ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

டெல்லி சுல்தானேட் வரலாறு 4

கில்ஜி ஆட்சிவம்ச வரலாறு

குரித்களின் ஆட்சிக்குப்பிறகு, டெல்லி சுல்தானேட்டின் இரண்டாவது ஆட்சியாளர்களாக கில்ஜி ஆட்சிவம்சத்தினர்கள் தோன்றினார்கள். இவர்களும் மத்திய ஆசியாவைச் சேர்ந்த துருக்கி இனத்தவர்கள். தற்போதைய ஆப்கானிஸ்தானின் கில்ஜி என்ற கிராமத்திலிருந்து வந்தவர்கள். துண்டுத்துண்டாக ஆண்டுகொண்டிருந்த பகுதிகளை ஒன்றுபடுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்கள். டெல்லியின் குரித் ஆட்சியாளர் குதுப்தீன் அய்பக்கிடம் முஹம்மது பின் பக்தியார் கில்ஜி என்பவர் இராணுவ ஜெனெரலாக இருந்தார். இவர்தான் முதலில் பெங்காலை வெற்றி கொள்ள துணை புரிந்தார். இவருக்கு பிறப்பிலேயே கால் முட்டியிலிருந்து அடிப்பாதம் வரை வழக்கத்தைவிட நீண்டிருக்கும். ஆனால் இடுப்புக்கு மேற்புறம் குறைவாக இருக்கும். கோர் பகுதியில் ஆரம்பத்தில் திவான் இ அர்தாக நியமிக்கப்பட்ட இவர் குதுப் அல்தீன் படையில் சேர ஆர்வம் காட்டினார். ஆனால் தகுதியின்மையால் நிராகரிக்கப்பட்டு, கிழக்குப்புறம் சென்று மாலிக் ஹிஸ்பர் அல்தீனுடன் சேர்ந்து வட இந்தியாவில் பதயூன் போரில் கலந்து கொண்டார். சிலகாலம் கழித்து அவ்த் பகுதிக்குச் சென்ற இவரின் திறமை அறிந்த மாலிக் ஹுசம் அல்தீன், பக்தியார் கில்ஜிக்கு பெரிய பண்ணை ஒன்றை மிர்சாபூர் மாகாணத்தில் கொடுத்தார். அங்கிருந்து பக்தியார் கில்ஜி திறமையும், வேகமும் கொண்ட இஸ்லாமிய படை ஒன்றைத்தயார் செய்து அருகாமை பகுதிகளை வென்றார். மிகச்சிறந்த 18 குதிரைவீரர்களைக் கொண்ட இவர் படை மிகவும் புகழ்பெற்றது. 1203 ல் பீகாரை வென்றதின் பிறகு, டெல்லி ஆட்சியாளரின் கவனம் பெற்றார். லட்ச்மன் சென் என்பவரை எதிர்த்து நபத்விப் பகுதியை வென்றார். 1206 ல் தேவகோட்டையை விட்டு திபெத் நோக்கி புறப்பட்ட பக்தியார் கில்ஜி அலி மர்தான் கில்ஜி என்பவரை கிழக்குப்பகுதியின் முக்கியமான பாரிசல் பகுதியைக் கண்காணிக்குமாறு உத்தரவிட்டார். அஸ்ஸாமை வென்று உடல்நலம் சரியில்லாமல் தேவகோட்டை திரும்பிய பக்தியார் கில்ஜியை கொடுமைக்காரன் அலி மர்தான் கில்ஜி படுகொலை செய்தார். பக்தியார் கில்ஜியின் படையிலிருந்த முஹம்மது ஷிரான் கில்ஜி என்பவர் பழிவாங்கும் விதமாக அலி மர்தான் கில்ஜியைக் கைது செய்தார். பக்தியார் கில்ஜிக்குப் பிறகு, கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜி பொறுப்புக்கு வந்தார். சிறையிலிருந்து தப்பித்த அலி மர்தான் கில்ஜியை குதுப்தீன் அய்பக் பெங்காலின் கவர்னராக நியமித்தார். இரண்டாண்டுகள் கவர்னராக இருந்த அவரை கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜி கொன்று மீண்டும் தான் பெங்காலின் கவர்னராக வந்தார். தேவகோட்டையிலிருந்த பெங்காலின் தலைநகரத்தை கௌருக்கு மாற்றி பலமான கடற்படையை அமைத்தார். 