வியாழன், 6 ஆகஸ்ட், 2015

சிலுவைப்போர் 3

1096 ல் பைஸாந்திய கப்பல்கள் அணிவகுக்க, பியர்ரி எர்மிட் (PIERRE L’ERMIT) என்பவன் தலைமையில் பாஸ்போரஸ் ஆற்றைக் கடந்து இஸ்லாமிய துருக்கிப் பகுதிக்கு வந்தது. கிரேக்க தேவாலயங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு, ‘முஸ்லீம்களை வெளியேற்று வோம்’ என்று வெறியோடு முன்னேறினார்கள். துருக்கிய விவசாய பூமிகளை தீயிட்டு கொளுத்தினார் கள். இரக்கமில்லாமல் அப்பாவி முஸ்லீம் பொதுமக்களைக் கொன்று, அவர்களின் குழந்தைகளை உயிரோடு தீயிட்டு கொளுத்தினார்கள். அணிந்திருக்கும் உடைகளை வைத்தே கொன்றார்கள். ஆனால் அதில் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள், யூதர்களும் அடங்குவார்கள். அவர்களின் குழந்தைகளை தீயின் மேலே கம்புகளில் வைத்து சுட்டுச் சாப்பிட்டார்கள். பியர்ரி எர்மிட்டின் படைகள் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சத்தில் இருந்தார்கள். பைஸாந்தியப் பேரரசர் அலெக்சியஸின் மகள் இளவரசி அன்னா கோம்னினா, இறந்த உடல்கள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்ததாகவும். அவள் தந்தை கொடுமைகளை பார்த்து ஏன் சிலுவைப் படைகளை அழைத்தோம் என்று வருத்தப்பட்டதாகச் சொன்னாள். நிகாயாவில் (தற்போதைய இஸ்னிக் நகரம்) நடந்த முதல் போரில் துருக்கிய கிலிஜ் அர்சலன் வெற்றி பெற்றார். ஆனால் அது நீண்ட நாள் நிலைக்கவில்லை.
சிலுவைப்போருக்காக கான்ஸ்டாண்டிநோபிள் வந்த படைகள் வரும் வழியெல்லாம் இருந்த நகரங்களில் கொடுமைகளை செய்து கொண்டு வந்தார்கள். 60,000 பேர் வரை இருந்த படையில் 5,000 குதிரைப்படையினர் இருந்தார்கள். இதில் ரெய்மண்டின் படை 8,500 வீரர் களும், 1,200 குதிரைப்படை வீரர்களும் ஆவார்கள். வந்த சிலுவைப் போராளிகளின் தலைவர்கள் உணவுக்காக அலெக்சியஸை நாடினார்கள். சிறிது நாளில் அவர்களின் நடவடிக்கைகளை அறிந்த அலெக் சியஸ் வெறுப்படைந்தார். மேலும் தந்தை ராபர்ட் கூயஸ்கார்டுடன் சேர்ந்து பலமுறை பைஸாந்தியப் பிரதேசங்களை ஆக்கிரமித்த நார்மன் எதிர் போஹிமாண்டும் அதில் இருந்தான். போருக்காக வந்த இளவரசர்கள் அலெக்சியஸை தலைமை தாங்க விரும்பினார்கள். ஆனால் அலெக்சியஸ் அதை விரும்பாமல் அவர்களை விரைவாக அவர்களை மைனர் ஆசியாவுக்குள் அனுப்ப முயற்சித்தான். அவர்களின் தலைவர்களை துருக்கிகளிடமிருந்து கைப்பற்றும் இடங்களை விசுவாசத்துடன் திருப்பித் தருமாறு கேட்டான். முதலில் காட்ஃபிரே உறுதியளிக்க மற்றவர்களும் ஒவ்வொருவராக அலெக்சியஸுக்கு உறுதிமொழி அளித்தனர். ரெய்மண்ட் மட்டும் உறுதிமொழி கூறாமல் பைஸாந்தியப் பேரரசுக்கு எந்த தொந்திரவும் செய்ய மாட்டேன் என்று கூறினான். அனைத்துப் படைகளையும் பாஸ்போரஸ் ஆற்றின் கரைக்கு அழைத்து வந்த அலெக்சியஸ், எப்படி செல்ஜுக் இராணுவத்தை கையாள்வது என்று அறிவுறுத்தினான்.
அலெக்சியஸ் தன் ஜெனரல்களான மானுவேல் பௌடூமிட்ஸ் மற்றும் டடிகியோஸ் ஆகியோரை உதவிக்கு அனுப்பினான். முதலாம் கிலிஜ் அர்சலனின் சுல்தானிய ரோம தலைநகராக இருந்த நிகாயாவை மீண்டும் சிலுவைப்படைகள் தாக்கினார்கள். அப்போது கிலிஜ் அர்சலன் தன் குடும்பம், செல்வங்களை விட்டுவிட்டு மத்திய அனடோலியாவில் ஒரு படையெடுப்பில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு சிலுவைப் படைகளின் பலம் தெரியவில்லை. நிகாயாவில் நீண்ட போர் நடந்து கொண்டிருந்தது. இது கிலிஜ் அர்சலனை எட்ட அவர் விரைந்து வந்து மே மாதம் 16 ந் தேதி சிலுவைப் படைகளுடன் மோதினார். இரு தரப்பிலும் கடும் சேதம் விளைந்தது. கடுமையான போரில் சிலுவைப்படைகளின் கை ஓங்கியது. கிலிஜ் அர்சலன் சற்று பின் வாங்கினார். அலெக்சியஸ் பெரிய மரத்துண்டுகளை நிலத்தில் பரப்பி துருக்கிய பாதுகாப்புப் படையை முடக்கி ஜூன் 18 ல் சரணடைய வைத்தான். நிகாயா நகரம் பைஸாந்தியரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, சிலுவைப் போராளிகள் நகருக்குள் புகுந்து கொள்ளையடித்து அட்டூழியம் புரிந்ததால் பேரரசுடன் குழப்பம் நிலவியது. சிறைப் பிடிக்கப்பட்ட பல துருக்கிய வீரர்களை அடிமைச் சந்தையில் விற்றார்கள். துருக்கிய படைகள் தோற்ற செய்தி மொத்த அரபு நாடுகளுக்கும் பரவியது. வழியிலுள்ள மொத்த அரபு நாடுகள், நகரங்கள், கிராமங்கள் ஒருவித அச்சத்தோடு இருந்தன. சிலர் தங்கள் வீடுகள், சொத்துக்களை விட்டு தூரப்பகுதிகளுக்கு தங்கள் உயிர்களைக் காத்துக்கொள்ள ஓடினார்கள். உறுதி மொழியை மீறி சிலுவைப்போராளிகள் நடந்து கொண்டாலும், அலெக்சியஸ் அவர்களுக்கு நல்ல ஊதியம் கொடுத்தார்.
ஜூன் மாத இறுதியில் சிலுவைப்படைகள் அனடோலியாவை நோக்கி நகர்ந்தன. சில பைஸாந்திய படைகளுடன் தளபதி டடிகியாஸும் உடன் சென்றான். மேலும் சில பைஸாந்திய படைகள் பின்னர் வரும் என நம்பப்பட்டது. அவர்கள் படையை நார்மன்கள் தலைமையில் ஒன்றும், ஃப்ரென்ச்கள் தலைமையில் ஒன்றுமாகப் பிரித்துக் கொண்டார்கள். இரண்டும் டோரிலாயம் நகரில் சந்திப்பதாக திட்டம். ஜுலை 1 ல் ஃப்ரென்ச் படைகளுக்கு முன்பாகச் சென்ற நார்மன்கள் படையை டோரிலாயம் நகரில் கிலிஜ் அர்சலன் எதிர் கொண்டார். இப்போது எதிரியின் பலம் அறிந்ததால் கிலிஜ் அர்சலன் வேகமாக அம்பெறியும் திறன்படைத்த வீரர்களுடன் பெரும் படையைத் திரட்டி நார்மன்களைச் சுற்றி வளைத்தார். சரியான தருணத்தில் ஃப்ரென்ச் படைகள் காட்ஃப்ரே தலைமையில் வர துருக்கிய படைகளின் திட்டம் நிறைவேறவில்லை. துருக்கிய படை இருபுறமும் சமாளிக்க முடியாமல் பின் வாங்கியது. எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் சிலுவைப்படைகள் அனடோலியாவில் நுழைந்தது. அது சரியான கோடைகாலம், கிலிஜ் அர்சலன் நகரை விட்டு வெளியேறும் முன் சரியாகத் திட்டமிட்டு நகரின் அனைத்து வளங்களையும் தீயிட்டுக் கொளுத்தினார். இதனால் சிலுவைப்படைகளுக்கு போதிய உணவு இல்லாமல் வீரர்களும், குதிரைகளும் இறந்தன. நகரின் சில கிறிஸ்தவர்கள் அவ்வப்போது உணவு கொடுத்தாலும், படைகள் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் கொள்ளையடித்தும் திருடியும் வந்தனர். சிலுவைப்படைகளை யாரும் தலைவராக இருந்து கட்டுப்படுத்த முடியவில்லை. அதேமர் என்பவர் மட்டும் மதத்தலைவராக மதிக்கப்பட்டார். இத்தாலி போலோனியாவைச் சேர்ந்த பால்ட்வின் சிலிசியன் கேட்ஸ் என்ற பகுதியைக் கடந்த பின் அர்மேனியாவில் தன் படையுடன் தங்கினார். போருக் குப் பிறகு, ஐரோப்பாவில் அவருக்கிருந்த ஒரே சொத்தான அவர் மனைவி இறந்து போனதால் திரும்பி ஐரோப்பா போகும் எண்ணம் அப்போதைக்கு அவருக்கு இல்லை. புனித பூமியை மீட்டெடுக்கும் பணி யில் தன்னை அற்பணித்துக் கொண்டார். புராதன கிறிஸ்தவராக இருந்ததால் அர்மேனியர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த எடிஸ்ஸாவின் ஆட்சியாளர் தோரஸ் 1098 ல் பால்ட்வினைத் தத்தெடுத்துக் கொண்டார். பின்னாளில் தோரஸ் கொல்லப்பட பால்ட்வின் எடிஸ்ஸாவின் ஆட்சியாளராக மாற முதல் சிலுவைப் போராளிகளின் மாகாணமாக எடிஸ்ஸா ஆகியது.
சிலுவைப்படைகள் அரபுகளால் அல் ருஹா என்று அறியப்பட்ட எடிஸ்ஸாவுக்கு (தற்போது இது துருக்கியில் உர்ஃபா என்ற பெயருடன் இருக்கிறது) முன்னேறியது. அங்கும் பெருவாரியான மக்களைக் கொன்று ஃப்ரான்சின் முதலாம் பால்ட்வின்னின் தலைமையில் முதல் லத்தீன் மன்னராட்சியை (ஐரோப்பிய காலனியாக) நிறுவினார்கள். கொடுமைக்குப் பெயர் போன பால்ட்வின் அர்மேனிய கிறிஸ்தவ இளவரசர், இளவரசியை எடிஸ்ஸாவின் அதிகாரத்தை கைவிடச் சொன்னான். அவர்கள் பயந்து இவனை வளர்ப்பு தந்தையாக ஏற்றுக்கொள்ள சம்மதித்தப் பின்னும் அவர்களைக் கொன்றான். பின் படைகள் தென் பகுதியில் அரபுகள் நிறைந்த சிரியாவின் பெரிய நகரமான ஆண்டியாக்கை நோக்கி நகர்ந்தது. (தற்போது இது துருக்கியின் அண்டாக்கியாவாக உள்ளது). இந்நகரம் பலமான கோட்டைகளுடன், பெரும் உணவு கிடங்குகளுடன் எப்படிப்பட்ட தாக்குதலையும் சமாளிக்கும் வண்ணம் இருந்தது. 12,000 மீட்டர் நீளத்தில் நகரம் சுவர்களால் பாதுகாக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றும் 60 அடி நீளம் உயரத்தில் 400 பெரிய கண்காணிப்புக் கோபுரங்கள் உள்ளன. இரத்தவெறி பிடித்த 50,000 சிலுவைப்படை வீரர்கள் எட்டு மாதமாக (அக்டோபர் 1097 லிருந்து 1098 ஜூன் வரை) கடும் குளிரிலும், மழையிலும் நகரின் சுவரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களால் வெற்றி மீறி உள்ளே நுழைய முடியவில்லை. உணவில்லாமல் பஞ்சத்தில் வாடிப்போன சிலுவைப்படைகள் அருகாமை அரபு நகரங்கள், கிராமங்களில் நுழைந்து கால்நடைகள், தானியங்களைக் கொள்ளை அடித்தனர். ஆண்டியாக் நகரத்தில் நுழைய முடியாத ஆத்திரத்தில் அலிப்போ நகரவாசிகளின் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தலைகளை மட்டும் வெட்டி, நகரச் சுவற்றின் உள்ளே மழை போல் கொட்டினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக