வியாழன், 30 ஜூலை, 2015

கதார் வரலாறு 3

1867 ல் ஜாஸ்ஸிம் பின் முஹம்மது பஹ்ரைனால் கைது செய்யப்பட்டார். கதாரின் பிதோயின் பழங்குடியினர் ஒருவர் அத்துமீறி பஹ்ரைன் பகுதியில் நுழைந்ததால் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிப்பது சம்பந்தமாக பேசச்சென்ற ஜாஸ்ஸிம் பின் முஹம்மதுவை பஹ்ரைன் ஆட்சியாளர் ஃபைசல் பின் துர்கி கைது செய்தார். இதனால் கதாருக்கும், பஹ்ரைனுக்கும் போர் மூள, பஹ்ரைனை அபுதாபி ஆதரித்தது. கதாரின் பல நகரங்கள் தாக்கப்பட்டன. இறுதியில் 1000 பேருக்கு மேல் கொல்லப்பட்டு, 60 படகுகள் மூழ்கடிக்கப்பட்டு ஜாஸ்ஸிம் பின் முஹம்மது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஓட்டோமான்கள் தங்கள் இராணுவ பாதுகாப்புப்படைக்கு அல் பித்தா கோட்டையை பயன்படுத்தினார்கள். ஓட்டோமான்கள் தனி நிர்வாகஸ்தர்களை நியமித்து ஸுபாராஹ், தோஹா, அல் வக்ராஹ் மற்றும் கவ்ர் அல் உதைத் ஆகிய பகுதிகளில் வரி வசூலிப்பதை ஜாஸ்ஸிம் பின் முஹம்மது முழுமூச்சாக எதிர்த்தார். இதனால் கதாரின் முன்ணனி அரசியல்வாதிகளையும், ஜாஸ்ஸிமின் இளைய சகோதரர் ஷெய்க் அஹ்மத் பின் முஹம்மது தானியையும் பிடித்துச் சென்றது. இதன் விளைவாக ஜாஸ்ஸிம் பின் முஹம்மது பல பழங்குடி இனத்தவர்களை இணைத்து கடுமையாக ஓட்டோமான் படைகளுடன் மோதி வெற்றி கண்டார். சகோதரரை விடுவித்து பதிலுக்கு ஓட்டோமான் படைகள் சுதந்திரமாக அவ்வப்போது சௌதியின் ஹாஃபூஃப் நகர் செல்ல அனுமதித்தார். கதார், ஓட்டோமான்களுடன் பல போர்கள் புரிந்திருந்தாலும் குறிப்பாக ‘அல் வாஜ்பாஹ் போர்’ பிரசித்தி பெற்றது. இப்போரினால் கதாரிகளுக்கு புகழும், ஆட்சி ஆள சுதந்திரமும் கிடைத்தது. கதாருக்கும், ஓட்டோமான்களுக்கும் இடையில் சமரசம் செய்ய பிரிட்டிஷ் முயன்று தோற்று போனது. முடிவில் கதாரின் ஆட்சியாளராக ஜாஸ்ஸிம் பின் முஹம்மதுவின் சகோதரர் ஷெய்க் அஹமது பின் முஹம்மதுவை வைத்துவிட்டு ஜாஸ்ஸிம் லுசைல் என்ற இடத்திற்கு சென்று அமைதியாக வசிக்க வேண்டும் என்று முடிவானது. அதன்படி கதாரின் ஆட்சியிலிருந்த சகோதரர் அஹ்மதை ஒரு சக படைவீரன் கொன்றுவிட மீண்டும் ஜாஸ்ஸிம் பின் முஹம்மது ஆட்சிக்கு வந்தார். இவருக்கு 19 மகன்கள் இருந்தார்கள். 1913 ல் தோஹா நகரிலிருந்து 24 கி.மீ. தூரத்திலுள்ள லுசாலி என்ற கிராமத்தில் மரணமடைந்தார். இப்போது அப்பகுதி உம் சலால் நகராட்சியாக இருக்கிறது. 
இவருக்குப்பிறகு, மகன் ஷெய்க் முஹம்மது பின் ஜாஸ்ஸிம் பின் முஹம்மது அல் தானி 1913 ல் ஆட்சிக்கு வந்தார். 1881 ல் பிறந்த இவர் வளரும் பருவத்திலேயே பிற்கால ஆட்சிக்கு தந்தையால் பயிற்சி கொடுக்கப்பட்டார். உம் சலால் முஹம்மது பகுதிக்கு கவர்னராகவும் இருந்தார். இவருக்கு 12 மகன்களும், 6 மகள்களும் இருந்தனர். சில பிள்ளைகள் வைப்பாட்டிக்கு பிறந்ததாகக் கூறப்படுகிறது. 1971 ல் இவர் மரணமடைந்தார். ஷெய்க் முஹம்மது பின் ஜாஸ்ஸிம் ஆட்சியிலிருக்கும் போதே அவரை நீக்கிவிட்டு அடுத்து 1880 ல் பிறந்த அப்துல்லாஹ் பின் ஜாஸ்ஸிம் அல் தானி 1913 லிருந்து 1940 வரை ஆட்சிக்கு வந்தார். பிரிட்டனும், ஓட்டோமான்களும் இவரும் இவர் சந்ததியினரும் கதாரை ஆள உரிமை அளித்தார்கள். 1915 ல் ஓட்டோமானை கதாரைவிட்டு வலுக்கட்டாயமாக விலக்கி வைத்தார். 1916 ல் கதாரின் கடல்வழி பாதுகாப்புக்கும், அனைத்து முன்னேற்றத்துக்கும் ஆதரவளிப்பதின் பேரில் பிரிட்டிஷுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதேபோல் 1935 ல் வெளிநாட்டு தாக்குதல்களிலிருந்தும் பாதுகாப்பதற்காக பிரிட்டனுடன் மேலும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். 1927 ல் அல் பித்தாவுக்கு அருகில் அல் கூட் கோட்டை ஒன்றைக் கட்டி அதை காவல்நிலையமாக்கி திருடர்களிடமிருந்து பாதுகாத்தார். தலைநகர் தோஹாவிலிருந்து 150 கி.மீ. தூரத்தில் மதீனத் அஷ் ஷமல் நகராட்சியில் ஸுபாராஹ் நகரத்தில் ஸுபாராஹ் கோட்டை ஒன்றை 1938 ல் கட்டினார். இவரது ஆட்சியில் தான் எண்ணெய் வளத்திற்காக முதல் முறை ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்துல்லாஹ் பின் ஜாஸ்ஸிமின் முதல் மனைவியின் விவரம் தெரியவில்லை. இவரது இரண்டாவது மனைவி ஷெய்கா ஃபாத்திமா பின்த் இசா அல் தானியின் மூலம் இவருக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். 1957 ல் இவர் மரணமடைந்தார். 
இவருக்குப்பின் 1895 ல் பிறந்த மகன் அலி பின் அப்துல்லாஹ் அல் தானி 1949 ல் ஆட்சிக்கு வந்தார். இவர்தான் முதல்முறையாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்த ஆட்சியாளர். இவர் இந்தியா, எகிப்து, ஐரோப்பா, லெபனான் மற்றும் லீவண்ட் பகுதிகளுக்குப் பயணம் செய்தார். கதாரின் அடிப்படை கட்டமைப்பிலும், கல்வியிலும் முன்னேற்றம் கண்டார். பல இஸ்லாமிய மதபோதகர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். இவரது ஆட்சியில் தான் முதல் எண்ணெய்கப்பல் துறைமுக நகரமான மெஸ்ஸயீதிலிருந்து 1949 ல் ஏற்றுமதியாகி புறப்பட்டது. ஆண், பெண் பிள்ளைகளுக்கென தனி பள்ளிக்கூடங்களைத் திறந்தார். பல்கலைக்கழகம், மருத்துவமனைகளைக் கட்டினார். தோஹா சர்வதேச விமான நிலையத்தின் கட்டிடத்தையும் துவக்கினார். மேலும் எண்ணெய் வள வருமானத்தில் நல்ல சாலைகள், குடிநீர், மின்சாரவசதி மற்றும் துறைமுகங்களைக் கொண்டு வந்தார். பல துறைகளுக்கு அமைச்சகங்களைக் கொண்டு வந்து பங்குச்சந்தையும் தொடங்கினார். ரொனால்ட் கோட்ரனி என்ற வெளிநாட்டினரை வைத்து கதார் காவல்துறையும் துவக்கினார். அலி பின் அப்துல்லாஹ் 1950 ல் தனக்கு ஆலோசகராக பிரிட்டிஷ் ராயல் ஏர் ஃபோர்ஸின் அதிகாரியாக இருந்த பில்லிப் ப்ளாண்ட் என்பவரை நியமித்துக் கொண்டார். இதுவரை வெளியிடப்படாமலே இருந்த பல இஸ்லாமிய வரலாறுகளை மதபோதகர்களை வைத்து வெளியிட்டார். எண்ணெய் தொழிலாளிகளிடமிருந்து திருப்தி இல்லாத நிலையில் பல எதிர்ப்புகள் கிளம்பின. அதை முன்னின்று சமாதானப்படுத்தினார். இவருக்கு 11 மகன்களும், 3 மகள்களும் இருந்தார்கள். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, லெபனானில் பார்பிர் மருத்துவமனையில் 1974 ல் மரணமடைந்தார். இவர் உடல் கதாருக்கு கொண்டு வரப்பட்டு அல் ரய்யான் நகராட்சியில் அடக்கம் செய்யப்பட்டது. 1960 ல் அலி பின் அப்துல்லாஹ்வுக்கு எதிராக கதாரிலும், 15 அரபு நாடுகளிலும் துண்டுப்பிரச்சாரங்கள் வெளியிடப்பட்டன. அதில் கதாரின் மக்கள் வறுமையிலும், நோயிலும் வாடிக்கொண்டிருக்க அவர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் போவதாக சாடியிருந்தன. இதனால் ஆட்சியை 1960 ல் தன் மகன் ஷெய்க் அஹ்மத் பின் அலி அல் தானியிடம் ஒப்படைத்தார்.
ஷெய்க் அஹ்மத் பின் அலியின் ஆட்சியின் போதுதான் 1971 ல் பிரிட்டிஷாரிடமிருந்து கதார் சுதந்திரமடைந்தது. 1963 ல் தேசிய கூட்டமைப்பு, தொழிலாளர்கள் ஊர்வலம் ஒன்றை நடத்திய போது ஷெய்க் அஹ்மத் பின் அலி அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி சிலரைக் கொன்றார். இவர் நாட்டின் சில ஏழை விவசாயிகளுக்கு கடனுதவியும், சிலருக்கு நிலங்களையும் அளித்திருந்தாலும் இவர் மீது எதிர்ப்புகள் அதிகமிருந்தன. உண்மையில் ஷெய்க் அஹ்மத் பின் அலி ஆட்சியில் தான் கதார் பலதுறைகளில் முன்னேற்றம் கண்டது. இவரது ஆட்சியில் தான் உலகில் கடல்மேல் அமைந்த முதல் எண்ணெய்துறை இத் அல் ஷர்கி ஆகும். மிகப்பெரிய எண்ணெய்துறையான மைய்தான் மஹ்ஸாமும், புல் ஹன்னியன் எண்ணெய்துறையும் இவர் ஆட்சியில்தான் உருவானது. மூன்று மனைவிகளைத் திருமணம் செய்திருந்த இவர் மனைவியரில் ஒருவர் துபாயின் ஷெய்க் ராஷித் பின் ஸைத் அல் மக்தூம் அவர்களின் மகள் ஆவார். இவருக்கு 7 மகன்களும், ஒரு மகளும் உண்டு. இவர் ஒன்றுவிட்ட சகோதரர் ஷெய்க் கலீஃபா பின் ஹமாத் அல் தானியை கதாரின் துணை ஆட்சியாளராக நியமித்திருந்தார். 1972 பிப்ரவரியில் ஷெய்க் அஹ்மத் பின் அலி வேட்டைக்காக ஈரான் பகுதிக்குச் சென்றிருந்தபோது, அவரை ஆட்சியிலிருந்து நீக்கிவிட்டு, கலீஃபா பின் ஹமத் அல் தானி ஆட்சிக்கு வந்தார். ஷெய்க் அஹ்மத் பின் அலி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் அடைக்கலமாக இருந்தார்.
கலீஃபா பின் ஹமத் 1957 ல் கதாரின் கல்வித்துறை மந்திரியாக இருந்தார். 1960 ல் பிரதம மந்திரியாகவும், பொருளாதார மந்திரியாகவும் இருந்த இவர் இறுதியாக துணை ஆட்சியாளராக இருந்தார். இவர் ஆட்சிக்கு வந்ததை கடுமையான ஆட்சியாளரை தூக்கி எறிந்துவிட்டு ஆட்சிக்கு வந்தவர் என்று பேசப்பட்டார். முதல் வேலையாக அரசை மறுசீரமைத்தார். அரச குடும்பத்தின் செலவுகளைக் குறைத்தார். வெளியுறவுத்துறைக்கு ஒரு மந்திரியை அமைத்து தினசரி நடவடிக்கைகளை அறிந்து கொண்டார். பலதுறைகளுக்கு மந்திரிகளை அமைத்து, வெளிநாடுகளிலும் தூதர் அலுவலகங்களை ஏற்படுத்தினார். எண்ணெய் வளம் அதிகரித்ததால் 1985 ல் ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனம் ஓஹாயோவுடன் ஒரு ஒப்பந்தமும், 1986 ல் அமோகோ நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டார். உலகின் மிகப்பெரிய 250 ட்ரில்லியன் க்யூபிக் கொள்ளளவு உற்பத்தி கொண்ட ஏரிவாயு தொழிற்சாலையும், 500 ட்ரில்லியன் க்யூபிக் சேமிப்புத்திறன் கொண்ட எரிவாயு கிடங்கும் அமைத்தார். மேலும் கதாரின் பல இடங்களில் எண்ணெய் வளம் அறிய உத்தரவிட்டார். கலீஃபா பின் ஹமத் 1995 ல் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் இருந்தபோது, அவர் மகன் ஹமாத் பின் கலீஃபாவால் ஆட்சி பறிக்கப்பட்டார். பின்னர் ஃப்ரான்சில் குடியிருந்த கலீஃபா பின் ஹமத் 2004 ல் கதார் திரும்பினார். இவருக்கு 4 மனைவிகள், 5 மகன்கள், 10 மகள்கள் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக