ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

டெல்லி சுல்தானேட் வரலாறு 5

மாலிக் காஃபூர் அடிமை இந்துவாக இருந்து பின்னர் முஸ்லீமாக மார்க்கம் மாறிய ஒரு சிறந்த படைத்தளபதி ஆவார். இவர் ஒரு அரவாணியும் கூட. கம்பட் போரில் அலாவுத்தீன் கில்ஜியின் படைகளால் அடிமையாக கைப்பற்றப்பட்ட மாலிக் காஃபூர் பார்த்தவுடன் ஈர்க்கும் கவர்ச்சி உடையவராக இருப்பாராம். அதனால் அலாவுத்தீனின் பார்வையில் பட்டு அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டார். இவரை ‘ஆயிரம் தினார் காஃபூர்’ என்றும் அழைப்பார்கள். சுல்தான் அலாவுத்தீன் கில்ஜிக்கு இவருக்கும் தகாத உறவு இருந்ததாகவும் செய்தி உண்டு. சுல்தானால் குஜராத் புரட்சியை அடக்க அனுப்பப்பட்டார். பின் கொஞ்சம் கொஞ்சமாக இராணுவத்தில் உயர்வு பெற்று இராணுவ ஜெனெரலாக ‘நாயிப்’ என்னும் உச்ச பதவியைப் பெற்றார். மாலிக் காஃபூர் 1294 ல் மலைப்பிரதேசமான தேவகிரியை ஆண்ட யாதவ மன்னன் ராம்தேவாவை எதிர்த்து போரில் அவன் மகன் சங்கர்தேவாவைக் கொன்றார். பின் தென்பகுதியில் ககாதியா ஆட்சியாளர்களை எதிர்த்து பெரும் செல்வங்களை அள்ளி வந்தார். வாராங்கல்லில் புகழ்பெற்ற ‘கோஹிநூர்’ என்னும் வைரத்தைக் கைப்பற்றினார். போர்களின் போது அடிபணிய மறுத்த இந்து மன்னர்களின் அரண்மனை, பொக்கிஷங்கள், கோவில்கள் ஆகியவற்றை துவம்சம் செய்தார். 1305 ல் மாலிக் காஃபூர் அம்ரோஹா போரில் மங்கோலியர்களை வெற்றி கொண்டார். 1309 மற்றும் 1311 ல் இரண்டுமுறை தென் இந்தியாவின் மீது படையெடுத்தார். முதல்முறை வாராங்கல் மீதும், இரண்டாவது முறை த்வார் சமுத்ரா, மலபார் மற்றும் மதுரை மீதும் படையெடுத்தார். மாலிக் காஃபூர் இறுதியாக 1318 ல் கடைசி யாதவ மன்னன் ராஜா ஹரபல்லால் கொல்லப்பட்டார்.
1296 ல் தன் மாமனார் ஜலாலுத்தீன் கில்ஜியைக் கொன்று, துருக்கிய தலைவர்களின் ஆதரவு பெற்று அலாவுத்தீன் கில்ஜி டெல்லியின் ஆட்சியில் அமர்ந்தார். அதற்கு உறுதுணையாய் இருந்த முஹம்மது ஷாவுக்கு தகுந்த அதிகாரங்களை அளித்தார். அந்தப்புரத்தில் நடமாடும் அளவுக்கு அனுமதிக்கப் பட்டிருந்த முஹம்மது ஷா, சிம்னா என்ற அந்தப்புரப் பெண்ணுடன் சேர்ந்து அலாவுத்தீன் கில்ஜியைக் கொன்று அவர்கள் சுல்தானும், ராணியுமாகத் திட்டமிட்டிருந்தார்களாம். இதை அலாவுத்தீன் கில்ஜி அறிந்து கொண்டார் என்று தெரிந்தவுடன் முஹம்மது ஷா தன் சகோதரருடன் டெல்லியை விட்டுத் தப்பி ஓடினார். ரனதம்போர் என்ற பகுதியை ஆண்ட ஹமிர்தேவ் என்ற ராஜபுத்திர மன்னனிடம் முஹம்மது ஷா அடைக்கலம் புகுந்தார். முஹம்மது ஷாவைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி அலாவுத்தீன் கில்ஜி ஹமிர்தேவிடம் வேண்ட, அவர் மறுத்த பின் ரனதம்பூர் மீது படையெடுத்து அதை வென்றார். அடுத்து 1303 ல் மேவாரை வென்றார். இந்த மேவார் போரில் சம்பந்தப்பட்ட ராஜா ரத்தன் சிங், சித்தூர் ராணி பத்மினி ஆகியோரைப் பற்றி பலகதைகளையும், திரைப்படங்கள் கூட எடுத்து சித்தூர் ராணி பத்மினியை கற்புக்கரசியாகவும், வீரமுள்ளவளாகவும், அலாவுத்தீன் கில்ஜியை காமுகனாகவும் காட்டினார்கள். அவைகள் எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஏனென்றால் இவர் வரிசையாக வடஇந்தியாவை ஒன்றுபடுத்த எடுத்த இராணுவ நடவடிக்கைகளில் இந்து மன்னர்களே இருந்தார்கள். அதனால் இக்கதைகளை அலாவுத்தீன் கில்ஜி மீது அவதூறு பரப்ப கிளப்பியதாக இருக்கலாம் என்றும் ஒரு கூற்று உண்டு. அலாவுத்தீன் கில்ஜி வரிசையாக ரனதம்போர், குஜராத், மேவார் ஆகிய பகுதிகளை வென்றதால் மற்ற வட இந்திய இந்து மன்னர்கள் பயத்தில் இருந்தார்கள். அடுத்து அலாவுத்தீன் கில்ஜி மால்வாவை வெல்லத் திட்டமிட்டார். மால்வாவின் மன்னன் மஹ்லக்தேவ் 20,000 குதிரைப்படைகளையும், 90,000 காலாட்படைகளையும் தயார் செய்து ஹர்மந்தா கோகா என்ற தளபதியின் கீழ் அலாவுத்தீன் கில்ஜியை எதிர்த்தான். அலாவுத்தீன் கில்ஜி, அய்ன் உல் முல்க் மூல்தானி என்ற தளபதியின் கீழ் 160,000 வீரர்களுடன் சென்று போரிட்டு பெரும் ரத்த வெள்ளத்தில் ஹர்மந்த கோகாவைக் கொன்று, மால்வாவுடன் சேர்த்து மாண்டு, தாரா, சந்தேரியையும் கைப்பற்றினார். பின் தளபதி அய்ன் உல் முல்க் முல்தானியை மால்வாவின் கவர்னராக ஆக்கினார். 1308 ல் மார்வாரின் மன்னன் சதல்தேவை எதிர்த்து சிவானா கோட்டையையும், மார்வாரையும் வெற்றி கொண்டார். சதல்தேவைச் சிறைப்பிடித்து தூக்கிலிட்டார். பின் ஜலோரில் போரிட்டபோது கன்ஹத்தேவ் சொங்காராவிடம் தோல்வி அடைந்தார். இரண்டாம் முறை மாலிக் கமாலுத்தீன் என்ற தளபதியின் கீழ் படையனுப்பி ஜலோரை வென்றார்.
அலாவுத்தீன் கில்ஜி, உலுக்கான், நுஸ்ரத் கான் ஆகிய இரண்டு தளபதிகளை அனுப்பி குஜராத்தைக் கைப்பற்றச் செய்தார். அக்காலகட்டத்தில் தான் அடிமையாக இருந்த மாலிக் காஃபூர் 1000 தினார்களுக்கு வாங்கப்பட்டார். அலாவுத்தீன் கில்ஜி மங்கோலியர்களை வெற்றிகரமாக இந்தியாவில் நுழையவிடாமல் தடுத்தார்.  இந்திய எல்லைப்புறங்களில் பலமான கோட்டைகளைக் கட்டி பாதுகாப்புப் படைகளை அமைத்தார். மங்கோலியர்களை 1298 ல் ஜலந்தர், 1299 ல் கிலி, 1305 ல் அம்ரோஹா, 1306 ல் ராவி ஆகிய போர்களில் வென்றார். பல படையெடுப்புகளாலும், மங்கோலியர்களின் அடிக்கடி தாக்குதல்களாலும் பெரும்படையை வைத்துக்கொண்டு, ஊதியம் கொடுப்பதில் அலாவுத்தீன் கில்ஜி மிகவும் சிரமப்பட்டார். இதனால் வாணிபத்தில் கவனம் செலுத்தி அதைச் சீர்படுத்தினார். டெல்லியில் மூன்றுவித சந்தைகளை ஏற்படுத்தினார். முதலாவது தானியங்களுக்கென்று ஒன்றும், அடுத்து மளிகைச் சாமான்களுக்கென்று ஒன்றும், மூன்றாவதாக கால்நடைகளுக்கென்று ஒன்றும் அமைத்தார். உற்பத்தியாகும் அனைத்துப் பொருட்களையும் அரசே வாங்கி தனது கிடங்குகளில் வைத்துக் கொண்டு விலையை நிர்ணயம் செய்தது. சில சமயங்களில் தானே சென்று வியாபாரிகள் அதிக விலைக்கு விற்கிறார்களா என்று கண்காணிப்பார். அதற்கென அதிகாரிகளையும் நியமித்தார். இதனால் அரசுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல பலன் கிடைத்தது. அப்போதைய இம்முறை பலருக்கும் ஆச்சரியம் அளித்தது. 1316 ல் அலாவுத்தீன் கில்ஜி காலமானார். இவரது அடக்கவிடம் குதுப்மினார் வளாகத்தில் உள்ளது. இவரது மறைவிற்குப்பின் ஆட்சியைப் பிடிக்க மாலிக் காஃபூர் உட்பட பல கில்ஜி குடும்பத்தினர் மாறி மாறி சில ஆண்டுகள் முயற்சித்தார்கள். ஆறுவயதான கில்ஜி குடும்பத்தினர் ஒருவரை சுல்தானாக்கி அவர் சகோதரர் குத்புத்தீன் முபாரக் ஷா கில்ஜி என்பவரை மேலிருந்து ஆள நியமித்தனர். இவர் அலாவுத்தீன் கில்ஜியின் மகனாவார். தந்தையால் விதிக்கப்பட்டிருந்த அனைத்து வரிகளையும் ரத்து செய்து, கைதிகளை விடுதலை செய்து 18 வயதில் ஆட்சியில் அமர்ந்தார். நான்கு ஆண்டுகள் ஆண்ட பின் 1320 ல் குஸ்ராவ் கான் என்ற இராணுவ அதிகாரியால் படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்தார். பின் குஸ்ராவ்கானை நீக்க காஸிமாலிக் என்பவர் மூலம் பஞ்சாபிலிருந்து புரட்சி செய்தார். குஸ்ராவ்கான் கொல்லப்பட சுல்தான் கியாசுத்தீன் துக்ளக் என்பவர் ஆட்சி அமைத்து துக்ளக் ஆட்சிவம்சத்தை துவக்கினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக