செவ்வாய், 30 டிசம்பர், 2014

ஓட்டோமான்கள் வரலாறு 6


1543 ல் நைஸ் மற்றும் 1553 ல் கோர்ஸிகா போர்கள் பிரான்சின் மன்னர் முதலாம் ஃப்ரான்சிஸ் மற்றும் சுலைமான் கூட்டுடன், ஓட்டோமான் தளபதிகள் பார்பரோஸ் ஸா ஹைரெத்தின் பாஷா மற்றும் துர்குத் ரெய்ஸ் தலைமையில் நடந்தது. 1543 ல் ஓட்டோமான்கள் எஸ்டெர்கோம் போரில் ஈடுபட்டபோது ஃப்ரான்ஸ் பீரங்கிப் படையில் ஓட்டோமான்களுக்கு உதவியது. தென், மத்திய ஐரோப்பாவின் பகுதியில் ஓட்டோமான் பேரரசும், ஃப்ரான்சும் இணைந்தே போரிட்டன. இது அவர்களிடையே இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் பெரிதும் பயன்பட்டது. ஓட்டோமான் பேரரசு வரிசெலுத்தாமல் ஃப்ரான்சின் பொருட்களை பேரரசின் பகுதிகளில் வாணிபம் செய்ய அனுமதித்தது. ஓட்டோமான் பேரரசு ஃப்ரான்ஸ் மற்றும் டச்சுடன் இராணுவரீதியாக இணைந்து ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்ட்ரியா ஹாப்ஸ்பர்குக்கு எதிராக போரிட்டது.
சரித்திர ஆய்வாளர்களின் கருத்துப்படி இரண்டாம்செலிம் ஆட்சியில் ஆர்வமில்லாதவராகவும், மது மற்றும் பெண் உறவுகளில் ஆர்வமாய் இருந்ததாகவும் கூறுகிறார்கள். இஸ்லாமிய சரித்திரமும் இதையே தான் வெளிப்படுத்துகிறது. அவர் மதுப் பழக்கம் உள்ளவராகவும், போர்களின் போதும், அரசு நிர்வாகத்திலும் முக்கிய முடிவுகள் எடுக்கும் ஆற்றல் இல்லாதவராகவும் இருந்தார். இதற்கு அடிப்படைக் காரணம் சுல்தான் முதலாம் சுலைமானுக்கு முஸ்தபா, பயேஸித் மற்றும் செலிம் என்று மூன்று மகன்கள் இருந்தார்கள். சுல்தான் பதவிக்கு வருபவர்கள் ஆரம்பத்தி லிருந்து இராணுவம் மற்றும் அரசியல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பயிற்சியை முஸ்தபாவும், பயேஸித்தும் முறையே பெற்றிருந்தார்கள். ஆனால், அவர்கள் போரில் இறந்து போனார்கள். செலிம் டாப்காபி என்ற சுல்தானின் அரண்மனையில் ஆடம்பரத்திலும், பொழுதுபோக்கிலேயும் காலத்தைக் கழித்தார். இராணுவம், அரசியல் எதுவும் தெரியாதவர். சுலைமானே இவர் பதவிக்கு வருவதை விரும்ப வில்லை. தன் கடைசி காலத்தில் முடியாத தளர்ந்த நிலையில் சுலைமான் அவர்கள் ஆட்சிப்பொறுப்பை மூத்த மந்திரியிடம் ஒப்படைத்திருந்தார். காலத்தின் கட்டாயம் சுலைமானுக்குப் பிறகு, இரண்டாம் செலிம் பதவிக்கு வரவேண்டியதாயிற்று. இவர் எட்டாண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தார்.
தெற்கு ஐரோப்பாவில் ஸ்பெயினின் இரண்டாம் பிலிப் என்பவர் கத்தோலிக்க கிறிஸ்தவ சக்திகளின் கூட்டுடன் 1571 ல் லிபாண்டோ போரில் ஓட்டோமான் கடற்படையைத் தோற்கடித்து, வெல்ல முடியாதவர்கள் என்று இருந்த ஓட்டோமான்களை வென்றனர். நவீனமயமாகிக் கொண்டிருந்த ஐரோப்பிய இராணுவத்துடன் ஓட்டோமான் பேரரசு போட்டிபோட வேண்டிய நிலைக்கு ஆளாகியது. 1593 லிருந்து 1606 வரை ஆஸ்ட்ரியாவுடன் நடந்த நீண்ட போரானது வெடிமருந்துகளு டன் கூடிய மிகப்பெரிய படையின் அவசியத்தை பேரரசுக்கு உணர்த்தியது. ஐரோப்பியர்கள் பீரங்கிப்படையையும், வெடிமருந்து கையாளும் முறையையும் நவீனப்படுத்தி இருந்தார்கள். ஓட்டோமான்களின் தற்போதைய பொருளாதாரநிலையில் இராணுவத்தின் தரத்தைஉயர்த்த முடியவில்லை.
பதினேழாம் நூற்றாண்டில் பேரரசுக்கு நாட்டில் உள்ளும் புறமும் பல மாற்றங்க ளைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கிடையில் 1648 லிருந்து 1656 வரை சிறு வயது சுல்தான்களின் சார்பில் அவர்களின் தாய்மார்களின் தலையீடு அரசியலில் நுழைந்தது. வெனிஷியன் பைலோவில் முதல் வலீத் சுல்தானாக இருந்த நூர்பானு என்பவருக்குப் பிறகு, ஹூர்ரும் சுல்தான் என்பவர் ஆட்சி செய்தார். இந்த பெண்களின் ஆட்சியில் கூசெம் சுல்தானும், அவர் மருமகள் துர்ஹன் ஹதிஸும் பெய ர்பெற்றவர்களாக இருந்தார்கள். கூசெம் சுல்தான் அரசியல் எதிரிகளால் கொலை செய்யப்பட்டார். பல ஒட்டோமான் பகுதிகள் சுல்தானின் கட்டுப் பாட்டிலிருந்து மந்திரிகள், நீதி மன்றங்கள், திவான்களின் அதிகாரத்திற்கு மாறின. சுல்தான் பதவிக்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே தகுதியானவர்கள். இதனால் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு அடுத்தவரை கொன்று விடுவார்கள் அல்லது போராளி குழுக்கள் வாரிசுகளைக் கொன்றுவிட்டு தாங்கள் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்வார்கள். சகோதரர்கள் அரண்மனைக்குள்ளேயே உயிரைக் காத்துக் கொள்ள அடைபட்டு வாழ்வார்கள். இதனால், ஓட்டோமான் பேரரசு உறவுக்கொலைகளுக்கு கடுமையான சட்டம் கொண்டுவந்து தடை செய்தது. இது ஜானிஸ்ஸரீஸ் இராணுவப்பிரிவுக்கு வாய்ப்பாக அமைந்து ஆட்சி அவர்கள் கையில் மாறியது. சுல்தான் சுலைமானுக்குப் பிறகு வந்த எந்த சுல்தான்க ளும் பலமில்லாதவர்களாக இருந்தார்கள். மேலும், ஜானிஸ்ஸரி என்ற பேரரசின் இராணுவப்பிரிவும் பல காரணங்களுக்காக அரசுடன் ஒத்துழைக்காமல் கலகத் தில் இறங்கியது. இந்த ஜானிஸ்ஸரிகள் என்ற சுல்தானின் முன்னணிப்படை போர்புரியும் அழகு அக்காலத்தில் மிகவும் புகழப்பட்டதும், மற்ற நாட்டவர்களால் பார்த்து கையாளப்பட்டதும் ஆகும். அதாவது முன்னணியில் நான்கு அல்லது ஐந்து வரிசை வீரர்கள் மட்டுமே எதிரிக்குத் தென்படுவார்கள். மீதி பெருவாரியான வீரர்கள் அந்த வரிசைகளுக்கு பின்னால் மறைந்து உட்கார்ந்திருப்பார்கள். போர் தொடங்கியவுடன் திடுமென்று எழுந்து மாபெரும் கடல் அலைபோல் எதிரி வீரர்கள் மீது பாய்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் பல ஆயிரம் பேரைக் கொன்று விடுவார்கள். ஜானிஸ்ஸரிகள் பதினேழாம் நூற்றாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக நிர்வாகத்திலும் நுழைந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு தேவைப்பட்டவர்களு க்கு சலுகைகளைப் பெற்றுத்தந்தார்கள். ஆரம்பத்தில் இருந்த பேரரசின் தனித்தன்மை மறைய ஆரம்பித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக