வியாழன், 30 ஜூலை, 2015

கதார் வரலாறு 4

இரத்தம் சிந்தாமல் ஷெய்க் ஹமாத் பின் கலீஃபா அல் தானி 1995 ல் ஆட்சிக்கு வந்தார். கதாரின் எரிவாயு தயாரிப்பு 77 மில்லியன் டன்னுக்கு இருந்தது. உலகின் பணக்கார நாடாக இருந்து ஒரு தனிநபர் வருமானம் ஆண்டுக்கு $86,440 இருந்தது. இவர் பிறந்தவுடனே இவர் தாயார் இறந்து போனதால், மாமன் ஓருவரிடம் வளர்ந்தார். பிரிட்டிஷ் ராயல் மிலிட்டரி அகாடமியில் பட்டம் பெற்று 1971 ல் லெப்டினண்ட் கர்னல் ஆனவர். கதாரின் நடமாடும் படைக்கு தளபதி ஆனார். இவருடைய படை பின்னாளில் ‘ஹமாத் படை’ என்றே அழைக்கப்பட்டது. பிறகு 1972 ல் இராணுவத்தில் ஜெனரலாகி, தலைவராகவும் ஆனார். 1977 ல் இராணுவ மந்திரியாக இருந்தார். 1977 லிருந்து 1995 வரை வெளிப்படையாக கதாரின் ஆட்சி வாரிசாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
கதாரின் எண்ணெய் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். அதிகாரப்பங்கீட்டில் தந்தையுடன் குழப்பம்வர, அவர் ஜெனீவா சென்றிருந்த நேரம் அவரின் வெளிநாட்டு வங்கிக்கணக்கை முடக்கி கதாரின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார். இஸ்லாமிய மன்னர்களின் சரித்திரத்தை உடைத்து வெளிப்படையாக இவர் மனைவி ஷெய்கா மோஸா பின்த் நாஸர் அல் மிஸ்னெத் வழக்கறிஞராகவும், கதாரின் கல்வி மற்றும் குழந்தைகள் நலத்துறையையும் பார்த்துக்கொண்டார். ஹமாத் பின் கலீஃபா தானே ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும், நீச்சல் வீரராகவும் இருந்து, கதாரின் தடகளப் பிரிவை உலகளவில் பலப்படுத்தினார். ஒலிம்பிக் பதக்கம், 15 வது ஆசிய விளையாட்டு பதக்கம் போன்றவற்றை கதார் அணி வெற்றி பெறச் செய்தார். மேலும் பல சாம்பியன் பட்டங்களை கதார் விளையாட்டில் பெறுவதற்கு துணை புரிந்தார். அல் ஜஸீரா என்னும் அரபு செய்தி தொலைக்காட்சிக்கு இவர்தான் நிதி வழங்குவதாக செய்தி பரவியது. செய்திதொடர்பு தலைவர் ஹமாத் பின் தாமர் அல் தானிக்கு இவர் நெருங்கிய உறவினராக இருந்த்தால் $137 மில்லியன்கள் இவரிடம் பெற்றதாகவும் செய்தி. பின் லாடனின் பழைய பேட்டிகளை ஒளிபரப்பி அமெரிக்காவின் விசாரணைக்கு தடையாக இருப்பதாகக் கூறி அமெரிக்காவின் காலின் பாவெல் இச்செய்தி நிறுவனத்தை மூடச்சொல்லி வற்புறுத்தினார். ஷெய்க் ஹமாத் இதை தனி நிறுவனமாக்கி தன் மகன் தமீமை அதற்கு தலைவராக்கினார். ‘ஒரு காலம் வரும் அப்போது இதன் பயணத்தின் புதிய பக்கங்கள் திறக்கும். புதிய தலைமுறைகள் பொறுப்பேற்பார்கள்’ என்றார்.
ஹமாத் பின் கலீஃபாவின் ஆட்சியில் மத்திய ஆசியாவிலேயே முதல்முறையாக (FIFA) சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் போட்டியை 2022 ல் கதாரில் நடத்த உரிமை பெற்றார். இவர் மற்றும் இவர் மனைவியின் ஈடுபாட்டால் பல தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களான கார்னிஜியே மெல்லான் பல்கலைக்கழகம், ஜார்ஜ்டௌன் பல்கலைக்கழகம், நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம், டெக்ஸாஸ் ஏ&எம் பல்கலைக்கழகம் மற்றும் வீல் கார்னெல் மருத்துவக் கல்லூரி ஆகியவைகளை கதாரில் திறந்தார். 2005 ல் கதார் அருங்காட்சியகம் கழகம் என்று ஏற்படுத்தி ஐ.எம் பெய் என்பவரால் வடிவமைக்கப்பட்ட முயூசியம் ஆஃப் இஸ்லாமிக் ஆர்ட் தோஹா என்று அருங்காட்சியகத்தைத் திறந்தார். இதனால் உலகில் சமகால கலைப்பொருட்களை அதிகம் வாங்கும் நாடாக கதார் அறியப்படுகிறது. இது 2012 ல் சீஸென்னின் “தி கார்ட் ப்ளேயரை” (ஃப்ரென்ச் ஓவியங்கள்) $ 250 மில்லியன்களுக்கு வாங்கியது. இதல்லாமல் திரைப்பட விருதுகள், புத்தகங்கள், திரைப்படங்கள் என்று பல கலைத்துறை விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. கதார் உலகின் பல முன்ணனி நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது. ஹமாத் பின் கலீஃபா 2012 ல் பாலஸ்தீனின் காஸா பகுதிக்கு சென்று ஹமாஸுக்கு $ 400 மில்லியன்கள் கொடுத்து மருத்துவமனை, அடிப்படைக் கட்டமைப்புகளுக்காக உதவி புரிந்தார். சிரியா மற்றும் லிபியாவின் உள்நாட்டுப் போராளிகளுக்கு ஆயுதம் மற்றும் பண உதவிகள் செய்தார். 2013 ல் ஆட்சியைத் தன் 33 வயது மகன் ஷெய்க் தமீமுக்கு வழங்கப்போவதாகச் சொன்னார். 2005 ல் அமெரிக்காவின் நியூ ஓர்லியன்சில் ஏற்பட்ட கத்ரினா புயலுக்கு $ 100 மில்லியன் கொடுத்தார். 2006 லெபனான் போரை முடிவுக்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி புரிந்தார். வெளிநாட்டு இராணுவத்திற்காக அல் உதைத் ஏர்பேஸ் மற்றும் கேம்ப் அஸ் ஸய்லியாஹ் என்ற இரண்டு தளங்களைக் கொடுத்திருக்கிறார். கதார் பல தீவிரவாதக் குழுக்களுக்கு பொருளுதவி செய்வதாக மேற்கத்திய பத்திரிக்கைகள் அவ்வப்போது செய்தி வெளியிட்டு வருகின்றன. ஹமாத் பின் கலீஃபாவுக்கு முதல் மனைவி ஷெய்கா மரியம் பின்த் முஹம்மது மூலம் 11 மகன்கள், 13 மகள்களும், இரண்டாவது மனைவி ஷெய்கா மோஸாஹ் பின்த் நாசர் மூலம் 5 மகன்கள், 2 மகள்களும், மூன்றாவது மனைவி ஷெய்கா நூரா பின்த் காலித் மூலம் 4 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர். ஹமாத் பின் கலீஃபா, அமெரிக்க உரிமையாளர் மால்கம் க்லேசரிடமிருந்து மான்செஸ்டர் கால்பந்தாட்ட அணியை வாங்குவதற்கு 1.65 பில்லியன் ஈரோக்கள் தர தயாராய் இருப்பதாக பத்திரிக்கை செய்தி வெளியானது. 2013 ல் ஹமாத் பின் கலீஃபா தன் மகன் ஷெய்க் தமீம் பின் ஹமாத் பின் கலீஃபா பின் அல் தானிக்கு ஆட்சியைக் கொடுத்தார்.
ஷெய்க் தமீம் பின் ஹமாத் 1980 ல் இரண்டாவது மனைவி மோஸாஹ் பின்த் நாசருக்குப் பிறந்தவர். பிரிட்டனின் ஷெர்பார்ன் மற்றும் ஹார்ரோ பள்ளிகளில் படித்து, சந்துர்ஸ்டின் ராயல் மிலிட்டரி அகாடமியில் பட்டம் பெற்றார். கதார் ஆயுதப்படைக்கு தலைவராக இருந்தார். லிபியாவின் மாம்மர் கடாபியை நீக்க லிபிய விடுதலைப்படைக்கு உதவினார். கதாரின் விளையாட்டுத்துறைக்கு அதிக ஆர்வமூட்டுபவராக இருக்கும் இவர் வெளிநாடுகளில் பில்லியன்களுக்கு மேற்பட்ட டாலர்களை முதலீடு செய்துள்ளார். 2015 மார்ச்சில் இந்தியாவுக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இந்தியாவில் முதலீடுகள் செய்வதாக கூறியுள்ளார். ஷெய்க் தமீம் பின் ஹமாதின் முதல் மனைவி ஷெய்கா ஜவாஹிர் பின்த் ஹமாத் மூலம் இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும், இரண்டாவது மனைவி ஷெய்கா அனூத் பின்த் மன அல் ஹஜ்ரி மூலம் ஒரு மகனும், இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். பல பட்டங்களையும், பதவிகளையும் பெற்ற ஷெய்க் தமீம் பின் ஹமாத் தற்போதும் கதாரின் ஆட்சியாளராக இருக்கிறார்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக