ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

டெல்லி சுல்தானேட் வரலாறு 7

முஹம்மது பின் துக்ளக் சீனாவையும், குராசானையும் சுன்னி முஸ்லீம் ஆட்சியின் கீழ் கொண்டுவர ஆசைப்பட்டு போருக்குத் தயாரானார். ஒருவருட காலமாக 300,000 வீரர்களை டெல்லியில் திரட்டினார். அடுத்த ஆண்டு போருக்கு கிளம்புவதற்கு முன் அரசு கஜானா காலியாகி விட்டது. சீனாவுக்கு செல்வதற்காக 100,000 வீரர்களைத் திரட்டினார். அவர்களுக்கு கொடுக்க ஊதியம் இல்லை. போருக்கு போன வீரர்களை ஹிமாலயா மலையில் இந்துக்கள் செல்லவிடாமல் தடுத்தார்கள். பல வீரர்கள் பனியில் இறந்து போனார்கள். திரும்பிய வீரர்களை தூக்கிலிட்டுக் கொன்றார். கீழிருந்து மேல்மட்டம் வரை அரசுப்பணியாளர்கள் அனைவருக்கும் ஊதியம் கொடுக்காமல் முடிந்தமட்டிலும் நாட்டு மக்களிடம் தாமாகவே வரிவசூலித்துக் கொள்ளச் சொன்னார். 1351 ல் புரட்சியாளர்களைத் துறத்திச் செல்லும்போது முஹம்மது பின் துக்ளக் மரணமடைந்தார். இவரது ஆட்சி ஒரு மன்னருக்கு உரியதாக இல்லாமல் ஏதோ நகைச்சுவைப் பக்கங்களாக இருந்ததாக ஒரு கருத்துண்டு. தமிழ்நாட்டில் பிராமண வகுப்பைச் சேர்ந்த நடிகரும், பத்திரிக்கையாளருமான சோ ராமசாமி என்பவர் ‘முஹம்மது பின் துக்ளக்’ என்று ஒரு திரைப்படத்தை 1970 ல் ஒரு இஸ்லாமிய மன்னரைக் கிண்டல் செய்யும் நோக்குடன் எடுத்தார். முஹம்மது பின் துக்ளக் இறப்பிற்குப் பிறகு, உறவினர் ஒருவரான மஹ்மூத் இப்ன் முஹம்மது என்பவர் ஒரு மாதத்திற்கும் குறைவாக ஆண்டார். பின்னர் 45 வயதான இன்னொரு உறவினர் ஃபிருஸ் ஷா துக்ளக் என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவரது தந்தையின் பின்னால் ஒரு சுவாரசிய கதை உண்டு. இவர் தந்தை பெயர் சிபாஹ் ரஜப். இவர் திலாபூரைச் சேர்ந்த இந்து இளவரசியான நைலாவை மணந்து கொள்ள கேட்டார். அதற்கு அவர் சம்மதிக்காததால், சிபாஹ் ரஜபும் விட்டுவிட்டார். பின்னால் சிலகாலங்களுக்குப் பிறகு, மன்னர் சுல்தான் முஹம்மது பின் துக்ளக் திலாபூர் மக்கள் செலுத்த வேண்டிய வரியை கட்டச்சொல்லி வற்புறுத்தினார். இதனால் திலாபூர் மக்களுக்கு பெரும் சிரம்ம் ஏற்பட்டது. அவர்கள் இளவரசியிடம் முறையிட, அவர் சுல்தானிடம் தான் சிபாஹ் ரஜபை திருமணம் செய்ய சம்மதிப்பதாகவும் தன் மக்களிடம் வரிகேட்டு தொல்லை செய்யக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கிறார். சுல்தானும் சம்மதிக்க சிபாஹ் ரஜபுக்கும், இந்து இளவரசி நைலாவுக்கும் திருமணமாகி அவர்களுக்குப் பிறந்தவர்தான் இந்த ஃபிருஸ் ஷா துக்ளக்.
ஃபிருஸ் ஷா துக்ளக்கின் ஆட்சியிலும் நிறைய குழப்பங்களும், கொலைகளும் நடந்ததாகக் கூறப்படுகிறது. இவர் இழந்த நிலப்பரப்புகளை மீட்டெடுக்க முனைந்தார். 11 மாதங்களாக பெங்கால் மீது படையெடுத்து சரியான தளபதி இல்லாததால் தோல்வி அடைந்தார். நாட்டில் சித்திரவதைகளை தடை செய்தார். ஷியா பிரிவினரின் மஹ்தி வழியையும், ஹிந்துக்களின் வழிபாடு முறைகளையும் வெறுத்தார். இவர் மதம் மாற மறுத்த இந்துக்களை எரித்துக் கொன்றதாகக் கூறுகிறார்கள். 1384 ல் உள்நாட்டுப்போர் நடந்தது. அதேநேரத்தில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை நாடுமுழுதும் கடைபிடித்தார். இவரது ஆட்சி முஹம்மது பின் துக்ளக் ஆட்சியைவிட சிறந்ததாக இருந்தது. வறுமையால் கைவிடப்பட்டிருந்த பல கிராமங்களையும், நகரங்களையும் சீர்படுத்தினார். பொருளாதாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்தார். பல மஸ்ஜிதுகள், மதரஸாக்கள், பாலங்கள் ஆகியவற்றைக் கட்டினார். யமுனா-காகர் மற்றும் யமுனா-சட்லஜ் நதிகளில் நீர்பாசன கால்வாய்களை அமைத்தார். டெல்லியில் வஸிராபாத் மஸ்ஜித் இவர் கட்டியதுதான். இந்துக்களுக்கு இடிந்த கோவில்களை சரி செய்து கொடுத்தார். இவர் போட்ட நீர்பாசன குழாய்கள் டெல்லியில் 19 ம் நூற்றாண்டுவரை உபயோகப்படுத்தினார்கள். 1388 ல் ஃபிருஸ் ஷா துக்ளக் இறந்த பிறகு ஆள்வதற்கு துக்ளக் வம்சத்தில் ஆள் இல்லாமல் போனது. அடுத்து ஆட்சியில் அமர்ந்த துக்ளக் கானும், அபுபக்கர் ஷாவும் உடனுக்குடன் இறந்து போனார்கள். தொடர்ந்து உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருந்தது. ஹிமாலயா பகுதியிலிருந்த இந்துக்கள் வரி கொடுக்கமுடியாது என்று போராட்டத்தில் இறங்கினார்கள். ஆட்சியிலிருந்த சுல்தான் முஹம்மது ஷா கலகம் செய்த பலர் மீது நடவடிக்கை எடுத்து கொன்றுபோட்டார். பல முஸ்லீம், இந்து மாகாணங்கள் தனியாகப் போயின. லாகூரை இந்துக்கள் தனியாக ஆளமுயல அவர்கள் மீது மகன் ஹுமாயூன் கான் தலைமையில் சுல்தான் முஹம்மது ஷா நடவடிக்கை எடுக்க இருந்தார். அதற்குள் 1394 ல் இறந்து போனார். அவர் மகன் ஹுமாயூன் கான் ஆட்சிக்கு வர இரண்டு மாதத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டு இறந்து போனார். பின் ஹுமாயூன் கானின் சகோதரர் நாசிர் அல் தீன் மஹ்முத் ஷா ஆட்சிக்கு வந்தார். இவருக்கு முஸ்லீம் தலைவர்களும், வஸீர்களும், அமீர்களும் ஆதரவு தந்தார்கள். இதற்கிடையில் டர்டார் கான் என்பவர் இரண்டாவது சுல்தானாக நாசிர் அல் தின் நுஸ்ரத் ஷா என்பவரை ஃபிரோசாபாதில் அறிவித்தார். இரு சுல்தான்களுக்கிடையில் மாதந்தோறும் சண்டை நடந்தது. 1398 ல் தைமூர் படையெடுத்து வரும்வரை அப்படியே இருந்தது. தைமூர் நுழைந்த வேகத்தில் சுல்தான்கள் இருக்கும் இடம் தெரியாமல் பறந்து போனார்கள். தைமூர் டெல்லியில் என்றைக்கும் சரித்திரம் மறக்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தினார். லட்சக்கணக்கான மக்களைக் கொன்று டெல்லியைக் கொள்ளையடித்தார்.
முஹம்மது பின் துக்ளக்கின் ஆட்சியின் போது மொரோக்கோவைச் சேர்ந்த இஸ்லாமிய பயணி இப்ன் பத்தூதா டெல்லிக்கு வருகை தந்திருக்கிறார். முஹம்மது பின் துக்ளக்கை சந்தித்த இப்ன் பத்தூதா அவருக்கு அம்புகள், ஒட்டகங்கள், 30 குதிரைகள், அடிமைகள் இன்னும் பல பொருட்களை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். முஹம்மது பின் துக்ளக்கும் அவருக்கு 2,000 வெள்ளி தினார்களும், அலங்கரிக்கப்பட்ட வீடும், மாதம் 5,000 வெள்ளி தினார் ஊதியத்திற்கு கிராமங்களில் வரி வசூலிக்கும் பணியும் கொடுத்தார். இப்ன் பதூதா ஒரு சூஃபி ஞானியுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக முஹம்மது பின் துக்ளக்கால் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டார். அந்த சூஃபி ஞானி கொல்லப்பட்டார். அடிமை வாணிபம் மிக உச்சத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக