புதன், 13 ஆகஸ்ட், 2014

ஸலாவுத்தீன் வரலாறு 8



பாகம் :15
ஸா அத்தீன் கமஷ்தகின் என்பவன் அலிப்போவின் உண்மையான ஆட்சி யாளர் ஷம்ஸ் அத்தீன் இப்னு அத் தயாஹ் மற்றும் அவர் சகோதரர்கள், இளவரசர்களை சிறையில் அடைத்து அலிப்போவை அபகரித்துக் கொண்டு பாதுகாப்புக்கு சிலுவைப் போராளிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டான். ஸலாவுத்தீன் தூதுவர் ஜுர்துக்கை ஸா அத்தீனிடம் அனுப்பி இப்னு அத் தயாஹ்வையும் மற்ற கைதிகளையும் விடுதலை செய்ய சிபாரிசு செய்தார். அவன் பொறுப்பற்றத்தனமாக தூதுவர் ஜுர்துக்கையே கைது செய்து அத் தயாஹ்வுடன் சிறையில் அடைத்தான். அந்த அநீதிக்கு ஸா அத்தீன் பதில் சொல்ல வேண்டிய காலத்திற்காக ஸலாவுத்தீன் காத்திருந்தார். ஸா அத்தீன் மேலும் விடாமல் மிஸ்யஃப் என்னும் பகுதியில் வாழ்ந்த “இஸ்மாலியாஹ்” என்னும் பிரிவினரின் தலைவர் ராஷித் அத்தின் ஸினான் என்பவரிடம் ஒரு தூதுவரை அனுப்பி தனக்கு ஆதரவளித்து உதவுமாறு வேண்டினான்.
(இமாம் அல் கஸ்ஸாலி தனது “ ஃபதா இஹ் அல் பதானியாஹ் அன் மபதி அல் இஸ்லாமியாஹ்” என்னும் கிரந்தத்தில் இஸ்மாயிலியாக்கள் வெளித்தோற்றத்திற்க்கு ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் போல் தோன்றுவார்கள். ஆனால், உள் தோற்றத்தில் அவர்கள் இறை நம்பிக்கை அற்றவர்கள். பெண்கள் தங்கள் ஹிஜாபுகளை நீக்கிக் கொண்டு விபசாரம் செய்வதை நியாயம் என்று நம்புபவர்கள். மற்ற மதங்களை தடுத்தும், மறைத்தும் வந்தார்கள். தங்கள் நம்பிக்கையை யாராவது மறுத்தால் அவர்களை அவர்கள் மறுத்தார்கள். இஸ்மாயில் ஜாஃபர் அஸ் ஸித்திக்கிடமும் தங்களை மறுத்தார்கள். என்று குறிப்பிட்டுள்ளார் கள்)
ராஷித் அத்தீன் ஒரு குழுவினரை அனுப்பி ஸலாவுத்தீனை கொல்ல உத்தரவிட்டார். ஸலாவுத்தீன் அலிப்போ நகரின் மேற்கில் ஜுஷான் என்னும் விடுமுறை தலத்தில் இருந்த போது அவரின் கூடாரத்திற்குள் ஒருவனை அனுப்பி அவரைக் கொல்ல முயன்றார். ஸலாவுத்தீனின் பாதுகாவலர்கள் சண்டையிட்டு காப்பாற்றினார்கள்.
மீண்டும் 571 A.H. ல் அலிப்போ நகரில் அஸாஸ் என்ற கிராமத்தில் இருந்த போது சில இஸ்மாலிய ஃபிதாயீன்கள் ஸலாவுத்தீன் பாதுகாவலர்கள் போல் உடையணிந்து கூடாரத்துக்குள் நுழைந்து அவரை தலையில் காயப்படுத்தினர். ஏறக்குறைய ஸலாவுத்தீன் மரணத்தின் விளிம்பு வரை சென்று விட்டார். அவர் அந்த சமயத்தில் இராணுவக்கவசம் அணிந்திருந்ததனால் தலைக் காயத்துடன் தப்பினார். விரைந்து வந்த ஸலாவுத்தீனின் பாதுகாவர்கள் சண்டையில் இணைந்து கொள்ள சில ஃபிதாயீன்கள் கொல்லப்பட சிலர் தப்பிச் சென்றனர்.
ஸலாவுத்தீன் அந்த துரோகிகளை பழி வாங்க துடித்தார். அவர் அலிப்போவிலிருந்து திரும்பியதும், மோஸூலின் மேற்குப்புறத்தில் இருந்த அவர்களின் மிஸ்யஃப் நகரின் கோட்டையைத் தாக்கினார். அவர்களில் பெரும்பான்மையானவர்களை கொன்று, அவர்களின் செல்வங்களைப் பறித்து, வீடுகளை அழித்து, என்றுமே அவர் மீது அச்சம் ஏற்படும் வண்ணம் கடுமையான பாடம் புகட்டினார்.
பாகம் : 16
இதனால் ஏமாற்றமடைந்த ஸா அத்தீன் கமஷ்தகின் சிலுவைப் போராளிகளின் உதவியை நாடினான். அவர்கள் மூன்றாம் ரெய்மண்ட் தலைமையில் ஒரு படையை அனுப்பினர். ஸலாவுத்தீன் அலிப்போ நகருக்கு சுதந்திரம் வழங்கி ஹாம்ஸ் நகர் திரும்பி சிலுவைப் போராளிகளை எதிர்க்க வந்தார். ஸலாவுத்தீன் வருகையை அறிந்த சிலுவைப் போராளிகள் போரிடாமல் ஓடி விட்டனர். பின் ஸலாவுத்தீன் டமாஸ்கஸ் திரும்பி “பா அல்பக்” நகரைக் கைப்பற்றினார். இதனிடையே ஸலாவுத்தீன் நூருத்தீனின் இளவரசர்களாலெயே தன்னைக் கொல்ல திட்டமிட்ட சதிகளை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. ஸலாவுத்தீன் மேலும், மேலும் சிரியாவின் நகரங்களை வெற்றி கொள்வதை கண்டு மற்ற நகரங்களின் ஆட்சியாளர்கள் மோஸூலின் ஆட்சியாளர் ஸைஃப் அத்தீன் காஸியிடம், அல் மாலிக் அஸ் ஸாலிஹிக்கு உதவி செய்து ஸலாவுத்தீனை தடுக்கு மாறு கூறினர். அவர் போர் வீரர்கள், ஆயுதங்கள், உணவுப் பொருட்கள் என பெரும் படையை தயார் படுத்தினார். ஸைஃப் அத்தீன் காஸி பெரும் படையுடன் ஸலாவுத்தீனை நோக்கி வந்தார்.  ஸலாவுத்தீன் போரைத் தவிர்க்க அவரிடம், அவரை சிரியாவின் துணை ஆட்சியாளராக்குவதாகவும் அல் மாலிக்கிடம் இருந்து சிரியாவைப் பார்த்துக் கொள்ளவும் கூறினார். மேலும் தங்களிடையே உண்டாகும் போர் நிறைய உயிர் சேதங்களை விளைவித்தும், ஃப்ராங்க்ஸுக்கு ஆதாயமாகவும் ஆகிவிடும் என்று கூறினார். ஆனால், ஸா அத்தீன், ஸலாவுத்தீனை வெற்றி பெற்ற நகரங்களைத் தங்களிடம்  ஒப்படைத்து விட்டு அவரை வந்த வழியே எகிப்து திரும்பிச் செல்லுமாறு கூறினார். போர் புரிவதைத் தவிர ஸலாவுத்தீனுக்கு வேறு வழியில்லாமல் போனது. அவர் போருக்கு தயாராகி ஹாமாஹ் என்னுமிடத்தில் 570 A.H. ல் ஒரு போர்வீரன் காயம்பட்ட மற்ற போர்வீரனுக்கு உதவக்கூட முடியாத வண்ணம் மிகக் கடுமையாக அவர்களுடன் போரிட்டு வென்றார். ஸா அத்தீன் காஸியின் எஞ்சிய படைகள் தப்பித்து அலிப்போ நகருக்கு ஓடியது. ஸலாவுத்தீன் அவர்களைத் தொடர்ந்து வேட்டை ஆடிய வண்ணம் அலிப்போவில் அவர்களைச் சுற்றி வளைத்து அவர்களின் உடமைகளைக் கைப்பற்றினார். விடாமல் மோஸூல் வரை சென்று சுல்தான் மலைப் பகுதியில் எஞ்சியவர்களை வளைத்தார். அதன் பிறகு, வரிசையாக சிரியாவின் நகரங்கள், கோட்டைகளான பஸாஹ், மன்பஜ், அஸாஸ் ஆகியவைகளைக் கைப்பற்றினார்.
அவர் திரும்பி அலிப்போ வந்த போது, நூருத்தீனின் இளைய மகளும், அல் மாலிக் அஸ் ஸாலிஹின் சகோதரி அவரை சந்திக்க வந்தாள். அவளை நல்ல முறையில் மரியாதையாக வரவேற்று விலையுயர்ந்த பரிசுகளை அளித்தார். அந்த இளவரசி தங்களுக்கு அஸாஸ் நகரை திரும்ப தருமாறு வேண்ட உடனே அதை திருப்பி அவர்களுக்கே அளித்து, அவர்களின் தந்தை நூருத்தீனின் பேரில் தான் கொண்ட நன்றி விசுவாசத்தின் காரணமாக அலிப்போ நகரின் எல்லை வரை வந்து இளவரசியை வழியனுப்பினார்,
தடைகள் நீங்கி சமாதானம் ஏற்பட்ட பின், உண்டான உடன்படிக்கைக்கு அல் மாலிக் அஸ் ஸாலிஹ் உடன்பட்டார். ஸலாவுத்தீனால் வெற்றி கொள்ளப்பட்ட இடங்களின் ஆட்சி உரிமை அவருக்கென்றும். அதாவது, டமாஸ்கஸ், ஹாம்ஸ், ஹமாஹ், அல் ம அர்ராஹ் நகரங்கள் மற்றும் சில சிறிய நகரங்கள், கோட்டை களின் ஆட்சி உரிமை ஸலாவுத்தீனுக்கும், அலிப்போ நகரமும் அதைச் சுற்றி உள்ள நகரங்களின் ஆட்சி உரிமை அல் மாலிக் அஸ் ஸாலிஹுக்கு என்றும் முடிவானது.
இந்த மாற்றங்களுக்குப் பிறகு, 576 A.H. ல் ஸலாவுத்தீன் தனது விடுபட்ட அரசு பணிகளை கவனிக்க எகிப்து திரும்பி வந்தார். எகிப்து வந்த அதே வேகத்தில், தனது 19 வயதில் அல் மாலிக் அஸ் ஸாலிஹ் மரணமடைந்த செய்தியும், அவரின் கட்டளைப் படி அவரின் நெருங்கிய உறவினரும், மோஸூலின் ஆளுநருமான இஸ் அத்தின் மஸ் வூத் ஆட்சிப் பொறுப்பேற்றார் என்ற செய்தியும் கிடைத்தது.
இஸ் அத்தீன் மஸ் வூத் தனக்கு அலிப்போவின் ஆட்சி உரிமை கிட்டி இருப்பது அறிந்து உடனே மோஸூலை விட்டு அலிப்போ விரைந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சன்ஜார் நகரின் ஆட்சியாளராக இருந்த அவரின் சகோதரர் இமாத் அத்தீன், இஸ் அத்தீன் மஸ் வூதிடம் தனக்கு அலிப்போ ஆட்சியைத் தந்து விட்டு அவரை சன்ஜாரின் ஆட்சியை எடுத்துக் கொள்ளக் கேட்டுக் கொண்டார். அதன் படி 578 A.H. முஹர்ரம் 13 ல் இமாத் அத்தீன் அலிப்போவின் ஆட்சியாளரானார். இவரின் ஆட்சியை அலிப்போ மக்கள் விரும்பவில்லை. 570 A.H. ல் இமாத் அத்தீனை அடக்கி ஸலாவுத்தீன் அலிப்போவைக் கைப்பற்றிய போது அம் மக்கள் பெரு மகிழ்ச்சியுடன் ஸலாவுத்தீனை வரவேற்றனர். கவிஞர்களும் நேர்மையாளர்களும் அவரைப் பாராட்டினர். அதில் டமாஸ்கஸின் உச்ச நீதிபதி மொஹி அத்தீன் இப்னு அஸ் ஸகியின் கவிதை மிகவும் புகழ் பெற்றது. ஏனென்றால், அவர் சபர் மாதத்தில் அலிப்போவை வென்ற நீங்கள் ரஜப் மாதத்தில் ஜெருசலத்தை வெல்ல வேண்டும் என புகழ் பாடி இருந்தார். ஆம் நான்கு வருடங்களுக்குப் பிறகு சரித்திரத்தில் ரஜப் மாதம் அது நடந்தது. மேலும், யூஸுஃப் அல் பரா இ, அபு தை அந் நஜ்ஜார் ஆகியவர்களும் கவிதை எழுதியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக