வெள்ளி, 26 செப்டம்பர், 2014

அப்பாஸிட்கள் வரலாறு 3

756 ல் அப்பாஸிட் கலீஃபா அல் மன்சூரும் 4000 வீர்ர்களுடன் டாங்க் எனும் பேரரசை சேர்ந்தவர்களின் ‘அன் ஷி’ புரட்சிப்படையை எதிர்கொண்டார். கருப்புக்கயிறு கட்டிய டாஸிகள் என்றும் அறியப்பட்ட இவர்களை பெர்ஷியர்கள் உமய்யாத்களை ஆட்சியில் இருந்து அகற்ற அழைத்து வந்தனர். டாஸிகள் பாக்தாத் நகரத்தை நிர்மாணிப்பதில் பெரும் பங்காற்றினார்கள். உலகின் முதல் காகித தொழிற்சாலையை பாக்தாதில் நிர்மாணித்து அப்பாஸிட்களின் புத்திசாலித்தனமான புதிய எழுச்சிக்கு காரணமானார்கள். அடுத்த பத்தாவது ஆண்டில் அப்பாஸிட்கள் மற்றொரு காகித ஆலையை கார்டோபா நகரில் தொடங்கினார்கள். 
புதிய முஸ்லீம்களாக மதம்மாறிய பெர்ஷியர்களின் முழுஆதரவும் அப்பாஸிட் களுக்கு இருந்தது. பெர்ஷியாவை சற்று ஒட்டி பாக்தாத் நகரம் இருந்ததால் பெர்ஷிய சரித்திரமும், கலாச்சாரமும் இணைந்து காணப்பட் டது. புதியதாக நியமிக்கப்பட்ட மந்திரிகளுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டு மத்திய அரசின் முன்னேற்றத் திற்கு உதவினார்கள். கலீஃபா அல் மன்சூர் அவர்கள் அரண்மனைக்கு முஸ்லீம் அல்லாதவர்களையும் வரவேற்றார். அப்பாஸிட்களுக்கு குறிப்பாக பெர்ஷிய, கோரசானிய அரபுகளின் ஒத்துழைப்பு பெரிதும் தேவைப்பட்டது. ஏனென்றால் அவர்கள் உமய்யாத்களை எதிர்ப்பதில் ஆர்வம் காட்டினார்கள். அப்பாஸிட்கள் திருக்குரானையும், ஹதீஸ்களையும், மதபோதகர்களையும் பெரிதும் மதித்தார்கள். அப்பாஸிட்கள் ஆட்சியில் இஸ்லாமிய உலகம் கிழக்கு நோக்கி நகர்ந்தது. அது சிரியாவிலிருந்து மெஸோபொடாமியா வரை நீண்டது. ஈராக்கில் டிக்ரிஸ் நதிபாயும் பாக்தாதை அப்பாஸிட்கள் தலைநகரமாக்கிக் கொண்டார்கள். பாக்தாத் சஸானியர்களின் முன்ணனி நகரமான செஸிபோனிலிருந்து இருபது மைல்கள் மேற்புறத்தில் இருந்தது. மேலும், பாக்தாதின் வடக்கே சமர்ரா என்னும் புதிய நகரத்தை உருவாக்கினார்கள். அப்பாஸிட்கள் நீண்ட கால பெர்ஷிய நிர்வாகத் திறனையே பாக்தாதில் கையாண்டார்கள். பெர்ஷிய முஸ்லீம்களும் அரபு முஸ்லீம்களுடன் இரண்டறக் கலந்திருந்தனர். 
இஸ்லாம் வெகு வேகமாக உலகில் சர்வதேச மதமாகப் பரவிக் கொண்டிருந்தது. மெஸோபொடாமியா மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் புராதன நகர அந்தஸ்த்தைப் பெற்றுக்கொண்டிருந்தது. முதல் முந்நூறு ஆண்டுகால ஆட்சி அப்பாஸிட்களின் ஆட்சி இஸ்லாமிய உலகின் பொற்காலமாக விளங்கியது. பாக்தாதும், சமர்ராவும் வாணிபத்திலும், கலையிலும் சிறந்து விளங்கின. புதிய தொழில்நுட்பங்களும், நவீன செயல் முறைகளும் இவர்களின் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டன. முஸ்லீம்களும், முஸ்லீமல்லாதவர்களும் உலகின் சிறந்த புத்தகங்களை அரபு மொழி யில் மொழி பெயர்த்தனர். பல அரிய கலைப் படைப்புகள் அரபு, பெர்ஷிய, துருக்கி  ஹீப்ரு மற்றும் லத்தீன் மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டன. இதனால் ரோம, இந்தியா, சீனா, எகிப்து, வடஆப்பிரிக்கா மற்றும் கிரேக்கர்களின் பல அரிய புராதனப் படைப்புகள் அரபுக்களிடம் சென்றடைந்தது. கலீஃபா ஹாருன் அல் ரஷீத் அவர்களின் ஆட்சியிலும், பின் வந்த கலீஃபாக்களின் ஆட்சியிலும் திறமையான சாதனைகள் நிகழ்ந்தன. அப்பாஸிய ஆட்சியின் கீழிருந்த விஞ்ஞானிகள் அரிய பல இஸ்லாமிய அறிவியல் படைப்புகளை மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகளுக்கு மாற்றினார்கள். இன்றியமையாத உலகப்புகழ் பெற்ற ‘அல் ஜீப்ரா’ என்னும் கணித வியல் முஹம்மது இப்ன் மூஸா அல் க்வாரிஸ்மி என்பவரால் படைக்கப்பட்டது தான். மேலும் இவர் அரபிய, இந்திய எண் வடிவத்தையும் உண்டாக்கினார். இப்ன் ஹைதம் என்பவர் விஞ்ஞானத்தின் ஒளியியலுக்குரிய அரிய கண்டுபிடிப்பான உள்வாங்கி இயங்கும் ஆற்றலை 1021 ல் கண்டுபிடித்தார். மருத்துவதுறையிலும் அப்பாஸிய காலம் சிறந்து விளங்கியது. பெர்ஷிய விஞ்ஞானி இப்ன் சினா (AVICENNA) வின் உடற்கூறு மற்றும் நோய் தோன்றும் விதம் குறித்த கண்டுபிடிப்பு இன்றளவும் தொடரப்படுகிறது. இப்ன் சினா எழுதிய ‘தி கேனன் ஆஃப் மெடிசின்’ மற்றும் ‘தி புக் ஆஃப் ஹீலிங்க்’ என்ற மருத்துவ சம்பந்தமான தகவல்களஞ்சியத்தைத் தொடாமல் யாரும் மருத்துவ ஆராய்ச்சியே செய்யமுடியாது. இவரின் பல அரிய படைப்புகள் தான் ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்படி மருத்துவ ஆராய்சிக்கு பயன்பட்டது. வியப்பான தகவல் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே பாக்தாத் நகரத் தில் 800 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருந்தார்கள். தட்டம்மை மற்றும் சின்னம்மை நோயின் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 
வானவியலில் பூமியின் மிகத்துல்லியமான மைய அளவைக் குறித்ததில் அல் பத்தானி என்ற இஸ்லாமிய விஞ்ஞானி முன்னோடியாகத் திகழ்ந்தார். இந்த கண்டுபிடிப்பை மேலும் விரிவாக்க ஐரோப்பாவுக்கும் கொண்டு சென்றார். அதே போல் திரவஆராய்ச்சியில் ஜாபிர் இப்ன் ஹய்யான் (GEBER) முன்னோடியாக இருந்து பல திரவகலப்புகளைப் பற்றி எழுதியுள்ளார். மேலும் திரவ வடிகட்டுதல் ஆராய்ச்சியில் பலவற்றைக் கண்டுபிடித்து ஐரோப்பாவில் பரப்பினார். கற்பனைக் கதைகளில் உலகப்புகழ் பெற்ற “ஆயிரத்தோரு அரபு இரவுகள்’ (THE BOOK OF ONE THOUSAND AND ONE NIGHTS) படைக்கப்பட்டதும் இந்த கால கட்டத்தில் தான். இந்திய மூலக்கருவில், பெர்ஷிய நடையையும் கலந்து, மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா கதைகளை இணைத்து புதிய வடிவில் அனைவரையும் படிக்க படிக்க கவர்ந்திழுத்தது இதன் சிறப்பு. இது பத்தாம் நூற்றாண்டில் ஆரம்பித்து பதினான்காம் நூற்றாண்டில் முடிவுற்றது. இந்த கதைகளில் எண்களும், கதைகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருக்கும். பதினெட்டாம் நூற்றாண்டில் அண்டோய்னி கல்லண்ட் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து மேற்கத்திய நாடுகளில் பிரபல்யப்படுத்தினர். அலாவுத்தீன், சிந்துபாத் மற்றும் அலிபாபா கதாபாத்திரங்கள் மேற்கத்திய கலைகளில் கையாளப்பட்டன.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக