ஞாயிறு, 3 மே, 2015

ஃப்ராங்க்ஸ்கள் வரலாறு 2

சார்ல்மாக்னியின் முதல் சில போர் நடவடிக்கைகள் தோல்வியடைந்தன. இஸ்லாமியர்களை எதிர்த்து வட ஸ்பெயினில் நடத்திய போரில் தோல்வியடைந்தான். அப்போதைய கார்டோபாவின் கலீஃபா சார்ல்மாக்னியின் வரவை எதிர்பார்த்துப் போரிட காத்திருந்தார். மேலும் இவன் பாட்டனாரின் டூர்ஸ் வெற்றியின் வெளிப்பாடு இவனிடம் இல்லாமல் போனது. 778 ல் தெற்கு நோக்கி பாம்ப்லோனா நகரைக் கைப்பற்றி, சரகோஸ்ஸாவை வெல்லத் திட்டமிட்டு எதுவும் சாதிக்காமல் ஏமாற்றமடைந்தார். இதற்காக அவனின் படை பாரம்பரிய வழியான ரான்செஸ்வல்லீசைக் கடக்கும் போது, பஸ்க்வெஸ் அல்லது காஸ்கன் குழுக்களால் முன்னால் சென்ற படை தாக்கப்பட்டது. சார்ல்மாக்னியின் பெரிய மாவீரரென்ற கற்பனை இந்த தோல்விகளால் இவன் ஆட்சியில் கரைபடிந்த புள்ளிகளாய் போனது. 799 ன் மத்தியில் மூன்றாம் முறையாக ஃப்ராங்கிஷ் மன்னனுக்கு போப்பின் எண்ணெய் ஸ்நானம் தேவைப்பட்டது. ரோமின் சாலையில் எதிரிகளால் தாக்கப்பட்டான். (எதிரிகள் இவனைக் குருடாக்கி, நாக்கை அறுத்து ஆளத்தகுதி இல்லாமல் ஆக்கத் திட்டம் தீட்டியிருந்தனர்.) மூன்றாம் லியோ ஆல்ப்ஸ் வழியாகச் சென்று சார்ல்மாக்னியை பாடெர்பார்னில் சந்தித்தார்.
                                       இருவரும் என்ன ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், 800 ல் சார்ல்மாக்னி ரோம் சென்று போப்புக்கு ஆதரவு தெரிவித்தார். செயிண்ட் பீட்டர்ஸில் கிறிஸ்துமஸ் தினத்தில் லியோ சார்ல்மாக்னியின் மகனை அடுத்த மன்னனாக தேர்ந்தெடுக்க இருந்தார். ஆனால், பிரார்தனை முடிந்து தலை உயர்த்திய சார்ல்மாக்னியின் தலையிலேயே போப் மீண்டும் கிரீடத்தைச் சூட்டினார். சார்ல்மாக்னி மகிழ்ச்சியில்லாமல் அதை ஏற்றுக் கொண்டான். சட்டப்படி மன்னனாகத் தகுதிவாய்ந்தவர் கான்ஸ்டாண்டிநோபிளைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். மன்னன், போப் மற்றும் மக்களின் விருப்பங்கள் இணைந்து ஜெர்மனிய பழங்குடி வாரிசுதான் மேற்கில் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று முடிவாகியது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயத்தின் இந்த புதிய முடிவுதான் அன்றிலிருந்து இன்றுவரை போப்களைத் தேர்ந்தெடுப்பதிலும், சிலுவைப்போர் அமைத்து இரக்கமின்றிக் கொல்வதிலும், நேட்டோ படையுடன் சேர்ந்து இஸ்லாமிய நாடுகளை சூறையாடுவதிலும் பங்கு வகிக்கிறது. இந்த இரத்தப் பாரம்பரியத்தில் வந்தவர்கள் தான் இங்கிலாந்தில் அரச குடுப்பத்திலும், மற்ற ஐரோப்பிய நாடுகளின் வாரிசு வரிசையில் இடம்பிடிக்க முடியும்.  800 ல் சார்ல்மாக்னியின் பதவியேற்பில் முதன்முறையாக பிரமாண உறுதி மொழியில் படிக்கப்பட்ட வாசகம் அப்படி. அதாவது, “சார்லஸ் மிகவும் சாந்தமான அகஸ்டஸ், கடவுளின் பெயரால் பதவி ஏற்கப்படுகிறார். இவர் பசிபிக்கின் மாபெரும் சக்கரவர்த்தி, ரோம சாம்ராஜ்ஜியத்தை ஆட்சி செய்யும் சக்கரவர்த்தி ஆவார்”. என்று முன்மொழிந்தனர்.
                          அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து மூன்றாம் லியோ சார்ல்மாக்னியை மதச்சடங்கு ஒன்றில் ஜெர்மனியில் சந்தித்தார். 796 ல் ஆசென் நகரில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு தற்போது முடிவுற்ற சார்ல்மாக்னியின் புதிய தேவாலயத்தின் திறப்புவிழாவில் சந்திக்க நேர்ந்தது. சார்ல்மாக்னியின் ஆட்சி அதிகாரத்திற்கு ஆசென் நகரம் அர்த்தமுள்ளதாகவும், அவசியமாகவும் இருந்தது. அசென் சாம்ராஜ்ஜியத்தின் வடக்கிலும், ரோமின் எதிர்திசையிலும் இருந்தது. சார்ல்மாக்னி தன் ஒரே மகன் லூயிஸை ஆட்சி அதிகாரத்தில் இணைக்க ஆசைப்பட்டான். 805 ல் வடக்கில் பயணம் செய்த போப் இதனை ஆதரிக்கவில்லை. இதனால் போப் இல்லாமலேயே 813 ல் ஆசென் நகர தேவாலத்தில் மகனுக்கு துணைச் சக்கரவர்த்தியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தான். இந்த ஆசென் நகரம் சார்ல் மாக்னியின் ஒன்றிணைந்த ஃப்ராங்கிஷ் சாம்ராஜ்ஜியத்திலிருந்து தள்ளியிருந்தது. மிகச்சரியாக ஃப்ராங்கிஷ் சாம்ராஜ்ஜியத்தின் மேற்குக்கும், கிழக்குக்கும் நடுவில் இருந்தது. மேலும், நவீன அமைப்பை வெளிப்படுத்தும் விதமாக பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியின் எல்லைகளின் மத்தியில் இருந்தது.                 
                              சார்ல்மாக்னி ஆட்சியைப் பரப்பும் எண்ணம் வந்தவுடன் தன் நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணினான். கிறிஸ்தவ அறிவு ஜீவிகள் ஆசென் நகரிலிருந்து சார்ல் மாக்னிக்குக்கு வேலையாட்களைத் தேர்ந்தெடுத்தனர். சார்ல்மாக்னி ஆசெனில் கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கென நிகழ்ச்சிகளை நடத்தினான். வடக்கின் பார்பேரிய பகுதியில் மட்டுமே கல்வி கற்றவர்கள் அதிகம் பேர் இருந்தனர். 780 ல் ஆசென் அரண்மனையில் ஒரு பள்ளியை ஆரம்பித்து யோர்க் நகரத்திலிருந்து அல்சியன் என்ற சிறந்த ஆசிரியரை அழைத்து வந்தான். தானும் சமயங்களில் தன் குடும்பத்துடன் பாடம் கற்க செல்வான். சிறந்த ஏடுகள் அங்கு அழகாக நகல் எடுக்கப்பட்டன. அவைகளே பிற்காலத்தில் ரோமன் மாதிரி எழுத்துக்கள் ஆகின. மேலும் தனிச்சிறப்பு உண்டாக்குவதற்காக கரோலின்ஜியன்களின் புத்திசாலித்தனமான கலையம்சமுள்ள வாழ்க்கை முறைகளைக் கொண்டுவந்தான்.
                              சார்ல்மாக்னி தனக்குப்பிறகு, தன் பாரம்பரிய ஆட்சியை மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்துக்கொடுக்க விரும்பினான். ஆனால், அவனின் முதல் இரண்டு பிள்ளைகளும் முறையே 810,811 ம் ஆண்டுகளில் இறந்து போயினர். அதனால் எஞ்சிய கடைசி மகன் லூயிஸ் 814 ம் ஆண்டு மொத்த பகுதிகளுக்கும் ஒரே சக்கரவர்த்தி ஆனான். லூயிஸ் தந்தையைவிட குணத்தில் வித்தியாசமாக இருந்தான். தெயவபக்தி உள்ள லூயிஸ் என்று பொருள்படும் வகையில் லூயிஸ் தி பியஸ் (LOUIS THE PIOUS) என்று அழைக்கப்பட்டான். தேவாலயத்தின் ஆதரவுடனே இருக்க விரும்பினான். சார்ல் மாக்னியின் சாம்ராஜ்ஜியம் யாரும் நெருங்க முடியாத வண்ணம் இருந்தது. ஆனால், 840 ல் லூயிஸ் மரணமடைந்தவுடன் எல்லாம் மாறியது. சார்ல்மாக்னியின் லெஜெண்ட் (LEGEND) என்ற அவன் புகழும், கலைப்படைப்புகளும் இன்று வரை பெயர் பெற்றவை. சார்ல் மாக்னியின் சாம்ராஜ்ஜியம் வடகிழக்கு ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனியின் சில பகுதிகள், ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் வட இத்தாலி இணைந்து இருந்தது. 840 ல் சார்ல்மாக்னியின் மகன் லூயிஸ் இறந்தவுடன் பாரம்பரிய பிரதேசத்தைப் பிரிப்பதில் லூயிஸின் மூன்று மகன்களுக்கு இடையில் சண்டை வந்தது. 843 ல் ஒரு குழுவால் சமாதானம் ஏற்பட்டு வெர்டுன் என்ற இடத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனால், பிரிக்கப்பட்ட அந்த எல்லைகளில் எதிர்கால ஐரோப்பாவின் இருண்ட சரித்திரங்கள் ஆரம்பிக்க இருந்தன.
                              ஃப்ராங்கிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பூகோள அமைப்பில் ஒருபுறம் அட்லாண்டிக்கரையும், மற்றொரு புறம் ரினியும் உள்ளது. லத்தீன்களுக்கு தெரியும் செங்குத்தான பாகம்தான் பிரான்ஸ் என்று. ஆனால், பிரிக்கப்பட்டது  மேற்குபிரான்ஸ், மத்திய பிரான்ஸ் மற்றும் கிழக்குபிரான்ஸ் ஆகும். மேற்குபிரான்ஸில் மேலும் சில பிரான்ஸ் பகுதிகள் இணைக்கப்படவேண்டும். கிழக்கு பிரான்ஸில் சராசரி ஜெர்மன் மொழிபேசும் ரினியின் கிழக்குப்பகுதி இணைக்கப்பட வேண்டும். மத்தியபிரான்ஸ் சந்தேகத்திற்கிடமாக இருந்தது, ஏனென்றால் அது மொத்த பிரான்ஸிலும் செல்வம் கொழிக்கும் பகுதி. இது லூயிஸின் மூத்த மகன் முதலாம் லோதயிருக்கு வழங்கப்பட்டிருந்தது. மத்தியபிரான்ஸ் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்திலிருந்து நீண்டு கீழ்பகுதியில் ரினியின் இருபுறமும் ஸ்விட்சர்லாந்தும் இத்தாலியும் இருந்தன. அந்த தவறான பங்கீடின் படியே நூற்றாண்டாக இருந்தது. வடக்குப்பகுதி லோதாரின்ஜியா (லோதர் இன பழங்குடியினர் இருந்ததால்) என்று மாறியது. பிரான்சு லோரியன், ஸ்விட்சர்லாந்து அல்ஸாசி என்று மாறியது. ஆட்சி வலுவடைந்தாலும், வலுவடையாவிட்டாலும், மேற்கோ கிழக்கோ மெதுவாக ஃப்ரான்சும், ஜெர்மனியும் இணைந்தன. ரினிலாந்து பிறகு, ஆட்சி மாறியது. சில நூற்றாண்டுகள் பர்கண்டியும், வட இத்தாலியும் கவனிப்பு இல்லாமல் போயின.
                               புராதன கரோலின்ஜியன்களின் பரம்பரை ஒன்பதாம் நூற்றாண்டில் ரினியின் இருபக்கமும் ஆதிக்க சக்தியில் பேரரசை ஆண்டது. ஆனால் 911 ல் ஜெர்மனியையும், 987 ல் ஃப்ரான் சையும் இழந்தார்கள். 919 களில் ஜெர்மனியை ஆட்சி செய்தவர்கள் சாக்ஸனின் வம்சாவழிகள். ஆனால், 987 ல் ஃப்ரான்சில் ஆட்சிக்கு வந்த ஹியூக் கேபெட் ஒரு ஃப்ராங்க். இவரின் வம்சாவழியினர் தங்கள் குலப்பெயரான ஃப்ராங்க் என்பதை மறக்காதிருக்க “ஃப்ரான்ஸ்” என மாற்றி நான்கு நூற்றாண்டுகளாக பாரிசிலிருந்து ஆண்டார்கள்.                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக