வியாழன், 14 ஆகஸ்ட், 2014

ஸலாவுத்தீன் வரலாறு 11



பாகம் : 21
ஸலாவுத்தீன் மாபெரும் போருக்கு தயாராவதை அறிந்த எதிரிகள் தாங்களும் தயாராகி டைபீரியஸ் வந்தனர். இரு படைகளும் ஹத்தீன் என்ற இடத்தில் சந்தித்தன. காலையின் வெயில் கடுமையாக இருந்தது. குடிநீர் ஆதாரம் முஸ்லீம்கள் வசம் இருந்ததால் எதிரிகள் தாகத்தில் தவித்தனர். ஸலாவுத்தீன் அவர்களைத் தாக்கி சிதறடித்தார். எதிரிகள் தாக்குதலின் தீவிரத்தினாலும், தாகத்தினாலும், பயத்தினாலும் அவமானகரமான தோல்வியைத் தழுவினர். பத்தாயிரம் சிலுவைப்படை போராளிகளைக் கொன்று, எண்ணற்றவர்களை சிறைப்பிடித்தார் அக்ராவின் பிஷப்பைக்கொன்று அவரின் சிலுவையைக் கைப்பற்றினார். எதிரிகளுக்கு மாபெரும் இழப்புண்டாக்கிய தோல்வி இது. எஞ்சியவர்கள் 150 குதிரை வீரர்களும், ஜெருசலத்தின் மன்னன் மட்டுமே. அவர்களால் அதிக தாகத்தினாலும், பயத்தினாலும், களைப்பினாலும் சண்டையிட முடியவில்லை. அவர்களை ஸலாவுத்தீன் சிறை பிடித்தார். சண்டைக்கு காரணமான ரெஜினால்டும் கைது செய்யப்பட்டான். சுல்தான் ஸலாவுத்தீன் தனது ஆதரவாளர்களுடனும், நல்ல மனம் படைத்தவர்களுடனும் கூடாரத்தில் கூடி வெற்றி தந்த இறைவனை வணங்கினார். பின் கூடி அவர்களுடன் ஆலோசனை செய்தார்.
ஸலாவுத்தீன் தனது வீரர்களை அழைத்து ஜெருசலத்தின் மன்னனையும், லூஸிக்னனை சேர்ந்த நபர் ஒருவரையும், கிராக்கின் பிரபு ரெஜினால்டையும் அழைத்து வரச் செய்தார். அவர்களுக்காக குடிநீர் கொண்டு கொடுக்கச் செய்தார். மன்னன் பெருவாரியாக நீர் அருந்தி விட்டு, ரெஜினால்டுக்கு கொடுத்தார். ஸலாவுத்தீன் ரெஜினால்டுக்கு ஜெருசல மன்னன் தண்ணீர் கொடுப்பதை தடுத்து, அவன் தங்கள் ஒப்பந்தத்தை முறித்து, வியாபாரக் கூட்டத்தை கொள்ளை அடித்து, நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய குற்றத்திற்காக கொல்லப்பட வேண்டியவன் என்று கூறி தனது சபதத்தின் படி மன்னன் முன்னிலையில் தானே கொன்றார். ஜெருசல மன்னன் அதிர்ச்சியில் உறைய ஸலாவுத்தீன், “பயப்பட வேண்டாம் எல்லை மீறி ஒரு மன்னன் இன்னொரு மன்னனை கொல்ல மாட்டான்” என கூறினார். அவரையும், எஞ்சியவர்களையும் டமாஸ்கஸுக்கு அனுப்பி கவுரப்படுத்தினார். சிலுவைப் போராளிகளுடனான போரின் வெற்றிக்கு முஸ்லீம் இராணுவத்தின் சரியான திட்டமிடலும், சிறப்பாக தயாராகியதும், நல்ல அநுபவமும், துல்லியமாக போரிடும் இடத்தை தேர்வு செய்ததும், எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனின் கருணையுமாகும். அடுத்து ஸலாவுத்தீன் அக்ரா துறைமுகத்தை குறி வைத்து நகர்ந்தார். 583 A.H. ல் அனைவரும் சரணடைந்தனர். எதிரிகள் டயர் நகரத்தை விட்டும் அகன்றனர். ஸலாவுத்தீன் மேலும் தப்னைன், ஸிடான், ஜுபைல், பெய்ரூத் நகரங்களையும், கோட்டைகளையும் வென்றார். கடற்கரை வழியாக அஸ்காலன் சென்று 14 நாட்கள் முற்றுகையிட்டு எதிரிகளை சரணடைய செய்தார். அதன் பிறகு, ஜெருசலத்தின் மீது படையெடுத்தார். கடல் மார்க்கமாக ஜெருசலத்துக்கு செல்லும் உணவு மற்றும் இதர பொருட்களைத் தடுத்து, முன்னேறி ரம்லாஹ்ம் அத் தரும், பெத்லஹேம், அந் நத்ரும் நகரங்களைக் கைப்பற்றினார்.
ஜெருசலத்திற்குள் தான் நுழையும் போது அதன் புனிதம் கெடும் வண்ணம் வன்முறையாகவோ, கட்டிடங்களை அழித்தோ, சண்டையிட்டோ செல்லாமல், முதன் முறை உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கேட்டுக் கொண்டது போல “ ஜெருசலத்தின் புனிதத்தின் மீது உங்களுக்கு உள்ளது போலவே நம்பிக்கை எனக்கும் உள்ளது. ஆகவே தான் தாக்குதலை விரும்பவில்லை நீங்களாகவே சரணடைந்து விடுங்கள்” என்று செய்தி அனுப்பினார். ஆனால், ஃப்ராங்க்ஸ் அந்த சுமூகமான வழியை நிராகரித்தனர். கொஞ்சம் கூட அமைதியாக சிந்தித்துப் பார்க்காமல்  சரணடைய உடனே மறுத்தனர். அதனால் ஸலாவுத்தீனுக்கு ஜெருசலத்தை எதிர்த்துப் போரிட்டு வெல்ல வேண்டிய கட்டாயமானது. ஒரு வார கால சண்டைக்குப் பிறகு, சமாதானத்திற்கு ஒத்துக் கொண்டனர். நாற்பது நாட்களில் ஜெருசலத்தை விட்டு காலி செய்வதாகவும், விடுதலை ஆகும் ஒவ்வொரு ஆணுக்கும் 10 தினாரும், பெண்ணுக்கு 5 தினாரும், ஆண் குழந்தைக்கு 2 தினாரும் பணயத் தொகையாக கொடுப்ப தாகவும்,  பணயத் தொகை கொடுக்க முடியாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் சமாதானம் ஆகியது. ஸலாவுத்தீன் ஈட்டுத் தொகைகளை வசூலிக்க ஆட்களை அமர்த்தினார். சரியாக நபிகள் நாயகம் மிஹ்ராஜ் இறங்கிய நினைவு நாள் அன்று 583 A.H. ரஜப் மாதம் 27 ந் தேதி எதிரிகள் ஜெருசலத்தை விட்டு வெளியேறினர். அல் கதி மொஹி அத்தீன் இப்னு அஸ் ஸகி யின் முன் சொன்ன வாக்கு பலித்தது. அவர் ஸலாவுத்தீனுக்கு எழுதிய கடிதத்தில், “நீங்கள் வாளோடு அலிப்போவை வென்ற மாதம் ஸஃபர். நல்ல சகுணத்துடன் ஜெருசலத்தை வென்ற மாதம் ரஜப் என்று நினைவு கூர்ந்தார்.
நூற்றாண்டுகளுக்கும் மேலான ஆக்கிரமிப்பிலிருந்து ஜெருசலத்தை மீட்ட பிறகு, முதல் வெள்ளிக்கிழமை தொழுகையில் அல் கதி மொஹி அத்தீன் இப்னு அஸ் ஸகியை அல் அக்ஸா மசூதியில் உரை நிகழ்த்தச் செய்தார். அந்த தொழுகை பெரும் திரளான மக்களுடன் மகிழ்ச்சியாக காலத்துக்கும் நினைவு கூறும் வகையில் அமைந்தது. இது ‘அர் ரவ்ததைன்’ என்னும் புத்தகத்தின் இரண்டாம் பதிப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது.
மாபெரும் வெற்றிக்கு பிறகு, மதபோதகர்களும், கவிஞர்களும், எழுத்தாளர்களும். சரித்திர பதிவாளர்களும் குவிந்து ஸலாவுத்தீன் மீது கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதினர். உதாரணத்திற்கு அபு அல் ஹசன் இப்னு அலியின் கவிதையாவது:
மன்னருக்கு அல்லாஹ்வினால் சொர்கத்து படை வீரர்கள் வழங்கப் பட்டது
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அளித்ததைப் போன்ற வெற்றி வழங்கப்பட்டது
இது பலத்தால் பாராட்டப்படுவதல்ல, நன்றிகளால் மட்டுமே பாராட்டப்படுகிறது.
எதிரி மன்னர்களின் கைகள் என்றுமே கைப்பற்றுவதில் பலம் வாய்ந்தது.
ஜெருசலமும், ஆக்கிரமிக்கப்பட்ட மற்ற பகுதிகளும் 90 ஆண்டுகள் அழுதன. முஸ்லீம் தலைவர்களின் காதுகளும், கண்களும் அடைபட்டு கிடந்தன.
அல்லாஹ்வின் உத்தரவால் தற்போது ஸலாவுத்தீன் மூலம் வெற்றி கிடைத்தது. யாருக்கு தேவையோ உதவியும், ஆதரவும் அவர்களுக்கு. என இருந்தது.
ஸலாவுத்தீன் எதிரிகள் ஜெருசலத்தை விட்டு வெளியேறும் நாள் வரை இரக்கத்துடனும், நல்ல முறையிலும் கவனித்துக் கொண்டார். அதன் மூலம் அவர்கள் இஸ்லாம் இரக்கமும், மனிதாபமானமும் உள்ள ஒரு மார்க்கம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. இஸ்லாம் எந்த ஒரு மனிதனுக்கெதிராகவும் வீணே வாளை உயர்த்தாது என்றும், திம்மிகளை ( முஸ்லீம்கள் நாட்டில் வாழும் முஸ்லீம் அல்லாதவர்கள் ) கொல்ல மாட்டார்கள் என்றும், நியாயமில்லாமல் யாரையும் தாக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
ஆம் ஸலாவுத்தீன் முஸ்லீம்கள் என்றென்றும் தங்கள் இன மன்னன் என்று பெருமையாக நினைத்துப் பார்க்க வேண்டியவர். ஃப்ராங்க்ஸுகள் தங்கள் வயதான பெற்றோர்களை முதுகுகளில் சுமந்து வெளியேறுவதை கனத்த இதயத்துடன் காண சகிக்காமல், பணமும், சுமப்பதற்கு மிருகங்களையும் தந்துதவி அவர்கள் கவலையற்று நாட்டை விட்டு வெளியேறச் செய்தார். நூற்றாண்டுகளாக தன் இன மக்கள் மீது கொடுமை இழைத்த ஒரு சமுதாயத்திற்கு வெற்றி பெற்ற ஒரு மன்னன் துவேஷம் காட்டாமல் செய்யும் உதவியைப் பாருங்கள். பெண்களின் மீது மிகவும் கருணை காட்டினார். பைஸாந்திய மன்னனின் மனைவியும், வசதி படைத்தவளும், பிற்காலத்தில் கிறிஸ்தவ கன்னியாக வும் மாறிய ஒரு பெண்மனியின் பின்னால் பெருங்கூட்டமாக சிலர் செல்ல, ( அந்த பெண்மனி முஸ்லீம்கள் தொழுவதற்காக ஜெருசலத்தில் ஒரு இடத்தையும் ஏற்படுத்தித் தந்திருந்தார்.) ஸலாவுத்தீன் தானே அந்த பெண்மனிக்கும். அவரின் ஆதர வாளர்களுக்கும் பாதுகாப்பளித்து சென்றார். ஸைபிலின் ராணி தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து வெளியேற உத்தரவு கேட்க, எதிர்பாராத சூழ்நிலையில் அவர்களை வெளியேற்றும் சூழ்நிலை க்கு கருணையுடன் மன்னிப்பு கோரினார். அவர் ராணியை அவரின் கணவர் சிறை வைத்திருக்கும் நப்லூஸ் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்று அவருடன் சேர்ந்துகொள்ள அனுமதித்தார். எண்ணற்ற பெண்மனிகள் தங்கள் கைகளில் குழந்தைகளை சுமந்த வண்ணம் சுல்தானிடம் வந்து, “சுல்தான் அவர்களே நாங்கள் சிறையில் இருக்கும் கைதிகளின் தாய்மார்களும், மனைவிகளும், மகள்களும் ஆவோம். எங்களின் உறவுகளையும், பாதுகாவலர்களையும் விட்டு நிரந்தரமாக வெளியேறு கிறோம். நீங்கள் அவர்களை கொன்றால் நாங்கள் வாழ்வை இழந்து விடுவோம். நீங்கள் அவர்களை விடுதலை செய்தால் எங்கள் வேதனையையும், வறுமையையும் போக்க உதவியவர் ஆவீர்கள். எங்களை வாழ வைப்பவர்களில்லாமல் நாங்கள் எங்கு சென்றாலும் வாழ முடியாது” என்று நெஞ்சுருக வேண்டி னர். ஸலாவுத்தீன் மனம் கலங்கி கைதிகளில் இளைஞர்களை தாய்மார்களுடனும், கணவர்களை மனைவிகளுடனும், வயதானவர்களை மகள்களுடனும் விடுதலை செய்து அனுப்பினார். எஞ்சிய கைதிகளை இரக்கத்துடனும், கருணையுடனும் நடத்துவதாக வாக்களித்தார். இது ஏதோ கதைக்காகவும், கற்பனைக் காகவும் சொல்லப்படவில்லை. இஸ்லாத்தில் எதிரிகளின் மீது இப்படியொரு கருணை கொண்ட சக்கரவர்த்தி இருந்தார் என்பதை நாம் எண்ணிப் பெருமை கொள்ளலாம். இவையெல்லாம் ஐரோப்பிய சரித்திர ஆய்வாளர்களாலும் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன.

ஸலாவுத்தின் வரலாறு 10



பாகம் : 19
இன்றளவும் உலகின் மிகமோசமான தீவிரவாத உரையாக கருதப்படும் போப் இரண்டாம் அர்பன் பிரான்சின் கிளர்மாண்ட் சபையில் நிகழ்த்திய குரோதம் நிறைந்த உரையாகும். “இந்த போர் ஏதோ ஒரு நகரத்தை வெற்றி கொள்வதல்ல, மொத்த ஆசியாவையும் வெற்றி கொண்டு அதன் எண்ணற்ற வளங்களை கைப்பற்றுவதாகும். நீங்கள் புனித பயணம் போகும் ஜெருசலத்தை வஞ்சகர்களிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும். நபி மூசாவின் தோராஹ் வேதத்தில் தேனும், பாலும் ஊர்வதாக சொல்லப்பட்ட அந்த மண்ணை வெல்ல வேண்டியது நமது கடமையாகும்” என்று வெறி ஏற்றும் வண்ணம் கூறினார். 488 A.H. ல் (1095 C.E.) உலகின் இறுதி நாள் வரை நல்ல உள்ளம் படைத்த எவருமே மறக்க முடியாத மிகைப்படுத்தி நடந்த கொடுமைகள் நிறைந்த அந்த சிலுவைப்போர் துவங்கியது.
ஒழுக்கமற்ற கலவையான முதல் சிலுவைப் போராளிகள் கான்ஸ்டாண்டிநோபிளிலிருந்து மைனர் ஆசியாவைக் கடந்தனர். செல்ஜுக் ஆட்சியாளர் கலிஜ் அர்சலன் என்பவர் பெரிய போரின் மூலம் கான்ஸ்டாண்டிநோபிளை ஒட்டிய நிகாயீ என்ற இடத்தில் அவர்களைத் தோற்கடித்தார். இரண்டாவது இராணுவம் இளவரசர்களாலும், கட்சித் தலைவர்களாலும் வட, தென் பிரான்சிலிருந்தும் (இதனாலேயே இவர்கள் ஃப்ராங்க்ஸ் என அழைக்கப் பட்டனர்.), தென் இத்தாலியிலிருத்தும் அமைக்கப்பட்டது. இவர்கள் கான்ஸ்டாண்டிநோபிளிலிருந்து மைனர் ஆசியாவை கடந்தனர். மீண்டும் கலிஜ் அர்சலன் குறுக்கிட போர் நடந்தது. எட்டு மாதங்கள் நடந்த போரில் இந்த முறை சிலுவைப் போராளிகள் வெற்றி பெற்று ஆண்டியாக் நகரை கைப்பற்றினர். பின் முன்னேறிச் சென்று ஒரு மாதத்திற்க்குப் பிறகு 492 A.H. ல் ( 1099 C.E. ) ஜெருசலத்தைக் கைப்பற்றினர். அவர்கள் முஸ்லீம்களுக்கு எதிரான எல்லாவிதமான மனித உரிமை மீறல்கள், கொடுமைகளை கட்டவிழ்த்து விட்டனர். ஏறக்குறைய 70,000 ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். எதிரிகள் முழங்கால் அளவு இரத்தத்தில் நடமாடியதாக ஐரோப்பிய சரித்திர ஆசிரியர் களே பதிவு செய்திருக்கின்றனர். சிலுவைப் போராளிகள் முழங்கால் அளவு இரத்தத்தில் நடந்ததாக மாற்று மத சரித்திர ஆசியர்களும் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். முஸ்லீம்களின் இரத்தக்கறை அல் அக்ஸா மஸ்ஜிதிலும், குடியிறுப்பு காலனிகளிலும் நீண்ட நாட்கள் படிந்திருந்ததாக வரலாறு கூறுகிறது.
இப்னு அல் அதிர் அவர்கள் முஸ்லீம்களின் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் விதமாக :
புனித ரமலான் மாதத்தில் மக்கள் அல் கதி அபு ஸா இத் அல் ஹர்வியின் தலைமையில் சிரியாவிலிருந்து பாக்தாதுக்கு ஓடி வந்தனர். சிலுவைப் போராளிகளின் நடுங்க வைக்கும் தாக்குதலையும், சட்டத்திற்கு புறம்பான அதிபயங்கர குற்றங்களையும் கண்டு கண்ணீர் சிந்தி, இதயம் நொருங்கியதாக கூறுகிறார். ஒரு வெள்ளிக்கிழமை தொழுகையில் அவர்கள் நோன்பை விட்டு விட்டு இறந்து போன முஸ்லீம்களுக்காகவும், சிறைப்பிடித்து செல்லப்பட்ட தங்கள் பெண்கள், குழந்தைகளுக்காகவும், சூரையாடப்பட்ட தங்கள் பணத்திற்காகவும் இறைவனிடம் கண்ணீர் சிந்த பிரார்த்தித்ததாக கூறுகிறார்.
492 A.H. (1099 C.E. ) ல் எதிரிகள் முஸ்லீம்கள் மீது தொடுத்த சிலுவைப்போரின் விளைவுகளை சரித்திரம் மதவேறுபாடற்று பதிவு செய்து வைத்திருக்கிறது. பிரிட்டிஷ் சரித்திரவாளர் மில், மிஷுத் விவரத்தில் குறிப்பிட்டிருப்பதாக இளவரசர் அலி சொல்வது:                                                         எதிரிகள் ஜெருசலத்தில் நுழைந்த போது, முஸ்லீம்கள் வீதியிலும், வீடுகளிலும் கேள்வி முறையற்று கொல்லப்பட்டனர். இதை கண்ணுற்ற பலர் அந்த படுகொலையில் இருந்து தப்பிக்க உயரமான சுவர்களிலிருந்து குதித்து இறந்தனர். சிலர் கோபுரங் களிலும், அரண்மனைகளிலும், மசூதிகளிலும் ஓடி ஒளிந்து கொண்டனர். எப்படி இருந்தாலும் கிறிஸ்தவ பீரங்கிகளும், வீரர்களும் முஸ்லீம்களின் பிணங்கள் மீது கடந்து சென்று தப்பி ஓடியவர்களை விரட்டி கொன்றனர். ஆம், வெறி வெறி மதபோதகர்களால் ஏற்றப்பட்ட வெறி. வசதி படைத்த முஸ்லீம்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு பின் வெட்டி கொல்லப்பட்டனர். சிலரை உயிரோடு எரித்துக் கொல்வதைக் காணச்செய்து, பலரை கட்டிடங்களிலிருந்து தாங்களாகவே விழுந்து சாகச் செய்தனர். ஒளிந்திருந்தவர்களை பிடித்து வந்து இறந்த பிணங்களின் மீதே வைத்து கொன்றனர். முஸ்லீம் பெண்கள் கதறினர், குழந்தைகள் அழுதனர். அந்த இடத்தின் சூழ்நிலை ஏதோ ஏசு நாதர் ( ஈஸா நபி ) இதைப்போல் கொலைகள் மூலம் தான் எதிரிகளை மன்னித்தார் என்பது போல் இருந்தது. கொன்றவர்கள் கொஞ்சம் கூட அனுதாபமோ, வருத்தமோ படவில்லை. ஏதோ தொழிற்சாலைப் பணி செய்வது போல் செய்தார்கள்.
சிலுவைப் போராளிகள் சிரியாவின் பகுதியில் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டனர். அலெக்ஸாண்டிர்யா முதல் வட அர்ருஹா( தற்போதைய உருஃபா) வரை தலைமையகங்களை உண்டாக்கிக் கொண்டனர். அந்த காலகட்டத்தில் சிலுவைப் போராளிகள் ஜெருசலத்தை ஆக்கிரமித்துக் கொள்ள காரணமாய் அமைந்தது. இந்த அவல நிலைக்கு முஸ்லீம் நாடுகளிடையே ஆன குழப்பங்களும், ஒப்பந்த மீறல்களும், ஒற்றுமையின்மையுமே ஆகும். எதிரிகள் இந்த பலவீனங்களை அறிந்திராவிட்டால் நிச்சயமாக ஜெருசலத்திற்குள் ( முஹம்மது நபிகள் (ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம்) மிஹ்ராஜ் என்னும் சிறப்பு பயணம் முடிந்து இறங்கிய) ஊடுருவி இருக்க முடியாது.
அந்த சூழ்நிலையில் முஸ்லீம் சமுதாயத்தில் நிலவிய போக்கை  சரித்திர ஆசிரியர்கள் கீழ் வருமாறு பதிவு செய்திருக்கிறார்கள்:
·       சிலுவைப் போராளிகள் ஜெருசலத்தை ஆக்கிரமிக்கும் போது,  முஹம்மது இப்னு மலிக் ஷா என்பவர் தனது ஒன்றுவிட்ட சகோதரர் பர்கியாருக்குடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.
·       சிரியாவின் மன்னர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ள சத்தமில்லாமல் ஃப்ராங்க்ஸ் அக்ரா நகரை அபகரித்துக் கொண்டது.
·       முஸ்லீம் நாடுகள் பிரிந்து ஒருவரை ஒருவர் அழிக்க திட்டம் தீட்டினர். அதிலும் உச்ச கொடுமை முஸ்லீம்களை கருவருக்க வந்த ஃப்ராங்க்ஸிடமே அடுத்தவரை அழிக்க உதவி கோரினர்.
இறைவன் திருமறை குர் ஆனிலே சொன்னது போல் அவர்கள் தங்கள் கைகளாலேயே அழிவை தேடிக் கொண்டனர்.
பாகம் : 20  
ஹத்தீன் வெற்றியின் முகவுரை
ஒரு பரந்த மறுமலர்ச்சிக்கான சூழ்நிலையை எதிரிகள் எதிர் பார்த்திருந்தனர். ஆனால், நாம் ஏற்கனவே ஆரம்பத்தில் அறிந்த இமாத் அத்தீன் ஸங்கியின் பரம்பரையிலிருந்து வேறு விதமாக துவங்கியது. 521 A.H. ல் இமாத் அத்தீன் ஸங்கி பலமான ஒரு மாநிலத்தை மோஸூலிலிருந்து மா அர்ரத் அந் நுமான் நகரம் வரை நிறுவினார். ஏற்கனவே பலமுறை இமாத் அத்தீன் சிலுவைப் போராளிகளுடன் மோதி இருக்கிறார். அதில் மிகவும் பெயர் பெற்றது அர் ரஹாவில் அவர்களின் தலைமையகத்தை அகற்றியது. இமாத் அத்தீன் ஸ்ங்கிக்கு பல மகன்கள் உண்டு. அதில் இரு மூத்த மகன்கள் ஸைஃப் அத்தீன், நூருத்தீன் மஹமூத். இமாத் அத்தீன் இறப்பிற்கு பின் இரு சகோதரர்களும் முறையே ஸைஃப் அத்தீன் மோஸூலை தலைநகரமாக கொண்ட கிழக்குப் பகுதியையும், அலிப்போவை தலைநகராக கொண்ட மேற்குப்பகுதியை நூருத்தீன் மஹ்மூதும் ஆண்டு வந்தனர். நூருத்தீனின் ஆட்சிப் பகுதி எதிரிகளின் பகுதியைத் தொட்டடுத்து இருந்தது. இமாத் அத்தீனிடம் கண்ட அந்த தோல்வி இப்போது இரண்டாவது சிலுவைப் போருக்கு பிரான்சின் ஐந்தாம் லூயிஸ் மற்றும் ஜெர்மனியின் சக்கரவர்த்தி மூன்றாம் கான்ராட் பங்கேற்று வந்தது போராளிகளுக்கு புத்துயிர் அளித்தது. இப்போது அவரின் மகன் இமாத் அத்தீன் மஹ்மூத் என்பவர் மேற்குப் பகுதியின் கவர்னராக இருந்தார். எதிர்கள் அவரைக் கொல்ல திட்டமிட்டனர். என்றைக்குமே இமாத் அத்தீன் அவர்களுக்கு அச்சுறுத்தலாகவே இருந்தார். 543 A.H. ல் எதிரிகள் சில காலம் டமாஸ்கஸை ஆக்கிரமித்துவிட்டு பின் வாங்கினர். இந்த பின் வாங்கலால் எதிரிகளின் இரண்டாவது படையெடுப்பு தோல்வியடைந்தது. அந்த தோல்வி முஸ்லீம்களுக்கு உற்சாகத்தைத் கொடுத்து ஹத்தீன் மீது படையெடுத்து வெற்றி கொள்ளும் வேகத்தை தந்தது.
ஸலாவுத்தீனின் ஹத்தீன் வெற்றி
உலகில் ஒற்றுமையான பரந்து விரிந்த ஒரு இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டுமென்ற ஸலாவுத்தீனின் எண்ணத்திற்கு இடையூராக இருந்தது. ஃப்ராங்க்ஸும், ஜெருசலமும். ஸலாவுத்தீன் ஃப்ராங்க்ஸைத் தாக்குவதற்கும், முஸ்லீம்கள் இழந்த ஜெருசலத்தையும், மற்ற பகுதிகளை மீட்கவும் ஒரு படையை தயார் செய்தார். எதிரிகள் ஜெருசலத்திலும், அல் அக்ஸா மஸ்ஜிதிலும் முஸ்லீம்களுக்கு எதிராக நிகழ்த்திய கொடுமைகளுக்கு அவர்கள் எந்த காலத்திலும் மறக்க முடியாதபடி பழி வாங்கவும் காத்திருந்தார். அதற்கான சந்தர்ப்பம் அமைந்தது. 582 A. H. (1187 C.E. ) கிராக் பகுதியின் பிரபு கிடில்லான் ரெஜினால்ட் ( அரபியில்: அர்னாட் ) ஸலாவுத்தீனின் வியாபாரக் கூட்டத்தின் வாகனத்தைத் தாக்கினான். கிராக்கின் தலைமையகம் எகிப்துக்கும், சிரியாவுக்கும் இடையே இருந்தது. கிராக்குக்கும், ஸலாவுத்தீனுக்கும் இடையில் முஸ்லீம்களின் பிரயாண மற்றும் வியாபார வாகனங்கள் எகிப்துக்கும், சிரியாவுக்கும் இடையே பாதுகாப்பாகவும் அமைதியான முறையிலும் கடந்து செல்ல ஒத்துழைப்பதாக ஒரு ஒப்பந்தம் இருந்தது. சரித்திர ஆசிரியர்கள் பதிவின் படி ரெஜினால்ட் வாகனத்தின் பொருட்களை கொள்ளை அடித்து, வியாபாரிகளையும் பிடித்து வைத்துக்கொண்டு இஸ்லாமை இழிவு படுத்தியபடி மமதையுடன், “ நீங்கள் முஹம்மதை நம்பினால், அவரை கூக்குரலிட்டு அழைத்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று கூறினான். இதை ஸலாவுத்தீன் கேள்விப்பட்டவுடன் மிகவும் கோபப்பட்டு அவனைத் தன் கைகளாலேயே கொன்றுவிட உறுதி பூண்டார். ரெஜினால்டின் தாக்குதல் போர்த்தீயை ஸலாவுத்தீனுக்கும், ஃப்ராங்க்ஸுக்கும் இடையே மூட்டியது. அவர்கள் மீது ஸலாவுத்தீன் போர் தொடுத்துக்கடுமையான இழப்புகளையும், வேதனைகளையும் சுவைக்கச் செய்தார். ஸலாவுத்தீனின் பெயர் ஐரோப்பாவில் பலமாக ஒலித்தது. ஐரோப்பிய தாய்மார்கள் போருக்கு அனுப்பிய பிள்ளைகளை நினைத்து கவலை அடைந்தார்கள், அந்த அளவுக்கு ஸலாவுத்தீனின் போரின் தாக்கம் எதிரொலித்தது. ஆனால், ஸலாவுத்தீன் போரில் பிடிபட்டவர்களையும், பெண்கள், குழந்தைகளை நல்ல விதமாக நடத்தினார்.
ஜெருசலம், ஹத்தீனின் வெற்றி
அந்த வணிகக்கூட்ட தாக்குதலுக்குப் பிறகு, ஸலாவுத்தீன் எதிரிகளுக்கு மிகச்சரியான பாடம் கற்பித்து நபிகள் நாயகம் விண்ணுலகப்பயணம் சென்று இறங்கிய பூமியும், பல நபிமார்களின் பிறப்பிடமான ஜெருசலத்தை மீட்டார். பதிலுக்கு கிராக்கின் ஆட்சியாளர் புனித ஹஜ் பயணம் சென்று திரும்பும் முஸ்லீம்களைத் தாக்கினான். ஸலாவுத்தீன் யாத்ரீகர்களை காக்க மக்களை புனித ஜிஹாத் வழியில் போரிட அழைத்தார். அவர் பஸ்ரா நகர் அருகில் அஸ் ஸலாமாஹ் என்ற இடத்தில் முகாமிட்டு யாத்ரீகர்கள் பாதுகாப்பாக திரும்பி வரும் வரைக் காத்திருந்தார். ஹஜ் யாத்ரீகர்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக, ஒப்பந்தத்தை மீறும் எதிரிகளை வெல்லும் ஆற்றலை ஸலாவுத்தீனுக்கு வழங்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தனர். ஃப்ராங்க்ஸ் அமைதிக்கு வழிகாணாமல் மென்மேலும் ஆத்திரத்துடனும், மதவெறியுடனும் இருந்தனர்.
ஸலாவுத்தீன் அவர்கள் மீது மிகப்பெரிய போர் தொடுத்து விரட்டிட தன் ஆலோசகர்களை கலந்து பேசினார். அனைவரும் 583 A.H.ல் இஸ்லாமிய மாதம் ரபியுல் ஆகிர் 17 ல் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு
நேரத்தை தேர்ந்து எடுத்தனர். வானத்தை எட்டும் வண்ணம் அவர்களின் “அல்லாஹு அக்பர்” என்ற கோஷம் இருந்தது. முஸ்லீம்கள் போரையும், அதன் வெற்றியையும் பிரார்தனை மற்றும் அல்லாஹ்வின் உதவி அன்றி பெற முடியாது என்று நம்பினர். போருக்கான பொருளுதவியும், வெற்றியையும் வேண்டி அல்லாஹ்விடம் பிரார்தித்தனர். ஸலாவுத்தீனும், கலீஃபாக்களும் நபிகள் நாயகம் பத்ர், ஹுனைன், அல் அஹ்ஸாப் மற்றும் உஹத் போர்களின் போது இறைவனிடம் பிரார்தித்தது போல், “அல்லாஹ் நீ எங்களுக்கு வாக்களித்த வெற்றியைத்தந்தருள வேண்டும். ஒரு வேளை எதிரிகள் இந்த போரில் வென்றால், உன்னை இந்த பூமியில் வழிபட யாருமற்று போய்விடுவர்” என்று மனமுருகி வேண்டினர். ஆம், அவர்களுக்கு பல வழிகளிலிருந்தும் பொருளுதவி குவிந்தது.
ஸலாவுத்தீன் டமாஸ்கஸை விட்டு ராஸ் அல் மா என்ற இடத்திற்கு சென்றார் அது இராணுவ வீரர்களை ஒன்றுகூட்டும் மையமாக விளங்கியது. அவரின் மகன் அல் மாலிக் அல் அஃப்தலை ராஸ் அல் மா வில் தங்க வைத்துவிட்டு, தான் பஸ்ரா சென்றார். முஸஃபர் அத்தீன் என்பவரை அக்ராவிற்கு அனுப்பினார். பஸ்ராவிலிருந்து கிராக்கின் கோட்டை, அஷ் ஷுப்க் சென்று டைபீரியஸ் திரும்பினார். அல்லாஹ்வின் ஆற்றலுடன் போரிட வந்திருக்கும் முஸ்லீம் வீரர்களின் அந்த வேகம் குறையாமல் இருக்க அங்குமிங்கும் கனத்த இதயத்து டனும், துயரத்துடனும் அலைந்தார். இவரின் இந்த காலகட்டம், சூழ்நிலை, இஸ்லாம் வென்றே ஆகவேண்டும் என்ற விடாப்பிடி  இதுவே சரித்திரத்தில் இவருக்கு நிலையான இடத்தைப் பெற்றுத்தந்தது. கொஞ்சமாக உண்டு வெற்றிக்காக நிறைய உழைத்தார். இது பற்றி அவரிடம் கேட்ட போது, ‘நமது ஜெருசலம் நகரம் எதிரிகள் வசம் இருக்கும் போது சரளமாக உணவும், உறக்கமும், உல்லாசமும் எப்படி வரும்’ என்று கேட்டார்.
மேலும், ஸலாவுத்தீனின் நண்பரும், போரில் ஈடுபட்டிருந்த வருமான அல் கதி பஹா அத்தீன் இப்னு ஷத்தாத் என்பவர், “ஜெருசலத்தை வென்ற செய்தியை கூறினால் மலையளவு கூட போறாது. ஒரு தாய் குழந்தையைப் பறிப்பது போல் ஆவலுடன் சுல்தான் இருந்தார். நாட்டின் அதிபதி என்பதற்கும் மேலாக ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு சுறுசுறுப்பாக சென்று கண்ணீர் மல்க “என் அருமை முஸ்லீம் மக்களே ஜிஹாதின் பால் போரிட வாருங்கள்” என அழைப்பு விடுத்தார். அந்த நேரங்களில் அவர் உணவு கூட உண்ணவில்லை. மருத்துவர்கள் தந்த மருந்துகளையே அருந்தினார். நான் மருத்துவர்களிடம் ‘அவர் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மிக அற்பமான உணவையே சாப்பிட்டார்’ என கூறினேன். அந்த அளவுக்கு அவர் போரில் ஆர்வம் காட்டினார்.” என்று கூறுகிறார்.

புதன், 13 ஆகஸ்ட், 2014

ஸலாவுத்தீன் வரலாறு 9



பாகம் :17
இந்த காலகட்டத்தில் ஸலாவுத்தீன் தனக்கெதிரான மூன்று விரோதிகளை சமாளிக்க வேண்டிய கட்டத்தில் இருந்தார். அவர்கள் ஃப்ராங்க்ஸின் சிலுவைப் போராளிகள், நூருத்தீனின் இளவரசர்கள் மற்றும் இஸ்மாயிலீஸ் பிரிவினர்கள். இவர்கள் மூவரும் கூட்டாக இணைந்து இராக், சிரியா மற்றும் எகிப்தில் இஸ்லாமின் ஒற்றுமையைக் குலைக்க திட்டம் தீட்டினர். ஸலாவுத்தீன் இறைவன் அவருக்களித்த விவேகம், அதிகாரம், திட்டமிடும் தகுதி போன்றவற்றை பயன்படுத்தி அவர்களை வென்றெடுத்தார்.
ஸலாவுத்தீனின் தலைமையின் கீழ் இணைந்த நாடுகள்
நூருத்தீனின் இறப்பிற்குப் பிறகு ஸலாவுத்தீன் மாபெரும் இஸ்லாமிய ஆட்சியை உலகில் தன் கொடிக்கு கீழ் கொண்டு வரும் அனைத்து வாய்ப்பு களையும் பெற்றார். தனது இராணுவ, போர் மற்றும் அரசியல் அநுபவத்தால் அவர் ஒவ்வொரு நாடாக இணைக்க முயற்சித்தார். அவர் காலத்தில் ஏமன் நாட்டில் பல கட்சிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தன. ஏமன் பல துண்டுகளாக சிதறியது. ஹமதானிக்கள் சனா நகரிலும், நஜாஹிகள் ஸுபைதிலும் ஒருவருக்கொருவர் பதவிக்கு அடித்துக் கொண்டனர். மேலும், இஸ்லாம் கூறும் இறுதிக் கால “அல் மெஹதி” தாம் தான் என்று ஒருவர் கிளம்பி பிரசாரம் செய்தார். இவரால் சமூக ஒற்றுமை சிதைந்து ஏமனில் படுகொலைகளும், அராஜகங்களும் நிறைந்தது. முஸ்லீம்கள் அநியாயமாக கொல்லப்படுவதை எண்ணி வேதனை அடைந்த ஸ்லாவுத்தீன் தன் சகோதரர் துரன்ஷாஹ் என்பவரை அனுப்பி ஏமனின் சச்சரவுகளை நீக்க உத்தரவிட்டார். அந்த காரியத்தில் துரன்ஷாஹ் வெற்றி பெற்று ஏமனை எகிப்து மற்றும் சிரியாவுடன் இணைக்கச் செய்தார்.
துரன்ஷாஹ் தனது இராணுவத்துடன் நைல் நதியின் வழியாக குஸ் நகர் வரை சென்று, பின் தரை மார்க்கமாக செங்கடல் அடைந்து கப்பல் மூலம் ஜித்தா நகர் சென்று அங்கிருந்து ஏமன் அடைந்தார். அவர் ஸுபைத் பகுதியையும் மற்ற கோட்டைகளையும் கைப்பற்றினார். சில சரித்திர ஆசிரியர்கள் அவர் ஏறக்குறைய 80 நகரங்களையும், கோட்டைகளையும் வெற்றி கொண்டார் என கூறுகிறார்கள். ஏமன் மக்கள் சீர்குலைந்து போன நிர்வாகத்தின் கீழ் இருந்தபடியால் துரன்ஷாவின் வருகையை பெரிதும் விரும்பினார்கள். சில அரண்மனை, கோட்டைக் காவலர்கள் இரத்தம் சிந்துவதை தவிர்த்து தாங்களாகவே முன் வந்து சாவிகளை ஒப்படைத்தனர். ஏமன் மக்கள் நாட்டில் நிலையான தன்மையை நாடினர். துரன்ஷா வெற்றிக்குப் பிறகு தோழர்களுடன் கூட்டம் நடத்தி சரியான தலைமைச் செயலகம் ஏற்படுத்த எண்ணி தாஸ் நகரை அதற்காக தேர்ந்தெடுத்தார்.
ஸலாவுத்தீன் துரன்ஷாவையே ஏமனுக்கு ஆட்சியாளராக்கினார். துரன்ஷாவிற்க்குப் பிறகு இன்னொரு சகோதரர் டக்டகின் இப்னு அய்யூப் 593 A.H. ல் அவர் மரணிக்கும் வரை ஏமனின் ஆட்சியாளராக இருந்தார். அய்யூபிட்கள் ஆட்சி ஏமனில் ஏறக்குறைய 80 ஆண்டுகள் (569 A.H. லிருந்து 652 A.H. வரை ) இருந்தன. சகோதரர் ஏமனை வெற்றி கொண்ட அதே ஆண்டு ஸலாவுத்தீன் பர்காஹ், திரிபோலி மற்றும் கிழக்கு துனிஸியாவிலிருந்து கபிஸ் வரை வென்றார்.
பாகம் : 18
579 A.H. ல் இஸ்லாமிய உலகில் இளவரசர்களின் தூதுவர்களால் டமாஸ்கஸ் நகரில் நடத்தப்படும் இஸ்லாமிய மாநாட்டுக்கு ஸலாவுத்தீன் தனது சகோதரர் அல் மாலிக் அல் ஆதிலை கலந்து கொள்ள அழைத்தார். அந்த மாநாட்டில் பிரபலமான ஷெய்க் ஸாதர் அத்தீன், ஷிஹாப் அத்தீன் பஷ்ர், அப்பாஸிய கலீஃபாவின் அரசுப் பிரதிநிதி அந் நாஸர் லிதினில்லாஹி, அல் கதி மொஹி அத்தீன் அஷ் ஷஹ்ரஸுரி, மோஸூலின் தூதுவர் பாஹா அத்தீன் இப்னு ஷத்தாத், அல் ஜஸீராஹ்வின் ஆட்சியாளரின் தூதுவர் மொ இஸ் அத்தீன் ஸின்ஜர் போன்ற மேதைகளும், பெரியவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். ஸலாவுத்தீன் இஸ்லாமிய இளவரசர் களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளையும், தேவையற்ற ஒப்பந்தங்களையும், குழப்பங்களையும் விலக்கி சகோதரத்துவம் காக்க முயற்சி செய்து பேசினார். அனைத்து தூதுவர்களும் ஸலாவுத்தீனின் கருத்துக்கு ஆதரவளித்தனர். ஆனால் மோஸூலின் தூதுவர் மட்டும் ஸலாவுத்தீனின் கருத்துக்கு பலமான எதிர்ப்பு தெரிவித்தார்.
மோஸூலின் தூதுவர் ஒன்றுபட்ட இஸ்லாமிய உலகுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், ஸலாவுத்தீன் அவர்களுடன் போரிட்டு அவர்களை மாற்றி நேர்வழியில் கொண்டுவர கடமைப்பட்டார். 581 A.H. ல் ஸலாவுத்தீன் மோஸூலை முற்றுகையிட்ட போது, இஸ் அத்தீன் சமாதனமாகி ஹர்ரான் உடன்படிக்கைக்கு ஒத்துக் கொண்டார். இஸ் அத்தீன் ஷஹர் ஸூர், அல் கரபிலி, டஃப்ஜக் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளை ஸலாவுத்தீனிடம் ஒப்படைக்க வேண்டும். மாற்றாக மோஸூலை இஸ் அத்தீனிடம் ஒப்படைக்க வேண்டும். நாணயங்களிலும், வெள்ளிக் கிழமை தொழுகை போதனையில் ஸலாவுத்தீனின் பெயரே தொடரப்படும். மேலும், இஸ் அத்தீன் ஸலாவுத்தீனின் திட்டங்களையே தொடர்வார். இதுவே ஹர்ரான் உடன்படிக்கையின் தீர்மானமாகும். நாட்டில் ஏதோ கலகக்காரர்கள் போல் தனித்தனியாக மோஸூல், சன்ஜார், அல் ஜஸிராஹ், அர்பில், ஹர்ரான், டயர் பக்ர் மற்றும் பல இடங்களில் சிதறிக்கிடந்த இராணுவத்தினரை ஒரே குழுவாக ஆக்கினார்.
ஸலாவுத்தீன் பாக்தாதில் உள்ள அப்பாஸிட் கலீஃபா அல் முஸ்ததிக்கு ஒரு செய்தி அனுப்பினார். ஸலாவுத்தீனின் மந்திரி அல் கதி அல் ஃபத்ல் மூலம் அனுப்பப்பட்ட செய்தியில், ஸலாவுத்தீன் ஜிஹாதின் வழியில் சாதித்தவைகளையும், எதிரிகளை முறியடித்ததையும், எகிப்து, ஏமன், வட ஆப்ரிக்கா நாடுகளை வென்றதையும், வெள்ளிக்கிழமை தொழுகை போதனைகளை அப்பாஸிட் கலீஃபாவின் பெயரில் நிகழ்த்துவதையும் தெரியப்படுத்தினார். மேலும், கலீஃபாவை ஸலாவுத்தீனை எகிப்து, மொரோக்கோ, ஏமன், சிரியா மற்றும் வெற்றி கொண்ட சில பகுதிகளுக்கு ஆட்சியாளராக நியமிக்க வேண்டுமென்றும், அவருக்குப் பிறகு அவரின் சகோதரரையோ, மகனையோ வாரிசாக அறிவிக்க வேண்டுமென்றும் கூறினார். கலீஃபா அல் முஸ்ததி ஸலாவுத்தீனின் வேண்டுதல் செய்திக்கு முக்கியத்துவம் அளித்து தனது பிரதிநிதிகளை பரிசுகளுடனும், இராஜ அலங்கார அங்கியை அனுப்பியும் தன் ஒப்புதலை அளித்தார்.
ஸலாவுத்தீன் தன் இஸ்லாமிய ஆட்சியின் கொடியின் கீழ் ரம்லாவிலிருந்து நைல் நதி வரையும், வட ஆப்ரிக்காவிலிருந்து திரிபோலி வரையிலும் எண்ணற்ற ஊர்களையும், நகரங்களையும் ஆண்டார். ஏமன். ஏதென், திரிபோலியின் கடலோர பகுதிகள், துனிஷியாவின் ஒரு பகுதி, கபிஸ் மற்றும் எகிப்து, சிரியா, வட இராக் (குர்திஸ்தான்), மொரோக்கோ, வட ஆப்ரிக்கா பகுதிகளை போரிட்டு வென்றார். தனக்குட்பட்ட நாடுகளில் உள்ள ஊர்களில் நடைபெறும் வெள்ளிக்கிழமை தொழுகை போதனைகளை தனது பெயர்களில் நடத்த உத்தரவிட்டார்.
சந்தேகமில்லாமல் ஒன்றினைந்த இஸ்லாமிய தேசம் மாபெரும் நம்பிக்கையுடன் இணைவது நல்ல சகுனமாகவும், தங்கள் குறிக்கோளை முஸ்லீம்கள் அடைவார்கள் என ஸலாவுத்தீனுக்குப் பட்டது. இப்னு சனன் என்ற கவிஞர், ‘முஸ்லிம் உம்மாக்கள் ஆளத் தெரியாத ஆட்சியாளர்களால் அலைக்கழிக்கப்பட்டார்கள். ஸலாவுத்தீனின் மூலம் நன்மையின் பால் வாழ்ந்தார்கள்’ என்று கவிதை எழுதினார். இந்த பலமான ஒருங்கினைப்புக்கு பின் சிலுவைப் போராளிகளைத் தாக்கி இஸ்லாமிய மண்ணை (ஜெருசலத்தை) விட்டு விரட்டியது காலத்தால் மறக்க முடியாத வண்ணம் சரித்திரம் பதிவு செய்து வைத்திருக்கிறது. இஸ்லாமியர்களை தலைமுறை, தலைமுறையாக பெருமையடைய செய்கிறது.
அனைவரும் முஸ்லீம்களின் ஒற்றுமையானது, துன்புறுத்தும் இழிவான சிலுவைப் போராளிகளிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்று இஸ்லாமியம் வீறுநடை போடுவதற்கான ஆரம்பம் என்பதை உணர்ந்தார்கள். ஜெருசலத்தின் வெற்றி என்னும் முதல் நடவடிக்கை அடுத்த வெற்றிகளுக்கான குறிக்கோளுடன் மேலும், பாலஸ்தீனை முழுதுமாக நிர்வகிக்கும் வாய்ப்பு அமையும்.
சூழ்ச்சிகளும், சிலுவைப் போரும்
சிலுவைப் போர் என்பது ஐரோப்பிய நாடுகளால் முஸ்லீம்களிடம் இருந்து ஜெருசலத்தை கைப்பற்ற எடுக்கப்பட்ட மதவெறி கொண்ட  ஒரு இராணுவ நடவடிக்கை. மேலும் இஸ்லாம் உலகில் பரவாமல் இருக்கவும் நடத்தப்பட்ட போர்.
மேலும், சில காரணங்களானது :
·       இஸ்லாம் பரவ ஆரம்பித்தவுடன் கிறிஸ்துவர்கள் வசம் இருந்த ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவின் சில பகுதிகளை முஸ்லிம் ஆட்சியாளர்கள் வென்றனர். இதனால் இஸ்லாமை சிலுவைப் போராளிகள் வெறுத்தனர்.
·       முஸ்லிம் செல்ஜுக்குகள் கான்ஸ்டாண்டிநோபிலைச் சுற்றி பரவி விட்டிருந்தனர். இதனால் கான்ஸ்டாண்டிநோபில் கை நழுவி போய் விடுமோ என்று அஞ்சினர். பைஸாந்திய சக்கரவர்த்தி அலெக்ஸியஸ் கம்னினுஸ் கிறிஸ்துவ நாடுகளுக்கு முஸ்லிம்களுக்கு எதிராக போரிட வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
·       ஜெருசலத்திற்கு புனித பயணம் வந்த கிறிஸ்துவர்கள் முஸ்லீம்கள் தங்களை புண்படுத்துவதாகவும் ( மாற்று மதத்தினரைப் இழிவு படுத்துவது இஸ்லாத்தில் இறைவனால் தடை செய்யப்பட்டது) தாங்கள் அநீதி இழைக்கப்பட்டு, கடுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் மனம் வெறுத்திருப்பதாகவும் ஐரோப்பா திரும்பி முறையிட்டனர். அதில் மிகவும் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பகை வளரும் வண்ணம் செய்தவர் பிரான்சின் கிறிஸ்தவ துறவர் ஹெர்மிட்.
·       இதைத் தொடர்ந்து யார் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ளவும், ஜெருசலத்தை மீட்டெடுக்கும் ஆவலும், மதவெறி ஆர்வமும் கொண்டுள்ளனரோ அவர்கள் உடனே முஸ்லீம்களுக்கு எதிரான சிலுவைப் போரில் கலந்து கொள்ள வேண்டுகோள் விடப்பட்டது. இந்த ஆர்வம் கிறிஸ்தவ ஆலயங்களில் பாதிரியார்கள், பிஷப்புகள், போப் மூலம் தீவிரமாக வளர்க்கப்பட்டது.
ஷியா பிரிவு ஃபாத்திமிட்கள் மனம் மாறி பைஸாந்தியர்களுக்கு உதவி செய்து செல்ஜுக் முஸ்லீம்களிடமிருந்து எகிப்தை விடுதலை செய்வதாக கூறினர்.
486 A.H. ல் ஜெருசலத்திற்கு பயணம் மேற்கொண்ட பிரான்சின் கிறிஸ்தவ துறவர் ஹெர்மிட் நாடு திரும்பியவுடன் போப்பை சந்தித்து சிலுவைப் போரைத் துவங்கக் கேட்டுக் கொண்டார். போப் வட இத்தாலியில் பியாசென்ஸா என்ற இடத்தில் ஒரு சபையைக் கூட்டி பேச்சு நடத்தினார். அந்த சபை பிரான்சின் கிளர்மெண்ட் சபைக்கு பரிந்துரை செய்ய அவர்கள் சிலுவைப் போருக்கான ஏற்பாடுகளை கவனித்தார்கள்.