15 ஆண்டுகள் பெங்காலை நிர்வகித்த கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜி கிழக்கு பெங்காலின் வாங்கா, அஸ்ஸாமின் கமரூபா, வடபீகாரின் டிர்ஹுத், வட ஒரிஸ்ஸாவின் உத்கலா ஆகியவற்றை வென்று கப்பம் செலுத்த வைத்தார். கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜி பீகாரை வென்றபின் இவர் வளர்ச்சியின் மீது கவனம் கொண்ட டெல்லி சுல்தான் இல்டுட்மிஷ் இவரை அடக்கும் வண்ணமாக 1224 ல் இருபடைகளுடன் பெங்கால் மீது படையெடுத்தார். பீகாரின் தெலியாகர் என்ற இடத்தில் மோதிக் கொண்டதில் கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜியின் கடற்படையும், தரைப்படையும் தோல்வியடைந்தன. இதனால் டெல்லிக்கு 8,000,000 டாகாவும், 38 யானைகளையும் கொடுக்கச் சொல்லி, தனது பெயரிலேயே நாணயமும் வெளியிட வேண்டுமென்று சுல்தான் இல்டுட்மிஷ் உத்தரவிட்டார். இல்டுட்மிஷ் படைகளை விலக்கிக் கொள்ள மீண்டும் கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜி பெங்காலை சுதந்திரமாக அறிவித்துக் கொண்டார். இதனால் மீண்டும் படையெடுத்து வந்த இல்டுட்மிஷ் கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜியைக் கொன்று பெங்காலை டெல்லி சுல்தானேட்டுடன் நேரடியாக இணைத்துக் கொண்டார். நாலாந்தா பல்கலைக்கழகத்தைச் சேதப்படுத்தியதாக சொல்லப்படும் கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜி பல மஸ்ஜித்களையும், மதரஸாக்களையும் இந்தியப் பகுதிகளில் கட்டினார்.
அடுத்து கில்ஜி குடும்பத்தில் மாலிக் ஃபிருஸ் என்பவருக்குப் பிறந்த ஜலாலுத்தீன் ஃபிருஸ் கில்ஜி என்பவரை டெல்லி சுல்தான் கைய்குபாத் பாரான் பகுதியில் தலைவராகவும், இராணுவ தளபதியாகவும் நியமித்திருந்தார். சுல்தான் கைய்குபாத் வலிப்பு நோயால் உறுப்புகள் செயலிழக்க, டெல்லித் தலைவர்கள் கைய்குபாதின் மூன்றுவயது குழந்தை கயுமார்ஸை சுல்தானாகத் தேர்ந்தெடுத்தார்கள். இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திய ஜலாலுத்தீன் கில்ஜியும், அவர் மகன்களும் டெல்லியில் நுழைந்து குழந்தை கயுமார்ஸைக் கொன்று, எதிர்த்த இராணுவத்தை வென்று டெல்லியின் சுல்தானேட்டைக் கைப்பற்றினார்கள். சுல்தான் கைய்குபாதைக் கொன்று யமுனா நதியில் வீசினார்கள். பின்னர் டெல்லி சுல்தானேட்டின் முதல் கில்ஜி ஆட்சிவம்ச ஆட்சியாளராக ஜலாலுத்தீன் கில்ஜி 1290 ல் ஆனார். முந்தைய குரித் ஆட்சியாளர் பால்பனின் கீழ் இருந்தவர்களின் நிர்வாகத்தை அவர்களிடமே ஒப்படைத்தார். தன் மூத்த மகனுக்கு ‘கான் கானன்’ என்றும், இரண்டாவது மகனுக்கு ‘அர்கலி கான்’ என்றும், மூன்றாவது மகனுக்கு ‘கத்ர் கான்’ என்றும் பட்டங்களை வழங்கினார். தன் இளைய சகோதரருக்கு ‘யக்ருஷ் கான்’ என்று பட்டமளித்து இராணுவ அமைச்சராக்கினார். மருமகன்களான அலாவுத்தீன் கில்ஜி, அல்மாஸ் பெக் ஆகியோருக்கும் அரண்மனையில் பதவிகள் வழங்கினார். 1292 ல் 100,000 வீரர்களுடன் சூறாவளி போல் இந்தியாவுக்குள் வந்த மங்கோலியப் படைகளை சாதுரியமாக வென்றார். 1296 ல் தன் மருமகன் அலாவுத்தீன் கில்ஜியால் படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் ஜுனா முஹம்மது என்றழைக்கப்பட்ட அலாவுத்தீன் கில்ஜி இரண்டாவது கில்ஜி ஆட்சிவம்ச டெல்லி சுல்தான் ஆனார். மிகச்சிறந்த ஆட்சியாளர் என்று பெயர் பெற்ற இவரிடம் மாலிக் காஃபூர் என்ற திறமையான அரவாணி தளபதியாக இருந்தார். கொஞ்சம் மாலிக் காஃபூரைப் பற்றி தெரிந்து கொண்டு மேலே செல்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக