வியாழன், 30 ஜூலை, 2015

கதார் வரலாறு 2

முடிவாக அல் கலீஃபா குடும்பத்தினர் கதாரையும், பஹ்ரைனையும் தங்கள் கட்டுப்பாட்டில் கைப்பற்ற, பனி காலித் குடும்பத்தினர் அல் ஹசா பகுதியை 1795 ல் கைப்பற்றினார்கள். அல் ஜலாஹ்மா குடும்பத்தினர் உதுப் குடும்பத்தின் உறவை விலக்கிக் கொண்டு 1783 ல் பஹ்ரைனை தங்களுக்காக இணைத்துக் கொண்டு ஸுபாராஹ் பகுதியை உதுபுக்கு விட்டுக் கொடுத்தார்கள். இதனால் அல் கலீஃபா குடும்பத்திற்கு பஹ்ரைனில் உரிமை இல்லாமல் போனது. அவர்கள் தங்களை ஸுபராஹ்விலிருந்து மனாமா என்ற பகுதிக்கு மாறினார்கள். அங்கிருந்து வஹ்ஹாபிகளுக்கு கப்பம் செலுத்தினார்கள். கதார் பல ஷெய்க் குடும்பங்களின் கட்டுப்பாட்டிலிருந்து ரஹ்மாஹ் இப்ன் ஜாபிர் அல் ஜலாஹிமாஹ் தலைமைக்கு வந்தது. 1790 ஸுபாராஹ் வணிகர்களுக்கு வரியில்லாத சிறந்த இடமாக இருந்து செழிப்பாக இருந்தது. 1795 ல் வஹ்ஹாபிகள் கதாரின் அல் ஜலாஹ்மாஹ் பழங்குடியினருடன் கூட்டு வைத்து, கிழக்கில் ஒமானிகளையும், அல் கலீஃபாக்களையும் எதிர்த்தார்கள். மஸ்கட்டின் ஆட்சியாளர் சைத் பின் சுல்தான் பஹ்ரைன் மற்றும் ஸுபராஹ்விலிருந்த வஹ்ஹாபிகளை எதிர்த்து ஸுபாராஹ் கோட்டையைத் தீவைத்துக் கொளுத்தி அல் கலீஃபாக்களை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வந்தார். கிழக்கிந்தியக் கம்பெனியின் வாணிபத்திற்காக பெர்ஷிய வளைகுடாப் பகுதியில் பிரிட்டிஷ் மேற்கொண்ட ‘ஒப்பந்தய பகுதிகளில்’ கதார் கடல்பகுதியும் ஒன்று. அதில் கதாரின் அல் ஹுவைய்லா, ஃபுவைய்ரித், அல் பித்தா, தோஹா ஆகியவையும் அடங்கும். இதில் தோஹா நல்ல வளர்ச்சி கண்டது. இப்பகுதியில் பழங்குடியினர், குடிபெயர்ந்த அரபுகள் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வாங்கப்பட்ட அடிமைகளும் இருந்தார்கள். 1821 ல் தோஹா வாசிகள் கடல்கொள்ளையில் ஈடுபட்டதால், கிழக்கிந்திய கம்பெனி குண்டு வீசி தீக்கிரையாக்கியது. இதனால் 400 பேர் வரை நகரை விட்டு ஓடிப்போனார்கள். இதனால் 1828 ல் தோஹாவை அல் புயய்னியன் பழங்குடியினர் ஆட்சி செய்தார்கள். அல் புயய்னியன் பழங்குடியினன் ஒருவன் பஹ்ரைனில் ஒருவரைக் கொன்ற குற்றத்திற்காக பஹ்ரைன் ஷெய்கால் சிறையிலடைக்கப்பட்டார். இதனால் அல் புயய்னியன் பழங்குடிகள் புரட்சியில் இறங்கினார்கள். இக்காரியத்தால் தூண்டப்பட்ட அல் கலீஃபா கூட்டத்தினர் அவர்களின் கோட்டையை அழித்து அவர்களை தோஹாவை விட்டு விரட்டினார்கள். இதனால் தோஹா நகரம் அல் கலீஃபாக்களின் ஆட்சிக்கு வந்தது.  
1833 ல் இப்பகுதியின் வஹ்ஹாபிகளைக் கண்காணிக்க, பஹ்ரைன் அப்துல்லாஹ் பின் அஹ்மத் அல்கலீஃபா என்பவரை அரசு அதிகாரியாக குவைத்தின் கரையோரத்தில் நியமித்தது. அவர் பஹ்ரைனியின் அல் ஹுவைய்லா மக்களை குவைத்தின் ஆட்சியிலிருந்த அல் கலீஃபா குடும்பத்தினருக்கு எதிராக கலவரம் செய்ய வைத்தார். இதனால் இருவருக்கும் இடையில் மஸ்கட்டின் சுல்தானுடைய மகன் முன்பு ஒரு ஒப்பந்தம் 1835 ல் உருவானது. அதன்படி அல் ஹுவைய்லா மக்கள் தங்கள் இருப்பிடங்களைத் தரைமட்டமாக்கி விட்டு பஹ்ரைனை விட்டு போக வேண்டும். அப்துல்லாஹ் பின் அஹ்மதின் உறவினன் ஒருவன் ஒப்பந்தத்ததை மீறி அல் குவாரி என்ற பழங்குடியினரைத் தூண்டிவிட்டு, வெளியேறிக் கொண்டிருந்த அல் ஹுவைய்லாஹ் மக்களை தாக்கச் சொன்னான். 1840 ல் பஹ்ரைன் ஷெய்க்குகளுக்கும், அல் ஹசாவின் எகிப்திய தளபதிக்கும் இடையே நடந்த பல சண்டைகளால் பாலைவன மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். 1847 ல் பஹ்ரைனுக்கு எதிரியாகிப்போன அப்துல்லாஹ் பின் அஹ்மத் அல் கலீஃபா, கதாரிகளின் தலைவர் இசா பின் தாரிஃபுடன் இணைந்து பஹ்ரைனின் ஆட்சியாளர் முஹம்மது பின் கலீஃபாவை ‘ஃபுவௌய்ரித் போரில் சந்தித்தார். பின் கலீஃபாவுக்கு காதீஃப் மற்றும் அல் ஹசாவின் கவர்னர்களின் ஆதரவுடன் 500 வீரர்கள் இருந்தனர். கதாரி படைகளுக்கு பின் தாரிஃப் தலைமையில் 600 வீரர்கள் இருந்தனர். கடுமையான அந்தப்போரில் பின் தாரீஃபும், 80 வீரர்களும் கொல்லப்பட்டு கதாரி படைகள் தோற்றன. பின்னர் பஹ்ரைனின் பின் கலீஃபா, அல் பித்தா பகுதியை சேதப்படுத்தி அம்மக்களை பஹரைனுக்கு அனுப்பினார்.
19 ம் நூற்றாண்டில் ஸுபாராஹ் மற்றும் அல் ருவைஸ் பகுதிலிருந்த பனு தமீம் பழங்குடியினரின் ஒரு பிரிவான அல் தானிகள் கதாரின் தோஹா பகுதியில் தானி பின் முஹம்மது தலைமையில் ஒன்று கூடினார்கள். இவரின் மகன் முஹம்மது பின் தானி அக்கூட்டத்திற்கு தலைவராகி கதாரில் முதலில் ஆட்சியில் அமர்ந்தார். பல அரபு கூட்டுக் குடும்பமாக இருந்த அவர்களில் பனி அலி, பனி ஹமாத், பனி காலித் ஆகிய குடும்பங்கள் முக்கியமானவை. அப்போது இவர்கள் சுமார் 20,000 பேர் இருந்தார்கள். 1949, 1960, 1995 களில் ஆட்சிமாறும் போது இவர்களுக்குள் பெரும் துறத்தல்கள் இருந்தது. இந்த ஒவ்வொரு ஆட்சி துறத்தல்களிலும் அல் தானிகளின் கையே ஓங்கி இருந்தது. எமிரின் குடும்பட்த்தினரே பெரும் அதிகாரமுள்ள பதவிகளில் அனுமதிக்கப்பட்டார்கள். முஹம்மது பின் தானிக்குப் பிறகு, அவர் மூத்த   மகன் ஜாஸ்ஸிம் பின் முஹம்மது அல் தானி ஆட்சிக்கு வந்தார். 1825 ல் பிறந்த இவர் கதாரை நவீனப்படுத்தினார். முற்காலங்களில் தந்தையுடன் இருந்து பல அரசியல் அனுபவங்களைப் பெற்றார். அல் பித்தா பகுதியிலிருந்து கொண்டு 21 வயதில் தன் வயதொத்த இளைஞர்களுடன் சேர்ந்து கதாரை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்தார். சுற்றுப்பகுதிகளை ஒன்றிணைத்து கதாரை தனி ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வந்தார். பெர்ஷிய வளைகுடாவின் மீது கிழக்கிந்தியக் கம்பெனிக்காக பிரிட்டிஷும், போர்ச்சுகீசியர்களின் செல்வாக்கைத் தடுக்க ஓட்டோமான்களும் ஆர்வமாய் இருந்த போது இருவரையும் அரவணைத்துச் சென்றார்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக