திங்கள், 20 ஜூலை, 2015

சௌதி அரேபியா வரலாறு 5

ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் இப்ன் சௌதின் எட்டாவது மகனாவார். 1921 ல் ரியாதில் பிறந்த இவரின் தாயார் ஹஸ்ஸா அல் சுதைய்ரி ஆவார். அரச குடும்பத்தினர் படிப்பதற்காக இப்ன் சௌத் அவர்களால் துவக்கப்பட்ட பிரின்ஸ் பள்ளியிலேயே ஆரம்பக்கல்வி படித்தார். இவருக்கு ஷெய்க் அப்துல் கானி கயாத் அவர்கள் ஆசிரியராக இருந்தார். மார்க்கக்கல்வி பயில்வதற்காக மக்காவிலும் படித்தார். தாயாரின் அறிவுரையின் பேரில் அரச ஆலோசனைக்குழுவில் இடம் பெற்றார். 1945 ல் முதல்முறையாக அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோவிற்கு ஐக்கியநாட்டு சபையின் ஒரு தீர்மானத்தில் கையெழுத்திடுவதற்காகச் சென்றார். பின் 1953 ல் ராணி இரண்டாம் எலிசபெத் முடிசூட்டு விழாவிற்கு சௌத் குடும்பத்தின் சார்பாக இங்கிலாந்து சென்றார். நாட்டின் முதல் கல்வித்துறை அமைச்சராக 1953 ல் பதவி பெற்றார். 1959 ல் லீக் ஆஃப் அராப் ஸ்டேட்ஸ் என்னும் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். 1962 ல் சௌதியின் உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போது மொத்த அரபுநாடுகளின் தலைவராக எகிப்தில் 1965 ல் கலந்து கொண்டார். 1967 ல் துணைப் பிரதமராகப் பதவி பெற்றார். மன்னர் காலித் இறந்தபோது இவருக்கு இருந்த இரண்டு மூத்த சகோதரர்களான இளவரசர் நாசரும், இளவரசர் ஸாதும் மன்னராக போதிய தகுதி இல்லாத காரணத்தால் ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் ஆட்சிக்கு வந்தார். ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் பட்டத்து இளவரசராக 1986 ல் அறிவிக்கப்பட்ட போது இருபுனித பள்ளிகளுக்கும் பாதுகாவலராக இருந்தார். 1979 ல் ஈரானில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக சௌதிக்கும் ஏதேனும் பாதிப்பு வருமோ என்று அச்சப்பட்ட ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் 1982 ல் ஈரானுடனான போரின்போது சதாம் ஹுசெய்னுக்கு ஆதரவாக இருந்தார்.
ஃபஹ்த் எப்போதுமே ஐக்கியநாட்டுசபைக்கு ஆதரவாக இருந்தார். சௌதியின் மொத்த வருமானத்தில் 5.5. சதவீதத்தை சௌதி முன்னேற்ற நிதி அமைப்புக்கு கொடுத்து வந்தார். வெளி அமைப்புகளான போஸ்னியன் முஸ்லீம்கள், யூகோஸ்லாவ் போர், நிக்காராகாவன் ஆகியவற்றிற்கு மாதம் ஒரு மில்லியன் டாலர்கள் கொடுத்து உதவினார். அமெரிக்க நட்பை பெரிதும் விரும்பினார். சௌதியின் இராணுவ விமான நிலையங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதித்தார். 1988 ல் நியூக்ளியர் சக்திளைத் தாங்கிச் செல்லும் CSS-2 என்னும் ஏவுகணைகள் 60 வாங்கினார். அல்ஜீரியாவுக்கும், மொரோக்கோவுக்கும் இடையே சமாதானத் தூதுவராக செயல்பட்டார். குவைத் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்பின் போது எதிர்த்த அரபு நாடுகளுக்கு தலைமை தாங்கினார். சிரியா அதிபர் ஹஃபீஸ் அஸ்ஸாதுக்கும், எகிப்திய அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கும் இடையே சிறப்பு ஒப்பந்தம் காண காரணமாய் இருந்தார். பல மில்லியன்களை மார்க்க விஷயங்களுக்காக செலவு செய்தார். பழைய இஸ்லாமிய கொள்கைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார். மார்க்கத்துக்கென தனி போலீஸ் படையை நிர்மாணித்தார். ஷெய்க் அப்த் அல் இப்ன் பாஸி சௌதி இளைஞர்களை ஐரோப்பா, அமெரிக்கா போன்ற மோசமான கலாச்சாரம் கொண்ட நாடுகளுக்குப் பயணிப்பதை எதிர்த்து வெளிப்படையாக பேசியதை ஆதரித்தார். 1990 ல் குவைத்தை சதாம் ஹுசைன் தலைமையிலான ஈராக் படைகள் ஆக்கிரமித்தபோது ஈராக் படைகள் சௌதி குவைத் எல்லையில் குவிக்கப்பட்டிருந்தன. இதனால் ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ், அமெரிக்கபடைகளை வரவழைத்து சௌதியின் எல்லையில் நிறுத்தினார். இதற்கு சௌதி அரேபிய மக்களிடமிருந்தும், அரச குடும்பத்தின் சுதைய்ரி சகோதரர்கள் ஏழு பேரும் எதிர்த்தார்கள். இவரது ஆட்சியிலும் அரச குடும்பத்தினர் ஆடம்பரமான செலவுகள் செய்தார்கள். மிகப் பெரிய இராணுவ செலவீனமாக 90 பில்லியன் டாலர்களுக்கு அல் யமாமாஹ் ஆயுத கொள்முதல் செய்யப்பட்டது. இதற்காக சௌதி அரேபியாவின் மருத்துவமனை, சாலை, பள்ளிக்கூடங்களுக்கான கட்டுமானப் பணிகள் 1986 லிருந்து 1999 வரை நிறுத்தி வைக்கப்பட்டது.
ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் தொடர் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவராக இருந்தார். இவர் 60 வயதானபோது உடல் எடை கூடி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் பக்கவாதம் எனப்படும் உடலின் ஒரு பகுதி செயலிழந்தது. தடி ஊன்றியும், சக்கர நாற்காலியிலும் நடமாடினார். இவரின் அலுவலக நடவடிக்கைகளை இளவரசர் அப்துல்லாஹ் கவனித்துக் கொண்டார். இவரது மூத்த மகன் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக இருந்த இளவரசர் ஃபைசல் பின் ஃபஹ்த் இறந்த போது ஸ்பெயின் இருந்தார். 2002 ல் ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிக்கை இவரின் சொத்து மதிப்பு 25 பில்லியன் டாலர்கள் என்றும் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்றும் செய்தி வெளியிட்டிருந்தது. ஸ்பெயினில் கோஸ்டா டெல் சோல் என்ற இடத்தில் ஒரு அரண்மனை வைத்திருந்தார். 147 மீட்டர் நீளத்தில் இரண்டு நீச்சல்குளங்கள், பால்ரூம், உடற்பயிற்சிக்கூடம், திரைஅரங்கம், சிறிய தோட்டம், தீவிர கண்காணிப்பு கொண்ட மருத்துவமனை, நான்கு அமெரிக்க ஏவுகணைகள், இரண்டு இயக்க அறைகள் கொண்ட பிரமாண்டமான யாட் என்னும் சொகுசுக்கப்பல் வைத்திருந்தார். அதன் மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள். 150 மில்லியன் டாலரில் சொந்தமாக போயிங் 747 விமானம் வைத்திருந்தார். லண்டனில் சூதாட்டம் தடை செய்திருந்த போது தனது ஹோட்டல் அறையிலிருந்து கள்ளத்தரகர்கள் மூலம் சூதாடி பல மில்லியன் டாலர்களை இழந்தார். இவர் பலமுறை திருமணம் செய்தவர். மனைவிகள் அல் அனூத், அல் ஜொவ்ஹரா ஆகியோர் இறந்து போனார்கள். மனைவிகள் ஜவ்ஸா, அல் ஜொவ்ஹரா, மோதி, ஜொஸாஃஅ, துர்ஃபா, வத்ஃபா, லொல்வா, ஷெய்கா, சீடா ஆகியோரை மணவிலக்கு அளித்திருந்தார். ஜனன் ஹர்ப் மட்டும் இறக்கும் வரை இருந்தார். இவருக்கு ஆறு மகன்களும், நான்கு மகள்களும் இருந்தார்கள். ரியாதின் கிங் ஃபைசல் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் 2005 ஆகஸ்டு மாதம் மரணமடைந்தார். இவர் எப்போதும் அணிந்திருக்கும் சிறப்பு அரபு அங்கியுடனேயே (தவ்ப்) அடக்கம் செய்யப்பட்டார். இமாம் துர்கி பின் அப்துல்லாஹ் மஸ்ஜிதுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மூத்த இமாம் ஷெய்க் அப்துல் அஜீஸ் அல் ஷெய்க் இறுதித் தொழுகை நடத்தப்பட்டது. இவரது இறுதித்தொழுகை நாடெங்கிலும் உள்ள மஸ்ஜிதுகளிலும் நடத்தப்பட்டது. உடல் மகன் அப்துல் அஜீஸால் இரண்டு கி.மீ தூரம் சுமக்கப்பட்டு அல் அவ்த் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. சௌதி அரேபியாவின் கொடியில் இஸ்லாமிய ஷஹாதா பொறிக்கப்பட்டுள்ளதால் கொடி எப்போதும் அறைக் கம்பத்தில் வைக்கப்படாது. அனைத்து இஸ்லாமிய நாடுகளும் மௌனம் அனுசரித்தது. பல வெளிநாட்டு தலைவர்களும் அடக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள்.
ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸுக்குப் பிறகு, 2005 ல் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் அல் சௌத் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். இவர் இரு புனிதபள்ளிகளின் பாதுகாவலராகவும் இருந்தார். 1924 ல் ரியாதில் பிறந்த இவர் மன்னர் அப்துல் அஜீஸின் பத்தாவது மகனாவார். சௌத் குடும்பத்தின் நெடுநாள் பகையாளிகளான அல் ராஷித் குடும்பத்தைச் சேர்ந்த ஃபஹ்தா பின்த் அசி அல் ஷுயைய்ம் இவரது தாயார் ஆவார். இதனாலேயே இவர் அதிகாரம் பெற பல் ஆண்டுகள் ஆனதாக ஒரு பேச்சு உண்டு. பலமான ஷம்மர் பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர் தாயார் இவருக்கு ஆறு வயது ஆகும்போதே இறந்துவிட்டார். 1963 ல் சௌதியின் தேசிய பாதுகாப்புப்படையின் தளபதியாக இருந்தார். இதனால் இக்வான் படையை நிர்வகிக்கும் வாய்ப்பைப் பெற்று சௌத் குடும்பத்தின் முன்ணனிக்கு வந்தார். இந்த SANG எனப்படும் சௌதி தேசியபாதுகாப்புப்படை ஜனதிரிய்யா என்னும் கொண்டாட்டத்தின் போது கிராமிய நடனங்கள், ஒட்டகப்பந்தயம், பழங்குடியின பாரம்பரியம் ஆகியவற்றை நடத்தும். 1975 ல் மன்னர் காலிதால் துணைப்பிரதமராகவும் ஆக்கப்பட்டார். இதனால் சௌதியை ஆட்சிசெய்யும் முக்கிய மூன்று நபர்களில் ஒருவரானார். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட சௌதியின் இளவரசர்கள் இதை எதிர்த்தார்கள். மன்னர் ஃபஹ்த் நோய்வாய்ப்பட்டு இருந்தபோது நாட்டின் தலைமையை ஏற்றிருந்தார். 2001 ல் அமெரிக்கா அழைத்தபோது, அவர்கள் இஸ்ரேலுக்கு சாதகமாக இருந்ததால் புறக்கணித்தார். இஸ்ரேல் பாலஸ்தீன பெண்களின் மீது காட்டிய கொடூரத்தனத்தை கண்டனம் செய்தார். அமெரிக்காவின் செப்டம்பர் 11 தாக்குதலுக்குப்பிறகு, அமெரிக்க அதிபருக்கு கடிதம் எழுதினார். 2005 ல் சௌதி அரேபியாவின் இளைஞர், இளைஞிகள் வெளிநாடுகளில் நான்காண்டு இருந்து படிக்க அனைத்துச் செலவுகளையும் அரசு ஏற்க நிதியளித்தார். இதனால் 25 நாடுகளில் 70,000 மாணவ, மாணவிகள் பயன் பெற்றனர். பொதுமருத்துவ பரிசோதனைக்காக (மார்பு புற்றுநோய் பரிசோதனை உட்பட) 3 மில்லியன் ஹஜ் பயணிகளுக்கென செலவிட்டார். அமைச்சரவையில் பல மாற்றங்களைச் செய்தார். நோரா அல் ஃபயாஸ் என்னும் அமெரிக்காவில் படித்தவரை துணை கல்வி அமைச்சராக்கினார். தன் மைத்துனர் ஃபசல் பின் அப்துல்லாஹ்வை கல்வி அமைச்சராக்கினார். 2010 ல் உலமாக்களின் மூத்த குழுவை ஃபத்வா தீர்ப்பளிக்க அனுமதித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக