார்.
முஹம்மது பின் துக்ளக்கின் ஆட்சியின் போது மொரோக்கோவைச் சேர்ந்த இஸ்லாமிய பயணி இப்ன் பத்தூதா டெல்லிக்கு வருகை தந்திருக்கிறார். முஹம்மது பின் துக்ளக்கை சந்தித்த இப்ன் பத்தூதா அவருக்கு அம்புகள், ஒட்டகங்கள், 30 குதிரைகள், அடிமைகள் இன்னும் பல பொருட்களை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். முஹம்மது பின் துக்ளக்கும் அவருக்கு 2,000 வெள்ளி தினார்களும், அலங்கரிக்கப்பட்ட வீடும், மாதம் 5,000 வெள்ளி தினார் ஊதியத்திற்கு கிராமங்களில் வரி வசூலிக்கும் பணியும் கொடுத்தார். இப்ன் பதூதா ஒரு சூஃபி ஞானியுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக முஹம்மது பின் துக்ளக்கால் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டார். அந்த சூஃபி ஞானி கொல்லப்பட்டார். அடிமை வாணிபம் மிக உச்சத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 


டெல்லி சுல்தானேட் வரலாறு 8

சைய்யத் ஆட்சிவம்ச வரலாறு

குரித் ஆட்சிவம்சம், கில்ஜி ஆட்சிவம்சம், துக்ளக் ஆட்சிவம்சம் ஆகிய மூன்று ஆட்சிவம்சத்திற்கு பிறகு, டெல்லி சுல்தானேட்டின் நான்காவது ஆட்சிவம்சமாக சைய்யத் ஆட்சிவம்சத்தினர்கள் தோன்றினார்கள். இவர்கள் தங்களை நபி (ﷺ )களாரின் வழிமுறையில் வந்தவர்கள் என்று கூறினார்கள். 1396 ல் தைமூர் டெல்லியின் மீது படையெடுத்த போது ஸ்திரமில்லாத சுல்தானேட்டின் ஆட்சி அதிகாரத்தை சைய்யத் ஆட்சிவம்சத்தினர் கைப்பற்றினார்கள். முந்தைய துக்ளக் ஆட்சியாளர்கள் காலத்தில் முல்டானில் கவர்னராக இருந்த கிஸ்ர் கான் இப்ன் மாலிக் சுலைமான் என்பவர் டெல்லியைக் கைப்பற்றி சைய்யத் ஆட்சிவம்சத்தைத் தோற்றுவித்தார். இவர் முல்டானிலிருந்து மல்லு இக்பால் கான் என்பவரால் விரட்டப்பட்டு, மேவாத் பகுதி சென்று தைமூருடன் சேர்ந்து கொண்டார். தைமூர் கிஸ்ர்கானை டெல்லி வைஸ்ராயாக அனுப்ப அங்கிருந்து பலத்தை அதிகரித்துக் கொண்டு, மல்லு இக்பாலையும், தௌலத் கான் லோடியையும் வென்று 1414 ல் டெல்லி திரும்பினார். மாலிக் உஸ் ஷர்க் துர்ஃபாவை வஸீராகவும், சைய்யத் சலீமை சஹாரன்பூர் தலைவராகவும், அப்துல் ரஹ்மானை முல்டான் மற்றும் ஃபதேபூர் தலைவராகவும் நியமித்தார். கடீஹர் மன்னன் ராஜா ஹர்சிங் என்பவன் கிஸ்ர்கானுக்கு எதிராக புரட்சியில் இறங்க தாஜ் உல் முல்க் என்ற தளபதி தலைமையில் படையனுப்பி, அவனைச் சரணடைய வைத்து கப்பம் செலுத்த வைத்தார். கிஸ்ர்கானுக்குப் பிறகு, அவர் மகன் முபாரக்கான் சைய்யத் ஆட்சிவம்சத்தின் ஆட்சியாளரானார். முபாரக்கான் இறப்பிற்குப் பின் உறவினர் முஹம்மது கான் ஆட்சிக்கு வந்தார். இவர் இறக்கும் முன் பதாவூனிலிருந்த தன் மகன் அலாவுத்தீனை அழைத்து ஆட்சிப் பொறுப்பில் வைத்தார். 1451 ல் தானே முன்வந்து டெல்லி ஆட்சியை பஹ்லுல் கான் லோடியிடம் ஒப்படைத்துவிட்டு அலாவுத்தீன் பதாவூன் சென்று அங்கிருந்தபடியே 1478 ல் இறந்து போனார். 37 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருந்த சைய்யத் ஆட்சிவம்சத்தினரின் ஆட்சி சரியான ஆட்சியாளர்கள் இல்லாததால் முடிவுக்கு வந்து டெல்லி சுல்தானேட்டின் அடுத்த ஆட்சிக்கு லோடி வம்சத்தினர் வந்தனர்.

டெல்லி சுல்தானேட் வரலாறு 9

லோடி ஆட்சிவம்ச வரலாறுகூ.செ. செய்யது முஹமது
டெல்லி சுல்தானேட்டின் ஐந்தாவது ஆட்சியாளர்களாக லோடி ஆட்சிவம்சத்தினர் 1451 ல் வந்தார்கள். இவர்களது ஆட்சியை “புஷ்டூன் ஆட்சிவம்சம்” என்றும் அழைப்பர். இவ்வாட்சியைத் தோற்றுவித்தவர் பஹ்லுல்கான் லோடி ஆவார். இவரது பாட்டனார் மாலிக் பஹ்ரம் ஃபிருஸ்ஷா துக்ளக் ஆட்சியில் முல்டானின் கவர்னராக இருந்தார். இவரது தந்தை பெயர் மாலிக் கலா ஆகும். இளமைவயதில் பஹ்லுல்கான் லோடி குதிரை வியாபாரியாக இருந்தார். ஒரு சிறந்த குதிரையை சைய்யத் ஆட்சிவம்ச ஆட்சியாளர் சுல்தான் முஹம்மது ஷாவுக்கு விற்றார். முஹம்மது ஷா பணத்திற்குப்பதில் ஒரு பகுதியை இவருக்கு வழங்கி அதன் அமீராக ஆக்கினார். இவரது சிறிய தகப்பனார் மாலிக் சுல்தான் இறந்து போக அவர் வகித்த சிர்ஹிந்த் பகுதி கவர்னராக லாகூரையும் இணைத்து நிர்வகித்தார். சுல்தான் முஹம்மது ஷாவை மால்வா சுல்தான் எதிர்த்துவர முஹம்மது ஷா பஹ்லுல்கான் லோடியின் உதவியை நாடினார். 20,000 வீரர்களுடன் சென்று அவர் வெற்றி பெறா உதவினார். இதனால் மகிழ்வுற்ற முஹம்மது ஷா பெரிய பகுதியான பஞ்சாபையும் இவர் ஆக்கிரமித்துக் கொள்ள அனுமதித்தார். 1443 மற்றும் 1447 என இரண்டுமுறை டெல்லி சுல்தானேட் மீது படையெடுத்து சென்று வெற்றி பெறாமல் திரும்பினார். பின்னர் சுல்தானாக இருந்த அலாவுத்தீனே 1451 ல் டெல்லியை பஹ்லுல்கான் லோடியிடம் ஒப்படைத்துவிட்டார். சமானாவின் கவர்னராக இருந்த இவரின் சகோதரியின் கணவர் மாலிக் மஹ்மூத் கான் என்னும் குத்புதீன் கான் மூலம் ஹமீத் கானை கைது செய்து சிறையில் அடைத்தார். ஜோன்பூர் ஆட்சிவம்சமாய் இருந்த ஷர்கீயை 1479 ல் கைப்பற்றினார். தனது நிலப்பரப்பை க்வாலியர், ஜோன்பூர் மற்றும் மேற்புர உத்தரபிரதேசம் வரை பரப்பினார். பஹ்லுல்கான் லோடி 1486 ல் தன் மகன் பப்ரக் ஷாவை ஜோன்பூரின் வைஸ்ராயராக நியமித்தார். 1489 ல் இவர் இறந்து போனார். இவரின் அடக்கவிடம் சூஃபி ஞானி நசீருத்தீன் சிராக் இ டெல்லியின் சமாதிக்கருகில் இருக்கிறது. பின் ஆட்சிக்கு நடந்தப் போட்டியில் இவரின் இன்னொரு மகன் சிக்கந்தர் லோடி சுல்தான் ஆனார்.
லோடி ஆட்சிவம்சத்தின் இரண்டாவது சுல்தானாக இருந்த சிக்கந்தர் லோடி சிறந்த பெர்ஷிய கவிஞராவார். இவரது தாயார் சிர்ஹிந்த் பகுதியைச் சேர்ந்த ஒரு பொற்கொல்லரின் மகளான பீபி அம்பா ஆவார். இவர் மூத்த சகோதரர் பர்பக் ஷாவும் ஆட்சிக்கு உரிமை கோரினார். ஆனாலும், தந்தை இவருக்கே முன்னுரிமை அளித்தார். சிக்கந்தர் லோடி ஆட்சி அமைத்த பிறகு, சகோதரர் பர்பக் ஷாவை ஜோன்பூரின் கவர்னராகத் தொடர அனுமதித்தார். தான் ஆட்சிக்கு வர எதிர்ப்பாய் இருந்த மாமன் ஆலம்கானுடன் சுமுகமாய் இருந்தார். தன் ஆட்சியில் வாணிபத்தை செழிக்கச் செய்தார். க்வாலியரிலும், பீகாரிலும் நிலப்பரப்பை விரிவாக்கினார். இன்றைய ஆக்ரா நகரை இவர்தான் உருவாக்கினார். தீவிர இஸ்லாமியரான இவர் இஸ்லாமை குறைத்துக் கூறிய இந்து சாது போதன் என்பவரை கொன்றார். மந்த்ரைய்ல், உத்கிர், நர்வார் ஆகிய பகுதிகளில் பல மஸ்ஜித்களைக் கட்டினார். மதுராவில் நதியில் தலைமுடி சிரைத்து, புனித நீராடுகிறேன் என்று அசுத்தம் செய்தவர்களைத் தடை செய்தார். பெர்ஷிய மொழி பயின்ற இந்துக்களுக்கு அரசுப்பணி வழங்கினார். தன் பெர்ஷிய கவிதைகளை ‘குல்ருகி’ என்னும் சிறப்பு எழுதுகோல் (பேனா) கொண்டு எழுதினார். தற்போது பயன்படுத்தப்படும் கணக்கு (AUDITING) முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். மக்களின் நலனுக்காக விவசாயத்துறையையும், நீதித்துறையையும் சிறப்பாக செயல்படுத்தினார். அரசு நிர்வாகமொழியாக பெர்ஷிய மொழியை ஆக்கினார். 32 மடங்கு அளவுள்ள ‘காஸியே சிகந்தரி’ என்னும் நில அளவுமுறையைக் கொண்டு வந்தார். க்வாலியர் மஹாராஜா மான்சிங்கை எதிர்த்து ஐந்து முறை க்வாலியர் கோட்டையைக் கைப்பற்ற முயன்று தோல்வி அடைந்தார். டெல்லிக்குப் பிறகு, ஆக்ரா நகரத்தை சிறப்பாக முன்னேற்றினார். இவர் காலத்தில் ஆக்ரா ‘ஷிராஸ் ஆஃப் இந்தியா’ என்று புகழப்பட்டது. 11 மாத முற்றுகைக்குப் பிறகு நர்வார் கோட்டையைக் கைப்பற்றினார். 1517 ல் சிக்கந்தர் லோடி இறந்தபிறகு, டெல்லியின் லோடி கார்டன் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டார். இவருக்குப்பிறகு, அவர் மகன் இப்ராஹீம் லோடி டெல்லி சுல்தான் ஆட்சிக்கு வந்தார்.
இப்ராஹீம் லோடி ஆட்சியில் அதிகமான புரட்சிகள் நடந்தன. மேவாரின் மன்னன் ராணா சங்கரம் சிங் மேற்கு உத்தரபிரதேசம் வரை கைப்பற்றி ஆக்ராவை பிடிக்க தயாரானான். கிழக்குப் பகுதியில் வயதான சில தலைவர்களையும், அதிகாரிகளையும் மாற்றி இளைஞர்களை அமர்த்தியதால் அங்கு புரட்சி வெடித்தது. அங்கிருந்த ஆப்கான் தலைவர்கள் பாபரை இவருக்கு எதிராக இந்தியாவுக்குள் அழைத்தார்கள். 1526 ல் இப்ராஹீம் லோடியின் பெரும்படையை பானிபட் போரில் பாபர் வெற்றி கொண்டார். இதனால் கடைசி டெல்லி சுல்தானேட்டின் லோடி ஆட்சிவம்சம் இப்ராஹீம் லோடியினுடன் முடிவடைந்தது. இதன் பிறகு வம்ச ஆட்சி மறைந்து மொகலாய பேரரசு தொடங்கியது. இவரது சமாதி சூஃபி ஞானி பூ அலிஷா கலந்தரின் அடக்கவிடத்திற்கு அருகில் உள்ளது. ஆங்கிலேயர்கள் கிரேட் ட்ரங்க் ரோடு அமைக்கும் போது இவரது சமாதியை மாற்றி அமைத்தார்கள்.