வியாழன், 7 ஆகஸ்ட், 2014

ஸலாவுத்தீன் வரலாறு 3



பாகம் : 5
கல்வி
இவரின் வாழ்க்கை பல நகரங்களில் கழிந்ததால் இவர் கல்வியும் அதன் அடிப்படையிலேயே அமைந்தது. இளமையில் எல்லாக் குழந்தைகளையும் போல் பா அல்பக்நகரில் குர் ஆனை திறம்பட ஓதவும், அரபியில் எழுதவும், படிக்கவும் கற்று தேர்ந்தார். ஸலாவுத்தீன் ஹதீஸ்களை அல் ஹஃபீஸ் அல் சலஃபீ, இப்னு அவ்ஃப், அந் நைஸபுரி மற்றும் அப்துல்லாஹ் இப்னு பர்ரி ஆகியோரிடம் கற்று தேர்ந்தார் என்று ஆசிரியர் தபகத் அஷ் ஷஃபியாஹ் கூறுகிறார். அந்த கால கட்டத்தில் சமர்கந்த், கார்டோபா மற்றும் நாற்திசைகளிலிருந்தும் டமாஸ்கஸ் நகருக்கு மதபோதகர்கள் வந்து பள்ளி வாசல்களிலும், கல்வி நிறுவனங்களிலும் தீவிரமாக இஸ்லாமிய மத, பொது கல்வியை போதித்தனர். ஸலாவுத்தீன் அவர்கள் எல்லாரிடமும் கல்வி கற்றுக் கொண்டார். குறிப்பாக நூருத்தீன் அவர்கள் டமாஸ்கஸி லும், சிரியாவிலும் பல பள்ளிவாசல்களையும், கல்விக் கூடங்களையும் நிறுவி சிறந்த அறிஞர்களை அழைத்து வந்து மக்களிடையே அறிவு வளர்த்தார். புகழ்பெற்ற அப்துல்லாஹ் இப்னு அபி அஸ்ருன் அவர்களை டமாஸ் கஸுக்கு அழைத்து வந்து டமாஸ்கஸின் தலைமை நீதிபதியாக நியமித்தார். கண் பார்வை குறைந்த இவரை ஸலாவுத்தீன் அவர்கள் கண்ணியமாக நல்ல முறையில் கவனித்து இவரிடமிருந்து நிறைய நீதித்துறை விஷயங் களைக் கற்றுக் கொண்டார்.
ஸலாவுத்தீன் குதிரையேற்றம், ஈட்டி எறிதல், வேட்டை யாடுதல் மற்றும் இராணுவ நுணுக்கங்கள் போன்றவற்றை தானிருந்த சூழ்நிலைக்கு ஏற்ப ஆர்வத்துடன் சிறந்த முறையில் கற்றுத் தேர்ந்தார். எந்த சூழ்நிலையிலும் மன உறுதியாகவும் இருந்தார். உதாரணத்திற்கு சிரியா வெற்றியின் போது தன் சகோதரர்கள் தாஜ் அல் முல்க் மற்றும் அல் மாலிக் அல் முஸ்ஸஃபர் இருவரும் ஒன்றன் பின் ஒன்றாக இறந்த போது கூட துயரத்தை வெகுவாக வெளிப்படுத்தாமல் இராணுவப் பொறுப்புடன் கோட்டை யை பலப்படுத்தும் ஆலோசனையில் ஈடுபட்டார். இவரைப் போல் ஒரு பிள்ளை வேண்டும் என தாய்மார்கள் பொறாமைப்படும் வண்ணம் ஹத்தீன் போரில் ஈடுபட்டு தனது நிகரற்ற தைரியத்தையும், பிறப்பும், இறப்பும் நிகழ்ந்த நபிமார்களின் மண்ணை மீட்க வேண்டும் என்ற உறுதியையும் காட்டினார். ஆம் இஸ்லாமிய சரித்திரத்தில் முஸ்லீம்கள் என்றென்றும் நினைவு கூறத்தக்க தன்னிக ரற்ற வீரர் இவர்.
பாகம் : 6
ஸலாவுத்தீனின் ஆட்சி ஆரம்பம்
ஸலாவுத்தீனின் அரசியல் தோற்றத்திற்கு முன் எகிப்தில் மம்லூக் என்ற ஒரு குறிப்பிட்ட கூட்டம் இருந்தது. இவர்கள் வெள்ளை நிறம் கொண்ட அடிமைகள். மைனர் ஆசியா,பெர்சியா, மத்திய ஆசியா மேலும் பல இடங் களிருந்து விலைக்கு வாங்கப்பட்டும், கடத்தியும் வரப்பட்ட வர்கள். இவர்கள் உள்ளூர் மக்களுடன் கலக்காமல் தங்களுக்கென தனி கலாச்சாரம், தனி தன்மையுடன் வாழ்வார்கள். முக்கியமாக எகிப்தில் சிறப்பான இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். அருகாமை நாடுகளான சூடான், மொராக்கோ, துருக்கி போன்ற நாடுகளின் அரசியல் கட்சிகளாலும், உள்ளூர் புரட்சிக் குழுக்களாலும் எகிப்தின் அரசியல் அமைப்பு சீர் குலைந்து இருந்திருந்தது. பல வழிகளிலும் கலிஃபாக்களையும், மந்திரிகளையும், உயர்பதவியில் இருப்பவர்களையும் கொலை செய்ய முயன்றனர். ஃபாத்திமிட் கலிஃபா (ஷியா பிரிவினரின் ஆட்சி) செயலற்றுப் போய் இருந்தார். இறுதியில் தலா இ இப்ன் ருஸ்ஸிக் என்ற மந்திரி 549 A.H. ல் கலகங்களை அடக்கி ஆட்சியை கைப்பற்றினார். அவரையும் கலகக்காரர்கள் கொன்ற போது அவரின் மகன் ருஸ்ஸிக் இப்ன் தலா இ 558 A.H. (1163 C.E.) ல் ஆட்சியைக் கைப்பற்றினார்.
நூருத்தீனுக்கும், ஜெருசலத்தின் (வட மற்றும் தென் பிரான்சின் பகுதியிலிருந்து வந்த காரணத்தால் ஃப்ராங்க்ஸ் என அழைக்கப் பட்டனர்) ஃப்ராங்கிஷ் மன்னன் அல் மாரிக்குக்கும் எப்படியாவது தங்கள் முழு பலத்தை யும் பயன்படுத்தி எகிப்தை பிடித்து விட வேண்டும் என்று ஆசை. ஆனால் எகிப்தின் உள் நாட்டு குழப்பங்களால் தயங்கினர்.
558 A.H.(1163 C.E) முஹர்ரம் மாதத்தில் ருஸ்ஸிக் இப்னு தலா இ தனது ஆட்சியின் போது மேற்புர எகிப்தில் ஷவிர் இப்னு முஜைர் அஸ் ஸாதி என்பவரை கவர்னராக நியமித்திருந்தார். வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததைப் போல ஷவிர் அஸ் ஸாதி புரட்சி செய்து ருஸ்ஸிக் தலா இயைக் கொன்று அல் அதித் என்பவரை வைசிராயராக நியமித்தார். ஷவீர் அஸ் ஸாதி மற்றும் அவரது மகன் நிர்வாகத்தில் ஊழல் பெருகியதால் துர்காம் என்னும் ஜெனரல் புரட்சி செய்து ஷவீரை விரட்டினார். ஷவீர் டமாஸ்கஸ் வந்து நூருத்தீன் அவர்களிடம் மீண்டும் எகிப்தை மீட்டித் தர வேண்டினார். அதற்காக ஆகும் செலவையும், ஆண்டு வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கையும் தருவதாக கூறி உதவி கோரினார். முதலில் நூருத்தீன் தயங்கினார்.
ஆனால் ஃப்ராங்கிஷின் அல் மாரிக் எகிப்தைக் கைப்பற்ற துர்காமுடன் இணைந்து ஷவீருடன் சேர்ந்திருக்கும் நூருத்தீனுக்கு எதிராக வருவதாக செய்தி வந்தது. அதனால் நூருத்தீனுக்கு ஷவீருடன் சேர்வது கட்டாய மாகியது. அவர் ஸலாவுத்தீனின் சித்தப்பா ஷிர்குஹையும், ஸலாவுத்தீனையும் ஷவீருடன் அனுப்பினார். இருவரும் போரிட்டு துர்காமை விரட்டி மீண்டும் ஷவீரை ஆட்சியில் அமர்த்தினர்.
ஆனால் ஷவீர் நூருத்தீனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் ரகசியமாக ஃப்ராங்கிஷின் அல் மாரிக்குடன் கூட்டு வைத்திருந்தார். ஷிர்குஹுக்கும், ஸலாவுத்தீனுக்கும் நூருத்தீனுக்கு துரோகம் செய்த ஷவீரின் மீது போர் தொடுப்பது கட்டாயமாகிப் போனது.
559 A.H.(1164 C.E.) ல் ‘புல்பைஸ்’ என்னும் இடத்தில் ரமதான் மாதத்திலிருந்து துல் ஹஜ் வரை நூருத்தீனின் தலைமையிலான ஷிர்குஹ், ஸலாவுத்தீனின் சிரியா இராணுவமும், ஷவீர், அல்மாரிக்கின் சிலுவைப் போராளி களின் இராணுவமும் போரில் இறங்கின.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக