ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

டெல்லி சுல்தானேட் வரலாறு 8

சைய்யத் ஆட்சிவம்ச வரலாறு

குரித் ஆட்சிவம்சம், கில்ஜி ஆட்சிவம்சம், துக்ளக் ஆட்சிவம்சம் ஆகிய மூன்று ஆட்சிவம்சத்திற்கு பிறகு, டெல்லி சுல்தானேட்டின் நான்காவது ஆட்சிவம்சமாக சைய்யத் ஆட்சிவம்சத்தினர்கள் தோன்றினார்கள். இவர்கள் தங்களை நபி (ﷺ )களாரின் வழிமுறையில் வந்தவர்கள் என்று கூறினார்கள். 1396 ல் தைமூர் டெல்லியின் மீது படையெடுத்த போது ஸ்திரமில்லாத சுல்தானேட்டின் ஆட்சி அதிகாரத்தை சைய்யத் ஆட்சிவம்சத்தினர் கைப்பற்றினார்கள். முந்தைய துக்ளக் ஆட்சியாளர்கள் காலத்தில் முல்டானில் கவர்னராக இருந்த கிஸ்ர் கான் இப்ன் மாலிக் சுலைமான் என்பவர் டெல்லியைக் கைப்பற்றி சைய்யத் ஆட்சிவம்சத்தைத் தோற்றுவித்தார். இவர் முல்டானிலிருந்து மல்லு இக்பால் கான் என்பவரால் விரட்டப்பட்டு, மேவாத் பகுதி சென்று தைமூருடன் சேர்ந்து கொண்டார். தைமூர் கிஸ்ர்கானை டெல்லி வைஸ்ராயாக அனுப்ப அங்கிருந்து பலத்தை அதிகரித்துக் கொண்டு, மல்லு இக்பாலையும், தௌலத் கான் லோடியையும் வென்று 1414 ல் டெல்லி திரும்பினார். மாலிக் உஸ் ஷர்க் துர்ஃபாவை வஸீராகவும், சைய்யத் சலீமை சஹாரன்பூர் தலைவராகவும், அப்துல் ரஹ்மானை முல்டான் மற்றும் ஃபதேபூர் தலைவராகவும் நியமித்தார். கடீஹர் மன்னன் ராஜா ஹர்சிங் என்பவன் கிஸ்ர்கானுக்கு எதிராக புரட்சியில் இறங்க தாஜ் உல் முல்க் என்ற தளபதி தலைமையில் படையனுப்பி, அவனைச் சரணடைய வைத்து கப்பம் செலுத்த வைத்தார். கிஸ்ர்கானுக்குப் பிறகு, அவர் மகன் முபாரக்கான் சைய்யத் ஆட்சிவம்சத்தின் ஆட்சியாளரானார். முபாரக்கான் இறப்பிற்குப் பின் உறவினர் முஹம்மது கான் ஆட்சிக்கு வந்தார். இவர் இறக்கும் முன் பதாவூனிலிருந்த தன் மகன் அலாவுத்தீனை அழைத்து ஆட்சிப் பொறுப்பில் வைத்தார். 1451 ல் தானே முன்வந்து டெல்லி ஆட்சியை பஹ்லுல் கான் லோடியிடம் ஒப்படைத்துவிட்டு அலாவுத்தீன் பதாவூன் சென்று அங்கிருந்தபடியே 1478 ல் இறந்து போனார். 37 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருந்த சைய்யத் ஆட்சிவம்சத்தினரின் ஆட்சி சரியான ஆட்சியாளர்கள் இல்லாததால் முடிவுக்கு வந்து டெல்லி சுல்தானேட்டின் அடுத்த ஆட்சிக்கு லோடி வம்சத்தினர் வந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக