திங்கள், 20 ஜூலை, 2015

சௌதி அரேபியா வரலாறு 6

அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் வேலை இல்லாதவர்களுக்கு சிறப்பூதியம், கல்வி மற்றும் வீடுகட்ட உதவிகள் என்று 37 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்தார். 2013 ல் குடும்ப வழக்குகளுக்கென்று தண்டனையாக 50,000 ரியால்கள் மற்றும் ஓராண்டு சிறைத்தண்டனையும் தீர்ப்பாக சட்டம் கொண்டுவந்தார். 2007 ல் அப்போஸ்தலிக் அரண்மனை சென்று பதினாறாம் போப் பெனெடிக்டைச் சந்தித்து போப்பைச் சந்தித்த முதல் சௌதி மன்னரானார். 2008 மக்கா மாநாட்டில் அனைத்து முஸ்லீம்களும் யூத, கிறிஸ்தவ தலைவர்களுக்கெதிராக ஒரே மாதிரி பேச வேண்டும் என்றார். அமெரிக்காவுக்கு அதிக மதிப்புள்ள பரிசுகளைக் கொடுத்தவர் இவர்தான். 300,000 டாலர் மதிப்பிலான பொருட்களை இரண்டாண்டுகளில் கொடுத்தார். 132,000 டாலர் மதிப்பில் ரூபி வைரம் பரிசளித்தார். ஈராக் மீதான அமெரிக்கா ஆக்கிரமிப்பை எதிர்த்தார். ஆனாலும் ஒத்துழைப்பு கொடுத்தார். 2008 ஏப்ரலில் ஈராக்கின் அமெரிக்க தூதர் ரயான் க்ராக்கருக்கும், ஜெனரல் டேவிட் பெட்ராயிசுக்கும், ‘பாம்பின் கழுத்தை வெட்டிவிடுங்கள்’ என்று சொன்னதாக ‘விக்கிலீக்ஸ்’ செய்தி வெளியிட்டது. அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் ஈரான் ஹிஸ்பொல்லாஹ் போன்ற அமைப்பை ஆப்பிரிக்க நாடுகளில் அமைக்க முயற்சிக்கின்றது அதனால் விளையும் தீமைகளைப்பற்றி அது கவலைப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். இதன்பேரில் ஈரானிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் பலத்த வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். 2014 ல் பஹ்ரைன் விவகாரத்தில் சௌதி படைகளை அனுப்பி தொழிற்சாலைகளுக்கு பாதுகாப்பளித்தார். இவர் ஈரானின் நியூக்ளியர் திட்டங்களை அழிக்க அமெரிக்காவிடம் கோரினார் என்றும் ‘விக்கிலீக்ஸ்’ செய்தி வெளியிட்டது. 1990 லிருந்து சீனாவிடனான தூதரக உறவிலிருந்து 2006 ல் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பெய்ஜிங்க் சென்று வாணிப ஒப்பந்தமும் செய்து கொண்டார். இதனால் சீனாவிடமிருந்து மிகப்பெரிய இறக்குமதி செய்யும் நாடாக ஆனது. மேலும், 8 பில்லியன் டாலருக்கு ஃப்யூஜியன் சுத்திகரிப்பு ஆலைக்கு சீனாவில் முதலீடு செய்தார். 2011 ல் துனீஷிய தலைவர் ஸைன் எல் அபிதீன் பென் அலிக்கு இனி அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற அடிப்படையில் அடைக்கலம் தந்தார். சிரியாவின் பஷார் அல் அஸ்ஸாதிடமும் நட்புறவில் இருந்தார். பின்னர் சிரியாவில் உள்நாட்டுக்கலவரம் அதிகமானவுடன் தூதரக அலுவலகத்தை மூடச்செய்து விட்டு தூதரை சௌதிக்கு அழைத்துக் கொண்டார். 2003 ல் ‘பாரேட்’ இதழில் டேவிட் வல்லாச்சின்ஸ்கி என்பவர், மன்னர் ஃபஹ்தும், அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸும் இரண்டாவது மோசமான சர்வாதிகாரிகள் என்றார். தீவிரமாக ஷரீயா சட்டத்தைப் பின்பற்றுவதால் இவ்வாறு குறிப்பிட்டார். இவர் கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றிற்கு மரணதண்டனை கொடுப்பதையும், பெண்களுக்கு அதிகப்படியான சுதந்திரம் கொடுப்பதையும் பலர் விமர்சனம் செய்தார்கள். ஹஜ் புனிதபயணம் வந்த ஷியா பிரிவினரைக் கைது செய்ததற்காகவும் விமர்சனம் செய்யப்பட்டார். 2007 ல் மனிதஉரிமை கழகம் சௌதி அரசாங்கம் ‘அஹமதிய்யா’ என்ற பிரிவினரிடையே காட்டும் பிரிவினையை விலக்கிக் கொள்ள வேண்டி கடிதம் எழுதியது. ஆனால், சௌதி அப்படி ஒரு கடிதம் வந்ததாகவே இதுவரை காட்டிக்கொள்ளவில்லை.
சௌதி அரேபியாவின் இராணுவ பலத்தை 260,000 வீரர்களாக உயர்த்தினார். அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸுக்கு 30 மனைவிகளும், 35 குழந்தைகளும் உள்ளனர். இளவரசி அலனூத் மூலம் பிறந்த மகள்களில் சாஹர்ம் ஜவஹர் ஆகியோர் 13 வருடகாலம் வீட்டுக்காவலில் இருந்ததாக வீடியோ வெளியிட்டு, லண்டனில் சௌதி அரேபிய தூதரகத்தில் முறையிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 2010 லிருந்து வெளித்தொடர்புகளிலிருந்து விலகி இருந்தார். ஃப்ரான்சிலிருந்து வந்த அழைப்பையும் புறக்கணித்தார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தடியுடன் காணப்பட்டார். 2014 ல் அமெரிக்க தூதருடன் உரையாடும் போது மூக்கில் சுவாசக்குழாய் பொருத்தப்பட்டதிலிருந்து அவர் நோய்வாய்ப்பட்டிருந்ததாக அறியப்பட்டது. 2010 லிருந்து 2012 வரை நான்கு முறை முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தார். இரண்டுமுறை அமெரிக்காவிலும், இரண்டுமுறை ரியாதிலும் செய்து கொண்டார். இவையெல்லாம் பின்னர் தான் தெரியவந்தது. அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் ரியாதில் கிங் அப்துல் அஜீஸ் நூலகமும், மொரோக்கோ காசாப்ளாங்காவில் ஒரு நூலகமும் திறந்தார். கத்ரீனா புயலுக்குப்பின் நியூ ஆர்லன்சில் உயர்பள்ளிக்கூடம் கட்ட 300,000 டாலரும், 2008 ல் உலக உண்வுத்திட்டத்திற்கு 500 மில்லியன் டாலரும், சீனாவின் சிசூவான் பூகம்பத்திற்கு 50 மில்லியன் தொகையும், 10 மில்லியன் உடனடி நிவாரணப் பொருள்களும், கிங் அப்துல் அஜீச் விஞ்ஞானம் மற்றும் தொழிற்கல்வி பல்கலைக்கழகத்திற்கு 10 பில்லியன் டாலர்களும் கொடுத்தார். 2011 ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிக்கை இவரது சொத்துமதிப்பு 21 பில்லியன் என்றும் உலகின் முதல் பணக்கார மன்னர் இவரென்றும் செய்தி வெளியிட்டது. இளவயதில் குதிரைகளின் மீது ஆர்வமாய் இருந்தார். 1000 குதிரைகளை சொந்தமாக வைத்திருந்தார். ரியாதில் மிகப்பெரிய ‘ஜனாத்ரியா’ என்ற பண்ணையும் வைத்திருந்தார். மொரோக்கோவின் காசாப்ளாங்காவில் இரண்டு ஹெலிகாப்டர்களை நிறுத்தும் தளத்துடன் பல தங்கும் அறைகளைக் கொண்ட 137 ஏக்கரில் அரண்மனை வைத்திருந்தார். 2015 ஜனவரியில் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் காலமானார். அவருக்குப்பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சௌத் ஆட்சிக்கும், இரண்டு புனித மஸ்ஜிதுகளுக்கு பாதுகாவலராகவும் பொறுப்பேற்றார்.
சல்மான் பின் அப்துல் அஜீஸும் சுதைய்ரி சகோதரர்களில் ஒருவர். இப்ன் சௌதின் 25 வது மகனான இவர் முரப்பா அரண்மனையில் வளர்ந்தார். ரியாரிதின் இளவரசர்களுக்கான பள்ளியில் பயின்றார். 1959 ல் 19 வயதில் ரியாதின் கவர்னராக பதவிபெற்று 1955 வரை இருந்தார். பின்பு மீண்டும் 1963 ல் ரியாதின் கவர்னராகி 2011 வரை இருந்தார். மத்திய தரத்திலிருந்த ரியாத் நகரத்தை உலகத்தரத்திற்கு உயர்த்தினார். 2011 ல் ரியாதிலிருந்த அனைத்து பிச்சைக்காரர்களையும் பிடித்து வெளிநாட்டுக்காரர்களை அவர்களின் நாட்டுக்கும், உள்ளூர் பிச்சைக்காரர்களை மறுவாழ்வு நிலையத்திற்கும் அனுப்பினார். சௌதி அரேபியாவின் உறவை பலப்படுத்த குவைத், பஹ்ரைன், கதார் நாடுகளுக்கு பயணம் செய்தார். கனடா, பாரீஸ், போஸ்னியா, ஹெர்ஸிகோவினா, பாகிஸ்தான், ஜப்பான், ப்ருனைய், ஹாங்காங், சீனா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார். இவரது கீழ் ரியாத் நகரம் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், விளையாட்டு அரங்கங்கள், சுற்றுலா தலங்கள் என்று மத்திய கிழக்கின் பணக்கார நகரமாக இருந்தது. ரியாத் நகரைப்பற்றி சல்மான் பின் அப்துல் அஜீஸ் சொல்லும்போது, ‘ரியாத் நகரின் ஒவ்வொரு பகுதியும் எனது இதயத்தில் நீங்காத இடம் பெற்றுள்ளது. ரியாதை நினைக்காமல் என்னால் இருக்கமுடியாது என்றார். 2011 ல் இரண்டாவது துணை பிரதமராக நியமிக்கப்பட்டார். சௌதியின் தேசிய பாதுகாப்பு குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். அரச குடும்பத்தில் மத்திய வயதுள்ளவராக இருந்ததால் நாட்டின் இருதலைமுறையினருடனும் சமூகரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் தொடர்பு கொள்ள இவருக்கு ஏதுவாக இருந்தது. 2012 ல் அமெரிக்கா சென்று பராக் ஒபாமாவையும், இங்கிலாந்து சென்று டேவிட் காமரூனையும் சந்தித்தார். இராணுவத்திற்கு 67 பில்லியன் டாலர்கள் செலவு செய்து இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ஜப்பானைத்தாண்டி உலகில் இராணுவச்செலவில் நான்காவது நாடாக சௌதியை ஆக்கினார். 2014 ல் இராணுவ மந்திரியாக ஈராக்குக்கும், சிரியாவுக்கும் எதிரான வான்வெளித்தாக்குதலுக்கு ஆதரவளித்தார். 2012 ல் பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டார். சௌதி அரச குடும்பத்தில் முதல்முறையாக 2013 ல் டிவிட்டரில் இணைந்தார். சோமாலியா, சூடான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய ஏழை இஸ்லாமிய நாடுகளுக்கு ஆதரவாக இருந்தார். ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சரவையில் பல மாற்றங்களைச் செய்தார். அரசு அலுவலர்கள், இராணுவத்தினர், ஓய்வூதியம் பெறுபவர், மாணவர்கள் என்று அனைத்துத் தரப்பினருக்கும் இரட்டை ஊதியம் வழங்கி, அவர்களின் தொழுகைகளில் தனக்கு பிரார்த்திக்குமாறு கேட்டார். 2015 ல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆறு நாள் சுற்றுப்பயணமாக சௌதி அரேபியா வந்திருந்த இளவரசர் சார்லஸை வரவேற்றார். 2015 ல் இவரது முடிசூட்டுவிழாவிற்கு 32 பில்லியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டது.
சல்மான் பின் அப்துல் அஜீஸ் ஏமன் அரசுக்கெதிரான படைகள் மீது பத்து சுன்னிப்பிரிவு நாடுகளின் கூட்டுடன் வான்வெளித்தாக்குதல் நடத்தினார். ஒரு முஸ்லீம் நாடு தன்னிச்சையாக செயல்பட்டால் தான் மேலைநாட்டினருக்குப் பிடிக்காதே. உடனே மனித உரிமை கழகம் இது போர் சட்டத்திற்கு எதிரானது என்றது. மீண்டும் கொத்து குண்டுகளை ஏமன் பொதுமக்கள் மீது வீசுவதாக குற்றம் சாட்டியது. அமெரிக்கா 26 நாடுகளுடன் சேர்ந்து ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் வீசும்போது உறக்கத்தில் இருந்தார்கள் போலும். சிரிய அரசுக்கெதிரான படைகளுக்கு சௌதி அரேபியா ஆயுதமும், பணமும் வழங்குவதாகச் சொல்லப் படுகிறது. 4000 பேராக பெருகிப்போய்விட்ட சௌதியின் இளவரசர்களுக்கு இவரே பொறுப்பாக இருக்கிறார். சல்மான் பின் அப்துல் அஜீஸ் தன் குடும்பத்திற்கு சொந்தமாக ‘அஷர்க் அல் அவ்சத்’, ‘அல் எக்திசாதியாஹ்’ என்று இரண்டு பத்திரிக்கைகள் வைத்திருக்கிறார். இவருக்கு மூன்று மனைவிகள். இவர் முதல் மனைவி 2011 ல் காலமானார். மூத்தமகன் ஃபஹ்த் பின் சல்மான் 47 வயதில் இருதய நோயால் காலமானார். இரண்டாவது மகன் அஹ்மத் பின் சல்மான் 43 வயதில் மாரடைப்பால் காலமானார். இவரது இன்னொரு மகன் சுல்தான் பின் சல்மான் உலகின் முதல் அரச குடும்பத்தினராக, முதல் முஸ்லீமாக, முதல் அரேபியராக 1985 ல் வான்வெளிக்கு ராக்கெட்டில் பயணமானார். 2010 ல் அமெரிக்காவில் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்த் கொண்டார். மேலும் இவருக்கு இடக்கை செயலிழந்து போனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக