செவ்வாய், 16 ஜூன், 2015

மன்னரும், போரும் 1



மன்னரும், போரும்
கூ.செ.செய்யது முஹமது
                                                              சரித்திரங்களைப் படித்து விட்டு முஸ்லீம் மன்னர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்களா என்று நினைக்க வேண்டாம். கிரேக்க, ரோம கிறிஸ்தவ மன்னர்களின் வரலாறுகள் வன்முறைகளும், காமமும் மிகைத்திருக்கும். 7 ம் நூற்றாண்டில் இஸ்லாமியர்களுக்கு திருக்குர்ஆன் அருளப்பட்டதற்கு பிறகு, மாற்றம் வந்தது. இறையச்சத்துடன் ஆட்சி செய்தார்கள். மக்களுக்கு நல்லாட்சியைத் தந்தார்கள். முறையாக திருமணம் செய்த பெண்களையே அந்தப்புரங்களில் வைத்திருந்தார்கள். நாளடைவில் அதிகாரம், பதவி மோகம் என்று கொஞ்சம் கொஞ்சமாக தீனின் பாதையை விட்டு விலகிப்போனார்கள். பிரிட்டிஷார் தங்கள் ஆட்சிப்பிரதேசங்களில் சூரியன் மறைவதே இல்லை என்று பெருமை அடித்துக் கொண்டார்கள். அது பொய் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் பிரதேசங்களுக்குப் முன் ஒன்றுமே இல்லை. இஸ்லாமியர்கள் கண்டங்களை ஆண்டார்கள். 6 ம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த காட்டுமிராண்டி ஆட்சி இஸ்லாமியர்களுக்குப் பின் தான் மாறியது. முஸ்லீம்களின் ஆட்சி சரித்திரத்தில் இல்லை என்றால் உலகின் போக்கே மாறி இருக்கும்.
                                        இந்தியாவில் மௌரியர்கள், குப்தர்கள், சாணக்கியர்கள், சேர, சோழ, பாண்டியன் மற்றும் சிறிய மன்னர்கள் என்று பெரிய சரித்திரத்தையே எழுதி வைத்திருக்கிறார்கள். குப்தர்கள் தான் இந்துக்களின் மனுஸாஸ்திர அமைப்பை உண்டாக்கினார்கள். அந்த ஒரே காரணத்திற்காக குப்தர்களின் காலம் பொற்காலம் என்று எழுதிக் கொண்டார்கள். இருப்பதிலேயே போதை மிகுந்தது மன்னனாய் இருப்பது தான். தான் நினைப்பது நடக்கும். ஏறக்குறைய இறைவனுக்கு அடுத்தது போல் தாம் தான் என்ற எண்ணம் தோன்றும். (உதாரணம் ஷத்தாத், ஃபிர் அவ்ன்). அந்த பதவிக்கு வர தந்தை, மகன், தாய், தாரம், சகோதரன், சகோதரி என்று எந்த உறவுகளையும் கூட கொல்ல தயங்க மாட்டார்கள். மன்னனின் பிள்ளைகள் கல்வியுடன் கூடிய அந்தப்புரங்களில் தான் வளர்வார்கள். அங்கு மன்னனின் மனைவிகள், பணிப்பெண்கள், அரவாணிகள், வாசனைப் பொருள்கள், மது, நாட்டிய நாடக கேளிக்கைகள் என்று தான் பெரும்பாலும் இருக்கும். ராஜ பிள்ளைகளுக்கு கல்வி, போர் பயிற்சி கற்றுக் கொடுக்க வரும் ஆசிரியர்கள் ராஜ குடும்பத்து தாய் அல்லது மகனின் மனவோட்டத்திற்கு ஏற்பதான் பாடம் நடத்த முடியும். ஒவ்வொரு மனைவியும் அடுத்து தன் மகனுக்குதான் ஆட்சி வரவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். பிள்ளைகளோ அந்தப்புரத்தின் அசிங்கங்களிலிருந்து தப்பித்து வருவது மிகமிக கடினம். ஆயிரக்கணக்கான இளவரசர்களின் வாழ்க்கை அந்தப்புரத்தோடு முடிந்துவிட்டிருக்கிறது. 20 வயதிற்குள் நோய் வந்து இறந்த வரலாறுகள் உண்டு. சில தாயார்களின் வளர்ப்பு மற்றும் பொறுப்பு ஒன்றுதான் அடுத்த மன்னனைத் தேர்ந்தெடுக்க உதவும். ஒரு இளவரசன் மன்னன் ஆனான் என்றால் முழுப்பொறுப்பும் அவன் தாயையே சாரும்.
                                  ஜனநாயக முறைப்படி, தேர்தலில் வெற்றி பெற்று ஒருவர் பதவிக்கு வந்தால், தோற்றவர்கள் அடுத்த தேர்தலுக்குள் வென்றவரை தோற்கடிக்க சிந்திப்பார்கள். தகுந்த காரணம் இல்லாமல் கொல்ல முற்பட மாட்டார்கள். ஆனால் மன்னனாய் இருப்பது எந்த நொடி மரணம் என்று பயந்தபடியே வாழவேண்டும். கூடலுக்குச் செல்லும் மன்னன் மனைவியின் நிர்வாணத்தைத் தவிர அனைத்தையும் அறையிலிருந்து நீக்க செய்த வரலாறுகள் உண்டு. இந்த அச்ச உணர்வே ஒரே மனைவியைத் தவிர்த்து பல பெண்களை மணப்பார்கள். மேலும் மன்னர்களின் உணவுப்பழக்கத்தால் அளவுக்கதிகமான உறவை நாடுவார்கள். அதை ஒரே மனைவியால் தீர்த்துவிட முடியாது. நாட்டு பிரச்சினை, போர் சிந்தனை, உயிர் பயம் என்று பல கலவையில் மன்னர்கள் இருப்பார்கள் கிரேக்க, ரோம மன்னர்களின் கதை மிகவும் அருவருப்பானது. தனது பிள்ளைகளையே காணாமல் மரணித்த மன்னர்கள் உண்டு. அதே சமயத்தில் ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே முதல் காரியமாக வாரிசுகளைக் கொல்வார்கள். அப்படி கொல்ல மனமில்லை என்றால் கண்களைக் குருடாக்கி விடுவார்கள். ஆகக் கடைசி கண்களைக்கட்டி திசை தெரியாமல் பயங்கர மிருகங்கள் வாழும் காட்டில் மாறு கால் மாறு கை வாங்கி விட்டு விட்டு வந்து விடுவார்கள். மனநோயாளிகளாக ஆக்கி விடுவார்கள். அறிவிப்பு செய்யாமல் ஒரு மன்னன் இறந்து போனால், அனைத்து வாரிசுகளும் மந்திரிகளை, தாயாரை, மக்களை கைக்குள் அடக்கி வாளெடுத்து நிற்பார்கள். தன் குறிப்பிட்ட பிள்ளையின் தன்மை அறிந்து ஆட்சிக்கு தயார் படுத்திய மன்னர்களும் உண்டு.
                               மன்னன் அந்தப்புரங்களுக்கு இளைப்பார மட்டுமே வருவார். பல மன்னர்களுக்கு தனது சொந்த பிள்ளைகளையே தெரியாது. அந்தப்புரங்களில் வளர்ந்து வந்த பல நல்ல மன்னர்களும் உண்டு. சுல்தான் சுலைமான், முதலாம் செலிம், ஔரங்கஸேப், மன்னர் சௌத் (இவர் சௌதியை வென்றெடுக்க இவரின் பாட்டியின் வளர்ப்பே காரணம்) இப்படி பலபேர் உண்டு. மன்னர்களும் எச்சரிக்கை காரணமாக எந்தநிலையிலும் எந்த உணவும் உண்ணவோ அருந்தவோ மாட்டார்கள். மன்னருக்கு முன் அவைகளை ருசித்துப் பார்க்க என்று பணியாள் வைத்திருப்பார்கள். ராஜ பெண்களும் தன் மகனுக்குதான் அடுத்த மன்னன் பதவி என்று மற்ற மனைவிகளின் பிள்ளைகளை தகுதியற்ற நிலைக்கோ அல்லது கொல்லவோ செய்வார்கள். வளர்ந்த பிள்ளைகளோ பதவி மோகத்திற்காக தன் சகோதரன் தான் என்பதை மறந்து ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சிப்பார்கள். சரியான வாரிசின்றி தகுதியற்ற கெட்ட இளவரசர்கள் மன்னனான வரலாறுகளும் உண்டு. இவைகளெல்லாம் வெறும் முஸ்லீம் மன்னர்களின் குடும்பத்தில் தான் என்று எண்ணிவிடாதீர்கள். எல்லா மன்னர்களின் வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கும். சிலரை நாம் வாழ்ந்து கெட்டான் என்று சொல்வோம். ஆனால், உலக சரித்திரத்தில் பல ராஜகுடும்பத்து வாரிசுகள் கெடுவதற்காகவே வாழ்ந்தார்கள். ராஜ வாழ்க்கையின் ஆரம்ப அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் மேற்சொன்னவைகளை எழுதினேன்.
                          அடுத்த விஷயத்திற்கு போவோம். ஒரு நாட்டின் நிர்வாகம், இராணுவ அமைப்புகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை அமைத்தார்கள். பல அரிய கண்டுபிடிப்புகள், விவசாயம், கலை, கலாச்சாரம், நகர அமைப்புகள் என்று பல அற்புதங்களை நிகழ்த்தினார்கள். 7 ம் நூற்றாண்டிலிருந்து முஸ்லீம் மன்னர்கள் காட்டிய வழியில் தான் இன்றைக்கும் பல நாடுகள் நிர்வாகம் செய்கின்றன. 14 ம் நூற்றாண்டிற்கு பிறகு, இஸ்லாமிய ஆட்சியாளர்களின் நேர்மை, வல்லமை குறைய மெதுவாக தலைதூக்கிய மேற்கத்திய ஆட்சியாளர்கள் மீண்டும் மதம் சார்ந்த காட்டுமிராண்டி ஆட்சியையே நடத்தினார்கள். அவர்களின் பிரதேசங்களிலிருந்து முதலில் முஸ்லீம்களை விரட்ட 4 நூற்றாண்டுகள் எடுத்துக்கொண்டார்கள். பின் 18 ம் நூற்றாண்டிலிருந்து முஸ்லீம்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பல அரிய கண்டுபிடிப்புகளின் நுணுக்கங்களை மின்சாரம் கொண்டு நவீனப்படுத்தி தாங்கள் கண்டுபிடித்தது போல் பெருமை அடித்துக் கொண்டார்கள்.
                                   மனிதகுலத்திற்கு குர்ஆன் அருளப்பட்டதற்கு பின் இஸ்லாமிய ஆட்சியாளர்தான் மொத்த உலகுக்கும் எல்லாவற்றிற்கும் வழிகாட்டி இதில் எள்ளளவு சந்தேகமும் வேண்டாம். ஏனென்றால் 7 ம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த மன்னர்களின் வரலாறு, சொல்லப்பட்டிருக்கலாம், இருந்திருக்கலாம் என்றுதான் இருக்கும். அதே நேரத்தில் சில உண்மைகளும் உள்ளன அதை மறுப்பதற்கில்லை. ஆனால், இஸ்லாமிய வரலாறு கடல்கடந்து சான்றுகளுடன் கட்டிடங்களாகவும், கலை வடிவங்களாகவும் இந்தியாவிலிருந்து ஸ்பெயின் வரை ஆதாரத்துடன் நின்று பறைசாற்றுகிறது.
                                    போர் என்பது யாரால் எங்கு, எப்படி நடந்தாலும் ஒரு துயரமான சம்பவமே. அதை அல்லாஹுத்தாலா குர்ஆனில் சொன்னதை மேலே அறிந்திருப்பீர்கள். அது நாகரீகம் அடைய ஆரம்பித்த காலத்திலிருந்து அறிவு முதிர்ச்சியின் சிகரத்தில் இருக்கும் இன்று வரை அப்படித்தான். காரணம் போர் என்பது எத்தரப்புக்கும் மனித உயிர்கள் சம்பந்தப்பட்டது. வெற்றி தோல்வி வேறு விஷயம். போரினால் உறவுகள் இழக்கப்படுகின்றன, உணவு, வீடுகள் இழக்கப்படுகின்றன. உடல் உறுப்புகள் சிதைக்கப்படுகின்றன. மருத்துவ, வாகன, கல்வி போன்ற உதவிகள் தடைபடுகின்றன. எஞ்சி இருப்பவர்களுக்கு பல துயரங்களுக்குப் பிறகு, ஒரு வேளை நல்வாழ்வு கிடைக்குமானால் பல ஆண்டுகள் ஆகும். தனி மனித சண்டை, நோய், இயற்கை சீற்றம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பை விட கொடுமையானது போர். அவைகளில் இன்னார் இறந்து போய்விட்டார் என்று தெரிந்துவிடும். ஆனால் போரினால் சிதறிய குடும்பத்தில் யார் யார் உயிரோடு இருக்கிறார்கள்? எங்கு இருக்கிறார்கள்? அல்லது இருக்கிறார்களா? என்றே தெரியாது. (தற்போது அப்படியல்ல) போர் நீங்கலாக மேற்சொன்னவைகளுக்கு முற்றுப்புள்ளி உண்டு. ஆனால், போரினால் பாதிக்கப்பட்டு எஞ்சியவர்களின் மனநிலை பாதிப்பு, பொருளாதார பாதிப்பு, ஊனமான வாழ்க்கை நிலை எண்ணிப்பார்க்கும் போதே மனம் பதைக்கும். அமெரிக்காவில் ஹிரோஷிமா, நாகாசாகியில் வீசிய குண்டில் இன்றைக்கும் அப்பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு 100 ல் 80 குழந்தைகள் ஏதாவது ஒரு குறையுடன் தான் பிறக்கின்றன. அதேபோல் தான் வியட்நாம், ஈராக், ஆஃப்கானிஸ்தான் நாடுகளிலும் இருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக