திங்கள், 20 ஜூலை, 2015

சௌதி அரேபியா வரலாறு 4

1950 லிருந்து 1960 வரை சௌதி அரேபியா பல ஆட்சி கவிழ்ப்புகளை எதிர்கொண்டது. 1969 ல் எண்ணெய் வளமிக்க லிபியாவில் மாம்மர் கடாஃபி என்பவர் புரட்சியின் மூலம் ஆட்சியைக் கவிழ்க்க, இது தங்களுக்குமான ஒரு அச்சுறுத்தலாக எண்ணிய ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்தினார். 1969 ல் நூற்றுக்கணக்கான இராணுவ அதிகாரிகளை சில ஜெனரல்கள் உட்பட கைது செய்து ரகசியமாக திட்டமிடப்பட்டிருந்த ஆட்சி கவிழ்ப்பை முறியடித்தார். ஆட்சி கவிழ்ப்பு விமானப்படை அதிகாரிகளால் திட்டமிடப்பட்டது. அவர்கள் முன்பிருந்த நாசர்கள் குடும்ப ஆட்சியைக் கொண்டுவரத் திட்டமிட்டிருந்தார்கள். இது அமெரிக்க உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, தெரிய வந்தபின் அனைத்தும் ரகசியமாக முடிக்கப்பட்டது. ஃபைசல் பின் அப்துல் அஜீஸின் ஆட்சிக்கு முன்பு வரை தனித்தனியாக இருந்த ஏமன் பழங்குடியினர், இஸ்மாயிலி பிரிவினர், வஹ்ஹாபியைச் சாராதவர்கள் அனைவரையும் சௌதியின் மக்கள் என்று மார்க்கத்தால் ஒன்று சேர்த்தார். இவரின் ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் உலமாக்குழு தலையிடுவதை பெரும்பாடுபட்டு சமாளித்தார். அல் மதீனா கல்லூரியில் ஷெய்க் பின் பாஸ் என்பவர் தீவிரவாதம் சார்ந்த வகையில் மாணாக்கர்களுக்கு கல்வி போதித்ததால் அவரை பணியை விட்டு நீக்கினார். உலகமெங்கும் மிகவும் லாபகரமாக நடந்து கொண்டிருந்த அடிமை வியாபாரம் பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்தது. சௌதி அரேபியாவில் மட்டும் தடை செய்யப்படவில்லை. இதற்காக 1945 ல் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் சௌதி மன்னரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இப்போது மீண்டும் 1962 ல் அமெரிக்க ஜனாதிபதி ஜான். எஃப். கென்னடி பேச்சுவார்த்தை நடத்த சௌதி அரேபியாவில் அடிமை வாணிபத்தை தடை செய்ய ஒத்துக்கொள்ளப்பட்டது. ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் தந்தை துவக்கிவைத்த அமெரிக்காவுடனான நட்பில் அதிக கவனம் செலுத்தினார். தனது வீரர்களுக்கு அமெரிக்கா மூலம் இராணுவப்பயிற்சி பெற வைத்தார். இவர் கம்யூனிசத்தை எதிர்த்ததால் ரஷ்யா போன்ற நாடுகளுடன் உறவை வளர்த்துக் கொள்ளவில்லை. கம்யூனிசத்தை யூதர்களின் ஸியோனிசத்துடன் இணைத்துப் பேசினார். அதேநேரத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் நல்லுறவை வைத்திருந்தார். 1967 ல் இங்கிலாந்து சென்றபோது ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு வைர கழுத்தணி பரிசளித்தார். அரபு தேசியத்தின் மூலம் அனைத்து முஸ்லீம் நாடுகளையும் ஒன்றிணைக்க அவர்கள் நாடுகளுக்குச் சென்று பேசினார். 1969 ல் அல் அக்ஸா மஸ்ஜிதில் இஸ்ரேல் நடத்திய பீரங்கி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அது பிடித்து வைத்திருந்த பாலஸ்தீன பகுதிகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்று 25 முஸ்லீம் நாடுகளை அழைத்து கூட்டம் நடத்தினார். அக்கூட்டம் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பாக மாறி பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருந்தது. 1970 ல் எகிப்தின் நாசர் இறந்ததற்குப் பின் எகிப்தின் அதிபரான அன்வர் சதாத் 1973 ல் அராப் இஸ்ரேல் போரை நடத்தினார். இதற்கு ஆதரவு தெரிவித்து ஐரோப்பியர்களுக்கான எண்ணெய் ஏற்றுமதியை ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் தடை செய்தார். ஒட்டுமொத்த எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளும் பதறிப்போயின. இந்த நடவடிக்கையின் மூலம் இஸ்லாமிய நாடுகளின் கௌரவத்தை ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் உயர்த்தியதாகவே கருதப்பட்டது. 1974 ல் ‘டைம்’ பத்திரிக்கை இவரை மேன் ஆஃப் தி இயர் என்று புகழுரைத்தது. இவரின் கிடிக்கிப்பிடியால் எண்ணெய் விலை உயர்த்தப்பட்டு அதன் வருமானத்தை எகிப்து, சிரியா மற்றும் பாலஸ்தீன் லிபரேஷன் ஆர்கனைசேஷன் நடத்திய அராப் இஸ்ரேல் போருக்கு உதவினார். இதனால் பாதிக்கப்பட்ட மேற்கத்தியர்கள் இவரைக் கொல்ல திட்டம் தீட்டினார்கள்.
ஃபைசல் பின் அப்துல் அஜீஸுக்கு நான்கு மனைவிகள். மூன்று மனைவிகள் சக்திவாய்ந்த சுதைய்ரி, அல் ஜிலுவி, அல் துனயன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர் முதல்மனைவி சுல்தானா பின்த் அல் சுதைய்ரியின் மூத்த மகன்தான் இளவரசர் அப்துல்லாஹ். ஃபைசலுக்கு 15 வயதாகும்போதே அப்துல்லாஹ் பிறந்து விட்டார். இவரின் இரண்டாவது மனைவி இஃப்ஃபத் அல் துனைய்யின் துருக்கியில் பிறந்து அல் சௌத் குடும்பத்தின் வழிவந்தவர்.  மூன்றாவது மனைவி அல் ஜவ்ஹராவை 1935 ல் மணந்தார். நான்காவது மனைவி இளவரசர் காலிதின் தாயாராவார். மகன்கள் அனைவரையும் அரசியலில் பங்குபெறவைத்து அனுபவம் கிடைக்கச் செய்தார். இளவரசர் சுல்தான் தன் மகன் பந்தர் பின் சுல்தான் அரச பாரம்பரியத்தைச் சேராத மனைவி மூலம் பிறந்ததின் காரணமாக தயக்கத்துடன் இருக்க ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் தன் மகள் ஹைஃபா பின்த் ஃபைசலை பந்தர் பின் சுல்தானுக்கு மணமுடித்துக் கொடுத்து பெருந்தன்மையாக நடந்து கொண்டார்.
 ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் அரபுகளின் வழக்கப்படி, மஜ்லிஸ் எனப்படும் பொதுச்சபையில் அமர்ந்து தன்னைக் காணவரும் மக்களையும் மற்ற பிரதிநிதிகளையும் சந்திப்பது வழக்கம். 1975 மார்ச் 25 ல் அப்படி ஒரு சந்திப்பில் ஒன்றுவிட்ட சகோதரர் மகன் ஃபைசல் பின் முசைய்த் என்பவனும் சந்திக்க வந்திருந்தான். ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் அப்போது தான் அமெரிக்க பயணத்திலிருந்து திரும்பி இருந்தார். அப்போது குவைத்திலிருந்து சில விருந்தினர்களும் சந்திக்க வந்திருந்தார்கள். அரபு வழக்கப்படி, பின் முசைய்தை நெற்றியில் முத்தமிட வந்த ஃபைசல் பின் அப்துல் அஜீஸை தன் கையில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டான் முதல் குண்டு அவரின் நாடியில் பாய்ந்தது. இரண்டாவது குண்டு அவர் காதில் பாய்ந்தது. உடனிருந்த பாதுகாவலன் ஒருவன் உறையுடனிருந்த வாளினால் ஃபைசல் பின் அப்துல் அஜீஸைத் தாக்கினான். அருகிலிருந்த எண்ணெய்வள மந்திரி ஸகி யமானி மன்னரைக் கொல்லாதீர்கள் என்று உரக்கக் கத்தினார். பாதுகாவலர்கள் வர உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மன்னரைக் காப்பாற்ற மருத்துவர்கள் முயன்றும் முடியாமல் ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் மரணமடைந்தார்கள். இது முன்பு தொலைக்காட்சி கொண்டுவருவதற்கு எதிர்ப்பாக இருந்த காலித் பின் முசைய்தை ரியாத் நகரில் பொதுவில் வைத்து தூக்கிலிட்டதற்கு பழிவாங்குவதற்காக கொலை செய்யப்பட்டதாக ஒரு கருத்திருந்தாலும், இந்தக் கொலைக்கு பின்ணனியில் அமெரிக்கா இருந்ததாக சந்தேகித்தார்கள். அன்றையதினம் மொத்த சௌதி அரேபியாவும் ஸ்தம்பித்தது. மூன்றுநாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.  அவரது உடல் ரியாதில் அல் அவ்த் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்குப்பிறகு, காலித் பின் அப்துல்அஜீஸ் அல் சௌத் 1975 ல் சௌத் குடும்பத்திலிருந்து ஆட்சிக்கு வந்தார்.
1913 ல் ரியாதில் பிறந்த இவர் தாயார் அல் ஜிலுவி குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு 14 வயது ஆகும்போதே மன்னர் அப்துல் அஜீஸ் இவரை பழங்குடியினர்களைச் சந்திக்க வைத்து அவர்களின் குறைகளைக் கேட்க வைத்தார். 1932 ல் ஹிஜாஸ் பகுதியின் வைஸ்ராயராக இருந்தார். 1934 ல் இளவரசர் ஃபைசலுடன் எமனி படைகளுடன் போரிட்டுள்ளார். 1934 ல் சௌதி உள்துறை மந்திரியாக இருந்தார். பாலஸ்தீன் விவகாரத்தில் லண்டனில் நடந்த செயிண்ட் ஜேம்ஸ் மாநாட்டில் இளவரசர் ஃபசலுக்கு உதவியாக இருந்தார். 1943 ல் அமெரிக்க துணை அதிபர் ஹார்ரி ட்ரூமென் வெள்ளைமாளிகையில் அளித்த விருந்தில் ஃபசலுடன் கலந்து கொண்டு, பின்னர் அமெரிக்க அதிபர் ஃப்ராங்கிளின் ரூஸ்வெல்டையும் சந்தித்தார். காலித் பின் அப்துல்அஜீஸ் சௌதியின் ஆட்சியில் மிக நல்ல மனிதர் என்ற பெயரைப் பெற்றார். இளவரசர் முஹம்மது, இளவரசர் காலித், இளவரசர் அப்துல்லாஹ் ஆகிய அனைவரும் அல் ஜிலுவி குடும்பத்திலேயே திருமணம் செய்திருந்தார்கள். மன்னர் ஃபைசலின் சார்பாக மக்கா நகரின் கவர்னராகவும் இருந்தார். மன்னர் ஃபைசல் இல்லாத சமயங்களில் கூட்டங்களையும், மாநாடுகளையும் அவர் சார்பில் நடத்தி இருக்கிறார். அரச குடும்பத்தினரிடையே ஏற்படும் குழப்பங்களுக்கு மன்னரின் சமரசமே இறுதி முடிவு என்னும் பழக்கத்தை ஏற்படுத்தினார். தன் ஏழாண்டு ஆட்சியில் சௌதியின் அடிப்படை கட்டமைப்பை சீர்படுத்தி கல்வி, மருத்துவத்துறைகளில் கவனம் செலுத்தினாலும் திறமை இல்லாதவராகவே கருதப்பட்டார். ஆனாலும் இவருக்குண்டான சில தனிச்சிறப்புகளால் புகழ் பெற்றார். இதனால் அனைத்துத் தரப்பினரும் இவரது ஆட்சிக்கு உதவினார்கள். இவரது ஆட்சியில் தான் சௌதி அரேபியா மிகப்பெரும் பணக்கார நாடாக ஆகியது. விவசாயத்தில் கவனம் செலுத்தினார். ஜுபெய்ல், யான்பு பகுதிகளில் தொழிற்பேட்டை பகுதிகளாக்கினார். எண்ணற்ற பள்ளிக் கூடங்களை நாடெங்கிலும் திறந்தார். 3,028 தொடக்கநிலைப் பள்ளிக்கூடங்கள், 649 இரண்டாம்நிலைப் பள்ளிக்கூடங்கள், 182 உயர்நிலைப் பள்ளிக்கூடங்கள் என்றிருந்ததை முறையே 5,373, 1,377, 456 என்று 1980 ல் உயர்த்தினார். கிங் ஃபைசல் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார். 1980 ல் மூன்றாவது முன்னேற்றத் திட்டமாக 250 பில்லியன்களில் வரவு செலவு கொண்டு வந்தார். 1979 ல் 500 பேர் கொண்ட குழுவொன்று புனித மக்காவின் பள்ளியை ஆயுதங்களுடன் பிடித்தபோது, காலித் பின் அப்துல்அஜீஸ் உலமாக்களின் ஆலோசனையைப் பெற்று இராணுவ நடவடிக்கை எடுத்தார். முதலில் வெறுப்புடனும், அமைதியுடனும் இருந்த உலமாக்கள் மூன்று தினங்களுக்குப் பிறகுதான் இராணுவ நடவடிக்கைக்கு அனுமதி கொடுத்தார்கள். உலமாக்களின் தீர்ப்புப்படி பல்வேறு நகரங்களில் 63 புரட்சியாளர்கள் தூக்கிலிடப்பட்டார்கள்.
1979 ல் சௌதியின் கிழக்குப் பிராந்தியத்திலிருந்த ஷியாபிரிவு சிறுபான்மையினர் அரசுக்கெதிராக ஊர்வலங்களையும், போராட்டங்களையும் நடத்தினார்கள். அவர்களைக் கைது செய்த காலித் பின் அப்துல்அஜீஸ் 1980 ல் அவர்களை விடுதலை செய்து அவர்களின் நகரங்கள் அனைத்துக்கும் பட்டத்து இளவரசர் ஃபஹ்துடன் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். நாட்டின் உள்விவகாரத்தில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்த காலித் பின் அப்துல்அஜீஸ் அப்போது நடந்த ஈரானியப்புரட்சி, அன்வர் சதாத் படுகொலை, ஆப்கானிஸ்தான் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஆகிய வெளிநாட்டு விவகாரங்களில் அவ்வளவாக ஆர்வம் காட்டாதிருந்தார். அபுதாபிக்கும், ஒமானுக்கிடையேயான புரைய்மி பாலைவன விவகாரத்தில் மட்டும் தலையிட்டார். 1975 ல் சிரியா சென்று அதிபர் ஹஃபிஸ் அல் அஸ்ஸாதை சந்தித்து லெபனானின் முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருந்த சிரியாவுக்கு தன் ஒத்துழைப்பைத் தந்தார். GCC  எனப்படும் வளைகுடா நாடுகளின் கூட்டமைப்புக்கு பாடுபட்டார். 1979 ல் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்டபோது, கொமெய்னிக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனாலும் 1980 ல் ஈரான் ஈராக் போரில் சௌதி அரேபியா ஈராக்கை ஆதரித்தது. 1981 ல் சௌதி அரேபியாவில் இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சரைச் சந்தித்ததைப் பற்றிக் கேட்டபோது அவருடன் கழுகுகளைப் பற்றி பேசியது நன்றாக இருந்தது என்றும் நிர்வாக விவகாரங்களை பட்டத்து இளவரசர் ஃபஹ்த் பேசுவார் என்றார். 1982 ல் அமெரிக்க அதிபர் கார்டரிடம் 60 எஃப்-15 ரக விமானங்களை சௌதி அரேபியாவுக்காக வாங்கினார். நவீனரக போயிங் 747 தான் பயணிக்கவும் வாங்கினார். வெளிநாட்டு பணியாளர்களை வரவழைத்து பணியில் அமர்த்தினார்.
காலித் பின் அப்துல்அஜீஸுக்கு நான்கு மனைவிகள். நான்கு மகன்களும், ஆறு மகள்களும் இவருக்கு இருந்தார்கள். கழுகு வேட்டையும், குதிரையேற்றமும் இவருக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. கழுகு விளையாட்டுக்காகவே 1955 ல் டொயாட்டா லாண்ட் க்ரூசர் என்னும் காரை வாங்கினார். 1975 ல் 25.2 மீட்டர் நீளமுள்ள நீண்ட கடிலாக் காரை வாங்கினார். இவரது பெயரில் ரியாதில் கிங் காலித் இண்டர்நேஷனல் விமான நிலையம், கண் மருத்துவமனையும், கிழக்குப் பிராந்தியத்தில் கிங் காலித் மருத்துவ நகரமும் இயங்குகின்றன. 1981 ல் ஐக்கிய நாட்டு சபையின் தங்கபதக்கம் பெற்றார். நீண்ட காலமாகவே இவருக்கு இருதய நோய் இருந்தது. 1970 ல் பலமான மாரடைப்பு வர, 1972 ல் அமெரிக்காவின் க்ளீவ்லாண்ட் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 1978 ல் மீண்டும் க்ளீவ்லாண்டில் இரண்டாவது இருதய அறுவை சிகிச்சை செய்தார். 1976 ல் லண்டனில் இடுப்புப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மீண்டும் இவருக்கு 1980 ல் சிறிய மாரடைப்பு வந்தது. ஏழாண்டு ஆட்சிக்குப்பின் 1982 ல் தாயிஃப் நகரத்தில் இருந்தபோது மாரடைப்பால் காலமானார். மக்காவின் புனித பள்ளியில் இறுதித்தொழுகை நடத்தப்பட்டு, ரியாதில் அல் அவ்த் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். இவரது இறுதிச் சடங்கில் கதார், குவைத், திபூத்தி, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகளின் அதிபர்கள் கலந்து கொண்டார்கள். இவருக்குப்பின் ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் 1982 ல் ஆட்சிக்கு வந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக