புதன், 29 ஜூலை, 2015

ஈராக் வரலாறு 4

1963 ல் ஈராக் திரும்பிய சதாம் ஹுசெய்ன் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அவரை அஹ்மத் ஹசன் அல் பக்ர் துணை செய்லாளராக நியமித்தார். 1967 ல் சதாம் ஹுசெய்ன் சிறையிலிருந்து தப்பித்து பாத் கட்சிக்கு புத்துணர்வையும், திறமையான செயல்பாடுகளையும் ஒரு செயலாளராக சிறப்பாக அளித்தார். பாத் கட்சியின் ஸ்தாபகர் மிசெல் அஃப்லக்கால் மாகாண தலைவரானார். 1968 ல் அஹ்மது ஹசன் அல் பக்ர் தலைமையில் இரத்தமில்லாமல் அப்துல் ரஹ்மான் ஆரிஃபை ஆட்சியை விட்டுத் தூக்கிவிட்டு, அல் பக்ர் ஈராக்கின் அதிபராகவும், சதாம் ஹுசெய்ன் ஈராக்கின் துணை அதிபராகவும், பாத் கட்சியின் புரட்சிக்குழுக்கு தளபதியாகவும் ஆனார்கள். அப்துல் ரஹ்மான் ஆரீஃப் இஸ்தான்புல்லுக்கு நாடு கடத்தப்பட்டார். ஒரு துணை அதிபராக இருந்து புதிய அரசை வளப்படுத்தி, பாத் கட்சியையும் வளர்த்து, நாட்டின் விவகாரங்களில் அதிக அக்கரை கொண்டு தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டார். உண்மையான உழைப்பைக் கொடுத்து ஈராக்கின் வளர்ச்சிக்கு பாடுபட்டார். எண்ணெய் வளம் இருந்த காரணத்தால் உலக அளவில் ஈராக்கை முன்னிலைப் படுத்தினார்.
சதாம் ஹுசெய்ன் ஆட்சிக்கு முன்பு ஈராக் பலவழிகளில் வேறுபாடு கண்டிருந்தது. சுன்னிப்பிரிவு-ஷியாபிரிவு, அரபுகள்-குர்துக்கள், பழங்குயின தலைவர்கள்-நவீன வாணிப செல்வந்தர்கள், பழங்குடியினர்-பொதுமக்கள் என்று அனைத்திலும் வேறுபட்டிருந்தார்கள். ஈராக்குக்கு அப்போதைக்கு தேவையான நிலையான ஆட்சியை உறுதி செய்து அனைவரின் தேவைகளையும் அவரவர்கேற்ப பூர்த்தி செய்து அரவணைத்துச் சென்றார். நாட்டையும் முன்னேற்றி மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் முன்னேற்றினார். நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி உள்நாட்டு புரட்சிகள் எழாத வண்ணம் வைத்துக் கொண்டார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது, கருத்து சொன்ன சதாம் ஹுசெய்ன், நான் குர்துக்களை கொன்றதற்காக வருத்தப்படவில்லை. ஒரு நாட்டின் மன்னரைக் கொல்ல முயல்பவர்களுக்கு என்ன தண்டனையோ அதைத்தான் நான் செய்தேன். என்னளவில் ஒரு தலைவன் இருந்தால் ஆட்சிக்கு வந்தவுடனே, அத்தனை குர்துக்களையும் கொன்று குவித்திருப்பான். ஆனால், நான் மற்ற எவருமே செய்ய முடியாத உதவிகளை ஒரு எதிர்தரப்பு ஆட்சியாளனாக இருந்து குர்துக்களுக்குச் செய்தேன்.இன்று எனக்கெதிராக் சாட்சி சொன்ன ஒரு குர்து இனத்தவன் கூட அதை எண்ணிப்பார்க்கவில்லை’ என்றார். உலக எண்ணெய் உற்பத்தியில் ஏறக்குறைய 40% சதவீதம் ஈராக்கிலிருந்து தான் அப்போது கிடைத்தது. 1973 ல் உலகெங்கிலும் எரிவாயு உற்பத்தியில் குழப்பம் ஏற்பட்டதால், கச்சா எண்ணெயின் விலை பலமடங்கு உயர்ந்து ஈராக்குக்கு நல்ல வருவாயைத் தந்தது. மற்ற இஸ்லாமிய ஆட்சியாளர்களின் சொத்துக்கள் 20, 22 பில்லியன் டாலர்களிலிருக்க சதாம் ஹுசெய்னின் சொத்துக்கள் அவர் நாட்டு எண்ணெய் வளத்திற்க் 
மற்ற இஸ்லாமிய ஆட்சியாளர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் 20, 22 பில்லியன் டாலர்களில் இருக்க சதாம் ஹுசெய்னின் ஈராக்கின் எண்ணெய் வளத்திற்கு அவரின் சொத்து ஐந்து மடங்கு அடுத்தவர்களை விட இருக்க வேண்டும். ஆனால் 2000 ல் ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் இவருக்கு 5 பில்லியன் டாலர்கள் சொத்து இருந்ததாகக் கூறியுள்ளது. அதிகப்படியான எண்ணெய் வருமானத்தை நாட்டில் ஒருவர் கூட கல்வியறிவு இல்லாதவராக இருக்கக்கூடாது என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார். அதுவும் சர்வதேச அளவிலான கல்வியைக் கொடுத்தார். இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு பல சலுகைகளை அளித்தார். விவசாயிகளுக்கு கடனுதவிகள் கொடுத்தார். மத்திய கிழக்கு நாடுகளிலேயே உயர்தர மருத்துவத்தை இலவசமாக நாட்டுமக்களுக்கு கொடுத்தவர் இவர்தான். இதற்காக யுனெஸ்கோ அமைப்பு கல்வி, விஞ்ஞான, கலாச்சார விருதை சதாம் ஹுசெய்னுக்கு கொடுத்து கௌரவித்தது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது, அன்று அம்மக்கள் இவரின் சிலையை மட்டும் தள்ளவில்லை. உலகின் சிறந்த அதிபர் அளித்த பல சலுகைகளையும், நல்லாட்சியையும் சேர்ந்தே தள்ளினார்கள். அதை அனுபவித்த தலைமுறையினர் இனி எப்பாடுபட்டாலும் அமெரிக்காவாலும், தங்கள் கரங்களாலும் ஏற்படுத்திக் கொண்ட சேதாரத்திலிருந்து அவைகளைப் பெறமுடியாது. காரணம் ஈராக் போன்ற ஒரு நாட்டை சதாம் ஹுசெய்ன் என்பவரால் மட்டுமே அரவணைத்து வாழமுடியும். அந்த அரவணைப்பு என்பது ஆயிரம் இழைகளில் ஒரு இழை, அந்த இழை எல்லார் கைகளுக்கும் வசப்படாது. அது சதாம் ஹுசெய்னுக்கு அழகாக வசப்பட்டது. இதற்கு இக்கட்டுரை எழுதும் நானே சாட்சியாகவும் இருக்கிறேன். நான் துபாயிலிருந்த காலங்களில் சில காலம் அல் ஷாப் என்னும் பகுதியில் இருந்தேன். அதன் கீழே குடியிருந்த ஒரு ஈராக்கியர் (2003 என்று நினைக்கிறேன்) என்னிடம் சொல்லி இருக்கிறார். எங்கள் தேசத்தை சதாம் ஹுசெய்ன் தவிர எந்த கொம்பனாலும் ஆளமுடியாது என்று.
இவரைக் கொல்வதற்கு அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்த மற்ற நாட்டு அதிபர்கள் போல் பாட்டன், தந்தை, மகன் என்ற அடிச்சுவட்டில் ஆட்சிக்கு வந்தவரல்ல அதிபர் சதாம் ஹுசெய்ன். அதிகப்படியாக வந்த எண்ணெய் வளத்தின் மூலம் பல சாலைகள், புதிய கட்டிடங்கள், சுரங்கங்கள், தொழிற்சாலைகளை அமைத்தார். மின்சாரம் இல்லாத ஊரே ஈராக்கில் இல்லாமல் செய்தார். 1972 ல் 15 ஆண்டாக இருந்த சோவியத் யூனியன் ஒப்பந்தத்தை புதுப்பித்தார். உலகில் அடுத்த நாடு வளம் பெறுவதையோ, சோவியத் யூனியனுடன் நட்பு கொள்வதையோ விரும்பாத அமெரிக்கா வழக்கம் போல ஈரானின் ஷா முஹம்மது ரேஸா பஹ்லவியை CIA  மூலம் தொடர்பு கொண்டு, ஈராக் குர்திஷ்களுக்கு ஈரான் மூலம் ஆயுதங்கள் வழங்கி இரண்டாவது குர்திஷ் ஈராக் போரைத் துவங்கியது. சதாம் ஹுசெய்ன் விவசாயிகளுக்கு இலவச நிலங்களைப் பகிர்ந்தளித்து பெரிய அளவில் விவசாயத்தை நாட்டில் வளர்த்தார். ஈராக் படுவேகமாக வளர்ச்சி அடைந்து பல அரபு நாடுகளிலிருந்தும், யூகோஸ்லேவியாவிலிருந்தும் பணியாட்களை வரவழைத்தார்கள். அதிபர் அல் பக்ர் வயது மூப்பின் காரணமாக அவ்வளவாக ஆட்சியில் ஆர்வம் காட்டாதபோது சதாம் ஹுசெய்ன் தான் முன்னிலையில் இருந்தார். இடையில் 1979 ல் அல் பக்ர், சிரியாவுடன் இணைந்து செயல்பட சிரிய அதிபர் ஹஃபீஸ் அல் அஸ்ஸாதுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இது சுதந்திரமாக பல நல்ல திட்டங்களுடன் செயல்பட்டுக் கொண்டிருந்த சதாம் ஹுசெய்னுக்கு எதற்கெடுத்தாலும் சிரியாவையும் கலந்து கொள்ள வேண்டுமென்பது ஒரு இடையூறாக இருந்தது. அவர் அல் பக்ரை ராஜினாமா செய்யக் கேட்டுக் கொண்டார். 1979 ல் அதிபரான சதாம் ஹுசெய்ன் முதலில் பாத் கட்சியின் கூட்டத்தைக் கூட்டி, அதை வீடியோபதிவு எடுக்கச் செய்தார். பாத் கட்சியில் சதிகாரர்கள் (சிரியாவுடன் ஒப்பந்தம் போட ஆதரவாய் இருந்தவர்கள்) என்று இருந்தவர்களை முஹ்யீ அப்தெல் ஹுஸ்ஸெய்னை விட்டு ஒவ்வொரு பெயராகப் படிக்கச் சொல்லி, அவர்களை அவையைவிட்டு வெளியேற்றி கைது செய்யச் சொன்னார். அதில் மிகவும் எதிர்ப்பாக இருந்த 68 பேரில் 22 கட்சி உறுப்பினர்களை தூக்கிலிட்டார். எஞ்சிய உயர்பதவியில் இருந்த பாத் கட்சி உறுப்பினர்கள் சதாம் ஹுசெய்னை எதிர்த்து பிரச்சாரம் செய்தார்கள். அவர்களையும் சதாம் ஹுசெய்ன் தூக்கிலிட்டார். ஈராக் சமூகம் மதம், மொழி, இனத்தின் அடிப்படையில் பிரிந்திருந்தது. குர்திஷ்கள் வட ஈராக்கில் சுதந்திரமாக செயல்பட பிரிக்கச் சொன்னார்கள். ஒரு பிரிவினர் அருகாமை ஈரானின் ஷியா பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். சதாம் ஹுசெய்ன் நாட்டின் பலன்கள் அனைத்து தரப்பினருக்கும் போய்ச் சேரவேண்டும் என்பதற்காக அனைவரையும் பாத் கட்சியில் சேரச்சொன்னார். சதாம் ஹுசெய்னைப் பொருத்தவரை தன் எண்ணத்திலுள்ள ஈராக்கின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள புற்களைத்தான் அழித்ததாகச் சொல்லப்பட்டது. எதிர்ப்பாளர்கள் அதை அடக்குமுறை என்றார்கள்.
1974 ல் தாஹா யாசீன் ரமதான் என்ற உறவினர் தலைமையில் நடமாடும் மக்கள் இராணுவம் ஒன்றை அமைத்தார். அவர்கள் மக்களிடையே ஊடூருவி புரட்சியில் ஈடுபட இருப்பவர்களை துல்லியமாகக் கண்டுபிடித்து சிறையில் அடைத்தார்கள். உள்நாட்டுப் பாதுகாப்பை சிறப்பாக கவனித்துக் கொண்டார்கள். அடுத்து ஒன்றுவிட்ட சகோதரர் பர்ஸான் இப்ராஹீம் அல் திக்ரிதி என்பவர் தலைமையில் பொது புலனாய்வு துறை ஒன்றையும் அமைத்தார். இது ஈராக்கின் சார்பாக வெளிநாடுகளிலும் செயல்பட்டதாகக் கூறினார்கள். இவர் தன் புகழ் பாடப்படுவதற்காக நாடெங்கிலும் சுவரொட்டிகள், புகைப்படங்கள், சிலைகள் என்று வடித்துக் கொண்டார் என்றும் குறை கூறினார்கள். இவரது உருவம் அரசுக் கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், கடைகள், நாணயங்களின் மீது அச்சடிக்கப்பட்டதாகக் கூறினார்கள். (ஏன் மற்ற இஸ்லாமிய நாடுகளில் இல்லையா என்ன?) பெரும்பாலும் சதாம் தான் சிறுவயதிலிருந்து அணியும் பிதோயின் பழங்குடியின உடையிலேயே இருப்பார். சில சமயங்களில் குர்திஷ் உடையும், சில சமயம் தலையிலிருந்து கால்வரை அரபுகள் உடையும் அணிந்திருப்பார். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது மேற்கத்திய உடையில் செல்வார். 1995, 2002 ல் நடந்த தேர்தல்களில் 8.4 மில்லியன் ஓட்டுகளில் வெறும் 3,052 ஓட்டுகள் மட்டும் எதிர்த்து வாக்கு பெற்றார். 99.96% வாக்குகள் ஆதரவாகப் பெற்றார். இஸ்ரேல் உடனான அமைதி ஒப்பந்தத்தின் போது எகிப்திய அதிபர் அன்வர் சதாதுடன் கருத்துவேறுபாடு கொண்டு ஈராக் உறவை முறித்துக் கொண்டது. இருநாட்டுக்கும் தூதரக உறவு இல்லாத நிலையிலும், எகிப்து ஈரானுடனான போரின் போது ஈராக்கை ஆதரித்தது. வைரம் பதித்த ‘ரோலக்ஸ்’ நிறுவன கைக்கடிகாரத்தை எப்போதும் அணிந்திருப்பார். ஸாம்பியா நாட்டின் முதல் அதிபரும், தனது நண்பருமான கென்னெத் டேவிட் கௌண்டாவுக்கு போயிங் 747 விமானம் முழுக்க விலை உயர்ந்த தரைவிரிப்புகளும், தொலைக்காட்சி பெட்டிகளும், தங்க நகைகளும் மற்றும் பல பொருட்களும் அனுப்பினார். கௌண்டாவும் தான் பொழுதுபோக்காகச் செய்யும் மாந்திரீக விளையாட்டுப் பொருள்களை சதாம் ஹுசெய்னுக்கு அனுப்பினார். இவர் ஒரே ஒருமுறைதான் மேற்கத்திய நாட்டுக்கு சென்றார். பெரும்பாலும் ஈராக் சார்பாக ஈராக்கின் வெளியுறவு மந்திரி தாரிக் அஜீஸ் தான் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தார். 1975 ல் ஃப்ரான்ஸ் பிரதம மந்திரி ஜாக்வெஸ் சிராக்கைச் சந்தித்தார். சில ஈராக் தலைவர்களும், லெபனானின் ஆயுத வியாபாரி சர்கிஸ் சோகானாலியனும் சதாம் ஹுசெய்ன் சிராகின் கட்சிக்கு நிதியுதவி செய்தார் என்றார்கள். சதாம் ஹுசெய்னின் ஆட்சியின் போது ஈராக்குக்கு பெருமளவு ஆயுதம் விற்பனை செய்தது ஃப்ரான்ஸ் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக